Thursday, March 28, 2024
Homesliderதிரும்பத் திரும்ப நந்திக் கடலை நோக்கியே நடந்து கொண்டிருப்போம் – நிலாந்தன்

திரும்பத் திரும்ப நந்திக் கடலை நோக்கியே நடந்து கொண்டிருப்போம் – நிலாந்தன்

நேர்கண்டவர் : அகர முதல்வன்

நிலாந்தன் -ஈழத்தின் அரசியல் ஆய்வாளர்களில் மிகக் குறிப்பிடத் தகுந்தவர். அதுமட்டுமில்லாது கவிஞர், ஓவியர், கட்டுரையாளர் பல்கலை ஆற்றல் கொண்டவர். ”மண்பட்டினங்கள்”, “யாழ்ப்பாணமேஓ எனது யாழ்ப்பாணமே”  “வன்னிமாண்மியம்”, ”யுகபுராணம்” ஆகிய இவரின் கவிதைத் தொகுப்புக்கள் ஈழத்தமிழரின் நவீன விடுதலைப்போரை இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றோடு விவாதித்தவை. இவருடைய “புலிகளுக்கு புலிகளுக்கு பின்னரான தமிழ் அரசியல்” என்ற கட்டுரைத் தொகுப்பு 2018ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தின் முதல் தெருவெளி நாடகமான “விடுதலைக்காளி ” படைப்பின் எழுத்தாளரும் நெறியாளரும் இவர்.

***

BUNKER FAMILY
Pen and ink on paper,1990 (நிலாந்தன்)

ஈழத்தமிழரின் அறிவுஜீவிப் பரப்பில் நீங்களுமொருவர். தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட நிறைய அறிவுஜீவிகளையும் ஈழ ஆயுதப்போராட்டத்தின் வரலாறு கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் ஈழத்தின் அரசியலை எதிர்வு கூறவல்லவராக உங்களையும் கருத முடியும். முள்ளிவாய்க்கால் பேரூழிக்கு பின்பான இன்றைய திகதிவரை ஈழத்தமிழ் சமூகம் தவறவிட்ட அரசியல் அணுகுமுறையென எதனைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

நிலாந்தன் அறிவு ஜீவியல்ல. அரசியற் சோதிடனும் அல்ல. ஒரு சாட்சி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். 2009 மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப்பெறும் போராட்டம்தான். அப்படியொரு போராட்டம் குறிப்பாக தாயகம், டயஸ்போறா, தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளையும் இணைத்து இன்றுவரை எழுச்சி பெறவில்லை. இப்பொழுது எங்களிடம் மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் மைய அரசியல்தான். அதிலும் கூட மக்களை விமர்சனபூர்வமாக சிந்திக்க வைக்கும் அமைப்புக்கள் அல்லது கட்சிகள் இனிமேற்தான் பலமடைய வேண்டும்.

நீங்கள் கூறும் தாயகம் – புலம் – தமிழகம் என்ற மூன்று பரப்புக்களும் இணைத்து போராட்ட எழுச்சி நிகழவில்லை. ஆனால் தனித்தனியாக நிகழ்கிறது என்ற மயக்கமும் இருக்கச் செய்கிறது. குறிப்பாக புலம்பெயர் அதாவது டயஸ்போறோ சூழலில் சர்வதேச நீதியைப் பெறும் போராட்டம் இன்று அறவே இல்லாமல் இருக்கிறது. ஐ.நாவின் முன்றலில் வருடத்தில் ஒருமுறை ஒன்று கூடுவது சடங்காக ஆக்கப்பட்டிருக்கிறதோ என்ற கவலையும் எனக்கிருக்கிறது. நீங்கள் புலம்பெயர் அரசியல் சக்திகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

மிழ் டயஸ்பொறா இல்லையென்றால் 2009இல் பின்முறித்து வீழ்த்தப்பட்ட தமிழ்கூட்டு உளவியலை நிமிர்த்துவது கடினமாக இருந்திருக்கும். நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தமிழ்க்கூட்டு மனோநிலையை 2009-க்கு பின்வந்த ஆண்டுகளில் நிமிர்த்தி எடுத்தது குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழ் டயஸ்பொறா தான்.

2009-க்குபின் உடனடுத்து வந்த ஆண்டுகளில் தாயகத்தில் ஒரு பயக்கெடுதியான சூழல் இருந்தது. இதனால் டயஸ்பொறா எல்லாவற்றையும் துணிந்து முன்னெடுத்தது. அஞ்சல் ஓட்டக்கோல் தமிழ்  டயஸ்பொறாவின் கையில் இருப்பதாக ஒரு தோற்றம் எழுந்தது.

இனப்படுகொலைக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தின் பெரும்பகுதியை டயஸ்பொறா தான் முன்னெடுத்தது. ஜெனிவா அரசியலில் பெரும்பகுதியை டயஸ்பொறா  தான் முன்னெடுத்தது. தாயகத்தில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்களுக்கு டயஸ்பொறாதான் நிதிஉதவிகளை வழங்கியது. பெரும்பாலான கட்சிகளுக்கு டயஸ்பொறாதான் நிதிஉதவிகளை வழங்கியது. இப்பொழுதும் வழங்குகிறது.

ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் டயஸ்பொறாவே பிரதான   மையமாகச் செயற்பட முடியாது. மையம் தாயகத்தில் தான் இருக்கலாம்.  டயஸ்பொறாவும் தமிழகமும் பின்தளங்கள் தான். 2015க்கு பின் தாயகத்தில் ஒரு பொருத்தமான மையத்தை கட்டி எழுப்பக் கூடிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தமிழ் கட்சிகள் அதை பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகளும் ஒரு கட்டத்துக்கு மேல் பாய முடியவில்லை. இந்த வெற்றிடம்தான் டயஸ்பொறா ஒரு பதில் மையமா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இங்கு தவறு தாயகத்தில்தான் உண்டு.

அதேசமயம் டயஸ்பொறாவிற்கும் தாயகத்துக்கும் இடையே அடிப்படையில் கள   யதார்த்த வேறுபாடு உண்டு.  தாயகத்துடன் ஒப்பிடுகையில் டயஸ்பொறா அதிகம் சுதந்திரமான ஒரு பரப்பாக காணப்படுகிறது என்பதனால் அங்கே இருப்பவர்கள் ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியாக சிந்திக்கிறார்கள். ஆனால் தாயகத்தில் யதார்த்தம் அவ்வாறு இல்லை. இதனால் டயஸ்பொறாவில் செயற்படும் பல அமைப்புக்கள் தாயகத்தில் செயற்படுவதற்கு சட்டரீதியிலான பிரச்சினைகள் உண்டு.

ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு தாயகத்தில் சட்டரீதியாக செயல்பட முடியாது. இந்தியாவிலும் செயற்பட முடியாது. பத்து ஆண்டுகளின் பின்னரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். எனவே சட்டரீதியாக தாயகம்; தமிழகம்; டயஸ்போரா ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இணைவதற்கு ஜனநாயகத்தை விட்டால் வேறு இடையூடாட்டத் தளம் கிடையாது. பொருத்தமான ஜனநாயக தரிசனத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பு தாயகத்தை மையமாகக்கொண்டு டயஸ்பொறாவையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்காத வரை ஈழத்தமிழ் மக்களின்  அரசியலானது வாக்குவேட்டை அரசியலாகவே சுருங்கிக் காணப்படும்.

உங்களுடைய “மண்பட்டினங்கள்” என்ற கவிதைத்தொகுதி ஈழத்தமிழர் போரிலக்கியப் பிரதிகளில் அதி சிறந்தது. அதில் போராளிகளை “தஸ்யுக்களாக” உருவகித்து இருப்பீர்கள் அல்லவா!-அதன் பிறகான காலங்களில் ஏன் கவிதை இலக்கியத்தில் அவ்வளவு தொடர்ச்சியான தீவிரத்தைக் காட்டவில்லை?

ண்பட்டினங்களில் வரும் தஸ்யுக்கள் மக்களே.

அத்தொகுப்புக்குப் பின்னரும் நான்கு தொகுப்புகள் வந்தன.

நான் தொடர்ச்சியாகக்  கவிதை எழுதுவதில்லை. தொடர்ச்சியாக ஓவியங்கள்; கார்ட்டூன்கள் வரைவதுமில்லை. ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுவேன். கடந்த பத்தாண்டுகளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் பொருத்தமான கருத்து உருவாக்கத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கவிதை ஒரு கட்டத்துக்கு மேல் போகாது. கூட்டு காயம்; கூட்டு மனவடு; கூட்டுத் துக்கம்; கூட்டு அவமானம்; கூட்டுச் சோர்வு போன்றவற்றுள் அழுந்திக் கிடந்த எனது மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டிருந்தது..

இறந்த காலத்தை மம்மியாக்கம் செய்துவைத்துக் கொண்டு நிகழ்காலத்துக்கு வரமுடியாமல் தத்தளிப்போரை கள யதார்த்தத்தை நோக்கி கிரிட்டிக்கலாக – விமர்சன பூர்வமாக சிந்திக்க வைக்க  வேண்டும்.

புலிகள் இயக்கம் மீதான விமர்சனங்கள் பலதுண்டு. அவற்றில் உண்மைகளும் உண்டு. கண்மூடித்தனமான பொய்களும் கற்பனைகளும் உண்டு. ஆனால் இந்தப்புலி எதிர்ப்பின் ஒரு முத்தல் பருவம் தமிழ் தேசியவாத போராட்டத்திற்கு எதிரானதாக. சிலரின் கருத்துக்களில் தோன்றியிருக்கிறது, அதுகுறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ல்லா மக்கள் போராட்டங்களிலும் தவறுகள் இருக்கும்.  அதிலும் ஆயுதப்போராட்டத்தில் அதிகமாக இருக்கும். ஓராயுதப் போராடத்துள் இருக்ககூடிய தவறுகளுக்காக அந்த மக்கள் கூட்டத்தின் போராட்டமே பிழை என்று கூற முடியாது. தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது; நீதிக்கானது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை?..

தமிழ் தேசியவாதம் என்பதே ஈழத்தின் ஆதிக்க சாதியொன்றிற்கான அரசியல் கோஷமென சில ஈழத்தமிழ் படைப்பாளிகளே கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர். மேலும் புலிகள் இயக்கம்  சாதி ஒழிப்பிற்கான நிகழ்ச்சி நிரலைக்கொண்டிருக்கவில்லை எனவும் ஒருவகை தட்டையான கருத்துக்களை எழுதுகிறார்களே, அதுபற்றிய உங்கள் பார்வை என்ன?

மிழ் தேசியத்தை சாதிமைய தேசியமாகக் கருதும் பலரும் தேசியம் என்றால் என்ன என்ற விளக்கமின்றி காணப்படுகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட ஒரு சொல் சமஸ்டி. அப்படித்தான் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு சொல் தேசியம். அந்தச் சொல்லை சாதாரண தமிழ்மக்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளும் போராளிகளும் கூட அதற்குரிய முழுமையான அர்த்தத்தில் விளங்கி வைத்திருந்தார்களா? என்ற கேள்வி இங்கே உண்டு.

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரட்சியின் கூட்டுப் பிரக்ஞை.

பாரம்பரிய தேசியவாதம் தொடர்பான கோட்பாடுகளின்படி தேசத்தை அல்லது தேசிய உணர்வை இனம்; மொழி; நிலம்; பண்பாடு; பொதுப்பொருளாதாரம் போன்றவை பெருமளவுக்குக் கூட்டாக உருவாக்குகின்றன.  இவை தவிர மற்றொரு அம்சமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. எந்த ஓர் இன அடையாளம் காரணமாக மொழி அடையாளம் காரணமாக ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ  அதே அடையாளங்களின் பெயரால் அவர்கள் திரள் ஆகிறார்கள். எனவே தமிழ்த்தேசியம் எனப்படுவது அடக்குமுறைக்கு அதாவது இனப்படுகொலைக்கு எதிரான திரட்சிதான்.

இனப்படுகொலை எனப்படுவது தனியே ஒரு சாதிக்கு எதிரானது அல்ல. ஒரு சமயத்துக்கு எதிரானது அல்ல. ஒரு பாலுக்கு எதிரானது அல்ல. அது ஓர் இனத்துக்கு எதிரானது. ஒரு மக்கள் கூட்டத்தை   தேசமாக வனையும் அடிப்படை அம்சங்களை அழிப்பதே  இனப்படுகொலை. எனவே தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரட்சியுற்றார்கள். அது ஒரு சாதித்திரட்சி அல்ல. பிரதேசத் திரட்சியுமல்ல.

ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்காட்டும்  எல்லா அம்சங்களும் முற்போக்கானவைகளாக  இருக்க வேண்டும் என்றில்லை.  சாதியை சமயத்தை பிரதேச வாதத்தை முன்னிறுத்தும் போது அது சமூகத்துக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. எனவே பெருந்திரள் சிதைகிறது. அதனால்தான் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது மக்களைத்  திரளாக்க வேண்டும். அதைத்தான் மேற்கத்திய அறிஞர்கள் தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதன்படி பால், சாதி, சமய, பிரதேச ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் ஒருவர் தேசியவாதியாக இருக்க முடியாது.

ஆனால் ஆயுதப்போராட்டம் எனப்படுவது அதிகபட்சம்  படைத்துறைப் பண்புமிக்கது. அங்கே தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பாதுகாப்பது சவால்கள் மிகுந்தது. தமிழ் தேசியத்தின்  ஜனநாயக உள்ளடக்க போதாமைகள் காரணமாகத்தான் இயக்கச் சண்டைகள் வந்தன. மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன. இறுதியிலது தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையில் அது முற்போக்கானது. அது தேசியப் பண்புடையது.

விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிப்படையாக சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கையாளவில்லை. ஆனால் அது சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒரு கொள்கையாகப் பேணியது என்று குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.

பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் வெளியாகும் ஈழப் படைப்பிலக்கியங்கள் குறித்து விமர்சனங்களோ அல்லது ஒரு ஆரோக்கியமான விவாதமோ நடக்கவில்லை. மாறாக அது இயக்க மனோபாவங்களின் சார்பு நிலைகளோடுதான் அணுகப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு ஆய்வாளராக விமர்சனப் பணியையும் செய்யலாம் அல்லவா?

டந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நான் கருத்துருவாக்கத் தளத்திலேயே கவனத்தைக் குவித்து வருகிறேன். இலக்கிய விமர்சனமும் கருத்துருவாக்கந்தான். ஆனால் அரசியல் விமர்சன கட்டுரைகள் இலக்கிய விமர்சனங்களை விடவும் பரந்த வெகுசனப்பரப்பை நோக்கிச் செல்லும். ஈழத்தமிழர்களின்  உடனடித்  தேவைகளில்  அதுவுமொன்று.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டு போர்க்குற்றமாகவும் – சர்வதேச விசாரணை கலப்பு மன்ற விசாரணையாகவும் திரைந்து இன்று பேரழிவு நிகழ்த்தியவர்கள் ஆட்சிக்குத்திரும்பியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரதான (வேறுகட்சி இல்லாமை – கவனத்தில் கொள்ள வேண்டும்) மிதவாத கட்சியாக இருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை அவதானித்து வருகிறீர்களா?

கூட்டமைப்பு முதலில் தன்னைப் புலிநீக்கம் செய்தது. பின்னர் தேசியநீக்கம் செய்தது. இனப்படுகொலைக்கு எதிரான நீதியை அது பெறப்போவதில்லை. அது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் இல்லை. பரிகார நீதியல்ல நிலை மாறுகால நீதியே அக்கட்சியின் நிகழ்ச்சி நிரல். கடந்த 2018 ஆம்ஆண்டு  ஒக்டொபர் மாதத்தில் மைத்திரி பாலசிறிசேன  செய்த யாப்புக் குழப்பத்தோடு நிலை மாறுகால நீதி அனாதையாகி விட்டது.

இப்பொழுது ராஜபக்சக்களின் இரண்டாவது வருகையோடு அது காலாவதியாகி விட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பு நான்கு தடவைகள் உடைந்து விட்டது. ஆனால் அதற்கு எதிராகக் கிளம்பிய மாற்றுஅணியும் இப்பொழுது இரண்டாக உடைந்து விட்டது. அதாவது கூட்டமைப்பும் பலமிழக்கிறது.  மாற்று அணியும் பலமாக இல்லை.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி அமைப்பியல் ரீதியாக வெறும் அறிக்கையும் –எதிர் அறிக்கையும் வெளியிடுகிற அமைப்பாகவே தொடர்ந்து வருகிறது என்பதே எனது வருத்தம். தமிழ்தேசிய கூட்டமைப்பு பதவிக்கும் அதிகாரத்திற்குமாய் எங்கள் குருதியை பலியிட்டு விட்டனர். அப்படியெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை எடுத்தியம்பவல்ல களச்சக்திகளாக உருவாகப்போவது யார்?

பாரதூரமான வெற்றிடம் நிலவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கலாநிதி திருமாவளவன் சொன்னார்…  “உங்களுடைய தலைவர்களில் அநேகர் தீர்ந்து போன சக்திகள்-spent forces” என்று. ஒரு புதிய கூட்டுக்காக கடந்த ஐந்தாண்டுகளாக உழைத்தோம். முடியவில்லை. ஒரு புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதனூடாக புதிய தலைமைகளைஉருவாக்கலாம் என்றும் சிந்தித்தோம். புதிய தலைவர் தலைவிகளை செதுக்கியெடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான ஒரு மக்கள் இயக்கம் அல்லது ஒர் ஐக்கிய முன்னணி தேவை.

“ஈஸ்டர் குண்டுவெடிப்பு” மிகக் கொடூரமான பின்விளைவுகளை இலங்கையின் தேர்தல் அரசியலிலும் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். கிட்டத்தட்ட அனைத்து சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஆட்சியாளர்கள் அதன் மூலம் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இந்த அரசியல் மாற்றங்கள் எல்லாம் வெறும் தற்செயலானதென்று கருத முடியுமா?

னக்குச் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் மீது அதிகம் ஈடுபாடில்லை. கடந்த பத்தாண்டுகளில் சூழ்ச்சிக் கோட்பாடுகளால் முன்னேற முடியாமல் தவிக்கும் ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். எனினும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் 80ஆவது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது……

“நாடு 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலையும், 2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்வதற்குக் காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதிகரித்தளவிலான இனக்கலவரங்கள் என்பன தூண்டப்பட்டனவா? நாளாந்த வாழ்க்கையைச் சீர்குலைத்து, சமூகங்களுக்கு – குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு – மத்தியில் பயத்தையும், அச்ச உணர்வையும் தோற்றுவிப்பதற்கென இவை முன்னெடுக்கப்பட்டனவா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனை அடுத்து இலங்கையில் ஒருசில பாகங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் என்பன பொதுமக்கள் மத்தியில் முன்னர் எப்பொழுதும் இருந்திராத அளவிலான ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்ததுடன், நாட்டின் அரசியல் தலைமை மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு என்பன தொடர்பான விமர்சனங்களையும் எடுத்து வந்தன. இதே காலகட்டத்திலேயே அரசாங்க மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற குரல்களும் நாட்டில் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை வெறுமனே தற்செயல் நிகழ்வுகளாகக் கருத முடியாது. இவை தொடர்பாக மேலும் புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருசில பிரிவினரின் வகிபங்கு குறித்தும், பாதுகாப்பு, தேர்தல் செயன்முறை, அரசியல் நிலவரம் மற்றும் இலங்கையின் எதிர்காலம் என்பவற்றை  நிர்ணயிப்பதில் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாகவும் முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுதல் வேண்டும்.”

2009 க்குப் பின் ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுத்த யுத்த வெற்றிவாதத்தை 2019 க்கும் புதுப்பிப்பதற்கு ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் உதவியிருக்கின்றன. அதன் விளைவே ராஜபக்சக்களின்  இரண்டாவது வருகை எனலாம்.

சூழ்ச்சிக்கோட்பாட்டில் உங்களுக்கோ எனக்கோ ஈடுபாடு இல்லை என்பது வேறு கதை. இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த பலதிலும் சூழ்ச்சிக் கோட்பாடு இருக்கிறது தானே?

ம். உண்டு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

“சூழ்ச்சிகளிருக்கும் ஆனால் சூழ்ச்சிக்கோட்பாபாடுகள் இருப்பதில்லை. சூழ்ச்சிக்கோட்பாடுகள் இருக்கும் ஆனால் சூழ்ச்சிகளிருப்பதில்லை.” இது எங்களுக்கும் பொருந்தும்.

புவிசார் அரசியலில் ஈழப்பிரச்சனையை கூர்ந்த மதிநுட்பத்தோடு கவனிக்க வேண்டிய இந்தியா தொடர்ச்சியாக அந்தப் பாத்திரத்தில் இருந்து தவறி நிற்பதாகவே தோன்றுகிறது. மு.திருநாவுக்கரசு போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியாக தமது கட்டுரைகளின் வழியாக மீண்டும் மீண்டும் அதனைச்சொல்லி வருகின்றனர். இன்றைக்கேனும் ஈழத்தமிழருக்கு சாதகமாக இந்தியா நடந்து கொள்வதாக ஏதேனும் தடயங்கள் தெரிகின்றனவா?

லங்கையைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை எனப்படுவது கொழும்பில் இருக்கும் அரசைக் கையாள்வதாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இது  அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின்பாற்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை இலங்கை  அரசுதான்   பிரதான தரப்பு. அரசாங்கத்தைக்கையாள முடியாமல் போகும்போது அல்லது அரசாங்கம் இந்தியாவுக்கு முதன்மை கொடுக்கத் தவறும்போது இந்தியா  தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி  இலங்கை அரசாங்கத்தை  வழிக்குக் கொண்டுவரும்.  இந்த அணுகுமுறையின் விளைவுதான் இலங்கை இந்திய ஒப்பந்தமும் 2015இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றமும்.

இந்த அணுகுமுறைக்காக அவர்கள் தமிழகத்துக்கும்  ஈழத்துக்குமிடையிலான  இன ரீதியிலான மொழி ரீதியிலான உறவுகளைக் கையாண்டு வருகிறார்கள். இந்த அணுகுமுறையை தமிழ் மக்கள் இதயத்தால்விளங்கிக்  கொள்ளத் தேவையில்லை. மாறாக அதை மூளையால்  விளங்கிக்கொள்ள வேண்டும் .

இந்தியாவின் இத்தகைய அணுகுமுறைதான் ஒரு கட்டத்தில் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரை இந்தியாவிடம் இருந்து விலகி மேற்குநாடுகளை நோக்கிச் செலுத்தியது. தமிழ் டயஸ்பொறாவின்  எழுச்சி இதற்கு வேண்டிய பின்னணிகளை ஊக்குவித்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கைக்குப் பின் ஈழத்தமிழர்கள் அதிகம் மேற்கை நோக்கித் திரும்பினார்கள். இதன் விளைவே ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையாகும். அது தோற்றுவிட்டது. ஆனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ்  உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இப்பொழுதும் நடைமுறையாக உள்ளன.

2009க்கு பின்னரும் இந்தியா ஈழத் தமிழர்களை ஒரு பிரதான தரப்பாகக் கையாள்வதாக தெரியவில்லை. ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சியை கவிழ்ப்பதில் மேற்கு நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டது. ஆனால் அந்தஆட்சி மாற்றம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ராஜபக்ஷக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இந்தியா இனியும் தமிழ் மக்களை ஒரு கருவியாக மட்டும்தான் கையாளப் போகிறதா? என்ற கேள்வி இங்கு முக்கியம்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் தமிழ் மக்களை மிகவும் நெருங்கி வருகிறது. எல்லா மட்டங்களிலும் அவர்கள் உறவுகளைப் பேணுகிறார்கள் .யாழ்ப்பாணத்தில்  நிறுவப்படும் கலாச்சார  மண்டபம்; பலாலி விமான நிலையத்தில் இந்தியாவுக்கான ஒரு  வான்கதவைத் திறந்தமை   போன்றவற்றின் மூலம் இந்தியா தமிழ்ப்பகுதிகளைத் தன்னோடு கூடுதலாக இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் இப்புதிய வளர்ச்சிகளை வைத்து  இந்தியா தனது அணுகுமுறையை மாற்றி  வருவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்தியா தமிழ் மக்களைத் தொடர்ந்து ஒரு கருவியாகத்தான் கையாள்கிறது என்ற சந்தேகமும் பயமும் ஒருபகுதி தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுதும் உண்டு. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகள் மத்தியில் அந்த அச்சம் மிக உண்டு. இவர்களில் அநேகர் மேற்குநாடுகளில் வசிக்கிறார்கள். அங்கெல்லாம் அரசுகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் நெருங்கி உறவாடத் தேவையான மொழியறிவும் அந்தஸ்தும் ஏனைய தகுதிகளும் அவர்களுக்குண்டு. இந்தியாவைக் கையாள முடியாது அல்லது கையாளாகக் கூடாது என்று கூறும் அவர்கள் இந்தியா அல்லாத வேறு எந்த சக்திகளைக் கையாண்டு தமிழ் மக்கள் தமக்கு உரிய தீர்வைப் பெறவேண்டும் என்பதனைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அந்தத் தரப்புக்களை அதாவது மேற்கு நாடுகளை எப்படிக் கையாண்டு ஒரு தீர்வைப் பெறலாம் என்பதற்கு உரிய வழிவரைபடத்தையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அங்கஹீனர்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்களின் வறுமையை எழுதவே நெஞ்செல்லாம் அடைக்கிறது. இதேவேளையில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்து வருகிறவர்கள் பிரம்மாண்டமாக தமது சடங்குகளையும், கேளிக்கைகளையும் நடத்துகின்றனர். இப்படியான பிசகுகள் எங்கிருந்து தோன்றியிருக்க முடியுமென நினைக்கிறீர்கள்?

முன்பு சொன்ன அதே பதில்தான் தாயகத்தில் ஒரு பொருத்தமான கட்டமைப்பு இருந்தால் அது டயஸ்பொறாவை சரியாக வழி நடத்தும்.

இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழ் அறிவுப்புலத்தில்  “சிந்தனைக் குழாம்” தோன்றவேயில்லை. உங்களைப் போலான சிலர் உதிரிகளாக எழுதியும் உரையாடியும் வருகிறீர்கள். இப்படியானதொரு “மக்கு” போக்கு நீண்டால் இதன் விளைவாக நாம் எதனைப் பெறுவோம்?

திரும்பத் திரும்ப நந்திக்கடலை நோக்கி நடந்து கொண்டிருப்போம்.

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் நிறைய மேற்கோள்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பொருந்திப்போகும் மேற்கோள் ஒன்றைக் கூறுங்களேன்?

தென்னாபிரிக்காவின் சுதந்திரப்பூங்காவின் வரவேற்பு மண்டபத்தில்  தென்னாபிரிக்க khoiகொய்-இனக்குழுவினரின் முதுமொழி ஒன்று எழுதப்பட்டிருக்கும்… A dream is not a dream until it is shared by the entire community – ஒரு கனவு முழுச்சமூகத்தாலும் பகிரப்படாதவரை அது ஒரு கனவேயல்ல.

பின் முள்ளிவாய்க்கால் காலமான இன்றைக்கு தமிழ் மக்களின் உள்ளத்தில் நிகழ்ந்திருக்கும் உளவியல் மாற்றங்களாக நிறையக்காண முடிகிறது. குறிப்பாக போர் குறித்த அவர்களின் இன்றைய உளவியல் எவ்வாறு இருக்கிறது?

ழத் தமிழர்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை.

இறுதிக் கேள்வியாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தினை “வீரயுகம்” என்ற சொல்லாடலின் மூலம் நிறைய இடங்களில் அடையாளபடுத்துகிறீர்கள். இதனை நான் பல அடுக்குகளில் புரிந்து கொள்கிறேன். உங்கள் “வீரயுகம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் வழியாக நீங்கள் வலியுறுத்த விரும்பும் அரசியல் நிலைப்பாடு என்ன?

யுகக்கணக்கு என்பது முடிவின்மையைக் குறிக்கும். தொடர்ச்சியைக் குறிக்கும். பிரளயம்  என்பதும் ஊழி என்பதும் அதிகபட்சம் யுக முடிவைக் குறிக்கும். அழிவையும் துயரத்தையும் அதிகம் குறிக்கும். நான் கவிதைகளில் சில சமயம் ஊழி என்பதைப் பயன்படுத்தினாலும் பெருமளவுக்கு யுகம் யுக முடிவு, யுகப்பிறப்பு போன்றவற்றையே விரும்பிப் பயன்படுத்துவதுண்டு. ஏனெனில் யுகமாற்றம் என்பது தொடர்ச்சி. அது முடிவற்றது. அழிவிலிருந்தும்  கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் ஒரு புதுயுகம் மலர்வதை அது குறிக்கும். வீரயுகம் என்பது அந்த அர்த்தத்தில் தான். வீரயுகங்களில் வீரம் வழிபாடாயிருக்கும்.

தியாகம் வழிபாடாயிருகும். தியாகி துரோகி என்ற கருப்பு வெள்ளை அளவுகோல் இருக்கும். வீரத்தையும் தியாகத்தையும்  வெளிப்படுத்தப் போர்க்களம் வேண்டும். போர் வெற்றிகள் வேண்டும். எனவே போர் ரொமான்டிசைஸ் செய்யப்படும். போர் வெற்றிகள் கொண்டாடப்படும். போரின் வெற்றிக்காக தலைப்பேறானவை கேட்கப்படும். அல்லது கவரப்படும்.

தோற்கடிக்கபட்டவர்களின் கிராமங்களை எரித்த நெருப்பில் வெற்றி மாலைகள் வாடுவது மகிமைப்படுத்தப்படும். போர்க்களத்தில் காளி பிணங்களின் நிணக்கூழ் குடித்து மகிழ்வது போற்றிப் பாடப்படும். வெற்றிப் பிரகடனங்களின் பளபளப்பில்  தேற்றப்படவிலாத் தாய்மாரின் துக்கமும் இளம் விதவையரின் துயிலா இரவுகளும் மங்கிப் போய்விடும்.  ஆம். வீரயுகம் எனப்படுவது அதன் நன்மைகள் தீமைகளோடுதான்.

முக்கியமாக தொடர்ச்சி. ஒரு வீரயுகத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு புதிய அறிவின் யுகத்தை வனைவது.

***

நிலாந்தனின் வலைப்பக்கம் – http://www.nillanthan.com

RELATED ARTICLES

3 COMMENTS

  1. அகர முதல்வனுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்! நிலாந்தனின் எந்த ஒரு படைப்பையும் வாசித்தறியாத நான், அவரது இந்த நேர்காணலின் பார்வைக்குப் பிறகு, நல்ல ஒரு சிந்தனையாளனின் எழுத்தை வாசிக்கத் தவறியிருப்பது தெரிகிறது.

  2. சமகால நிலை..

    ” பளிச்” .எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular