Wednesday, January 22, 2025
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ஆனந்த் குமார் கவிதைகள்

ஆனந்த் குமார் கவிதைகள்

தட்டான் பாடல்

குழல் விளக்கின் மேல்
தட்டான் வாசிக்கிறது
வெம்மையின் பாடலை.
‘இரவேயில்லை இரவேயில்லை’யென
உறிஞ்சுகிறது
ஒளியின் பாதையை

ஒருமுனை அருந்தி முடிய
வெளிவருகிறது
வெள்ளை பல்லியொன்று

தட்டான் சப்தம் மாற்றி
சுவர் மாற்றியது
புதிய குழல் புதிய பாடல்

அந்தப் பக்கம்
சாமி படத்திற்குள்
நுழைந்த பல்லி
இந்தப் பக்கம்
கடிகாரத்திற்குள்ளிருந்து
எப்படி வந்ததென
தட்டானுக்கு தெரியவேயில்லை.

*

மாபெரும் ருசி

இன்றும் எழுப்பியது
எப்போதும்
என்னை உண்ணும்
அதே பசி

என்னை விட
பெரிய ஒன்றை
விழுங்கும் கனவு

பருகப்பருக
மரத்தின் வாயிடை
ஒழுகியோடும் காற்று

எவ்வளவு உண்டும்
தூரிகை நாவினில்
எச்சிலூறும் வண்ணம்

வாய்மீற எறும்பொன்று
அரவணைத்தேந்தி நிற்கும்
ஒற்றை அரிசி

நிறைந்துவிடாமல்
பசியாற்றும்
மாபெரும் முலை

***


ஆனந்த் குமார் தொடர்புக்கு : ananskumar@gmail.com
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular