திரிபுணர்வு
உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு
கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்
இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்
சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோ
ஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோ
அல்லது ஒன்றிணைந்ததாகவோ இருக்கலாம்
காகங்கள் பேசிக்கொள்ளும் மதியச்சூட்டில்
தெருவில் அலைந்து அழுது அவள் புலம்புவது
குடியிருப்பின் காவலாளர்களுக்குத் தெரிவதில்லை
விற்பனைக்காரிக் கதறுகிறாள்
எதை விற்கிறாள் என்று எவரும் கவனிக்கவில்லை
அமைதியாக நகரும் வணிக வாகனங்களின் இடையே
கண் மயங்கிக்கிடக்கிறது தெரு
எந்த ஒரு விநியோகமும்
அவளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை
தெருவின் தொல்லியல் ஞாபகங்களென அலையும் நாய்கள்
பனிசறுக்கலில் காலுடைந்த கூர்க்காவின்
கிழிந்தத் தோள்பையை முகர்கின்றன
நாவல் இலைகளினூடே கசிந்திறங்கும் நட்சத்திரங்கள்
இரவின் மங்கிய சோடியம் விளக்கொளியில்
படிக்கட்டுகளில் சரிய
திரிபுணர்வுகளில் உறங்கதொடங்குபவளின்
நடுக்கத்தில் உயிர்த்திருந்தது அத்தெரு
***
கடற்பாய்களின் அலுப்பு
அத்திப் பழங்களைக்
கைக்கொள்வதென்பது
திசைகளற்ற சிறுமிக்கானது
பழுத்தவையின் பொடிவிதைகளைக்
கிரகங்களின் கருக்களெனப் பத்திரப்படுத்துகிறாள்
முளைக்கத்தெரியாதவற்றின் பிதற்றல்களைத்
தின்னும் சாம்பல் நிற வண்ணத்திப் புள்ளுகள்
இனப்பெருக்கம் மறந்திருந்ததின் இன்மையை
சூரியன் வீழ்ந்து இறைத்த குளத்தின் படிகளில்
நேற்று குளித்தவனின் உயிரின் மணமென்கிறாள்
பொன்னிற பாக்கு வியாபாரி ஏன்
வெற்றிலைக்கொடிக்காக அலைகிறான்
காற்று சிக்கிய பாய்கள் அலுப்பை விரித்தன
வீரியம் கொண்ட எண்ணங்களை
வாசித்தவர்களின் பேறுகாலம்
ஒரே லக்கினத்தில் ஆனது விசித்திரமென்று
வியக்க யாருமற்றிருந்தது
பேச்சு உடைந்த அப்பொழுதில்
பூமி தன்சிறகுகளைக் குடைந்து நீவியது …
கனல் கக்கும் பெருமூச்சுகளில் உலர்ந்த
வெற்றிலைக்கொடி வேர்கள்
ஜன்னல் வழியாக வெறுமைக்குள் வெளியேறுகின்றன
பூமியின் முதல் உயிர் காற்றிலும்
கடலிலும் வானிலும் வனத்திலுமாகப்
பெருகிக்கொண்டிருந்ததை நேரமிருப்பதால்
மட்டுமே வேடிக்கைப்பார்க்கிறோம்
தோல்வியடைந்து கால் தளர்ந்திருக்கும் சூரியன்
வாகை மரக்கிளைகளில் தலைகீழாகத் தொங்குகிறது
வௌவ்வால்களுக்கு இதைவிட சரியான பரிசை
எவராலும் கொடுக்க இயலாதென்ற
பெருங்களிப்பில் நகரம் மிதக்கிறது …
***மீரா மீனாட்சி – சிதம்பரத்தைச் சேர்ந்தவர், சூழலியலாளர் தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார். கவிஞர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர், வடிவமைப்பாளர் என பல்துறைகளில் இயங்குபவர். தொடர்புக்கு – sameerakannan@gmail.com
தொல்லியல் ஞாபகங்களென அலையும் நாய்கள் – அட …
👍
மீரா மீனாட்சி கவிதை சிறப்பு
மாயப் பின்புலத்தில் அலையும் கூட்டம்
சிறப்பான நவீனக் கவிதை