உருவக அரங்கின் மூலகர்த்தா Paolo Frere
ரூபன் சிவராஜா
அகுஸ்ரூ போல் பரீட்சித்து, வளர்த்தெடுத்த இந்த உத்தியின் மூலச்சிந்தனை Paolo Frere (1921 – 1997) என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு அறிஞரிடமிருந்து உந்தப்பெற்றதாகும்.
Paolo Frere இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கான கற்பித்தல் முறைமை (Pedagogy of the oppressed) என்ற அடிப்படையில் வடிவமைத்திருந்தார்.
இம்முறைமையின் அடிப்படை ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் திறந்த உரையாடல்களை மையப்படுத்திய தொடர்பாடல் என்பதாகும். அறியாமை, செயல் மந்தமுடைய, ஒடுக்கப்பட்ட சூழலைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் அவர்களைக் கேள்வி எழுப்பும் செயலூக்க மனிதர்களாக மாற்றுவதும் அவற்றுக்குத் தூண்டுவதும் இந்தக் கற்பித்தல் முறைமையின் அடிப்படை. 19ம் நூற்றாண்டின் கற்பித்தல் முறைமையில் (Pedegogy) அதிகம் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் அவர்.
பார்வையாளருக்கும் ஆற்றுகையாளருக்குமிடையில் நெருக்கம்
மக்கள் அரங்கு, உருவக அரங்கு, கட்புலனாகா அரங்கு ஆகிய Boal-இன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முதன்மை இலக்கு பார்வையாளர்களை அரங்கில் ஈடுபாடு மிக்க அங்கமாக்கிப் பங்கேற்கச் செய்தலாகும். பங்கேற்பு மூலம் மாற்றம் நோக்கி உரையாடவும் தீர்வுகள் சார்ந்து சிந்திக்கவும் செயற்படவும் வைத்தலாகும்.
பார்வையாளர்களுக்கு நெருக்கமான பேசுபெருள் கையாளப்படுதல் வேண்டும் என்பது நிபந்தனை. அவை தனிமனித – குடும்ப – சமூக வாழ்வியல் சிக்கல்களை மையப்படுத்தியிருக்கும். அதன் பேசுபொருள் பார்வையாளர்கள் நேரடியாக அனுபவித்த சம்பவங்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. ஆயினும் அவர்களின் பங்கேற்பினைத் தூண்டுவதாக அமையும்.
கையாளப்படும் சம்பவங்கள், பேசப்படும் சிக்கல்களைப் பார்வையாளர்கள் தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நெருக்கமானதாக – காலப்பொருத்தமும் சமூகப்பிரதிபலிப்பும் உடையதாக உணரும் வகையில் அரங்கு அமையும். அதாவது இவ்வகை அரங்க ஆற்றுகையில் பங்கேற்கும் கதை மாந்தர்களை, பேசப்படும் விடயங்களைப் பார்வையாளர்கள் தம்முடன் அடையாளப்படுத்தும் வகையில் – தொடர்பினை உணரும் வகையில் இவ்வகை அரங்கங்கள் அமையும்.
பேசுபொருள்
தனி மனிதர்கள், குடும்பம், சமூகம், பொதுநிறுவனம் தொழில் நிறுவனத்தின் முரண்பாட்டுச் சூழல்களை, சிக்கல்களை அடையாளம் காண்பதற்கும் இந்த உத்தி கையாளப்படக் கூடியது.
உருவக அரங்கம் வார்த்தைகளற்ற குறியீட்டுத்தளத்தில் இயங்குவது. ‘Forum Theatre – மக்கள் அரங்கு’ யதார்த்த அரங்கின் உத்திகளை அதிகம் உள்ளடக்கியதாக அமையும். மரபார்ந்த நாடக, யதார்த்த நாடகக் காட்சிகளோடு (Realistic play) உருவக அரங்கின் உத்தியை உள்ளடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. குறியீட்டு மற்றும் உறைநிலைக் உருவகங்களைக் காட்சிபூர்வ உத்திகளாகப் பொருத்தமான இடங்களில் உள்ளீடு செய்ய முடியும்.
ஐரோப்பிய சூழலில் பயன்பாடு
ஐரோப்பிய சூழலில் சமூக ரீதியான ஒடுக்கு முறைகள், புறக்கணிப்புகளிலும் பார்க்க, உறவுகளுக்கிடையிலான அக முரண்பாடுகள் பற்றிய அரங்க வெளிப்பாடுகளுக்கு உருவக அரங்கம் கூடுதல் பொருத்தப்பாடு மிக்கதாக Boal உணர்ந்தார்.
‘மக்கள் அரங்கு’ எல்லா வகையான புற முரண்பாடுகளுக்கும் பொருத்தமானதும் விண்ணப்பிக்கக் கூடியதுமான அரங்கச் செயலாக்க வடிவம். அதேவேளை உருவக அரங்கம் அக முரண்பாடுகளுக்கான உரையாடல், மாற்றம், தீர்வு நோக்கிய செயலாக்க வடிவமாகக் காணப்படுகின்றது. முரண்பாடுகளை அடையாளம் காண்பது – அது சார்ந்து உரையாடுவது – விவாதிப்பது – தீர்வினைக் கண்டடைவது என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் அடிப்படையான படிமுறைகள்.
தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் மனரீதியானதும் நடைமுறை வாழ்வியல் சிக்கல்கள், சவால்கள், ஒடுக்குமுறைகள், குடும்ப உறவுச் சிக்கல்கள் குறித்து மனம் திறந்து உரையாடுவதன் மூலம் மாற்றங்களையும் தீர்வுகளையும் நோக்கிய உந்துதலைப் பெற முடியும்.
குடும்ப உறவுச் சிக்கல்களை, குறிப்பாக இருவருக்கிடையிலான உறவு முரண்பாடுகளை உருவக அரங்க வடிவத்தின் சாத்தியப்பாடுகள் ஊடாக அணுகுவதன் மூலம், அதனை வேறு கண்ணோட்டத்தோடு, முரண்பாட்டுச் சூழலை அனுபவித்த, அதனுடன் சம்மந்தப்பட்ட இருவரின் அனுபவக் கண்ணோட்டத்திற்கு மாறான இன்னொரு பரிமாணத்தில் பார்ப்பதற்கு வழிகோலும். இந்த உத்தி, திருமண பந்த உறவுகளுக்கிடையிலான முரண்பாட்டுச் சூழலில் அதிகம் கையாளப்படக் கூடியது.
புதிய மாற்றங்களை உள்வாங்குகின்ற ஆற்றுகை வடிவம்
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்க வடிவம் என்பது இறுக்கமான நிரந்தர விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வடிவம் அல்ல. அடிப்படையில் பாரம்பரிய அரங்கியல் சட்டகங்களைத் தகர்க்கின்றதும் புதிய வடிவ, உத்தி மாற்றங்களையும் உள்வாங்குகின்ற ஆற்றுகை வடிவம். புதிய புதிய பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் இடமளிக்கின்றது. அப்படிக் கட்டுப்படுத்துவதென்பது ஆற்றுகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீதான ஒரு வகை ஒடுக்குமுறை என்பது Boal-இன் கருத்து. ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம் அதன் வடிவத்திலும் உத்திகளிலும்கூட ஒடுக்குமுறையற்றதாக இருவழித் தொடர்பாடலுக்குரிய போதிய வெளிகளைக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவரது நிலைப்பாடு.
இந்த அரங்கியல் வடிவங்களின் கூறுகளும், உத்திகளும் வரையறைகளும் நடைமுறையில் நிகழ்த்திப் பார்க்கப்பட்ட பரிந்துரைகள் மட்டுமே. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றியளித்திருக்கின்றன. சமூக மாற்றம் நோக்கிய அரங்க முன்னெடுப்புகளுக்குரிய உந்துதல் வழிகாட்டியாக கொள்ளக் கூடியவை. விதிமுறைகள், வரையறைகள், உத்திகளில் கால, சூழல், தேவைகளுக்கேற்ற மாற்றங்களை உள்வாங்கி முன்னெடுப்பதற்குரிய வெளி இவ்வடிவங்களுக்குள் உள்ளன. நடைமுறையிலும் வெவ்வேறு அரங்கியல் நெறியாளர்கள், அரங்க செயற்பாட்டுக் குழுக்கள் Boal-இன் இவ்வடிவங்களைத் தழுவி பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வடிவ மாற்றங்கள், புதிய உத்திகள் மேலதிகமாக இணைப்பதையும் நீக்குவவதையும் மேம்படுத்துவதையும் விரும்பி ஊக்குவித்திருக்கின்றார்.
***
ரூபன் சிவராஜா
தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது. தற்பொழுது வசிப்பது நார்வேயில்.