Thursday, January 23, 2025
Homesliderஇரு கோடுகள்

இரு கோடுகள்

சுஷில் குமார்

“ஹலோ… வர லேட்டாகுமா? எப்போ வருவியோ?” சரசுவின் படபடப்பு ஒருநாளும் தீரப்போவதில்லை.

“என்னத்துக்கு சும்மா கால் பண்ணிட்டுக் கெடக்கட்டி? மனுசன் வேலயப் பாக்காண்டாமா?”

“எரிச்சல் படாதீயோ… இந்தப் பய ஒரே அழுக…சொன்னா கேக்கமாட்டுக்கான்…”

“அவன சும்மா கொடஞ்சிட்டே கெட… ஒனக்கு வேற வேல இல்ல.. எதுக்கு அழுகான்?”

“எல்லாம் ஒங்களாலத்தான்.. சின்ன பிள்ளேட்ட என்ன சொல்லன்னு கெடயாதா? தாத்தாக்கு மட்டும் வயித்துல கோடு கெடக்கு.. எனக்கு இல்லன்னு ஒரே கூப்பாடு… கத்திய எடுத்து கோடு போடதுக்கு நிக்கான்… அவன் அம்ம நாலு போடு போட்டா… பிள்ள ஏங்கிட்டான்… நீங்க ஒண்ணு பேசுங்க அவன்ட்ட…” என்று சூர்யாவிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.
என் குரல் கேட்டதும் சூர்யா அலற ஆரம்பித்தான். “தாத்தா… தாத்தா… அம்ம அடிச்சிட்டா… தாத்தா, கோடு… எனக்கு… கோடு…. நீ வா தாத்தா….”

“இந்நா வாறேன் மக்ளே.. பிள்ள அழாத… தாத்தா வந்து அம்மக்கி அடி குடுக்கேன் செரியா? நல்ல பிள்ளல்லா? பிள்ளக்கி என்ன வாங்கிட்டு வரணும்? ஜெம்ஸ் முட்டாய் வாங்கட்டா?”

“தாத்தா..தாத்தா… கோடு.. எனக்கு கோடுதான் வேணும்…”

*

சில தினங்களுக்கு முன் ஒருநாள் இரவு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சூர்யா வழக்கம்போல் ஓடிவந்து என் வயிற்றில் துள்ளி உட்கார்ந்தான். அப்படியே மார்பில் சாய்ந்து கொண்டவன் விரலால் என் மார்பில் எதையோ வரைய ஆரம்பித்தான். மெல்ல மார்பின் மத்தியிலிருந்து கீழாகத் தடித்திருந்த தழும்பின் மீது விரலை வைத்து வருடியவன், “தாத்தா, ஏன் தாத்தா இப்பிடி இருக்கு?” என்று கேட்டான்.
“அதுவா மக்ளே? அது தாத்தாக்கு சாமி தந்த கிஃப்ட்டாக்கும்..”

ஒரு நிமிடம் அதை உற்றுப் பார்த்தவன் பின் தன் வயிற்றைத் தடவிப் பார்த்தான். “தாத்தா… அப்போ சாமி எனக்கு கிஃப்ட் தரல?”

“அது… இந்த கிஃப்ட்டெல்லாம் சின்ன பிள்ளேளுக்கு சாமி தராது மக்ளே…”
கண்களை இடுக்கிக்கொண்டு என் முகத்தைப் பார்த்தவன் மீண்டும் அந்தத் தழும்பைத் தடவிக் கொடுத்தான். அவனுக்கே உரிய மொழியில் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டே உறங்கிவிட்டான். அதற்கடுத்த நாட்களிலும் அதைப் போலவே என் மீது படுத்துக்கொண்டு அந்தத் தழும்போடு பேசி விளையாடினான். நானும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் ஓடிவந்து ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி, “தாத்தா, இங்கப் பாரு, ஒன்ன வரஞ்சிட்டேன்..” என்று சிரித்தான்.

தாத்தாவின் சட்டையற்ற மேலுடல், மடித்துக் கட்டிய வேட்டி, காதிடுக்கில் சொருகியிருக்கும் சிகரெட், அதோடு தாத்தாவின் வயிற்றைப் பிளந்தவாறு ஒரு கோடு. அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு பெரிய மீனும் ஒரு குட்டி மீனும், பெரிய மீனின் வயிற்றில் ஒரு கோடு. அதே போல, யானை, நாய், மரம், வீடு, நிலா என எல்லாவும் வயிற்றுக் கோட்டோடு இருந்தன.

*

பதினைந்து வயதில் அம்மாவிடம் சண்டை போட்ட வீம்பில் பெரியப்பா தந்த முப்பது ரூபாயை மனதில்லாமல் வாங்கிக்கொண்டு பம்பாய்க்கு இரயிலேறினேன். திருச்செந்தூரில் இருந்து மார்த்தாண்டம் வரை இரண்டு இரவுகள் தொடர்ந்து மிதிவண்டி மிதித்து அரிசி மூடை கடத்தியதிலும், மளிகைக் கடையில் எடுபிடி பையனாக இருந்ததிலும், கையில் அட்டைப்பெட்டியை வைத்துக்கொண்டு அரைகுறை ஆங்கிலத்திலும் இந்தியிலும் பாசிமணிகளையும் வண்ண வண்ண கடல் மணலையும் விற்றதிலும் இந்த உலகில் பிழைத்துக் கொள்ளத் தேவையான ஓரளவு அனுபவ அறிவு எனக்கிருந்தது.

“போறதெல்லாம் செரி, ஆனா திரும்பி வந்தா ராஜா மாரி வரணும் பாத்துக்கோ… சும்மா சள்ளத்தனம் பண்ணிரப்புடாது, என்ன?” என்று அதட்டி வழியனுப்பினார் பெரியப்பா.

காலையில் இரண்டு வடா பாவும் ஒரு கோப்பை தேநீரும், மதியம் நண்பர்களுடன் இரண்டு சப்பாத்தி அல்லது மோரிஸ் வாழைப்பழங்கள், இரவில் சிலநாட்கள் அரிசிக்கஞ்சி, சிலநாட்கள் கோயில் பிரசாதத்துடன் இரண்டு லிட்டர் தண்ணீர். பம்பாயில் வாழ்வது பெரிய கஷ்டமொன்றுமில்லை. ஊரில் செய்த பல வேலைகளின் அனுபவத்தால் அங்கே வேலை கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. கடின உழைப்பும் விசுவாசமும் தான் அங்கே முதலீடு. அத்துடன் தயக்கமின்றி எல்லோருடனும் பேச சரியான மொழியும் தைரியமும் இருந்தால் சீக்கிரத்தில் மேலேறி வந்துவிடலாம். முதல் ஐந்து வருடங்களில் பல்வேறு வேலைகளைச் செய்து வாழ்க்கை ஓடியது. கிடைத்த நண்பர்களின் மூலம் துறைமுகத்தில் ஒரு கப்பல் நிறுவனத்தில் ஒரு நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச எண்ணெய் ஏற்றுமதி நிறுவனத்தின் கப்பல். அதன் முக்கிய மேலாளர்களில் ஒருவரான அந்தப் பெண்மணிக்கு தனிச்செயலாளர் வேலை.

வேலை ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை. ஆனால், நேரக் கணக்கற்ற வேலை, சிலநாட்கள் பத்து மணிநேரம், பல நாட்கள் பதினைந்து மணிநேரம். இன்னும் சில நாட்கள் அலுவலகத்திலேயே கிடையாய் கிடக்க வேண்டியும் வரும். மேலாளர் அழைக்கும் போது அங்கு இருந்தாக வேண்டும்.

“எனது ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு கோடி என்பதை மனதில் வைத்துக்கொள், என்ன? எனது மட்டுமல்ல, உனது ஒவ்வொரு நிமிடமும் தான், சரியா?” என்று அடிக்கடி சொல்வார் என் மேலாளர்.

நிறுவனத்திற்கு கோடிகளை ஈட்டிக் கொடுத்ததில் என் வாழ்க்கையில் எனக்கான நேரம் என்பது இல்லாமல் போனது. வடா பாவும் வாழைப் பழங்களும் நேரம் கிடைத்தால் மட்டும்தான்.

நாட்கள் செல்லச்செல்ல மார்பின் அடிப்பகுதியில் ஒருவித எரிச்சல் தோன்ற ஆரம்பித்தது. அதைப்பற்றி கவலைப்பட நேரமின்றி குளிர்ந்த நீரைக் குடித்துக் கடந்து சென்றேன். எரிச்சல் மெல்ல மெல்ல வலியாக மாறி வயிற்றுப்பகுதி முழுதும் பரவியது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் மதியம் சாப்பிடும் வரை பயங்கர வலி. கை முட்டியால் மார்பிலிருந்து மேல் கீழாக வயிற்றில் குத்திக்கொண்டே இருப்பேன். வலி லேசாகக் குறைந்தது மாதிரி இருக்கும்.

நான் வாடிப்போய் இருந்ததைக் கண்ட மேலாளர் அவரது நண்பரின் மருத்துவமனையில் எனக்குப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். தீவிர வயிற்றுப்புண் இருப்பதாகவும் முறையான உணவுப் பழக்கத்தோடு சில மாதங்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் சொன்னார்கள்.

இந்த நாட்களில்தான் பெரியப்பாவின் தந்தி வந்தது.

‘முக்கிய விசயம். உடனே வரவும்’

நேரில் சென்றால், “கிறுக்குப் பய மவன, கெட்டு டே தாலிய” என்று சரசுவுடன் மணமுடித்து வைத்தார். அடுத்த ஒரு வாரத்தில் கூடுதல் பொறுப்புடன் மீண்டும் பம்பாய் பயணம்.

சரசு தன் ஊரைவிட்டு வெளியே வந்தது அதுதான் முதல்முறை. சேரியின் ஓரறை வீட்டில் எனக்காகக் காத்திருப்பதில் அவளுக்கு என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது? வந்த வருமானம் ஊருக்கு அனுப்பியது போக எனக்கும் அவளுக்கும் சரியாக இருந்தது. என்ன, எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் கேளிக்கைக்கும் வாய்ப்போ வசதியோ இல்லை. எனது வலி வேறு நின்றபாடில்லை.

தொடர்ந்து எடுத்து வந்த மருந்துகளின் மீது எனக்கு வெறுப்பாயிற்று. எந்த உணவைக் கையில் எடுத்தாலும் மருந்து வாடை. தண்ணீரிலும் மருந்து வாடை. உடுத்தும் உடைகளிலும் அதே வாடை ஏறிப்போய், போகப்போக அறை முழுவதும் அந்த வாடை நிறைய, மூச்சுத்திணறிக் கிடந்தேன். அந்த வலியிலிருந்தும் வாடையிலிருந்தும் தொலை தூரத்திற்கு ஓடிவிட வேண்டும். வலியின் இறுதி மரணம் தான் இல்லையா? அந்த வலியிலிருந்து மீண்டு செல்ல ஒரே வழியும் அதே மரணம் தானோ? தற்கொலை செய்துகொள்ளலாமா? என்றெல்லாம் ஏதேதோ யோசனைகள்.
வலியின் உச்சத்தில் ஒருநாள் மருந்துகளை எடுத்து சாக்கடையில் வீசியெறிந்து விட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் நான் சுருண்டு கிடக்க, நண்பர்கள் என்னைத் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வயிற்றுப்புண் மிகத் தீவிரமாகியிருந்தது. மருந்துகள் மேலும் கூடின. விடுப்பு நாட்கள் கூடியதால் அலுவலகத்திலிருந்து உடனே பணியில் சேருமாறும் இல்லையென்றால் வேலை நீக்கம் செய்யப்படுவேன் எனவும் தகவல் வந்தது.

அடுத்த நாள், தலை துவட்டும் துண்டு ஒன்றை வயிற்றில் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றேன். மேலாளர் அறிவுரைகளை அடுக்கிக் கொண்டேயிருக்க அங்கேயே நிலைகுலைந்து விழுந்தேன். மீண்டும் மருத்துவமனை. பரிசோதனைகள், அறிக்கைகள், நரம்புகளைத் தேடிய செவிலியர்கள், அழுகையில் உறைந்து போன சரசுவின் முகம். நீண்ட ஓய்விலிருக்க வேண்டிய நிலைமை. சில வாரங்களிலேயே கையிலிருந்த சொற்ப பணமும் காலியாக, நண்பர்கள் சிலர் மளிகைப் பொருட்களை வாங்கிப் போட, சரசு தினமும் வெளியில் சென்று மருந்துகளோடு திரும்பி வந்தாள். சில மருத்துவமனைகளின் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் அழுது தனக்குத் தெரிந்த மொழியில் எனக்கான மருந்துகளைப் பிச்சையெடுத்து வந்திருக்கிறாள்.
வலி மனிதனுக்குத் தன் கடந்த காலத்தை சட்டகங்களில் மாட்டிக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கூடவே, எதிர்காலத்தில் என்ன நிகழுமோ என்கிற பயமும் எதிர்மறை எண்ணங்களும். வலியின் உச்சத்தில் சப்பாத்திக் கட்டையை எடுத்து அதன் ஒரு முனையை வயிற்றில் வைத்து மறுமுனையைச் சுவற்றில் வைத்து முட்டுக்கொடுத்து பல்லைக் கடித்துக்கொண்டு அழுத்தி நிற்பேன். கொதிக்கும் வெந்நீர்ப் பாத்திரத்தை எடுத்து வயிற்றின் மீது வைத்துக் கிடப்பேன். ஒருசில நொடிகள் நிம்மதி.

ஒருநாள் தயங்கித் தயங்கி என்னருகே வந்து நின்றாள் சரசு.
அவள் முகத்தைப் பார்த்து, “என்னட்டி? எதுக்கு ஒரு மாரி இருக்க?” என்றேன்.

கேட்டதும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள். நான் அவள் கையை இறுக்கமாகப் பிடித்து, “எட்டி, அழாத… செரி ஆயிரும்… நீ வேண்ணா ஊருக்குப் போயி இருக்கியா?” என்று அவள் முகத்தைப் பார்த்தேன்.
அழுகையோடு எரிச்சலும் சேர்ந்துகொள்ள, “இப்பப் போயா இப்பிடி ஆகணும்? எல்லாம் எந் தலையெழுத்து…” என்றவாறு தன் தலையில் அடித்தாள்.

அவளது கையைப் பிடித்து இழுத்து, “எட்டி… சும்மாக் கெட… என்ன ஆச்சி? மனுசன டென்சன் ஆக்கப் படாது…” என்றேன்.

அவளது அழுகை மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது. நான் அமைதியாக அவளது கையைப் பிடித்துக் கிடந்தேன். ஒருவேளை, நான் நினைப்பது போலத்தான் இருக்குமோ? அப்படியென்றால் நான் என்ன செய்யப் போகிறேன்? என்னால் எனது இந்தப் புழுத்த உடலைத் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியவில்லையே!

சட்டென கையை விலக்கி எழுந்தவள் சாமிப்படத்தின் முன் சென்று நின்றாள். கண்மூடி வேண்டி பெருமூச்சு விட்டவளாக திருநீற்றை எடுத்து வந்து என் நெற்றியில் பூசி விட்டாள். கண்ணீரின் ஊடே, “நம்ம பிள்ள வந்த நேரம் ஒங்களுக்குச் செரியாயிரும்ப்பா…” என்று சொல்லி என் காலைத் தொட்டு வணங்கினாள்.

அடுத்த நாள் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். பக்கத்துத் தெருவிலிருந்த அரசு நியாயவிலைக் கடைக்குச் சென்று அங்கிருந்த என் நண்பன் ஒருவனிடம் என் வேண்டுதலைக் கூறினேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவன் என் கைகளைப் பிடித்துச் சமாதானம் சொல்லி, பொருட்கள் விநியோகம் செய்யும் பகுதியில் என்னை அனுமதித்தான். அந்தத் தராசின் அடியில் எனது சாக்கை விரித்து அதன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் போடப்படும் பங்கிலிருந்து சிதறி விழுந்த தானியங்கள் என் குடும்பத்திற்கு ஒருவேளை உணவுக்குப் போதுமானதாக இருந்தன. எத்தனைக் குடும்பங்களின் கருணை அது! அந்தப் பலதானியக் கஞ்சியில் எனது மனைவியும் அவளுள்ளே எனது மகனும் உயிர்த்துக் கிடந்தார்கள்.

ஒருநாள் அந்த நியாயவிலைக் கடைக்கு எங்கள் பக்கத்து வீட்டு மாமி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் மறைவாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அவளும் கவனித்த மாதிரி தெரியவில்லை. பம்பாயில் சரசுவிற்குத் தெரிந்த ஒரே பெண் அந்த மாமிதான். இந்தியும் தமிழுமாக அவர்களுக்குள் ஒரு நட்பு எப்படியோ உருவாகியிருந்தது.

அன்று மாலை நான் அறைக்குத் திரும்பிய போது உள்ளே மாமியின் குரல் கேட்டது. என்னைப் பார்த்ததும், “இப்படிப் பண்ணிட்டியே சோட்டு… நா ஒனக்கு ஒரு அக்கா மாதிரிதான? நா சோறுபோட மாட்டனா ஒனக்கு?” என்று கோவத்தில் குரல் தழுதழுக்கக் கேட்டார்.

நான் பதிலற்று நின்றேன்.

“சரி விடு. இன்ஷா அல்லா, எங்க முறைப்படி நாங்க சம்பாதிக்கதுல பத்துல ஒரு பங்கு மத்தவங்களுக்கு குடுக்கணும். நீ தப்பா நெனைக்காம வாங்கிக்கணும் தம்பி… ஒன்னோட சொந்த அக்காவா நெனச்சுக்கோப்பா…”
நான் சரசுவின் முகத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் நிற்க, அவள் மாமி கொண்டு வந்திருந்த மளிகைப் பொருட்களைச் சுட்டிக் காட்டினாள்.
அன்றிலிருந்து நாங்கள் ஊருக்குத் திரும்பிவரும் நாள்வரை மாமியின் கருணையில்தான் எங்கள் குடும்பம் பசியாறியது.

சரசு ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த சமயம். ஒருநாள் துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தாள். ஏதோ விசேஷ பூஜை, திரும்பி வர தாமதமாகும் எனக்கூறி எனக்கான உணவு, மருந்துகள் எல்லாம் எடுத்து வைத்துச் சென்றிருந்தாள். அன்று எனக்குக் கொடூர வலி. மருந்து எடுத்தும் வலி குறையவில்லை. எனது அத்தனை வலி-கட்டுப்பாட்டு முறைகளையும் முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் முனகிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தவன், பல்லைக் கடித்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தேன். எங்கு, எதை நோக்கி ஓடுகிறேன் என எதுவும் தெரியாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தேன். அந்தச் சேரியின் அத்தனைத் தெருக்களையும் நிற்காமல் ஓடிக்கடந்து கடற்கரை வரை வந்துவிட்டேன். திரும்பி ஓடத் தொடங்கியவன் தளர்ந்து விழுந்து அந்தக் கடற்கரை மணல் சூட்டில் அப்படியே கிடந்தேன். வலி மீண்டும் என் உயிரைப் பற்றி வெளியே இழுக்க முயன்றது. எழுந்து வயிற்றில் கைமுட்டியால் குத்திக்கொண்டு திரும்பி ஓட ஆரம்பித்தேன். முதன்முதலில் வந்திறங்கிய இரயில் நிலையம், வேலை செய்த பழைய பொருள் கடை, மளிகைக்கடை, ஆங்கில நாவல்களை மலிவு விலையில் கொடுத்த நடைபாதைக் கடைகள், அமிதாப் சாகிபின் பங்களா, ராமர் கோயில், திருநெல்வேலி அல்வாக்கடை, செட்டியாரின் அடகுக்கடை, இரவு சீட்டாடும் கிளப், சீண்டும் பெண்களின் சிவப்புவிளக்குப் பகுதி, முதலில் கிடந்த வில்சன் மருத்துவமனை, பின் கிடந்த அரசு மருத்துவமனை, அப்படியே வந்து எங்கள் சேரியின் பத்து குறுக்குத் தெருக்கள் தாண்டி என் அறைக்குள் வந்து நின்றேன். கைகள் பதற என்ன செய்வதெனத் தெரியாமல் அறையில் இருந்த பொருட்களைத் தூக்கிப்போட்டு உடைத்தேன். அடுப்பில் இருந்த பாத்திரத்தைத் தூக்கி வெளியே எறிந்தேன். அப்போது என் கண்ணில் பட்டது அந்த கண்ணாடிக் குப்பி.

‘ஓமத்திரம், ஓமத்திரம்..’ என்று புலம்பியவாறு அதைப் பாய்ந்தெடுத்து கடகடவென குடித்தேன். அவ்வளவுதான். வாய், நெஞ்சு, வயிறு முழுதும் பற்றியெரியும் வலி. உடல் முழுதும் ஒரே மண்ணெண்ணெய் வாடை. சற்று நேரத்தில் நினைவிழந்து விழுந்தவன் கண்விழித்த போது மூன்று நாட்கள் கடந்திருந்தன. மார்பிலிருந்து தொப்புள் வரை வயிற்றைச் சுற்றி பெரிய கட்டு போட்டிருந்தார்கள். அசைய முடியாத வலி. டியோடினம் என்கிற குடல் பகுதி முழுவதும் புண்ணால் அழுகியிருந்திருக்கிறது. அதை வெட்டி நீக்கி மற்ற குடற்பகுதிகளை இணைத்து ஒருவாறாக எனை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

அடுத்த சிலநாட்கள் மருத்துவமனைப் படுக்கையில் வாழ்வின் அடுத்த சவால்களை நினைத்துக் குழம்பிக் கிடந்தேன். என் பக்கத்துப் படுக்கையில் ஓர் இருபது வயது இளைஞன் இருந்தான். பெரும்பாலான நேரங்களில் அவன் உறங்கிக் கிடந்தான். கண் விழித்ததும் திரும்பி என்னையே உற்றுப் பார்ப்பான், எதற்காக என்னைப் பார்க்கிறான் என்று எனக்குப் புரியவேயில்லை. அவன் என்னிடம் ஏதும் பேசவும் முயற்சிக்கவில்லை. மூன்று நாட்கள் கழித்து, எங்கள் படுக்கைகளைச் சுற்றி ஒரே பரபரப்பு. அவனது குடும்பத்தினர் பதற்றமாக அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைந்தனர். மருத்துவர்களிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
ஒரு முதிய மருத்துவர் அந்த இளைஞனின் தந்தையிடம், “மன்னிக்க வேண்டும் ஐயா, இன்று இரவு பன்னிரண்டு மணி வரை தான்… எங்களால் முடிந்த எல்லாம் செய்துவிட்டோம்..” என்று சொல்வது என் காதில் விழுந்தது. அந்த இளைஞன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது கை நரம்பில் குத்தியிருந்த குளுக்கோஸ் சொட்டுச்சொட்டாக இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கிடந்தேன். அவனை எழுப்பி அவனோடு ஏதாவது பேச வேண்டும், அவனுக்கு ஆறுதலாக எதாவது சொல்ல வேண்டும் என என் மனம் கிடந்து அடித்தது. அவனது மார்பு ஏறி இறங்குகிறதா என கவனமாகப் பார்த்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கியது. இன்னும் சில நிமிடங்களில் என் பக்கத்துப் படுக்கையிலிருந்து ஓர் உயிர் பிரிந்து செல்லப் போகிறது. அதன் ஒரே சாட்சி நான் தான். எட்டி அவனது கையைப் பற்றி அவனுக்கு ஒரு விடை கொடுத்தல் கூட செய்ய முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? திடீரென அவன் உடல் நடுங்கி அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. தூக்கித்தூக்கிப் போட்டது. பன்னிரண்டாக இன்னும் இரண்டு நிமிடங்கள் தான். உடல் அசைவற்று விழ அவன் கண் திறந்து என்னைப் பார்த்தான். அதே பார்வை. சரியாக பன்னிரண்டு மணிக்கு குளுக்கோஸ் கடைசி சொட்டு உள்ளிறங்க அவன் புறப்பட்டு விட்டான் என ஒரு செவிலி எளிதாக அறிவித்துச் சென்றாள். எனது வயிற்றுத் தையலின் இரு முனைகளையும் யாரோ பிடித்து இழுத்தது போலிருந்தது, கைகால்கள் வெட்டியிழுக்க என்னுடல் படபடவென தூக்கிப் போட்டது. குடல் முழுதும் வெளியே வந்து விழுமாறு வாந்தியெடுக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் கண்விழித்த போது பக்கத்திலிருந்த அந்த வெற்றுப் படுக்கையில் புதிதாக விரிப்பும் தலையணையும் போட்டிருந்தார்கள். அந்த முகம் மட்டும் இந்த நாள்வரை என் கண்ணிலிருந்து நீங்காமல் நிற்கிறது. கண்ணாடி முன் நின்று என் தழும்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த இளைஞனின் பார்வையும், தொட்டிராத அவனது கைகளின் வெதுவெதுப்பும் எனக்குள் சட்டென ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
என்னென்ன ஆட்டங்கள் போட்டு என்ன? வஞ்சம், பொறாமை, பகை, வெற்றுக் கௌரவம், ஆடம்பரம்… என்னென்ன ஆட்டங்கள் போட்டுத்தான் என்ன ஆகிவிடப் போகிறது? ஒரு நொடியில் எல்லாமே மாறிப் போய்விடக் கூடும் இல்லையா? எந்த நம்பிக்கையில் பம்பாய்க்கு இரயிலேறினேன்? எந்த நம்பிக்கையில் அந்த இருள் நிறைந்த நீண்ட குகைப்பயணத்தில் சரசு என்னுடன் வந்துவிடத் துணிந்தாள்? நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் எந்த நம்பிக்கையில் இன்னோர் உயிரை உருவாக்கி விட்டேன்?

பம்பாயிலிருந்து ஊருக்குத் திரும்ப இரயிலேறும்போது நான் வெறும் முப்பத்தி இரண்டு கிலோதான் இருந்தேன். அந்த எலும்பும் தோலும் இத்தனை வருடங்களில் ஒரு தாத்தாவாக மாறி நிற்பதே ஒரு ஆச்சரியம் தான். வேலையற்று, பணமற்று கையில் ஒரு வயதுக் குழந்தையுடன் சரசுவின் கண்களில் மிச்சமிருந்த சிறுதுளி உயிர்த்துடிப்பை நீட்டிக்க வேண்டி ஒரு நீண்ட பயணம். அந்த இரயிலில் என்னுடன் பயணித்த ஒவ்வொரு முகமும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. இத்தனை நீண்ட இந்தத் தண்டவாளத்தில் ஒருபோதும் நிற்காத ஓய்வற்ற எத்தனை இரயில்கள்! எத்தனை சீழ்க்கை சத்தங்கள்!

*

வீட்டில் நுழைந்தபோது சரசுவின் பாட்டுச் சத்தம் கேட்டது. சூர்யாவை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் சென்று நின்று அவனது தலையைத் தடவிக் கொடுத்தேன். சட்டெனக் கண்விழித்தவன், “தாத்தா… தாத்தா…” என வெப்ராளப்பட்டு என் மீது துள்ளி ஏறினான்.

“சரி மக்ளே.. போட்டு.. போட்டு… அம்மைக்கு அடி குடுப்போம் செரியா?”

சற்று நேரம் ஏங்கியவாறு என் தோளில் சாய்ந்து கிடந்தவன் மெதுவாகக் கீழே இறங்கி நின்றான். என் கையிலிருந்த ஜெம்ஸ் மிட்டாயைப் பிடுங்கித் தன் சட்டைப்பையில் திணித்தவன் ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான்.

சரசு என்னைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொள்ள, சூர்யா சட்டையைத் திறந்து தன் வயிற்றைக் காட்டினான்.

“தாத்தா.. இங்கப் பாத்தியா? எனக்கும் ஒன்ன மாதி கோடு வந்துட்டே… எப்புடி டோய்!..”

இத்தனை நேரம் நினைவில் மீண்டு வாழ்ந்திருந்த எனக்கு சட்டென என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றேன்.

என் கையைப் பிடித்து வளைத்து, “சாமி கிஃப்ட் தந்துன்னு பொய் சொல்லிருக்க, என்னா?” என்று கேட்டான்.

நான் சரசுவின் முகத்தைப் பார்க்க அவள் ஏதும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.

“அப்பா என்ட்ட சொன்னாளே… நீ பொய்த் தாத்தா… பேட் பாய்…” என்று சொல்லியவாறு ஓடியவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். கையில் காயத்திருமேனி எண்ணெய் குப்பி.

“தாத்தா, சட்டையக் கழத்து… சட்டையக் கழத்து…” என்று அவனே என் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான்.

ஏதோ யோசித்தவனாக என் வயிற்றுத் தழும்பை தடவிக் கொடுத்தான். அந்த எண்ணெயை எடுத்து என் தழும்பின் மீது தடவி விட்டான்.

“ரொம்ப வலிக்கா தாத்தா? நம்ம மேஜிக் பண்ணி இத மாத்திருவோம், செரியா?”

பின்னால் நின்றிருந்த சரசு, “என்ன? தாத்தாவும் பேரனும் பாசத்துல உருகிட்டேளா?” என்று சிரித்தாள்.

பிரசவ அறைக்குள் செல்லும் முன் சரசு தன் வயிற்றை என்னிடம் காட்டி, “எப்பா, இங்கப் பாருங்கோ, எனக்கும் ஒங்கள மாதியே கோடு இருக்கு.. இப்பிடி தொப்புளுக்கு நேரா கோடு இருந்தா பொம்பளப் புள்ளயாம், தெரியுமா?” என்று சொல்லிச் சிரித்ததை நான் எப்படி மறக்க முடியும்?

***

சுஷில் குமார் – 20க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு விரைவில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வரயிருக்கிறது.

RELATED ARTICLES

1 COMMENT

  1. அற்புதமான சிறுகதை … ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிரியாதாக்க வென்றுமென்றால் அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோடு வரைய வேண்டும் , குழந்தையின் அன்பின் முன்னாள் தாத்தாவின் வயிற்றில் இருக்கும் கோடு காணாமல் போகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular