Thursday, March 28, 2024
Homesliderகுடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் - ஒரு பார்வை

குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் – ஒரு பார்வை

கார்குழலி

ன்று காலை தோழியொருவர் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்ற துணுக்கைப் பகிர்ந்துகொண்டபோது அது குறித்து மேலும் சில தகவல்களைத் தேட முற்பட்டேன். பெண்கள் நலனுக்கு வலுசேர்க்கும் நிகழ்வு என்பதோடு 2017-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற நாற்பது வயது இளைஞரான ஜெசிண்டா ஆர்டர்ன் இயங்கும் விதமும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டுவரும் முயற்சிகளும் ஏற்கனவே மனதுக்கு நெருக்கமாக இருந்ததும் ஒரு காரணம்.

வெளிப்படையாகப் பேசினாலும் மூடிமறைத்து வைத்தாலும் குடும்ப வன்முறை என்பது யாராலும் மறுக்கமுடியாத அன்றாட நிகழ்வாகவே பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நான்கில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார் என்றும் குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்பட்டாலும் அதில் 85 சதவீதத்தினர் பெண்கள்தான் என்றும் அமெரிக்க நாட்டின் தொழிலாளர் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 65 சதவீத அலுவலகம் மற்றும் பணியிடங்களில் குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று பன்னாட்டு மனித வள மேம்பாட்டுச் சங்கமான (SHRM) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல், உள்ளம், பாலியல் எனப் பல வழிகளில் ஒருவர் வன்முறைக்கு ஆளாகலாம் என்றாலும் எந்தச் செயலெல்லாம் வன்முறை என்ற வரையறைக்குள் அடங்கும் என்பது குறித்த தெளிவு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கும் பொதுமக்களுக்கும் இருப்பதில்லை என்பதும் உண்மை. தொடர்ந்து வன்முறை குறித்த விவாதங்களும் அறிவுறுத்தலும் பொதுவெளியில் நிகழ்ந்தால் மட்டுமே இந்தத் தெளிவு பிறக்கும். இப்படிக் குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வும் தெளிவும் இல்லாத ஒரு உலகில் பாதிக்கப்படும் பெண்களுக்காகச் சட்டம் இயற்றும் அரசாங்கங்கள் ஜான் எஃப் கென்னெடி சொன்னதுபோல  உண்மையிலேயே ‘மக்களுக்காக மக்களால் ஆன அரசு’ என்பதில் சந்தேகமில்லை.

முதலாவதாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பெண்கள் குடும்ப வன்முறையைச் சமாளிப்பதற்காக எடுக்கும் விடுப்பினால் வேலையை இழக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பொதுவாகவே அலுவல் அதிகமாக இருக்கும் சமயத்தில் எந்த நிறுவனத்திலும் ஆண் பெண் என யாரொருவரும் விடுப்பு எடுக்க எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. சொல்லப்போனால், குடும்பச் சூழ்நிலையினால் வேறு வழியின்றி சில நாட்களுக்கு விடுப்பை எடுக்கும் பெண்கள் பணிக்குத் திரும்பிவரும்போது அவர்களின் வேலை பறிபோயிருக்கும் பரிதாபமான சூழல்தான் பல முன்னேறிய நாடுகளிலும் இருக்கிறது. இப்படிக் குடும்பத்தில் வன்முறைக்கு ஆளான பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றிப் பணியிடத்திலும் பெருத்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

அது மட்டுமில்லாமல், பெண்களை வன்முறைக்கு ஆளாக்கும் கணவர்களோ வேறு நெருங்கிய உறவினர்களோ அவர்கள் தங்களைவிட்டு விலகாமல் இருப்பதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்; அவற்றுள் முதன்மையானது அவர்கள் அலுவலக வேலையில் இருந்து நீக்கப்படவேண்டும் என்பதாகும். இதற்காகப் பணியிடத்திற்குச் சென்று ரகளை செய்வது, இரவு முழுவதும் தூங்கவிடாமல் சண்டைபோடுவது மூலம் பகல்நேரத்தில் வேலையில் கவனச் சிதறல் ஏற்படவைப்பது, வேலைக்குப் போகும் நேரத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் ஆதரவு வட்டத்தைக் குலைப்பது போன்ற நெருக்கடிக்கு இந்தப் பெண்களை திட்டமிட்டு உட்படுத்துவதாகக் கூறுகிறார் ஜோன் மெயர் என்ற அமெரிக்கக் குடும்ப நல வழக்கறிஞர் . குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவாவது தன் உதவியை இந்தப் பெண்கள் நாடவேண்டும் என்று குடும்ப வன்முறையாளர்கள் நினைக்கிறார்கள். தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினால் இந்தப் பெண்கள் தங்களைவிட்டு விலகமாட்டார்கள் என்பதே இவர்களின் கணிப்பு.

கூடவே, பெரும்பாலான திருமணங்களிலும் ஆண்-பெண் உறவுகளிலும் உடல், உளவியல் கொடுமைகளோடு கூடவே பொருளாதார சிக்கல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் பெண்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் கணவர்களோ உறவினர்களோ சுருட்டிக்கொள்வதோடு இருவருக்கும் பொதுவான வங்கிக் கணக்கு இருந்தால் அதை முடக்கி விடுகிறார்கள் குடும்ப வன்முறையாளர்கள். இதனால் வன்முறை நிறைந்த உறவில் இருந்து விலகும்போது பெண்களின் கையில் எந்தச் செலவுக்கும் பணமின்றி நிர்க்கதியாக நிற்கிறார்கள். குழந்தைகளுக்கான அடுத்த வேளை உணவை வாங்கக் கையில் காசில்லை என்றால் வீட்டைவிட்டு வெளியேறும் முடிவு தவிடுபொடியாகிவிடும் அல்லவா. வன்முறை நிறைந்த மணவாழ்வைவிட்டு விலகுவதற்குப் பொருளாதாரத் தற்சார்பு வலுசேர்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே இந்தப் பெண்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது என்பது இன்றியமையாததாகிறது.

அடுத்ததாக, எப்பொழுது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்ற சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்குக் குடும்ப உறவில் சிக்கல் இருப்பதைப் பற்றி மேலதிகாரியிடம் பேசத் தயக்கம் இருக்கும். பல நேரங்களில் தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு தானே காரணம் என்ற குற்றவுணர்வு மேலோங்கி இருப்பதால் பணியிடத்தில் அவர்களுக்கு ஆதரவான விதிமுறைகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் குறித்து மேலதிகாரியிடம் பேசத் தயக்கம் இருக்கும். ஆனால், பாதிக்கப்படும் எல்லாப் பெண்களுக்குமான சட்டமாக ஒரு நாட்டின் அரசாங்கத்தால் இயற்றப்படும்போது தங்கள்மீது அக்கறை காட்டுவதோடு தாங்கள் படும் வலி உண்மையானது என்று மற்றவர்கள் நம்புகிறார்கள் என்ற உணர்வு நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது; கூடவே வன்முறையாளர்களின் மனதிலும் சின்ன பயம் ஒன்று ஏற்படுகிறது.

ஆகவே இப்படியொரு விடுப்பைச் சட்டமாக இயற்றுவதால் மட்டுமே நடைமுறைப்படுத்தும் கட்டாயத்தை நிறுவனங்களுக்கும் அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சாதகமான பணிச் சூழலையும் ஏற்படுத்தித் தர முடியும். உலகிலேயே முதன்முதலில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பணியிலிருந்து சுமார் பத்து நாட்கள் விடுப்பு வழங்கும் சட்டத்தை 2004-ஆம் ஆண்டில் இயற்றியது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாராளுமன்றம். அதற்கு அடுத்தபடியாக, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்குக் குறைந்தபட்சம் பத்து நாட்கள் பணியிலிருந்து விடுப்பு வழங்கும் சட்டத்தை 2018-ஆம் ஆண்டில் இயற்றியது நியூசிலாந்து பாராளுமன்றம். 2018-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் 63க்கு 57 என சாதகமான வாக்குகள் பெற்று இந்தச் சட்டம் வெற்றிபெற்றது. இந்த இரு நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவும் கனடா மற்றும் அமெரிக்காவில் சில மாகாணங்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி விடுப்பு வழங்கும் சட்டத்தை இயற்றி இருக்கின்றன. விடுப்பு எடுத்தால் வேலை என்னாகும், மேலதிகாரியிடமும் மனித வள மேம்பாட்டு அலுவலரிடமும் என்ன காரணத்தைச் சொல்வது என மனஉளைச்சல்படாமல் வன்முறையிலிருந்து விலகிச் செல்லத் தேவையான அவகாசத்தைப் பெண்களுக்குக் கொடுக்கிறது இந்தப் பணி விடுப்புச் சட்டம்.

நியூசிலாந்தில், வன்முறை செய்யும் துணைவர்களிடமிருந்து விலகிச் சென்று தானும் குழந்தைகளும் பாதுகாப்பாகத் தங்கப் புதிய வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும் காவல் துறை மற்றும் நீதிமன்றத்தின் உதவியைப் பெறவும் வன்முறை செய்யும் துணைவரைவிட்டு விலகும் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தவும் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையென்றால் தகுந்த ஆதாரத்தோடு இன்னும் அதிகமான நாட்களுக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக எல்லாப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் விடுப்பு நாட்களுடன் கூடுதலாக இந்தப் பத்து நாட்கள் வழங்கப்படுகின்றன. கூடவே இரண்டு மாத காலத்துக்குப் இவர்களின் பணிநேரத்தையும் மாற்றியமைத்துக் கொள்ள இந்தச் சட்டம் வசதியளிக்கிறது. 

பணி நேரத்தில் நெகிழ்வு என்பது ஏற்கனவே ஒரு சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் BPO-க்களிலும் நடைமுறையில் இருக்கும் தற்காலிக ஏற்பாடு. இது என்ன ஏற்பாடு என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்தால் இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவரும். இந்த ஏற்பாட்டின்படி, பணியாளர்கள் அவர்கள் பங்குபெற வேண்டிய கூட்டங்களில் கலந்துகொள்வதோடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளையும் குறித்த நேரத்தில் முடித்துவிட்டால் போதும், ஒரு நாளின் எந்த 8 அல்லது 9 மணி நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்துக்குச் சென்றோ வீட்டில் இருந்தபடியோ வேலை செய்யலாம். அதிலும் சில சமயம், கூட்டம் நடக்கும் நேரத்தில் வேறு அதிமுக்கியமான சொந்த அலுவல் இருக்கிறதென்றால் கூட்டத்தை வேறு நேரத்தில் நடத்துமாறும் தங்கள் குழுவினரிடம் கேட்டுக்கொள்ளலாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டம் நடைபெற்றே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் கூட்டத்தை வீடியோ பதிவு செய்துவிட்டால், அதைப் பார்த்துக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்துவிடுகிறேன் என்று கேட்டுக்கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடியைச் சந்திக்கும் நேரத்தில் பணிநேரத்தில் நெகிழ்வு என்பது தனிப்பட்ட மற்றும் அலுவலகப் பணி இரண்டையும் சமாளிக்கப் பெருமளவில் உதவுகிறது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கூடுதலான உதவியாக இருக்கும் ஏன், பெருங்கொடையாகக் கூடத் தோன்றும்  என்பதில் சந்தேகமில்லை.

நியூசிலாந்தின் இணையதளத்தைப் பார்க்கும்போது, குடும்ப வன்முறை பணி விடுப்பை நடைமுறைப்படுத்துவது குறித்துத் தெளிவான வரையறைகளை அந்த நாட்டு அரசு வகுத்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பணியிடங்களில் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளுக்குக் குடும்ப வன்முறை பற்றிய புரிதலும் நிறுவனங்கள் இந்தப் பிரிச்சனையை எதிர்கொள்ளும் பணியாளர்கள் அதைச் சமாளிக்க உதவும் விடுப்பு குறித்த கொள்கைகளையும் தெளிவாக வரையறுக்கவேண்டும் என்கிறது இந்தச் சட்டம். மேலதிகாரிகளிடமும் மனித வள மேம்பாட்டு சக பணியாளர்களிடமும் தன்னுடைய பிரிச்சினையை எடுத்துக்கூறவும் தேவையான ஆதரவையும் பெற பாதிக்கப்பட்டவர்கள் அவமானமும் குற்றவுணர்ச்சியும் இன்றி அவர்களை அணுகவும் ஏற்ற வகையில் சூழல் ஏற்படுத்தவேண்டும். குடும்ப வன்முறையை தனிப்பட்ட பிரச்சினை என்றோ சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்றோ ஒதுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் கொள்கைகளை நிறுவனங்கள் வகுக்கவேண்டும்.

நம் நாட்டில், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், இந்து விதவைகள் மறுமணச் சட்டம், உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம், மகப்பேறு நலச் சட்டம் என்று பெண்களின் நலனைக் காக்கவும் உரிமையைப் பேணவும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் இந்தச் சட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியா போன்ற பெரிய நாட்டில் குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் அதற்குச் சட்ட ரீதியான தீர்வைத் தாங்கள் தேடவில்லை என்றும் கூறியுள்ளனர். சொல்லப்போனால் யாரிடமும் இதுகுறித்துப் பேசக்கூட இல்லை என்பது தெரியவருகிறது. அதையும் மீறி குடும்பத்தாரிடமும் நெருங்கிய உறவுகளிடமும் இதுகுறித்துப் பேசினாலும் குடும்பப் பிரச்சினையைப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சட்ட நடவடிக்கை எடுத்தால் வெளியே தெரிந்து குடும்ப மானம் போய்விடும் என்ற அவமானவுணர்வு தான் மேலிடுகிறது என்றும் தெரிய வருகிறது. இதுபோன்ற தனிநபரின் எண்ணம் சார்ந்த மனத் தடைகளையும் சமுதாயத் தடைகளையும் ஓரளவுக்காவது களைவதற்குக் குடும்ப வன்முறையைச் சமாளிக்கப் பணியிடத்தில் கூடுதல் விடுப்பு போன்ற சட்டங்கள் பயன்படுகின்றன. தான் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் இந்த சௌகரியமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வளவு பெரிய தைரியத்தை ஊட்டும்.

பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் அரசாங்கங்கள் தற்போது கொண்டுவந்திருக்கும் குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் மட்டுமின்றி அதுபோன்ற மனிதநேயம்மிக்க, பெண்களைப் பரிவுடன் அணுகும் முன்னெடுப்புகளும் சட்டங்களும் பரவலாக எல்லா நாடுகளிலும் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு, உண்மையான அதிகாரம் பெண்களிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் அரசுகள் அமையும், ஒட்டுமொத்த மானுடத்தையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular