Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்புதைமணல் மேல் நடனமாடும் வித்தைகள்

புதைமணல் மேல் நடனமாடும் வித்தைகள்

நந்தாகுமாரன்

முதல் வித்தை: அபத்தம் எனும் அமரத்துவம்

நாய்களின் பிணங்களில் இருந்து
வெளியேறிய உள்ளுறுப்புகளால்
அலங்கரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில்
பூமிக்கு வடக்கே
அவன் பயணம் செல்கிறான்
சாலையின் இப்பக்கத்திற்கும் அப்பக்கத்திற்கும்
நடுவில் இருக்கும் பகுப்பில்
பூத்துக் குலுங்கும்
செவ்வரளிப் பூக்களின் சிவப்பும் அவனுக்குக்
குருதியின் நல்வண்ணத்தையே நினைவுபடுத்துகிறது
அவன் வளர்த்த நாயின் முகம்
இப்போது அவன் மனதிற்கு வருகிறது
முந்தைய ஒரு பயணத்தில்
அவனுடன் வந்து
இந்தச் சாலையோர ஏதோ ஒரு
காற்றாலையின் ஒரு கைமுனை எலும்பின்
கூர்மையைத் தன் வாயில் கவ்வ முனைந்து
கவ்விய பின்னும் விழுங்க நினைந்து
உடல் சிதைந்து குடல் குடைந்து
செத்த அவன் நாயின் பெயரை
புதைமனப்பிணம் எனப் பிறகு மாற்றித்
தன் கனவுகளிலும் சுமந்து செல்கிறான்
எதிலும் அபத்தம்
எங்கும் அமரத்துவம்
என்று காண்கிறான் 

இரண்டாம் வித்தை: புகையிலை நறுமணம்

புகையிலைப் பனி மூட்டத்தினூடே
அவன் நடக்கிறான்
அவன் நாசி அவனை வழி கடத்துகிறது
விண்வெளியெங்கும் மண்வெளி
பூமி மீண்டும் பெருமையாக வெடித்துவிட்டதா
என அவன் சிந்திக்கும் பொழுதில்
ஆலகாலத்தின் ஆதிகாலத்தில் இருந்து
ஒரு சொட்டு
ஆலகாலத்தின் அதீதத்தின் அகாலத்தில் இருந்து
ஒரு சொட்டு
ரெண்டும் வெட்டிக் கொண்டு கலந்து
பிறந்து வருகிறது புதியதொரு பிண்டம்
வார்த்தைகள் தாம் காண்பிக்க விரும்பும் திசைகளை
அவைகளின் அர்த்தங்கள் தாமே மீண்டும் வழிமறிக்கின்றன
அப்படியான ஒரு பயணத்தில்
தான் காண வந்த
உலகிலேயே மிகப் பெரிய
ரஃப்லெஷ்ஷியா பூக்களைக்
காணாமல் தவறவிடுகிறான் மீண்டும்
நினைவுக்கென்ன கோபமோ
கனவுக்கென்ன சாபமோ
முட்டாளும் ஞானியும்
ஏன் மௌனத்தின் பாதையை
இறுதியாகத் தேர்கிறார்கள் என்பது
அவனுக்கு இப்போது புரிகிறது
பொல்லாமை துலங்கும் தானே
எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு
முன்னகற்கிறான் மேலும் ஒரு புகை தூரம்.

மூன்றாம் வித்தை: தோல்வியின் வெற்றி

எப்போதும் அவனுக்கு அமைவது
அவனே தான்
தன் பூடகம் தனக்கே புரியாத போதும்
அடுத்தவருக்குப் புரியும் என அவன் நம்புகிறான்
தனக்குத் தானே தீ வைத்துக் கொள்பவன்
தற்கொலைக்கு முயல்பவன் அல்ல
தன் காயங்களை ஆற்ற முடியாதவன்
இன்னும் அதிகம் சிரிப்பைக் கோரும்
அவன் மனிதாபிமானம்
நாவை மட்டும் நீட்டி
நகைச்சுவையிலும் சிறந்த புகைச்சுவையின்
அகலம் தீண்டுகிறது
பாலைவன எச்சில்
இப்போது அவன் கண்களில் ஊர்கிறது
கோலம் புனைந்ததோ
காலம் கனிந்ததோ
4.82803 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கும் ஞானத்தைத் தவறவிடுகின்றான்
அவன் அனுபவக் கட்டிட மலைகளின்
பின்னே மலர்ந்து
பாரெங்கும் ஒளி பரப்புகிறது
தோல்வியின் சூரியன் 


நான்காம் வித்தை: வார்த்தைகளின் சரசங்கள்

வார்த்தைகளின் சரசங்களின் மீது
இவ்வளவு அர்த்த முட்களா
அர்த்தத்திற்கும் அறிவில்லை
வார்த்தைக்கும் செறிவில்லை
அவ்வளவு தானா அவன் கடவுள்
மறு ஜென்மம் இருக்கும் என்று
நம்புவர்கள் மட்டும்
என் மீது உங்களுக்கு உள்ள காதலை
ஒத்திப் போடவும்
என்கிறான் அவன்
எனினும் எவ்வளவு முட்கள்
எனினும் அதன் மீதும் எவ்வளவு பனி மொட்டுக்கள்
எனினும் இவற்றைத் தாண்டியும் ஒரு பன்னீர் ரோஜா
எனினும் ஏனோ ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது
உடையாததும் உடைபடுவதும் மலர்வதும் உலர்வதும்
ஒரே சொல் ஒரே இதழ்
ஆனால் வேறு அர்த்தம்
ஒளியின் ஞானப் போக்கு
தன் இருப்பின் பயணத்தை
அகாலம் அடிவருடிய ஆயுள் வருடங்களாகத்
தன் உணர் கொம்புகளில்
தெளிந்த கனவுகளாகச்
சேகரித்துக் கொள்கிறது 


ஐந்தாம் வித்தை: என் பெரிய வாழ்வினைத் தடம் பார்த்துத் தான் தடவியிருக்கின்றாய்

மனிதர்களின் ஒற்றையடிப் பாதையின் தடங்களில்
எறும்புகள் பயணிக்கும் அந்தப் பெரிய வாழ்வின்
துர்விதிக்கு
இந்த மலையேற்றதின் மணிமுடியிலிருந்து காணக் கிடைக்கும்
உன் அந்தச் சால மிகுத்துப் பெய்யும் பார்வையின் நற்கதி தான்
நம் பரஸ்பர வெற்றி
கீழிருந்து பார்த்தால் மனிதர்களுக்கே
இந்தச் சிறிய தடம் மட்டும் தான் தெரியும்
அதையும் தடவிச் செல்லும
உன் பார்வை மிக நுட்பமாக இருக்க
நீ படும் பாடு
எனக்கும் புரியும்
என்பது தான் பிரச்சனை அவர்களுக்கு
அது சரி
ஞானத்தைக் கூடவா
உன் பகடி
விட்டு வைக்காது
இந்த உலகம்
இருளும் போது
நமக்கு மட்டும் ஏன்
விழிப்பு வருகிறது
நமக்கும் வேறு வேலை இல்லை
அப்படி என்ன தான் ஒரு வேலை வைரஸ்
இதை விடச் சிறந்தது
பிறந்து வந்துவிடப் போகிறது
இனி மேல்

***

நந்தாகுமாரன் – ஆசிரியர் தொடர்புக்கு :[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular