Thursday, February 12, 2026
Homesliderநேசக்காற்று

நேசக்காற்று

தேன்மொழி அசோக்

1)

நீ வரவேயில்லாத 
என் வீட்டில் 
எப்போதும் மயான அமைதிதான் நிலவுகிறது 
எப்போது நீ நுழைகிறாயோ 
அக்கணமே திருவிழாக் கோலம் பூண்டுவிடும் 
அதற்காகக் கெஞ்சிக் கூத்தாடியெல்லாம் 
திருவிழாக் கொண்டாட முடியாது
என்னைப்போலவே உனக்கும் பித்து இருந்திருந்தால்
இந்நேரத்திற்குத் 
தோரணம் பின்னியிருந்திருப்பாய் அல்லவா?
நீ வேண்டுமானால் பொறுப்பில்லாமல் இருக்கலாம் 
எனக்கு ஆயிரம் வேலைகள் கிடக்கின்றன 
வேலையோடு வேலையாய் 
திருவிழாவின்போது 
உனக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிய 
சட்டைத்துணி தைத்துக் கொண்டிருக்கிறேன்

என் மீப்பெரும் நம்பிக்கையே 
வரும்போது 
முல்லைப்பூ வாங்கி வருவாய்தானே?

~~~

2)

யார் வந்து கேட்டாலும் 
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் 
விலை சொல்லும் நானேதான் 
நீ வரும்போது 

உன் முகம் பாராமல்
வளைந்து
நெளிந்து 
குழைந்து 
விலை நிர்ணயிக்கின்றேன் 

காய்கறி வியாபாரத்தில் பிரச்சனையில்லை 
வாடிக்கையாளர்களோடும் கராறாகத்தான் இருக்கிறேன் 
வியாபார நேரத்தில் நீ மட்டும் 
அந்தப் பக்கம் தலை காட்டாமல் 
இருந்தால்தான் என்னவாம்?

உன்னைப் பார்த்த குதூகலத்தில்  
கொத்தமல்லியோடு சேர்த்து
மரிக்கொழுந்தையும் கொத்துக்கொத்தாகக் கொடுக்கிறேன்  
இலவசமாக!

~~~

3)

உன்னைத் தேடி வருவதில் 
எந்தப் பிரச்சனையுமில்லை
என்னை யாரோபோல நடத்திவிட்டால் 
என்ன செய்வது என்பதை 
சிந்தித்து சிந்தித்துதான் 
சீரழிந்து போகிறேன்.
மற்றபடி என் நெஞ்சோரத்தில் வந்து மோதும் 
உன் நினைவலைகள் 
நீங்காமல் அடித்துக் கொண்டுதானிருக்கின்றன.

~~~

4)

சுடும் ஓட்டில் 
உப்புக்கொண்டமாய்க் கிடக்கின்றது 
என் காமம் 

இரத்தமும் சதையுமாக இருக்கும்போதே ருசிக்காமல் 
வெய்யிலில் கிடத்தி
வேடிக்கை பார்ப்பதால்
என்னதான் லாபம் உனக்கு?

~~~

5)

தனிமையின் பிடியிலிருந்து தப்பி 
உன் மடியினில் 
தஞ்சம் புகுந்துவிடலாமென 
உள்ளூர நினைக்கும்போதே 
தேன்கூட்டில் யாரோவொரு
சிறு கல்லை எரிந்தவுடன் 
ஓராயிரம் தேனீ கிளம்பி 
சூழ்ந்து கொள்வதைப்போல 
ஆயிரமாயிரம் கரங்களால் 
ஆரத்தழுவிக் கொள்கிறது 
பொல்லாத இத்தனிமை.

***

தேன்மொழி அசோக்  – கவிதை,நூல் அறிமுகம் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூர் தமிழ் முரசு, மக்கள் மனம், மின்கிறுக்கள் இணைய இதழ், சிராங்கூன் டைம்ஸ் மற்றும் திணைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வாசகசாலை, வளரி, நுட்பம், ஆனந்த விகடன், கொலுசு மற்றும் கணையாழி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரின் தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் தங்கமுனைப் போட்டிகளில்(2023) கவிதைப் பிரிவில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: honeylx@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here