Thursday, March 28, 2024
Homesliderவீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்: தகவற்போரும் விளைவுகளும் Assange மீதான சட்ட நெருக்குவாரங்களும்

வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்: தகவற்போரும் விளைவுகளும் Assange மீதான சட்ட நெருக்குவாரங்களும்

ரூபன் சிவராஜா

அமெரிக்காவிடம் Assange கையளிக்கப்படுவதைத் தடுக்கும் தீர்ப்பின் பின்னணியில், Assange பின்னணி குறித்தும் வீக்கிலீக்ஸ் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அவர் எதிர்கொண்டுள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பாகவும் இக்கட்டுரை பேசுகின்றது.

இன்றைய யுகம் என்பது தகவல் யுகம். சமகாலத்தில் காணக்கூடிய எந்தவொரு பலத்தைவிடவும் பன்மடங்கு வலிமையானதும் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் சக்தியும் தகவல் தொழில்நுட்பத்திற்கு உண்டு. அதனை உணர்த்திய அண்மைய உலகளாவிய நிகழ்வு வீக்கிலீக்ஸ் (Wikileaks) தகவல் கசிவுகளும் அவை ஏற்படுத்திய விளைவுகளும் எனலாம். அதன் நிறுவனர் Julian Assange. அமெரிக்காவின் மோசமான போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும், இராஜதந்திரப் பிறழ்வுகளையும் அம்பலப்படுத்தியது. இன்னபிற நாடுகளின், ஊழல், மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் வீக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது.

Assange கடந்த பத்து ஆண்டுகளாக சட்ட ரீதியான வழக்கு, விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். படைத்துறையின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை மட்டுமல்ல அவர் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ர்யஉமiபெ மற்றும் உளவுபார்த்தல் குற்றச்சாட்டுகளை அவர் மீது முன்வைத்து, தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரிவந்திருக்கின்றது. அவர் தண்டிக்கப்படுவது அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது, கருத்துரிமை சார்ந்த ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். ஊடகச் சுதந்திரத்திற்குக் அச்சுறுத்தலாக அமைந்துவிடுமென்ற கருத்தே மேலோங்கியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, கருத்துரிமை மற்றும் உலகளாவிய ஊடகச் சமூகம் அவ்வாறு கருதுகின்றது.
தீர்ப்பு – அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது!

Julian Assangeஐ அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது என்ற தீர்ப்பு பிரித்தானிய நீதிமன்றத்தில் ஜனவரி 4ம் திகதி எட்டப்பட்டுள்ளது. பிரித்தானியக் குற்றவியல் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி Vanessa Baraitser தீர்ப்பினை வழங்கியுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஊடக அமைப்புகள் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளன. இருந்தபோதும் இந்தத் தீர்ப்பு ஊடக-கருத்துச்சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டதாக அல்லாமல், அவரின் உள மற்றும் உடல் நிலையைக் கருத்திற்கொண்ட மனிதாபிமான ரீதியிலான தீர்ப்பாகும். Julian Assange இன் உளநலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுமிடத்து அங்கு அவர் சிறையில் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படக்கூடும். தற்கொலை முயற்சியைத் தடுக்கும் திராணி அமெரிக்க சிறைத்துறைக்கு உள்ளதா என்ற வலுவான சந்தேகமும் தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தவறு. அப்படி நிகழ்வது அடிப்படை மனிதாபிமானக் கரிசனைக்கு முரணானது என்பது ஐரோப்பிய மனித உரிமைப் பார்வையாகும். ஆனால் இந்தத்தீர்ப்பிற்கு எதிராக அமெரிக்கா மேன்முறையீடு செய்துள்ளது. எனவே கையளிப்பு ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. Assange மீதான அமெரிக்காவின் தேடுதல் வேட்டையும் அவரைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டச்சிக்கல்களும் விமர்சன பூர்வ ஊடகச் செயற்பாட்டினைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்ற வலுவான கருத்து பரவலாக நிலவிவந்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா Assangeஐ தண்டிக்கின்ற எண்ணத்தைக் கைவிட்டிருந்ததாகவும், டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அம்முடிவு மீண்டும் மாற்றப்பட்டதாகவும், யுளளயபெந தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் அஸ்சேஞ்: அடிப்படையில் ஒரு Hacker

Assange ஒரு அவுஸ்ரேலியப் பிரஜை. அடிப்படையில் ஒரு கணினித் தொழில்நுட்பவியலாளர். அதிலும் குறிப்பாக கடினமான கணினி வலையமைப்புகளுக்குள் உட்புகுந்து தகவல்களை எடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர். இதனை Hacking என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

மிக இள வயதிலிருந்தே கடினமான கணினி வலையமைப்புகளை உடைத்து உட்சென்று (தடயங்களின்றி) தகவல்கள், ஆவணங்களை கபளீகரம் செய்கின்ற திறனை வளர்த்துக்கொண்டவராக இருந்துள்ளார். 1980களின் இறுதியில் ‘International subversives எனும் குழுவினை இவர் அமைத்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல முக்கிய கணினி வலையமைப்புகளின் தகவல்கள், ஆவணக்கோப்புகள் இக்குழுவினரால் கபளீகரம் செய்யப்பட்டன. அவற்றுள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகமான பென்ரகன் (Pentagon) மற்றும் அமெரிக்க தேசிய அறிவியல் ஆய்வக (Los Alamos National Laboratory) கணினித் தொழில்நுட்ப வலையமைப்பும் அடக்கம். இத்தகைய கணினித் தகவல் Hacking குற்றத்திற்காக 1991இல் அவுஸ்ரேலியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, தண்டப்பணம் செலுத்தக் கோரப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். ர்யஉமiபெ பெரிய குற்றச் செயலாகப் பார்க்கப்படாமையினால் சிறைத்தண்டனையிலிருந்து அன்றைய காலகட்டத்தில் தப்பமுடிந்தது.

‘ஆவணக் கசிவு தகவற்போரின் முக்கிய கருவி!’

Assangeஇன் அரசியல் நிலைப்பாடு என்பது வலது, இடது என்ற வரையறையை மையப்படுத்தியது அல்ல. அவருடைய நோக்கு, தனிமனிதனுக்கும் அரசுக்குமிடையிலான போராட்டம் என்பதாகக் கருதப்படுகின்றது. இரகசிய ஆவணங்களின் கசிவு என்பது தகவற்போரின் முக்கிய கருவி என்பதும், துணிச்சல் அதற்குத் தேவையான அடிப்படை என்பதும் அவருடைய துணிபு.

1997 இல் தகவல் தொழில்நுட்பத்துறை ஆய்வாளரும் எழுத்தாளருமான Suelette Dreyfus உடன் இணைந்து ‘Underground’ எனும் புத்தகத்தினை எழுதி வெளியிட்டார். Hacking-கலாச்சாரத்தின் முக்கிய விதிமுறைகள் இதன் பேசுபொருள் என அறியமுடிகிறது. கணிப்பொறிகள், அவற்றின் வலையமைப்புகளுக்குள் Hacking மூலம் நுழையும் போது, அவற்றின் உள்ளடக்கத்தைச் சிதைத்தலாகாது – அவற்றைச் செயலிழக்கச் செய்வது உட்பட – அவற்றின் தகவல்களை மாற்றக்கூடாது – Hack செய்து உள்நுழைந்ததற்கான தடயங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த மாற்றங்களையோ அழித்தல்களையோ செய்யக்கூடாது என்பது அப்புத்தகத்தின் முக்கிய உள்ளடக்கம் எனக் கூறப்படுகின்றது.
வீக்கிலீக்ஸ்: தோற்றம், வளர்ச்சி, விளைவு

2006இல் வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் நிறுவப்பட்டது. அந்த இணையத்தளத்தின் தனித்துவம் என்னவெனில் வழமையான ஊடகங்களில் வெளிவராததும், புலனாய்வு ஊடகங்களிற்கூட வெளிவராத இரகசிய ஆவணங்கள் அதில் வெளியிடப்பட்டன. அந்த ஆவணங்கள், தகவல் ஆதாரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட செய்திகள் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதனூடாக அமெரிக்க படைத்துறை, புலனாய்வு, இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

ஆவணக்கசிவு சார்ந்து உலகளாவிய பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சமகால தகவற்;தொழில்நுட்பம் வீக்கிலீக்ஸ் என்றால் அது மிகையல்ல. உலக வல்லரசான அமெரிக்காவின் போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி, உலகளாவிய ரீதியில் அமெரிக்காவை பெரும் நெருக்கடிகளுக்குள் தள்ளியதில் அதன் பங்கு காத்திரமானது.
2006இல் வீக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டாலும் 2010இலேயே அது சர்வதேசத்தின் மிக முக்கியமான கவனத்தினைப் பெற்றது. மிக முக்கியமானதொரு சிறிய காணொளித் துண்டு, 2010இல் சர்வதேச கவனத்தை வீக்கிலீக்ஸ் பக்கம் திருப்பியது. அதிலிருந்து சர்வதேச மட்டத்தில் வீக்கிலீக்ஸ் பேசுபொருளானதோடு அதன் நிறுவனரான Assangeம் பேசப்படும் நபரானார். ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தினர் உலங்குவானூர்தியில் இருந்தபடி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் சுட்டுக் கொன்ற காட்சிகள் அந்தக் காணொளிப்பதிவில் உள்ளடங்கியிருந்தது.
அம்பலப்படுத்தல்: அமெரிக்க போர்க்குற்றங்கள், கைதிகள் சித்திரவதை

2006 – 2009 காலப்பகுதியில் அரசுகள், பெருவணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் குற்றவியல் செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 2007 இல் பிரித்தானியாவின் The Guardian முதன்முறையாக வீக்கிலீக்சுடன் இணைந்து செயற்பட்டது. கென்ய நாட்டின் முந்நாள் ஜனாதிபதி Daniel Arab Moi இற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு ஆவணங்களைப் பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகையும் வீக்கிலீக்சும் இணைந்து வெளியிட்டன. அந்த அம்பலப்படுத்தல்கள் கென்ய அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 2010இல் ஆப்கானிஸ்தான் போர் சார்ந்த அமெரிக்க ஆவணங்களும் (Afghanistan war logs), ஈராக் போர் சார்ந்த ஆவணங்களும் (Iraq war logs) வெளியிடப்பட்டன. அத்தோடு உலகெங்கிலுமுளள அமெரிக்கத் தூதரகங்களின் 250 000 வரையான அறிக்கைகள், குறிப்புகளும் அம்பலப்படுத்தப்பட்டன.

2011இல் குவான்டனாமோ சட்டவிரோத தடுப்பு முகாமில் போர்க்கைதிகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் மோசமான சித்திரவதைகள் காணொளிகளுடன் அம்பலப்படுத்தப்பட்டன. (குவான்டனாமோ கியூபாவின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள விரிகுடாப் பிரதேசம்) 2002 இல் George W. Bush காலத்தில் அங்கு அமெரிக்கக் கடைற்படைத் தளமும் தடுப்பு முகாமும் அமைக்கப்பட்டன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போர்க்கைதிகள் அங்கு கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் அல்-கைடா உறுப்பினர்கள், செப்ரெம்பர் 11 தாக்குதல் சந்தேக நபர்களும் அடங்கியிருந்ததாக கூறப்பட்டது. போர்க் கைதிகளின் சட்ட உரிமைகள் தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையை மீறிய வகையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான சித்திரவதைகள் அம்பலப்பட்டன. இதனால் உலகளாவிய எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் அமெரிக்கா எதிர்கொண்டது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு, சர்சதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட அமைப்புகளும் கண்டித்தன.

அமெரிக்க எல்லைக்கு வெளியில் இந்தத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டிருப்பதால், கைதிகளுக்குரிய அடிப்படைச் சட்ட உரிமைகளை வழங்கத் தேவையில்லை. அத்தோடு போர்க்காலத்தில், ‘சட்ட விரோத எதிரிகள்’இ போர்க்கைதிகள், பொதுமக்களைக் கையாள்வதில் ஜெனிவா தீர்மானங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை எனவும் Bush நிர்வாகம் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தது. குவான்டனாமோ தடுப்புமுகாம் ஜெனீவாத் தீர்மானங்களையும் இராணுவ நீதிநெறிமுறைகளையும் மீறுவன என அமெரிக்க உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

The Guardian & The New York Times வீக்கிலீக்சுடன் கூட்டு

வீக்கிலீக்ஸ் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள், கைதிகள் மீதான சித்திரவதைகள் உட்பட்ட அமெரிக்கப் படைகளின் மோசமான மீறல்களை அம்பலப்படுத்தின. அதாவது அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கெதிரான போரின் முகத்தை அம்பலப்படுத்தியது. அமெரிக்காவின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொணர்ந்தமைக்காக வீக்கிலீக்ஸ் உலகளாவிய பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டது. இந்த அம்பலப்படுத்தல்களில் வீக்கிலீக்சுடன் பிரித்தானிய The Guardian மற்றும் அமெரிக்க The New York Times ஆகியனவும் குறிப்பிட்ட அளவில் இணைந்து செயற்பட்டன.

பெரும் எண்ணிக்கையிலான மூலத்தகவல் ஆவணங்களை முதற்கட்டத் தணிக்கைக்கு உட்படுத்தாமல், தகவல்களின் உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யாமல் வெளியிடத் தொடங்கியபோது வீக்கிலீக்சின் ஊடக நெறிமுறை மீதான விமர்சனங்களும் எழத்தொடங்கின. ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘தனிநபர் பாதுகாப்பு’ பற்றிய கவனம் செலுத்தப்படாமல் மூல ஆவணங்கள் உள்ளது உள்ளபடியே வெளியிடப்பட்டமை விமர்சனங்களின் அடிப்படையாக அமைந்தது.

***

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

RELATED ARTICLES

1 COMMENT

  1. ஒரு ஊடகவியலாளர் எவ்வளவு சிக்கலுக்கு ஆளாகிறார் என்பதைச் சொல்லும் தரமான எழுத்தில் எழுதப்பட்ட தரமான கட்டுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular