தலையங்கம்
வரலாறும் புனைவும் ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. பொதுக்கூற்றில் நிறுவப்பட்ட வரலாறு யாரோ ஒருவரின் புனைவாகவும், புனைவு விடுபட்டவர்களின் வரலாறாகவும் அறிய நேர்கிறது. தனி மனிதனின், ஒரு குழுமத்தின் அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. மீண்டெழுந்த கதைகள் பேசப்படுகின்றன. அவற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலும், அவர்களின் வாழ்க்கையும் கைவிடப்படுகிறது. வாய்மொழிக் கதைகளும் அதன் வழியான வாழ்க்கையும் புனைவின் வழியாகவே வரலாற்றின் அங்கமாகின்றன. தொன்மங்கள், குலதெய்வங்களின் புராணக்கதைகள் வாழ்க்கை எனும் தராசில் அலசப்படும்போது அவை வரலாற்றின் சாயலை ஏற்கின்றன. இந்த ஒப்புமையில் வரலாற்றில் புனைவை அடையாளம் காணும்போது அவை பகடியின் சாயலைக் கொள்கின்றன. அதிகாரத்தின் நகாசு வேலைகள் அம்பலமாகின்றன. அதே நேரம் புனைவில் வரலாற்றின் புதிய குரல் அடையாளப்படுத்தும்போது வரலாறு பொதுவுடைமை குணத்தை அடைகின்றது.
சமகால இலக்கிய ஆக்கங்களில் வரலாறு பெரும் தாக்கத்தையும் பங்களிப்பையும் செய்கிறது. சமகால வாழ்வை பரிசீலிக்கவும், அதன் வரலாற்றுப் பிழைகளைப் பரிசீலிக்கவும் புனைவு நல்லதொரு ஆயுதமாகப் பங்காற்றுகிறது. சொல்லப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளைப் புனைவு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மீட்டுருவாக்கமாகத் தேங்காமல் புதிய அர்த்தங்களைப் பொழியும் நேரடி ஆக்கமாக அவை உருவாவதே வரலாற்றுடனான உறவிற்குப் புனைவின் அர்த்தமாகிறது. வரலாற்றின் பல பக்கங்கள் திறக்கப்படுவதற்கு புனைவின் உதவியைக் கோரி நிற்பதே இப்போதைக்கான சூழலாக அமைகிறது.
வரலாறுக்கும் புனைவிற்குமான உறவை இரண்டில் ஏதேனும் ஒரு பார்வையை முன்வைத்து சிறப்புப் பகுதியாக்க முயற்சித்தோம். உடல்நலமின்மைகளும் படைப்பாளர்களின் சில அசௌகரிய சூழல்களும் தடங்கல்களாக வந்தன. பல கட்டுரைகளின் வழியே எட்ட விழைந்த கருப்பொருளை நீளமான ஒற்றைக் கட்டுரையின் வழியே மீண்டெழவைத்தவர் நம்பிகிருஷ்ணன். நவீன இலக்கியவாதிகளின் வாழ்க்கையும், பண்பாடும், படைப்பாக்கமும் இணையும் புள்ளியை படைப்பில் தொடங்கி தன் சுய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு சிறப்பாக முன்வைப்பவை நம்பிகிருஷ்ணனின் இலக்கியக் கட்டுரைகள். அவ்வழியே அலேஹோ கார்ப்பெந்தியரின் இலக்கியப் பங்களிப்பையும் அதில் வரலாற்றின் அம்சத்தையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். வரலாற்றைப் புனைவில் எப்படிக் கையாளலாம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. ஸ்டாலின் சரவணன், கிருஷ்ணசந்தர் சிறுகதைகளை முன்வைத்து எழுதியிருக்கும் மதிப்புரை இந்த சிறப்புப்பகுதியை ஒட்டிய வண்ணமே அமைந்திருக்கிறது. சமகாலப் போர்ச்சூழலைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாலஸ்தீனப் போர் குறித்து வரலாற்றின் சுவடில் புனைவெழுத்தாளர்களும், அரசியல் ஆளுமைகளும் முன்வைத்திருக்கும் பார்வைகளை சிறப்பாக தொகுத்திருக்கும் ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை சிறப்புப் பகுதியின் சமகாலத் தன்மைக்கு சான்றாக அமைகின்றது.
நவீன வாழ்க்கைக்கான புதிய அர்த்தங்களைப் புனைவுகள் சுட்டுகின்றன. பழைய விஷயங்களைப், புராணங்களைக் கையாளும்போதும் அவை நவீனவாழ்வின் அலகுகளைக் கைக்கொள்கின்றன. இம்முறை வெளியாகும் சிறுகதைகளும் அவற்றிற்கான மற்றுமொரு நற்சான்று. மொழிபெயர்ப்பிலும் இத்தன்மைக்கு இணைவான படைப்புகள் வெளியாவது மின்னிதழின் நல்லூழ்.
சமகால எழுத்தாளுமைகளின் நேர்காணல்களை மேற்கொள்ள வேண்டும் எனும் எங்களின் செயல்பாட்டிலும் உடல்நலமின்மையின் தாக்கம் இடராக முளைத்தது. சமகால இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் வழியே நல்லதொரு தாக்கத்தை யதார்த்தவாத கதைப்புலத்தில் ஏற்படுத்தியவர் ரேமண்ட் கார்வர். அவருடைய நேர்காணலொன்று சுபஸ்ரீ முரளிதரனின் மொழிபெயர்ப்பில் வெளியாகிறது.
சிற்றிதழ் மரபில் வந்தவரும், தமிழின் தனித்துவமான கதைசொல்லிகளின் பட்டியலில் இடம்பெறுபவருமான டி.கண்ணனின் மறைவிற்கு யாவரும் மின்னிதழ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். அவருடனான உறவும், இலக்கிய பங்களிப்புகளின் மீதான பார்வையுமாக இவ்விதழில் வெளியாகியிருக்கும் எஸ்.சண்முகம் எழுதிய அஞ்சலிக்கட்டுரை அவரைத் தேடிச் சென்று வாசிக்கவும், வாசிப்பின் வழி அஞ்சலி செலுத்தவும் உதவியாய் இருக்கும்.
இதழுக்குப் பங்களித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் ’யாவரும்’ சார்பான அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

