மீரா மீனாட்சி கவிதை

0

அத்திப் பழங்களைக்
கைக்கொள்வதென்பது
திசைகளற்ற சிறுமிக்கானது

பழுத்தவையின் பொடிவிதைகளைக்
கிரகங்களின் கருக்களெனப் பத்திரப்படுத்துகிறாள்

முளைக்கத்தெரியாதவற்றின் பிதற்றல்களைத்
தின்னும் சாம்பல் நிற வண்ணத்திப் புள்ளுகள்
இனப்பெருக்கம் மறந்திருந்ததின் இன்மையை
சூரியன் வீழ்ந்து இறைத்த குளத்தின் படிகளில்
நேற்று குளித்தவனின் உயிரின் மணமென்கிறாள்

பொன்னிற பாக்கு வியாபாரி ஏன்
வெற்றிலைக்கொடிக்காக அலைகிறான்

காற்று சிக்கிய பாய்கள் அலுப்பை விரித்தன
வீரியம் கொண்ட எண்ணங்களை
வாசித்தவர்களின் பேறுகாலம்
ஒரே லக்கினத்தில் ஆனது விசித்திரமென்று
வியக்க யாருமற்றிருந்தது

பேச்சு உடைந்த அப்பொழுதில்
பூமி தன்சிறகுகளைக் குடைந்து நீவியது …
கனல் கக்கும் பெருமூச்சுகளில் உலர்ந்த
வெற்றிலைக்கொடி வேர்கள்
ஜன்னல் வழியாக வெறுமைக்குள் வெளியேறுகின்றன

பூமியின் முதல் உயிர் காற்றிலும்
கடலிலும் வானிலும் வனத்திலுமாகப்
பெருகிக்கொண்டிருந்ததை நேரமிருப்பதால்
மட்டுமே வேடிக்கைப்பார்க்கிறோம்

தோல்வியடைந்து கால் தளர்ந்திருக்கும் சூரியன்
வாகை மரக்கிளைகளில் தலைகீழாகத் தொங்குகிறது

வௌவ்வால்களுக்கு இதைவிட சரியான பரிசை
எவராலும் கொடுக்க இயலாதென்ற
பெருங்களிப்பில் நகரம் மிதக்கிறது …

மீரா மீனாட்சி, மும்பை (கவிஞர், ஓவியர், பத்திரிக்கையாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here