எஸ்.சண்முகம்

“நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்த
குரங்கை அந்நியர் விரட்டினர்
- அப்பா, கனவு மற்றும் ஒரு கதை”
(கல்வெட்டுச் சோழன், பக்கம் 51)
எண்பதுகளில் மிகுந்த உயிர்ப்புடனும், செழுமை உற்றிருந்த சிறுபத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறுகதையாசிரியர்களில்; டி.கண்ணன் யதார்த்தவாத கதையாடலைத் தவிர்த்துவிட்டு, எதிர்-யதார்த்தவாதம் மற்றும் மேஜிகல் ரியலிசம் ஆகிய இரண்டு வகைமைகளிலும் இயங்கியவர் என்பதைத்தான் டி.கண்ணனின் எழுத்து மரபு என்று குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன். மிகச் சில கதைகளை எழுதிய போதிலும் அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் பல வகைமைகளின் விளிம்புகளின் புறக்கோட்டை மென்மேலும் விரிவடையச் செய்யும் விதமாக அமைந்தவை. பிரதியின் அமைப்பாக்கத்திலும் கதையாக்கத்திலும் அவருக்கு இருந்த அதீத அக்கறை என்பது நவீனத்துவ எழுத்தை – நவீனத்திற்கு பிந்தைய நிலைப்புகளுக்கு நகர்த்தக் கூடியவையாக அமைந்துள்ளன. எண்பதுகளில் எழுந்த எதிர் – யதார்த்த அலையில் பயணித்தார். அப்போதைய காலகட்டத்தில் தமிழில் அமைப்பியல் கோட்பாட்டை தமிழவனின் “ஸ்ட்க்சுரலிசம்” புத்தகம் அறிமுகப்படுத்தியிருந்த ஆண்டுகளில், நிகழ்ந்த மற்றொருன்று இலக்கிய அறிதல் மேஜிக்கல் ரியலிசம். டி.கண்ணன் இவ்விரு நவீனத்துவ இலக்கிய போக்குகளின் இழைகளால் நெய்யப்பட்ட கதைசொல்லி ஆவார். டி.கண்ணன் ஒரு தற்செயல் நிகழ்வல்ல.
டி.கண்ணன் மறைந்த செய்தியை 23/11/2025 அன்று காலை இலக்கிய நண்பரும், அவருடன் மிக நெருக்கமாக பழகிய எனக்கும் அணுக்கமானவருமான ஶ்ரீகுமார் கூறினார். அடுத்த சில மணி நேரத்தில் கும்பகோணத்திலிருந்து எனது சக பயணியும் விமர்சகருமான ஜமாலன் டி.கண்ணனின் மறைவு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். சில நொடிகளுக்கு பிறகு தெரியும் என்று சொன்னேன். கண்ணனுக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பும் நெருக்கமும் எதன் அடிப்படையில் ஏற்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு இசைக்கோர்வையை எதனால் பிடித்தது என்ற கேள்வியின் விடையின்மைதான் கண்ணனுடனான உறவின் பிடிப்பிற்குமான பதிலென்று கருதுகிறேன். அவரது ஆர்வங்களுடன் எனது ஆர்வங்களும் சந்தித்த புள்ளி தான் உறவு நேரிட்ட இடம்.
அவரை முதன்முதல் சந்தித்த இடம், திரு.கோமல் சுவாமினாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான “சுப மங்களா” பத்திரிக்கை சார்பாக தியாகராய நகரில் நடந்த வாசக நிகழ்ச்சியில் தான் சந்தித்தேன். சந்தைப்படுத்தல் நிர்வாகிகளின் ஆடையில் இருந்தார். அவரை யார் அறிமுகப்படுத்தினார் என்று எனக்கு நினைவில் இல்லை. பரஸ்பரம் இருவரும் புன்னகைத்துவிட்டு பேசத் துவங்கினோம். நீண்ட நேரம் இலக்கியம் பற்றி பேசுகையில் எதார்த்தவாதத்தை தவிர்த்துவிட்டு எழுதப்படும் மாற்று புனைவுகளைப் பற்றியும், மேஜிக்கல் ரியலிசம், இலத்தின் இலக்கிய சிறுகதைகள், நாவல்கள் முவைக்கும் புனைவுகளைக் குறித்தும் உலக இலக்கியத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை முன்வைத்து தனது பிரதியை விவரித்தார். நான் அமைப்பியல் பின் – அமைப்பியல் எனும் இரு கோட்பாடுகளும் தமிழ் புனைவு வாசிப்பில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அறிதல் வழி மாற்றத்தை எடுத்துரைதேன். இதுதான் ஒரு நல்லிணக்கம் எம்மிருவருக்கும் இடையில் ஏற்பட்டது.
அவர் நான் வசிக்கும் ஜாம்பஜார் பகுதிக்கு அருகில் திருவல்லிக்கேணி – பெரிய தெருவில் மேன்சன் அறையில் தங்கியிருந்தார். அடுத்தடுத்த வாரங்களில் அவருடைய அறையிலும் என்னுடைய அறையிலும் மற்றும் என் அன்பிற்கினிய நண்பர் கோட்பாட்டாளர் திரு நாகார்ஜுனன் அவர்களுடைய நாட்டு சுப்பராயன் தெருவில் இருந்த இல்லத்து இரண்டாவது மாடியில் இருந்த தனியறையிலும் தொடர்ந்தன. மிகத் தீவிரமான விவாதங்களில் டி.கண்ணன் சில அறிய இடையீடுகளையும், நகைச்சுவையான சிறு தொடர்களையும் பங்களித்தார். சில தருணங்களில் நாகார்ஜுனனின் தீவிரத்தன்மையை மட்டுப்படுத்தும் வகையில் உங்கள் சொற்றொடர்கள் உள்ளன என்று இடித்துக் கொண்டதும் உண்டு. உரையாடலில் நடுவே கண்ணன் என்னைக் கிண்டல் செய்யும் விதத்தில், எப்போதும் தீவிரமான மன நிலையிலேயே பேசாதீங்க, கொஞ்சம் நெகிழ்வாகுங்கள் என்பார். தீவிரமும் நெகிழ்வும் சரிவிகிதத்தில் தொனிக்க விவாதங்களில் பங்கு கொள்வார்.
அன்றைய காலகட்டத்தில் டி.கண்ணன் சேகரத்தில் பெரும் எண்ணிக்கையிலான கிடைத்தற்கரிய இலத்தின் இலக்கியபுத்தகங்கள் அவர் வசமிருந்தன. அவர் உறங்கிய கட்டிலுக்கு கீழ் பல அட்டைப் பெட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்தன. நான் உட்பட அன்றைய அநேக சிறுபத்திரிக்கை எழுத்தாள நண்பர்கள், கண்ணனிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டு வாசித்தனர். மேலும் அவரது மற்ரொரு தனியார்வம் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை கேட்பதிலும் அதிக நேரம் செலவிட்டார். குறிப்பாக என்னிடம் புல்லாங்குழல் மாலியின் இசை மேதைமையை வியந்து பேசுவார். அதைவிட செனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் இசையின் மாய அனுபவத்தை விவரிக்க இயலாமல் திகைத்ததையும் பார்த்துள்ளேன். மேலும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களில் சாரங்கி இசைக்கருவியின் பங்கையும் பயன்பாட்டையும் விளக்கிக் கூறியுள்ளார். மேற்கத்திய செவ்வியல் இசைக் கோர்வைகளிலும் மிகுந்த பரிச்சயம் உடையவராக இருந்தார். இன்னொரு விநோதம் சீட்டாட்டத்தில் அவருக்கிருந்த ஈடுபாடும், வெல்லும் தேர்ச்சியும். சீட்டாட்டத்தில் நிலவும் நிச்சயமின்மை அவரது எழுதாக்கத்தின் ஒரு கூறாகவே இயங்கியதைக் காண்கிறேன். அவரது சிறுகதைகளில் இது விரவியிருந்தது.
அவர் இயர்கையில் அபரிமிதமான நகைச்சுவையுணர்வு உடையவர். என்னையும் இன்ன பிற நண்பர்களையும் கூட திகைக்க வைத்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியைக் கூற வேண்டும். ஒருமுறை தமிழவனின் பெங்களூரூ இல்லத்தில் நிகழ்ந்த சம்பவம் இதற்கொரு சான்று. தமிழவன், நான், நாகார்ஜுனன், கண்ணன் பேசிக்கொண்டிருக்கையில் டி.கண்ணன் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பேசும் தருணத்தில், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகர்களான எல்.வி.ரங்கராவ், டி.எஸ்.பாலையா, நாகையா, எல்.வி.சுப்பையா, ஆகியோரை ஒப்பிட்டு சொன்னதை அருகிலிருந்து கேட்டதை; இன்றும் அது நினைவுக்கு வரும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரித்துவிடுவேன்.
தமிழவன், நாகார்ஜுனன், எஸ்.சண்முகம், நஞ்சுண்டன் ஆகியோர் இணைந்து காவ்யா சண்முகசுந்தரம் வெளியிட்ட”வித்யாசம்” இதழின் ஆசிரியர் குழுவில் டி.கண்ணன் இடம்பெற்று பங்காற்றினார். வித்யாசம் இதழில் வெளியிட்ட”அப்பா, கனவு மற்றும் ஒரு கதை” சிறுகதை, அவருடைய தனித்துவமான கதையாடல் பாணியின் பிரதியியல் உச்சமெனக் கருதுகிறேன். இக்கதை ஏற்படுத்தும் வாசக தாக்கம் முக்கியமானது. வழமையான வாசிப்பைக் கோரும் எதிர்-எதார்த்தம், மேஜிக்கல் ரியலிசம் ஆகிய இரண்டின் வலைப்பின்னலாக அமைந்துள்ளது. வாசகனுடைய கதைமொழி ஒருவித opaqueness ஐ தோற்றுவிக்கிறது. இந்தக் கூறு டி.கண்ணனுடைய எழுத்துமுறைமையின் தனிமுத்திரை. கதைசொல்லியின் குரல் ஏகத்துவமான ஒற்றைக்குரல் என்ற கருத்தாக்கத்தை மறுப்பதும், தகர்ப்பதும்தான் கண்ணனின் எழுத்து தொழில் நுட்பம். அதிகமான பக்கங்களில் எழுதுவதைக் காட்டிலும் சுருக்கமான (brevity) பிரதியியலைக் கையாள்பவை இச்சிறுகதைகள்.
தமிழ் நவீனத்துவ எழுத்தாளர்களின் பன்முனைப் பிரதியாக்கத்தில் கண்ணனின் சிறுகதைப் பங்களிப்பு அவதானிக்கத்தக்கது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதும், அவை ஒவ்வொன்றும் பல வித்தியாசங்களின் வகைமாதிரிகள் எனலாம். பன்மை அடுக்குகளில் கதையாடலை எழுத்தாக்கம் செய்தவர் டி.கண்ணன். அவருடைய சிறுகதைகள் குறித்து ‘கல்குதிரை’ இதழில் நான் எழுதியுள்ளேன். கண்ணனின் “கல்வெட்டுச் சோழன்” சிறுகதைத் தொகுப்பு பற்றிய விரிவான கட்டுரையொன்றை எழுத வேண்டிய கடமை எனக்குள்ளது. விரைவில் விரிவாக எழுதவும் செய்வேன். கண்ணன் நிறைய கவிதைகளையும் எழுதியுள்ளார். அவையும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை.
எனினும் ஒரு சில வரிகள் அவரது “அப்பா, கனவு மற்ரும் ஒரு கதை”யைப் பற்றி சொல்ல வேண்டும். இக்கதையை முழுமையிலிருந்து அணுகாமல் அதன் fragments இலிருந்து (Closed Reading) அணுக்க வாசிப்பைக் கோருகிறது. கதையின் பல்வேறு opaque புள்ளியிலிருந்து துவங்குவதும், தொடர்வதும், நிறைவடைவதுமான வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கதையின் துவக்கத்தில்,
“உன் நினைவுகளை இழக்கப் பார்க்கும்
சாட்சிகள் நிரம்பிவிட்ட இவ்வூர் இனி வேண்டாம்.
உன் குழந்தைகளின் ஞாபகங்கள் வேறொரு
வடிவத்தில் மீண்டும் தொடங்கட்டும். காலம்
உனக்கு சகல சௌகரியங்களையும் அளிக்கட்டும்”(பக்கம் 42)
“பனைகள் மட்டைகளை உதிர்த்தன. அவ்வோலைகளில்
எழுத்துகள் காணக்கிடைத்தன”
- பாரசீக வியாபாரி ஒருவர் பின்னால்
அப்பா ஓடிக் கொண்டிருந்தார். - தன் மனைவியைக் கொன்றதற்காய் சிறையில்
வாழ்ந்து கொண்டிருந்தார். - நதியின் மூலத்தைத் தேடி இன்னும் கல் சக்கரத்தின்
பின்னால் அவர் ஓடிக் கொண்டிருந்தார். - தொலை தேசமொன்றில் வேறோர் மனைவியுடனும்
அவர்தம் குழந்தைகளுடனும் இல்லறத்தைத் துவக்கியிருந்தார். - அரசாங்கததிற்கு எதிரான போராட்ட – தலைமறைவு
வாழ்க்கையில் பாதாள அறையொன்ரில் வரைபட
உதவியாளராய் பணியாற்றிக் கொண்டிருந்தார். - திண்ணைகள் சூழ்ந்த நகரமொன்றில் சீட்டு
விளையாடிக் கொண்டிருந்தார்.
(பக்கம் 49-50)
நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்த குரங்கை அந்நியர் விரட்டினர் (பக்கம் 51)
நான் கதையை எழுதி முடித்தேன்(பக்கம் 53)
மேற்காணும் சிறுகதையின் பிரதி என்பது முழுமையில் அன்றி, அதன் சிறு பகுதிகளில் உள்ள சிறுதொடர்களின் வழியே அமைப்பாக்கம் பெறுவதைக் காண முடிகிறது. பெருங்கதையாடல் தன்மையைத் தவிர்த்துவிட்டு நுண்கதையாடல்களின் பிரதியாக்கம் எனலாம்.
டி.கண்ணன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது கைப்பேசியில் அழைத்து பேசுவார். தான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகக்கள் மற்றும் செவி நுகரும் இசைக் கோர்வைகள் பற்றி விவாதிப்பார். தான் நடத்திய சிறுபத்திரிக்கையான “பிரம்ம ராஷஸ்” தொடர்ந்திருக்கலாம் என்ற யோசனை அவரிடம் எப்போதுமிருந்தது.
இவையாவும் ஒருபுறமிருக்கட்டும். டி.கண்ணன் என்பவர் யார் ? எது அவரை நவீனத்துவ இலக்கியச் சூழலில் கட்டமைத்தது என்ற வினாவிற்கான விடை, அவர் தீவிர வாசிப்பு, உரையாடல், எழுதுதல் எனும் தமிழ் சிறுபத்திரிக்கையின் கொடிமரபின் தனிப்பண்பிலிருந்து உயிர்த்தவர். கடந்த மாதம் கூட என்னிடம் பேசினார். அவரது எழுத்துகள் என்றென்றும் தமிழ் வாசக சமூகத்திடம் பேசிக் கொண்டேதான் இருக்கும்.
இனி அவரது எழுத்துக்களை முன்வைத்து இடையறாது பேசுவதும் எழுதுவதும், அவரது சிறுகதைகள் குறித்து மென்மேலும் விவாதிப்பதும்தான் டி.கண்ணனின் நவீனத்துவத்திற்கு பிந்தைய இலக்கிய பங்களிப்பிற்கு நாம் செலுத்தும் இலக்கிய அஞ்சலி.
***
எஸ்.சண்முகம் – சென்னையை சேர்ந்தவர். கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இலக்கிய நேர்காணல்கள், தொகை நூல்கள் என்று தொடர்ச்சியாக பங்களித்து வருபவர். மேற்கூறிய வகைமைகளில் 21 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, இலக்கிய வீதி அன்னம் விருது, பாண்டிச்சேரி இலக்கியக்கழகம் கபிலர் விருது, மா.அரங்கநாதன் இலக்கிய விருது, பேராசிரியர் க.பஞ்சாங்கம் இலக்கியத் திறனாய்வாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல் : s.shanmugam65@gmail.com


