Friday, March 29, 2024
Homesliderமறைமுகம்

மறைமுகம்

ஜா.தீபா

ள்ளங்கைகளால் தாங்கி விரல்களால் அதனை மூடிவிடலாம்.காமாட்சியின் மடியில் இறந்து போன அவளது குழந்தை அப்படித்தான் கிடந்தது. புடவையால் மூடியிருந்த குழந்தையின் கைகளை பூநரம்பினைத் தூக்குவது போலத் தூக்கினாள். விரல்களின் ஓரத்தில் நகம் முளைக்கும் இடத்தில் தன் விரலை வைத்துத் தேய்த்தாள். குழந்தை அசைவது போலத் தெரிந்தது. அதன் சொப்பு போன்ற சிறிய வாய் சற்று திறந்திருந்தது. அதன் கீழ் சுண்டுவிரலை மட்டுமே வைத்து தொடும் அளவுக்கான இடத்தில் மெதுவாக காமாட்சி அழுத்தினாள். நெற்றியைத் தடவினாள். புருவத்தை நீவினாள். அதுமுடி இல்லாது சங்குபுஷ்பத்தின் நிறத்தில் இருந்தது. மூக்கினை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.

உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டுத்தொட்டுப் பார்த்தாள். குளிர்ந்திருந்தது. காலை வரை குழந்தைக்கு உடல் சூடேறிக் கிடந்திருந்தது. திருகிக் கொண்டே இருந்தாள் குழந்தை. காமாட்சி பார்த்துக் கொண்டிருக்கவே தன்னை அது விடுவித்துக் கொண்டது. அழுகையின் நெடுந்துயரும் வாழ்வின் போதாமையும் அவளை குலையச் செய்துவிட்டன. குழந்தையின் ஆழ்ந்த உறக்கம் என்பதாய் தட்டிக் கொடுத்தபடி இருந்த காமாட்சியினை தைலா பாட்டி தான் ஆற்றினாள். மடியை விட்டு குழந்தையை காமாட்சி இறக்கி வைக்கவில்லை. யாரோ பிடுங்கிவிடக் காத்திருக்கிறார்களோ என அஞ்சினாள். நினைப்பாள். அழுவாள். பொத்தி வைத்துக் கொள்வாள். ஒரு சமயம் தன் மார்புக்கு குழந்தையைக் கொண்டு போனாள். மார்பு கனத்து இருந்தது.“ஐயோ!. போதும்டி… அதைக் கீழ போடு” சொல்லும்போது  தைலா பாட்டிக்கு அழுகை வந்தது.

“அதுக்கு பசிக்குமே பாட்டி”

அறையின் ஓரத்தில் கூட்டத்தில் ஒடுங்கியிருந்த சீதை சொன்னாள். “இனி தெய்வம் பாத்துக்கும் காமாட்சி. அங்க உன் குழந்தைக்கு வயிறு நிறைஞ்சிருக்கும்”

சீதைக்கு இரு குழந்தைகளை கனத்த மார்புகளோடு பறிகொடுத்து சமாதானம் ஆன அனுபவம் உண்டு.

குழந்தை மார்பினருகே சொருகிக்கிடந்தது. காமாட்சிக்குத் தன் கைகள் பட்ட இடங்களில் எல்லாம் அழுந்தியதால் குழந்தைக்கு உஷ்ணம் ஏறியிருந்தாற்போல் பட்டது.

“நாளைக்கு உடம்பு முழுசும் உஷ்ணமா இருக்கும் இல்லையா பாட்டி”

தைலா பாட்டி “இல்லடி..குழந்தையை நெருப்புக்கு கொடுக்கறதில்லேயே… பூமி எடுத்துக்கும்”

“திரும்பத் தருமா பாட்டி?”

“ஆமாடி…திரும்பத் தரும். வயசென்ன ஆச்சு உனக்கு? பாலகனகனுக்கும் என்ன அறுபது வயசா?”

என்றவள், “பால கனகன் வந்தானா?” என்றாள் வாசலைக் குறிப்பாகப் பார்த்து.

வாசலில் ஆட்கள் நிற்பதற்கான அசைவுகள் தெரிந்தன. குரல் எதுவும் பதிலாய் வரவில்லை. வாசலில் கூட்டத்தோடு நிற்கும் மாமனார் வெங்கடாசலம் மனதுக்குள் என்னென்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று காமாட்சிக்குத் தெரிந்தது.

“தாக்கல் கொண்டு போன ஆளு எப்படியும் கூட்டிட்டு வந்துடுவான்” என்றாள் தைலா பாட்டி. சொல்லியபடியே அங்கேயே ஒரு கையினை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். நீளமான கொட்டாவி விட்டாள். ‘முருகா…!அப்பனே…!” என்றாள். இரவின் நடுநேரத்திற்குப் பின் உறங்கிப்போனாள். சீதையும் மூலையில் சுருண்டு கொண்டாள். அவள் வயதுக்கு வீட்டைத் தாண்டிய மற்றொரு இடத்தில் இப்படி சுருண்டு கொள்ளவே பழகியிருந்ததாள். தைலா பாட்டிக்கு அவளது வயது ஒரு அனுசரணை. அது அவளை எந்த இடமானாலும் கால் நீட்ட வைத்திருந்தது. அந்த அறையின் கஜலட்சுமி விளக்கின் ஒற்றை ஒளியில் தைலா பாட்டி பேருருவ நிழலாய் சுவற்றில் தெரிந்தாள்.

பாலகனகன் இப்படித் தான். முப்பது நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த போதும் பாலகனகனுக்குத் தகவல் அனுப்பினார் வெங்கடாசலம். தகவல் கொண்டு அரிக்கேன் விளக்கோடு இரவோடு இரவாக வேகமாகப் போனவர் மறுநாள் மதியத்தில் அணைந்த விளக்கோடு சோர்ந்து வந்தார், “ரொம்பக் கெடுபிடி… ஒவ்வொரு இடத்துலேயும் நிறுத்தி என்னென்னவோ விசாரிக்கறாங்க. புதுசா வந்த அதிகாரியோட உத்தரவாம். நம்ம பக்கம் இந்த அரசாங்கத்துக்கு எதிரா ஏதோ கூட்டம் சேர்ந்துருக்காங்களாம்.பாரதத் தாய்னு ஒரு ரகசிய சங்கம் கூட ஆரம்பிச்சாச்சாம். சங்கத்தை பத்தி என்ன தெரியும்னு எங்கிட்ட கேக்கறான் போலீஸ்காரன். நான் என்னத்தக் கண்டேன்?” இப்படி சொல்லும்போது அவன் குரல் ரகசியம் போல் ஆனது. மாமனார் வெங்கடாசலத்துக்கு பொறுமை இல்லை.

“கனகனைப் பாத்தியா இல்லையா?”

காமாட்சி அந்த நபர் சொல்லப்போகும் பதிலுக்காய் வாசலையே பார்த்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த இடம் துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அவளுடைய இடத்தில் இருந்து எதைத் துணியால் பார்த்தாலும் எல்லாமே பனியால் போர்த்தியது போலவே தெரிந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து  தைலா பாட்டியும், சீதையும் எப்போதேனும் தள்ளி வந்து நின்று பார்த்துக் கொள்வார்கள். குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு நடப்பது வரை காமாட்சியையும் குழந்தையையும் அவர்கள் தொட சட்டத் திட்டங்கள் சொல்லவில்லை.

இழந்த அம்மாவை நினைத்து அப்போதெல்லாம் காமாட்சிக்கு அழுகை வரும்.அம்மாவின் முகம் நினைவின் மேல் எழும்பும். அம்மாவின் கண்கள் இடுங்கியவை. காமாட்சியைப் பார்ப்பதும் வெயிலைப் பார்ப்பதும் ஒன்றென நினைக்கும் போன்ற கண்கள் அவை. அந்தக் கண்களை அவள் குழந்தையினிடத்தில் தேடினாள். குழந்தையோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தது. பால் கொடுத்தால் பாதியைத் திருப்பி வெளியில் அனுப்பியது. மாமனாரிடம் இதைப் பற்றி சொல்ல காமாட்சிக்கு கூச்சம்.

“எதாவது வேணுமாம்மா” என்பார் தன்னை ஒடுக்கித் தள்ளி நின்றபடிக்கு.

பதில் கூட சொல்ல முடியாமல் தவிப்பாள் காமாட்சி.

அவளுக்கு குடிக்க நீர் தேவைப்படும். அது கூட பரவாயில்லை தாங்கிக் கொள்ளலாம். சில நேரங்களில் குழந்தை தூங்கிக் கொண்டே இருந்தால், மார்பு கட்டிக் கொள்ளும். அதன் வலி அவள் முன்பு அறியாதது. அவளுடைய பதினாறு வருட கால வாழ்க்கையில் இதுவரை எந்த வலியையும் தான்  கண்டதில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் அறியாமேலேயே ஒவ்வொரு வலிகளாய் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.

அவளுடைய அம்மா மரணித்ததும் தன்னுடைய வீட்டில் மொத்த சமையலையும் காமாட்சி தான் செய்தாள். அம்மா சொல்லித் தந்து செய்ததில்லை. ஆகையால் அடுப்பில் சுட்டுக் கொள்வாள். கரிப்பொறி கண்ணில் விழும். விறகு உடைக்கும்போது சிராய்க்கும். இவை எல்லாம் பெண்களுக்கே உண்டான அன்றாட வலிகள் என்று சொல்லக் கேட்டுப் பழகியிருந்தாள். அதனாலேயே அவள் இதனை வலி என்று எடுத்துக் கொள்வதில்லை.

வழக்கம் என்று பழக்கப்படுத்தியிருந்தாள். இது போன்ற பல வலிகளைத் தாங்குகிறபோது மனனம் போல் சொல்லிக் கொள்வாள், “நமக்கு மட்டுமா என்ன?”. அம்மாவுக்கு இந்த வலிகள் இருந்திருக்குமா? என்று கேட்டுக்கொள்ள அவள் இல்லாதது தான் ஒவ்வொரு முறையும் காமாட்சிக்கு பெருந்துக்கமாக எழும்.

இப்போதெல்லாம் இந்த மார்பு கனத்து மூச்சு விடவும்,கைககளைத் தூக்கவும் படும்பாடு தான் அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.அதுவும் போக ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தது கால்களின் ஆடுசதைகளில் எதிர்பாராத நேரத்தின்போது வெட்டிப் பிடிக்கிறது. பக்கத்தில் துணைக்கு போடப்பட்டிருந்த பழஞ்சேலையை சுருட்டி வாயில் வைத்து வலி பொறுக்கப் பழகியிருந்தாள்.

குழந்தை பிறந்த செய்தியை சொல்வதற்கு பாலகனகனைத் தேடிப் போன ஆள் வந்திருந்த அந்த மதிய நேரத்தில் கூட அந்த ஆடுகால் சதைவலி வலித்து அடங்கியிருந்தது. தாக்கல் சொன்ன ஆள் சொல்லிக் கொண்டிருந்தார்.

“கனகனை எங்கேயுமே காணோம்!.செங்குளம் சீனிவாசனோட யாரோ ஸ்ரீசைலம் தீர்த்தக்கட்டத்துல பாத்துருக்காங்கன்னு அங்க போனேன்…அங்க மனுஷ சுவடே இல்லையே”

“இவனுக்கு ஏண்டா இப்படி புத்தி போகுது.இப்ப தானே பூங்கோட்டை காட்டு இலாகால வேலை கிடைச்சது. வேலையை விட்டுட்டு ராவும் பகலுமா எங்கடாப் போறான்? எதுக்கு இவன் யார் யாரோடையே சுத்தறான்?”

வெங்கடாசலத்துக்கும், தாக்கல் சொல்லப் போனவருக்கும் ஒரே சந்தேகம் தான். இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பாலகனகன் வரவேயில்லை. கனகனைத் தேடுவதற்காக வெங்காடசலம் அனுப்பிய ஒவ்வொருவரும் விதவிதமான தகவல்களை மட்டும் கொண்டு வந்து சேர்த்தனர். கல்கத்தாவில் இருக்கிறான் என்றார்கள், புதுச்சேரிக்கு போனதாகப் பேசிக் கொண்டார்கள்.தென்காசி விசுவநாதர் கோயில் வாசலில் பார்த்ததாக ஒருவர் வீடு தேடி வந்து சொன்னார். வெங்கடாசலம் உள்ளுக்குள் உடைந்திருந்தார். அதிகம் பேசியிராத காமாட்சியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் அமைதியை எதிரொலித்தார்.

ஊரில் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. சிதம்பரம் பிள்ளையையும், சுப்ரமணிய சிவாவையும்,மக்கள் முன்பாகவே கைது செய்து அழைத்துப் போனார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் பற்றி எரிந்தது. அதன் தாக்கம் குக்கிராமங்களைக் கூட சூடாக்கியிருந்தது. இரவுகளில் சுவர்களில் பற்ற வைத்த தீ பகலில் எழுத்துகளாய் ஒளிர்ந்தது. “சி சு வை விடுதலை செய்” “பறங்கியனே சிதறிப் போ” என்றன சுவர்கள்.

காமாட்சிக்கு இவற்றை செய்திகளாக சொல்வார் யாருமில்லை. அவள் உணர்ந்த உலகங்களில் ஒன்று அருகில் கிடந்தது. அவள் அறியக் காத்திருக்கும் உலகம் ஊர்ஊராய் சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அமைதியாய் உறங்கும் குழந்தையிடம் “அப்பா சீக்கிரமா உன்னைப் பாக்க வந்துடுவாரு.உன்னோட நாசியப் பாக்கறதுக்கு உன் அப்பா மாதிரியே இருக்குன்னு உன் தாத்தா சொல்றாரே…எனக்கென்ன தெரியும்?. உங்கப்பா முகத்தை சரியாவே நான் பார்த்தில்லையே!. வந்தாலும் அவர் முகம் பாக்கறதுனா கூச்சம் பிடுங்கித் தின்னும். அவர் கையில நீ இருக்கும்போது தான் உன்னைப்பாக்கற மாதிரி அவரைப் பாக்கணும்”என்று சிரிப்பாள். அது போன்ற சிரிப்புகள் எப்போதும் அவளுக்கு அந்தரத்திலேயே புகைந்து விடக்கூடியவை.

குழந்தையின் மேட்டு நெற்றியைத் தடவியபடிக்கு, ‘உன் அப்பா ரொம்ப புத்திசாலியாக்கும். அவர் உனக்கு இராமாயணமும், பாரதமும் சொல்வாரு. அதுல சொல்ற தர்மம் என்னன்னு உனக்கு சொல்லிக் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும்போது நானும் கேட்டுப்பேன்…”

இப்படி ஏதேனும் அவள் பேசுகிறபோது குழந்தை உறக்கத்தில் சிரிக்கும். அவள் பாலகனகனைப் போல் சிரிப்பதாக நினைத்துக் கொள்வாள்.“உங்க அப்பாவோட சிரிப்பு கூட இப்படித் தான் இருக்கும் போல.தள்ளி நின்னு தான் பாத்துருக்கேன். இப்பல்லாம் அவர் சிரிக்கறதே இல்ல. ஏதோ யோசனையிலேயே இருக்கார். பாவம் அவருக்குள்ள என்னவோ? என்னை மாதிரி எதுவுமே தெரியாத பொண்ணுகிட்ட என்ன சொல்ல முடியும் அவருக்கு?சொன்னாத் தான் எனக்குப்புரியுமா? வெள்ளைக்காரன் இன்னிக்கு நேத்தா இருக்கான். நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இருக்கான். இனிமேலும் இருப்பானே…!அவனை நினைச்சு நாம ஏன் தவிக்கணும்? உங்க அப்பாவுக்கு வெள்ளைக்காரங்களப் பத்தி பேச்சை எடுத்தாலே எவ்வளவு கோபம் வருது?”

“…அதுவும் நீ பொறக்கறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி, அன்னிக்கு முழு அமாவாசை. இப்படித் தான் நான் அவரை எதிர்பார்த்து உக்காந்துருந்தேன். விளக்கு வச்சு ரொம்ப நேரம் ஆயாச்சு.எனக்கு ஆயாசமா இருந்தது.உன் அப்பா எப்ப வேணாலும் வருவாரே. காத்துட்டு இருந்தேன்.வெளி வாசல்படிக்கு பக்கத்துல உன் தாத்தா வேப்பிலையை தீயில போட்டு வாட்டிட்டு இருந்தாரு. பூச்சி வராது இல்லையா?.எனக்கு அந்த நாத்தம் குடலைப் பிடுங்கும். பாவம் நீ உள்ள இருக்கும்போது உனக்கு அந்த நாத்தம் பிடிக்கலையோ என்னவோ, வாயால வந்துடும். உன் தாத்தாக் கிட்ட சொல்ல முடியுமா என்னால. புடவையை மூக்குல வச்சு அழுத்திட்டு உக்காந்துருந்தேன். உன்னோட அப்பா வந்தார்.

எங்க ஊர் சிவன் கோயில்ல சன்னதியில கால பைரவர் சிலை ஒண்ணு உண்டு.சாயந்திர நேரம் ஒரே ஒரு விளக்குல அவர் முகம் அப்படியே நம்மள குத்தற மாதிரிப் பாக்கும். வாயோரம் ரெண்டு பல் மட்டும் தனியாத் தெரியும். தப்பு பண்றவங்கள அழைச்சிட்டுப் போய் அந்த சன்னதில தான் சத்தியம் வாங்குவாங்க. தப்பு பண்ணுணவன் பொய் சத்தியம் பண்ணினா கால பைரவர் பல் அவனைக் குத்திக் கிழிச்சிடும். திருடினவன்லாம் பொய் சொல்லி அன்னிக்கே இரத்தம் வெளியேறி செத்துப் போயிருக்காங்க. ஐயோ ரொம்ப பயங்கரம்.குழந்தை நீ!.உன்கிட்ட சொல்றேனே இதை. ஆனா பயப்படாத…நீ ஒண்ணும் தப்பு பண்ணலியே. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். ஆங்! என்ன சொன்னேன்? கால பைரவர் மாதிரி தான் உங்கப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்சார். புஸ்புஸ்னு ஒரே மூச்சு சத்தம். உன் தாத்தா மெல்ல வந்து உங்கப்பா பேர் சொல்லி… என்ன ஆச்சுன்னு கேட்டார்?”

பால கனகனுக்கு இந்தியா என்பதை விட பாரதம் என்று சொல்ல வேண்டும். பாரதம் இராமனின் தம்பியான பரதனின் தேசம் என்பான். இராமனின் ஆட்சியின் கீழ் பரதனின் மேற்பார்வையில் தான் இயங்குகிறது என திடமென நம்புகிறவன். இந்த பாரதத்தை இராமர் வழி வந்தவர்களே ஆளவேண்டும் என்பான். துன்பத்தில் உழன்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத ஒருவரைத் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் எல்லாம் இந்த நாட்டின் நரம்புக்குள் விஷமாய் புகுந்திருக்கிறார்கள் என்று கூச்சலிடுவான்.

தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பசுமாடுகளின் முன்பு ஒவ்வொரு முறையும் அவன் ஏதோ முணுமுணுப்பதை காமாட்சி பார்ப்பாள். அவனறியாமல் அவன் முகம் பார்க்க அவள் உருவாக்கியிருக்கும் சொற்ப தருணங்கள் அவை. ஆனால் அவன் முகம் அப்போது அவள் விரும்பியபடியாக இல்லாமல் அவளுக்கு அச்சத்தைத் தருவதாகவே இருந்தது.

அது போன்ற முகத்தைத் தான் அவள் அன்று இரவும் கண்டாள். “ஏண்டா கனகா… என்னாச்சு?” என்று பலமுறை வெங்கடாசலம் கேட்க வேண்டியிருந்தது.

பால கனகன் ஒன்றும் பேசவில்லை. “சீக்கிரத்துல எல்லாத்துக்கும் முடிவு வரத் தான் போகுது” என்று மட்டும் சொன்னான். அவன் சொன்ன தொனியில் இருந்த உறுதியில் காமாட்சிக்கு அச்சத்துக்கு பதில் தைரியம் தான் வந்தது. “எல்லாம் சரியாகிவிடும்” என்று கனகனே சொன்னது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.எல்லாம் சரியானால் கனகன் மனம் அமைதியாகி அவளை நாடி வருவான் என்று நிம்மதிப்பட்டுக் கொண்டாள்.

கனகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அவனுக்கு பல கடிதங்கள் வந்தன.அவற்றில் ஒரு எழுத்துக் கூட காமாட்சிக்கும் வெங்கடாசலத்துக்கும் புரியாது.புரிகிற தமிழ் எழுத்துகளின் அர்த்தம் விளங்காது. அவை ஒரு ஒலிக்கோர்வை போன்ற பொருள் ஏற்படுத்துபவை.கடிதங்கள் வரும் நாட்களில் இரவு முழுவதும் அதைக் கையில் வைத்தபடிக்கு கனகன் அமர்ந்திருப்பான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவனாய் சரசரவென தாளில் எழுதுவான்.விளக்கின் வெளிச்சம் அவன் கடிதத்துக்கு மாத்திரமே பொருள் கொடுக்கும். நடுவில் கனகனுக்கு விக்கலோ, இருமலோ வராதா…என்று ஏங்கிக் கிடப்பாள் காமாட்சி. கையருகில் தண்ணீர் சொம்பினை வைத்துக் கொண்டு இருளில் புதையும் அவன் முகம் பார்த்துக் கிடப்பாள். ‘இன்று குழந்தை வயிற்றை உதைத்தது’ என்று சொல்ல வேண்டுமாய் அவளுக்குத் தோன்றும். கனகனின் இருள்முகம் கொடுக்கும் தீவிரத்தில் அவள் மௌனமாவாள்.

காமாட்சிக்கு உலுக்கிப் போட்டது.எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. விருட்டென்று சொடுக்கி அமர்ந்தாள். குழந்தை மடியில் அதே கிடப்பாய்க் கிடந்தது. அதன் மூக்கின் மேல் ஒரு “ஈ” அமர வந்ததை விரட்டினாள். குழந்தை கனத்திருந்தது. விறைத்து மரக்கட்டை போல் இறுகியிருந்தது.

அதன் மென்மையான சிறு முடிகளைத் தடவித் தந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இழக்கப்போகும் குழந்தையிடம் கடைசியாக என்ன சொல்வதென்று அவளால் நிதானிக்க முடியவில்லை.அதையே பார்த்தபடி இருந்தாள். தனது ஆன்மாவின் மொழியை ஒலியால் உணர்ந்த ஒரே ஜீவனும் தன்னை விட்டு விலகப்போவதை அவள் உள்வாங்கத் துணிந்தாள். கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் அழுத்தம் சொல்சொல்லாய் அவளுள் எழுந்து வந்தது.

“உன் அப்பா உன்னை ஒரு தரம் பாக்கணும்… நீ போய் அவரைக் கூட்டிட்டு வர மாட்டியா செல்லமே…! நீ இல்லாம நான் வெத்து ஜடமாப் படற பாட்டை உன்னோட அப்பா பாக்கணும். உன்னோட ஒவ்வொரு அசைவையும் அவருக்கு நான் சொல்லணும். என் பக்கத்துல நீ கிடந்தத விரல்விரலா உன் ஸ்பரிசத்தை நான் உள்வாங்கினத உன் அப்பாக்கிட்ட சொல்லணும். அவருக்குத் தெரியாத உன்னோட சிரிப்பு எப்படியிருக்கும்னு அவர்கிட்ட நான் பேசணும். என் குழந்தையை நான் பாக்கலைன்னு அவர் ஏங்கித் தவிக்கும்போதெல்லாம், அவரோட ஏக்கத்தை நான் கவனிக்கனும்.அவர் தத்தளிச்சு மருகனும்.  ஒருமுறை கூட பாத்திராத உன்னோட கண்களை அவருக்கு நான் நினைவுபடுத்திட்டே இருக்கணும்.நீயும் நானும் மட்டுமே அனுபவிச்ச துன்பத்தையும் சொல்லியழணும்…” காமாட்சியின் மனம் பேசிப்பேசி மோதி நின்றது. அவளது முகம் அறையில் புகுந்த நிலவின் ஒளியில் செம்மை பூத்திருந்தது.

பாலகனகனை வரவழைக்க ஒவ்வொரு இடமாக அனுப்பிய அனைவரும் செய்தியும், கனகனுமற்றும் திரும்பினார்கள். பாலகனகன் வரவேயில்லை. வந்திருந்து தலைகாட்டியவர்கள் கனகன் வராதது குறித்த குற்றச்சாட்டை புலம்பலாகவும் விரக்தியாகவும் பேசித் தீர்த்தனர். வெங்கடாசலம் தன் பேத்தியின் சடங்கினை செய்வதற்கு மகன் இருந்தும் இல்லாத நிலையை மனதினுள் அழுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் அவர் முகம் பார்த்துக் காத்திருந்தனர். தைலா பாட்டி வழியாக என்ன செய்யலாம் என்று காமாட்சியிடம் கேட்டார்.

காமாட்சி எப்படியேனும் பாலகனகன் வந்துவிடுவான் என்று வைத்திருந்த உறுதியைத் தளரவிட்டாள். குழந்தையைக் கையில் எடுத்தாள். “உன்னாலும் அவரை அழைத்துக் கொண்டு வர இயலவில்லை என்றால் உன்னைப் பார்க்காமல் அவர் வாழ்ந்து கழிப்பது தான் சரி’ என்றாள் அதன் காதினுள். அதன் நெற்றியில் உதடு பதித்தாள். வெங்கடாசலம் அமைதியை உடைத்து  அரற்றினார்.

குழந்தை மண்ணின் பாகமாய் ஆனது.

வெற்றுத் தரையில் பகலிலும் குழந்தை நினைவாய் ஒளிர்ந்த விளக்கின் நிழலைப் பார்த்தபடி காமாட்சி கிடந்தாள். நிழலின் அசைவு அவளுக்கு குழந்தையின் அசைவாக இருந்தது.

குழந்தை போன இரண்டாம் நாள் வாசலில் அன்னியர்களின் பேச்சரவம் கேட்பதை ஒரு ஜடத்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். எந்த ஒலியும் அவளுள் புகவில்லை.

வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள். ஆங்கிலேயர்கள் இருவர், நான்கு போலீஸ்காரர்கள். வெங்கடாசலத்தின் கால்கள் ஆடின. இத்தனை நெருக்கத்தில் அவர் தெய்வத்தைப் பார்த்திருக்கிறார். தினமும் ஆலமரத்து பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை போடும்போது கண்டிருக்கிறார். போலீசைப் பார்த்ததில்லை.

“யார் வேணும்?” என்று கேட்க வேண்டும்.

நாக்குப் புரளவில்லை.

வநதவர்கள் மிகக் கடுமையான முகபாவம் கொண்டிருந்தனர்.

“பாலகனகன் வீடு இது தானே?”

காமாட்சிக்கு இனி தனக்கு வீட்டினுள் காரியம் இல்லை என்று முடிவு கொண்டு கூடத்து இருளில் வந்து நின்றாள். அவள் அசைவை கண்டுகொண்டனர் வந்திருந்தவர்கள்.

“அது பாலகனகனின் மனைவியா?” என்று ஆங்கிலத்தில் அதிகாரி போல் இருந்த ஆங்கிலேயர் ஒருவர் கேட்க, போலிஸ் அதனைத் தமிழில் வெங்கடாசலத்திடம் சொன்னார்.

ஆமாம் என்று தலையாட்டினார் வெங்கடாசலம்.

“என் கனகனுக்கு என்ன ஆச்சு? வயித்துல புளி கரைக்குதே”

“நாங்க வீட்டை சோதனை பண்ணனும்” என்றார்கள் வந்தவர்கள்.

வெங்கடாசலம் சட்டென்று குறுக்கே போய் நின்றுகொண்டார்.

“குழந்தையைப் பறிகொடுத்து இன்னும் பத்தாம் நாள் காரியம் கூட ஆகல.கனகனோட குழந்தை” என்றார். ஆங்கிலேயே அதிகாரியிடம் மொழிபெயர்க்கப்பட்டது. அவர் முகம் இறுகித் தளர்ந்தது.

“உங்கள் மகன் பாலகனகன்  இந்த ஜில்லா கலெக்டரை ஷூட் பண்ணிட்டான்” என்றார் ஆங்கிலேயர். அவர் குரல் பதற்றமற்று கூர்மை கொண்டிருந்தது.

அதுவும் மொழிபெயர்க்கப்பட்டது. வெங்கடாசலம் அப்படியே நின்றார். பதிலாய் அவரின் மேல்துண்டு மட்டும் காற்றில் ஆடி நழுவியது.

காமாட்சி தன்னருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

“அவன் இப்ப எங்கே?” என்றார் வெங்கடாசலம் கம்மிய குரலில்.

ஆங்கிலேயர் காமாட்சி இருக்கும் திசையைப்பார்த்தார்.

“அவனும் அதே துப்பாக்கியால் இறந்து போனான்”

“தற்கொலை” என்றார் ஆங்கிலேயர்.

வெங்கடாசலம் அப்படியே அமர்ந்தார். தலையில் பட்பட்டென்று அடித்துக் கொண்டார்.

காமாட்சி உள்ளுக்குள் உடைபட்டுத் திணறினாள். கண்கள் அலைந்தன. வியர்த்தது. சமநிலைக்கு முயற்சி செய்து அப்படியே தரையில் கவிழ்ந்தாள். வீட்டுக்குள் ஏறும் பூட்ஸின் கால்கள் மட்டும் அவளுக்கு சன்னமாய்க் கேட்டது.

தங்களுடன் வரவேண்டுமாய் வெங்கடாசலத்தை போலிஸ் அழைத்தது. ‘இது என் மகன் பால கனகன் தான்’ என்பதான ஒப்புதல் கையொப்பம் கேட்டது. வெங்கடாசலம் நடுங்கும் விரல்களால் முடியாது என்று கையசைத்தார். குரலில்மட்டும் உறுதி இருந்தது. “அவன் என் மகனே இல்ல… அவன் குழந்தை பிறந்ததும், இறந்ததும் தெரியாமலேயே போய்ச் சேந்துட்டான்… அவனும் அனாதையா போகட்டும்.நான் அவனைப் பாக்கக்கூட வரமாட்டேன்” என்றார். காமாட்சி தன்னுணர்வு பெறுகையில் தைலா பாட்டி மட்டும் அறையில் இருந்தாள். ஏற்றிய விளக்கு ஒற்றையாய் அறையில் எரிந்து கொண்டிருந்தது.

“தண்ணி குடி காமாட்சி” என்று நீரைக் கொடுத்தாள். முழுவதுமாய் குடித்துத் தீர்த்தாள் காமாட்சி.

“கனகன் தன்னோட வாயில துப்பாக்கியை வச்சு சுட்டுக்கிட்டானாம்” என்றவள் கம்மிய குரலில் தொடர்ந்தாள். “மனசத் தேத்திக்கோ காமாட்சி. கனகனோட முகம் சிதைஞ்சு போச்சாம்.. உன் மாமனார் இவன் தான் என் பிள்ளைனு அடையாளம் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டார்.அதனால நீ தான் இப்ப அவங்களோடப் போகணும்.”

காமாட்சி தைலா பாட்டி முடித்த பிறகும் அவள் குரலில் திரும்பத் திரும்ப அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். போலீஸ்காரர்கள் வீட்டினுள் இருந்த கடிதங்களையும், காகிதங்களையும் அள்ளிக்  கொண்டார்கள்.

கிராமத்தில் இருந்து இருபது மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு முதன்முதலாய் இப்போது தான் வருகிறாள் காமாட்சி. உடன் வெங்கடாசலமும், தைலா பாட்டியும் நின்றிருந்தார்கள். கூட்டம் தள்ளி நின்றது. எல்லோர் முகங்களிலும் அச்சம் பரவிக் கிடந்தது. ஒரு கட்டடத்தின் வாசலில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. அதன் கிடத்தலில் சர்வ அலட்சியம் தெரிந்தது. சடலத்துக்கு மூன்றடி தள்ளி மாட்டின் காய்ந்த சாணம் கிடந்தது. என்ன நிறமென்று அறிய முடியாத ஒரு துணி கொண்டு சடலத்தை மறைத்திருந்தனர். அதை மீறித் தெரியும் பாதங்களையும், விரல் நுனிகளையுமே கூட்டம் அச்சத்துடன பார்த்துக் கொண்டிருந்தது.

காமாட்சி எதையும் உள்வாங்காத ஒரு வெற்று பொம்மை போல் அருகில் போனாள். ஒரு போலீஸ்காரர் தள்ளி நின்று ஒரு குச்சியால் முகத்தில் இருந்த துணியை விலக்கினார். காமாட்சி மடங்கி அமர்ந்தாள். ஈக்கூட்டம் பறந்து போய் வந்தது. கரிய இரத்தம் கொத்தாய் கிடந்தது முகம் கொண்ட இடத்தில். அதன் நடுவே தெரிந்த அடையாளத்தைக் கொண்டு காமாட்சி கணவனைத் தேடினாள். பாலகனகனின் முகத்தை நினைவுக்கு இழுக்க வேண்டியிருந்தது. அது அவளுக்கு போக்குக் காட்டி எங்கோ போய் ஒளிந்து கொண்டது. மீண்டும் மீண்டும் அந்த முகத்தை இழுத்து வர முனைந்தாள். அது நழுவி இல்லாமல் ஆனது.

அவளுக்கு நினைவு பிறழ்வது போல் இருந்தது. வாய்த்த சந்தர்ப்பங்களை நினைவுக்குக்கொண்டு வந்து பார்த்தாள். அவன் முகம் மட்டும் நினைவில் எழும்பவேயில்லை. தன் முன் கிடந்த ஒருவனை கணவன் என்று எதைக் கொண்டு சொல்வதென்று அவள்  தடுமாறினாள்.

கூட்டம் கட்டுப்பாட்டை மீறி முன்னால் நகரத் தொடங்கியது. போலீஸ்காரன் வேகமாய் வந்து சடலத்தின் முகத்தை மூடினான்.

மூடிய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. அவளுக்கு அடையாளமாய் எதையும் காண இயலவில்லை. மெதுவாக நகர்ந்து அருகில் போனாள். சடலத்தின் துணியை விலக்கினாள். சற்று குனிந்து தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டாள். தனது உடமையின் வாசம் வருகிறதா என்று சுவாசத்திலே தேடினாள். அம்மாவின் சடலத்தில் மேல் எழுந்த மஞ்சளின் வாசம் வந்தது. பிறகு குழந்தையின் பால் வாசம். அவளது அப்பாவின் மேல் இருந்து வீசிய பச்சிலை வாசமும் கூட வந்தது. அவளை விட்டு மரணித்தவர்களின் முகங்களுமே ஒன்றின் மேல் ஒன்றாய் எழுந்து வந்தன.

நினைவை உலுக்கி முகத்தின் அருகில் போனாள். ஈக்கள் இடம் மாறி காமாட்சியின் மேல் ஊர்ந்தன.

ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. தடுமாற்றமாய் எழுந்தாள்.

‘தெரியவில்லை’ என்று நிதானமாய் சொன்னாள். வெங்கடாசலம் முகத்தில் ஒரு நொடி ஆசுவாசம் வந்து போனது. போலிஸ் அவரை இழுத்துக் கொண்டு போய் சடலத்தின் அருகில் நிறுத்தியது. இந்த முறை துணி வேகமாய் முகத்திலிருந்து போலிசாரால் இழுபட்டது. சில வினாடிகள் அந்த இடத்தில் காற்றில் ஒலி கொண்டிருந்தது. முகம் கோணக் கதறினார் வெங்கடாசலம்.

இனி எப்போதும் அவள் கணவனென உணரப்போவது குருதியின் துருப்பிடித்த இரும்பின் வாசமும், கருத்த சதைத் துணுக்கும் மட்டுமே என்பதை அறிந்தாள்.

தைலா பாட்டி காமாட்சியைக் கட்டிக் கொண்டாள். “உன் குழந்தைக்கிட்ட அவனும் போயிட்டாண்டி”

காமாட்சி தைலா பாட்டியிடம் இருந்து தன்னை விலக்கினாள்.

“போகட்டுமே பாட்டி.  தேடித் தேடிப் பாத்தேன் பாட்டி. அவரை எனக்குத் தெரியவேயில்ல…அவர் குழந்தை எதுன்னு அவருக்குத் தெரியாது…..”. அவளின் இலக்கற்ற பார்வை வானம் பெற்றுக் கொண்டிருந்தது. “தன்னோட குழந்தையைத் தேடித்தேடி அலைவார் இல்லையா பாட்டி?”

காமாட்சியின் இயல்பிலில்லாத அந்த நேர முகத்தோற்றத்திற்கு தைலா பாட்டி ஈடு கொடுக்காது திரும்பினாள்.

ஜா தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – [email protected]

RELATED ARTICLES

12 COMMENTS

  1. வரலாற்றின் கூட்டுக் கலவையில் இருந்து உதிக்கும் இந்தக் கதைககுள் நெடுந்துயரும் வாழ்வின் போதாமையையும், பிஞ்சு சிசுவையும் சுன்மந்து நிற்கும் காமாட்சியின் கண்களினூடாக வரையப்பட்டிருக்கும் வாஞ்சியின் (பாலகனகன்) சித்திரம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ‘தன்னோட குழந்தையைத் தேடித்தேடி அலைவார் இல்லையா பாட்டி’ என்று தலைபாட்டியிடம் காமாட்சி சொல்கிற இடத்தை நிஜவரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதே ஜூன் மாதத்தில் (ஜூன் -17, 1911) தான் வாஞ்சி- ஆஷ் கொலைச் சம்பவம் நிறைவேறியது.

    மணியாச்சி ரயில் நிலைத்தில் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சிறிதுநேரப் போராட்டத்திலே சங்கரனும் (வாஞ்சியின் நிஜப் பெயர்) தன்னைச் சுட்டுக் கொள்கிறார். காயங்களோடு காவலர்கள் அவரைக் கங்கைகொண்டானுக்கு அழைத்து வரும்வழியிலே சங்கரன் இறந்துவிட்டார் என்கிறது சம்பவக் குறிப்புகள். பிறகு திருநெல்வேலி பாலம் போலீஸ் நிலையத்தில் அவரது இறந்த உடல் இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறது என்கிற குறிப்புகளும் கூட உண்டு. ஆனால், அன்றைய ஆங்கிலேய அரசால் வாஞ்சியின் உடல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டது அல்லது என்ன செய்யப்பட்டது என்று இன்றைக்கு வரைக்கும் யாருக்குமே தெரியாது.

    பாளை சவேரியார் கல்லூரிக்கு எதிரில் கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் இங்லீஷ் சர்ச் கல்லறைத் தோட்டத்தில் இருப்பதிலே அதிக செல்வாக்குள்ள மனிதனுக்குச் செய்யப்படும் அலங்காரங்களோடு அமைந்திருக்கும் ஆஷ் கல்லறையை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். வாஞ்சிநாதனை நினைவுகூற ரொம்பக் காலமாக மணியாச்சி ரயில் நிலையம், (வாஞ்சி-மணியாச்சி), செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவிலுள்ள நினைவு மண்டபம் இப்படியாக சில விஷயங்கள் உண்டு. ஆனால் இதிலெங்குமே இல்லாமல்போன வாஞ்சியின் சடலத்தை இந்தக் கதையில், “இனி எப்போதும் அவள் கணவனென உணரப்போவது குருதியின் துருப்பிடித்த இரும்பின் வாசமும், கருத்த சதைத் துணுக்கும் மட்டுமே” என்று ஒரு படிமமாகப் பிணைதிருப்பதை வாசிக்கையில், தன் சிறுகதைக்குள் ஓர் வரலாற்று நிறைவைக் கொண்டு வந்து புனைந்திருக்கிறார் எழுத்தாளர் என மகிழ்ந்துகொள்கிறேன்.

  2. மிகவும் நேர்த்தியாய் எழுதப்பட்ட வரலாற்று புனைவு. இறந்த சிசுவினூடாய் அக்காலப் பெண்களின் கையறு வாழ்க்கையும் வாஞ்சி படுகொலையின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த உள் அரசியலையும் மீள்பதிவு செய்தவிதம் அருமை.

  3. வரலாற்றைப் புனைவாக்கி மிக அருமையாக எழுதப்பட்ட கதை…
    அழகான நடை… நம்மையும் காமாட்சி பின்னே நடக்கவைத்து விட்டது.
    சமீபத்தில்தான் திருமதி. கிருத்திகா தரன் நடத்தும் அருகாமை ஆளுமைகளில் ஜா.தீபா பேசினார். அப்போது அவரிடம் சினிமாவால் சிறுகதை எழுதுவது குறைந்திருக்கிறதா என்ற கேள்வி கேட்டிருந்தேன். நல்ல எழுத்தாளர்… சினிமாவால் சிறுகதை பக்கம் வராமல் போய்விட்டாரே என்பதாலே அக்கேள்வி… அதற்குப் பதில் சொன்னவர் உண்மைதான்… என்னால் இப்போது எழுத முடிவதில்லைதான் என விளக்கம் கொடுத்தார். இங்கு அவரின் கதையை வாசித்ததில் மகிழ்ச்சி… வாழ்த்துகள்.

  4. கதை ஒரு சோக கவிதையை வாசித்த உணர்வைக் கொடுத்தது.. ??

  5. மனதை உலுக்கியது ,
    நல்ல எழுத்து நடை ,
    மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் சகோதரி

  6. அற்புதமான நடை.

    வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமைகள் பெருமையான வெளிச்சத்தில் உலாவரும்போது மங்கிப்போன வேர்களாய் அவர்களைத் தாங்கி நின்ற பெண்கள். ஜென்னி, செல்லம்மாள் இப்படியாக…..காமாட்சிகளும்…..

    ஒரு வரலாற்று நிகழ்வை படிக்கும் போது அவரகளின் காலத்தில் சாமானிய மக்களோடு மக்களாய் கரைந்து போனவர்கள் அவர்களோடு வாழ்ந்த அவர்களின் துயரத்திற்கு சற்றும் குறைவில்ல்லாத தியாகங்களை இயல்பாகவே சுமந்தவர்கள் அவர்களின் துணைவியர் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருப்போம்.

    ஒரு வரலாற்றை தனது அற்புதமான புனைவின் மூலம் புதிய வாசிப்புக்கு உட்படுத்துகிறார்.

    இந்தக்காற்றில்தான் எவ்வளவு ஓலங்கள்! குறிப்பாக பெண்களின் துயர்மிகு பெருமூச்சுகள். எல்லோருக்கும் இவைகள் கேட்பதில்லை. கேட்பவர்கள் மட்டுமே இலக்கியம் படைக்கிறார்கள்.

    தீபா அவர்களை ஒரேமுறை சந்தித்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் பார்த்திருக்கிறேன். மிகவும் தற்செயலாக. திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் நடந்த அறைக்கூட்டமொன்றில் .’ நீலம் பூக்கும் திருமடம்’, என்ற அவரது நூலை முன் வைத்து நடந்த விமர்சன கூட்டத்தில். அவரது பேச்சில் பேண்கள் பற்றிய மிக நுட்பமான பார்வையிருந்தது. யதார்த்தமான சிந்தனையும் மிக இயல்பாக அணுகக் கூடியவராயுமிருந்தார்..

    இந்தப் புனைவை இன்னும் விரித்து நாவலாக ஆக்கும் சாத்தியத்தை அது தன்னுள்ளே கொண்டுள்ளதாகவே நினைக்கிறேன். காரணம் , காமாட்சியின் உள்ளக்குமுறலும் துயரமும் இன்னும் கொட்டித்தீர்க்கப்படாமலேயே அதற்குள் கணன்று கொண்டுள்ளது.

  7. எல்லா முடிவுகளுக்கும் பின்னால் ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இவ்வளவு கணமாகவா? தினமணிக்கதிரில் ரகமி எழுதிய வீரவாஞ்சியை வாரந்தவறாமல் படித்தநான் பத்திரப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அந்த தியாகம் இன்றுவரை நெஞ்சில் ரணமாக உயிர்ப்புடன் கணன்று கொண்டேயிருக்கிறது. அதன்பின் சில மாதங்களுக்குபின் கர்நாடக நந்திஹில்சில் சந்தித்த ஆஷ் கொலையில் அப்ரூவராக மாறிய நீலகண்ட சாஸ்த்திரிகளை ஓம்கார் சுவாமி என்ற பெயரில் வாழ்ந்து வந்ததையும் பாரதி பேசிய தமிழில் உரையாட கேட்டுக்கொண்டதை படிக்கப்படிக்க பெரும் த்ரில்லாக இருந்தது. அதுதான் நீட்சி என்றறிந்த எனக்கு இக்கதை மனதை பிசைகிறது. ஒரு பெண்ணால் மட்டுமே உணரப்படமுடிகிற உணர்ச்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியமை அப்பப்பா…முடியலை.
    அனந்தகோடி வணக்கங்கள் ஜா.தீபா.

  8. எல்லாப் போராட்டங்களுக்கு நடுவிலும் என்றும் அணையாத நெருப்பும் தொலையாத கண்ணீரும் உண்டு
    அது பெண்களுடையது
    அற்புதமான எழுத்து

  9. துன்பத்தில் உழன்று தன்னைக் காப்பாற்ற வழி இல்லாதவராகக் காந்தியைப் பற்றி பாலகனகன் எண்ணுகிறார்.
    விடுதலைப் பேராட்டத்தில் அண்ணலின் வழியே காமாட்சி போன்ற பெண்களைக் கைம்பெண் ஆகாமல் காத்தது

    • கதையில் ‘தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத”வராக சொல்லப்பட்டிருப்பவர் காந்தி அல்லர்; இயேசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular