Friday, March 29, 2024
Homesliderமரம்போல்வர்

மரம்போல்வர்

சுஷில் குமார்

                                 

லும்பும் தோலுமாக நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் முன் வரிசையில் அமர்ந்திருக்க, அந்த பிரம்மாண்ட வேப்பமர மூட்டின் கீழே ஒரு குத்துக்கல்லின் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள் சிவப்புச் சேலையம்மை. பின்னாலிருந்து முண்டியடித்துக் கொண்டும் எகிறி குதித்துக் கொண்டும் முன்னே வரச் சச்சரவிட்ட ஆண்களை நாலைந்து திடகாத்திரமான மல்லர்கள் மூங்கில் கழிகளால் அடித்து விரட்டினர். கூட்டமெங்கும் ஒரே கூப்பாடு. பெருமூச்சுகளில் கலந்தபடி தூரத்து அடுப்புகளில் வெந்துகொண்டிருந்த கஞ்சி வாசம் காற்றில் மிதந்து வந்தது. பனையோலைத் தொன்னைகளைத் தாங்கி சிவப்புச் சேலையம்மை ஊற்றிய கஞ்சியை நடுங்கியவாறு குடித்து சீவித்துக் கிடந்தன இப்போதோ எப்போதோ எனக் காத்திருந்த பல்லுயிர்கள்.


சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தபடி உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. தலையில் சொருகியிருந்த கருப்பு சட்டமிட்ட கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவது போல நின்றது. அவரது வலது கை விரல்கள் நாற்காலியின் கைப்பிடியில் நீண்ட யோசனையில் தட்டிக் கொண்டிருந்தன. அப்பாவின் பின்னால் சன்னல் விளிம்பில் உட்கார்ந்து அவரையும் அடுக்களை வாசலில் உட்கார்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருவரும் ஏதும் பேசிக்கொள்வது மாதிரித் தெரியவில்லை. வேண்டுமென்றே சன்னலிலிருந்து தொப்பெனக் கீழே குதித்து அப்பாவின் அருகே சென்று நின்றேன்.

“அப்பா, நீத்தண்ணி எடுக்கவாப்பா?”

அப்பாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. நேற்று ஜோதிடரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறார். அண்ணனுக்குப் பெண் பார்த்து பூவைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நிச்சயதார்த்தம் செய்து திருமணத் தேதி குறிக்க வேண்டியதுதான். பெண் வீட்டாரிடமிருந்து தொடர்ந்த அழைப்புகளும் நினைவுறுத்தல்களும் வந்தபடிதான் இருந்தன. இப்படியொரு நல்ல குடும்பத்தை விட்டுவிட அவர்களுக்கு மனதும் இல்லை. அண்ணனும் என்ன சும்மாவா? படிப்பு, விளையாட்டு, பேச்சு என எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். இன்று ஒரு தேசிய வங்கியில் துணை மேலாளராக இருக்கிறானென்றால் அதற்கு முழுக் காரணம் அவனது கடின உழைப்புதான். வரப் போகிற அண்ணியும் இன்னொரு வங்கியில்தான் வேலை பார்க்கிறாள். காதலா இல்லையா என எனக்குக் கூடத் தெரியாமல் சாதுரியமாக இதுவரை கொண்டுவந்து விட்டானே!

ஆனால், ஜோதிடரைப் பார்த்தது அதற்காக இல்லை. விசயம் எங்கள் வீட்டு சாமி மரத்தைப் பற்றித்தான்.

வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி உழவர் சந்தைக்குள் நுழைந்து மேலேறி சாலையைக் கடந்தால் அண்ணா சிலை சந்திப்பு இருக்கிறது. அந்த முச்சந்தியில் உள்ள பெரியசாமி பெட்ரோல் பங்க்கில் தான் அப்பா முப்பது வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறார். அதன் இடப்புறமாகத் திரும்பினால் ‘ஃபோர் ரூட்’ என்றழைக்கப்படும் நீண்ட சாலை. ‘ஃபோர் ரூட்ல பொண்ணெடுத்தா சாப்பாடு போட்டு முடியாதே’ என்று சொல்வதுண்டு. வரப்போகிற அண்ணியும் கூட அந்தப் பகுதியைச் சார்ந்தவள்தான். அப்பாவின் சொந்த பந்தங்கள் நிறைய பேரும் அந்தச் சாலையை நம்பி வாழ்க்கையை ஓட்டியவர்கள்தான். பெரும்பாலும் விவசாயம் தான். நெல், வாழை துவங்கி உள்ளே செல்லச் செல்ல நல்ல வருமானம் தரும் பணப்பயிர்கள் செழித்து வளரும் மலைப் பகுதிகள் என்று மிகவும் அழகான கிராமங்கள். அப்பா வேலை தேடி நகரத்திற்கு வந்து முதல்முதலில் இறங்கியது இந்த பெட்ரோல் பங்க் வாசலில்தான். முதலாளிக்கும் அப்பாவை விட்டுவிட மனதில்லாமல் இன்னும் பிடித்து வைத்திருக்கிறார். அண்ணன் கூட அப்பாவை வேலையை விட்டுவிட்டு ஓய்வெடுக்குமாறு அடிக்கடி சொல்வான்.

“அது நமக்குச் செரிப்பட்டு வராது மக்ளே..போகது வரப் போட்டும் பாப்பம்…” என்பார் அப்பா.

அம்மாவை கட்டிக்கொண்டு வந்து வீடு தேடி அலைந்த அப்பாவை அழைத்து முதலாளி தனது டூரிங் டாக்கீஸ் கட்டிடத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய சரக்குக் கிடங்கை சரி செய்து இருந்துகொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். ஒடுங்கிய வீடுதான். டூரிங் டாக்கீஸ் வாசலை அடுத்த ஒரு பைக் வந்துசெல்லும் அளவு குறுகிய முடுக்கில் நுழைந்தால் மூத்திர வாடையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பத்து நொடிகள் இழுத்துப் பிடித்த மூச்சை விடும்போது எங்கள் வீட்டு வாசலை ஆக்கிரமித்து நிற்கும் அந்த சாமி மரத்தில் வந்துதான் முட்டி நிற்பீர்கள். ‘சாமி மரம் இருக்கிறது’ என ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் ஒருவேளை மூத்திர வாடை குறையுமோ என்னவோ!

அதுவொரு பிரம்மாண்டமான வேப்ப மரம். அதன் அடிப்பகுதியைச் சுற்றி கைகளை வளைத்து கட்டிப்பிடிக்க முயற்சித்து இதுவரை எனக்கும் அண்ணனுக்கும் வெற்றி கிடைத்ததில்லை. அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து நாங்கள் நால்வரும் நின்றால் ஒருவேளை அதைக் கட்டிப்பிடிக்க முடியலாம். ஆனால், அது ஒருபோதும் நடந்ததில்லை.

அப்பா அந்தச் சரக்கு கிடங்கைச் சரி செய்து வீடாக்கிய காலத்திலேயே இந்த மரம் இதே அளவு பிரம்மாண்டமானதாகத்தான் இருந்ததாம். அதற்கு இருநூறு வயதாம்! ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் அம்மரத்தின் அடித்தண்டில் சுற்றியிருக்கும் சிவப்புத் துணியில் மாலையிட்டு அதன் முன் நெய் விளக்கேற்றி வணங்குவது எங்கள் வழக்கம். இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால், எங்கள் குடும்பத்தை தவிர வேறு சிலரும் அவ்வப்போது வந்து மரத்தை வழிபட்டுப் போவதுண்டு.

பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து வேப்பம்பழம் பறித்து சாப்பிடுவதும், அதன் தாழ்ந்த பக்கக் கிளையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பழைய லாரி டயரில் கால்களை நுழைத்து மல்லாக்கப் படுத்து ஊஞ்சலாடுவதும், அந்த சாமியின் கண்களைப் போலிருக்கும் கணுக்களில் ஊறி வரும் மினுமினுக்கும் பசையைச் சுரண்டிச் சாப்பிடுவதும், அம்மாவின் அடிக்குத் தப்பி ஒளிந்துகொள்வதும் என அந்த வேப்ப மரத்தில்தான் எனது பள்ளிப்பருவம் முழுவதும் கழிந்தது.

அந்த மரம் முழுவதும் தொற்றிப் படர்ந்து வளரும் ஒருவகைக் கொடி இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள் ஒருவித பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எல்லையில்லா நீளம் கொண்ட விசப் பாம்புகள். அந்தக் கொடியில் அரிதாகத் தோன்றும் பூக்கள் பார்ப்பதற்கு கருஞ்சிலந்திகள் போலவே இருக்கும். ஒருவேளை எனக்கு மட்டுந்தான் அப்படித் தோன்றியதோ என்னவோ.  

சாமி மரம் என்பதைத் தாண்டி அந்த மரம் எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான நபர் தான். காரணம் உண்டு. அதன் அடிமரத்திலிருந்து கிளைத்துச் செல்லும் பிரதானக் கிளை எங்கள் வீட்டின் உள்ளாக நுழைந்து நடுவீட்டில் ஓட்டைத் துளைத்துக் கொண்டு மேலேறிச் செல்கிறது. முதலாளி அந்த காலத்திலேயே சரக்குக் கிடங்கை அப்படித்தான் கட்டியிருக்க வேண்டும். நல்ல வேப்ப மரக் காற்றில்தான் எங்களது உறக்கம், கனவுகள், மகிழ்ச்சி, சச்சரவுகள் எல்லாம்.

முதலாளி பெருந்தன்மையாக வாடகையே வேண்டாம் என்று சொன்னாலும் அப்பா அவரால் முடிந்ததை கொடுத்து வந்திருக்கிறார். என்ன, ஒரு ஐநூறோ ஆயிரமோ இருக்கலாம். அப்பாவின் முப்பது வருட உழைப்பு அண்ணாவின் படிப்பு, எனக்கான நகைகள் சேமிப்பு, இதுபோக அப்பாவின் தங்கை, தம்பி குடும்பங்களுக்கான உதவிகள் என சரியாக இருந்திருக்கும். இவற்றுக்கிடையில் என்ன பெரிதாக சேமித்து வைத்துவிட முடியும்? ஆனாலும் அப்பாவின் பெரும் கனவு இந்த இடத்தை சொந்தமாக்கி எங்கள் குடும்பத்திற்கென ஒரு சொந்த வீடு கட்டுவது. அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்து உத்திரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவரது மனதில் இதுதான் ஓடிக் கொண்டிருக்கும்.

ஒருநாள் என்னிடம், “மக்ளே..அப்பா இன்னும் எத்தன நாளோ, மாசமோ? ஒங்கம்மயக் கொண்டு ஒண்ணுக்கும் ஆகாது, நல்லா இருந்து அழச்சொல்லு, அழுவா…பின்ன, வஞ்சமில்லா அப்பிராணி வேற…ஒங்கண்ணன் கெட்டிக்காரன்..அவந் தலையெழுத்த அவனே பாத்துக்குவான்…பெரிய பேங்க் ஆபீசர் ஆயிருவான்னு வையி…பின்ன, ஒனக்கு தான் பாக்கணும்….” என்று சொல்லி அமைதியாக இருந்தார்.

பின் என் கையைப் பிடித்து, “அப்பா ஒங்களுக்கு ஒரு வீட்ட கெட்டித் தந்துருவம் மக்ளே…மொதலாளிட்ட இந்த எடத்தயே பேசி வாங்கணும்…ஒங்கம்ம கிட்ட ஒரு அஞ்சு பவுனு தேறும், அவ நமக்குத் தெரியாம எதும் ஒளிச்சும் வச்சிருப்பா…பின்ன, எங்கயாம் பொரட்டி, லோன கீனப் போட்டுக் கெட்டிரலாம்லா? மொதலாளியே கொஞ்சம் செய்வாரு எப்பிடியும்…நம்மல்லா அவருக்கு வலது கையி…” என்றார்.

சொன்ன மாதிரியே முதலாளி இந்த இடத்தை அப்பா பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டார். பேச்சுக்கு ஏதோ ஒரு விலை. அதுபோக, “அண்ணாச்சி…நல்லா ஜம்முன்னு கெட்டணும், என்னா? வீட்டுக்கு நெல, சன்னல் எல்லாம் நம்ம கணக்கு, செரியா?” என்று சொன்னாராம்.

“மக்ளே, என்ஜினியர்ட்ட ஒரு வார்த்த என்னான்னு கேக்கப்படாதா?” என்று வங்கிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அண்ணனிடம் கேட்டார் அப்பா.

“எப்பா..நீங்க ஒண்ணும் யோசிக்காண்டாம்…நா எல்லாம் பாத்துக்குறேன்…ப்ளான் போட்டாச்சி…சாய்ங்காலம் வந்து காட்டுகேன்…” என்று சொல்லி ஓடினான் அண்ணன்.

அப்பா அம்மாவின் முகத்தைப் பார்த்து பெருமிதமாகச் சிரித்து, “பாத்தியாட்டி, நல்லா அவியலும் நாரங்கா பச்சடியும் முழுங்குனா மட்டும் போறாது…நம்ம கெழடாயிட்டம்…இப்ப பயக்க என்னா ஸ்பீடுங்க? பில்லருங்காம், மாடுலர் கிச்சனுங்காம்…நமக்கென்ன தெரியும்…செரி, பாப்பம்…” என்றார்.

அம்மா வழக்கம்போல மௌனச் சிரிப்பு சிரித்துவிட்டு அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள்.

“இவளுக்க உருட்டக்கம் ஒருநாளும் ஓயாது போலல்லா இருக்கு..செரியான ஓட்ட கையாக்கும்..” என்று அப்பா என்னைப் பார்த்து சலித்துக் கொண்டார்.

மாலையில் அண்ணன் வந்து வீட்டிற்கான வரைபடத்தினைக் காட்டி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் இருவருக்கும் தேநீர் போட்டுக் கொண்டு வந்தேன்.

“மக்ளே…இதெப்பிடி முடுக்க ஒட்டி மொத ரூம் போட்ருக்கு?”

“ஏம்ப்பா? மொதல்ல ஒரு சின்ன ரூம், சின்ன ஹால் மாதி, யாரும் வந்தா இருந்து பேசதுக்கு…பொறவு, நடு வீடும், கிச்சனும் வரும்…சைடுல ஒரு பெட் ரூம்…செரியா தான இருக்கு?”

“அதில்ல மக்ளே…முத்தத்துல நம்ம சாமி மரம்லா நிக்கி..” அப்பா குழப்பமாக அண்ணனைப் பார்த்தார்.

அண்ணன் எதார்த்தமாக வரைபடத்தை மடித்தவாறு, “அதுக்கென்னப்பா? ஸா மில்லுல சொன்னா அறுத்துக் கொண்டு போயிருவாம்..பத்து நிமிச வேல…” என்றான்.   

அப்பா ஒரு நொடி வெலவெலத்துப் போய்விட்டார். அடுக்களையிலிருந்து அம்மாவும் வந்து திகைத்து நின்றார். எனக்கு சட்டென அந்த நீள விசப் பாம்புதான் கண்முன் வந்து நின்றது. அப்பா எதுவும் பேசாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, “மக்ளே..ஃபேனப் போடு…” என்றார்.

நான் சட்டென மின் விசிறியைப் போட்டு விட்டு அடுக்களைக்குள் சென்று அப்பாவுக்குத் தண்ணீர் எடுத்து வந்தேன். என்னை அறியாமலேயே என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அடுக்களை முழுவதும் கருஞ்சிவப்பு நிறப் பூரான்கள் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தன. தரையில் கால்வைக்கக் கூட இடமில்லாதது போல ஆயிரக்கணக்கான பூரான்கள். என் கால் கொலுசுகளின் மணிகளில் சுருண்டு ஏறிய பூரான்களை உதறி விட்டு படபடத்து ஓடி வந்தேன்.

அண்ணன் அப்பாவின் அருகே வந்து உட்கார்ந்து, “எப்பா…நம்ம சாமிதான? நா நெறைய எடத்துல விசாரிச்சிட்டேன்…நெறைய பேரு இப்படி மரத்த வெட்டி மாத்தித்தான் வீடு கெட்டிருக்கா…சாமி நம்மள என்ன செய்யப் போகுப்பா? வேண்ணா அதுக்கு எதாம் பூஜ, பரிகாரம் உண்டும்னா செஞ்சிருவம்…” என்றான்.

அவன் சொன்னது எதுவும் அப்பாவின் காதுகளில் விழுந்தமாதிரி தெரியவில்லை. அம்மா கண்ணீர் வடிய முந்தானையால் துடைத்துக் கொண்டு கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள்.

“எப்பா…எப்பா…நமக்கு இருக்கதே ஒரு சென்ட்டு எடந்தா..இதுல மரத்த வெட்டாம விட்டா எப்பிடிக் கெட்ட முடியும்? பாதி மரம் நடு வீட்லத்தான் நிக்கி..ஒண்ணும் கவலப்படாதீங்கப்பா…நா வேண்ணா மொதலாளி மாமாட்ட வந்து ஒரு வார்த்த சொல்லட்டா?”

சில நொடிகள் அமைதியாக இருந்த அப்பா சட்டென எழுந்து விறுவிறுவென வெளியே சென்று விட்டார்.

அண்ணன் அம்மாவைப் பார்த்து, “எம்மா…அப்பா பாட்டுக்கு ஒண்ணுஞ் சொல்லாமப் போறா? நா பேங்க்ல லோனுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சி பாத்துக்கோ…இப்பக் கெடந்து கொமச்சிரப் புடாது…” என்று எரிந்து விழுந்தான்.

அம்மா இன்னும் கண்ணீரிலிருந்து வெளிவந்த பாடில்லை.

அப்பா தேரூர் ஜோசியர் வீட்டுக்குப் போயிருந்தாராம்.

“ஓஹோ…நெலம கொஞ்சம் சிக்கல்தான் கேட்டேளா? மரம் வேற இருநூறோ நானூறோ வருசம்னு சொல்லுகியோ…எங் கணிப்பு படிப் பாத்தா, ஒங்க குடும்பங்கிறதால அந்த தெய்வம் அமைதியா இருந்துருக்கு..நீங்க சுத்த பத்தமா பூஜ காரியம்னு பண்ணிருப்பியோ, இல்லையா? இல்லாட்டி சோலிய முடிச்சிருக்கும் பாத்துக்கோங்கோ”

“ஆமா அண்ணாச்சி..மகன் பேங்க்லயாக்கும் சோலி…ஒரு லோனப் போட்டு நம்மட்ட இருக்கதயும்  சேத்து கெட்டிரலாம்னு நெனச்சேன்…பய மரத்த எடுத்தாத்தான் எடம் காணும்னு சொல்லுகான்..அவன் சொல்லுகதும் செரிதான், ஆனா தெய்வக் குத்தம்லா, பிள்ளேளுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரக் கூடாதுல்லா?”

“அதும் செரிதான்…ஒரு சென்ட்டுல என்னத்தக் கெட்ட முடியும் பின்ன? ஒண்ணு இரியும்…பூப்போட்டுப் பாத்துருவம்…”

ஜோதிடர் பூப்போட்டுப் பார்த்து விட்டு அப்பாவை ஒரு மாதிரியாகக் குழப்பி விட்டிருக்கிறார்.

“ம்ம்ம்…செரி..மரத்துல இருக்கது பெரிய அம்மையாக்கும்…வெளம் கூடுனது பாத்துக்கோங்க…சும்மா யோசிக்காம செய்யாம ஒண்ணும் பண்ணிரப்படாது…ஆனாலும் நமக்கு வீடு காரியம்லா…நம்ம ஒண்ணு செய்வம்…நா ஒரு நம்பூதிரி நம்பர் தாரேன்…நான் சொன்னேன்னு போயி பாருங்கோ..அவரு வந்து செஞ்சிக்கழிக்கட்டும்…பின்ன எல்லாம் செரியா நடக்கும்…”

சாய்வு நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்து நின்ற அப்பா உள்ளே சென்று சுவற்றில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்தார். முகத்தில் யோசனை இன்னும் தீர்க்கமாகத் தெரிந்தது.

“மக்ளே..வீட்டத் தூத்துத் தொடச்சிப் போடு..சாய்ங்காலம் ஒரு பூஜ உண்டும்…அப்பா இன்னா வாறேன்…”

“செரிப்பா…கஞ்சி எடுக்கம்ப்பா, குடிச்சிட்டுப் போங்கோ…காலேலேந்து ஒண்ணும் குடிக்கலல்லா…”

அப்பா ஏதும் பதில் சொல்லாமல் தனக்குத்தானே எதோ பேசியவாறு வெளியே சென்றார்.

சாய்ங்காலம் நடுவீட்டில் பெரிய கோலம் போட்டு, நடுவில் குத்துவிளக்கு வைத்து, தலை வாழை இலை போட்டு என்னவெல்லாமோ விசித்திரமாகப் படைத்திருந்தார்கள்…மஞ்சளை நீரில் பிசைந்து உருட்டி ஒரு குட்டி உருவமாகச் செய்து இலையில் கிடத்தியிருந்தார்கள், அதைச் சுற்றிக் கருத்த எள் ஒரு குவியல், மற்ற தானியங்கள் ஒரு குவியல், இலையின் முன் ஒரு பெரிய தடியங்காய், நான்கு முட்டைகள், எலுமிச்சம்பழம், தயிர், பால், நெய், தேன் என என்னென்னவோ. நம்பூதிரி மந்திரங்களைச் சொல்லி அந்த உருவத்திற்கு ஒவ்வொன்றாகப் படைத்தார். நடுவீட்டில் நுழைந்து செல்லும் மரக் கிளையிலிருந்து அந்தக் கொடிகள் மெல்லத் தாழ்ந்து வர ஆரம்பித்தன. நான் அம்மாவின் பின்னால் சென்று குறுகி உட்கார்ந்து கொண்டேன். வாசலின் குறுக்காக யாரோ ஒரு வயதான பெண் சிவப்புப் பட்டுடுத்தி சாமி மரத்தடியில் உட்கார்ந்திருந்தாள். அந்த உருவம் தெளிவாகத் தெரியாமல், தோன்றி மறைந்துகொண்டிருந்தது. தரையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. எவ்வளவு கூர்ந்து பார்த்தும் அந்த உருவத்தின் முகத்தை மட்டும் என்னால் பார்க்க முடியவேயில்லை. நான் அம்மாவின் காதுகளில் சென்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மா எனக்குப் பதில் சொல்லாமல் நான் பேசுவது கேட்காதது போல பூஜையில் உறைந்து போயிருந்தாள்.

சற்று நேரத்தில் நம்பூதிரி விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொன்னார். என்னையும் அம்மாவையும் வீடு முழுதும் நூற்றியெட்டு மண் தீபங்கள் ஏற்றச் சொன்னார். வாசலிலிருந்த அந்த உருவம் மெல்ல மெல்ல வீட்டின் உள்ளே வர ஆரம்பித்தது, அதன் முன்னும் பின்னுமான அசைவுகள் இப்போது நின்று மெல்ல இருந்த இடத்திலேயே சுற்ற ஆரம்பித்தது. நான் தரையைப் பார்த்தவாறு தீபங்களை ஏற்றி முடித்தேன்.

நம்பூதிரி எங்கள் எல்லோருக்கும் ஒரு சிவப்புத்துணியைக் கொடுத்து வாயைச் சுற்றி கட்டிக்கொள்ளச் சொன்னார்.

“ஞான் சொல்லும் வரக்கிம் யாரும் ஏதும் பேசாண்டா…விருட்சத்திலுள்ள அம்மய மாத்திரம் மனசில் வச்சா மதி…கொச்சு போயி ஒரு சொம்பு வெள்ளம் கொண்டு வா..”

நான் அம்மாவின் முகத்தைப் பார்த்து அசையாமல் நின்றேன். அடுக்களை முழுதும் பூரான்கள். அம்மா என்னைப் பார்த்துத் தலையசைக்க நான் மெல்ல அடுக்களைக்குள் சென்றேன். பூரான்கள், பூரான்கள், பூரான்கள். தண்ணீர்க் குடத்தைச் சுற்றிலும் ஒரு நீண்ட கருநாகம்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குச் சரியாக நினைவில் இல்லை. நம்பூதிரி எழுந்து வீடு முழுதும் தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டிருந்தார். அந்த உருவம் எங்கள் குத்து விளக்கின் அருகே தலையைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தது.

“பின்ன, நமக்கு எல்லாம் செரி ஆயிக்காணும்…ஒரு மூணு தெவசம் விட்டு காரியங்கள நோக்காம்..நோன் வெஜ் வேண்டா கேட்டோ…கொஞ்சம் சுத்தமாய்ட்டு இரிக்கணும்…நெலையில் ரெண்டு தீபம் வைக்கணும்…அம்ம எல்லாம் செரியாக்கித் தருவா…ஒண்ணும் பயப்படாண்டா…” என்று சொல்லிக் கிளம்பினார். அவர் பின்னால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அந்த உருவமும் சென்றது.

அன்று இரவு வீட்டில் யாரும் சரியாகத் தூங்கவில்லை. நான் அம்மாவின் முந்தானையைக் கைவிரலில் சுற்றிக் கிடந்தேன். சாமி மரத்தின் கொடிகள் எல்லாம் விரித்த நீள்சடைக் கற்றைகளாகக் கீழிறங்கி என் கால்களில் சுற்றிக் கொள்ள ஆரம்பித்தன. பின், மெல்ல மெல்ல என் உடல் முழுதும் பரவி என்னை இறுக்கின. கழுத்தைச் சுற்றி நெருக்கியபோது மூச்சு விட முடியாமல் திணறிப் பதறி அலறிவாறு எழுந்து உட்கார்ந்தேன். அம்மாவும் பதறிப் போய் எழுந்து, “ஒண்ணுல்ல மக்ளே..கெட்ட சொப்பனமா இருக்கும்…போயி திருநீறு பூசிட்டு வந்து படு…” என்றார்.

அடுத்த நாள் காலை குடும்பத்தோடு முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலுக்குப் போய் பொங்கல் வைத்தோம். பூசாரியிடம் விசயத்தைச் சொல்லி அம்மன் காலடியில் வைத்த சிவப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டு வீடு திரும்பினோம்.

வீட்டு முடுக்கில் நுழையும்போதே ஏதோ சரியில்லை என்று ஒரு எண்ணம். பயத்தோடு படபடத்தவாறு அப்பாவின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நடந்தேன். வீட்டு முற்றம் முழுவதும் கரிந்த வேப்பிலைகள் விழுந்து பரந்து கிடந்தன. சாமி மரத்தைச் சுற்றியிருந்த கொடிகள் வீட்டு ஓட்டின் மேல் மொத்தமாக விழுந்து கிடந்தன. வீடு முழுதும் வேப்பெண்ணெய் வாடை. அடுக்களையிலிருந்து சாரை சாரையாய் எறும்புக் கூட்டம் நடு வீட்டைத் தாண்டி முற்றத்தின் வழி சென்று சாமிமர மூட்டில் ஒரு பொந்திற்குள் சென்று முடிந்தன.

“செரி, செரி…எல்லாம் நல்லதாத்தான் இருக்கும்…யாரும் ஒண்ணும் நெனைக்காம நடக்க வேண்டியதப் பாப்பம்…டேய், நீ மத்த ஸா மில் காரன்ட்ட சொல்லிரு…மக்ளே, வாரியல எடு…இதத் தூத்து மாத்திருவம்…” என்றார் அப்பா.

எவ்வளவு பெருக்கினாலும் வேப்பிலைகளும் கொடிகளும் விழுந்துகொண்டேயிருந்தன. அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் சாமி மரம் கிட்டத்தட்ட வெற்றுடம்பாக ஆகிவிட்டது. என்ன ஒரு கம்பீரம்! எங்கள் வீட்டைத்தாண்டி பக்கத்து வனத்துறை சுற்றுச் சுவரின் மீது தாழ்ந்து சென்று தரையோடு தரையாக வளைந்து நீண்டு செல்லும். டூரிங் டாக்கீஸ் சாலையிலிருந்து பார்த்தால் ஒரு சிறு மலை போலத் திரண்டு நிற்கும். சில சமயங்களில் சில இடங்களைக் கடக்கும்போது நம்மை அறியாமலேயே நம் கைகள் நெஞ்சைத் தொட்டு வணங்கும், இல்லையா? அந்த மாதிரியான ஒரு தெய்வாம்சம் இப்போது எலும்புக் கூடாக உருகி நின்றது. போவோர் வருவோரெல்லாம் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக எங்கள் மரத்தைப் பார்த்து துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“இப்படி மனசில்லாம இந்த வீட்டக் கெட்டணுமாப்பா? பழைய வீடு அப்படியே இருக்கட்டும்ப்பா…எனக்கு மனசே செரியில்ல…அழுகையா வருகு..நம்ம சாமில்லாப்பா?”

அப்பா பதில் பேசாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தார். அவரது விரல்கள் மார்பின் குறுக்கே நிலையாகக் கிடந்தன.

அடுத்த நாள் காலை சாமி மரத்தை வெட்டப் போகிறார்கள். அதற்கடுத்த நாள் எங்கள் புது வீட்டிற்கான கல் போடும் சடங்கு. வீடு கட்டி முடித்ததும் அண்ணனின் திருமணம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும். என்ன இருந்தாலும் அப்பாவின் வாழ்நாள் லட்சியமில்லையா? ஒரு மிகப் பெரிய சாதனையும் தானே? எங்களை எப்படியெல்லாம் வளர்த்தார்! ஒரு சுடுசொல் உண்டா? ஆனால், அப்பா, அம்மாவின் முகங்களில் இருந்த ஐஸ்வர்யம் மட்டும் காணாமல் போய்விட்டது.

உறக்கம் நிலைகொள்ளாமல் என்னவெல்லாமோ யோசித்துக் கிடந்தேன். நினைவிழந்து எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. அந்த சிவப்பு உருவம் என்னருகே உட்கார்ந்து என் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தது. அது மட்டும் நிச்சயமாகத் தெரியும்.

“எம்மா…எம்மா…ஏம் புள்ள…ஏம் புள்ள…மக்ளே…எந்தி மக்ளே…எந்தி மக்ளே…” என்று அம்மா பதற்றத்தோடு தட்டி எழுப்ப, பதறி எழுந்தேன். பொழுது விடிந்திருக்கவில்லை. அம்மா கேவிக் கேவி ஓங்காரமிட்டு அழுது கொண்டிருந்தாள்.  

மார்பில் ஓங்கி அறைந்தவாறு, “எஞ்சாமி…இப்பிடிச் செஞ்சிட்டியே…எங் கொலத்தக் காத்த அம்மையில்லா…என்ன பாவம் செஞ்சமோ? எங்களுக்குக் கஷ்டம் வைக்காண்டாம்ன்னு நீயே இப்பிடிச் செஞ்சிட்டியேம்மா!” என்று கதறினாள்.

கண்களைக் கசக்கித் திறந்து பார்த்தேன். அப்பா தலையில் கையை வைத்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். நடுவீட்டைப் பிளந்துகொண்டு எங்கள் சாமி மரத்தின் அடி வேர் மூட்டோடு நிலத்தின் வெளிவந்து நின்றிருந்தது. வீட்டின் ஒரு பக்கச் சுவரை முழுதும் இடித்து சாய்த்து வனத்துறை நிலத்தில் மூளியாய் விழுந்து கிடந்தது எங்கள் சாமி மரம். வீட்டு முற்றத்திற்குச் சென்று பார்க்கும் தெம்பு எனக்கில்லை.

அழுது ஓய்ந்த அம்மா என் மடியில் விழுந்து உறங்கிப் போனாள். நானும் அவள் மீது சாய்ந்து கிடந்தேன். அந்த சிவப்பு உருவம் திரும்பிப் பார்க்காமல் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

“ராவுல மழ, காத்து ஒண்ணுமே இல்லயே? என்ன அதிசயமா இருக்கு? எத்தன தலமொற பாத்த மரம்! எப்பிடியாக்கும் விழுந்துருக்கும்?” என்று யாரோ கேட்பது கேட்டது.

ஸா மில் காரர்கள் வந்து மரத்தை துண்டுகளாக அறுக்கும் சத்தம் என் காதுகளுக்குள் பெருத்த வலியாக அழுத்தியது.

“செரியான மரம், என்னண்ணே? நல்லதாப் போச்சு…வீட்டு நெலைக்கு வேற மரம் பாக்காண்டாம்…சன்னல் எல்லாம் போட்டாலும் இன்னும் நாலு வீட்டுக்குத் தேறும், என்ன சொல்லுகியோ?” என்று யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தான் அண்ணன்.

***

சுஷில் குமார் – 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு விரைவில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வரயிருக்கிறது. [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. இக்கதையில் வரும் அமானுடம் கதையை யதார்த்தத்தை வலுவாக்குகிறது.அப்பாவின் பாத்திரவார்ப்பு மிகுந்த நிஜத்தன்மையை உண்டாக்கிவிடுகிறது. வேப்பமரம் வலுவாக வேர்ப்பிடித்து நிற்கிறது.

  2. அருமையான கதை சுஷீல் , நமது மரபில் அதுவும் குலதெய்வம் போன்ற விஷயங்களில் இரண்டு விதமான தெய்வங்கள் சொல்லப்படுவது உண்டு. ஒன்று ”நாம் கைவிட்ட தெய்வம்” மற்றொன்று ”நம்மை கைவிட்ட தெய்வம்”.
    இந்த கதையில் இரண்டையும் மிகச்சரியாக கொண்டுவந்து விட்டீர்கள் .
    அந்த கடைசி வரிகள் , //“செரியான மரம், என்னண்ணே? நல்லதாப் போச்சு…வீட்டு நெலைக்கு வேற மரம் பாக்காண்டாம்…சன்னல் எல்லாம் போட்டாலும் இன்னும் நாலு வீட்டுக்குத் தேறும், என்ன சொல்லுகியோ?” என்று யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தான் அண்ணன்.//- நிலைக்கால்கள் என சன்னல் சட்டங்களென என்றும் அங்கே ”இருப்பாள்” என்றே தோன்றுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular