Thursday, March 28, 2024
Homeஇலக்கியம்3. முதலாளிக் குரங்கு

3. முதலாளிக் குரங்கு

  • முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 03
  • கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி தன் கால் சிலம்புடன் ஓரளவுக்கு தாராளமான ஒரு சங்கிலியால் ஒரு குரங்கை பிணைத்து வைத்திருந்தான்.

நல்ல வாட்டசாட்டமான அந்தக் குரங்கு எந்தவொரு பதட்டமும் இல்லாமல் அமைதியும் குறும்புமாய் மந்திரவாதியுடன் அலைந்து வந்தது.

பேயோட்டுவதில் கைத்தேர்ந்தவனான அந்த மந்திரவாதியிடம் பலரும் கேட்ட ஒரே கேள்வி

‘எதற்கு அந்தக் குரங்கை இப்படி சங்கிலியிட்டு வைத்திருக்கிறீர்கள்?’ என்பது தான்.

அதற்கு அந்த மந்திரவாதி அலட்டிக் கொள்ளாமல்,சங்கிலி போடவில்லை என்றால் அது தப்பித்து ஓடிவிடும் என்று பதிலளித்து வந்தான்.

இத்தனை அமானுஷ்யமான வேலைகளில் ஈடுபடுபவன் சொல்லும் பதில் இது இல்லையே என்று எவருமே முழுமுற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத பதிலாக அது இருந்தது.

ஒருமுறை மூன்று தம்பிகளுக்கு சேர வேண்டிய குடும்பச் சொத்தான தோட்டத்தில் ஒரு பேய் அமளிதுமளி செய்து வந்தமையால் மந்திரவாதி அதனை ஓட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டான்.

அதற்காக அவன் அந்த தோட்டத்திலேயே அம்மாவாசையிலிருந்து அம்மாவாசை தங்கப்போவதாக தெரிவித்து விட்டு வேலையைத் தொடங்கினான்.

விதவிதமான பழங்கள் கொண்ட அந்த தோட்டத்தில் அந்த குரங்கு அடைந்த பேரின்பம் சொல்லி மாளாது.

மந்திரவாதி மும்முரமாக பேயோட்டும் மாந்திரீகத்தில் ஈடுபட்டுவந்தான்.

திடீரென ஒரு நள்ளிரவில் அந்தக் குரங்கு மந்திரவாதியை சங்கிலியுடன் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஒரு மாமரத்தின் எதிரே சென்று நின்றது.

வெவ்வேறு விதமான குரங்கு வாய்ப் பகிரா சத்தங்களை எழுப்பியது.

பிறகு அந்த மந்திரவாதியையும் சேர்த்து சங்கிலியை தலைக்கு மேல் சுழற்றத் தொடங்கியது.

அந்தரத்தில் வட்டம் அடித்துக் கொண்டே முழுத் தோட்டத்தையும் நோட்டமிட்ட மந்திரவாதியின் கண்களுக்கு திடீரென ஒவ்வொரு சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஒரு பேய் தெரிந்தது .

அவன் கைப்பிடிக்கும் நெருக்கத்தில் அது வந்தவுடன் அதனை ஒரே பிடியாக பிடித்துக் கொண்டு மந்திரவாதி அதனுடன் சுழலத் தொடங்கினான்.

அவர்கள் இருவரும் பல குரங்குகள் சேர்ந்து நடத்திய அடர்ந்த வனத்தின் நடுவில் அமைந்த உணவகத்தில் ஒரு மேஜையில் எதிரெதிராக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

‘எப்போ தோட்டத்த வுட்டு போறதா உத்தேசம்’ என்று மந்திரவாதி கேட்க, பேய் வாயில் கோழிக்கறியுடன் முழித்தது.

*******

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – [email protected]

ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular