Friday, March 29, 2024
Homesliderஅபராதம் அவமானமல்ல

அபராதம் அவமானமல்ல

முனைவர் சீ.சரவணஜோதி

மதுரைக்கு ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயர் வந்த கதைத் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நான்மாடக் கூடல் படலத்தில் பரஞ்சோதி முனிவர், மதுரக்குள் வரும் வருணன் பற்றி கூறும் பாடல் ஒன்று, அடியனேன் முன்னஞ் செய்த அபராதம் இரண்டும் தீரும் படிபொறுத்து அருள்வாய் என்று பண்முறை பரவித்தாழ்ந்து மடிவிலா மகிழ்ச்சி பொங்க வரங்களும் சிறிது வேண்டிக் கடியதன் நகரம் புக்கான் குட்திசைக் காவல் வேந்தன் என்று பாடலில், வழி வருணன் (குடதிசைக் காவல் வேந்தன்) மதுரை நகருக்குள் வருமுன் நான் செய்த இரண்டு வினைகளுக்கு (குற்றங்களுக்கு) அபராதம் தீரும் பொருட்டு உன்னிடம் வரங்கள் வேண்டி வந்துள்ளேன்.

அபராதம் என்பது குற்றமாகவும் அவமானத்தின் அடையாளமாகவும் சமூகத்தில் நிலவி வருவதை இக்கதை உணர்த்துகிறது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அபராதம் என்பது அவமானத்தின் அடையாளமாக அஞ்சி வாழ்ந்தனர் மக்கள். தங்களுடைய அடுத்த தலைமுறையினரையும் அவ்வறே வளர்த்தனர். இக்கருத்தியல் சமூகத்தின் விழுமியமாகவும் கருதப்பட்டது. அவமானங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த குடும்பத்தையும் மனிதர்களையும் மக்கள் பெரிதும் மதித்தனர் மரியாதையும் செய்தனர். இதனைச் சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடல் ஒன்று:

பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.

என்று வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் மட்டுமல்லாமல் உலக மாந்தர்களுக்கும் இது ஒரு பொது அறநெறியாகக் கருத்தப்பட்டு வந்த வாழ்வியல் ஒழுக்கமாகும்.

அபராதம் பற்றிய புரிதல்

இன்றையத் தகவல் தொழில் நுட்ப உலகத்தில் அபராதம் என்ற சொல்லின் பொருள் மலினப்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் காலத்தில் பேருந்து, இரயில், வங்கி, நீதிமன்றம் போன்ற இடங்களில அபராதம் அவமானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் மின்சாரக் கட்டனம், தொலைப்பேசிக் கட்டணம், கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் தேர்வுக் கட்டணம் போன்றவைப் பெற்றோர்களால் அபராதத்துடன் கட்ட அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக என் நண்பர் வீட்டில் நடந்த நிகழ்வு, ‘அப்பா இன்றைக்குத்தான் தேர்வுக்கட்டணம் கட்ட கடைசி தேதி, அப்படி கட்டவில்லை என்றால் அபராதத்துடன் கட்டவேண்டும் என்றான், உடனே அப்பாவின் பதில் அபராதத்துடன் கட்டிக் கொள்ளலாம். இந்தப் பதில் என் நண்பர் வீட்டில் மட்டும்மல்ல பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கிறது. பெற்றோர்களாலும் சமூகத்தாலும் வருங்காலத் தலைமுறையினர் அபராதத்தை அவமானமாகக் கருதாமல் வழக்கமான செயலாகக் கருதும் மனநிலை உருவாகி வருகிறது.

செல்லிடைப்பேசி பெருகிவரும் காரணத்தால் கடன் வாங்குதல் என்பதும் அபராதம் கட்டுதல் என்பதும் மலினப்படுத்தப்பட்டு அச்சம் அற்ற தன்மையைச் சமூகத்தில் உலாவ விட்டுவிட்டது. உதாரணமாக செல்லிடைப்பேசியில் பிறரை அழைப்பதற்குப் போதிய பணம் இல்லாத பட்சத்தில் குறிப்பிட்ட எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தற்சமயத்திற்குத் தேவையானத் தொகை கிடைத்து விடுகிறது. எனவே எளிமையாக கடன் வாங்கும் பழக்கம் உருவாகிவிடுகிறது. மேலும் வங்கியில் தொடங்கி பணம் குடுக்கும் நிறுவனங்கள் வரை வாடிக்கையாளரைத் தவனைத் தேதியைக் கடந்து பணம் கட்டவைத்தால் இலாபம் கிடைக்கும் என்பதற்காக வாடிக்கையாளர்க்கான தகவல் தாமதப்படுத்தப்பட்டு அனுப்புதல் போன்ற செயல்பாடுகள், அபராதம் அவமானமல்ல என்ற மனநிலையை ஊக்கிவிக்கும் காரணிகளாக அமைகின்றன.

இன்றையத் தலைமுறையும் அபராதமும்.

வருங்கால தலைமுறைகளின் ஒழுக்கங்களைக் கற்பிக்கும் பெற்றோரும், கல்வி நிறுவனங்களும், சமூகமும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கின்றன. மற்றொருபுறம் தங்களை அறியாமலே பெற்றோரும், கல்வி நிறுவனங்களும், சமூகமும், கடன் வாங்குதல், அபராதம் போன்ற செயல்பாடுகளில் இளம் தலைமுறையினர் ஈடுபடுத்தப்பட வைக்கின்றனர். சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் ஒழுக்கங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவற்றில் உச்சகட்டத் தண்டனை, தவறு செய்யும் மாணவர்களுக்குத் தவறுகளின் தன்மைக்கு ஏற்ப அபாராதத் தொகையைத் தீர்மானித்துக் கட்டவைத்தல்.

அபராதம் என்பது அவமானமாக கருதாத சமூகத்திற்கு, அபராதம் எப்படிப் பொருத்தமாகும். அப்படியே இருந்தாலும் அபராதம் என்பது செலவினங்களின் ஒன்றாகத்தான் கருதப்படும். மேலும் அபராதம் அவமானமாக கருதிய சமூகம் அலைபேசியில் தொடங்கி அனைத்து நிகழ்வுகளுக்கும் கடன் என்ற சொல் இயல்பானதாக மாற்றப்பட்டுவிட்டன. எனவே, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஒழுங்கு மேம்பாட்டிற்கு அபராதம் என்பதை நீக்கி அதற்கு நிகரான சிந்தனையை முன்வைக்க வேண்டும். இளம் தலைமுறையினரை நம் கண் முன்னே நாமே கெடுத்துவிட்டு அவர்கள் சரியில்லை என்று குறை கூறுவது பொருத்தமற்ற வாதம். எனவே, ஒழுங்கு நடவடிக்கைக் குறித்து சிந்திக்கிற போது பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ள மாணவர்களின் மன சீர் அமைப்பு முறையைப் புரிந்து செயல்படுத்த வேண்டும். பாடம் நடத்தி அறிவை மேம்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் பாடம் நடத்துவதற்கு நிகராகப் பின்பற்றப்பட வேண்டும். எனவே இளம் தலைமுறையினர்க்குச் சிறுசிறு கருத்தியல்களை நாம் புரிந்து கொண்டு, அவர்களை வழி நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர் சமூகத்திற்கு அபாராத்திற்கு ஆட்படுதல் தவறு என்பதைப் புரியவைக்க வேண்டும்.

குடும்ப உறவுகளில் இளம் தலைமுறையினர் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். இவர்களின் பிற்கால வாழ்வியலுக்கு உதவும் பழக்க வழக்கங்கள் கற்றுத்தர வேண்டும். ஆனால் தற்கால சமூக அமைப்பில் குடும்ப உறுப்பினர்களின் உரையாடல் குறைந்த அளவில் உள்ளன. அலைபேசிகள் குடும்ப உறுப்பினர்களாக மாறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளதை யாரும் கண்டுகொள்ளாது உள்ளோம். இதன் விளைவை எப்படி உணரலாம் என்றால், பொறுப்பற்ற தன்மை, காலம் கடத்தல் போன்ற ஒழுக்கக் கூறுகள் நம்முள் குடிகொண்டு இருப்பதை உணர மறுத்தல். மின்சாரக் கட்டணம், அலைபேசிக்கட்டணம், இவற்றை அபராதத்துடன் கட்டுவதை மிக சாதாரனமாக எடுத்துக்கொண்டுள்ளோம். பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் வெளி நாடுகளில் ஒழிந்து கொள்ளுகிற நபர்களுக்கும் இருபது ரூபாய் அபராதத்துடன் கட்டுகிற மத்தியத்தர குடும்பத்திற்கும் என்ன வேறுபாடு காண முடியும். இந்தக் கட்டுரை மத்தியத்தர குடும்பத்திற்கான ஒழுக்கம் பற்றி பேசுகிறது. இவர்களிடம் தான் ஒழுக்கம் விழுமியமாக கருதப்படுகிறது. பிறர் சொல்லுக்கு அஞ்சி வாழ்வது பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளம். எனவே, அபராதத்தை அவமானமாக கருதி வாழ்ந்தால் பிற்கால அரசியல் செழுமை பெறும். மத்தியத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அரசியல் தலைவர்களாக உள்ளனர். கடன் கட்டாதவர்கள் வணிக சமூக மாறியுள்ளார்கள்.

சமீப காலமாக அரசு பொய் பேசுகிறது என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அரசு என்பது அரசியல் தலைவர்கள், மக்களோடு தொடர்புடைய அரசு அலுவலர்கள். இவர்கள் கூற்றில் முன்னுக்குப் பின் புறம்பாக கூற்றுகள் எழுகிறபோது, நம் ஒழுக்கங்களை நிர்ணயிக்கின்ற நிறுவனங்கள் நம்பிக்கையற்றத் தன்மையைப் பெறுகின்றன. இக்கருத்தியல் இளைய தலைமுறையைப் பாதிக்கும். இது தொடர்ந்தால் உறவுகள் பொய்த்துப் போய்விடும். உறவுகளின் அவநம்பிக்கையோடு ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டால் நாட்டின் வீழ்ச்சி எப்போது இருக்கும் என்றுகூட யூகிக்க முடியாது. மனிதர்களின் வாழ்வியல் நகர்வு யூகங்களால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அபராதம் தானே என்று எளிமையாக கருதாமல் அவமானமக கருதி வாழ்வது நலம்.

***

முனைவர் சீ.சரவணஜோதி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
E.Mail: [email protected]

RELATED ARTICLES

4 COMMENTS

  1. அபாரதம் என்பது பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்து தற்காலம் வரை எப்படி கருத்தியல் மாற்றம் அடைந்துள்ளது என்பதை விளக்கும் கட்டுரை… கட்டுரையாளர் Saravana Jothi அவர்களுக்கும் ,yaavarum.com Jeeva Karikalan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்…

  2. மாணவர்களுக்கு போராசன் தரும் அபராதமே
    அபாரம்

  3. ஆர்பாட்டத்துடன்தொடங்கிய வாழ்வு
    அபராதத்தில் வாழ்ந்துகொண்டுஇருங்கிறோம்
    ஐயா தங்களின் படைப்பு எங்களுக்கு கிடைத்த சிறப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular