Thursday, March 28, 2024
Homesliderமாதவன் அதிகன் கவிதைகள்

மாதவன் அதிகன் கவிதைகள்

தேவிகா

நீ
எழுபதுகளில் மலையடிவாரத்தில்
மலர் கொய்துக் கொண்டிருந்தாய்

இதழுதிர்ந்து
சூலழிந்து
பிஞ்சாகி
காயாகி
கனியாகி வீழ்கையில்

நிலமெல்லாம் பச்சயம் நீங்கி வளர்ந்தது

கடைசியாய்
உன்னை ஷாப்பிங் மாலொன்றில்
ஸ்கூட்டியோடு பார்த்ததாய் ஞாபகம்

அலை எழுவது நின்று
மரங்கள் அசைவது நின்று
பறவைகள் பறப்பது நின்று
மின்னலும் இடியும் அசைவற்று நின்று
விடுபடுகையில்

நான்
மீண்டும் மலையடிவாரத்தில் பிறந்தேன்

தேவிகா
நீ இப்பொழுதும் அங்குதானே

மலர் பறித்துக்கொண்டிருக்கிறாய்?

2

கண்ணாடி அறைக்குள்
அழைத்துச் செல்கிறாய்

என் வருகைக்காகவே
இரண்டு வைபர் டம்ளர்களையும்
பெயரறியாத மதுவையும் வைத்திருக்கிறாய்

இரண்டாவது சுற்றிலேயே தொடங்கிவிட்டாய்
இலத்தீன் அமெரிக்கா
ல்லத்தீன் அமேரிக்காய்
ல்த்தீன் அமேரிஇக்கா..காகா கா

குளிர்தாளாத என்னுடலுக்கு
இரஷ்ய பனிக்கட்டிகளைக் கொட்டுகிறாய்

மத்திய ஐரோப்பாவின் மலைகளை
தாண்டிய கதைகளை சொல்கிறாய்

மதுவேற்றிய பசிக்கு
பச்சைத் திராட்சைகளை தின்னச் சொல்கிறாய்

என் பூண்டு ஊறுகாயை வேறு
வீசி விட்டாயே நாராயணா

ம்…
பின் ப்ரௌன் நிற இதழுடைய
உன் காதலியை முத்தமிட்டால் மட்டும்
ஏன் நண்பா அம்மணமாகிறாய்

உட்கார் நண்பா உட்கார்
நீ பாடு நாராயணா நீ பாடு

இலத்தீஈஈஈன அமேரிக்கா
லா..லா…லாதீன்
அமோ..ஓஓ ஓ ரிகா

ம்… மறந்திடாதே நண்பா
அதே தான்

ரசூ…சூசூ யா… ஆயா ஆஆஆயா…


3. பேஸ்மட்டம் வீக்

குற்றத்தை செய்து கொண்டேயிருக்கிறார்கள்
அவளிந்தச் சாக்கடையின் நடுவில்
குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த போதுதான்
பூப்படைந்த குருதியாலதன் புனிதம் கெட்டது
நாயின் வாயிலிருந்து பிஸ்கட் துண்டுகளை
குழந்தைகள் பிடிங்கி தின்ற போதுதான்
நட்சத்திர விடுதிகளுக்கு காவலை கூட்ட வேண்டியதாயிற்று
நடைமேடையில் முதலிரவை கழித்தவர்களால்தான்
கடவுள் நள்ளிரவில் தூக்கிட முயன்றார்
நூறு ரூபாய்க்கு படகின்பின் ஒதுங்கியவர்களால்தான்
இரவு பப்களுக்கு கேடுபேர் நேர்ந்தது
தலைபிரட்டைகளை மீனென பிடித்தவர்களை
எவ்வாறு சிறையிலடைப்பது
அம்மாவாசை என்றுகூட பாராமல்
கருவாடு தின்றவனால்தான்
பித்ருக்களின் ஆன்மா தெருநாயைபோல
மூச்சிரைக்க சுற்ற நேர்ந்திருக்கிறது
மதுக்கூடத்திற்கு வீட்டிலிருந்து
தண்ணீர் கொண்டு சென்றவனால் தான்
நிலத்தடி நீர் வற்றியது
இவர்களால்தான் குற்றமொரு மோந்தா கோலியானது
மூலவியாதியர்களெல்லாம் எழுந்து நிற்க
கால்கள் சூம்பியவனின்மேல்
விழுகிற அடி உதைகளுக்காக தான்
பேஸ்மட்டம் வீக்கான கால்களோடு
நாமும் நிற்க வேண்டியிருக்கிறது

4. வைரத்துண்டுகள்

ஒளிரும் வைரத்திற்குள் கருப்புநிற கிழவனின் வியர்வை
மீனைபோல் நீந்துகிறது

கிழவியொருத்தியோ பசியாற வேண்டி
காடு சென்று விறகொடித்து திரும்புகிறாள்

அதன் நேர்த்தியான வெட்டுக்களோ
நதியை ஆவியாக்கும் சூரியனின் நிகர்

நிலமற்றவனின் மரித்த கால் நகங்கள்
சிறிய சிறிய வைரத்துண்டுகளாயின

உருபெருக்கிக்கொண்டு உற்று நோக்குகிறோம்
ஊழிக்கால எலும்புகளும் கற்சிலைகளும்

மேலுமொரு சீழ் கவிச்சியும்
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் கழுமரமொன்றும்
உதிர்ந்த மயிலிறகுகள் சூழ
ரத்தக்கறை படிந்த வெள்ளாடையும் காணக்கிடக்கிறது

நம் கடனட்டைகள் ஒரு கத்தியை போல்
காலத்தை அறுத்தெறிகிறது

கடைசியில் நம் காதலியின் கழுத்தில் ஒளிரும்
அவ்வைரங்கள் கூடுதலாய் ஒரு முத்தத்தையோ
மூன்றாவது முறை புணருமொரு வாய்ப்பையோ அளிக்கிறது

5.டக்டக் டக்குடக்கு டக்கு…

நீங்கள் செல்ல வேண்டிய வழி இதுதான்
பன்றிகள் புணரும் சகதியை கடந்தால்
ஆணுறை பொறுக்குபவனின்
பாடலொன்று கேட்கும்
அங்கிருந்து இடது பக்கம் திரும்பினால்
கீற்றுக்கொட்டகை வாயிலில் கிழட்டு வேசியொருத்தி
நமத்த புகையிலையை கசக்கி விரல் நீட்டுவாள்
அதன் அனுசரிப்பில் தெரியும்
பழைய நடிகையின் பங்களாவிற்குள்
நுழைந்து விடாதீர்கள்
நாய்கள் தின்ற குழந்தையின் உடலை
தாண்ட வேண்டியிருக்கும்
பூங்காக்களில் உறங்குபவனின் கால்வெடிப்புகளை
உற்று நோக்கினால் முட்டுச்சந்து தெரியும்
கள்ளச்சாவி தேடுபவனை விலக்கிச் செல்லுங்கள்
முழங்காலுக்கு எச்சிலால் மருந்திடுபவனை கேளுங்கள்
வழியறியும் உபாயம் இல்லையென்றால்
பிளாஸ்டிக் டப்பாக்களில் டீ குடிப்பவனையோ
உள்ளங்கைகளை மேல்நோக்கி விட்டிருக்கும் சிறுமியிடமோ
தள்ளுவண்டியில் இட்லி திருடுபவனிடமோ கேளுங்கள்
இப்பொழுதும் வழி தெரியவில்லையெனில்
கோழி வண்டிகளை பின்தொடருங்கள்
ரப்பர் வளையலணிந்த கன்னியொருத்தி
வதங்கிய முலைகளுக்கு மாராப்பை இழுத்து விட்டு
தங்க நாற்கரச் சாலையின் மேன்மையைக் காட்டுவாள்
இப்பொழுது ஓடத்துவங்குங்கள்
டக்டக் டக்குடக்கு டக்கு…
டக்டக் டக்குடக்கு டக்கு…

***

மாதவன் அதிகன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular