மீட்சி
மிகவும் ஆழமான கருத்துள்ள சொல்.. அச்சத்திலிருந்து மீட்சியாகத் தான் மொழியே பிறந்திருக்கிறது. மீட்சியாகத்தான் நிலம் கண்டங்களாகப் பிரிந்திருக்கிறது, மரணம் எனும் விடுதலையே மீட்சி தான்.
அறிவியலும், விடை தெரிய முடியாத விஷயங்களும் பயணிக்கின்ற இலக்குமே மீட்சி தான். நோய்த்தொற்றிலிருந்து உலகமே ஒன்றாய் வேண்டுவது மீட்சியைத் தான்.
மதம் கூட மீட்சியைத் தருவதாகத் தான் போதித்தது.போதனை மீட்சிக்கு எதிர் துருவம்.
போலி என்பதே அசலை மறைத்து நிற்பது. அசலைக் காட்டிலும் நம்பிக்கை தருவது. அதனால் போதிக்கும் மீட்சியை ஆசை கொள்ள வைக்கும். மீட்சி என்பது இலக்கல்ல அது ஒரு விளைவு.
விளைவுகள் பலவற்றை அச்சுருத்தலாக்கி போதனைகள் வலை விரிக்கும் காலம். கலை மட்டுமே வலையறுக்கும் திறன் பெற்றுள்ளது.
**
அண்மையில் நடந்து முடிந்த சென்னை போட்டோ பினல்லே (Chennai Photo binnale), இதன் மூன்றாம் பதிப்பு MAPS OF DISQUIET எனும் தலைப்பில் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இது ஒரு சர்வதேச நிழற்படத் திருவிழா, இந்த நிகழ்ச்சிகளை சென்னை காதே இன்ஸ்டிட் மற்றும் சென்னை போட்டொ பயன்னல்லே அறக்கட்டளை இணைந்து நடத்துகிறது. 34க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் நிழற்படங்களைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். வெவ்வேறு கேலரிகள், அருங்காட்டியம், நூலகங்கள் என ஏழு இடங்களில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
அண்மையில் தனது பட்ட மேற்படிப்பிற்காக சென்னை கவின்கலை கல்லூரியில் விண்ணப்பித்து, நுழைவுத்தேர்வின் முடிவை அறிவிக்காமலேயே மேற்படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்ட கலைஞர் சரண்ராஜ் அவர்களின் நிழற்படத் தொகுப்பும் இந்த பதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால் எப்படியாவது ஒரு இடத்திலாவது கண்காட்சியைப் பார்த்துவிட வேண்டுமெனச் சென்றோம். (தனிப்பட்ட இழப்பினால் எங்கும் செல்ல முடியாத சூழல்) உடன் இளங்கோ வந்திருந்தார். நாங்கள் சென்றது ரோஜா முத்தய்யா நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சி, சஞ்சயன் கோஷ் உருவாக்கியிருந்த நட்டுவைக்கப்பட்ட ஸ்லேடுகளில் அவரது காணொளி லூப்கள் ஊடாடி ஒளிபரப்பப்பட்டிருந்தன.
சரண்ராஜ் தமது கீழடிப் பயணத்தை அத்தொன்மைமிகு நிலத்தில் இன்று வசிக்கும் மக்களை அத்தொல்குடிகளின் உறவினராக்கி நிழற்படத்தொகுப்பை உருவாக்கியிருந்தார். தம் முன்னோர்கள் வாழ்ந்த நிலம் திரிந்திருக்கும் விதத்தையும், அவர்களே தினக்கூலிகளாய் அவர்தம் முன்னோர்களை அகழ்ந்தெடுக்கும் பணியாற்றும் விதத்தையும் அழகுற காட்சிப்படுத்தியிருந்தார். மண்ணுக்கு கீழே இருப்பவர்களை உலகமே வியந்து பார்த்து வருகிறது, அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு அதே பெருமையும் நிலையும் இருக்கிறதா? ஒரு சன்னமான கேள்வியை எழுப்பத் தவறவில்லை அவரது முயற்சி.
இதுபோன்ற கலைஞர்களை கல்லூரிக்குள் அனுமதிக்காததால், கல்லூரிக்கு தான் இழப்பு அதிகம்.
வருகின்ற சென்னை புத்தகக் காட்சியில் யாவரும் பப்ளிஷர்ஸ் கடுமையான இக்கட்டுகளுக்கு மத்தியிலும் உற்சாகமாக களமிறங்குகிறது. அதே உற்சாகமான இளைஞர் படை, புதிய முகங்கள், முக்கிய ஆளுமைகளின் படைப்புகள் என அணிவகுத்து வருகிறது. வாசகர்களாகிய உங்கள் ஆதரவே எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும்.
*
யாவரும் இணைய இதழுக்கும் ஒரு மீட்சி கிடைக்குமென இந்த இதழின் உள்ளடக்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த இதழுக்குக் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் கருத்துகளே அதைத் தொடர்ந்திட துணை நிற்கும்.
படைப்புகளை அனுப்ப editor@yaaarum.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
அடுத்த இதழை இன்னும் பொலிவுடன் கொண்டு வருவோம்
மாறா அன்புடன்
ஆசிரியர் குழு
யாவரும் இணைய இதழ்