Thursday, March 28, 2024
Homesliderதீபச் செல்வனின் ‘நடுகல்’ நாவல் விமர்சனம்

தீபச் செல்வனின் ‘நடுகல்’ நாவல் விமர்சனம்

  • அ.நாகராசன்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

        இப்பூப்பந்தே குருதியால் சிவக்குமளவு, பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நிகழ்ந்த யுத்தங்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளும், இதிகாசக் கதைகளும் நம்மிடை காலங்காலமாய் உலவுகிறது.. யுத்தங்களைக் குறித்த நம் பார்வை உணர்வு பூர்வமான ஒன்றாகவோ அல்லது நாம் கற்பித்துக்கொண்ட அறம் சார்ந்த ஒன்றாகவோதான் இருக்கும்.

இந்நாள் வரை யுத்தங்கள் நிகழும்போது யுத்த பூமியை சுற்றி வாழ்ந்த சாதாரண அப்பாவி குடிமக்களுக்கு நிகழக்கூடிய அனுபவங்களை குறித்த சிந்தனை குறிப்புகள் நம்மிடை இல்லை.

23-7-1983 முதல்  18-5-2009  வரை மூன்று கட்டங்களாக விடுதலை புலி இயக்கமோடு, ஸ்ரீலங்கா ராணுவம் நிகழ்த்திய உள்நாட்டு போரினை  பின்புலமாகக் கொண்டு, 2011-2012 க்கு  முன் 1996 ஆம் ஆண்டு ஆனி மாதம் முதல்  கிளிநொச்சி, எ-9 வீதி, முறிப்பு, இரத்தனபுரம் கனகபுரம், கந்தபுரம், மணியங்குளம் ஆகிய பகுதியில் வாழ்ந்த சாமான்ய நிராயுதபாணியான அப்பாவி தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த வரலாற்றுக் கொடுமைகளையும், தனி மனித சோகங்களையும், மங்கையர் சந்தித்த வன் கொடுமைகளையும்  தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவலை வாசிக்கையில் “ If  You have tears shed them now “ என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

நாவலின் முக்கிய நிகழ்வு ஒரு தாய்  தன் மகன் மற்றும் மகளுடன் வளம் மிகுந்த தன் சொந்த மண் கிளிநொச்சியை துறந்து, செல்லடிக்கும் சூப்பர் செனிக் விமானத்தின் குண்டுமழை தாக்குதலுக்கு அஞ்சி  குடும்பத்தை பாதுகாக்க முறிப்பு, கந்தபுரம், பின்னர்  முரசுமோட்டை தர்மபுரம், விசிவமடு என தஞ்சம் புக ஓடுவது தான் . அவளைப் போலவே அனேக குடும்பத்தினர் அவசிய தேவைகளை சிறு துணி முட்டைகளில் சுருட்டிக் கொண்டு, முதியவர்களை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டும், டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் இடம் பெயர்ந்து அகதிகளாய் வருகிறார்கள்.

        அமைதியாக இயற்கை சூழலில்  “எந்த சர்வதேசக் கொள்கையையும், வர்க்க கோட்பாட்டையும் அறிந்திரா இவர்கள் வாழ்ந்த வீதியின் முகப்பில் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு, வீதியே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்திருந்தது .லொறிகள், உழவியந்திரம் திருத்தும் பெரும் இயந்திர திருத்தகம் அங்கு இருந்தன. எல்லாம் குண்டு வீச்சால் சிதைந்திருக்க அவை மீது கந்தகப்புழுதி. அச்சமூட்டும் ஆளற்ற வீதி. வாய்காலுக்கு கீழாக ஒரு பிணம் ஊதிப்போயிருந்தது. புழுக்கள் நெளியும் பிணம், துர்நாற்றம். வீடும், சுவரும் மண்ணோடு மண்ணாகி விட்டது. விமான குண்டில் சிதைந்திருக்கும் தேமா மரம்.. தென்னை மரங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.”    நிகழ்ந்த இந்த பூகம்பம் தான் இவர்களை  வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டி குண்டு மழையும், பதுங்கு குழியும், நித்தைய நிகழ்வும் புகலிடமாயும் ஆக்கி இருந்தது.

இறுதியில்,அவர்களின் சேருமிடம் — முள் வேலி முகாம்கள். .

“ஒரு 25 ஏக்கர் சுற்றிச்சுற்றி முள் வேலிகள், சுற்றி இன்னொரு வேலியாக துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர் கண்காணிப்புகள்.

மூன்று தலைமுறைகளாக இவர்கள் சந்தித்த யுத்த கொடுமைகளின் உச்சமாக நலன் புரி நிலையம் என்ற பெயரில் அமைந்த சித்திரவதை செய்யும் முகாம்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் அகதி முகாம்கள்.

அங்கே “சனங்கள் கைதிகளாக இருந்தார்கள். சனங்களின் முகங்கள் காய்ந்து கோணி இருந்தன. முகாம்கள் மூன்று லட்சம் சன அவலக் கதைகளை தன்னுள் வைத்திருந்தன”. இந்த முகாம்களை நிர்மாணிப்பதற்காக பெரும் காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. அங்கே கேட்கும் குரல்கள்…..

“அம்மா அழாதிங்கோ எல்லோரும் உயிரோடை இருக்கிறம்தானே.”

“இந்த முள் வேலி எல்லாம் மூடுகிற நாள் வரும்.. பழைபடி எல்லாம் மாறும்”

தாய் மக்களை பிரிகிறாள். அல்லல் உறுகிறாள். படிக்க வேண்டிய வயதில், சொந்த மண்ணில் அகதிகளாய் உணவு இருப்பிடம் இன்றி ஒடி ஒளிந்து அஞ்சி வாழும் வலிகளை அவள் பிள்ளைகள் நேருக்கு நேராகச் சந்திக்கிறார்கள். இதுபோல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள். இந்த குடும்பத்தார் செய்த கலகம் என்ன.?.. விரட்டித் தாக்கும் அளவுக்கு செய்த தேசதுரோகம் தான் என்ன.?

அதனால் தான்

“ If  You have tears shed them now “

நாவலை, நிகழ்காலம்,.பின் இறந்தகாலம், மீண்டும் நிகழ்காலம் என்று காலச்சக்கரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி பாதிக்கப்பட்ட வினோதன் என்ற சிறுவன் பார்வை வாயிலாக அவன் வளர்ந்த இளைஞன் ஆவது வரை கதை சொல்லப்பட்டுள்ளது,.

நடுகல் குறித்த புறநானுற்று சங்க இலக்கிய பாடல் அறிமுகத்துடன் நாவல் துவங்கி முதல் அத்தியாயத்திலேயே தன் இனத்தை வாழ்ந்த பூமியை காக்கும் போரிட்டு மாண்ட மாவீரனின் வீர சாவுக்கு தலைவணங்கும் விதத்தில் அவன் குடும்பத்தார் கல் ஒன்றை நட்டு மரியாதை செய்யும் நிகழ்வைச் சொல்லி நேரிடையாக கதையின் மையப்புள்ளியைச் சுட்டி விரிகிறது.

“அம்மா அக்கல்லை குளிப்பாட்டுவாள். உணவூட்டுவாள். அதில் இறந்து போன தன் மகன் முகம் தெரிகிறதென்பாள்.”

இலங்கை இராணுவத்துடன், விடுதலைப்புலி இயக்க போராளிகள் நடத்திய நீண்ட உள் நாட்டுப் போரில் மரணம் அடைந்த வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களை கொண்டவை  மாவீரர் துயிலும் இல்லங்கள்.. அந்நினைவு ‘நடுகல்’லை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி அவ்வீரனின் பொற்றோர்கள் வழிபடுவது வழக்கம். அந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் கதை சொல்லும் வினோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும்                            இடையே நடந்த உரையாடல் இப்படி உள்ளது.

‘ஏன் அண்ணா இவ்வளவு பேரும் செத்தவையள்’

‘ம்.. மாவீரர்களைக் கும்பிடு அவையள் எங்களுக்காக போராடித்தான் வீரச்சாவடைந்தவையள்’

‘அவையிண்டை அம்மா அப்பா தம்பி எல்லாம் அழ மாட்டினமா.’

அழுவினம் தான்’

‘அவையள் பாவம் எல்லோ’

‘ஆனால் அந்த அம்மா அப்பா தம்பியளோடை எங்கடை மண் எல்லாத்தையும் ஆமியிட்டை இருந்து காப்பத்தானே வீர சாவடைஞ்சவை.’ இவனுன் சில நாட்களுக்குப்பின் வீர சாவடைந்து இங்கே நடுகல்லாய் விதையாய் மீண்டும் விதைக்கப்படிருக்கிறான்.”

இந்த சண்டைகள் முடியும். எங்களுக்கு ஒரு விடிவு வரும். விடுதலை அடைஞ்ச தமிழீழத்தில் எங்கடை மக்கள் எல்லாம் நிம்மதியாய் இருபினம்”

என்று பிரியா விடை தந்த அந்த வெள்ளையன் என்ற அண்ணன் பின்னர் வீர சாவையடைந்து கந்தபுரத்துக்கு வருகிறான். இயக்கத்தினர் அவனை கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நடுகல் வைத்து வணங்கினர்..,

கதையின் பிரதான பாத்திரங்களான, வினோதன் மற்றும் வீர சாவையடைந்த அவன் அண்ணன் வெள்ளையன் என்கிற பிரசன்னா வழியாக ஆசிரியர் எதிர்காலம் பற்றிய செய்தியை சொல்கிறார்.

வினோதன் ஜனநாயக முறையில் விழிப்புணர்வை விதைக்கும் பத்திரிக்கையாளன் ஆகிறான்.

ஆசிரியர் சொல்லும் நடுகல் வேறு பரிமாணத்தில் பொருள் தந்து நம்பிக்கையை விதைக்கிறது.

நடுகல்
தீபச்செல்வன்
டிஸ்கவரி புக் பேலஸ்
***

அ.நாகராசன்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular