காமிக்ஸ் என்றால் என்ன?

0

கிங் விஷ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களை பதிவு செய்தனர். இதன் பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் எழுத்துருக்கள் மூலமாக எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாகப் பதிவு செய்வது சுலபமாகிவிட்டது. இப்படியாக ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சம்பவங்களை பதிவு செய்யும் இரண்டு வழிமுறைகள் நம்மிடையே இருந்து வந்தது.

மனிதனின் முதல் தகவல் சேமிப்பு வழிமுறையான ஓவியங்கள் மூலமாக கதையைச் சொல்லும் பாணிக்கு பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: “ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையை சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது கருத்து.

“பார்வையாளனிடமிருந்து ஒரு அழகியல் சார்-எதிர்வினையைத் தூண்டவோ அல்லது ஒரு தகவலை பரிமாறுவதற்காகவோ வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சித்திரங்களின் தொகுப்பே காமிக்ஸ்” என்று ஸ்காட் மெக்ளவுட் கூறுவார்.

சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம். ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள் பெரும்பாலும் எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும். ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.

இந்தக் கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.

Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.

I

i) கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது

II

ii) இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது

iii) எண்ணங்களாக மனதில் நினைப்பது

IV
III


iv) உரக்கப் பேசுவது / கத்துவது – அலறுவது

இதிலேயே கூட சில வரையறைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாகக் கதையைச் சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.

வசனங்கள் இல்லாமல் சித்திரங்களால் மட்டுமே கதையை சொல்லும் முறைதான் ஆரம்பத்தில் இருந்தது. சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த காமிக்ஸ் தொடர்களாகக் கருதப்படும் ஆரம்ப கால ப்ரின்ஸ் வேலியண்ட், ஃப்ளாஷ் கார்டன் போன்றவை இந்த பாணியிலேயே உருவாக்கப்பட்டவை. இதற்கு பிறகு, வசனங்களையும் இணைத்து முழு வடிவம் பெற்றது காமிக்ஸ் என்ற இந்த தளம்.

(காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வழியாக) நாம் ஏன் படிக்க வேண்டும்?

கதைசொல்லியாக மாறுதல்: நாம் ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கும்போது, நாமே ஒரு கதை சொல்லியாக மாறுகிறோம்.

காமிக்ஸ் புத்தகங்கள் (பேனல்கள் Panels) கட்டங்களால் ஆனவை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கதை நகரும்போது, இந்த இரு கட்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியை நமது சிந்தனையின் கற்பனைக்கு என்று விட்டுவிடுகிறார்கள் படைப்பாளிகள். உதாரணமாக டார்ஜான் ஒரு மரத்தின் விழுதைப் பிடித்து தொங்குவதாக ஒரு கட்டத்தில் இருக்கும். ஆனால், அடுத்த கட்டத்தில் அவர் இன்னொரு மரத்தில் இருப்பார். ஆக, இந்த இரண்டு கட்டங்களுக்கு இடையே டார்ஜான் எப்படி சென்றிருப்பார் என்பதை நாம்தான் கற்பனை செய்து, யூகித்துக்கொள்ள வேண்டும்.

காமிக்ஸ் திறனாய்வாளர் ஸ்காட் மெக்ளவ்ட் தன்னுடைய Understanding Comics என்ற புத்தகத்தில் காமிக்ஸ் புத்தகங்கள் நமது மூளைக்கு புரிந்துகொள்ளும் பயிற்சியை அளிக்கிறது என்று சொல்கிறார். மேலும், காமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக படிப்பதுதான் ஆகச்சிறந்த பங்கேற்றல் வாசிப்பு முறை (Participatory Reading) என்கிறார். ஏனென்றால், காமிக்ஸ் என்பது வெறும் ஓவியங்கள், கட்டங்கள், வசனங்களை மட்டும் கொண்டதல்ல.

ஒரு காமிக்ஸ் நமக்கு என்ன சொல்ல வருகிறது? என்பதைப் புரிந்து கொள்வதோடில்லாமல், சில வேளைகளில், அந்த காமிக்ஸ் சொல்ல வரும் அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, ஒரு குறிப்பிட்ட கதையை நாம் படிக்கும்போது அது சார்ந்த விஷயங்களையும் சேர்த்து உட்கொண்டு, ஒரு ஒட்டுமொத்த பேக்கேஜ் ஆகவே காமிக்ஸை நாம் படிக்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பை எளிமையாக்குதல்: ஒரு வரலாற்று புத்தகத்தையோ, அறிவியல் கோட்பாட்டையோ படிப்பது போரடிக்கும். ஆனால், அதுவே காமிக்ஸ் வடிவில் இருந்தால், எளிமையாக வாசித்து விடலாம்.

சில ஆய்வுகளின் முடிவில் வழக்கமாக படிப்பதையே சிரமமாக நினைப்பவர்களுக்கு, அந்த விஷயத்தை காமிக்ஸ் வடிவில் கொடுத்தால், வாசிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக, படிப்பதையே வெறுப்பவர்கள் கூட காமிக்ஸ் மூலமாக அதே விஷயத்தைச் சொன்னால், அதைப் படிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

இதைத்தவிர, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூட அவர்களுக்கு போரடிக்கும் சப்ஜெக்ட் என்று வந்துவிட்டால், படிக்க மாட்டார்கள். வரலாறு, அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றை போரடிக்கிறது என்று படிக்காமல் ‘ஸ்கிப்’ செய்து விடுவார்கள். அவர்களுக்கு அதே விஷயத்தை காமிக்ஸ் வடிவில் கொடுத்தால், தொடர்ச்சியாக அவற்றைப் படிப்பதில் நல்ல ஆர்வம் உருவாகிறது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தன்னம்பிக்கையை வளர்க்கும்: காமிக்ஸ் படிப்பது, அதில் ஈடுபடுத்திக் கொள்வது நமது குறைகளைக் கடந்து, நம்மை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும்.

இயல்பிலேயே உள்முகச் சிந்தனையாளராக இருப்பவர்கள் (Introvert), கூச்ச சுபாவம் கொண்டவர்கள் என்று பல வகையினரும் தங்கள் குறைகளைக் கடக்க, காமிக்ஸை ஒரு பரிசலாகப் பயன்படுத்தி உள்ளனர். உலக அளவில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன். டேன் ஹர்லி மிகவும் மந்தமானவர் என்று அழைக்கப்பட்டார். 8 வயது வரையில் The என்ற வார்த்தையையே அவரால் படிக்க முடியாது.

ஆனால், அவரது நண்பர் ஒருவர் ஸ்பைடர்மேன் காமிக்ஸை அவருக்குப் பரிசளித்தார். அதன்பிறகு, ஹர்லியின் வாழ்க்கை அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டில் ரஜினி முன்னேறுவதைப் போல மாறிவிட்டது. இப்போது அவர் உலகின் தலைசிறந்த அறிவியல் சார்-பத்திரிகையாளராக அறியப்படுகிறார்.

சிறுவயதிலேயே Dyslexia மற்றும் Attention deficit hyperactivity disorder (ADHD) கொண்டிருந்த டேவ் பில்க்கி, தொடர்ந்து காமிக்ஸ் மற்றும் ஓவியங்களின் மூலமாக தன்னுடைய பிரச்சனைகளைக் கடந்து, இன்று ஒரு படைப்பாளியாக மாறி இருக்கிறார். 30 மொழிகளில், 7 கோடி புத்தகங்கள் விற்பனை என்று பல சாதனைகளைப் படைத்து வருகிறார் டேவ்.

சிந்தனையைத் தூண்டுதல்: தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போலத்தான் படிப்பதும் ஒரு வகையான பொழுதுபோக்கு என்று நீங்கள் நினைத்தால், அந்த முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.

யாராவது காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தால், “பொம்மை போட்ட புத்தகத்தைப் பார்க்கிறான்” என்று இன்றும் தமிழகத்தில் கிண்டல் செய்பவர்கள் உண்டு. காமிக்ஸ் என்பது வெறும் பொம்மைப் புத்தகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல. காமிக்ஸ் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் காட்சிகள் வாயிலாக, இடம்-சார்ந்த மற்றும் கருத்து சார்ந்தவற்றை உள்வாங்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு கதையாக கிரகித்துக்கொள்பவர்கள்.

அந்தப் புரிதலுக்கு Multiple Modalities என்று பெயரிட்டு இருக்கிறார் ஆய்வாளர் டேல் ஜேக்கப்ஸ். ஆக, காமிக்ஸ் படிப்பதால் நமது சிந்தனை வலுப்படுகிறது. ஒருங்கிணைந்த புரிதலுக்கான திறன் கூடுகிறது.

மூளைக்கு நல்லது: விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், படிப்பதனால் மூளையின் செயல்திறன் கூடுகிறது.

2013ஆம் ஆண்டு, அட்லாண்டாவின் இமோரி யுனிவர்சிடியின் Centre of NeuroPolicy-ஐச் சேர்ந்த நான்கு பேர், தீவிர ஆராய்ச்சியின் முடிவில், படிப்பதனால் மூளையின் நியூரான் நெட்வொர்க் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்று விளக்கினார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில், ஒரு நாவலைப் படிக்கும்போது எப்படி மூளை சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்கள்.

அது மட்டுமல்ல, படித்து முடித்து, சில நாட்கள் கழித்தும் மூளையின் செயல்திறன் அடுத்த கட்ட லெவலிலேயே இருப்பதையும் நிரூபித்தார்கள். வழக்கமாக, தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்கு இது ஓகே. ஆனால், படிக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்களுக்கு? அதுதான் காமிக்ஸ் இருக்கே, பாஸ்? உடனே இன்றே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.

காமிக்ஸ் படிப்பது எப்படி? எந்த ஒரு படைப்பையும் போல, காமிக்ஸ் புத்தகங்களை படிப்பதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. வழக்கமாக புத்தகம், நாவல் படிப்பவர்கள் காமிக்ஸ் படிக்கும்போது, அதில் இருக்கும் எழுத்துகளை மட்டும் படித்துவிட்டு, கடந்து சென்று விடுவார்கள். ஆனால், அது சரியான படிக்கும் முறை அல்ல.

ஓவிய வாசிப்பு: எழுத்து சார் படைப்புகளில் இருந்து காமிக்ஸ் வேறுபடுவது, ஓவியங்களாலேயே. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் 60 முதல் 75% வரை ஓவியங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஓவியங்களைப் படிக்கும் பழக்கத்தை, ஆமாம் – படிக்கும் பழக்கத்தைத்தான் – வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓவியங்களைக் கூர்ந்து கவனித்து, நிதானமாகப் படிக்க வேண்டும்.

இலக்கணம்: நல்ல காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒரு கதாசிரியர், ஓவியர் வெறுமனே ஒரு ஓவியத்தை வரைந்து விடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருந்து திடீரென்று வேறு கோணத்தில் ஒரு ஓவியம் இருக்கிறதென்றால், அதற்குப் பின்னர் ஒரு காரணம் இருக்கும்.

ஒவ்வொரு படைப்பாளியும் தனது வாசகர்களுடன் ஒரு பகடி ஆட்டம் ஆடுகிறார். தனது படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் பேசுபொருளைக் கடந்து வேறொரு கருத்தை முன்வைப்பார். அதை Decode செய்யும் வாசகன், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து படைப்பாளிக்கு இன்னமும் நெருக்கமாகிறான்.

  1. Understanding Comics By Scott McCloud (1994) William Morrow Books
  1. Clare Snowball (2005) Thesis on Teenage Reluctant Readers & Graphic Novels
http://www.yalsa.ala.org/yals/yalsarchive/volume3/3n4_summer2005.pdf#page=45
  1. Mary Jane Heaney (2005) A Sure bet for your Library
http://www.valkyrie22.com/library/LIS%20763/Assignments%20-%20LIS%20763/Final%20Paper%20-%20Graphic%20Novels/new%20articles%20-%20not%20printed/graphic%20novels%20a%20sure%20bet%20for%20your%20library.pdf
  1. Dan Hurley – Award Winning Science Journalist http://danhurley.com/
  2. Dav Pilkey – Artist & Creator http://www.pilkey.com/
  3. Dale Jacobs (2007) Comics as Means of Teaching Multiple Literacies https://www.scribendi.com/advice/reasons_to_start_reading_comic_books.en.html
  4. Neuro Scientific Research By Berns, Blaine, Pye & Prietula Emory University, Atlanta (2013) http://online.liebertpub.com/doi/pdf/10.1089/brain.2013.0166

கிங் விஷ்வா – கிங் விஷ்வா தமிழ் மொழியில் காமிக்ஸ் பரவலை உருவாக்கும் கனவோடு நண்பர்களுடன் சேர்ந்து கிங் விஷ்வா எடுத்து வரும் முயற்சிகள் குறிப்பிடப்படவேண்டியவை. கணிசமான எண்ணிக்கையில் காமிக்ஸ், கிராஃபிக் நாவல், சிறார் இலக்கியம் குறித்து பல்வேறு ஊடகங்களில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here