Friday, March 29, 2024
Homesliderபூனைக்குட்டியைக் கொஞ்சுகிறவள்

பூனைக்குட்டியைக் கொஞ்சுகிறவள்

கார்த்திக் புகழேந்தி

கிருபா நீ முன்பொரு யுவதியைக் காதலித்துக் கொண்டிருந்தவன் என்று எனக்குச் சொன்ன அந்த இரவில்தான் உன்னை ரொம்பவும் பிடித்துப் போனது. நானே உன்னிடம் ஒவ்வொரு இழையாகக் கழன்று விழுந்து கொண்டிருந்தேன். நல்லவேளை நீயாகவே வந்து, ‘என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டுமா’ என்று கேட்டு நம் உரையாடலின் ஆயுள்ரேகையை நீட்டிக்கத் தொடங்கிவிட்டாய்.

உண்மையைச் சொல்லவா.. நான் உன்னை அளவு கடந்து நேசிக்கும் அளவுக்கு உன்னைக் காயப்படுத்துகிறவளாகவும் எப்போதும் இருப்பேன். நீ என்னைச் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை உனக்கு. ஒருவேளை உனக்குத் தப்பிக்க வழி இருந்தால் இப்போதே அதற்கான பாதைகளைத் தேடிக்கொள். எனக்குத் தெரியும்… நீ அப்படிச் செய்கிறவன் இல்லை. உனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது. நீ நான் தேர்ந்தெடுத்திருக்கிற பூனைக்குட்டி. நிஜமாகவே சொல்கிறேன். எனக்குப் பூனைக் குட்டிகளைக் கண்டாலே பிடிக்காது. அதன் கழுத்தைக் கடித்து மென்று துப்புகிற கனவுகளில் இருந்து திடுக்கிட்டு விழித்து தண்ணீர் குடிக்க அலைபாய்கிறவள் நான்…”


“ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே”

“ஓவர்ங்க இதெல்லாம்…”

“ஹாஹா… எனக்காக இல்லாட்டியும் நேருவுக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க”

“டூ மச்… பட் நல்லாதான் இருக்கு. நம்மளையும் குழந்தைன்னு சொல்ல ஆள் இருக்கே”

“ஆஹா… அப்போ நீங்க உண்மையிலே குழந்தை இல்லையா”

“போதும் ஆரம்பிக்காதீங்க”

“ஹாஹா… எனிவே ஹேர்ட்டி விஷ்ஷஸ் டு யூ பார்கவி”

மெலிதாகத் துவங்கிய அந்த மெஸெஞ்சர் உரையாடலின் வெப்பம் இரண்டாவது நாளின் மாலையிலே ஒரு ஜோடி காபி குவளைகளின் எதிரெதிர் புறத்தில் கொண்டுவந்து அமர்த்தியிருந்தது இருவரையும்.

விரல்களில் திட்டுத்திட்டாக க்ரே நிற நெயில்-பாலீஷ் இஷ்டமின்றி சுரண்டப்பட்டிருந்தது. அது புன்னகைக்க மறந்தவர்களின் விருப்பமான நிறம். யாரோ பூசும்போது நீயும் விரல்காட்டு என்றதும் நீட்டியிருக்கலாம். நிறையபேர் சூழ இருந்தும் தனிமையான நேரங்களைக் கடத்திக் கொண்டிருக்கும் பெண்ணாக இவள் இருக்கக்கூடும். அன்பின் பொருட்டு மற்றவர்களுக்காகச் செய்துகொள்கிற சமாதானங்களின் பேரில் வாழ்கிற மனம்.

பழைய மாடலினான பச்சை சிவப்பு நிறத் தொங்கும் கம்மல்கள். அம்மாவுடையதாக இருக்கலாம். வலது கையில் தங்கத்தினாலான இரண்டு வளையல்கள். இடதில் சில்வர் அனலாக் வாட்ச். அடர் நீலநிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் நிறைந்த குர்தி. சம்பந்தமில்லாத புடைப்பில் பர்ஸ். ஓப்போ போன், கட்டைக்கூந்தல், ஆளுமையான உடல்மொழி.

பெண்களில் நளினம் ஒரு வகை கிருபா, ஆளுமை இன்னொரு வகை என்பான் வருண். வருண் எனக்குத் தெரிந்து பெண்களைப் பற்றி அதிகம் கமெண்ட் அடிப்பவனில்லை. ஆனால், அவனுக்கு நிறைய தோழிகள் வாய்த்திருந்தார்கள். அதைக் குறித்தான அங்கதங்களைக்கூட அவன் மிக லாவகமாகக் கடந்து போகிறவனாக இருந்தான்.

“என்ன தைரியத்தில் வெளில மீட் பண்ணலாம்னீங்க?”

புரை ஏறியது எனக்கு. “அட நீங்க வேற, நான் சும்மா சாதாரணமா ஒரு காபி சாப்பிடலாமான்னு கேட்டா! நீங்க அட்ரஸ் அனுப்பி பிக்-அப் பண்ண வந்துடச் சொல்லிட்டீங்க. அட்ரஸ் பார்த்தா போலீஸ் குவாட்டர்ஸ். பேஸ்தடிச்சுடுச்சு. நிஜமாவே நீங்க போலீஸ் பேமிலியா?”

“சித்தியும், சித்தப்பாவும் போலீஸ். அப்பா டாக்டர். அம்மா ஹவுஸ் ஒயிப்… தம்பி தங்கச்சிங்க கூட இருக்கலாம்னு இங்க தங்கியிருக்கேன்.” ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே போனாள். அவனுக்கு யாரைக் குறித்தும் பெரிய அக்கறை ஏற்பட்டிருக்கவில்லை. ‘நீ கொஞ்சம் அழகாக இருக்கிறாய்! அதை உன் கண்களே சொல்கிறது. ஆனால், அதை உன்னிடம் முதல்நாளிலே இன்பாக்ஸில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதே போதுமானது. இப்போதைக்கு எனக்கு காபியைச் சூடாகக் குடிக்க வேண்டும். அடுத்து உன்னோடு உரையாட வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஏ… அவஸ்தையே சாகடிக்காதே..

“உள்ள போலாமா…”

“ம்ம்…”

“உங்க கேள்வியை உங்ககிட்டே திரும்பிக் கேட்கிறேனு நினைச்சுக்காதீங்க. நீங்க என்ன தைரியத்தில் பீச் போகலாமான்னதும் ஓகே சொன்னீங்க”

“வீடு இங்கதானே… பக்கத்திலே… நினைச்சா நடந்தே பீச் வந்துடுவேன். பர்சனலி இங்க நான் எந்த அந்நியத்தன்மையும் உணர்ந்ததில்லை, ஸோ…” தோள்களைக் குறுக்கி வார்த்தைகளை முடிவில்லாமல் நிறுத்தினாள். வேகமாக வந்த கடற்காற்று அவளை லேசாகச் சிலிர்க்கச் செய்துவிட்டுப் போனது.

கடற்கரைகளோடு பர்ஸனல் கனெக்ட் வைத்துக் கொள்கிற பெண்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் பிரமாண்டங்களை அதன் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளி காலுக்கடியில் போட்டு மிதித்து விளையாடுகிறவர்கள். ஜாக்கிரதையாக இரு என்று வருண் காதுக்குள் ஏறி நின்று கூவினான்.

“நான் ஒரு சிகெரெட் எடுத்துக்கணும்”

“ஸ்யோர்”

அவள் அதை விரும்பவோ, வெறுக்கவோ இல்லை. திடீர் பதட்டத்தை வாரிச் சுருட்டி தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்பவளாகக் கச்சிதமாக நடித்தாள். வர்ரே வாஹ்.. நீ கமலினி முகர்ஜியை எல்லாம் சாப்பிட்டு விடுவாய்.
திசைகளெல்லாம் காற்றாய் மாறி சிகரெட்டைப் பற்றவைக்க முடியாமல் அல்லாட விட்டது. ஒன்று.., இரண்டு… பத்துப் பதினைந்து முறை முயன்றும் சிகரெட் பற்றிக் கொள்ளவே இல்லை. அவள் ஏளனமாக ஒரு புன்னகையை வீசினாள். இந்த முறை ஒரே சொடுக்கில் சிகரெட் முனை தீப்பற்றியது.

ஒருவழியாக நெடுந்தொலைவு மணலில் நடந்து வந்திருந்தோம். மெரினா கடற்கரை நட்சத்திர மோட்சங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த காதலர்கள் சகிதம் தன் வழக்கமான அமைதியோடிருந்தது.

“இப்படி உட்காரலாமா!”

இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டோம். கண்முன் கடல் விரிந்து நுரைத்திருக்க, தூரத்தில் தெரிந்த துறைமுக வெளிச்சத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் தீயாய் அலைபாய்ந்தது. மனதுக்குள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டவர்கள் தூரத்து வெளிச்சங்களின் மீது ஓர் அலாதி இன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

நான் என்னைப் பற்றிச் சொல்லத் துவங்கினேன். இந்த ஊருக்கு வந்து சேர்ந்த்து முதல் எட்டாண்டு கால ஓட்டத்தையும், இடைப்பட்ட நாட்களில் கடந்து போனவர்களையும் விலாவரியாக விவரித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வார்த்தையும் கீழே சிதறி விழுந்துவிடக் கூடாது என்பதுபோல அவ்வளவு தீர்க்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். உண்மையில் அவளது அந்த சித்திரம் என் ஆழ்மனத்தில் ஒரு பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதைத் துளியும் வெளிக்காட்டக் கூடாது என்கிற கர்வத்தில் நான் மூச்சுப்பிடிக்கப் பேசிக்கொண்டே இருந்தேன்.


“நீ பொய் கிருபா. அய்யோ! இன்னொரு தடவையும் தோற்றுப் போறதை என்னால கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியலையே. தயவுசெஞ்சு என்ன இதோட விட்டுடு. இதுவரைக்கும் மனசார எந்த சந்தோஷத்தையும் நீ எனக்கு தந்ததே இல்லைல்ல. உன்னால அழுது, அழுது நான் இழந்தது தான் மிச்சம். ஒரு எறும்பை நசுக்கிக் கொல்ற மாதிரி தினம் தினம் என்னைக் கொல்ற நீ. உன்கிட்டக் கெஞ்சி கெஞ்சி, நான் ஒண்ணுமில்லாமபோய் உன் முன்னாடி நிக்கிறேன். ஆனா நீ..”

“லூசு மாதிரி பண்ணாத பார்கவி. நான் எதுவுமே பண்ணாம..”

“அதைத்தான் நானும் சொல்றேன் நீ எதுமே பண்ணல. எனக்காக எதுவுமே பண்ணல. எது பண்ணாலும் உன்னோட தேவைதான் உனக்கு முக்கியம். நீ நீ நீ.. உன்னோட வாழ்க்கை முழுசா நீ மட்டுமே தான் இருக்க. நான் இல்லவே இல்ல. என்னோட இடம்ன்னு ஒண்ணு உன் லைஃப்ல இருக்கா இல்லையான்னே தெரியாம உன் முன்னாடி தோத்துப்போய் நிக்கிறேன் நான்”

“படுத்தாதே.. வேலை இருக்குன்னு சொல்றது தப்பா. இன்னைக்கு நைட்டுக்குள்ள இஷ்யூ முடிச்சு அனுப்பியாகணும். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோ. நான் அப்புறம் கூப்ட்றேன்.. வைக்கிறேன்”

பதினோறு மிஸ்டு கால்களுக்குப் பிறகு, மூன்றாவது ரிங்கில் அந்த அழைப்பை ஏற்க நேரும்போது கிட்டத்தட்ட மிருகமாகியிருந்தேன்.

“என்னடி உன் பிரச்சன…”

“எனக்கு நீ வேணும். எப்போ வர்ற..”

“பார்கவி, இன்னைக்கு என்னால வெளில நகரக்கூட முடியாது. நான் வேலைல இருக்கேன். கொஞ்சம் புரிஞ்சுக்க ப்ளீஸ்”

“நான் அதை எல்லாம் கேட்க வரல. எப்போ வர்றேன்னு சொல்லு”

“எட்டு மணிக்குள்ள முடிச்சுட்டு வந்துட்றேன். கேட் கிட்ட வந்து நில்லு. கால் பண்றேன்.”

உட்சபட்ச மன வக்கிரத்திலிருந்து உதிர்ந்துவிழும் கெட்டவார்த்தை ஒன்றால் என் மேலாளனைச் சபித்தேன். பார்க்கும் போதெல்லாம், ‘எப்போ சார் கல்யாணம்’ என்று கேட்கிறவன் எவனாவது இப்போது கண்ணில் பட்டால் அவன்மீது ஆக்ரோஷத்தோடு பாய்ந்து அவன் கழுத்தைக் குதற வேண்டும் போலிருந்தது. ச்சே.. என்ன வாழ்க்கை இது. காதலிப்பது என்பது இவ்வளவு கொடூரமாக நம்மை வதைக்கும் செயலா? இந்த மயிருக்கு அடிமையாகக் கிடந்து செத்துத் தொலைக்கலாம்.


~உன்னை நான் எவ்ளோ விரும்புறேன்னு உனக்குப் புரியாது. நீ இல்லைன்னா நான் ஒண்ணுமே இல்லை. ஏன்னா உன்னை அவ்ளோ லவ் பண்றேன். என்கூட இரு, எனக்கு டைம் கொடுன்னு கேட்கிறேன். அதுக்கும் என்னைக் கெஞ்ச வைக்கிற. உன் காலுக்குப் பின்னாடி நாய் மாதிரி சுத்தி சுத்தி வர்றேன்னு தானே என்னை நீ இவ்ளோ அவமானப்படுத்துற. இப்போ சொல்றேன் கிருபா நீ எனக்கு வேணாம். ~

~யாருமே இல்லாம நீதான் எல்லாமும்னு இருந்துட்டேன். நிஜமாவே நான் உன்னை எப்பவும் கஷ்டப்படுத்தனும்னே நினைச்சுட்டு இருக்க மாட்டேன். எனக்கு முழுசா மொத்தமா நீ வேணும்னுதான் இவ்ளோவும் பண்றேன். என்ன எங்கே எப்படி இதெல்லாம் உன்னை என்கிட்ட இருந்து விலக வைக்குதுன்னு சத்தியமா புரியலை. இந்தப் புறக்கணிப்பு, உன் போஸ்ட் கூட நான் பார்க்க முடியாம செட்டிங்ஸ் மாத்தி வச்சிருக்கப்ப ரொம்ப வலிக்குது. இந்த வலி என்னை என்னமோ செய்யுது. நிஜமா இன்னிக்கு என்னால எதுவுமே முடியலை.~

சோலிசுத்தம். இரண்டு தனித்தனி குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து மெஸெஞ்சர் பாப்-அப்பில் வட்டமடித்திருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை தானே என்கிற கவனத்தில், சில குறிப்புகளை எழுதுகிற அசட்டையில் கணினியில் அமர்ந்திருந்ததால் செல்போனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.

பார்கவியின் இரண்டு அணுகுண்டுகள் வந்து என் வேளச்சேரி வீட்டின் மொட்டை மாடிக்குமேல் விழுந்திருக்கிறது.

இரண்டு தனித்தனி குறுஞ்செய்திகளையும் ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பிறகுதான் விஷயம் புரிந்தது. முந்தையநாள் காலையில் அலுவலக கேபினில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை மெஸெஞ்சர் ஸ்டோரிஸில் வைத்திருந்தேன். சனிக்கிழமை மாலையில் வழக்கமாக சாப்பிடச் செல்லும் உணவகத்தில் பக்கம்பக்கமாக அமர்ந்திருக்கிறபோது, அந்த செல்பியை அவள் கண்களில் காண்பித்து விட்டேன்.

பப்ளிக் படம் தானே என்ற என் எண்ணத்தில் விழுந்தது வெடி. எங்கே எனக்குக் காட்டவேயில்லையே என்று தன் போனை இரண்டொருமுறை சரிபார்த்தாள். அப்போது அடிக்கத் தொடங்கிய கோடாங்கி வீட்டுக்குப் போன பிறகு நள்ளிரவில் திரும்ப அணு ஆயுதமாக உருவெடுத்திருக்கிறது. இருந்தும் இரண்டாவது செய்தியில் கொஞ்சம் வெப்பம் தணிந்திருக்கிறது. சோர்வினால் அவளாகவே கொஞ்சம் சமாதானமாகியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கண்களை இறுக்கிக் கொண்டேன்.


“ஈவ்னிங் என்ன தோணுச்சு உனக்கு”

“29 வருட பிரம்மச்சரியமும் இதற்குத் தானே காத்துக்கிட்டு கிடந்துச்சு. எப்படி தூங்கினேன்னே தெரியாத அளவுக்குத் தூங்கினேன்”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படியே நிம்மதியும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமுமா முடியும்ல”

“என்ன எங்க கட்டிக்கப் போற”

“என்ன உளறிட்டு இருக்க”

“அது எப்ப என்ன கட்டிக்கப் போற. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு”

“விடிஞ்சும் உன் போதை தெளியலைபோல”

“நேத்து போதைல விழுந்தது நீதாண்டி எர்ம”

“என்னோடு நீயிருந்தால்… பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்”

“அடடா அடடா”

“நல்ல தலைப்பு கவிதை தொகுப்புக்கு வச்சிக்கலாம் நீ”

“நான் ஏன் கவிதை எழுதப் போறேன்”

“அதான நீ எனக்குன்னா எங்க எழுதுவ. இதே மத்தவங்களுக்குன்னா…”

“ஆரம்பிக்காத ப்ளீஸ்”

“நான் ஒண்ணும் சொல்லல இப்போ. எனக்கு உன்கிட்ட தேவையானது இதுமட்டும் தான். அவ்ளோ லவ், வெறி, பைத்தியம். You’re my destiny.”

இதற்குமேலே பேச்சை வளர்த்தால் அது ஏழரையில் கொண்டுபோய் முடியக்கூடும் என்பதால் இறுக்கி அணைப்பதுபோல இரண்டு ஜிஃப் பைல்களை அனுப்பி வைத்தேன். அப்புறம் படுக்கையில் இருக்கும் ஜோடிகளின் முத்தம் ஒன்று. இன்னொன்று நேரடியாக உதட்டில்.

“சீக்கிரம் வீட்ல பேசவும் ரெடியாகு. நான் பத்து மணிக்கு மேல கால் பண்றேன்.”

நல்ல மூடைக் கெடுக்க விரும்பாதவளாக அவளே இந்தமுறை இரக்கத்தோடு நடந்து கொண்டாள். அதிகாலை மூன்று பத்துக்குக் கடைசியாக அனுப்பின ஜிஃப் பைலில் இருந்த ஆண், அந்தப் பெண்ணின் மேல் உதட்டிலிருந்து முடிந்தமட்டும் மென்மையாக மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

என்ன கருமம் இது எவனோ எவளையோ முத்தம் கொடுக்குறதைக் காட்டித்தான் நான் இவளைச் சமாதானப்படுத்த முடியனுமா? அல்லது நேற்றைக்கு சாயங்காலத்தில் இதே அறையில் நடந்த களியாட்டத்தின்போது, இருளில் சூடாகிப் பருத்து நின்ற அவள் இடது மாரினிலிட்ட முத்தங்கள் அவளைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருக்குமா?


நாங்கள் அடிக்கடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தேநீர் விடுதியில் சந்தித்துக் கொண்டோம். வீடு திரும்புகிறபோது, இன்னுமொரு சுற்று ஊரை வளைய வந்த பிறகே குவாட்டர்ஸை அடைந்தோம். மஞ்சள் பழுப்பு சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் ஊறிய சாலைகளில் இருச்சக்கர வாகனத்தின் மிதமான வேகத்தில் நகரும் என்னை பில்லியனில் இருபக்கம் காலிட்டு அமர்ந்தபடி, மார்பகங்கள் அழுந்த முதுகில் சாய்ந்துகொண்டு, வலது காதுக்குப் பக்கமாக தன் கன்னத்தை உராய்ந்தபடியும், வெளிச்சங்கள் நிழலாகிக் கரையும்போது கழுத்தின் பின்புறத்தை நுனி நாவால் ஈரப்படுத்தியும் சூடேற்றக் கற்றுக் கொண்டாள்.

அவள் அப்படிச் செய்யும்போது இன்னும் இன்னும் என்று இதயம் ஏங்கும். பெட்ரோல் டேங்குக்கும் தொடைக்கும் நடுவே கதகதப்பு கூடும். தோள்களில் வளைந்து கிடக்கும் இடது புறங்கையை முத்தமிட்டு வாளிப்பேன். கொஞ்சல் கடிகளும் அரங்கேறும். கிடைத்த இடைவெளியில் ‘இதுபார் கன்னத்தில் முத்தமொன்று’ எனும்போது.. ‘ஹே ரோட்ல போய்ட்டு இருக்கோம் எர்ம’ என்று தோளில் ஓர் அடிவிழும்.

பார்கவிக்கு ஏற்பட்டிருந்த பழைய சிக்கல்களுக்கான காரணங்கள் பற்றியெல்லாம் அவள் என்னிடம் சொல்வதற்கு வாயெழும்போதெல்லாம் நான் அதைக் காதுகொடுத்துக் கேட்டதேயில்லை. முதல் சந்திப்பிலே அவள் மேலோட்டமாகச் சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தாள். இனியும் அதுபற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு எந்த சிரத்தையும் இல்லை.

நான் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நான் நகர்வதற்கு நீ காரணமானவளாக இருப்பேன் என்று என் உள்மனம் சொல்கிறது. நாம் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வோமா என்ற கேள்வியை அன்றைக்கு மாலையில் கேட்டபோதே நம்முடைய பழைய கதைகள் அத்தனையும் கடற்காற்றோடு கரைந்து போனது.

முதல்முறையாக நீ என்னையும் நான் உன்னையும் காதலிப்பது குறித்து, நம் இருவருக்கும் நெருக்கமான பரஸ்பர நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கூட வெளிக்காட்டாத வகையில்தான் புன்முறுவல் செய்தார்கள். நான் அவர்கள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அதில் தூரத்து பில்டிங்கின் உச்சியில் மிளிரும் “ஜீஸ்ஸ் ஸேவ் அஸ்” என்கிற நியான் விளக்கு வாசகம் மின்னி மின்னி மறைந்தது. அவ்வளவே!


இது வேலைக்கே ஆகாது. இவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் மூன்று பக்கங்களுக்கான அந்த தயாரிப்பாளரின் நேர்காணலை எடுத்துக் கொடுத்தேன். ஷூட்டிங் வராமல், பாத்ரூமிற்குள் வைத்து டப்பிங் செய்துகொடுத்து, தான் செய்கிற தொழிலை இவ்வளவு இழிவாகக் கையாண்ட நடிகனை, அவனை வைத்துப் படம் எடுத்த இயக்குநரும், தயாரிப்பாளரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்த வாரமே வெளிவந்திருந்தால் ஹாட்-டாக்காக (HOT TALK) மாறியிருக்கும்.

‘அடுத்த வாரம் போட்றலாம் கிருபா’ என்று பாலிவுட் நடிகையின் சென்னை பிரவேசத்தின் போட்டோ ஷூட்டை முன்னிலைப்படுத்தியது எல்லாம் அலுவலக லாபி சக்ரவர்த்தினிகளின் விஷமம்தான். இஷ்யூவில் பேட்டி வராததைப் பார்த்த தயாரிப்பாளர் நேராக அதே கண்டன்டோடு சேனல்கள் வாசலில் நின்றுவிட்டார். மொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர். இவர்களது மெத்தனத்தைக் குறித்த கடுப்பில் காச் மூச்சென்று கொலீகை வேறு பிடித்து ஒரு ஏறு ஏறிவிட்டேன்.

டீக்கடை வாசலில் நின்றபடி இரண்டாவது சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தபோது, பார்கவி மெஸெஞ்சரில் வட்டமிட்டாள். திறந்து பார்த்தேன். இரவு உடையில் கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்து சிரிக்கிற புகைப்படம். பதிலுக்கு இரு ஹார்டின் ஸ்மைலியை அனுப்பி வைத்தேன்.

“பிஸியா?”

“லைட்டா”

“ம்ம் சரி”

அரைமணி நேரம் கழிந்தபிறகு ஆசுவாசமாக ஃபேஸ்புக்கைத் திறந்தேன். நண்பர்கள் குழுவில் அந்த நடிகனைக் குறித்து சுடச்சுட வந்திருந்த மீம்ஸ்களைப் பகிர்ந்து களேபரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

‘ஓத்தா… இவன்லாம் எவ்ளோ கொழுப்பிருந்தா பாத்ரூம்ல வச்சி ரெக்கார்டிங் பண்ணிக் குடுத்திருப்பான்’ என்று காரணமில்லாமல் மனசார வைது ஒரு மெஸேஜைத் தட்டிவிட்டேன்.

அதே நேரத்தில் பார்கவியிடம் இருந்தும் ஒரு மெஸேஜ் எட்டிப் பார்த்தது.

“ஆன்லைன்ல இருப்ப, ஆனா என்கிட்ட பேசதான் உனக்கு டைம் இல்லல்ல”

“எம்மா தாயே, இப்போதான் வேலை முடிச்சுட்டு போனைக் கையில் எடுக்கேன் நீ மெஸேஜ் பண்ற”

“சும்மா நடிக்காத. சரி சொல்லு சாயங்காலம் என்ன ப்ளான்?”

“இன்னும் முடிவாகலை”

“வெளில போறமா?”

“தெரியலை பாப்போம்”

“இப்ப ஏன் இப்படி கோவமா பேசிட்டு இருக்க”

“சரிமா சொல்லு. ஆறரைக்கு ரெடியா இரு. வர்றேன்”

“ஒண்ணும் தேவையில்ல. உனக்கு எது சந்தோசமோ அதையே போய் பண்ணு. நான் ஒருத்தி இருகேன்னு யோசிச்சுக்கூட பார்த்துடாத”

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த மூன்றாவது வினாடியில் அவளிடமிருந்தே அழைப்பு வருமென்று தெரியும். போன் இணைப்பைத் துண்டித்த உடன் மனம் மாறும் பெண்களைக் குறித்து, இந்தப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாராவது தத்துவ விசாரணை செய்தால் தேவலாம். பெண்கள் என்று பன்மையில் குறிப்பிட்டது மட்டும் அவள் காதில் விழுந்தால், ஓஹோ அப்போ சார்க்கு இன்னும் எத்தனை பெண்களைத் தெரியும் என்று வைத்து செய்ய ஆரம்பித்துவிடலாம்.

“கிளம்பி இருக்கேன். ஆறரைக்கு வந்துட்டு கூப்பிடு”

டொக்.


வீட்டில் யாருமில்லை என்கிற அரூப தைரியம் எங்களை ஒன்று சேர்த்திருந்தது. உடைகளைக் களைவதற்கு முன்பாக அவளைத் தொடுவதை அனுமதிக்க மாட்டாள். உள்ளாடைகள் வரைக்கும் நீக்கிவிட்ட பிறகே நெருங்கி வருவதில் ஒரு சுகமும் சுதந்திரமும் இருக்கலாம். இருந்தும் நான் பலதடவை பின்னால் இருந்து அணைத்து, கைகளைக் கொண்டு அவள் முதுகுப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் துணிந்ததுண்டு.
அதைச் சம்மதிக்காதது போல உள்ளூர விரும்புகிறவளை ரசிப்பேன். முதல் கவனம் இடதுபக்கத்திலே குவியுமென்று அவளுக்குத் தெரியும். உதடு குவித்து சூட்டோடு பருகத் தலைப்படுவேன் என்பதற்காகவே பின்னோக்கி வளைந்து வாய் புகுப்பாள்.

எதையும் கீழிருந்து தொடங்கு என்ற கட்டளைகள் தேவனிட்டது போலச் செவிசாய்க்கப் பழகிவிட்டேன். உள்ளங்கால் பருவத்தில் துவங்கி, அல்குல் பெருகி நீர்மையாகும் தருணம் வரை அந்தக் காலடியிலே கிடப்பேன். இருவருமே மூச்சிழந்து போவதுவரை தீவிரமாய் ஈடுபட்டு, உலகின் எல்லா ஞானப் புயல்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு, உடலெங்கும் பிரகாசம் பீறிட, சமாதானமும் சத்தியம் நிறைந்த வார்த்தைகள் ஒருவருக்கொருவர் உள்ளிறங்க, ‘பூக்கள் நிறைந்த கிளைகளுக்கு நடுவில் இருக்கும் பறவையைப் போல உன்னை நேசிக்கிற கடவுளின் பாதுகாப்பில் நீ இளைப்பாறுவாய்’ என்று தேவன் சொன்ன வாக்கியங்களில் இருவரும் களித்திருந்தோம்.

முயக்கம் முடியும்வரை வாய்விட்டு பிதற்றுகிற ஆங்காரங்கள் தீரும் மட்டும் கையாளப்படும் உடல்கள். இறுமாப்புடன் நீ எனக்குத்தான் என்று காதைக் கவ்வியபடி கூச்சலிடுவாள். உழைந்து கலைவாள். இரண்டாம் மூன்றாம் முறைகளுக்குப் பிறகு கண்கள் சொக்கி மயங்கிச் சரியத் துவங்கும்போது அவள் விரல்கள் என் மார்புக் காம்புகளை நீவிக்கொண்டிருக்கும். பிறகு ரகசியமாய் நீ எனக்குப் பத்தவே இல்லை என்று கொஞ்சுவாள். அப்போது பார்கவியின் கண்களைப் பார்ப்பதை நான் முற்றிலும் தவிர்த்து விடுவேன். அவள் என்னை அவ்வளவு ஆதுரமாகக் கொஞ்சுவது ஒரு பூனையை மடியில் கிடத்திக் கொஞ்சுவது போலத் தோன்றும்.

பூனையாக இருப்பது சந்தேகத்திற்கு இடமானது. பூனையுமே சந்தேகத்தின் குறியீடுதான். மெஸெஞ்சர் குறுஞ்செய்தி அந்த நேரத்தில் ‘டிங்’ என்று சத்தமிட்டபோது, நான் வலித்து அவள் கண்களைப் பார்த்தேன் அதில் இருந்த தீவிரம் ஒரு பூனையைக் கொலைசெய்யப் போகும் நேரத்திற்குச் சமமானது என்பேன்.


இந்தமுறை என்னால் தவிர்க்கவே முடியாமல் போனது. பார்கவி தன்னுடைய பழைய கதைகளின் தோல்விகரமான முடிவுகளைக் குறித்து மெஸெஞ்சரில் துண்டு துண்டாக விவரித்துக் கொண்டிருந்தாள். பருவத்தில் காதலாகத் தொடங்கியது முதல் தீர்ப்பின் நகலைக் கையில் பெற்றது வரை, இரண்டுநாள் முன்பு, அவளை யாரோ சமாதானம் செய்து திரும்ப அழைத்துப் போவதாக கனவுகூட வந்ததாகச் சொன்னாள். என்னைத் தனியாக நீ விட்டுவிடுவதால் தான் இப்படி எல்லாம் கனவு வருகிறது என்றாள். நான் மீண்டும் தனித்திருக்கிற உணர்வுகளால் சூழப்பட்டிருக்கிறேன் என்றாள். உன்மீது நான் காட்டுகிற அன்பில் கொஞ்சமாவது நீ திருப்பிக் காட்டியிருந்தால் இப்படியெல்லாம் தோன்றியே இருக்காது என்றாள்..

அவள் சொல்லிக் கொண்டே இருந்த நேரத்தில், அலுவலக மேசையின் முன்னால் உள்ள எனது சுழலிருக்கையில் நான் கொஞ்சம் திடகாத்திரமாக நிமிர்ந்து அமர்ந்தேன். ஒரு நீண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்வதற்கான உடல் சமிக்ஞை அது.

“பார்கவி உன்னுடைய தலைமுறையில் உன்னுடைய தாத்தா காலத்திலிருந்து படித்த பட்டதாரிகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் நீ. வசதி வாய்ப்புகளிலும் தன்னிறைவான நிலையை அடைந்தவள். நான் எனது தலைமுறையிலே முதன்முதலாக ஊரைவிட்டு வெளியேறிவந்து இந்த நகரத்தில் எழுந்து நிற்கப் போராடிக் கொண்டிருப்பவன். என்னுடைய சந்ததிகளின் முதல் துளி ஈரம் நான். பொய்த்துப் போகிற மழையைப்போல இல்லாமல் என்னுடைய வற்றி வறண்ட நதிகளுக்காக வேண்டி, என்னுடைய ஊரின் மலையையாவது நான் நனைவிக்க வேண்டும். ஒருசொட்டு ஈரத்தைப் பற்றி எழும் விதைகளுக்காக நான் நிச்சயம் சூல்கொண்டே ஆகவேண்டும். அப்படிச் சூல்கொண்டு எழுந்து நிற்பதற்கு எனக்குக் கிடைத்த ஒரே பிடிதரம் என்னுடைய வேலை. ஆகவே உன்னைக் காட்டிலும் அதிகம் இந்த வேலையை நான் பன்மடங்கு நேசிக்கிறேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் என்னுடைய வாழ்வில் நீ எவ்வளவு முக்கியம் என்பதை நான் மனப்பூர்வமாக அறிவேன். என்னுடைய காதலின் மகத்துவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் தேவையை இட்டு நிரப்பாமலே நீ எனக்குக் கிடைத்திருக்கிறாய். ஆனாலும் உன்னை உன் மனக் காயங்களில் இருந்து விடுவித்து, நீ அனுபவித்த துன்பங்களில் இருந்து உன்னை சொஸ்தப்படுத்துகிற ஓர் இலக்கை நீயாகவே தொடர்ந்து எனக்கு நிர்ணயித்துக் கொண்டே இருப்பதை ஏனோ நான் விரும்ப மறுக்கிறேன்.

ஒருவேளை எனக்கு நீ நிர்ணயிப்பதுபோல, என்னிடத்தில் உனக்கு எந்த இலக்கும் இல்லை என்று நம்புகிறேன். அதனாலே நீ கொட்டிக் குவிக்கும் அன்பு எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. அதில் திளைத்துக் கொண்டே பரிபூரணமடைகிறேன். அந்த பரிபூரணத்தை நீ அடையாதது வேதனையாக எனக்குள் மிஞ்சுகிறது. ஒருவேளை நான் உன்னுடன் செலவழிக்கிற நேரங்கள் உனக்குப் போதவே போதாது என்று நம்பச் செய்கிற உன் கடந்த காலத்துக்குள் நீ சிக்கிக் கொண்டிருப்பதாய் நான் பிரமையில் இருக்கிறேனா என்றுகூட தெரியவில்லை.

அப்படி ஒரு சுழலுக்குள் நீ சிக்கியிருந்தால் உன்னை அதிலிருந்து கைப்பிடித்துத் தூக்குகிறவனாக நான் இருப்பேன். ஆனாலும் எழுந்து நடக்க வேண்டிய தேவையை நீதான் உருவாக்க வேண்டும். அதுமட்டும்தான் உன்னை எல்லா பலவீனங்களில் இருந்தும், உன் கொடிய கனவுகளில் இருந்தும் காப்பாற்றும்.

கூடவே, நம்முடைய அன்பில் பூர்த்தியடையாமல் நாம் சண்டையிடவில்லை. நம்முடைய விலகல்களும் சண்டைகளும்கூட என்மீது உனக்கிருக்கும் பாதுகாப்புக் குறையுணர்வுகள் தான் காரணம் என்று அஞ்சுகிறேன். யாரோ வந்து உன்னைத் தூக்கிக்கொண்டு போவதும், எங்கோ யாருடனோ உனக்குத் தெரியாமல் நான் குலவிக் கொண்டிருப்பதுவுமாக உனக்குள் ஏற்படும் குறையுணர்வை குப்பைகளைக் கொஞ்சம் கைவிடேன்.

ரொம்பவும் மென்மையாக எழுத நினைத்தேன். இவ்வளவு முரட்டுத்தனமாக உன்னோடு உரையாட வேண்டியிருக்கும் என்று நான் கற்பனைகூட செய்தது இல்லை. என்போல் கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவர்களுக்கேயான இயல்பான தாழ்வுமனப்பான்மை என்னை உழற்றியடிக்கிறது. எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்கிற இறைஞ்சும் சொற்களையும் கூடவே முதுகிலேற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நான் அந்த மூட்டையைக் கடாசிவிட்டேன். யாரையும் சார்ந்து நிற்காத கால்களுடன் இந்த நகரில் அலைந்து பழகிவிட்டேன். அது உன்னையும் அந்த எல்லையிலே வைத்து அளவிடுகிறது.

எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, இன்னொருவர் ரத்தத்தால் அதைக் கழுவக் கற்றுக்கொடுத்து விட்டார்கள். பிரியமுள்ள பார்கவி, காயங்களின் குருதி உன் உள்ளத்திலிருந்து விடாமல் கசிந்து கொண்டிருப்பதை நான் கேட்டறியாமல் என்னைக் குறித்தே இவ்வளவு காலமும் பிரஸ்தாபித்துக் கொண்டு திரிந்திருக்கிறேன். என்னை மன்னி. இனி உன் காயங்களுக்கு நான் மருந்திடுகிறவனாக அல்ல உன் மருந்தாகவே ஆவேன்..” என்று எழுதி முடித்த நொடி நேரத்தில் பேட்டரி லோவ் காட்டிக் கொண்டிருந்த மொபைல் அப்படியே அணைந்து மொத்தச் செய்தியும் அழிந்துபோனது.


“என்ன தான்டா பிரச்னை உங்களுக்குள்ள?”

“……….”

“சொன்னாதானே தெரியும். நல்லா இருக்கீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா திடீர் திடீர்ன்னு ஆரம்பிக்கிறீங்க?”

பார்கவிக்கும் எனக்கும் முற்றுகிற சின்னச் சின்ன சண்டைகளில் அநேகமாக நான் அவளுக்குத் தருகிற தண்டனை அவளை ஃபேஸ்புக்கில் ப்ளாக் செய்வதும், போனை எடுக்காமல் தவிர்ப்பதும்தான். அந்தச் சிலமணி நேர அல்லது மூன்று நாட்கள் வரை நீளும் இடைவெளிக்குள் அவள் வல்லூறு தூக்கிச்செல்லக் காத்திருக்கும் சோமாலியா குழந்தையைப்போல மனத்தளவிலும், உடலளவிலும் சிதைவுற்றுப் போயிருப்பாள். பிறகு, போன் எடுக்காத பிரச்சனை என் நண்பர்களின் காதுக்குச் சென்றுசேரும்போது இதுமாதிரியான விசாரணைகள் தொடங்கும். அன்றைக்கு மாலையிலே கூப்பிட்டு வைத்து அர்ச்சனைகளை ஆரம்பிப்பார்கள். நான் வழக்கம்போல ‘இவ எனக்கு வேண்டாம். இவளால என் நிம்மதியே போயிடுச்சு’ என்பேன். பார்கவி ஆத்திரமடைந்து கத்துவாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். நேராகக் கிட்டவந்து, “நீ என்னடா என்னை வேண்டாம்ன்னு சொல்றது. நான் சொல்றேன் எனக்கு நீ வேண்டாம் போடா” என்பாள். உட்சபட்ச ஈகோவும் கடல்போலக் கொந்தளிக்கும். திரும்பத் திரும்ப “வேண்டாம் போடா! நீ வேண்டாம் போடா… நீ வேண்டாம் போடா..!” என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.

ஏதோ ஒரு வினாடியில் அவள் கண்களை நான் சந்தித்துவிடும்போது, பார்கவி என்று அவள் கைகளைப் பிடித்து மண்டியிட்டுவேன்.

தீர்ந்தது கதை.

மீண்டும் புதிதாய்ப் பிறந்தோம் என்பதுபோல காதல் வழிந்து கரைந்தோடத் துவங்கும் சோடியம் விளக்குச் சாலைகளில்… ஒவ்வொரு முறையும் பூனைக் குட்டியாக மாறுவதும், பிறகு ரத்தத்தால் கழுவப்படுவதுமென நிகழும் இந்த விளையாட்டை இருவருமே நிறுத்திக் கொள்வது என்று முடிவெடுத்த ஒரு நல்ல நாளில் உடல்கள் தழுவிக்கொண்டு கிடந்த நேரத்தில் மெஸெஞ்சர் ‘டிங்’ என்று சத்தமிட்டது. நான் சட்டென்று அவள் கண்களைப் பார்த்தேன் ஒரு பூனையைக் கொலை செய்யப் போகும் அதே தீவிரம்.

மகனே! சாகும் வரைக்கும் உனக்குச் சங்குதான்டா!

***

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு [email protected]

ஓவியம் – Katsushika Hokusai

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular