Friday, March 29, 2024
Homesliderபொதுச்சுடர்

பொதுச்சுடர்

ப. தெய்வீகன்

விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது.

விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன்.

எனக்கு முன்னும் பின்னுமாக தடித்த கடவுச்சீட்டுக்கள் வேகமாக ஓடியபடியிருந்தன. என்னை முந்திக்கொண்டும் இடித்துத் தள்ளிக்கொண்டும் சில கடவுச்சீட்டுக்கள் பறந்தன. அவர்களது கைகளிலுள்ள தள்ளுவண்டிகள் குட்டி விமானங்கள் போல சிலிக்கான் தரையில் வழுக்கியபடி சென்றன.

நான் பரபரக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக முட்டிமோதிக்கொள்ளவும் விரும்பவில்லை. எல்லா திசைகளிலும் பார்த்துவிட்டு, என்னைப்போல அவசரப்படாத அப்பாவிகள் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒருவனாக போய் சேர்ந்து கொண்டேன்.

எனது தோளில் ஒற்றைப்பை. தள்ளி வந்த வண்டிலில் ஒரே ஒரு உடுப்புப்பெட்டி. அவ்வளவுதான். அதிக சோதனைகள் இல்லை. நாய்கூட என்னை கணக்கெடுக்கவில்லை.

வெளியில் வந்து “மெல்பேர்ன் வரவேற்கிறது” என்ற மின்மினிப்பலகையை பார்ப்பதற்கு முன்னரே, தயானி பெருங்கூட்டத்துக்குள் நின்று என் பெயர் சொல்லிக் கூவினாள். அவளைப்பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கியதில் முன்னே சென்று கொண்டிருந்தவரின் கால்களில் வண்டியால் இடித்துவிட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் எனது முதலாவது வன்முறைச்சம்பவம் இனிதே நடந்தேறியது. உடனடியாவே மன்னிப்பைக்கேட்டு சிரித்து சமன் செய்தேன்.

தயானி கையில் பூங்கொத்தோடு சிரித்தபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். திருமணமான பதினொரு மாதங்களில் ஒரு சுற்று பெருந்திருந்தாள். அணைத்து முடியும்வரைக்கும் தயானியின் அப்பா வைத்தீஸ்வரன் சிரித்தபடி காத்திருந்தார். இன்னும் நால்வரும்கூட அவருடன் சிரித்துக்கொண்டே நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்தி, கைகொடுத்து “ஹலோ” சொன்ன பிறகு, தயானி அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள். அனைவரும் அவளது நெருங்கிய உறவினர்கள் என்பதுதான் பெருமகிழ்வின் சாராம்சம்.

வைத்தீஸ்வரன் தனது அகன்ற அதிகாரம் நிறைந்த தொப்பையோடு கார் தரிப்பிடத்தை நோக்கி முன்னே நடந்தார். எல்லோரும் அவரைத் தொடர்ந்தோம். தயானி என் கைகளை விடவில்லை. எனது ஒற்றைப்பையையும் உடுப்புப்பெட்டியையும் தூக்கிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் அவளது உறவினர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனால், தயானி என்னை தகப்பனுக்கு பின்னால் இழுத்துச் சென்று கொண்டிருந்ததால் திரும்பிப் பார்க்கவும் முடியவில்லை. அவளது உடல் முழுவதும் பிரகாசித்திருந்த குதூகலம் விரல்களில் சுடர் விட்டபடியிருந்தது.

புத்தம் புதிய டொயாட்டா “க்ளுகர்” வாளிப்பான அதிவேக நெடுஞ்சாலையில் சத்தமின்றி பறந்து கொண்டிருந்தது. மெல்பேர்ன் ‘டலமறீன்’ விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் பகல் நேரப்பொழுதென்ற காரணத்தினால், விடுமுறை நாளென்ற போதும் சீரான போக்குவரத்து வீதியில் தெரிந்தது.

எனது பெட்டியை தள்ளிக்கொண்டு வந்த தயானியின் உறவினர் இப்போது வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். தயானியின் அப்பா அருகிலிருந்தார். மீதி மூவரும் எங்களுக்கு முன்பாக இருந்தார்கள். நானும் தயானியும் வாகனத்தின் ஆகப்பின்னாலிருந்த இருக்கையில் சொகுசாக சரிந்திருந்தோம். வாகனத்தின் நடுவிலிருந்த சிறிய கண்ணாடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மஞ்சள்நிற பிள்ளையார் எல்லோரையும் பார்த்தபடியிருந்தார். அவருக்கு கீழிருந்த தொடுதிரை வானொலிக்கு சற்று மேலாக காணப்பட்ட பகுதி திருநீறு – சந்தனம் – குங்குமம் அனைத்தும் குழைத்து பூசி மெழுகப்பட்டிருந்தது.

அப்போது, பிள்ளையார் உட்பட அனைவரும் அடைகாத்துக் கொண்டிருந்த அமைதியை கிழித்தபடி உரையாடல் தொடங்கியது.

“செக்கிங் ஒண்டும் இல்லைத்தானே” – இது வைத்தீஸ்வரன்.

“பாஸ்போட்டை பாத்திட்டு ஏதாவது முறைச்சவனோ” – இது இன்னொரு உறவினர்.

“நீர் அவங்கள பாத்து முறைச்சனீரோ” – இது எனது பையை தூக்கிக்கொண்டு வந்தவர்.

“ஹி ஹி ஹி” – இது அவரோடு வந்த இன்னொரு உறவினர்.

“பகல் நேரம், அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது” – அப்படித்தானே என்று ஆசனத்துக்கு மேல் விளிம்பினால் தலையை எறிந்து அடுத்த கேள்வியையும் கேட்டுமுடித்தனர்.

நான் தயானியை பார்த்தேன். அவள் விரல்களால் மெல்லிதாக சொறிந்தாள்.

“சீ..…ஓம்…” – என்றபடி இரண்டும் குழைந்த பதிலோடு உதடுகளையும் ஈரப்படுத்திக் கொண்டேன்.

கடைசியாக கேள்விகேட்டவர் முன்னுக்கு திரும்பும்வரைக்கும் நான் அவரைப் பார்த்து சிரித்தது, அவருக்கு திருப்தியாக இருந்திருக்கவேணும். முகத்தில் நல்ல புளுகம் தெரிந்தது.

“இவன் றோயிண்ட மருமகன் வரேக்க, அவனை அரை மணித்தியாலம் மறிச்சு விசாரிச்சவங்களாம் என்ன”

“யார் ஜெனீட்டாண்ட மருகன்….?”

“பின்ன….”

“அந்தப்பெடியனும் இயக்கமோ அண்ணே?”

“டேய், அவனும் கடைசிநேரத்தோடதானே வெளியில வந்தவன்”

“என்ன சொல்லுறியள்….?”

“பின்ன….”

நான் நினைத்தது போலவே கதை சுழன்றடித்து மீண்டும் என்னிடம் வந்தது.

“உமக்கு தெரியுமே, ரெஜியெண்டு…. இயக்கப்பெயர் என்னெண்டு தெரியேல்ல… நல்ல வளர்த்தி… சிவலை….”

முதல் பின்னுக்கு திரும்பிய அவரேதான் இப்போதும்.

கேள்வி முடியும்முதலே நான், “தெரியவில்லை” – என்று உதட்டை பிதுக்கியது அவருக்கு சுத்தமாக திருப்தியில்லை. முகத்தில் வாட்டம் தெரிந்தது.

வைத்தீஸ்வரன் இயன்றளவு இந்தக்கதைகளில் ஈடுபடாமல் தெருவைப் பார்த்தபடியிருந்தார்.

நெடுஞ்சாலை முடிந்து சிறுவீதி வழியாக வாகனம் வேகத்தை குறைத்து ஓடியபடியிருந்தது. ஒளிமரங்களுக்கு அடியில் அவ்வப்போது வரிசையில் நின்றது. அருகில் போகும் வாகனங்களில் பார்வையை படரவிட்டேன். உள்ளே அடர்ந்திருந்த அழுத்ததிற்கு வெளிக்காட்சிகள் வசதியாக இருந்தது.

எவ்வளவுதூரம் கடந்து போனாலும் ஆச்சரியங்களை ஒழித்து வைத்திருக்கும் பெருந்தெருக்கள், பெய்த மழை போதுமென்று ஓங்கிநிற்கும் நெடுமரங்கள், கத்தரித்துவிட்டதுபோல் தார்சாலை ஓரங்கள், பிள்ளையார் எறும்புகள்போல வரிசையிலோடும் கறுப்பு கார்கள். எதைப் பார்த்தாலும் அழகாகவே தெரிந்தது.

அப்போது, அருகில் வந்து நின்ற வாகனத்தின் முன் இருக்கையில் சடைத்த நாயொன்று வெளியில் தலையை நீட்டி என்னைப் பார்த்தது. அதன் தொங்கிய சிவப்பு நாக்கு ஆடியபடியிருந்தது. பளபளக்கும் வெள்ளைமுடி வெயிலில் மினுங்கியது. கண்களில் தவழ்ந்த சுதந்திரமும் தனது எஜமானிற்கு அருகிலிருந்து வருகின்ற குதூகலமும் தன் வாழ்வில் பெற்றுக்கொண்ட பெரும்பேறும்போல அதன் கண்களில் ஒளிர்ந்தது.

என்னை புதியதொரு நிலம் தாங்கி ஓடிக்கொண்டிருந்தது.

ஆறு அறைகளுடன் சடைத்திருந்த மாடி வீடு, நான் பறந்துவந்த விமானமே தரித்து நிற்பதுபோல உணர்வை தந்தது. போய் இறங்கியவுடன் வாசலில் இருந்தே பயங்கர வரவேற்பு. என்னை பார்ப்பதற்கு யார் யாரோவெல்லாம் வந்திருந்தார்கள். உள்ளே சென்றவுடன் கை தந்தார்கள்.

“களைத்திருப்பீர் என்ன” – என்று கேட்டபடி கட்டியணைத்தார்கள்.

“அம்மா, அவரைக்கூட்டிக்கொண்டு போவன், குளிச்சிட்டு சாப்பிடுவம்” – என்று தயானியின் தயார் சொல்வதற்கும் அங்கிருந்தவர்கள் அதற்கு ஆமோதிப்பதற்கும் போயிறங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகியிருந்தது.

அன்று மாலையே இன்னும் பலர் வரிசைகட்டி வரத்தொடங்கினார்கள்.

“இப்பதான் வந்தவர்” – என்று தொப்பையை வருடிக்கொண்டு வாசலில் இருந்து ஒவ்வொருத்தவராக அழைத்துவந்த வைத்தீஸ்வரன், பெருமையோடு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நேரம் போகப்போக ஒரு கட்டத்தில், எனக்கு எல்லோர் முகங்களும் ஒரே மாதிரியாகவே தெரிந்தன. முதலில் வந்தவர்களே திரும்ப வருவதுபோலவுமிருந்தது.

கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு வந்த வைத்தீஸ்வரனின் சகவயது சொல்லக்கூடிய வயதானவர்தான் அந்தக்கேள்வியை கேட்டார்.

“அப்ப, நீங்கள் இம்ரான் பாண்டியன் படையணியோ….” – என்று இழுத்தார்.

அதுவரைக்குமானவர்களின் வருகையும் எனக்கான அறிமுகங்களும் அணைப்புக்களும் எனக்குள் குமிழ்களாக எழுப்பியபடியிருந்த மொத்த சந்தேகத்துக்கும் விடைபோல அந்த கேள்வி அவர் வாயால் வந்து விழுந்தது. கேள்வியோடு என்மீது எய்த அவரது பார்வை எனது கண்களிலேயே குந்தியிருந்தது. போர் நினைவுச்சின்னம் போல உணர்வற்றுக்கிடந்த என்மீது, அவர் மிகுந்த உணர்ச்சியோடு பதிலைத் தேடியபடியிருந்தார்.

அந்தக்கேள்வியும் அந்தப்பார்வையும் எவ்வளவு ஏமாற்றத்தை – இயலாமையை – தோல்வியை – எரிச்சலை – ஆத்திரத்தை என்னுள் ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு எந்தக்கரிசனையும் தெரியவில்லை. எனக்குள் நெடுநாள் காயமொன்றின் காய்ந்த விளிம்புகள் திடீரென்று வெடித்தது போலிருந்தது.

“இல்லை, நான் வேற…” – என்று உதடுகள் தானாக ஏதோ ஒரு பதிலை பிதுக்கி விழுத்தியது.

இரவுணவு ஆயத்தமானது. அதற்குப் பிறகும் கூட்டம் கலைய இரண்டு மணிநேரமானது.

தூக்கம் விழிகளை சரித்து விழுத்தியபடியிருந்தது. மெல்பேர்னில் விமானம் வந்து தரை தட்டும்போதிருந்த வெறுமை அகன்று, மீண்டும் பாரத்தை உணர்வுபோல மனது கனத்தது. வந்துபோனவர் கேட்ட கேள்வி நெஞ்சை துளையிடுவதுபோல அந்தரமாயிருந்தது. ஆனால், களைப்பு அதைவிட அதிகமாயிருந்தது.

படுக்கையில் சாய்ந்ததுதான் தெரியும். நிறைதுயிலில் உறைந்துவிட்டேன்.

என் மீது பெரும் பாரமொன்று சரிந்ததுபோல உணர்ந்தேன். கண்களை மெல்லத் திறந்தபோது நிச்சயமாக அது கனவில்லை எனத்தெரிந்தது. தனது பருத்த மார்பினை என்மீது வைத்தபடி தயானி, என்னை முத்தமிட்டபடியிருந்தாள். காலை வெளிச்சம் ஒரளவுக்கு அறையினுள்ளேயும் படரத் தொடங்கியிருந்தது. பறவையொலிகள் வெளியே கேட்டன. பிசுபிசுத்த உதடுகளால் கழுத்தில் முத்தமிட்டு உரசியபடி முகத்தை வந்தடைந்தாள்.

சிக்கெடுக்காத அவள் கேசம் முகத்தில் விழ, அதனை ஆவேசமாக பின்னுக்கு உதறித்தள்ளினாள். அவளோடு கூடுவது இது புதிதில்ல. அவள் வேகமானவள். அது நான் அறியாததும் அல்ல. ஆனால், இப்படிக்கூடுவதுதான் நவீனமாயிருந்தது. இரவுக்கு மாத்திரமான உறவென்று நான் எப்போதும் எண்ணியிருந்ததை இந்த காலைக்கானதாக தயானி வேகமாக வரைந்தபடியிருந்தாள். இதற்காக அவள் காத்திருந்திருக்கிறாள். காலம் அவள் முதுகிலிருந்து அழுத்தி தள்ளியது, அவள் என்னை மெல்ல மெல்ல விழுங்குவதில் தீவிரமாயிருந்தாள்.

விமானநிலையத்தில் கண்டதிலும் பார்க்க இப்போது இன்னும் பருத்திருந்தாள். அல்லது நான் சிறுத்திருந்தேன். முத்தமிட்டபடி என்னைச்சரித்து மேலே கொண்டுவந்தாள். அது அவளுக்கு இலகுவாக இருந்தது. நான் திமிறுவது போலிருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அதை ரசித்தாள். அவளது கடைவாய் நீரினால் என் முகம் நனைந்திருந்தது. அவளது வாய் நாற்றம் தொடர்ந்து முகத்திலறைந்தபடியிருந்தது. அவளுக்கு நான் உரிமையானவன்தான். ஆனால், இந்தப்புதுநிலத்தின் முதல்காலை எனக்கு இப்படி விடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு வேறு தெரிவிருக்கவில்லை.

இரண்டு வாரங்களாக என்னை பார்ப்பதற்காக தொடர்ந்தும் பலர் வந்துபோனார்கள். வைத்தீஸ்வரனின் மாப்பிள்ளை வந்துவிட்டார் என்ற தகவல் கிட்டத்தட்ட மெல்பேர்ன் முழுவதும் பரவியிருந்தது.

அன்று தயானி வேலைக்குப் போவதற்கு முன்னர், நான் புதிதாக வேலையொன்றில் சேருவதற்கான உதவியை, தனது நண்பியின் கணவரிடம் கேட்டிருந்ததாக சொல்லியிருந்தாள். அவரது அலுவலகத்தில் என்னை காலையிலேயே கொண்டுபோய் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நான் மெல்பேர்னுக்கு வந்திறங்கிய நாளிலேயே என்னைப்பற்றி கேள்வியுற்றிருந்த அவர், நான் போய் இறங்கியதும் இருகரங்களினால் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். அவர் சேர்ட்டிலிருந்து வந்த வாசத்தை இதுவரை நுகர்ந்ததே இல்லை. ஓடிக்கலோனைவிடவும் நன்றாக இருந்தது.

கேள்விகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினார். இறுதிச்சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் வன்னியிலிருந்த தனக்கு தெரிந்த முக்கிய புலி உறுப்பினர்களை தொடர்புகொண்ட போது, தொலைபேசியில் தனக்கு கேட்ட போர் சத்தங்களை பெரிதாக ஒலியெழுப்பி செய்துகாட்டினார். அவை எனக்கு எப்படி கேட்டது என்று கேட்டார். இப்படி பல சந்தேகங்கள் அவருக்கிருந்தன. புலிகளின் பெருந்தளபதிகள் எங்கெங்கெல்லாம் முன்னணி போர் அரண்களை அமைத்திருந்தார்கள் என்று ஒரு ஒற்றையை எடுத்து அதில் ஆள்கூறுகள் குறித்து விளங்கப்படுத்தினார்.

“எல்லாம் இந்தியாவிண்ட வேலை” – என்று அலுத்துக்கொண்டு ஒற்றையில் ஊன்றிக் குத்தினார். கதையினால் கவலையடைந்துபோன அவரது விரல்களுக்கு இடையிலிருந்த பேனா மெதுவாக சரிந்து ஒற்றையில் விழுந்தது.

வெளியில் திடீரென்று மழையொன்று இறங்கியதும் மெல்பேர்ன் வானிலை பற்றிய சிறு விளக்கம் தந்தார். அதில் அவருக்கு எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. அலுவலகத்திற்குள் வெப்பநிலையை சற்று அதிகரித்துவிட்டார். பின்னர், தேனீரை வரவழைத்து தந்தார்.

“பல காலமாக எல்லோரையும் கேட்டுக்கேட்டு அலுத்துப்போன ஒன்றுதான். வேலை கேட்டு வந்த இடத்தில் கேட்கிறன் என்று மனச்சஞ்சலப்படாதேயுங்கோ. பழசுகளை மறக்கிறது கஸ்டம். அதுவும் பல காலமாக ஒரே இடத்தில இருந்தனியள் எண்டளவில, உங்கட பிரச்சினையளை இஞ்ச இருந்துகொண்டு நாங்கள் புரிஞ்சுகொள்ளயில்ல எண்டு நினைக்காதேங்கோ. அங்க இருக்கிற சனத்தைவிட எங்களுக்கு நல்லாவே தெரியம்….” – என்று இழுந்துவந்து –

“அவர் உயிரோடு இருக்கிறாரோ” – என்றார்.

அப்போது அவரது தலைமாத்திரம் கழுத்தைவிட்டு மேசையின் அரைவாசிக்கு எனை நோக்கி வந்திருந்தது. அந்தக் கேள்வியை தான் இரகசியமாகத்தான் கேட்பதாகவும் நான் சொல்லப்போகும் பதிலைக்கூட தான் இரகசியமாகவே பேணப்போவதாகவும் தனது மொத்த சரீரத்தாலும் உத்தரவாதம் தந்தார்.

அப்போது மழை மெதுமெதுவாக குறைந்து வெளித்தாழ்வாரத்தினால் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால், வெளியில் வானம் கறுத்தே கிடந்தது. தீடீரென்று சிறு மின்னல் கீலமொன்று பாளமாக வெளியில் தெரிந்து மறைந்தது.

அவருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, “ஊபர்” வாடகைக்கார் ஒன்றை பிடித்து ஏற்றிவிட்டார். போய் வருவதாக நான் தலையசைத்தபோது, அவரது கையசைப்பு மிகவும் தளர்ந்திருந்தது.

நேரம் மதியம் தாண்டியிருந்து. பாடசாலை முடிவடைந்த நேர போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலான வீதிகளில் அமைதியான பயணங்களே சாத்தியமாகவிருந்தன. வாகனங்கள் ஊர்ந்தபடியிருந்தன.

புதுநிலத்தின் முதல் மழைக்காலத்தை ஆச்சரியத்தோடு ரசிக்கத் தொடங்கினேன். கார் கண்ணாடிகளில் விழுந்து உடையும் மழைத்துளிகளும் நான் முன்பு பார்த்த அழகிய மரங்களின் நீராடலும் என் விழிகளில் புதிய ரேகைகளை வரைந்தன.

பாடசாலை சிறுவர்களும் சிறுமிகளும் சிரித்தபடி ஓடிச்சென்று பெற்றோரின் வாகனத்தில் ஏறுவதும் சிலர் தமக்கிடையில் வம்பிழுத்து போலியாக அடித்துக்கொள்வதும் கொஞ்சிக் கொள்வதுமாக வசதியான குறும்புகளோடு வீதியோரங்களில் நின்று கும்மியடிப்பதும் மழையைவிட பரவசத்தை தந்தன. அவர்களது கண்கள் மிகவும் அழகானவை. வண்ணங்கள் நிறைந்த மாபிள்கள்போல அவற்றின் வசீகரம் நான் இதுவரை அறியாத ஒளியால் மிளிர்ந்தன. அந்தக்கண்களுக்கு சிரிக்க தெரிந்திருந்தன. அவர்களது உதடுகள் சிரிக்காத நேரத்திலும் அவர்களது கண்கள் சிரித்தபடியிருந்தன. வெளியில் கண்ட காட்சிகளால் எனக்குள் ஆச்சரியங்கள் பல சுடர்களாய் துள்ளித்துள்ளி எரிந்தன. இறங்கி நின்று நனைந்துவிடலாம் போலிருந்தது.

அன்றிரவு என்னையும் தயானியையும் வைத்தீஸ்வரனின் நண்பவர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். வைத்தீஸ்வரனும் மனைவியும் கூடவே வந்திருந்தார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கான விருந்தென்பதால் எங்களது குடும்பத்துக்கு மாத்திரம் மிக எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் என்றெண்ணினேன். விருந்துக்கு எந்த சேர்ட் போடவேண்டும் என்பதைத்தவிர தயானி எதையும் சொல்லவில்லை.

ஆனால், அங்கு போய் இறங்கியபோது ஐந்தாறு குடும்பங்களை சேர்ந்த இருபது முப்பது பேர் வீடுமுழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தனர். படலைக்கு வெளியே ஏராளம் கார்கள். உள்ளே பலவர்ண பூங்கொடிகள். அவற்றின் மீது ஒளிச்செடிகள்.

வீட்டுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் –

“சிலிப்பரை வெளியில கழட்டவா” – என்று தயானியை பார்த்து மெதுவாகத்தான் கேட்டேன்.

அதிர்ந்து போனாள்.

“அதை ‘தொங்க்ஸ்’ எண்டு சொல்லிப் பழகுங்கோ…” – என்று என்னை அருகில் இழுத்து செவியினுள் அழுத்திச் சொன்னாள். பிறகு, தனது ஷல்வாரை சரிபார்த்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

“தொங்ஸ்…தொங்ஸ்…தொங்ஸ்….” – என்று மனப்பாடம் செய்துகொண்டு உள்ளே நுழைந்த என்னை வழக்கம்போல தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்யத் தொடங்கினார் வைத்தீஸ்வரன். எல்லோரும் என்னை நேரடியாக பார்த்து உரையாடக்கூடிய ஒரு கதிரையில் அமரச்சொன்னார். எனக்கு அருகிலிருந்த மேசையில் பலவகையான போத்தல்கள். அவற்றுக்கு அருகில் பொரித்த – வறுத்த இறைச்சித்துண்டுகள் கறிவேப்பிலைகளுக்குள் விரவிக்கிடந்தன. அவற்றை அவர்கள் கொறித்துக்கொள்ளாத இடைவெளியில், யாராவது ஒருவரிடம் எனக்கான கேள்வி தயாராக இருந்தது. கேள்விகளுக்கு இப்போது நான் பழக்கப்பட்டிருந்தேன். எதை முதலில் கேட்பார்கள், அதைத்தொடர்ந்து எந்தக்கேள்வி முளைக்கும். அது எதில் வந்து முடியும் என்பவற்றையெல்லாம் முழுமையாகத் தெரிந்திருந்தேன்.

அப்போது அங்கே வந்த தயானி “ஒருக்கா வாறீங்களா” – என்றாள். அந்த அழைப்பு எனக்கு பெரும் விடுதலைக்கான ஒலியாக கேட்டது. பாய்ந்து எழுந்து அவள் பின்னால் ஓடினேன்.

வீட்டின் நடுவில் அகலமான மரவேலைப்பாடுகளுடைய கதிரைகளில் ஒருதொகை பெண்கள் வட்டமாக புதைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெளியிலிருப்பவர்களின் துணையினர் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஒவ்வொருவரது கையிலும் ஏதோ ஒரு நொறுக்குத்தீனியிருந்தது.

“வாரும் வாரும்…வெல்கம் டு மெல்பேர்ன்” – என்று ஒரு பெண்மணி உதட்டுச்சாயம் வெடிக்க சிரித்தபடி அழைத்தார்.

“உமக்கு வயிற்றிலையா காயம் பட்டது. தயானி சொன்னா, காட்டும் பாப்பம்” – என்று இன்னொரு பெண்மணி சொல்லவும், அவர் கேட்டு முடிப்பதற்குள், தயானி எனது சேர்ட்டை முக்கால்வாசியை கழற்றிக் கொண்டிருந்தாள்.

மின்னல் ஊர்ந்ததுபோல எனக்கு உடம்பு ஒருகணம் உதறியது.

நான் இப்போது என்ன செய்வது, தயானி ஏற்கனவே களையத்தொடங்கிய சேர்ட்டை எப்படித் தடுப்பது? தடுக்கலாமா? காதுகள் சூடாகின. உதடுகள் இறுகிவிட்டன. எச்சிலை விழுங்க முயற்சித்தபோது அது தொண்டைக்குழியினில் இறங்கவில்லை. தயானி முழுதாகவே சேர்ட்டைக் கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு, எனது இடப்பக்க வயிற்றிலிருக்கும் நீண்ட காயத்தை கேள்விகேட்ட பெண்ணுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். அத்தனை பெண்களும் தங்கள் கழுத்துகளை என் வயிற்றை நோக்கி நீட்டி உற்றுப் பார்த்தார்கள். சிறுவர் – சிறுமிகளும்கூட அங்கே ஓடிவந்தனர். தங்கள் மாபிள் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். போதையிலிருந்த வைத்தீஸ்வரனின் நண்பர்களும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை, கோப்பைகளுடன் அங்கு விரைந்து வந்தார்கள்.

நானும் என் காயமும் நட்டவடுவில் எந்த உணர்ச்சியுமின்றி நின்று கொண்டிருந்தோம்.

அந்தக்காயம் ஏன் எனக்கு மரணத்தை தரவில்லை என்ற கோபம் முதன்முதலாக நெஞ்சில் வெடித்துப் பாய்ந்தது. எப்போது எனது சேர்ட்டை நான் மீண்டும் அணிவது என்றுகூட எனக்கு தெரியவில்லை. என்னை தயானி திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அந்த இடத்தில் அரைநிர்வாணமாக நிற்பதற்கு தகுதியானவன் என்ற பரிபூரண நம்பிக்கையோடு, தாயின் தோழிகளுக்கு காய விளக்கம் கொடுப்பதில் ஆர்வத்தோடிருந்தாள். காட்சிநேரம் நிறைவடைந்த பிறகு, சேர்ட்டை திருப்பித் தந்தாள்.

அந்தக்காயம் வெடித்து இரத்த அருவியாக கீழ் விழுந்து, சகதிக்குள் நின்று கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு.

அது என் காயம் மாத்திரமல்ல. ஒரு தேசத்தின் காயம். வலியடங்கியபோதும் நரம்பின் முனைகள் அனைத்திலும் கூடுபற்றாத விளக்குப்போல சுவாலையைக் கொளுத்தி வைத்திருக்கும் காயம். சொல்லப்போனால், இப்போது அது ஒரு அவமானத்தின் தடயம். அந்த துயரத்தின் சாட்சியத்தை என்னையே நான் நிர்வாணமாக்கி நின்று காண்பித்தேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

யாரிடமும் பகிரமுடியாத பெருவனத்தீயின் வெக்கை என்னுள் படர்ந்து படர்ந்து புகைந்தது. அழுது விடலாமா என்று நினைத்தேன். ஆனால், அந்த வீதியோர குழந்தைகளின் சிரிப்பு அப்போது நினைவில் புரையேறியது. அந்த வாழ்வுக்கும் இந்த நிலம் இடம்கொடுக்கும் என்ற நம்பிக்கை, நெஞ்சில் சிறு பிடிப்பைத் தந்தது.

அன்றிரவு தூக்கம் வரவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தயானியின் குறட்டை. இரண்டாவது விருந்தில் நானடைந்த நிர்வாணம். தயானியுடன் சிலதை மனம்விட்டுப் பேசவேண்டும். அவளுடன்தான் பேசவேண்டும். ஆனால், பேசலாமா? எப்போது பேசுவது? அப்படிப் பேசக்கூடியவனாக என்னை அவளும், அவளை நானும் உணர்கிறோமா? குறட்டை ஆரோகணித்துக்கொண்டு போனது.

பேசிச்செய்கின்ற திருமணத்தில் மாப்பிள்ளைக்கான உரிமைகள் என்ன என்று எந்த தரகரும் பட்டியலிடுவதில்லை. பேசிச்செய்கின்ற வெளிநாட்டு திருமணத்தில் எதை எதையெல்லாம் எப்போது எதிர்பார்க்கலாம் என்றுகூட யாரும் முன்கூட்டியே சொல்லிக் கொடுப்பதில்லை. பேசிச் செய்கின்ற ஒரு முன்னாள் போராளியின் திருமணத்தில் எதைத்தான் உரிமையாக நினைப்பது என்றும் எந்த தரகரும் சொல்லித் தருவதில்லை. இவ்வளவும் ஏன், பேசிச் செய்கின்ற திருமணத்தில் குறட்டையைக்கூட ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை.

இந்த வீட்டில் நான் இன்னமும் வைத்தீஸ்வரனின் மருமகனாகவும் தயானி அவர்களது மகளாகவும்தான் இருந்து கொண்டிருக்கிறோமே தவிர, நான் என்றொருவன் எங்கே வசிக்கிறேன் என்பது வரவர எனக்கே சந்தேகம் பூசத்தொடங்கிவிட்டது.

தயானிக்கு என் மீது அன்பில்லை என்றில்லை. ஆனால், அது ஒரு கணவன் மீதான அன்பாக இன்னும் கனியவில்லை. தனது பெற்றொரின் மருமகனுக்கு கொடுக்கும் மதிப்பாக மாத்திரமே என்னில் படர்ந்திருக்கிறது. கட்டில் மாத்திரம் அவளுக்குள் திடீர் விபத்துக்கள் போல என்னை கணவனாக காட்டிக்கொடுத்து விடுகிறது.

வந்தும் வராததுமாக எதிர்பார்ப்புக்களையும் குழப்பங்களையும் நான் அதிகம் மனதில் அடுக்கிக்கொள்வதாக எனக்கு பட்டது. டொய்லெட்டுக்கு போய்வந்து தூங்கிவிடலாம் போலிருந்தது. “அது டொய்லெட் இல்லை, வோஷ்ரூம்” – என்று தயானி இரண்டு நாட்களுக்கு முன்னர் அழுத்தி ச்சொன்னது ‘சுளீர்’ என்று நினைவில் வந்து விழுந்தது. “வோஷ் ரூம்…வோஷ் ரூம்….வோஷ் ரூம்…..” – என்று மனதுக்குள் சொல்லியபடி புரண்டு படுத்து நித்திரையாகிவிட்டேன்.

வெளியே எட்டிப் பார்த்தேன். மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருபது முப்பதுபேர் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பெட்டிகளுக்குள் நிற்பவர்கள் எல்லோரும் என்னைப் போலவே உள்ளாடைகள் மாத்திரம் அணிந்திருக்கிறார்கள். வரிசையில் மண்டபத்திற்குள் வருகின்றவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் நின்று எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். மண்டபத்துக்குள் வருபவர்களுக்கான வரிசையை, எனக்கு வேலை தருவதற்கென்று அழைத்துப் பேசியவர்தான் ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார். எங்களை பார்ப்பவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசுகிறார்கள். எனக்கு அருகிலிருந்த பெட்டியில் நின்று கொண்டிருந்த பெண்போராளிக்கு முன்பாக வரிசை நகராமல் நின்றுவிடுகிறது. அவளது வலது தொடையில் கிழிந்திருக்கும் நீண்ட காயத்தழும்பை வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்கள். குனிந்து கொள்ள இயலாத இறுக்கமான அந்தக் கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தன் உடலை மறைத்துக்கொள்ள முடியாமல் ஒரு புழுபோல நெளிகிறாள்.

அப்போது குரல்வளை அறுக்கப்பட்ட பலமான மிருகமொன்றின் கடைசியொலிபோல பெருஞ்சத்தமொன்று மண்டபத்தின் எல்லா சுவர்களிலும் மோதித் தெறிக்கிறது.

வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருகணம் அச்சத்தில் உடல் அதிர்கிறார்கள்.

எனக்கு மிகத்தொலைவிலுள்ள பெட்டியில் நின்று கொண்டிருந்தவன் கண்ணாடியில் தனது தலையினால் அடித்து அடித்து குழறுகிறான். அவன் எழுப்பிய சத்தத்தினால் கண்ணாடிப்பெட்டியில் உட்பக்கமாக புகார் படர்ந்திருக்கிறது. அவன் தன் உள்ளாடையுடன் சிறுநீர் கழித்துவிட்டிருந்தான். ஆட்கள் அதிகம் உள்ளே வந்து கொண்டிருப்பதால் பெட்டியை இப்போதைக்கு திறக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அவனது சத்தம் தொடர்ந்து மண்டபத்தை நிறைத்து அதிர்ந்து கொண்டிருக்கிறது. வரிசையில் நின்றவர்கள் அனைவரும் அவனை தங்கள் தொலைபேசியினால் படம் பிடிக்கிறார்கள்.

அப்போது நான் பலம் திரட்டி இடித்த எனது கண்ணாடிப்பெட்டி என்னோடு சேர்ந்து நிலத்தில் சரிந்து தெறிக்கிறது. குழறித் துடித்தவனின் கண்ணாடிப்பெட்டியை நோக்கி நான் ஓடுகிறேன். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் சிதறியோடுகிறார்கள்.

நெற்றி வெடித்து வழிந்த இரத்த வாசம் எனக்குள் பரவி தலை சுற்றுகிறது. வாந்தியெடுப்பதற்கு துள்ளியெழுகிறேன்.

வேகமாக மூச்சு வாங்கியபடியிருந்தது. உடல் வியர்த்திருந்தது.

தயானியின் குறட்டையொலி சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது.

டொய்லெட்டுக்கு போய்வந்து படுத்தேன்.

காலையில் தயானி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தாள். வைத்தீஸ்வரனும் மனைவியும் வேறேதோ வேலைக்காக வெளியில் போயிருந்தார்கள். இறால் போட்ட முருங்கைக்காய் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும் குசினிலியிருப்பதாக தயானியின் அம்மா சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

முதல்நாள் கனவு காலையில் ஞாபகம் வரவில்லை. ஆனால், மனம் ஏதோவொரு பாரத்தை உணர்ந்தபடியிருந்தது. எல்லோரும் வெளியில் சென்றபிறகு நினைவிலிருந்து மேலெழுந்துவந்த இரவின் துண்டங்கள், கரிய மகரந்தங்களாக கண்முன்னால் கனவை வரைந்து காட்டியது. மனசுக்கு வெளிச்சம் தேவைப்படுவது போலிருந்தது. வீட்டுப் பூந்தோட்டத்திற்குள் நடக்கப் போனேன்.

சிவப்பு மஞ்சள் நிற மணிப்பூக்கள் நிறைந்த சாடிகள் வரிசையாக வைக்கப்பட்டு, பாத்தி வெட்டிப்பிரித்த தோட்டத்தின் விளிம்புகள் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தன. அரிந்து வெட்டப்பட்ட புற்கள் அழகாக பதிக்கப்பட்டு, நடுவில் பெண்ணொருத்தி சரிந்த பானையை இடுப்பில் இருத்தியபடி சிறப்பான சிற்பமாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பானைக்குள் நுழைத்துவிடப்பட்டிருந்த குழாயினால் நீர் பாய்ந்து, சிற்பத்துக்கு கீழிருந்த வட்டத்தொட்டிக்குள் விழுந்து கொண்டிருந்துது. பார்த்த இடங்களில் எல்லாம் பெயர் தெரியாத வண்ண வண்ண பூக்கள் காற்றுக்கு குனிந்து நிமிர்ந்தபடியிருந்தன. ‘மணிப்பிளாண்ட்’ போல பசுமையான மரங்கள் வீட்டிற்கு பக்கத்து வேலியோரமாக வரிசையாக வளர்ந்திருந்தன. அதனைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் வரைக்கும் சென்றபோதுதான், அடிவளவில் சடைத்திருந்த கற்பூரவள்ளி கண்களில் பட்டது. அருகில் போவதற்கு முன்னரே அந்த வாசம் நினைவிலே ஓங்கி அறைந்தது. இரண்டு இலைகளை உடைத்தேன். அதே வாசம்! காடுகளில் கண்டால் பாய்ந்து சென்று முறித்து கைகளில் பிழிந்து தேய்த்துக்கொள்ளும் அதே வாசம்! முகத்தை அருகில் கொண்டு செல்வதற்கு முன்னரே, வாசம் இதயம்வரை சென்று உடலெங்கும் பரவியது.

எனது நேசத்துக்குரியவற்றையும் இந்த மண் தன்மீது எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டுதானிருக்கிறது என்பதை எண்ணியபோது மனதில் ஒரு நிறைவு பிரவாகித்தது.

அடுத்தநாள் பத்து பத்தரை மணி முதல் வீடு ஒரே சத்தமாக இருந்தது. எங்களது அறையில் கொம்ப்யூட்டரில் நான் ட்ரைவிங் சோதனைக்காக படித்துக் கொண்டிருந்தேன்.

நடைபெறவிருந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வருடா வருடம் பொதுச்சுடரேற்றும் பொறுப்பிலிருந்து வைத்தீஸ்வரன் விலக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்திருந்தது. முன்னறையில் சேகுவரா படத்துக்கு கீழிருந்த தொலைபேசி ஒலித்தபடியேயிருந்தது. வைத்தீஸ்வரன் தனது அறைக்குள் போவதும் வருவதுமாக அலைகழிந்தபடியிருந்தார்.

ஆஸ்திரேலிய தமிழ் தேசியக்கழகங்களின் சம்மேளன பொறுப்பாளர் இராவணனோடு தொடர்ச்சியாக தொடர்பெடுத்து கேட்டதில், விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப்போரில் இறந்துவிட்டதாக நான் சொன்ன தகவல், மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவின் காதுகளுக்கு பெருஞ்சாட்சியமாக சென்றடைந்ததுதான் வைத்தீஸ்வரனை சடங்கிலிருந்து நீக்கியதற்கு காரணமாக கூறப்பட்டது.

விட்டு விட்டுக் கேட்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டதில் சிக்கலின் முழுவடிவம் எனக்கு புரிந்து விட்டது.

தயானியை வேலையிலிருந்து வேளைக்கு வரும்படி வைத்தீஸ்வரன் அழைத்திருந்தார். சாப்பிடாமலேயே வயிற்றைத் தடவியபடி முன்னறையில் காத்திருந்தார். தயானியின் கார் சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று கதவை திறந்தார். வாசலில் மகளோடு பேசிய இரகசியம் மேல்வீட்டிலிருந்த எனக்கு அவரது குரலின் வழக்கமான ஏற்ற இறக்கங்களோடு நன்றாகவே கேட்டது.

தயானி அழைப்பதற்கு முதலே நான் கீழே சென்றேன். விருந்தினர்கள் வந்தால் வரவேற்று இருத்துகின்ற படகுபோன்ற கதிரையின் நுனியில் இருந்துகொண்டு என்னையும் தயானியையும் எதிரே அமரும்படி சைகை செய்தார் வைத்தீஸ்வரன். தண்ணீர் கொண்டுவருமாறு மனுசிக்கு உத்தரவிட்ட பின்னர் இப்படி தொடங்கினார்.

“தம்பி, நாங்கள் இந்த நாட்டில மரியாதையோடு வாழுற குடும்பம். எங்கட குடும்பத்துக்கென்று ஒரு பெயர்…. கௌரவம்…. இருக்கு. போராட்டமும் சொந்த மக்களிண்ட வாழ்க்கையும் எங்கட இரத்தத்தில் கலந்தது. தயானி சொன்னவவோ தெரியேல்ல. தயானியிண்ட அம்மாண்ட மச்சான் நாட்டுப்பற்றாளராக வீரமரணமானவர். இப்படி போராட்டத்துக்காக நாங்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமில்ல.

“போராட்டத்தைப்பற்றி ஒரு சொல்லு கொச்சையா கதைக்கத் தெரியாத குடும்பம் இது தம்பி”

தயானியையையும் தண்ணியோடு வந்த மனுசியையும் ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தார் –

“அதுக்காக நீங்கள் செய்த தியாகத்தையும் பட்ட துன்பத்தையும் நான் குறைச்சு சொல்லயில்ல.

நீங்கள் அண்டைக்கு வேலை கேட்கப்போன இடத்தில, கதைச்ச தேவையில்லாத விசயம், ஏதேதோ மாதிரி கதைபட்டு, இப்ப அது என்ர மடியில வந்து கை வச்சிருக்குது.”

“தயானி நிக்கட்டும், நீங்கள் மாத்திரம் என்னோட வந்து ஒருக்கா நான் சொல்லுறவரிட்ட மன்னிப்பு கேட்டுவிடுங்கோ. மிச்சத்த நான் பாத்துக்கொள்ளுறன்”

மனுசி நீட்டிய தண்ணியை அண்ணாந்து தொண்டையில் ஊற்றினார். ஓரிரு துளிகள் வாயினால் வழிந்து வண்டிவரைக்கும் வளைந்தோடியது.

தயானி என்னைப் பார்த்தாள். முதல்நாள் அவள் வெட்டச்சொன்ன விரல் நகங்களை வருடியபடி அவளை பார்த்தேன். நான் நகம் வெட்டியதற்கு குறைந்தபட்ச அங்கீகாரமாவது அவளது கண்களில் தெரியும் என்று தேடினேன். பிரம்பு போலிருந்தது அவள் பார்வை.

ஒரு உலேகப்பறவை போல எனதுடல் அசையாமலிருந்தது. ஒரு கடவுச்சீட்டும் திருமணமும் எனக்குள் பரிபாலித்த வாழ்வு உள்ளே சுவாசிப்பது எனக்கு மாத்திரம் கேட்டது.

போர்நிலத்தில் ஓய்வெடுக்கும் துப்பாக்கியின் மீது அமர்ந்து இறகுலர்த்தி தங்களை அழகு பார்த்த பறவைகள் இவர்கள். தூரத்தில் வேட்டொலி கேட்டாலே பறந்துவிடும் சாவின் பயம் நிறைந்த சம்பிரதாயக்குருவிகள். இன்று இவர்கள் ஓய்வெடுப்பதற்கு துப்பாக்கிகள் இல்லை. துப்பாக்கிகளைச் சுமந்தவர்களின் மீதமர்ந்து குரல் எழுப்பி குதூகலிக்கிறார்கள். அது துப்பாக்கிச் சத்தமாகவே எதிலொலிக்கும் என்று தங்கள் குரல்வளைகளில் ஒப்பனையிட்டுப் பார்க்கிறார்கள்.

நிலமெங்கும் கந்தக விதைகளைத் தூவிய போரின் ஒப்பாரியைவிட இவர்களின் சிரிப்பொலிகள் பதற வைக்கிறது. 

‘டொயாட்டா க்ளுகர்’ மெதுவாக சென்று கொண்டிருந்தது. நான் வைத்தீஸ்வரனின் பக்கத்திலிருந்தேன். காருக்குள்ளேயும் தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்து கொண்டிருந்தன.

“நான் அவரோட வந்து கொண்டிருக்கிறன் தம்பி, வாறன்…வாறன்…இன்னும் அரைமணித் தியாலத்தில நான் அங்க நிப்பன்” – என்று தனியான ஒரு அழைப்புக்கு அதிக பணிவோடு பதிலளித்தார்.

பாடசாலை முடிந்தநேரம். வழக்கம்போல போக்குவரத்து நெரிசலாக இருந்தது. வெளியில் பார்த்தேன். பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சிறுமியர்கள் வரிசையில் நின்று என்னைப் பார்த்து கையசைத்தார்கள். புன்னகைத்தார்கள். மாபிள் கண்கள் சுருங்கத் சிரித்தார்கள்.

***

ப. தெய்வீகன் – இவர் தற்போது வசிப்பது அவுஸ்திரேலியாவில். இதுவரை மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன, “அமீலா” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular