Saturday, March 22, 2025
Homeபழைய பதிவுகள்இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.

இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.

 

-வ.கீரா

1

பெங்களூரின் நடுமத்தி அந்த இடம். வானம் பற்றி எறிந்து அணைந்த நிலையில் புகைமூட்டமாக இருண்டிருந்தது. அதன் வெண்ணிறங்கள் புகையோடு கலந்து பசையாக நிலமெங்கும் தொங்கிக் கொண்டிருந்தது பனி.சாலையோர தூங்கு மூஞ்சி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, பனியில் நனைந்து அந்தரத்தில் தனித்தனியே நின்றிருந்தன வெண்ணிற நிழல் போல. நிலமெங்கும்  பனியின் கவிழ்ப்பு படர்ந்திருந்தது.வாகனங்களில் வருவோர் போவோரும் அதிர்ந்து பார்த்துச் சென்றார்கள். திடுதிப்பென நடந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.பல வண்டிகள் என்ன செய்வதென தெரியாமல் குவிந்து பின் கிடைத்த வழியில் ஒதுங்கி திட்டியபடியே சென்றார்கள், சிலர் மஞ்சளில். பல வண்ணக்கோடுகள் வரைந்த அந்த லாரியை சுற்றி வந்தார்கள்.கிளினர் பலகையை விட்டு தொப்பென குதித்தோடிய மூர்த்தி லாரிக்கு அடியில் வேகமாக உடம்பை தளர்த்தி படுத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது. இது எளிதான பிரச்சனையில்லை. லாரியின் கீயர்பாக்ஸ் துண்டாக தரையில் விழுந்து வண்டியின் நகர்வுக்கு ஏற்ப பத்து அடி துரம் தார்ச்சாலையை கிழித்து உழுதபடி தார்க் கட்டிகளோடு மோதி திகைத்து நின்றிருக்கிறது.அவ்வளவுதான்.

ஓசூரிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல லாரிகள்,  இளங்கருமை புகுந்த பெங்களுரின் தூங்குமூஞ்சி மரங்கள் இலையுதிர்த்து பரவிக்கிடக்கும் உள்சாலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். ஞாயிறுகளில் கூட வாகன நெரிசலில் விழிப்பிதுங்கும் பல சாலைகளற்ற இந்த நகரத்தில், ராஜஸ்தானிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அறுக்கப்பட்ட நீள நீளமாக மார்பிள்களை ஏற்றியபடி 5 நாட்களை கடந்து வந்த “தென் பாண்டியன்” தனது செயலை இழந்து விட்டது. இந்த லாரிக்கு வைத்த பெயர் “தென் பாண்டியன்”. வண்டிக்கு குலப் பெயர் ஒன்றுண்டு. முப்பத்ததைந்து ஆயிரம் எடை பொருட்களை சுமக்கும் “டாரஸ்” என்கிற பத்துச் சக்கரம் பூட்டிய தேர். இதன் பாகன் ஒட்டுனர் ராமசாமி, வெள்ளை கெளபாய் குள்ளாயை ஒரு பக்கம் மடக்கி தலையில் இருத்தியிருந்த கர்நாடக காவலரிடம் வகையாக சிக்கியிருந்தான். அவர் ஒடி வந்த வேகத்தில் தொப்பையும் தொப்பியும் கழண்டு விழுந்துவிடலாம் எனத் தோன்றியது. இடுப்பு பெல்ட்டை இருமுறை இறுக்கிக் கொண்டபடியே ராமசாமியிடம் ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்.ராமசாமி ஓட்டுனர் இருக்கையை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் “சார்..சார்..சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். மூர்த்தி பதட்டமாக ராமசாமியை தேடி ஓடி வந்தான்.

“ராமா. கீர் பாக்ஸ் எறங்கிடுச்சு”

“அய்யோ”

ராமசாமி தலையில் கை வைத்ததை பார்த்து  காவலரே தனது வேகத்தைச் சுருக்கிக் கொண்டார்.

பொதுவாக இந்தியாவின் எந்த பாகத்திற்கும் லாரிகள் சுமையேற்றி செல்லும் வழியுண்டு. வடமாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வண்டிகள் மதராசி காடியாகவும், ஆட்கள் மதராசிகளாகவும் தான் தெரிவார்கள். இந்த மதராசி காடிவாலாக்கள் பஞ்சாபியர்களைத் தவிர்த்து அனைத்து இந்தியபாக மக்களாலும் வெறுக்கப்பட வேண்டியவர்கள். இராவண மிருகங்கள் என்பதான மனநிலையே இருக்கும். இந்த கணக்கு தென் இந்திய பகுதிகளுக்கு. ஆனால் டிஎன் என்கிற எண் கொண்ட வண்டிகள் என்றால் கன்னடர்களால், குறிப்பாக கர்நாடக காவல்துறை, ஆர்.டி.ஓ க்களால் கேவலமாக நடத்தப்படுவது, மிகக் கடுமையாக அடிப்பது, பெரும் பணத்தை கறப்பது என்பதான மனநிலை படிமமாக படர்ந்திருந்தது. ஆனால் இந்தக் கர்நாடக காவலர் அப்படியில்லை. உடனடியாக பணியில் இறங்கினார். பின்னால் அலறும் பலவகை வண்டிகளின் எரிச்சலான ஒலியெழுப்புதலும் கூடுதல் காரணமாக இருக்கலாம். அது கொஞ்சம் பள்ளத்தை நோக்கிய சாலையாக இருந்ததால் வேலை சுலபமானது.

மூர்த்தி வண்டியின் கேபினிலில் ஏறி தார்ப்பாயை கட்டும் கயிற்றையும் வண்டிச்சக்கரம் கழட்டும் இரும்பு கடப்பாரையையும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு அடியில் மீண்டும் அடியில் பாய்ந்தான். மூர்த்தியின் பதட்டத்தை  கவனித்தபடி நோஞ்சானாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் உடன் வந்து கைக் குடுத்தான்.வண்டியின் அடிப்பகுதி செம்மண் படிந்து இரத்தம் காய்ந்து வெடிப்பு விட்டது போல அங்கங்கே உடைந்துவண்டியின் அடிப்பாகங்கள் தெரிந்தன. ஆல்மட்டி டேம் கட்டுகிற இடத்தினருகில் தான் கிட்டதட்ட நூறு கிலோ மீட்டருக்கு மேல் தார்ச் சாலை செம்மண் கோடாக நீண்டிருந்ததை நினைவுக்கு கொண்டு வந்தான் மூர்த்தி.

வண்டியின் வேக அளவை கூட்ட,குறைக்க பயன்படும் விசையின் தொடக்கம் லாரியின் கேபினில் இருந்தாலும் அது பல்வேறு அடுக்குகளைக் கடந்து லாரியின் அடிப்பகுதியில் முதுகெழும்பைப் போல குழலாக நீண்டு பின் சக்கரத்தை இணைக்கும் தண்டில் மனித குண்டியை போல சட்டியாக குமிழ்ந்து கிடக்கும் கோளத்தில் தான் விசை மாற்றியின் இணைப்பு இருக்கும் அந்த கோளத்தின் உள் பகுதியில் இயந்திரங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்து விசையை மாற்றும் பொழுது கோளத்தின் இயந்திரங்கள் அதன் வேகத்தை ஏற்றி இறக்கி சக்கரத்தை வேகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும். அந்த இடத்தில் தான் தண்டு வடம் கோளத்தின் உள்ளிருக்கும் பாகங்களை இழுத்து தரையில் போட்டிருந்தது. நோஞ்சான் மனிதன் அடியில் அமர்ந்து பலம் கொண்டு கடப்பாரையால் கீர் ராடை நிமிர்த்தித் தூக்க, அதை வடக்கயிறு கொண்டு காலால் உந்தி வெறி கொண்டு இழுத்துக் கட்டினான் மூர்த்தி.

தரையில் இருந்து தண்டு வடம் சற்றே மேழெழுந்து நிற்க, அவசரமாக ராமசாமி வண்டியை இறுக்கி பிடித்து நகரவிடாமல் வைத்திருக்கும் காற்று  விசையை விலக்கி , தடையில் காலை மேலே தூக்க, வண்டி லேசாக குலுங்கியது. வண்டியை ஒட்டி வேடிக்கை பார்த்த கும்பலை பின்னால் இருந்து தள்ளச் சொன்னார் காவலர். வண்டி பள்ளத்தில் மெதுவாக நகர, ஒடிப்பானை இடது பக்கம் ஒடிக்க, வண்டி மெல்ல யானை தன் முகத்தை திருப்பி கடைக்குள் இருக்கும் வியபாரியிடம் பிச்சையெடுப்பது போல நடைபாதையோரம் நகர்ந்தது.

“வரலாம்..வரலாம்..ரைட்..”

இடது பக்கமிருந்து சொல்லிக் கொண்டு வந்த மூர்த்தி “ரைட்ல ஒடி..ரைட்ல ஒடி..” எனக் கத்த, தேரை நிலைக்கு கொண்டுவந்தான் ராமசாமி. கூடியிருந்த கூட்டம் மலையை முடியைக்கொண்டு இழுத்தது போல ஆரவாரித்தது.காவலர் வெற்றிப் பெருமிதத்துடன் ராமசாமியை கீழே இறக்கினார். ராமசாமிக்கு புரிந்தது. காவலர் மக்களைக் கலைந்து போகும்படி சொல்லிவிட்டு, ராமசாமியை ஏற இறங்கப் பார்க்க, ராமசாமி அவரை வண்டியின் முன் பக்கம் சாடை காட்டி அழைத்து, இருநூறு ரூபாயைத் திணித்தான். காவலர் சட்டென வாங்கி பேண்ட்டில் வைத்துக் கொண்டே கிளம்பினார்.

“ஓய்..இரைவரு..பெத்த ஆபிசரு..கம்மிங்..கம்மிங்…நீரு கோயிங்..கோயிங்…ஆவுனா,..”

ராமசாமிக்குத்  தலைவலிக்க ஆரம்பித்தது.ஜெய்ப்பூரிலிருந்து இந்த நடை வந்ததிலிருந்தே பிரச்சனைதான். பின்னத்தி வெளிச்சக்கரம் இரண்டு முறை ஆணியடித்து வழியில் வேலையைக் காட்டி விட்டது. உபரி சக்கரத்தைக் கழட்டி மாட்டி லாரியை கிளப்பி வந்தது பாடென்றால், மகாராட்டிரா சிற்றூரில் நாகாவிற்கு** போக்கு காட்டி ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கப் போய், பின்னால் விரட்டி வந்த ஆள் ஊரின் அடுத்த எல்லையில் மடக்கி தர்மஅடி கொடுத்ததுமில்லாமல் நூறு ரூபாயை பிடுங்கிவிட்டார்கள் வீர சிவாஜியின் மிச்ச சொச்சங்கள். இப்பொழுது லாரியின் கீர்பாக்ஸ் .தொல்லை. தொல்லை மேல் தொல்லை

ராமசாமி குழம்பிக் கிடந்தான். மூர்த்தியை வண்டியில் இருக்க சொல்லி விட்டு ,நாமக்கல்லில் இருக்கும் முதலாளிக்கு வாடகை தொலைபேசி கடையில் இருந்து பேசி,விசயத்தை சொன்னான். முதலாளி ”ஓத்தாம்பாட்டை” அள்ளிவீசினார்.

வழக்கமாக டாரஸ்  லாரி ஏற்றும் எடை என்பது 16 டன் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் சட்டமிருந்தது. வடக்கே வண்டி போய் வர, ஒரு நடைக்கு  பதினைந்திலிருந்து பதினேழு நாட்களாகும். லோடு கிடைக்காவிட்டால் இன்னும் குடுதல் நாட்கள் கூட ஆகலாம்.பதினாறு டன் எடை ஏற்றினால் வழியில், பாலம், நாகா, ஆர்டிஓ, ஒவ்வொரு மாநில எல்லை, இடையில் காவலருக்கு அழுதது போக,ஏற்ற இறக்கமான டீசல் விற்பனை, பஞ்சர்,டிரைவர்,கிளினர் பேட்டா,லாரி புக்கிங் அலுவலக கமிசன்,லோக்கல் டிரைவர் பேட்டா,பாரம் ஏற்றுக் கூலி இறக்குக் கூலி,வண்டிக்கு ஒரு நடைக்கு ஒரு முறை செய்யப்படும் மேலோட்டமான சர்வீஸ், டயர் தேய்மானம் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் உழுதவன் கணக்கு தான் இந்த மோட்டார் தொழிலிலும்.தெரியாத பிசாசுக்கு பதில் தெரிந்த பேயே மேல் என்று தான் இந்த தொழில் ஓடிக்கொண்டிருகிறது.எப்பொழுதாவது விபத்து ஒன்று நிகழ்ந்தால் இந்தச்சிறு முதலாளிகள் தலையில்தான் துண்டு விழும். அதனாலேயே பல முதலாளிகள் வண்டி நாமக்கல்லினுடையது என்றாலும் ஹரியானா போக்குவரத்தில் முழு இந்தியா பதிவெண்ணை வாங்குவார்கள். ஹரியானா பதிவெண் என்றால் இருபத்தியெட்டு டன் வரை எடை ஏற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனாலும் வண்டி தமிழ்நாட்டினுடையது என அதன் தோற்றம் அடையாளம் காட்டும்.

லாரிகளில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கும். லாரிகளின் தனித்துவம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் எடை ஏற்றிக்கொள்ளும் அளவு கூட தேசிய இன மனதோடுதான் இருக்கும். ஹரியானா பதிவெண்ணுக்கு இருபத்தியெட்டு டன் ஏற்றும் நிலை இருந்தாலும் முதலாளிகளின் பேராசை ஓய்வதுமில்லை. ஒரே நாளில் உழைப்பால் உயரும் உத்தமர் கதைகள் அவர்கள் நிறையக் கேட்டிருப்பார்கள் போல. முத்பத்தியிரண்டு டன்னிலிருந்து முத்தியாறு டன் வரை ஏற்றி வரும்படி ஓட்டுனர்களிடம் அடம் பிடிப்பார்கள். இந்த அதிக கொள்ளளவு ஏற்றும் பொழுது வண்டி திணறும்,சில மாநில எல்லைகளில் தொந்தரவாகும்,கூடுதல் எடைக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை கறக்கவும் சில ஆர்டிஓ -க்கள் முயல்வார்கள். இதனால் சில மாநில எல்லைகளில் குறுக்கு வழியாக மாநில எல்லையை கடந்து வரும் சாகச நிகழ்வுகளும் இடம் பெறும்.

இத்தனையும் கடந்துதான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை.முதலாளியின் வழக்கமான இந்த திட்டுகள் பலகிப் போன ஒன்றுதான். ஆனால் கீர்பாக்ஸ் இறங்கியிருப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை. மெக்கானிக் வந்து சரி செய்தாலும் நாமக்கல் சென்றதும் மீண்டும் கழட்டி மாட்டும் வேலையில் மூன்று நாட்களை தின்றுவிடும்.பட்டறையில் பேசி விட்டு வருவதாகவும் பத்து நிமிடம் கழித்து பேசும்படி முதலாளி சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார். இப்பொழுது போல அந்த நாட்களில் அழைபேசிகள் இல்லை.

ராமசாமிக்கு பசி கண்ணை அடைத்தது.விடியற்காலை தாவணிக்கரை சின்னாற்றில் குளித்துவிட்டு,  தமிழர் கடையில் அடுக்கிய இட்லி, கரைந்து காற்றில் வெளியேறி விட்டது. அவ்வப்பொழுது குடித்த தேநீரும் தீர்ந்து நாவறண்டுக் கிடந்தது.பெங்களூரை தாண்டிப் போய் சாப்பிடலாம் என நினைத்து வண்டியை அடிச்சி விரட்டியும் 28 டன் எடையை “ஹ்ம்ம்..ஹ்ம்ம்..”என அரைத்து தேய்த்தபடி வண்டி உருண்டதும்,பெங்களூரின் உலகலாவிய நெரிசல் மாலை ஐந்து மணியை தின்று,ராமசாமியின் வயிற்றையும் செரிக்கடித்திருந்தது.

தொலைபேசிக்கடைக்கு அருகில் இருந்த தேநீர்க் கடையில் ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி ,களைப்பை போக்க முயன்று கொண்டிருந்தவன் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க,எதிரே வெண்ணையை உருட்டி தேனில் குழைத்து உருவம் நெய்தது போல ஒரு பெண் முறைத்தபடி நின்றிருந்தாள். அவள் முகத்தில் அந்நேரத்தில் சட்டி வைத்து வடை பொரித்து விடலாம்.அவ்வளவு கொதி நிலை. அழுக்கும்,கரியும் புரண்டு கிடந்த கைலியும்,காலர் கருப்பேறி பலநாள் ஆன சட்டையும் போட்டு, பரட்டைத் தலையுடன் நின்று வேகமாக முழுங்கிக் கொண்டிருந்த ராமசாமியை அவள் பைத்தியக்காரன் என பார்த்திருக்கக் கூடும். நடைபாதையில் நின்றிருந்த அவனை எப்படி நகரச் சொல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்க பத்திரகாளியாகி  நின்றிருந்தாள் அவள்.

ராமசாமி சட்டென நிமிர்ந்தவன் பதறி “க்கியா” என்றான். அவளுக்கு எதுவும் புரியவில்லை.அவளது கைகள் தானாகவே அவளது மூக்கை பிடித்துக் கொள்ள,ராமசாமி பதறி விட்டான்..

“ம்மோவ்..இது..கரி..காடி..மே..”

அவன் முடிக்கவில்லை.அவள் சட்டென கீழ் பகுதியில் இறங்கி ஓடி விட்டாள்.போகும்போது திரும்பி திரும்பிப் பார்த்தபடி பதட்டமாக ஓடினாள் அவள். ராமசாமிக்குப் புரிந்தது.சுற்றிப் பார்த்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. தாங்க முடியவில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசிக் கடையின் அருகில் சென்று எல்லோரின் பார்வையிலிருந்து முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றான்.

அழுக்கு லுங்கியும்,கரியுடலும் அவனுக்கு மோட்டார் தொழிலுக்கு வந்த பொழுது புதுசு. மலைக்கடை கிரசர்க்காரன் கிட்ட அடமானத்துக்கு மூன்றாயிரம் வாங்கி,கேணி மோட்டு நெஞ்சுமுட்டி மூத்த மகள் திருமணத்துக்கு சீரு செஞ்சது போக இரண்டு பன்னிக் குட்டி வாங்கி, ஆயித் தோப்புல விட்டுப்புட்டு,அரசு பாக்கெட் சாராயத்தை புருசனும் பொண்டாட்டியுமா இராப்பகலா குடிச்சதுல, குடல் வெந்து செத்துப் போனார் ராமசாமியின் அப்பா கூறார் சின்னான். ஆயித் தோப்புல ஊரார் பேண்டத பன்னித் திங்கும். திங்கற பன்னிக்குட்டிய மேச்சுக்கிட்டு, பன்னி விட்டை பொறுக்கி, எரு சேத்து வித்துக்கிட்டிருந்த ராமசாமியின் அம்மா கொசவட்டை , வேற வழியில்லாம கிரசர்க்காரன் கடனுக்கு, பன்னிக்குட்டியையும், எட்டு வண்டி பன்னி விட்டையையும் வித்துக் கொடுத்தார். வித்தும் தேறாம கடன் கழிக்க,கல்லுடைக்க போனார். குன்னுமேட்டு தெருவுல பாதி பேரு இப்படித்தான். கிரசர்காரன் கிட்ட கல்லுடைக்க போய் கடன் அடைச்ச பாடில்லை. பன்னிக் குடிசையை விட கொஞ்சம் உயமான குடிசைதான் குன்னு மேட்டுத் தெருவுல எல்லா வீடும். அம்மா  கொசவட்டை கல்லுடைக்க காலையில போனா நட்சத்திரம் பன்னிக்குட்டையில விழுகுற நேரத்துலதான் வருவார் .அசதிக்கு தக்க பாக்கெட்  சாராயமும் உண்டு.

பள்ளிக்குடம்னா ராமசாமிக்கு உயிர். எக்கேடு கெட்டாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகாம இருக்க மாட்டான். அதிலயும் சோத்துக்கு வழியில்லன்னாலும் பக்கோசு கடையில் “ரீகல் சொட்டு நீலம்” வாங்கி,பள்ளிக்கூடம் போட்டுக்கிட்டு போறவெள்ளை சட்டையை நீலம் போட்டு  “சொட்டு நீலம் டோய். ரீகல் சொட்டு நீலம் டோய்..” பாட்டெடுத்து கைரேகையெல்லாம் ஊதாவாக பள்ளிக்கு போவான் ராமசாமி. சட்டையில் பொத்தானுக்கு பதில் ஊக்கு குத்தியிருப்பாங்கறது வேற விசயம். அவ்ளோ சுத்தக்காரன்.

பன்னிக்குடிசையும்,பன்னிக்கூண்டும் நம்மள விட்டு போவனும்னா நல்லா படிக்கணும்னு சொன்ன அம்மா கொசவட்டையும் பத்தாம் வகுப்பை தொடும்பொழுது போய்ச் சேர, தம்பி இரண்டு பேருக்கும் வேற ஆளில்லை.திசை நாப்பதா இருக்கு, கல்லுடைக்கத்தான் போவனும்னு முடிவு செஞ்சப்பதான் மாக்கான் கைக் கொடுத்தார் அவனுக்கு. பேருதான் மாக்கான். ஆனா அந்த ஊருலயே கொஞ்சம் விவரமா பேசுறவரு அவருதான். அவரையும் பள்ளத்தெரு பொண்ண காதலிச்சு கட்டிக்கிட்டதுக்காக ஊரை விட்டு தள்ளி வச்சிருந்தாங்க அவரு உறமுறையை சேர்ந்தவங்க. ஆனாலும் மனுசன் கல்லு மாதிரி .இதே ஊர்லதான் இருப்பேன். இங்கதான் எம்புள்ள வளரும்னு நெஞ்ச நிமித்தி நின்னாரு மாக்கான்.

“என் கூட கிளினரா வாடா..உன் தம்பிங்க படிக்கட்டும்..படிப்பை வீட லாரி உனக்கு நல்லா சோறு போடும்”

மாக்கான் தான் ராமசாமியை நாமக்கல் கூட்டிட்டு வந்தார்.  ராமசாமி கிளினராக ஓடியபொழுதே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது இந்த அழுக்குதான்.அவன் அழுக்கை விட்டு ஓடனும்னு ஓடினாலும் அது விடாம அவன தொரத்துது. ராமசாமியும் குளிச்சி சுத்த பத்தமாதான் இருப்பான். என்ன குளிச்சாலும் வண்டியில ஏறி உட்காந்ததுமே அழுக்கு தானா..ஏறிக்கும்.ஆரம்பத்துல கொஞ்சம் வேதனைப்பட்டாலும் பழகிடுச்சி. இப்ப லாரிக்கு அவந்தான் டிரைவர்.காசுப் புழக்கம் நல்லா கையில புரளுது.ஆனா அழுக்கு அவன் கூடவே இருக்கு.

அந்த பொண்ணு பார்த்த பார்வை அவன் நெஞ்சை தச்சிடுச்சி. முள் தொண்டையில் சிக்கி விட்டது.

முதலாளி நாமக்கல்லில் இருந்து எதிர் வண்டியில் மெக்கானிக்கை அனுப்புவதாக சொல்லி அவர்களை காத்திருக்கும் படி சொல்லி விட்டார். மெக்காணிக் வந்து சேர்கிற வரை இங்குதான் என்பது புரிந்து விட்டது. மூர்த்திக்கு இரண்டு பன்வாங்கிக் கொண்டு போனான். மூர்த்தி அதற்குள் வண்டியின் முன்னும் பின்னும் பத்தடி தள்ளி கல் வைத்து வண்டியின் சூழலை சாலைப் பயணிகளுக்கு புரியும்படி உணர்த்தியிருந்தான். ராமசாமி தனது அழுக்கு சட்டைகளில் நல்லதை தேடித் தேடிப் பார்த்தான்.கிடைத்த இடத்தில் உடனே துவைத்து வைத்திருந்தாலும் மீண்டும் தானே கரியாகிவிடுகின்றன. எல்லாம் ஒன்று போலவே இருந்தது. தேநீர்க் கடை வழிமறிப்பில் நின்ற அவளின் நீள மூக்கு ஏனோ அவனை இம்சை செய்தது.

இரவுச் சாப்பாட்டுக்கு ராமசாமி போக வில்லை.மூர்த்தியை சாப்பிட்டு விட்டு ஏதாவது வாங்கி வரச் சொல்லிவிட்டான். வண்டியின் கேபினில் ஏறி தார்ப்பாய்க்கு மேல் படுத்து கடும்குளிரை போர்த்திக் கொண்டுவிழித்துக்கிடந்தான். அவனுள்ளத்தில் சிவகாமி வந்து போனாள். அவன் தெருவில் வசிக்கும் கருத்த பெருங்கண்ணி அவள். பணிரெண்டாவது படிக்கிறாள்.ராமசாமி ஒரு முறை ஸ்ரீநகரிலிருந்து ஆப்பிள் ஏற்றி திருச்சிக்கு வந்தான். வரும்வழியில் ஆலத்தூர்கேட்டை சொந்த ஊரான செட்டிக்குளத்திற்கு வண்டியை விட்டான். தெரு சில்வண்டுகள் லாரியைக் கண்டு மொய்த்துக் கிடக்க,பெருசுகள் வேடிக்கைப் பார்க்க, கிணற்றிலிருந்து நீர் இறைத்து வந்த சிவகாமியின் கற்றாழைக் கண், ராமசாமி சிறுவர்களுக்கு கொடுத்த ஆப்பிளையும் ராமசாமியையும் பார்த்தது.ராமசாமியின் கண்கள் சிரிக்க,சிவகாமியின் கண்ணிழுத்துக் கொள்ள, ஆப்பிள் கன்னிப் போய் விட்டது. ராமசாமியும் மடங்கி கிடந்தான் அவள் பார்வையில்.அவள் தான் அவனை இந்த பனிக் குளியலில் மிதக்க விட்டிருந்தாள்.

மூர்த்தி வாங்கி வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. குளிர் தெளித்த வாசலில் புள்ளிக்கோலமாக துளிகள் படர்ந்திருந்தன. ராமசாமியின் முகம் விரைத்து கிடந்த தார்ப்பாய்க்குள் அழுந்திக் கிடந்தது.

பன்றிகள் மூஞ்சை நீட்டிக்கொண்டு, அடர்ந்த கூர்முடிகளை சிலிர்த்தபடி வந்து முகத்தை ஆவேசமாக நக்கியபடி இருந்தது. அதன் கோரைப் பற்கள் ராமசாமியின் தாடையை தாங்கிப் பிடித்திருந்தது. நாக்கு சுழன்றபடி இருக்க, அந்த கூர் மூக்குப் பெண் அவன் முகத்தில் காறித் துப்பி,முரட்டுக் கண்களை அவன் உடலெங்கும் வீசினாள். அவை ஒன்று பலவாகி, அவன் உடலெங்கும் ஈக்களைப் போல மொய்த்து அழுக்குச் சட்டையை தின்று, அவன் அழுக்கு உடலைத் தின்று சதை, நரம்பு, குடல், குடலிலிருந்த பன்னையும் ஆவேசத்தோடு தின்று கொண்டிருந்தது.

மூர்த்தி ராமசாமியை எழுப்பினான். மெக்கானிக் ஒரு உதவியாளனோடு வந்திருந்தான். வேர்வையோடு மெக்கானிக் லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தான். சாலையின் இரைச்சல் கணக்கற்ற ஓநாயாய்களின் பெருங்குரலாக நீண்டு அந்த சாலையில் வழிந்தோடியது.முதல் நாள் அதே நேரத்தில் சரியாக கீர் பாக்சை தூக்கி மாட்டினான் மெக்கானிக் சிவா. வேர்வையும் அழுக்கும் அனைவரையும் நாராக்கி இருந்தது. பெரும் களைப்பு அனைவரின் முகத்திலும் வழிந்தோடியது. ஓசூருக்கு முன்பிருக்கும் கர்நாடக எல்லையில் வண்டி நடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர்த்தி ஓடினான். வண்டி சில கிலோ மீட்டர்கள் எரும்புச்சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தன. எல்லைக் கணக்காளரிடம் வண்டி எண் சொல்லி பதிவு போட்டு, அவர்களுக்கான வரும்படியை அளித்து விட்டு மூர்த்தி மெல்ல ஊர்ந்த வண்டியில் தொத்தி ஏறினான். ராமசாமி ஆவேசம் வந்ததைப் போல தமிழ் நாட்டு எல்லைக்கு குறுக்கு வழி சாலையான இராயக்கோட்டை வழியே செலுத்தினான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளாத அந்த அசந்த பொழுதில் சாலையின் புளிய மர மறைவிலிருந்து மோகினி வெளிப்பட்டாள். மாய மோகினிதான்.ராமசாமி அடித்த பிரேக்கில் அனைவரின் தூக்கமும் வண்டிக்கு வெளியே வீசப்பட்டது.

அகண்ட கண். அவள் சிவந்த வெற்றிலையை துப்பினாள். மெக்கானிக் உறுதியாக சொல்லிவிட்டான்.மெக்கானிக்குகளுக்கு மோகினிகள் அமைவது சிரமம். நேரம் காலமற்று மெக்கானிக்குகள் இரும்போடு பிணைந்திருப்பார்கள். எப்பொழுதாவது வெளியில் வந்தால் தான் உண்டு.சில நேரங்களில் உடல் சூட்டைப் போக்க ஆந்திரா செல்லும் வண்டிகளில் பயணித்து மோகினிகளிடம் வெப்பம்  வெளியேற்றுவார்கள். இந்த சாலையோர ஆந்திர மோகினிகள் பெரும்பாலும் இவர்களின் கரி படிந்த, வெளியேறவே முடியாத இந்தக் கருமையை அவர்கள் உள்ளன்போடு ஏற்றுக் கொள்வார்கள். உழைப்பவர்களின் வியர்வையில் குளித்து குளிப்பாட்டுவார்கள். கருமையை அள்ளி ஊடலோடும் கூடி களித்து இந்த உழைப்பாளிகளின் எண்ணம் ஏற்றுவார்கள். மோகினி வண்டிக்குள் ஏறி அமர்ந்து தேவ உலகம் பயணிக்கத் துவங்கினாள். வண்டியின் கேபினின் மெத்தையில் பின்பக்கமாக இருந்து மெக்கானிக்கின் கை அவளது உடலில் கரப்பானாக ஊர்ந்தது. பழுத்து தடித்து, கருப்பேறிய மெக்கானிக்கின் கை ஊர்வை அவள் செல்லமாக நெளித்து சிரித்தாள்.

ராமசாமி வண்டியோட்டியபடி அவளிடம் கேட்டான்.

“உம் பேரென்ன..”

“சிலுக்கு”

“எந்தூரு..?”

“மேலெருந்து வந்தா ரெண்டு மலை பிரியும்..மலைக்கு இடையில ரோடு போகும்…”

ராமசாமியின் மனக் கிடங்கில் எரிச்சல் சாணியாக அடித்தது. அவனது மனமெங்கும் நீள மூக்கு கீறியபடியே இருந்தது.

“..ஏய்..ஊரைக் கேட்டா கதை அளக்கிற..”

“யோவ்..கேளுய்யா..ரோடு போய் முட்டுற இடம் தொப்புளூர்..”

மெக்கானிக் முனகியபடி..

“அப்புறம்..”

“தொப்புளூருக்கு கீழ எந்தூரு…குழியூருதான்…யோவ்…கதை கேட்டது போதும் அந்த மரத்துக்கிட்ட நிறுத்து…”

மெக்கானிக் அவசரப் பட்டான். ராமசாமி அவள் முகத்தில் தன் முகத்தை தேய்த்தான். அவள் ராமசாமி சட்டையை பிடித்து இழுத்துப் போனாள். எல்லோரும் பதறி நின்றார்கள். மெக்கானிக்கின் கால் வழியே வெப்பம் பரவி ராமசாமியும் மோகினியும் போன திசையை தேடி அலைந்தது.

மரங்கள் மறைத்த வனம் அது. எந்த பறவைகளும்,விலங்குகளும் இடம் பெறாத வறண்ட பாலை மர வனம்.ராமசாமி அவளையே பார்த்தான். அவள் விருவிருவென அவனை இழுத்தாள். அவள் மூக்கு கூர்ந்திருந்தது.வெற்றிலைச் சிவந்து உதடு வெளித் தள்ளிக் கிடந்தது. பன்றிகள் மூஞ்சை நக்கின.அவள் மூக்கு கூர்ந்திருந்தது. பன்றிகள் முடியை சிலிர்த்தன.அவள் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அசூயை படர்ந்து அவன் உடலை ஊடுருவியது.ராமசாமி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் இழுத்தாள் வெறியோடு. நாக்கைக் கடித்தபடி அவள் மீது ஏறினான். அவள் ஆவேசமாக அவனை அணைத்தாள். இறுக்கி எழும்புகள் முறிந்துவிழுந்தன. அவனது தசையை, நரம்பை, குடலை, ஈக்களாக அவளது கண்கள் மொய்த்தன.

பன்றி, கிரசர் முதலாளி, அம்மா, சிவகாமி..அவள்..அவள்…பெங்களூரில் முறைத்த நீள் மூக்கு முகம்.அந்த முகம்…

ராமசாமி உடலை வளைத்து முருக்கேற்றினான். காலத்தின் அழுக்குகள் அவன் மீது கவிழ்ந்து அவனை மூழ்கடித்தன. பழமும் பாலும் பிசைந்து கொழகொழவென அவன் பிடறியில் ஊற்றி வழிய வழிய, உடலை தேய்த்து கரியை, நீல வண்ணத்தை, பச்சை திரவத்தை,வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் செல்லாத கோயிலின்  மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் குரல்களின் தீர்க்கம் ராமசாமியின் நகங்களினூடாக அவனது ஆன்மாவை கிழித்து வீசிக்கொண்டிருந்தன. ராமசாமியின் மேற்பற்களிலிருந்து இரு பற்கள் நீண்டன, மோகினியினிடையில் ஏறி அமர்ந்து நீண்ட நாக்குகளைக் கொண்டு ராமசாமி அவளது தேகத்தை நக்கத் தொடங்கினான். அவள் திணறி,திமிற வெறியோடு சொரசொரப்பான நாக்கினால் அவளின் தசைகளை ஒரே சுழட்டில் பிய்த்தெடுத்தான். மோகினி  அதிர்ந்து போனாள். அவள் மூர்க்கமான மனிதர்களை சந்தித்தவள் தான். உச்சமான அனுபவங்களை தாங்கிப் பழகியவள்தான். ஆனாலும் இது  குரூரம். அவளதுவாயிலிருந்து வெற்றிலை இரத்தமாக வழிய வழிய அவள் அலறத் துவங்கினாள. பலம் கொண்டு அவனை எட்டித் தள்ளி காடே அதிர இருளில் கதறியபடி உடைகளேதுமற்று அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

மெக்கானிக்கும், உதவியாளனும் மூர்த்தியும் வேகமாக அலறல் வந்த திசையில் ஓடி வந்தார்கள் . ராமசாமி நின்று கொண்டிருந்தான். அவனது முகம் சாந்தமாகியிருந்தது. எல்லாக் காலத்தின் அழுக்குகளையும் துடைத்துவிட்டிருந்தான். தனது உடலை பார்த்தான் கருமை ஒரு பூரிப்போடு கிளர்ந்து அவனை பார்த்து சிரித்தது.

“டேய்..ராமா இப்படிப் பண்ணிட்டியேடா…இனிமே. .நான் என்னடா பண்ணுவேன்…எந்த சந்துலடா வச்சுக்கறது…அப்படி அவ ஓடுற அளவுக்கு அவள என்னடா பண்ணுன… பாவம்டா..இது..”

மெக்கானிக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.நிதானமாக நடந்து சென்று லாரியில் ஏறி அமர்ந்து, ஹாரன் அடிக்க ஆரம்பித்தான் ராமசாமி.

 ***

(நாகா என்பது ஊராரால் தடுப்பு வைத்துவரும் வண்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்கும் முறை)

– வ.கீரா

தொடர்புக்கு : keeraaiyakkunar@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular