வணக்கம்,
எப்போதும் போல தாமதமாக இந்த இதழும். பொறுமையோடு காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு முதலில் எமது நன்றி.
மின்னிதழ்களின் வசதியாக எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம், எத்தனை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் என்கிற அம்சங்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. மிகவும் நேர்த்தியாக சீரான இடைவெளிகளில் கடந்த பத்தாண்டுகளில் மின்னிதழ்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. வெகுஜன பரப்பில் இயங்கிடவும் நல்ல தரமான படைப்புகளோடு “கிழக்கு டுடே, மெட்ராஸ் பேப்பர்” ஆகிய இதழ்கள் வெளிவருகின்றன.
தேமே என்று நாமும் கொண்டு வருகிறோம் என்பது போல் இல்லாமல் இருக்கவே மெனக்கெடுகிறோம் என்றாலும். இந்த முறையும் google workspace காலாவதியானதை கவனிக்காமல் விட்டுவிட்டோம் editor@yaavarum.comற்கு வந்திருக்கும் பல மின்னஞ்சல்களை பார்க்கவே முடியவேயில்லை. இதனால் சில படைப்புகளின் தேர்வு நிலை குறித்து தெரிவிக்க முடியவில்லை என்பதால் தலையங்கமே மன்னிப்பு எடுக்கும் சங்கல்ப்பத்தோடு எழுத ஆரம்பித்தது தான்.
அதே நேரம், பிப்ரவரிக்கு பிறகு வரும் மின்னிதழ் சிறிய அளவேனும் கட்டணம் செலுத்தி வாசிக்கும் வகையில் தான் வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வகையில் வரும் வருமானம் எவ்வளவாக இருப்பினும் அதை படைப்பாளர்களுக்குள் பகிர்ந்து கொடுக்கவே விரும்புகிறோம். நல்லது நடந்தேறும்..
விருதுக் குழப்பங்களும் வீண் சச்சரவுகளும்
சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதும் நிறைய கூச்சல்களும் குழப்பங்களும் எழுந்தன. பொதுவாக ஒரு விருது அறிவிக்கப்படுகையில் அதற்கு எழும் எதிர்ப்புகளை இவ்வாறு தான் பார்க்க இயலும்.
விருது X விமர்சனம் (அரசியல்/இலக்கியத்தரம்/பகைமை/போட்டி)
மேற்சொன்ன ரீதியில் எழும் விமர்சனங்களே இதுவரை நிகழ்ந்தவை. ஆனால் அண்மையில் வழங்கப்பட்ட ப.காளிமுத்துவிற்கான விருதில் எழுந்த சர்ச்சை
விருது X ஜெயமோகன் பதிவு X (ஜெமோ எதிர்ப்பு + விருது ஆதரவு)
எல்லாவகையிலும் விமர்சனம் குறித்த எந்த சுவடும் பேசப்படாத வண்ணம் இருதரப்பிலும் கவனமாக கையாளப்பட்டது. இத்தகைய தீவிரத்தன்மை கொண்ட பலனற்ற வெற்று விவாதங்கள், விஷ்ணுபுரம் விருது அறிவித்தவுடன் எழுந்த கூச்சல்களைப் பார்க்கையில் ஆச்சரியம் அளித்தது.
விருது X (ஜெமோ எதிர்ப்பு + சாரு எதிர்ப்பு +/- ஜெமோ/சாரு ஆதரவு)
என்கிற வகையில் பொறுத்தமேயற்ற சச்சரவுகள் அரங்கேறின. எந்த வகையிலும் யாருக்கும் பலன் தராத விருது பிரச்சினைகளில் தலையிடுவதை விட நேர விரயம் செய்ய வேறு எந்த சிறந்த உபாயமும் இல்லை. 80-90களில் பிறந்த இன்றைய வாசகர்களுக்கு, தங்களது வெகுஜன ரசனை மீது கல்லெறிந்து காயப்படுத்தியவர்களில் சாருவுக்கு பிரதான இடம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. வெகுஜன ரசனையிலிருந்து இலக்கியம் எனும் அடுத்த மலைக்கு பாலம் சிருஷ்டித்து அழைத்துச் சென்ற படைப்பாளர்களும் உண்டு, பரிசலில் இழுத்துச் சென்ற படைப்பாளரும் உண்டு , சாரு மலையை இலக்காகக் காண்பித்து ‘அதை நோக்கி நீந்தி வந்தா வா இல்லை better you die’ என்று சொல்லிவிட்டு குறுக்கே ஓடும் நதியில் தள்ளிவிடுவார்.
குறிப்பு : கரைசேராதவர்களும் நிறைய உண்டு.
“யுவ புரஸ்கார் விருது பெற்ற ப.காளிமுத்து அவர்களுக்கு யாவரும் பப்ளிஷர்ஸ் சார்பாக வாழ்த்துகள்” இந்த அங்கீகாரம் இவரது கலைப் பயணத்தை செறிவாக்கவும், கூர் தீட்டவும் பயன்படுத்தட்டும்.
யாவரும் பப்ளிஷர்ஸ் நிலை
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீளாமல் அதே நேரம் சோர்வுறாமலும் சோர்வுற்றாலும் தெரியாமலும் தாக்குபிடித்து வருகிறோம். இதோ இப்போது கூட மதுரை புத்தகக்காட்சியில் பங்கேற்கிறோம். ஆரம்பத்தில் நாங்கள் தாங்கிப்பிடித்த எழுத்தாளர்கள் இப்போது எங்களைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். இது ஒருவகையான மலையேற்றம், உச்சியில்லாத பயணமாக இருத்தலிலும் ஒரு நல்லது இருக்கத்தானே செய்கிறது. இறக்கம் குறித்து அஞ்சத் தேவையில்லை. ஆனாலும் இந்த பத்தாண்டு பயணத்தில் ஒற்றை நூல் கூட தமிழ்க நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்படாத காலத்திலும் சிங்கை,இலங்கை, மலேசியா, அமெரிக்கா, யேர்மனி என நண்பர்களின் முயற்சியாலும் வியாபார ஒழுங்காலும் வெவ்வேறு தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நாங்கள் அரசாங்கத்தை நம்புவதை விட ஒரு வாசகரை நம்புவதில் பலனிருக்கிறது.
தற்போது கூட பெரியார் பல்கலைகழகத்திற்கு நூல்கள் கொடையளிக்கும் புரவலர்களை புத்தகக் கடைகள், பதிப்பகங்கள் வாயிலாக கொள்முதல் செய்துவரும் வாய்ப்பு இருக்கிறது. வாசகர்கள் விரும்பினால் யாவரும் பப்ளிஷர்ஸ் நூல்களை மொத்தமாக நூலகத்திற்கு கொடையளிக்கலாம் இது குறைந்தபட்ச கோரிக்கை தான். விருப்பம் உள்ள நண்பர்கள் 9042461472 என்கிற எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பலாம்.
யாவரும் பப்ளிஷர்ஸ் வரும் ஆண்டில் கூடுதலாக இரண்டு imprint brandகளைக் கொண்டுவருகிறது. அறிவிப்பதே உற்சாகம் தரக் கூடிய செய்தி என்றாலும் அது குறித்த செய்தி மிக விரைவில்.
இந்த இதழில் ஒரு கவிதை கூட இடம்பெறாமைக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறும் கூட. அதே சமயம் கணிசமான நல்ல கதைகள் அணிவகுத்திருக்கின்றன. மீண்டுமொருமுறை படைப்பாளர்களுக்கும் பங்களித்தவர்களுக்கும் எமது நன்றி.
இப்படிக்கு
ஜீவ கரிகாலன்
ஆசிரியர்