Friday, March 29, 2024
Homesliderமூன்றாம் பாகம்

மூன்றாம் பாகம்

சிவகுமார் முத்தய்யா

உடம்பெங்கும் வலி கூடி அழுந்தினாலும் இதனை விடவும் பதினாறு வயது சிறுவனிடம் சிக்கிக்கொண்டது குறித்தே பெரும் அவமானமாக உணர்ந்தான் முத்துசாமி. இரவு முழுக்க நல்ல கவனிப்பு. இது நாள் வரை சந்தேக வழக்குகளில் மட்டுமே சிக்கிக்கொள்வது- ஓரிரு வாரங்களில் அல்லது சில மாதங்களில் சிறையில் இருந்து வக்கீல் முருகேசன் மூலம்  பிணையில்  வெளிவருவதும் வாடிக்கை. இதில் பெரிய சிக்கலில்லை.அதுவும் தனது வட்டார எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களுக்காக மட்டும் தான் பிடித்துச் செல்வார்கள். தனக்கு அதில் சம்பந்தமில்லை என்று தெரிய வந்தால் விட்டுவிடுவார்கள்.  சமயங்களில ஆள் கிடைக்கவில்லை என்றால் எளிதான பிரிவுகளில் வழக்குப்போட்டு அனுப்பி வைப்பார்கள். சில தினங்கள் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான். ஆனால் வெளியூரில் வந்து இது போன்ற சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டது இது தான் முதல் தடவை.

பத்து வயதில் தொடங்கியது போன மாதத்துடன் வயது முப்பது பூர்த்தியாகிவிட்டது. இருபதாண்டு கால தொழிலில் அப்படியொரு நேர்த்தி நெளிவு சுளிவு. இது போல் சொதப்பியது இல்லை. சிக்கியதும் இல்லை.மற்ற வேலைக்காரர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் டுபான்ஸ் என்று நினைக்கமாட்டார்களா.

நேற்று காலையில் வயிற்றுக்கு எதாவது போட்டிருக்க வேண்டும். அப்படி போட்டிருந்தால் தொடர் ஒட்டத்தில் அவ்வளவு சீக்கிரம் சோர்வு ஏற்பட்டிருக்காது. உடலில் பலம் இருந்திருந்தால் ஓட்டத்தின் வேகம் கூட்டியிருக்கலாம். ஆனால் உடல் பலம் இப்படிக் குறைந்து போகும் என்று நினைக்கவில்லை. ஓட முடியாமல் துவண்டு போனது மட்டுமல்ல, அந்த சிறுவனிடம் மல்லுக்கு நிற்க முடியவில்லை. இது போன்ற இடங்களில் கை வைக்கும்போது ஒரு தடவைக்கு பல தடவை யோசித்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க வேண்டும். அல்லது தொழிலில் புதிய நுட்பத்தைக் கூட்டியிருக்க வேண்டும். அவசரம், அதீத ஆர்வம் இப்படி சிக்கிக்கொள்ளச் செய்துவிட்டது.

இரவு முழுக்க உறங்கவே விடவில்லை அவர்கள். ராத்திரி ரவுண்ட்ஸ் சென்று திரும்பிய காவலர் ஒருவர், ”என் மனைவியின் செயினையும் நீ தானேடா அறுத்தே” என்று சொல்லி நடுமுதுகில் குத்தினார். பிறகு வந்த சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர், நல்ல போதையில் இருந்தார். அவர் அடித்த அடி மட்டுமே சற்று தேவலாம் போல் இருந்தது.

இரண்டு கைகளையும் நல்ல அழுத்தமான நைலான் கயிறால் பிணைத்து கட்டிவிட்டனர். பிறகு குப்புறக் கிடத்தி ஒரு நீண்ட பெஞ்ச்சோடு சேர்த்து இணைத்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு இரவு வந்திருப்பதை அறைக்குள் வந்த இருளை வைத்து தான் அறிந்து கொண்டான்.

க்ரைம் இஸ்பெக்டர் சுதர்சனம் வந்தார். முத்துசாமியை உற்று நோக்கினார்   “இவன இனிமே அடிக்காதீங்க உண்மையை வர வைக்கிறது எப்படின்னு  எனக்கு தெரியும்” என்றார்.

அப்போது செல்போனில் அவருக்கு அழைப்பு வந்தது எடுத்துப் பேசினார். மீண்டும் இவனைப் பார்த்து, “ஏட்டய்யா, பயலுக்கு சிக்கன் குருமாவும் ரோஸ்ட்டும் வாங்கி கொடுங்க” என்று நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். வலியையும் மீறி சிக்கன் குருமாவுக்கு நாக்கில் எச்சில் சுரந்தது. அது வரும் என்று பசியோடு படுத்துக்கிடந்தான். ஆனால் சாப்பாடு வாங்கப் போன ஏட்டய்யாவைக் காணவில்லை. பசியில் அயர்ந்து உறங்கிப் போயிருந்தான். திடீரென்று ரணம் ஏறிப்போயிருந்த வெற்று உடம்பில் சுளீரென்று விரல்கள் பதிந்தன. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். அவன் முன்பு  சாப்பாடு பொட்டலம் இருந்தது. பாலிதீன் பையில் குருமா கட்டப்பட்டு இருந்தது.

ஆர்வத்துடன் பொட்டலத்தைப் பிரித்தான். இருந்தது என்னவோ இரண்டு காய்ந்த பரோட்டா தான். அதனை பிய்த்து சால்னாவில் குழைத்து வாயில் வைத்தபோது காரம் சுரீர் என்று உள்நாக்கு வரை பரவியது. குருமாவை ஒரம் கட்டி வைத்துவிட்டு வெறும் பரோட்டாவை மட்டும் மென்று தின்னத் தொடங்கினான். மழைக்காலத்தில் வைக்கோல் தின்னும் மாடு போல. கழிவறைக்குப் போய் கையை கழுவிக்கொண்டு வந்து குளிர்மை நிரம்பி வழிந்த தரையில் ஒருக்களித்துப் படுத்தான்.

2

முத்துசாமிக்கு உள்ளுக்குள் தகிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. பத்தாண்டுகள் இந்த ஸ்டேசனில் நிலுவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் அனைத்தையும் இவன் தலையில் கட்டிவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதை போலீசார் பேச்சில் உணரமுடிந்தது. இப்படிப் போட்டால் வாழ்நாள் முழுமையும் சிறையில் தான்  இருக்க வேண்டி வரும். இதனை ஆழமாக உணரத் தொடங்கிய போது பெரும் துயரமாக உணர்ந்தான். ஒருவன் மேல் குறைந்தது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்துவிட்டாலே ”மிசா” போடுவார்கள் அல்லது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். இது போன்ற பிரிவுகளில் சிறையில் அடைக்கப்பட்டால் ஒரு ஆண்டுக்குப் பிணையே கிடைக்காது. இத்தனை வழக்குள் ஒருவன் தலையில் விழுந்தால்…வெளியில் வர வாய்ப்பே இல்லை.

பெரிய பின்னணி கொண்டவர்கள் மட்டும் தான் இதிலிருந்து மீள முடியும். இப்போது தாம் செய்தது சாதாரண பெண்ணிடம் அல்ல. அவர் ஒரு மருத்துவர் அவரது கணவர் மருத்துவக்கல்லூரி டீன் என்கிறார்கள். இதனை விடவும் அந்தப் பெண் கழுத்தில் இருந்து செயினைப் பறித்தபோது அவரது தொண்டையில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்…. முத்துசாமிக்கு குழப்பம் கலந்த பயம் பீறிட்டது. இரண்டு கால்களையும் தரையில் போட்டு வேதனையுடன்  உதைத்துக் கொண்டான்.

வலது புற அறையில் படுத்த நிலையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தான். ஒர் இரவு முடிந்து பகல் வந்திருந்தது. காலை நேரம் என்பதால் பெரும்பாலான காவலர்கள் பணி முடிந்து தங்களது வீடுகளுக்குச் சென்று விட்டனர். பாரா பார்க்கும் போலீஸ்காரர் மற்றும் இரண்டு முதுநிலை காவலர்கள் மற்றும் ஒரு தலைமை காவலரும் பணியில் இருந்தனர்.

பொழுது விடிந்த பிறகு மீண்டும் பழையபடியே கட்டிவிட்டனர். கையில் போட்டிருந்த கட்டு படிமுடிச்சாக இருந்தது. அழுத்தி அழுத்தி அந்த இடத்தில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சிறிய கொசுக்கள் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தன குருதியை. இந்த நிலையில் இருந்து  இதனை அறுத்துக்கொண்டு தப்பியோட முடியாது. அதற்கான பலமில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான்.

”ஒரு மாத காலமாக சரியான வருமானம் இல்லை.”நல்ல சம்பவம்” அமையவில்லை. கிடைத்த ஆயிரம், ரெண்டாயிரத்தில் ஒரு வாரத்தை கழிப்பதே சிரமமாக இருந்தது. தியாகராஜர் சுவாமி தேரோட்டத்தில் குழந்தைகளிடமிருந்து சில கொலுசுகளை மட்டுமே கழற்ற முடிந்தது. திருட்டுப்பொருள் என்றால் ”படிக்குப் பாதி” பணம் தான் நகைக்கடை சேட்டுகள் தருவார்கள்.

இன்றைய நிலையில் ஆயிரம் ரூபாய் என்பது ஒருநாளின் அன்றாட செலவுக்குப்  போதவில்லை. முனியாண்டி விலாஸ் ஒட்டல்களில் ஒரு கப் ஆட்டுக்கறியின் விலை ரூ.100 ஆக்கிவிட்டார்கள். குவார்ட்டர் பிராந்தி       ரூ.200க்கு மேல் வாங்கினால் தான் வயிற்றுக்குத் தொல்லை தராமல் உள்ளது. இதனை தவிர மூன்று வேளை உணவு வேறு உள்ளது. இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால் தான் இந்த திருடனின் நிலை மக்களுக்கு புரியும். போலீசாரும் இதனை அறிய வேண்டும். திருடனைப் பிடித்து வழக்கை முடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கக்கூடாது. இதனையும் அறிய வேண்டும். கடந்த சில  மாதங்கள் கூடப் பரவாயில்லை. இந்த மாதம் ரொம்ப மோசம்.”

3

நேற்று முன்தினம், விஜயபுரம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து போகும்போது டாக்டர் சுந்தரவள்ளி கிளினிக்கைப் பார்த்தான்.  இந்தத் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு நாலைந்து முறை நடந்து சென்று இருக்கிறான். ஆனால் நேற்று முன் தினம் தான் அந்தப் பெண் டாக்டரைப்  பார்த்தான். நல்ல சிவந்த நிறத்தில் வட்டமான முகத்தில் உடல் சற்று பருமனாக இருந்தார். உயரம் நான்கு அடிக்குள் இருந்தார். இவன் கண்கள் அவரை விட அவர் கழுத்தில் மின்னிய தங்கச் செயினைப் பார்த்தது. அது  நல்ல தடிமனாக பத்து சவரனுக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அப்போதே ஒடிச்சென்று அறுக்க வேண்டும் என்று கை பரபரத்தது. பேண்ட் பாக்கெட்டில் இடது கையை விட்டு அழுத்திக்கொண்டான். ஆனால் மனம் மட்டும் சமாதானம் ஆகவில்லை.

கொஞ்ச தூரம் நடந்து வந்தான். தெரு கடைசியில் இருந்த நரசிங்கப் பெருமாள் கோவிலில் அபிஷேகம் முடிந்து புளியோதரை பிரசாதம் வினியோகம் செய்து கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று வாங்கித் தின்றான்.

கோவில் திண்டில் அமர்ந்து கண்களை முடினான். நிம்மதியாக அமர முடியவில்லை. செயின் பறிப்புக்கான திட்டங்கள், வியூகங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றையும் மனதுக்குள் நிகழ்த்தி காட்சிப்படுத்திப் பார்த்துக் கொண்டான். நீண்ட நேரம் அந்த கிளினிக்கையே பார்த்தபடியே அமர்ந்துவிட்டு இறுதியில் ஒரு திட்டத்துடன் தனது அறை இருந்த நெம்மேலிக்கு மினி பஸ்சில் கிளம்பினான்.

படுக்கையில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அடிக்கடி விழிப்பு வந்தது. காலையில் கிளம்பி முனீஸ்வரனை வணங்கி விட்டு விஜயபுரத்துக்கு கிளம்பிவிட்டான். மெயின்ரோட்டில் இருந்த அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாம் என்று நினைத்தான். பாக்கெட்டை துழாவியபோது பரம்பைசா இல்லை என்பதை மீண்டும் உணர்ந்தான். இந்த சம்பவத்தை திறம்பட செய்துவிட்டால் இந்த மழைக்காலத்தை ஓட்டிவிடலாம். தினமும் இரண்டு வேளை நல்ல சரக்கு வாங்கிக் குடிக்கலாம். அசைவ ஒட்டல்களில் வயிறு நிறைய சாப்பிடலாம். ஏசி தியேட்டர்களில் போய் புது சினிமா படங்கள் பார்க்கலாம்..வேளாங்கண்ணி சென்று கேரளா அயிட்டங்களோடு உல்லாசமாக இருக்கலாம். கொண்டித்தோப்பு ஜெயாவை வரச்சொல்லி நாக்கு ருசியாக  நல்ல கறி ஆக்கிப்  போடச் சொல்லி சாப்பிட்டு விட்டு நாலு நாள் அவளோடு குடித்தனம் நடத்தலாம். இன்னும் எத்தனையோ செய்யலாம் இப்படி தினமும்…”சொக்கு..சொக்கு” தான்  என்று மனம் குத்தாட்டம் போட்டது.

காலை நேரம். பொழுது மந்தகதியில் இருந்தது. வெயில் உள்குத்தலாக மங்கி ஒளிர்ந்தது. அந்தத் தெருவே மிக அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலத் தோன்றியது. எல்லா வீடுகளின் கதவுகளும் தாழிடப்பட்டு இருந்தன. ஆனால் க்ளினிக் எதிரேயிருந்த இருசக்கர பழுது நீக்கும் கடையில் மட்டும் பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பழுதான வண்டிகளைச் சரிசெய்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு கொடும் வறுமையில் சிக்கியவன் போல வாடி வதங்கிக் காணப்பட்டான். முகத்தில் பொலிவு இல்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவன் போலிருந்தது அவனது உடம்பு. கொம்பேறி மூக்கன் பாம்பு போல் அவன் உடல்வாகு அமைந்திருந்தது. காதுகள் இரண்டும் விடைத்துக்  கொண்டிருந்தன. அந்த சிறுவனைப் பார்த்ததும் முத்துசாமிக்கு  அடக்க முடியாத சிரிப்பு வந்தது.  தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு தாடியுடன் கூடிய மீசையை தடவி விட்டுக்கொண்டு ” இவன் கெடக்குறான் சுண்டைக்காய் பய” என்று முணுமுணுத்தான்.

தனது செயல் திட்டத்தை வரையறுத்துப் பார்த்துக் கொண்டான்.  காலைப் பொழுது.. அதிக ஆட்கள் நடமாட்டமற்ற. ஒரே ஒரு சிறுவனைக் கொண்ட தெரு. இதுவே காரியத்தை எளிதாக  நிறைவேற்ற சரியான தருணம் என்று முடிவுக்கு வர வைத்தது. உடனே பரபரப்பு ஆனான். தீர்க்கமான முடிவோடு சில நிமிடங்களில் க்ளினிக்குள் ஒரு நோயாளி போல் புகுந்தான். ஒரு இளம்பெண் வெள்ளை நிற சுடிதார் அணிந்து ஸ்டூலில் அமர்ந்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தாள். அறையின் முகப்பில் மருத்துவர் சுந்தரவள்ளி எம்.டி என்று எழுதப்பட்டு இருந்தது.  உள்ளே இருந்த வராண்டாவில்   எழுபது  வயதுக்கு உட்பட்ட  ஆண் நோயாளிகள் நாலைந்து பேரும், ஒரு பெண் நோயாளியும் அமர்ந்திருந்தனர். இதனைக் கண்டதும், சரியான நேரம் என்று முணுமுணுத்துக் கொண்டான்.” உங்களுக்கு என்ன செய்கிறது” என்று கேட்டுவிட்டு சில நிமிடங்களிலேயே இவன் பெயரை எழுதி டோக்கன் கொடுத்த அந்தப் பெண், இரண்டு ஆண் நோயாளிகளை அழைத்த பிறகு மூன்றாவது ஆளாக முத்துசாமியை  அழைத்தாள். அவர்கள் மருத்துவரைப் பார்த்த பிறகு இவனை அறைக்கதவை திறந்து அழைத்துக் கொண்டு போனாள். டாக்டர் சுந்தரவள்ளி இவனை எதிரே இருந்த ஸ்டூலில்  அமரச்சொல்லி சைகை செய்தாள்.  அந்த இளம்பெண், இவன்  பெயர் எழுதிய சீட்டை டாக்டரிடம் கொடுத்து விட்டு அறையை விட்டு சில நொடிகளில் வெளியே போனாள்.

டாக்டர் சுந்தரவள்ளி இவனைப் பார்த்தாள். இவன் ”நெஞ்சு வலிக்குது டாக்டர்” என்று இடது மார்பு பகுதியை சுட்டிக் காட்டினான். அப்போது டெதஸ்கோப்பை எடுத்து இவனது நெஞ்சில் வைத்து இதயத்துடிப்பை கணக்கிடத் தொடங்கினாள். அந்த சூழலே இவனுக்குப் போதுமானதாக இருந்தது. சட்டென்று ஒரு கணத்தில் பாய்ந்து மருத்துவர் கழுத்திலிருந்த செயினைப் பற்றினான். ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று சுதாரித்துக் கொள்வதற்குள் கீழே விழுந்து அலறினாள். அதற்குள் செயினை பேண்ட் பாக்கெட்க்குள் திணித்துக்கொண்டு கதவைத் திறந்து கொண்டு ஒடத் தொடங்கினான். கழுத்தில் குருதி வழிய காயத்துடன்  அலறிக்கொண்டே வெளியே ஒடி வந்த டாக்டர், ”செயினை அறுத்துக்கிட்டு ஒடுறான் அவன பிடியுங்கள்” என்று கத்தினாள்.  வேகமாக தெருவுக்கு ஒடி வந்த செவிலிப் பெண், மெக்கானிக் சிறுவனைப் பார்த்து ”சேது,.டாக்டர் செயினை திருடன் அறுத்துக்கிட்டு ஒடுறான் பாரு அவன பிடி” என்றாள் சத்தமான குரலில்.

இருசக்கர பழுது நீக்கும் கடையில் இருந்த சேது  திருடன் முத்துசாமியை துரத்தத் தொடங்கினான். சில அடி தூரத்திலேயே தன்னைப் பிடிக்க சிறுவன் ஒருவன்  பின் தொடர்ந்து ஓடிவருகின்றான் என்பதைத் திரும்பிப் பார்த்து அறிந்து கொண்ட முத்துசாமி, ”வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று நினைப்பிலேயே ஓடிக்கொண்டிருந்தான்.  ஓட்டத்தில் இரண்டு  தெருவைக்  கடந்திருந்தார்கள், அதற்கடுத்து நெடுஞ்சாலைக்கு செல்லும் ரோட்டில் முத்துசாமியைப் பிடித்துவிடும் தூரத்தில் சிறுவன் முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது தெருவில் நின்ற சிலர் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு சிறுவன்..திருடன்… என்று கத்தினான். அதே நேரத்தில் முத்துசாமியும் திருடன் என்று பல முறை சொல்லியபடி ஒடினான். இதில் குழப்பமடைந்த பாதசாரிகள் ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர், ”திருடன்.. போலீஸ் விளையாட்டு” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டு போனார்.

சாலையில்… இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவர்கள் போக்கில் போய்க்கொண்டிருந்தார்கள். ஓரிரு கார்களும் கடந்து போயின. முத்துசாமி திரும்பிப் பார்த்தான். சிறுவன் சில அடி தூரத்தில் இருந்தான். ஓட்டத்தை நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால் சிறுவன் பின் தொடர்வது அச்சமாக இருந்தது. ஒரு கட்டத்தில் முச்சிரைப்பு அதிகமாகியது. இரண்டு கால்களும் அதிக வலி கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கிக்கொண்டிருந்தான். உடலில் வெப்பம் அதிகமாகி வியர்வை பெருகி வழிந்தது. பஸ் நிறுத்தம், சில பெண்கள் குழந்தைகள் அங்கு நின்றனர். அதற்கு மேல் முத்துசாமியால் ஓட முடியவில்லை. ஓட்டத்தை நடையாக மாற்றினான். அப்போது தான் பின்னால் வந்து  கழுத்தைப் பற்றினான் சிறுவன். அங்குமிங்கும்  திரும்ப முடியாத அழுத்தமான பிடி. பெண்கள் இதனைப் பார்த்து பயத்தில் அலறினார்கள். இதனை சற்றும்  எதிர்பார்க்காத முத்துசாமி கடும் சீற்றத்துடன்  சிறுவனை தாக்கத் தொடங்கினான். சிறுவன், ”இவன்…திருடன். டாக்டர் செயினை அறுத்திட்டான்.” என்று கத்தியபடி தரையில் அமர்ந்து முத்துசாமியின் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்தான். அவனை உதைத்து விலக்கி விட முயன்றான் முத்துசாமி.. சாலையில், கடைப்பகுதியில் இருந்தவர்கள் இதனை சினிமாக் காட்சி போல  வேடிக்கை பார்த்தனர். இது தெம்பாக இருந்தது முத்துசாமிக்கு. ஆனால் சிறுவன் இரண்டு கால்களையும் அழுத்திப் பிடித்து மலைப்பாம்பு ஆட்டை  இறுக்கி முறிப்பதைப் போல் முறித்துக் கொண்டிருந்தான். அப்போது பைக்கில் சென்ற இருவர் சிறுவனைப் பார்த்ததும், ”நம்ம சேதுடா” என்று பைக்கை நிறுத்திவிட்டு ஒடி வந்து, முத்துசாமி கையைப்பிடித்து, என்னடா பிரச்சனை. என்னடா அடிக்கிற”  என்றார்கள். அப்போது சிறுவன், ”அண்ணே. சுந்தரவள்ளி டாக்டர் செயினை அறுத்துகிட்டு ஓடியாந்துட்டான்” என்று சொல்லிக் கொண்டே பிடி நழுவி விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். முத்துசாமி, ”இல்ல..இல்ல..”என்றான். இளைஞர்கள் இருவரும் சுதாரித்துக்கொண்டனர். சிறிய கூட்டம் கூடிவிட்டது. அப்போது ஏட்டய்யா மாணிக்கம் வந்துவிட்டிருந்தார். சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் முத்துசாமி. இளைஞர்கள் தாக்கத் தொடங்கினர். பொதுமக்களும் பாய்ந்தனர். ”கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று  ஏட்டய்யா கூட்டத்தை அடக்கினார். சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வந்தது. இவன் கண் முன்பாகவே சிறுவனை பொதுமக்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.

4

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவரது மென்மையான குரல் கேட்டது. அவர் வேறு சில வழிப்பறி கொள்ளை விவரம் குறித்து ஏட்டய்யாவிடம் விவரம் கேட்டார். நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளிலும் தன்னை சேர்த்து அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வார்கள் என்று நினைத்தான் முத்துசாமி. கை கட்டை அவிழ்த்து விட்டு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் முன்பு  நிறுத்தினார் ஏட்டய்யா மாணிக்கம். பவ்வியமாக தரையில் அமர்ந்தான். பேசத்  தொடங்கினார் இன்ஸ்பெக்டர்.

”உன்னைப் பத்தி எல்லாமும் விசாரிச்சுட்டேன். ஆமா..உன் ஆதியில் இருந்து அந்தம் வரை. நீ மறைக்காம என்கிட்டே உண்மையை சொல்லிட்டன்னு வை உன்ன காவந்து பண்ணிவிட விடவும் முடியும் என்னால. இல்லாட்டி..எல்லா கேசுகளையும் உன் தலையில கட்டி..நிரந்தமான உன்னை காலி பண்ணவும் முடியும் ” என்றார் கடுமையை முகத்தில் காட்டி.

அப்போது குறுக்கிட்ட ஏட்டய்யா மாணிக்கம், ”நம்ம டிவிசன்ல இவன் மேல ஏகப்பட்ட வழக்கு இருக்கு சார் ஆனா இன்னக்கித்தான் கையும் களவுமா மாட்டியிருக்கான் சார்  ” என்றார்.

முத்துசாமிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. உள்ளுக்குள் நடுக்கம். பதட்டமாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான்.

”ரொம்ப துணிச்சலான பய. பட்டப்பகலிலேயே பெரிய இடத்துலேயே போய் கை வெச்சிருக்கான். அப்ப இருட்டுல என்னா செய்வான். எப்படி செய்வான்” சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வாய்விட்டு சிரித்தார்.

”சொல்லுடா அய்யா கேட்குறாருல்ல” ஏட்டய்யா ஊக்கினார்.

”சார், என்னைப் பத்தி என்ன எங்கப்பன், பாட்டன்னு எல்லாரையும் பத்தி ஒன்னு விடாம சொல்லிடுறேன்ங்கய்யா… என்னை எப்பிடியாச்சும் காவந்து பண்ணுங்க“ என்று சொல்லிவிட்டு முத்துசாமி நிமிர்ந்து அமர்ந்தான். தாத்தாவைப் பற்றி அப்பா சொல்லியிருந்தது எல்லாம் மெல்ல நினைவுக்கு வரத்தொடங்கின.

5

பங்குனி  மாதத்தின் முதல் வாரம், சம்பா அறுவடை முடிந்து மூன்றாவது போகமான தாளடி வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். காளிமுத்து உள்ளிக்கோட்டையில் இருந்து கிளம்பியிருந்தார். பஸ் பிடித்தும் கால்நடையாகவும் கடம்பனூர் பண்ணைக்கு  வந்து சேர்ந்திருந்தார். பண்ணை காரியக்காரனை அழைத்து கோமரத்தான் வந்திருப்பதாக சொல்லச் சொன்னார். பதறிப்போய் பெரிய பண்ணை மோகனசுந்தரத்திடம் தகவலை சொன்னான். காரியக்காரனை எற இறங்கப் பார்த்தவர் “என்னய்யா அவனுக்கு கொம்பா முளைச்சிருக்கு. முடிஞ்சா என் கொட்டில்ல இருக்குற மாட்டை அவுக்கச் சொல்லுய்யா பார்க்கலாம். இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு பைசா கொடுக்குற ஆளு நானில்ல. இப்படி பயப்படுர்றியே போய்யா…” என்று திட்டி அனுப்பினார்.

பண்ணை வாசலில் காளிமுத்து நின்று கொண்டிருந்தார். காரியக்காரன் முகம் வாடிப்போய் வந்து நின்றான். மேற்கொண்டு அவனிடம் விளக்கம் கேட்கவில்லை. நடக்கத் தொடங்கினார்.

கடம்பனூரில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் பொருக்குகள் சிதறிக்கிடந்தன. இருபுறமும் பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளிகளில் பாதிக்கு மேல் அறுவடை முடிந்திருந்தது. குறுவைக்குப் பிறகு நடவு செய்திருந்த வயல்களில் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் நெல் மணிகள் சிவந்து கொண்டிருந்தன. எதிரே நடந்து வந்த ஆட்களிடம், இட்லி எங்கே கிடைக்கும் என்று விசாரித்தார். ”அதோ கதிராமங்கலத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள்.

தன்னை யார் என்று கூட கடம்பனூர் பண்ணை பார்க்கவில்லையே என்ற வருத்தம் இப்போது அவமானமாக ரூபம் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர் மாட்டை பத்திச் சென்று விட வேண்டும் என்று கருவிக்கொண்டார். கதிராமங்கலத்தில் ராவுத்தர் கடையில் பசியாறிவிட்டு கிளம்பியபோது  தரவு  சின்னையன் எதிர்ப்பட்டான்.  இவரைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். நடந்தவற்றை சொன்னார். இப்போது இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.  மதியமாகிவிட்டிருந்தது. நல்ல வெயில். சாலையில் இருந்த ஆலமர நிழலில் அமர்ந்து இருவரும் ஒய்வு எடுத்தனர். கேக்கரை ஐயர் பண்ணையைப் பார்க்கலாம் என்று சின்னையன் ஜடியா கொடுத்தான். மூன்று மைல் தூரத்தை வேகமாகக் கடந்து போனார்கள். அக்ரஹாரத்தில் இருந்து பெரிய சுற்றுக்கட்டு ஓட்டு வீட்டை அடைந்தபோது காரியக்கார பெருமாள் கூலியாட்களுடன் நின்று கொண்டிருந்தார்.

இவர்களைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட பெருமாள், ”பெரியவங்க  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போயிருக்காங்க வர நாலு நாள் ஆகும்” என்று தலையைச் சொறிந்தார்.

”அப்படிய்யா இவ்வளவு தொலைவு வந்துட்டேன். செலவுக்கு எதாவது கொடுங்க காரியம்” என்றார் காளிமுத்து.

சரி என்று கிடங்குக்கு அழைத்துக் கொண்டு போய் பத்தாயத்தை திறந்து ஒரு கலம் நெல்லைக் கொடுத்தார் பெருமாள்.

இருவரும் மாற்று மூட்டைப் போட்டு தூக்கி வந்து அரவை மில்லில் ரூ 40க்கு விற்றார்கள். பொழுது ஏறியிருந்தது சின்னையனுக்கு செலவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு, நாளை மறுநாள் இதே இடத்தில் இதே நேரத்தில் வந்து நில்” என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார் காளிமுத்து.

மறுநாள் தியாகராஜபுரம் பனந்தோப்பில் காளிமுத்துவும் சின்னையனும் வந்து நின்றபோது நள்ளிரவு. அடர்ந்த இருள். அவர்கள் கையில் கோணிப்பை இருந்தது. அதில் நிறைய சாமான்கள். உயிர்க்கோழி  முனகிக் கொண்டிருந்தது. அதனை  பிடித்திருந்தான் சின்னையன். பனங்கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த நாடாரை எழுப்பினார் காளிமுத்து.

திடுக்கிட்டு எழுந்த நாடார் தூக்கம் கலையாமல் இருளில் யார் என்று உற்றுப் பார்த்தார். தீக்குச்சியை ஏற்றி முகம் பார்த்து ’கோமரத்தான்’ என்று முணுமுணுத்தார்.  ”நாடாரே..மொத கோழி கூவிட்டு, கள்ளு வேணும் எவ்வளவு ரூவா வேணாலும் தர்றேன்” என்று கண்டிப்பான குரலில் கூறினார் காளிமுத்து. நாடார் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மற்ற ஆட்களை எழுப்பி,, இவனுங்கள பகைச்சிக்கிட்டு தொழில் பண்ண முடியாது. பாளையை வெட்டிவிட்டுருவானுங்க. உங்க கால்ல விழுறேன். நாலு மரத்து கள்ளை இறக்கி கொடுங்க” என்று அரை உறக்கத்தில்  கெஞ்சினார்.

கொட்டகையில் இருந்து கண்டா விளக்கை ஏற்றினார் நாடார். சின்னையன் தன்னிடம் உயிரோடு இருந்த பெட்டைக்கோழியை கழுத்தறுத்து சுத்தம் செய்தான். நாடார் அன்னசட்டியை எடுத்து வந்து கொடுத்தார். காளிமுத்து மசாலாக்களை இடித்து தயார் செய்தார். சில நிமிடங்களில் அடுப்பு கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டது. சட்டியில் கொதிக்கத் தொடங்கியிருந்த இறைச்சியின் மணம் பின்பனி இரவின் குளிர் காற்றோடு பரவத் தொடங்கியது. ஒரு பெரிய சால் பாணையில் கள்ளை ஊற்றி வைத்தார் நாடார். பனம் ஒலையில் தொன்னை பிடித்து இறைச்சியை நாடாருக்கு கொடுத்தார் காளிமுத்து. சற்று தொலைவில் நாலைந்து நரிகள் கும்பலாக ஊளையிட்டன. இருவரும் வயிறு முட்டக் குடித்துவிட்டு ஏப்பம் விட்டனர். பொழுது விடியத் தொடங்கியது. கடம்பனூரை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

பொழுது விடிந்து கொண்டிருந்தது. கறவைக்கு சென்ற மாட்டுக்காரன் சன்னாசி. மாடுகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த கொட்டிலைப் பார்த்துவிட்டு அலறிக்கொண்டு பண்ணை வீட்டின் முகப்பு வாசலில் நின்று கத்தினான். திடுக்கிட்டு எழுந்து வந்த மோகனசுந்தரத்திடம் “ஒரு மாட்டையும் காணோம் ஆண்ட” என்றான். மிரட்சியுடன் கொல்லை முழுவதும் நாலாப்பக்கமும் தேடிப் பார்த்தனர். மாடுகளைக் காணாது  தலையில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்துவிட்டார் மோகனசுந்தரம். பண்ணையாட்களையும் காரியக்காரனையும் அழைத்து வரச்சொன்னார். நாலு கறவை மாடுகள் இரண்டு ஜோடி காளைகள், நான்கு பால் குடிக்கும் கன்றுகள். இரண்டு இளம் காளைகள் என்று ஆக மொத்தம் பதினான்கு உருப்படிகள் காணமல் போயிருந்தன. நான்கு பக்கம் மதில் சுவர் அதனை தாண்டி எப்படி மாடுகளை ஓட்டியிருப்பார்கள் என்று பார்த்தபோது கொல்லைக்கு நடுவில் இருந்த குளத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கிப் பாலம்  அமைத்து அதன் வழியே பத்திக் கொண்டு போயிருந்தார்கள். அதனை பார்த்து பிரமித்து போனார் மோகனசுந்தரம். இருபது ஆட்கள் சேர்ந்து இரண்டு நாள் செய்ய வேண்டிய வேலையை இரண்டு மணி நேரத்துக்குள் செய்து மாடுகளை கடத்தியிருந்தார்கள். இதனைப் பார்த்து நடுங்கிப் போனது ஊர்.

ஊரே பரபரப்பாகிவிட்டது. காரியக்காரர் வந்து நின்றார். “உன் பேச்சை தெரியாத்தனமாக கேட்காமல் போயிட்டேன். எப்படியாவது என் மாடுகளை மீட்டுகிட்டு வாய்யா.” கெஞ்சும் தோரணையில் மோகனசுந்தரம் காரியக்காரரிடம் சொன்னார். ஆட்களை வைத்து சுற்று வட்டாரத்தில் தேடினார்கள். எங்கும் துப்பு துலக்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்த கடம்பனூர் கண்ணாயிரத்திடம் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார்கள். பெரிய பண்ணையின் மாடுகள் தங்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் அனுப்பும் ஆளிடம் ரூ. ஐந்தாயிரம் பணத்தைக் கொடுத்தால் மாடுங்க வீட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படியே பணம் கொடுக்கப்பட்ட மறு இரவு உருப்படிகள் பண்ணையின் கொட்டிலில் நின்றதைப் பார்த்து வியந்து போன பண்ணையார் மோகனசுந்தரம் ”இனி எக்காலத்திலும் கோமரத்தானுங்க கிட்ட மட்டும் வெச்சிக்க கூடாது” என்று உறுதிபடச் சொன்னார்.

6

”பய அருமையா கதை சொல்றான் ஏட்டய்யா…” என்று சேரில் அமர்ந்தவாக்கில் இருந்தவாறே வயிறு குலுங்கச் சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

ஒரு கணம் யோசித்த ஏட்டய்யா மாணிக்கம் ”இருக்கலாம் சார். நானும் கேள்விப்பட்டிருக்கேன்.  அந்தக் காலத்துல தஞ்சாவூர் ஜில்லா முழுமைக்கும் கோமரத்தான் என்கிற பேரில மாடு திருடனுங்க ஆதிக்கம் செலுத்தி வந்திருக்காங்க. அவுங்களுக்கு மாடு வளர்த்த அத்தனை பேரும் ஏன் பெரிய ஜமீன்ங்க, பண்ணைங்க  கூட பயந்து அவுங்க கேட்கிற பணத்தை கொடுத்து இருக்காங்க….”

”என்ன ஏட்டய்யா நீ சொல்றது நம்பற மாதிரி இல்லிய்யே”

என்று மாணிக்கத்தைப் பார்த்தார்.

”ஆமாங்கய்யா, மாடு திருட்டுல அவுங்கள யாரும் மிஞ்ச முடியாது. கண்ணுல விளக்கெண்ணையை ஊற்றிக்கிட்டு விழிச்சிக்கிட்டு இருந்தாலும், கண்ணை கட்டிப்புட்டு மாட்டைக் கொண்டுக்கிட்டே போய்விடுவாங்க. அந்தளவுக்கு கில்லாடிங்க. ஒரு கட்டத்துல அது முடிவுக்கு வந்துட்டு”

என்று சொல்லிவிட்டு முத்துசாமியை பார்த்தார் மாணிக்கம்.

”இவுனுங்க ரெத்ததுல திருட்டுங்குறது ஊறிப்போய் கெடக்கு. அவ்வளவு சீக்கிரம் இவனுங்கள திருத்த முடியாதுங்கய்யா”

7

தாத்தாவுக்குப் பிறகு அப்பா கஷ்டப்பட்டு இரண்டு அத்தைகளையும் திருமணம் செய்து வைத்தார். தாத்தா பெரிய கோமரத்தானாக இருந்தாலும் பெரிய அளவில் சொத்துக்களை சேர்த்து வைக்கவில்லை. ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். அதனை விற்று தான் தனது சகோதரிகளை திருமணம் செய்து வைத்தார். தனது தந்தையைப் போல் கோமரத்தான் ஆக விரும்பவில்லை. மாட்டுக்கு இருந்த மவுசு குறைந்து போயிருந்தது. அத்தைகளுக்கு சீர் செய்தது போக மீதியிருந்த நிலத்தில் சாகுபடி செய்து கொண்டு ஆட்டுப்பண்ணை அமைக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். கையில் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போன போது தான் ஆட்டின் விலை அவ்வளவு ஏறியிருப்பது அப்பாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. கொண்டு சென்ற பணத்தில் இரண்டு குராலையும் ஒரு இளம் கிடாவையும் மட்டுமே வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அம்மா வயிற்றில் நான் இருந்தாக அப்பா அடிக்கடி சொல்வார். ஒரு நாள் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி கத்திக்கொண்டு தனிமையில் நின்றது. அப்பா அதனைப் பார்த்தார். அந்தக் குட்டி கத்திக்கொண்டே அப்பா ஓட்டிக்கொண்டு வந்த ஆடுகளைப் பின் தொடர்ந்தது. விரட்டியடிக்க மனமின்றி விட்டு விட்டார். யாரும் தேடிக்கொண்டும் வரவில்லை. இந்த ஆடுகளுடன் சேர்ந்து கொண்டது.

அதன் பிறகு அப்பா தனது ஆடு வளர்ப்புக்கு ஆடு வாங்குவதில்லை என்று முடிவு செய்தார். ஆனால் இரவுகளில் சைக்கிளில் பெட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பிப் போனார். வாரத்துக்கு நான்கு ஆடுகள் வீதம் பண்ணையில் சேர்ந்து கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமையின் காலையில் நானும் அம்மாவும் ஆடுகளை நிலத்தில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தோம். நாலைந்துக்கும் மேல் தஞ்சை ஆட்கள் திடலுக்கு வந்தனர். அவர்கள், ” நம்ப கொட்டில்ல திருடு போன ஆடுங்க இந்தா மேஞ்சுகிட்டு இருக்கு பாருங்க” என்று பேசிக்கொண்டு  அம்மாவிடம் விசாரித்தனர். அப்பா எங்கேயிருந்தோ வளர்ப்புக்கு வாங்கிக் கொண்டு வந்தாகச் சொன்னாள். ”என்னடி பொய் சொல்றே திருட்டு சிறுக்கி” என்று அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டேயிருந்தனர். அம்மா அவர்களிடம் திருட்டு ஆடு இல்லை. உறவினர்களிடம் வளர்ப்புக்கு வாங்கி வந்ததாக விளக்கமளித்தாள் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை .மதிய பொழுதில் அப்பா வந்தார். அவர்கள் அப்பாவை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். பிறகு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போயினர். அவமானம் தாங்காத அம்மா அன்றிரவே தூக்கில் தொங்கி இறந்து போனாள். நான் அம்மா இல்லாது அனாதை பிள்ளையாக  ஆனேன். அப்பா ஆடு திருட்டில் வெறி கொண்டார். பண்ணைக்கு இரவில் ஆடுகள் வருவதும் பகலில் சந்தைக்குப் போவதுமாக இருந்தது. சமயங்களில் குடித்துவிட்டு வந்து தனது  திருட்டின் சாகசங்களை, திருடிக் கொண்டு வந்த ஆடுகளிடமே சொல்லிக்கொண்டிருந்தார். எப்போதாவது ”முத்துசாமி சாப்பிட்டிய்யா” என்று கேட்பார். சில நேரங்களில் உச்சகட்ட போதையில், ”மவனே, அப்பனை விட தாத்தனை விட பெரிய திருடனா வாழனும். சூதனமா செய்யனும்..என்னை மாதிரி இருந்திடக் கூடாது. ரொம்ப கவனமா இருக்கணும்” என்று பிதற்றுவார்.

பதினைந்து வயதில் ஒரு நாள் பட்டியில் ஆடுகள் மிரண்டு போய் நின்றதை பார்த்தேன். அருகில் சென்று பார்த்தேன். அப்பா நுரை தள்ளி இறந்து போயிருந்தார். ஊரில் சென்று விஷயத்தைச் சொல்லி அப்பாவின் இறுதிக்காரியத்தை முடித்துவிட்டு அந்த ஊரிலிருந்து அன்றே  கிளம்பிவிட்டேன்.

8

இன்ஸ்பெக்டர் பெருமூச்சு விட்டார். முத்துசாமியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ”ஏட்டய்யா டீ வாங்கிட்டு வரச்சொல்லு” என்றார். இவனைப் பார்த்து, ”அழுதது போதும்டா முத்துசாமி சொல்லுடா வேற ஏதாச்சும் கதை இருக்காடா” பொய் சிரிப்பு சிரித்தபடி.

”சார், என் தாத்தா மாட்டு திருடன், அப்பன் ஆடு திருடன் நான் எப்படி யோக்கியனா இருக்க முடியும் சொல்லுங்க. அதை விட நானும் உழைச்சு வாழனும்னு நெனைச்சு எத்தனையோ பேர்கிட்டே வேலை கேட்டேன் ஒருத்தரும் கொடுக்கல… அப்படி கொடுத்தாலும்…ஒரு நாளைக்கு ரெண்டு நாளைக்கு மேல நீடிக்கல.  நான் என்ன செய்யுறது சார்” என்றான்,

”ஏட்டய்யா அந்த டாக்டரம்மா எப்படி இருக்காங்க..இனிமே இவனை இங்க வைக்ககூடாது. எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே போட்டுர்வோம். அப்புறம் கஸ்டடியில எடுத்து விசாரிப்போம்”

”சரிங்க சார்” ஏட்டய்யா முதல் தகவல் அறிக்கையை எழுத்தொடங்கினார். கோர்ட்டுல நாங்க சொல்றதை மட்டும் அப்படியே சொல்லு. உன்னை காவந்து பண்ணி விடுறேன்” என்றார் ஏட்டய்யா. சரியென்று தலையாட்டினான் முத்துசாமி.

அடுத்த அறையில் அமர வைத்தனர். பத்து வயதிருக்கும் பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான். அவன் முகத்தைப் பார்த்தவுடன் தன்னைப் பிடித்துக் கொடுத்த சிறுவனின் முகம் நினைவுக்கு வந்தது. இவர்கள் எப்படி இப்படி வாழ்கிறார்கள். நான் ஏன் இப்படி ஆனேன்..முதன் முதலாக தன் மீது அருவெறுப்பு உண்டானது முத்துசாமிக்கு. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

ஒரு பெண் குரல் கேட்டது. அது லெட்சுமியின் குரலை ஒத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவளை நாகப்பட்டினம் கோர்ட்டில் பார்த்தபோது இவனிடம் நீண்ட நேரம் பேசினாள். பிக்பாக்கெட் தொழிலை விட்டுவிட்டதாகவும் தற்போது கடலுக்கு சென்று மீன் வாங்கி வியாபாரம் பார்ப்பதாகவும் சொன்னாள். பழைய வழக்கு ஒன்றுக்கு இப்போது வாய்தா வாங்க வந்திருப்பதாகவும் சொன்னாள். இனிமே உயிரே போனாலும் திருட மாட்டேன் என்றாள். அவள் சொன்னபோது இவனுக்கு சிரிப்பு வந்தது. இவன் சிரிப்பதைப் பார்த்த அவள் ஒரே வார்த்தையில்  சொன்னாள். காலம் உனக்கு பதில் சொல்லும் என்று. அன்றைய  இரவு தான் சாலையில் தனியே  நடந்து போன ஒரு கர்ப்பிணி பெண்ணின் செயினை அறுத்தான்.

மாணிக்கம் வந்து நாலைந்து பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். அங்க அடையாளம் பார்த்து ரேகை பதித்து வாங்கி கொண்டார். புதுச்சட்டையும், கைலியும் கொடுத்தார்கள். அணிந்து கொண்டான். அனைவரின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் செல்போனில் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தார். மாணிக்கம் கோர்ட்க்கு போவுணும் என்றவர். ஏண்டா இப்படி வீணாப்போறீங்க என்றார்.

டாடா சுமோவில் ஏற்றினார்கள். கார் வேகம் .எடுத்தது. சிறிது தூரம் போனதும் கார் நின்றது. மாற்று உடையில் ஒரு போலீஸ்காரர் வந்தார் ஏற்கனவே காரில் நான்கு பேர் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டய்யா மாணிக்கம் வருவார்கள் என்று நினைத்தான் முத்துசாமி. ஆனால் அவர்கள் வரவில்லை.

மெயின்ரோட்டில் செல்லாமல் கார் சந்துபொந்தில் புகுந்து போனது. ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு மண் சாலையில் போய் அடர்ந்த புதர்ப்பகுதியில் காரை நிறுத்தினார்கள்.

”டேய் முத்துசாமி இங்கிருந்து தப்பிச்சு ஒடிடுடா” என்றார் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பருமனாக இருந்த போலீஸ்காரர் ஒருவர்.

”வேணாம் சார் இனிமே திருட மாட்டேன். நேர்மையா வாழப்போறேன் சார். என்னை கோர்ட்டுல விட்டுருங்க…” என்றான்.

”உன்னை விட சொல்லிட்டார்டா இன்ஸ்பெக்டர்” என்றார் இடையில் காரில் வந்து மாற்று உடையில் ஏறியவர்.

இவன் தயங்கினான். கீழே இறக்கினார்கள். ”இந்த ரோட்டைக் கடந்து போனாக்கா மெயின் ரோடு வரும். அங்கேயிருந்து லாரியை பிடிச்சு கேரளா போயிடு” என்றார்கள்.

குழப்பத்துடன் அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான். சற்று தூரத்தில் வயலில் களை பிடிங்கிக் கொண்டிருந்த பெண்கள் துப்பாக்கி சத்தம் வந்த திசையை மிரட்சியுடன் பார்த்தனர். ஒரு பெண் ”குருவி சுடுறாங்க” என்றாள்.

***

சிவகுமார் முத்தய்யா
நெற்களஞ்சியமான கீழ தஞ்சை திருவாரூர்- தண்டலை சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை,கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. Contact – [email protected]

RELATED ARTICLES

1 COMMENT

  1. மூன்று தலைமுறையாக திருடியவர்கள் ஒரு கொலை கூட செய்யவில்லை . ஆனால் திருடனைத் திருத்தவேண்டிய காவலர்கள் கொலைகாரர்களா கிறார்கள்.இது தான் மூன்றாம் பாகம். சிவகுமார் முத்தய்யா கதைசொல்லும் எடுத்துரைப்பு நன்றாக இருக்கிறது. சமுக மனச்சான்று , அறம் எல்லாம் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது குறித்த வருத்தம் வாசக மனதில் எழச்செய்திருக்க வேண்டுமே .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular