Saturday, March 22, 2025
Homeபுனைவுகவிதைம.கண்ணம்மாள் கவிதைகள்

ம.கண்ணம்மாள் கவிதைகள்

முன்னிரவு பேச்சு……

01

ஒரு உடல் முழித்துக்கிடந்தது
அது தன்னை மகிழ்ச்சியான உடலாகக்காட்ட
பன்னூறு நம்பிக்கைகளை
என் கைகளை அழுந்தப்பிடித்து ஒப்பித்தது
எனக்கு ஒருபோதும் அதனுடன் உடனில்லை
சற்றே, தலை திருப்பி
மெல்லிய குரலில்
என் பித்து மொழியினைத்துணைக்கழைத்தேன்.

02

உடல் என்பது ஒரு ஊற்றுக்குழி
அது தன்னில் நிறைய ஊற்றெடுத்தல்கொண்டது
பெருகும் நீர்ப்பரப்பில்
தொலைந்து போதலும், ஒன்றாதலும்,காத்திருத்தலும் இருக்கும்.
ஆனால்,
ஆழம் என்பது
நான் நிர்ணயிப்பது தான்.

03

உடல் என்பது ஒரு
பண்படுத்தப்பட்ட ஆதிக்கம்
விருப்பப்பட்ட,மறைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட
வண்ணத்திரைகள் தொங்கும் தளம்
ஆயிரமாயிரம் நகர்வுக்குப் பின்னாலும்
மனதைக் கட்டும் நினைவுப்பொதி
சுமப்பதும்,தள்ளுவதும்
என்னின் முடிபு.

04

உடல் என்பது ஒரு களி கூர்தல்
சதா உன்மத்தமாகி மதர்த்துக்கிடத்தல்
பறத்தலும்,பிழிதலுமாகிய உயிர்ப்பிறப்பு
என் அம்மையே!
எதன் பொருட்டு
நீ எலும்பினை மோகம் கொண்டாய்
பார் அம்மையே!
இந்த உபரிச்சதைகள்
விளைந்து நிற்கிறது
வளர்ப்பதும்,அழிப்பதும்
எம்மைச் சார்ந்தது

05

உடல் என்பது ஒரு நிலம்.
குழுவாக,தனியாக
கொத்து, கொத்தாக
நிரம்பி வழிகிறது
அதனுள்
எத்தனையெத்தனை
அளவில்லா வேட்கை
திரண்டு நோகிறது
சேறுள்ள மண்ணைத் தொட்டுப்பூசுவதும்,தொடாமலிருப்பதும்
என் விருப்பு.

06

உடல் என்பது ஒரு கழுக்களம்
முதலில் எதனை பலி தருவது?
பேரிடர் துயரத்தில் சேதமுற்ற பாலத்தில்
ஊசலாடும் குதலைப்பேச்சாய்
கழுத்தை இறுக்குகிறது
விலக்குவதும்,காட்டுவதும்
என்பாடு

07

உடல் என்பது ஒரு கள்ளச்சொல்
பெருங்காற்று வீசலில்
ஓலைக்காற்றாடியை
கற கற வென ஒடிக்கத்தூண்டும்
களேவரக்கூச்சல்
பேசுவதும்,மௌனிப்பதும்
என் தேர்வு

08

உடல் என்பது ஒரு குளறுகை
சிறு துவக்கால் சல்லியாக்கப்படும் போது
மறைந்துக்கொள்ளும்
பித்து
இருளில் ஒளி தேடுதலென்பது
ஆன்மாவிற்குள் உட்புகல்
ஆரவாரிப்பதும்,வருந்துவதும்
என்னிலானது.

09

உடல் என்பது ஒரு தழல்
செந்தீ பூசிப்பூசி சுரங்காய்ந்துள்ள
கொடிக்கால்
கொதிப்பு ஆற்றுவதும்,குளிர்வதும்
கணப்பொழுது மிதத்தலை ஒத்தது
கடந்தோடும் மனதை
கட்டலும்,நீக்கலும்
என் முடிபு.

10

உடல் என்பது ஒரு
அதீத அன்பு
கைப்புகும்
நல் பருவநிலை மாற்றம்
நீர் மின்னும் கண்களில்
அற்புதமாக அமர்ந்திருக்கும் கொடைப்பொருள்
பற்றலும்,விலக்கலும்
என்னுள்ளானது.

சற்றே தலை திருப்புகிறேன்

உடலின் முகத்தில்
கோபச்சிவப்புத் தெரிந்தது
காண் உடலே!
இங்கு “உடலென்பது
ஒரு வெற்றுக்காகிதம்.
அதில் நிரம்பிய
ஞானம்
கால்களென்பேன்”
என்றேன்.

அவ்வளவே……

இப்பொழுது
உடல் கண்களை மூடிக்கொண்டது.

***
கண்ணம்மாள் – kannamano07@gmail.com

Previous article
Next article
RELATED ARTICLES

1 COMMENT

  1. உடல் என்பது ஒரு
    பண்படுத்தப்பட்ட ஆதிக்கம்
    விருப்பப்பட்ட,மறைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட
    வண்ணத்திரைகள் தொங்கும் தளம்
    ஆயிரமாயிரம் நகர்வுக்குப் பின்னாலும்
    மனதைக் கட்டும் நினைவுப்பொதி
    சுமப்பதும்,தள்ளுவதும்
    என்னின் முடிபு

    –ம.கண்ணம்மாள்

    எத்துணை ஆணித்தரமான கருத்து! கவிதைமொழி அற்புதம் மேடம்! வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular