Friday, March 29, 2024
Homesliderயாரோ தொலைத்த இசைத்தட்டு

யாரோ தொலைத்த இசைத்தட்டு

தமயந்தி

மார்கெட்டுல ஷெட்லாம் படபடனு பாதிக்கு மூடினாங்க. வெளிய எடுத்து வச்சிருந்த ஆட்டுத்தலைய சண்முகம் அண்ணாச்சி கையில எடுத்துக்கிட்டு அப்பாவப் பார்த்து “வேணுமா சார்”னு கேட்டார். அப்பாக்கு எதும் புரியாம “ஆமா ..ரெண்டு கிலோனு சொன்னார்.

சண்முகம் அண்ணாச்சி அவசரமாக “ சீக்கிரம் வாங்க”னார். எப்பவுமே அப்பாக்கு கிறிஸ்துமசுக்கு முந்தின நாளே கறி வாங்கி வைக்கிற பழக்கம் இருந்துச்சு. அத மஞ்சள்,உப்பு போட்டு வேக வைத்து அம்மா ஆற வைப்பாள். ஒருபக்கம் கேக்குக்காக மைதா மாவை முட்டையோடு சீனிலாம் போட்டு கலக்கும் வேலை எனக்கு. பாதி மாவு என் வாய்க்குள் தான் போகும். வீடு முழுக்க எல்லாம் கலந்த ஒரு வாசனை ஒரு மயிலிறகு பறக்கிற மாதிரி பறந்து போகும்.

எல்லா காரியங்களையும் பண்டிகைக்கு முந்தின நாளே முடிச்சா தான் அம்மாக்கு நிம்மதியா இருக்கும். அதுக்காகவே அப்பா முதல் நாளே போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திச்டுவார். அப்பாக்கு பண்டிகைக்கு பிரியாணியோட சாப்ஸ் இருக்கணும். சண்முகம் அண்ணாச்சி சாப்ஸுக்கு பக்கவாட்டா கத்திய சரிச்சு தட்டிக்கிட்டே “ அங்கல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லயேனார் அப்பாட்ட.

“இல்லயே…ஏன்?”

“என்ன சார் இப்டி கேக்கீக… எம்ஜிஆர் செத்துப் போயிட்டார்.”

“எப்ப?”

“அடப் போங்க சார்.. தெரியாதா? அதான பாத்தேன் வழக்கம் போல கறி வாங்க வந்திருக்காரனு”

அப்பா கொஞ்சம் பதட்டமா சுத்தி முத்தி பார்த்தார். நான் அவரோட கால்களுக்கு நடுல ஒட்டி நின்னுக்கிட்டேன்

“நல்லா தான இருந்தாரு”

ஆமா சார்… உங்க வீட்டுல டிவி இருக்கா

ஆஹ்.. இருக்கே…ஆனா பாக்கல..

அதான் சார் உங்களுக்குத் தெரில..

ஆனா வர்ற வழில பெரிய அளவுல எந்த விதமான அதிர்வும் இல்லை.அப்பா என்னை இறுக்க பற்றிக் கொண்டார். அவருக்கு எம்ஜிஆர்னா ரொம்பப் பிடிக்கும். வாத்யார்னு தான் எம்ஜிஆரை சொல்லுவார். எம்ஜிஆர் படங்கள ரொம்ப ரசிச்சி பாப்பார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தப் பிறகு அப்பா கட்சில சேர்ந்துக்கிட்டார். அப்பப்ப கட்சிக் கூட்டம்லாம் போயிட்டு வர்றதுண்டு.

அப்பா அதுக்கு அப்புறமா சண்முகம் அண்ணண்ட்ட ஏதும் பேசல..அண்ணன் தான் கிளம்புறப்ப “பாத்துண்ணே…இவன வேற கூட்டிட்டு வந்திருக்கீங்க”னு சொன்னார். அப்பா வெறும்  உம் மட்டும் கொட்டி விட்டு அவசரமா மார்கெட் வாசலுக்கு வந்தார். மார்கெட் வாசல்ல எந்த கடையும் திறக்கல. நேத்து ராத்திரி கொட்டிருந்த குப்பைல தக்காளி வாடை அடிச்சிது. எதிர்பக்கமா ஆறுமுக நாடார் கடைக்கு முன்னால சைக்கிள அப்பா நிறுத்திருந்தார்.

அப்பாஎன்னைக் கேரியர்ல ஏத்திக்கிட்டு பெடல் பண்ண ஆரம்பிச்சார். அவர் மவுனத்துலயே நிறைய பேசின மாதிரி இருந்துச்சு.

“எம்ஜிஆர் அமெரிக்காலயா செத்துப் போயிட்டாருப்பா?”னு கேட்டேன் நான். அவர் “தெரிலயேப்பா”னு சொல்லிட்டு ”சித்தப்பா ஏதும் சொன்னானால”னார். சித்தப்பா அறைக் கதவு திறக்காமலே இருக்குறத வர்றப்ப பாத்துட்டுத் தான் வந்தேன் .இல்லை என்பது போல தலையாட்டி விட்டு அது எப்படி முன்னால சைக்கிள் ஓட்டுற அப்பாவுக்குத் தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பின்ன “இல்லப்பா”னேன்.

அப்பா அவ்ளோ வேகமா சைக்கிள் ஓட்டுறதா எனக்கு ஞாபகமில்ல. அவ்ளோ வேகமா ஓட்டுனார்.வீட்டுக்குள்ள போய் டிவிய போட்டா தூர்தர்ஷன்ல செய்தி சொல்லிட்டு இருந்தாங்க. அம்மா கேக் செய்றதெல்லாம் விட்டுட்டு கைய துடைச்சிட்டு ஓடி வந்தா.

அப்பா எதுவுமே பேசல. கறி பை சைக்கிளோட பிடில தான் தொங்கிட்டு இருந்துச்சு. சித்தப்பா அப்பாவப் பாத்து

“என்னண்ணே இது “னார்.

அப்பா ரொம்ப தளர்ந்து போய் உட்கார சித்தப்பா

“கலைஞருக்கு தெரியுமோ என்னமோ”னார்

“ஆமா ஆமாசென்னைக்குப் போயி சொல்ல வேண்டியது தானனு அம்மா கிண்டலா சொன்னா. சித்தப்பாவோட முகத்துல பளீர்னு கோபம் வந்துச்சு.

“அவர் தான் முதல்ல வருவார் பாருங்க…டேய் பாரதி…நீ சொல்லு”னு சித்தப்பா என்னையும் இழுத்தார்.

அப்பா கழுத்தை மட்டும் திருப்பி –”ஆளு செத்துக்கிடக்கு… யார் முதல்ல வருவானா கணக்கு ?னு சொன்னார். அன்னைக்கு அப்புறமா டிவி அணைக்கப்படலை. அடுத்த நாள் பண்டிகைக்கு ஏதும் செய்யவுமில்லை. சித்தப்பா மட்டும் கலைஞர் வந்தப்ப அம்மாவப் பாத்து

“சொன்னேம்ல அண்ணி.. அவர் தான் முதல்ல வருவார்னு…என்னனாலும் ப்ரெண்டுலா “

“ஆமா ஆமா.. அதான் கணக்குக் கொடுக்கல..” அப்பா ஏதோ ஒரு வேகத்துல பேச சித்தி கழனித் தண்ணி ஊத்தப் போனவ “த்தோ பெரியவரே…எதுக்கு இத்ன ஆவேசம்? நம்ம வீட்ல தான் ஏதோ பிரச்னைனு நெனைப்பாங்க”

“நெனைப்பாங்க கஸ்தூரி… நெனைப்பாங்கனார் அப்பா. அம்மாக்கு சித்தி அபப்டி அப்பாட்ட பேசுறது பிடிக்கல. கீழ்கண்ணால அவர முறைச்சிட்டே”வாய வச்சிட்டு உங்களுக்கு சும்மா இருக்க முடியாதானு சொன்னா.

சித்தப்பா திடீர்னு எந்திரிச்சு” ஜெயலலிதா வந்தாச்சுனார்..அப்பா ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்து “நிசமாவா”னு சொல்ல சித்தி கழனித் தண்னியைக் கொட்ட போயிட்டா. அம்மா அப்பாவப் பாத்து கிசுகிசுப்பா- ஷ்..சும்மாத்தான் இருக்க முடியாதா உங்களாலனு சொன்னா. அது சித்தப்பாக்கு கேட்ட மாதிரி தான் இருந்துச்சு. ஆனா சித்தப்பா குளிக்கப் போற மாதிரி கிளம்பி “என்னமோ மனசு சொல்லுதுண்ணே..பிரச்னை ஆகுமோ னுட்டு போயிட்டார்.

அப்பா ஏதும் பதில் சொல்லல. ஆனா கண்ண டிவிலருந்து எடுக்கல. அம்மா உள்ளருந்து வந்து இப்ப அப்பா பக்கம் உட்கார்ந்து ”எதுக்கு தேவையில்லாம அவ கிட்ட பேசுறீங்க?னு கேட்டா. அப்பா சலிப்போட”ம்ம் …உனக்கு எந்த நேரத்துல என்ன எழவ பாக்கணும்னு தெரில…னார்

“ஆமா ஆமா… இப்ப பாருங்க வாங்கின கறிலாம் தூரத் தான் போடணும்..

”வேணாம்..பேச்ச விடு..சண்டை வந்திடும்

அப்பாக்கும் அம்மாக்கும் நடுல எப்பவுமே சண்டை பெரிசா வந்ததே இல்ல. அப்பா அம்மாவோட ஒரு சத்தத்துலேயே அமைதியா ஆயிடுவார். அப்பல்லாம் அவர் வீட்டுல சாப்பிடவே மாட்டார். அம்மா நெடும் இடும்பா இருப்பா. எப்படி ரெண்டு பேரும் பேசிப்பாங்கனு தெரில.அது சாதாரணமா நடந்திடக் கூடியதா இருந்ததும் இல்ல. மறுபடி ரெண்டு பேரும் சண்டைப் போட்டுப்பாங்களோனு இருந்துச்சு எனக்கு.

சித்தி வேற திரும்பப்போறப்ப –மனவினைகள் யாருடனோ மாயவனின் …விதிவகைகள்னு ரஜினி மூணு முடிச்சுல பாடுற மாதிரி பாடிட்டு போனா. அம்மா சட்டென எழுந்து எங்க ரூமுக்குப் போயிட்டா.

அப்பா அன்னிக்கு பூராவும் குளிக்கக் கூட இல்ல. அன்னிக்கு ராத்திரி பூராவும் அப்பா  சரியா தூங்கவே இல்ல. காலைல எந்திரிச்சப்ப டிவி பாத்துட்டே தான் இருந்தார். அம்மா வடைக்கு ஊறப் போட்டு ஆட்ட ஆரம்பிச்சோன்ன அப்பாக்கு எரிச்சல் வந்து என்னைக் கூப்பிட்டு “உங்கம்மைக்கு அறிவே இல்லியா? கோண்டு போய் ஓடைல கொட்ட சொல்லு வடைய..னு சொன்னார். என்னமோ கட்டுண்ட மாதிரி அம்மா க்ரைண்டரை ஆஃப் செஞ்சிட்டு சித்திகு குரல் கொடுத்தா. அந்த நேரந்தான் டிவில ஜெயலலிதாவை ஒரு ஆள் சடலம் ஏற்றின வேனிலிருந்து தள்ளி விட்டார். அப்பா சடாரென எந்திரிச்சு நின்னே விட்டார்.

“என்னலே நட்க்குது. தலீவரு கடைசி ஊர்வலத்துல இதென்ன நாடகம்?

சித்தப்பா துண்டு கட்டினபடி ஹாலுக்குள்ள ஓடி வந்தார். டிவில ரொம்ப ரகளையா இருந்துச்சு. ரெண்டு பேரும் ரொம்ப பதட்டமா பார்த்தாங்க.சித்தப்பா அப்பாவத் திரும்பிப் பாத்துட்டு

“யாரு திமுக காரங்களா”

“இல்ல இல்ல… சின்னப் பையன் தான்..யாருனு தெரில. அந்தம்மாவ கீழ இறக்கிட்டான் “

அச்சச்சோனு சித்தி ஏகத்துக்கு பெருமூச்சு விட்டாள். இப்ப அவங்க நாலு பேருமே டிவி கிட்டயே போயிருந்தாங்க.

”எவ்ளோ கூட்டம்”னாங்க சித்தி மறுபடியும். சித்தப்பா அவளிடம் பேசாம இருனு சைகை காட்டினார். சித்தி அதை கவனிக்கவே இல்லை. அவளோட பார்வை ஒரு வண்ணத்துப்பூச்சி மாதிரி அந்த டிவி பொட்டியோட நாலாமூலைலயும் பறந்துக்கிட்டே இருந்துச்சு. அப்பா சட்டுனு வெளியே போய் முற்றத்துல உட்கார்ந்தார். அவர் மேலெல்லாம் வேர்வையா இருந்துச்சு. அவரோட சோர்வு ரொம்ப அசாத்தியமானதா இருந்துச்சு. எனக்கு பதைபதைப்பாகி அம்மாட்ட சொல்ல ஓடினேன். அம்மா பின் மடைக்குப் பக்கமா மண்ணெண்னெய் அடுப்பை வச்சி வடைய சுட எண்ணை சட்டிய ஏத்த தீக்குச்சிய உரசிட்டு இருந்தா. என்னைப் பாத்ததும் “உஷ்னு சொன்னா.

நான் அவ கழுத்தக் கட்டிக்கிட்டு காதோரமா: ம்மா..அப்பா ஒரு மாரி இருக்காரும்மா..னேன்

ஒரு மாரினா?”

வாயேன்ம்மா

அம்மா தீக்குச்சிய மடைல தூக்கிப் போட்டுட்டு என் கூட வந்தா. முன்னால உக்காந்திருக்கிர அப்பா பக்கத்துல உகாந்து “இப்ப என்ன ஆயிப் போச்சு. வாங்க…எந்திரிங்க…?”

“இல்லம்மா.. நீ போ. நான் வர்றேன்”

அம்மா கொஞ்ச நேரம் உத்துப் பாத்துட்டு “ இந்த அரசியல்லாம் நமக்கு வேணாம்ங்க. உங்களுக்கு வேணவே வேணாம்…உங்களுக்குப் பொய் சொல்ல வராது. பின்ன எப்படிங்க?”

“த்தூரப் போ”

“அட..ச்சும்மா தூரப் போ. அங்கிட்டுப் போனுக்கிட்டு… உங்களுக்கு அவரு தலீவர். சரி. இந்தப் புள்ளைக்கு என்ன ? பண்டிகைக்கு துணி போடாம கறி தின்னாம..”

அப்பா என்னக் கிட்ட கூப்பிட்டு “அப்படியால”னார். நான் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். ஆமானு சொன்னா அப்பாவுக்கு இன்னும் கஷ்டமாருக்கும்னு தோணுச்சு

“நாளைக்கு சாப்பிடலாம்ப்பானேன்

அப்பா லேசாக சிரித்தார், அது அந்த நேரத்துக்கு இதமா கூட இருந்துச்சு. குற்றாலம் போய் நடுராத்திரி குளிச்சிட்டு செங்கோட்டை பார்டர் கடைல போய் நடுங்கிட்டே இலைல விழுற பரோட்டாலயும் கோழிக்குழம்புலயும் கை வைக்கிறப்ப லேசா உசிர் வெடவெடக்கும்,. அத மாதிரி.

சித்தப்பாவும் அப்பாவும் அன்னிக்கு ராத்திரி பூரா வெளிய தான் உக்காந்து பேசிட்டே இருந்தாங்க. ரவுண்டானா வெளிச்சத்துல முன்பக்க வேப்ப மரம் அசைஞ்சிட்டே இருந்தது, வெளிச்சத்தை அசைச்ச மாதிரி இருந்துச்சு.

”அந்தப் பையன் பேரு என்னல”னார் அப்பா

“அதாம்ணே.. முத மரியாதைல நடிச்சிருக்குமே…திலீபன்னு நெனைக்கேன்”

“அதாராம்ல

“சொந்தக்காரங்கனாங்க. நானும் எங்க ஆளுங்க தான்னு நெனைச்சேன்

“அட..என்னலே நீ…அதெப்படி ஆகும்

அப்பா உள்ளே எழுந்து போய் ரெண்டு க்லாஸ் எடுத்துட்டு வந்தார். குறைப்பை உணர்ந்து சித்தப்பா உள்ள போய் ஒரு ரம் பாட்டிலை எடுத்து வர சித்திக்கு முகம் மாறுச்சு

“பண்டிக வேணாம். இது மட்டும் வேணுமாக்கும்”

அப்பா நிமிராமலே தண்ணீர் சேர்ந்த்து ஊத்திட்டு என்னைக் கூப்பிட்டு” அம்மாட்ட கண்ணாடி முட்டை போட சொல்லு தங்கம்னார்

அம்மாகிட்ட சொன்னதும் அவ லேசா சிரிச்சிக்கிட்டே இரும்புக் கல்ல அடுப்புல வச்சி எண்ணைய விட்டுட்டு என்னய முட்டையை உடைக்க சொன்னா. நான் நங்குனு மேடைல முட்டைய உடைச்சிப் போட்டோன்ன அம்மா சிரிச்சிக்கிட்டே பக்கதுல ஒரு பாத்திரத்துலருந்து வடையை எடுத்துக் கொடுத்தா,.

”இதெப்பம்மா சுட்டே?”

அம்மா தோளைக் குலுக்கிக்கிட்டு சிரிச்சது ரொம்ப சந்தோஷமாருந்துச்சு. காத்துல மரத்துலருந்து விழுந்த இலை மேலெழும்பி திரும்ப கீழ விழுற அழகு மாதிரியே இருந்துச்சு.

அப்பாட்ட கண்ணாடி முட்டைய நீட்டினப்ப அவர் அந்த வெள்ளைப் பகுதிய முதல் விள்ளலா எடுத்து வாய்லப் போட்டு ஸ்ஸ்னார். அப்புறமாட்டு “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டினார். விக்கல் எடுத்தது. அப்பா தண்ணீர் குடிப்பார்னு நெனைச்சேன். ஆனா அவர் “தலீவர் நெனைக்காரு”னு சொல்லிட்டு அழுதார்.

(தொடரும்)

தொடரின் இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்

RELATED ARTICLES

2 COMMENTS

  1. நல்ல ஆரம்பம்
    வட்டாரச்சொல்லுடன் இயல்பாய் இருக்கிறது.. நடுராத்திரில குற்றாலத்துல குளிச்சிட்டு பார்டர் பரோட்டா கடையில கோழக்கொழம்பை ஊத்தி சாப்பிடற சொகமே தனி…

  2. தொடர்கதையாக ஒரு நாவலை, தினமணிக் கதிரில், 1989 – 90 களில் வெளியான, பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவலுக்குப் பிறகு, இப்போதுதான் தமயந்தியின் இந்த நாவலைத் தொடர விரும்புகிறேன்; அதிலும் பேச்சு வழக்கு – வட்டார வழக்கு எழுத்து என்றாலே, நான் ரசித்துண்ணும் பழைய சாதத்துடனான மோர்மிளகாய் அல்லது வறுத்த பச்சை மிளகாய் உண்டது போன்ற ஒரு மயக்கம்; தமயந்தி அவர்களுக்கும் ஜீவ கரிகாலனுக்கும் என் வாழ்த்துகள். தொடரட்டும்.

    24-12-1987,எம்ஜியாரின் இறந்த நாளன்று, அன்றைய எனது நினைவுகளை மீட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular