Thursday, February 12, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?

பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?

ஆர். பட்டாபிராமன்

ளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சமாக இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களைக காப்பது காந்தியின் பெரும் பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள் நடக்கத்துவங்கின. அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை.

காந்தியின் உரை கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த பகத்சிங் பள்ளியிலிருந்து வெளியேறி ஓத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஜனவரி 4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா பகுதியில் போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலையம் தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர். அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை எனப் போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். ஆறு ஆண்டுகள் கடும் தண்டனை கொடுக்கப்பட்டு அவர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள் தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத்சிங் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர். 

காந்தி அறைகூவலைக் கேட்டு பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் காந்தி போராட்டத்தை கைவிட்டதுமான செயல்கள் பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளைக் காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது தவறு என பகத் பேசத்தொடங்கினார். காந்திய இயக்கத்தால் சாதிக்கமுடியாது என பகத்சிங் நம்பத்துவங்கினார். மதன்லால் திங்கராவின் செயலை காந்தி ஏற்கவில்லை. தவறான வழியில் செய்யப்படும் தியாகம் என அவர் கருத்துக்கூறி இருந்தார். பகத்சிங்கிற்கோ அது ஈர்ப்பை தந்தது

’சைமன் கமிஷனே திரும்பிப் போ’ இயக்கம் 1928ல் தீவிரமாக எழுந்தது. லாலாலஜ்பத்ராய் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் கடுமையாக பிரிட்டிஷ் போலிசாரால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் உடல் வலுவிழந்து செப்டம்பர் 1928ல் உயிர் நீத்தார்.

ஃபெரோஷா கோட்லாவில் பகத், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா, ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள் கூடினர். ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் டிசம்பர் 10, 1928ல் ஸ்காட் போலீஸ் அதிகாரியை கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுத்தனர்.

டிசம்பர் 17 அன்று காவல்நிலையத்திலிருந்து வெளிவந்த போலிஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத் தொடர்ந்து சுடுகிறார். பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில் இருந்த சைக்கிளில் ஏறி போராளிகள் தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர்.

பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது

1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத் இருவரும் குண்டுகளை யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர். மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கி கொண்டார். தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டனர். ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அசெம்பிளியில் அமர்ந்திருந்தனர். போராளிகள் இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் பகத்சிங்கிடம் இருந்த துப்பாக்கியை எடுக்கவும் எந்த தடையும் அவர்கள் செய்யவில்லை. இதுவே பின்னர் அவர்களது சாண்டர்ஸ் கொலை வழக்கில் குற்றத்தை உறுதிப்படுத்த தடயமானது.

லாகூர் சதி வழக்கு எனப் புகழ்வாய்ந்த வழக்கில் சாண்டர்ஸ் கொலை, வங்கி கொள்ளை, அசெம்பிளியில் குண்டுவீச்சு போன்ற குற்றங்கள் வழக்கில் இணைக்கப்பட்டன

பகத்சிங், பதுகேஸ்வர், ஜதிந்திரநாத் ஆகியோர் லாகூர் பார்ஸ்டல் சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேரு அவர்களை ஆக 9 1929ல் சந்தித்தார். கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் போராடிவந்தனர். – சிறைக்கைதிகளின் நிலையை மேம்படுத்தக்கோரி போராளிகள் பட்டினிப்போர் மேற்கொண்டனர். மிக உயர்ந்த இலட்சியதாகமும் சுதந்திர வேட்கையும் கொண்ட இவர்களைக் கிரிமினல்போல் நடத்துவது சரியல்ல என மதன்மோகன் மாளவியா அசெம்பிளியில் கண்டித்தார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டினார்.

சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம் தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்க்காமல் கூட வழக்கு நடத்திட அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றைக் கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார்.

இர்வின் பிரபு மூவர் விசாரண கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக மே 1. 1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார். பின்னர் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தந்தார் பகத்சிங். மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணைக்கூடத்திற்கு புரட்சிகர தோழர்கள் வருகின்றனர்

அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாயப் பிரதிநிதி சிறைச்சாலை வந்து தீர்ப்பின் 68 பக்க நகலை வாசித்தார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்பட்டது. அதிர்ச்சி நிலவுகிறது. மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். நாடு முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொதுக்கூட்டங்கள் சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. 

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய தோழர்களுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து மார்ச் 23 1931 அன்று அதை நிறைவேற்றியது. வன்முறை மீது நம்பிக்கையற்ற காந்தி பகத்சிங்கை காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக சென்றது.

***

மஹாத்மாவின் சிந்தனை எப்படி இருந்தது? பகத் வழக்கு குறித்து எப்படி எதிர்வினை ஆற்றினார்? புகழுடன் விளங்கிய மஹாத்மா தனது அகிம்சைக் கொள்கை காரணமாக பகத்சிங் பிரச்சினையில் emotional ஆக involve ஆகவில்லை எனப் பேச்சு வந்தது. காந்தியடிகள் இறுதிகட்டம்வரை பல்வேறு முயற்சிகளை செய்தார்- அவர் வெற்றி பெறவில்லை எனச் சிலர் சொல்வதையும் பார்க்கமுடியும். இர்வினிடம் அதிகமான அழுத்தம் தந்தார் எனவும்-வைஸ்ராய் அவரை வஞ்சித்துவிட்டார் எனவும் வேறுபட்ட பார்வைகள் நமக்கு கிடைக்கின்றன. 

இர்வின் காந்தி இருவரும் நினைத்திருந்தால் தூக்குதண்டனயை மாற்றியிருக்கமுடியும் என்கிற பொதுவான கருத்தும் நிலவுகிறது. The Assumption is questionable- பிரிட்டீஷ் சிஸ்டம் என்கிற சூழலை வைத்து நாம் பார்க்கவேண்டும்- புரிந்துகொள்ளவேண்டும். பகத்சிங் தூக்கு பிரச்சனையில் காந்திய அரசியலை மட்டும் விமர்சிப்பவர்கள் பிரிட்டிஷ் சட்டமுறைக்கு பகத்சிங் பலியானவர் என சேர்த்து பேசுவதில்லை. அப்போதிருந்த வேறு எந்த தலைவர் குறித்தும் விமர்சனமும் இல்லை.

காந்தி இர்வினை சந்தித்து தண்டனை மாற்றம் (Remission of death sentence) என்பதைக்கோரி வருகிறார் என்பது செய்தியாக கசிந்தது. இதை அறிந்த பஞ்சாப் கவர்னர் காந்தியின் முயற்சி வெற்றிபெறக்கூடாது என எண்ணினார். அவர்கள் மார்ச் 24 என்பதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 23 அன்றே இரகசியம் காக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றுவது என முடிவெடுக்கின்றனர். 

காந்தி மார்ச் 23 அன்றும் விடியற்காலை மணி ஒன்றுக்கு நீண்ட கடிதம் ஒன்றை இர்வினுக்கு எழுதுகிறார். மாளவியா, நேரு, தேஜ்பகதூர் சாப்ரு ஆகியோரும் பெருமுயற்சி எடுக்கின்றனர். காந்தி மார்ச் 26 1931 கராச்சியில் கூடிய காங்கிரஸ் அமர்வில் எடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்குகிறார். முயற்சி பலனளிக்கும் என நம்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் 23 அன்று பகத்சிங்கின் குடும்பத்தாரை காந்தி சந்திக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. காந்தியை வில்லனாக சித்தரிக்கும் முயற்சிகள் பின்னரும் நடைபெறாமல் இல்லை. 

சுதந்திரம் என்பது பிறரைக் கொன்று அடையமுடியாது என்பதை 1909லேயே தனது கருத்தாக வெளிப்படுத்தியவர் காந்தி. பிரிட்டிஷ் வைஸ்ராய் அல்லது குடும்பத்தார்- அதிகாரிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அதைக் கண்டித்தவர் காந்தி. 

பகத்சிங் குறித்த அக்கறை காந்திக்கு இருந்தது என குல்தீப் நாயர் தெரிவிக்கிறார். ஆனால் பகத்சிங்கின் வன்முறைப் பாதையை அவர் ஏற்கவே இல்லை. பகத்திற்கு சிலை எழுப்பும் இயக்கத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காந்தி இன்னும் சற்று தீவிர முயற்சியை எடுத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம் என்பது எச் ஆர் பக்‌ஷியின் கருத்தாக இருக்கிறது. 

மரணதண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்கலாம் என்கிற காங்கிரசின் கருத்தை காந்தி ஏற்றார். அதை அமைதி திரும்புவதற்கான நிபந்தனையாகக் கூட வைக்கலாம் என காங்கிரஸ் செயற்குழு கருதியது. ஆனால் காந்தி நேர்மையாக கராச்சி காங்கிரஸ் அமர்வை எதிர்கொள்ள விரும்பினார். ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பது உறுதியானால் அது கராச்சி சந்திப்பிற்கு முன்பே நடந்துவிடவேண்டும் (If the boys should be hanged they had better be hanged before the Congress session than after it) என்றார் காந்தி. தலைவர்கள் கராச்சியில் தங்களைக் காத்துக்கொள்ள தள்ளிப்போடல் என்பதை காந்தி தன் நேர்மைப்படி ஏற்கவில்லை.

காந்தி முயற்சிகள் எடுத்தார் என்றாலும் வைஸ்ராய் அவரை ஏமாற்றிவிட்டார் என புரிந்துகொண்டவர்களும் இருக்கின்றனர். இக்கருத்தை கே கே கல்லு பிரதிபலிக்கிறார். இர்வின் சுயசரிதை எழுதிய அல்லாம் கம்பெல் ஜான்சன் இர்வின்-காந்தி உடன்பாட்டிற்கு பின்னர் பகத்சிங் தூக்கு குறித்த உரையாடல் இரு துறவிகளுக்கு மத்தியில் நடந்தது போல் இருந்ததே தவிர ராஜாங்க மனிதர்களுக்குள் நடந்தது போல் இல்லை என்ற பதிவைத் தருகிறார்

காந்தியின் மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் தரும் வகையில் காந்தி அனைத்து முயற்சிகளையும் செய்ததாக அனில் மெளரியா தெரிவிக்கிறார். காந்தி தூக்குத்தண்டனையை மாற்றக் கோரினார். மகாதேவ தேசாயின் குஜராத் குறிப்புகளின்படி பார்த்தால் இர்வின் உடன்பாட்டின் அம்சமாக இடம்பெற செய்யவும் காந்தி முயற்சித்தார் என்பது மெளரியா தரும் தகவல். உரிய காலத்தில் முயற்சி எடுக்கவில்லை- மார்ச் 3 1931ல்தான் எடுத்தார் என்கிற நூரணி தகவல் சரியானதல்ல. காந்தி பிப் 19 முதல் பெருமுயற்சிகளை எடுத்தார் என்பது மெளரியா முன்வைக்கும் வாதம்.

காந்தி பெரும் முயற்சிகளை எடுத்தார். வைஸ்ராய் எந்த உறுதிமொழியையும் தராவிட்டாலும் ரிமிஷன் கிடைக்கும் என காந்தி நம்பியதாக மீராபென் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜனவரி 26 1931ல் விடுதலையான பின்னர் பிப்ரவரி 18 முதல் மார்ச் 5வரை இர்வினுடன் பேச்சுவார்த்தை நடந்தது. எட்டு சுற்றுக்கள் 22 1/2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக அறியமுடிகிறது. மார்ச் 5 காலை எட்டப்பட்ட உடன்பாட்டில் நேருவிற்குகூட ஏமாற்றம் இருந்தது. 

பிப்ரவரி 18 அன்று காந்தி பகத்சிங் பிரச்சனையைப் பேசினார். பொதுவாக காந்தி மரணதண்டனைக்கு எதிராக நின்றவர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். எவராக இருந்தாலும் திருந்த வாய்ப்பு தரவேண்டும் என்பதே அவரது பார்வை. பகத்சிங் பிரச்சனையில் மரணதண்டனையில் மாற்றம் என்றால் கூடுதலாக அமைதி நிலவும் என்றும் காந்தி கருத்து தெரிவித்தார். சரியோ தவறோ வெகுஜன கருத்து அவ்வாறு இருக்கிறது என்றும், இந்த உயிர்களை காப்பதன் மூலம் பல அப்பாவி உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படலாம் எனவும் காந்தி இர்வினுக்கு மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். சிறப்பு பிரதிநிதி மூலம் அக்கடிதம் அனுப்பபட்டது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால் திரும்ப பெறுவது என்பது நடவாத விஷயமல்லவா. Charity never faileth என்கிற வாசகம் கொண்ட அக்கடிதத்தை அனுப்பிவிட்டு அவசியமெனில் நேரில் வந்து பேசவும் தயார் என காந்தி தெரிவித்தார்.

இர்வின் தனக்கு மார்ச் 27, 1931 அன்று கொடுக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் காந்தியின் வற்புறுத்தலைக் குறிப்பிட்டுப் பேசினார். தனது கொள்கைக்கு எதிராக நடந்துகொண்ட இளைஞனுக்காக மரணதண்டனையை மாற்றவேண்டும் என அந்த அகிம்சை மனிதர் தன்னிடம் வலியுறுத்தியதையும், அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க கூடாது என தான் உணர்ந்ததாகவும் விளக்கிக்கூறினார். இதை ட்ரிப்யூன் செய்திப்பத்திரிகை மார்ச் 28 1931 அன்று பிரசுரித்திருந்தது.

பகத்சிங்கை தூக்கில் ஏற்றினால் அவர் தேசத்தியாகியாக கொண்டாடப்படுவார். நிலைமைகள் சற்று விபரீதமாகும். ஆனாலும் சட்டப்பிரச்சனைகளில் அதன்படி செயல்படுவதுதான் தனக்கு சரியாகப்படுகிறது என்பதையும் காந்தியிடம் தான் சொன்னதாக இர்வின் தெரிவித்தார். மேலும் பகத்சிங்கிற்கு அத்தண்டனை சரியானதே என்பதால் அதை மாற்றவேண்டும் என்பது தன்னால் இயலமுடியாத ஒன்றானது என்றும் இர்வின் தெரிவித்திருந்தார். The Earl of Halifax- fullness of daysல் இப்பதிவு இருப்பதாக அறியமுடிகிறது.

பஞ்சாப் அரசாங்க செயலரின் தனி உதவியாளர் ஆண்ட்ரூஸ் மகளைத்தான் சாண்டர்ஸ் திருமணம் செய்வதாக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அவரின் செல்வாக்கும் பகத்சிங்கிற்கு எதிராக இவ்வழக்கில் இருந்திருக்கலாம். ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்ட போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஜேம்ஸ் ஸ்காட்டும் வழக்கின் திருப்பங்களை உன்னிப்பாக கவனித்து ஆலோசனைகளை சொல்லிவந்ததாகவும் அறியமுடிகிறது. ஆண்ட்ரூஸ் தான் பல ஆங்கில அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதாகவும் தனக்கு ஆறுதலாக நிற்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதையும் அறியமுடிகிறது. ஆங்கில மாதுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்கிற தாக்கம் பரவலாக்கப்பட்டது. 

அன்று பொறுப்பில் இருந்த 7 கவர்னர்கள் உறுதியாக நின்று வைஸ்ராயை வலியுறுத்திய செய்தியை ராபர்ட் பெர்னே தெரிவிக்கிறார். காந்திக்கும் பகத்சிங் மரணதண்டனையை ரத்துச் செய்ய அடிப்படைகள் இல்லை என அறிந்தும் அவர் மனிதாபிமான அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டதாக ராபர்ட் சொல்கிறார். பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா எச்சரிக்கையை செய்ததாக பீப்பிள் என்கிற பத்திரிகை தலையங்க செய்தியில் எழுதியது. அந்த இளைஞர்கள் இரு போலீஸ் உயிரை பறித்தவர்கள் என்கிற போலீஸ்தரப்பு வாதத்தை எழுதியது.

பகத்சிங்கின் தந்தை கிஷன் சிங் கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி பிரைவி கவுன்சிலுக்கு பெட்டிஷன் ஒன்றை செப் 20, 1930ல் தந்தார். பிப்ரவரி 17, 1931ல் அது நிராகரிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் லால்கபூர், பால்ஜித் சிங் போன்றவர்கள் பிரவரி 16 அன்று வைஸ்ராய்க்கு தந்தி அனுப்பினர். நீதிமன்ற அமர்வுக்காலம் முடிந்த நிலையில் மரணதண்டனை செல்லாது என்றனர். பிப்ரவரி 25ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை போட்டனர். அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாக்ஸ்டன், கிங், ஜோவெல்ட் போன்றவர்கள் பகத்சிங்கின் மரணதண்டனையை மாற்றவேண்டும் என வைஸ்ராய்க்கு வேண்டினர்.

காந்தி மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் வைஸ்ராயை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். கராச்சி செல்வதை ஒருநாள் ஒத்தியும் போட்டார். காந்தி கராச்சி சென்றபோது திரும்பிப் போ முழக்கத்துடன் இளைஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காந்தியம் வீழட்டும் என முழக்கம் இட்டனர்.

I pleaded Viceroy as best as I could. I brought all pressure at my command to bear him. I poured my soul into it but no avail எனக் காந்தி குறிப்பிட்டார்.

தண்டனைமாற்றம் பெறுவது என்பதைவிட தியாகத்தால் ஆற்றும் தேசக்கடமை உயர்ந்தது என பகத்சிங் கருதினார். The country will be served better by my sacrifice என்றவர் பகத்சிங். பகத்சிங் தனது தியாக வாழ்விற்கான பாதையைத் தேடிக்கொள்வதில் குறியாக இருந்தார். காந்தி தன்னால் இயன்றதை செய்யவே முனைந்தார். பிரிட்டிஷ் நிர்வாகத்தைவிட காந்தி மீதான தாக்குதலை சிலர் அதிகமாக தருவதை நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

காந்தி வன்முறை வேண்டாம் என்று சொன்னவரே தவிர பகத்சிங் உட்பட எவரையும் வேண்டாம் எனச் சொன்னவர் அல்ல. ஒவ்வொரு உயிரின் உன்னதமும் அறிந்தவர் காந்தி.

***

ஆர்.பட்டாபிராமன் – தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசித்து வருகிறார். பி.எஸ்.என்.எல் இல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்தியை கண்டுணர்தல், நேருவின் மரபு, மார்க்சியத் தடங்கள் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி: pattabieight@gmail.com.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here