சம்பத் ஜி
(உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் குறு நாவலை முன் வைத்து)
அன்பு பூக்கிற நிலம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அதன் வாசம் ஒன்று போலத்தானே இருக்க முடியும். அன்பு தன் அசலான நிலமறிந்து பற்றி தன்னை படர்த்திக்கொண்டேயிருக்கிறது. ஓசையற்று தத்திப்பறக்கும் வண்ணத்துப் பூச்சியைப்போலவே வெகுஎளிதாக. ஒட்டுதலும் பின் உதறுதலும் என தழும்பேறி நிற்கிறது வாழ்வு. மனம் காலியாவதற்கான விதி அறிந்தும் கூட அதற்கான மன ஒப்புதல் இல்லை. வாசங்களின் திறப்பில் திளைக்கிறது மனம். கழுவக்கழுவ கூடிக்கொண்டே போகும் நறுமனக் கமழ்ச்சிதான் காதல். யாவருக்குமே தொடரோட்ட வாழ்வில் இடை நிறுத்தத்திற்கான கையசைப்பு வாய்க்கிறது. அது இளைப்பாறுதலுக்கான நிழல் மாத்திரமல்ல. நமக்கான திசைகளை தெளிவாக்குகிற தருணம். காலத்தின் கையசைப்பையோ இடைநிறுத்தத்தையோ கூர்ந்து பார்க்காமல் மிகுவாழ்வின் பாய்ச்சலில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு. பாம்புகளும் கூட தன் முற்றிய வாழ்வின் அடையாளமாய் ரத்தினங்களை கக்குகிறது. மனிதன் என்ற உயிரி மட்டும்தான் ரத்தம் கக்கிச் சாகிறான். ஞானக்கூத்தில் காதலென்பது ஒரு காட்சி மட்டுமே. ஆனாலும் இக்காதலின் மையத்திலிருந்துதான் பரிபக்குவங்கள் யாவுமே விரிகிறது.
வாழ்வின் மூன்று முக்கிய இடைநிறுத்தங்களில் இறங்கி இளைப்பாறல் கொள்ளாது தனது தீராத ஆற்றாமையை பேசுகிறது உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் என்ற நாவல். “ என் நினைவுகள் உறங்கும் இடத்தில்தான் இப்போது அவர் வசித்து வருகிறார்” என்ற இந்நாவலின் முதல் வரியே இந்நூலின் அடிச்சரடை நமக்கு அறிவித்து விடுகிறது. ”மகிழ்ச்சியாக வாழும் எல்லா குடும்பங்களும் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கிற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன. “ என்று டால்ஸ்டாயின் அன்னா கரினினா நாவல் தொடங்குவதைப் போலவே அந்தரங்க விசாரிப்போடு இந்த நாவலும் தொடங்குகிறது. நாவலெங்கும் போதாமையின் வெப்ப அலைவு ஊடாடியபடியே இருக்கிறது. இழந்த காதலின் ஆற்றாமையில் தரைக்கும் அந்தரத்திற்குமான ராட்டினத்தின் மாயச்சுழற்சியில் அலைவுறுகிறது இந்நாவல். இவரது சுயசித்திரத்தையே தனது அனுபச்செழுமையால் புனைவாக்கியிருக்கக் கூடமோ என்று ஆழ்ந்துவிடுமளவு முற்றிய எழுத்துகளோடு நகர்கிறது நாவல்.
எழில்முகத்தையும் கூட கோட்டோவியமாக மாற்றிக் காட்டுகிற வல்லமை காதலின் இழப்புக்கு நேர்கிறது. அந்த கருங்கோடுகளை வண்ணங்களால் பூர்த்தி செய்துவிடத்தான் எத்தனை பொய்த் தூரிகைகள். இவர்கள்தான் தன் பாதுகாவலின் பொருட்டு எத்தனை சவால்களை அணிய வேண்டியிருக்கிறது. ஆராதனா தனது அலுவலக கைப்பையில் அத்துனை அத்தியாவசியங்களையும் அடைத்துச் செல்லும் போது கூடவே ஸ்க்ரூடிரைவரையும் எடுத்து செருகிச் செல்கையில், அதற்கு தன் மகள் கேட்கிற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லாமல் போகிறது. இத்துனை பெண்ணியத் தளர்விலும் ஒரு பெண் ஆணை நம்பாமல் ஆயுத்தைத் தானே நம்பவேண்டியிருக்கிறது என்பதை நுட்பமாக பேசுகிற இடம் இது. எதற்கும் ஒத்துப்போகிற காதலை ஒற்றைத் துரோகம் ஒவ்வாமையாக மாற்றிவிடுகிறதுதானே. பிரிந்து போன இணையின் தொலைபேசி மறுமுனை உரையாடலும் கூட மரணத்தின் வலியை ஒத்தது என்கிறார்.
பூக்கள் நறுமனத்திற்கானது மட்டுமே புசித்தலுக்கானது அல்ல. காதலும் கூட அப்படித்தான். அது வசீகரத்திற்கு மட்டும்தானா. காதல் எல்லா சடங்குகளையும் புறந்தள்ளி விடுகிறது. அதில் திருமண பந்தமும் அடக்கம்தானோ. இணையரானதும் கொண்டாட்டத்தின் பெருவெளி தானாகவே மறைந்துவிடுகிறதே. கொண்டாட்டாத்தில் மட்டுமே அன்பைத் தேடுவோரின் தட்டையான தோல்வியிது. காதலும் காமமும் வெகுளியின் உபரி என்பதை மறுத்தபடியே இருக்கிறது மனம். “நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது”. என்ற சச்சிதானந்தன் வரிகள்தான் எவ்வளவு இயல்பூக்கம் கொண்டது. துரோகத்தின் ரத்தக்கரை மீது சயனித்தபடியேதான் கலவியின் நினைவுகளை பரிமளமாய் பருகிக் கொள்ள முடிகிறது இவரால். கொதி நிலையின் ஊடாகவே ஒரு நறுமனப்பரவலும் நகர்கிறது. இந்த வினோத மனநோய்க்கான மாற்றீடுகளையும் தன்னியல்பிலேயே தருகிறார். தன் காயங்களை தானே நக்கி ஆற்றிக் கொள்கிற வேட்டை மிருகமாய் இழப்பின் வடுக்கள் சதா அழைத்த படியேதான் இருக்கிறது. ஆனாலும் அன்பின் அடுத்த பாய்ச்சலுக்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறது மனம்.
சராசரிகளுக்கும் ஒரு கலைஞனுக்குமான காதல் முற்றிலும் வெவ்வேறானவை. கலைஞனுக்கு காதலில் ஒரு துளிதான் வாழ்வாதாரம். சராசரிகளுக்கோ வாழ்வாதாரத்தில் ஒரு துளிதான் காதல். இப்பிறவியில் காதலுக்கும் கலைக்கும் மட்டுமே தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்து வாழ்பவர் ஆராதனாவின் அப்பா. “ துயரம் ஒரு குற்றம். ஒரு சிறை. ஒரு வினோத மனப்பதிவு. நான் அந்த சாம்பல் கித்தானிலிருந்து எழுந்தாகிவிட்டது ஒரு தாளைபோல” என்று அன்னா அக்மதோவாவின் வரிகளில் வசிக்கும் ஒரு ஆழ்ந்த ஓவியர் ஆராதனாவின் அப்பா. பொங்கியெழும் பேரலையை கூட தன் வார்த்தைப் பரிவால் ஒற்றைக்குமிழாய் மாற்றி உடைத்துவிடும் வல்லமை கொண்டவர் அவர். தன்னை அறிதல் மட்டுமே சிறந்த அறிவு என்றும், மகளின் அல்லல் குறித்து “பாம்புடன் ஒரே குடத்தில் இருக்க நேரிடும் வாழ்க்கை அமைந்துவிட்டால் அதிலிருந்து விலகி விடுவதுதான் புத்திசாலித்தனம்” என்று பொறுப்பான வழிகாட்டுதலை கூறுவார்.
அலைகளை பூசிய படியேதான் அலையற்ற மனத்திற்கு ஏங்குபவள் ஆராதனா. தன் முதல் திருமணம் முறிவில் முடிகிறது. மகரந்தங்கள் நிறைந்த இளமையை காயடித்துக் கதறுவதில் என்ன அறமிருக்க முடியும். வெக்கையேறிய அவளது வாழ்வை மழையாய் நனைக்கிறான் இரண்டாவதாய் இணைகிற வருண். தீவிர இலக்கிய போக்குள்ளவன் வருண். வெகுஜன ஊடகப்பணியிலோ ஆராதனா. ”தான் விட்டுப்போகும் படைப்புகள் எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒரு எளிய பார்வையாளனை சென்று சேர்வதே தனக்கு போதுமான அங்கீகாரம் என்ற நிறைநிலை கொண்ட படைப்பாளி. இப்படியான ஆழ்ந்த களைஞனோடுதான் அன்பினால் மிக மிக இறுக்கமாக மூச்சு முட்டுமளவிற்கு பிணைப்பில் வாழ்கிறாள் ஆராதனா. ”பிறந்து மலரும் பூவினுள் புகுந்து மறுமுறை உடல் பருகுவோம்” எனும் உன்மத்த பிணைப்பு. அவனால் உடலின் அத்துனை புலன்களும் சுறுசுறுப்படைந்தன என்கிறார். வருணின் அன்மை ஆராதனாவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டேயிருந்தது. “கண்ணா மூச்சு விளையாட்டில் காணாமல் போகிறவர்கள் கொஞ்ச நாளில் கருப்பையின் வழியே வீடு திரும்புகிறார்கள்” என்ற வெய்யிலின் கவிதை வரிகளைப் போலவே காதல்மனத்தின் ஆற்றாமையை பூர்த்தியாக்குகிற சில ஜென்மாந்திர உறவுகளும் மாயமாய் வாய்த்துவிடுகிறது. அப்படி வாய்த்தவன் தானோ வருண் என்றே திளைக்கிறாள். அதுவும் நிலையற்ற திளைப்பாகிறது. அது பிரசன்னமான உறவல்லவா வந்த வேகத்தில் வரத்தோடு சாபத்தையும் செருகிவிட்டு மறைகிறது. வருணின் தீவிர இலக்கிய பித்தமும் ஆராதனாவின் வெகுஜன ஊடகப் போக்கும் முரண்படுகிறது. தீவிர இலக்கியவாதியெனினும் அதீத உடைமயுணர்வு கொண்டவனாகவே இருக்கிறான் வருண். பழைய காயத்திலேயே புதிய ஆயுத்ததை செருகிவிட்டு தன் குழந்தையோடு பிரிகிறான் வருண். “ வாலிப வெறியில் என் வாழ்க்கைத் தூணை இடித்து என் மீதே வீழ்த்திக் கொண்டேன் “. என்று ரசூல் கூறியதைப்போலவே ஆராதனா சடங்கான பற்றுதலில் மீளவும் பலியாகிறாள். அரைத்தூக்க பிதற்றல்தான் காதல்மொழி என அறிவு அறிந்தும் கூட மனம் மட்டும் வியந்து கொண்டேயிருக்கிறது. துரோகத்தின் ரத்தக்கறை மீது சயனித்தபடியேதான் கலவியின் பரிமளத்தை பருகிக் கொள்ள முடிகிறது. உடலுக்குள் கனவா. கனவுக்குள் உடலா என பகுக்க முடியாத பித்தம். உறவறுந்த பதைப்பின் ஆற்றாமை படைப்பெங்கும் உடாடியபடியே இருக்கிறது. “ ஒருவரை உள்ளபடி அவராகவே ஏற்றுக்கொள்வதுதான் உச்சகட்ட அன்பு” என்றும் கூறுகிறார். இந்த அலை மனதை “ நினைவுகள் மனதில் உறங்கும் நித்யத்துயில் என்கிறார் நூலாசிரியார் உமார்பார்வதி.
நூலெங்கும் ஒரு அசட்டையான தத்துவச் சிரிப்பு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. பித்தத்தோடு அலையும் சித்தனின் ஒவ்வொரு காலடித்தடத்திலும் ஞானம் பூத்தெழுவதைப் போலவே நூலெங்கும் கவித்துவம் பூத்த படியே நகர்கிறது. தான் சுருளி அருவியில் குளித்துத் திரும்பும் போது திடீரென ஒரு சித்தர் தோன்றி, திருநீரு இட்டு ஆற்றுப்படுத்தி, மூச்சைக்கவனி என்று ஆசீர்வதித்து மறைகிறார். நிறங்களால் மெருகூட்டப்பட்ட நாட்களின் நினைவும், ஊழியின் வாதையும் இணைந்து நகர்கிறது. திட்டமிடலற்ற புனைவாகவே இந்நூலை அணுக முடிகிறது. இது ஒரு தன்னுணர்ச்சிப் புனைவு. இவரிடம் எவ்வகை குறுக்கீடுமற்ற ஒரு ரகசிய புனைவுச் சுகம் துலங்குகிறது. ஒரு படைப்பு அசலான தன்னம்சத்தில் மட்டுமே நிறைவடையும். படைப்பை ஒட்டாத உபரி அம்சங்கள் இதில் ஏதுமில்லை. ”காரணம் தெரியாத புறக்கணிப்பு மரணத்தைவிட கொடுமையானது” என்கிறார். அதேசமயம் “ மிஞ்சி மிஞ்சி போனால் ஏமாற்றுவார்கள், புறம் பேசுவார்கள், துரோகம் செய்வார்கள். செய்துகொள்ளட்டும்” என்றும் அதிர்வற்ற வாழ்வின் அணுகலை கூறுகிறார். காதல் மனத்தின் பொதுப்புத்தியை பால் பேதமற்று அலசுகிறார். உடலின்பம் வெகு நிச்சயமாக ஆன்மாவுடன் தொடர்புடையது என்று நம்புகிறார். வசீகரமான பட்டு நெசவினூடாக திடுமென துயரின் ஒரு கறுப்பு இழையையும் ஓட விடுகிறார். வாழ்வின் பல்சக்கரங்களில் நசுங்குவோருக்கே மனஅடுக்குகளை நுட்பமாக அணுக முடிகிறது. “எதன் பொருட்டும் என்றும் நான் அதிகம் ஏங்குவதில்லை. எது நம்மை விட்டு போகிறதோ அது உண்மையில் நமக்கு தேவையெனில் நிச்சயம் திரும்ப வரும். இல்லையெனில் அது நமக்கானதல்ல என்பதை சிறு வயதிலேயே புரிந்து கொண்டேன். வெயிலோ நிழலோ, குளிரோ, மழையோ அக்கணம் எதுவோ அதன் தன்மைக்கு ஒத்துப்போவேன். என் பிரியத்துக்குரிய அப்பாவைப்போலவே” என்றும் வாழ்வின் ஒவ்வொரு இடறலின் போதும் தன் தந்தையின் வார்த்தைகளே வலிமை சேர்க்கின்றன என்று உறுதி படுத்துகிறார். உன்னதமான வாழ்வை நூலெங்கும் மிக எளிதாக அணுகுகிறார். “ சிலவற்றிடம் வாழ் நாள் முழுவதும் நாம் குட் பைக்களை சொல்லிக்க்கொண்டுதான் இருக்க நேரிடும். ஈகோ அத்தகைய ஒன்று” என்று ரமணமகரிஷியின் கர்வப்பொசுக்கலை தனக்கேயான கொண்டாட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார்.
தன் இருத்தலின் ஆழத்திலிருந்த புதிர்மைமையை புலர்வாக்கித் தந்திருக்கிறார். பாழ்நிலத்தின் வெக்கையிலிருந்த படியே பழ ரசங்களை நமக்கு பரிசளிக்கிறார். விடுபடலற்ற முத்தம். விசையுறு காமம். பிரிவின் கொடுந்தொலைவு. காதலின் பிரும்மாண்டம். என இவரது இயல்பான கவிமொழி இப்புனைவை வெகுஅழகியலோடு மெருகேற்றுகிறது. காதலைத் தொலைத்தவர்களுக்கு இந்நூலினூடே அதை மனதோடு மீட்டுத்தருகிறார். நித்தியமான வாழ்வில் நமக்கான இடைநிறுத்தங்கள் மட்டுமே வாழ்வை உயிர்ப்பிக்கிறது என்கிறது உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் என்ற இந்நாவல். தமிழ் கூறும் நல்லுலகில் இழந்த காதலர்களுக்கான காதலை மீட்கிறது இந்நூல். இது யாவரும். காம். வெளியீடாக வந்துள்ளது.
***
சம்பத்.ஜி
7904781902
sampathnregs@gmail.com