தலபுராணம்

கார்த்திக் புகழேந்தி

செம்புலம்

பின்னிரவில் மேல்வானம் கண்ணுக்கு அவ்வளவு தெளிவாய் இல்லை. தென்வடக்காக வீசும் கூதலும் பொடிச் சத்தம் கூடக் காட்டாதிருந்தது. எப்போதும் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டும் தழுவிக்கொண்டும் வம்பளந்து கொண்டிருக்கும் பால்பிடியாத நாற்றுக் கொத்துக்களும் வயல் ஏலாவுக்குள் சுருண்டு படுத்துக் கிடந்தன. ஊருக்குள் கன்று காலிகளின் கழுத்து மணிச்சத்தம் என்றுகூட எதையும் காணும். ஒரு குடிசை, குசினி, மச்சிலையும் விட்டு வைக்காமல் குளிர் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் பெருங்குடியான் அரண்மனை வீட்டுக்குப் பின்பக்கமுள்ள தொழுவத்தின் சாணக்குழியைத் தாண்டிக் குதித்துச் சாடி விழுந்து, கும்மிருட்டுக்குள் மறைந்தான் சங்கையா.

வண்டிப்பாதையில் கடுங்கல்லை ஆரக்கால்கள் ஏறி இறங்கித் தடுமாறும் நொடிப்பொழுதுக்கும் இடைவெளி விடாத ஓட்டம். விலா வெடிக்கப் போகிற அளவிற்கு மூச்சு வாங்கியது. காட்டுத் திக்கில் தூரமாக எரிகிற தூசு வெளிச்சம் சுடலை எரிகிற திசையாகத்தான் இருக்க வேண்டும். தோளுக்கு மேலாக அள்ளி முடித்த கோடாலிக் கொண்டை அவிழ்ந்து விழுந்திருந்தது. மேல்சட்டை இல்லாத உடம்பு விசர்த்து நீர்பொங்கி வழிய, எதுபற்றிய சிரத்தையில்லாமல் திடுதிடுமென ஓடிக்கொண்டே இருந்தான்.

வெள்ளி கீழே விழத்துடிக்கும் தூரத்தில் வீராசமுத்திர ஆற்றங்கரையின் தாழம்புதர் வாடை காற்றில் மணந்தது. அரைமனசோடு ஊரைச் சலசலக்கச் செய்து கொண்டிருக்கும் ஆற்றைக் கடந்து மறுகரை ஏறினால் தலை கண்டு அறியமுடியாத விடிலிக்காடு. நத்தத்திலிருந்து பயினி இறக்குகிற ஆட்களும், பனஞ்சீவிகளும் கும்மாறமிடும் முன்னால் விடிலியைக் கடந்துவிட்டால் மிச்சமனைத்தும் மேற்படியான் விட்டவழி.

சங்கையா இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான். இடுப்புக் கச்சையில் இறுக்கியிருந்த குத்துவாளை இன்னொரு தரம் தடவிப் பார்த்துக்கொண்டான். பல வருசத்துப் பகை. இவ்வளவு காலம் பொறுத்திருந்து தீர்த்து முடித்ததன் எக்காளம் அவன் மனசில் பிறந்தது.

‘எய்யா எந்தத் தள்ளையடா இந்தக் காரியத்தப் பண்ணவன். அரமன ரத்தம் தரயில இப்படி ஆறா வழிஞ்சி கெடக்கே, எங்கருந்து எவன் குதிச்சானோ, அய்யோ இப்படி அக்கக்கா அறுத்துப் போட்டு பேயிருக்கானுவளே.. அறுதலிகளா, ஒங்க வமிசம் கருத்தரியுமா, ஒங்க வாச நெல நிக்குமா, பெய மக்களா நீங்க வௌங்க மாண்டிய. ஒங்க சாக்காடு நாதியத்து போவ…”

ஏரளமெடுக்கும் ஏச்சுக்குரல் ஒன்று அவன் காதுகளுக்குள் அலையாக வந்து மோதினது. சாவும் பிறப்பும்போல சாபங்களும் இந்த நாடு உண்டான நாள் தொட்டு இங்கேயே உலவிக் கொண்டிருக்கும் ஆங்காரங்கள் தான். மண் தூற்றி வீச மடிந்து விழுந்த மாடங்கள் எத்தனை. ஆனாலும் அவனுடைய பழிபாவங்களைப் புதிதாகத் தூக்கிச் சுமக்க இனி எந்த வமிசம் புறப்பட்டு வந்துவிடப் போகிறது. ஒவ்வொன்றின் பின்னாக அற்றமழிந்து போன தன் சொந்த ரத்தத்தைத் தானே அவன் கருவறுக்கவே வேண்டியிருந்தது.

ஆற்றடியில் கருவைப் போர்களைக் கொளுத்தின உமிச்சாம்பல் சங்கையாவின் காலடிபட்டு புகையைக் கிளப்பியது. இருட்டில் அங்கங்கு முங்கிக் கிடந்த கல்லுத்தேரைகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க, அருவமில்லாமல் பாறைத்தடத்தில் தாவி தண்ணீருக்குள் இறங்கினான். ஈரம்பட்டதும் பொதுமின உமிச்சாம்பல் வாசனை அந்நேரத்துக்கு அவனது அடிவயிற்றுப் பசியைக் கிளப்பிவிட்டது. வீராத்துத் தண்ணீருக்கும் விடிலிக்காட்டுப் பயினிக்கும் பந்தயங் கட்டினால் பயனி தோத்துப் போகும். ஐராவதிக்கு ஈடுகொடுத்து வடக்கு தெற்காகப் பாய்ந்தோடும் ஆறு. சுத்தி உள்ள வயல்களுக்கெல்லாம் மணிமணியாக விளைச்சல் கொடுத்து ஓய்ந்து, கிழடு தட்டி, இப்போது பள்ளத்துக்குள்ளே முட்டாங்கால் அளவுக்குத் தங்கித் தயங்கி ஊரைத் தெளிய வைத்துக்கொண்டிருந்தது.

சங்கையா இடுப்புச் சவுக்கையை அவிழ்த்து தலையில் சுற்றிக் கொண்டான். தண்ணீரைக் கைநிறைய அள்ளி வயிறுமுட்டக் குடித்துக் கொண்டிருக்கும்போது, கண் நொடிக்கும் வேகத்தில் பின்னாலிருந்து சரசரவென சத்தம். குறுக்கே பாய்கிற ஆளென்றுதான் முதலில் பரபரத்தான். மஞ்சள் பிடித்திருந்த எருக்கஞ்செடி மூட்டிலிருந்து விரியன் ஒன்று அவசரமாகத் தண்ணீருக்குள் ‘சலப்’ என்று சாடியதைக் கண்டபிறகுதான் ஒரு சின்ன நிதானம் வந்துசேர்ந்தது. கைகள் அனிச்சையாகக் குத்துவாளை இடுப்பிலிருந்து உருவி மேலுக்கு ஓங்கியிருந்ததைக்கூட அதன்பிறகுதான் கவனம் பண்ணினான்.

இதுநாள் வரைக்கும் முன்பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நம்புவதற்குப் பயன்பட்டு வந்த கருவி அது ஒன்றுதான். நீளத்திலும் கற்றாழைக் கூம்புச்சாடை. ரெண்டு தரிப்பிலும் கொஞ்சமும் நெரியாத கூர். ரத்தம் ஒழுகிச் சிவந்து போயிருந்த கலாமரக் கைப்பிடியில் வளை வளையாய் நான்கு அழுத்தமான கோடுகள். அதன் முன்னும் பின்னும் பித்தளை பூண். மேல் பூணின் முனையில் வாங்காகப் பறக்கும் மூளிப் பருந்துச் சின்னம். அதன் கீழே மூன்று நட்சத்திரங்கள். உறையோடு பிணைத்து கட்டுவதற்கு ஏற்ப பொடீசான தோல் கயிறு என்று ரசித்து ரசித்து இழைத்துக் கொடுத்த கருமாரக்காரனை நெஞ்சில் எண்ணிக் கொண்டான். உயிர்களைப் பிரசவிக்கிற கைகள் தானே பகையும் உறவும் அறியாத இந்த கொலைக் கருவியையும் உண்டாக்கி இருந்தது.

எந்த ஒரு கொலைக்கருவியும் ரத்தம் பார்க்காமல் செத்துப் போவதே இல்லை. அது யாருடைய ரத்தத்தால் தன் பசியை எழுதப் போகிறது என்பதுதான் விளங்கிக் கொள்ள முடிந்திராத புதிர். அது இன்றைக்குக் குடித்தது தன் சொந்த தாய்மாமனின் ரத்தம்.

தகப்பன் இல்லாத பிள்ளைக்குத் தாய்மாமன் தானே அப்பனுக்கு அப்பனாவான். இன்றைக்கு அவன் ரத்தம் படிந்த வாளைத்தான் தண்ணீரில் அலசுகிறோம் என்கிற குறுகுறுப்போடே அடிமண்ணை அள்ளி, வாள் முழுக்க ராவினான். ராவின இடங்களில் இருந்து மறுபடியும் ரத்தம் கசிகிறது. திரும்பத் தண்ணீரில் மூழ்கடிக்கிறான். குருதி கசிந்து பெருகுகிறது. விரல்களால் மழுங்கத் தேய்க்கிறான்…. தேய்க்கத் தேய்க்க ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. முழு ஆறும் செம்புலமாகச் சிவந்து கொந்தளிக்கத் துவங்கியபோதும் வாளின் ஒழுக்கு நின்றபாடில்லை.

வலசை

பாண்டி நாட்டு பலவேசத்தம்மாளுக்கு அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள். தலைச்சன் பெண்பிள்ளை பிறக்கும் போதே ஆச்சுபூச்சென்று சத்தம் எதுவும் இல்லை. சந்தேகித்த மாதிரி கால்கள் நேருக்கு நிற்கிற வயசு வரைக்குமே எந்தப் பேச்சுக் குரலும் அவள் தொண்டையில் எழும்பவில்லை. லெச்சுமி என்று தாங்கித் தழுவின போதும் ஊமச்சி என்றே ஊர் அழைத்த்து. அவளுக்கடுத்தடுத்து கடேசியாக இளைத்துப் பிறந்தவன்தான் சங்கையா. ரெண்டு பேருக்கும் இடையில் பிறந்த எல்லா மக்களும் பெண் பிள்ளைகளாய்ப் போனதும் அதுகளில் ஒன்றுகூட பிழைத்துக் கிடக்காமல் பிறந்த வேகத்தில் செத்துப் போனதும் பலவேசத்தம்மாளுக்கு மீளமுடியாத கொடுங்கனவுகள். சங்கு கழுத்தோடு பிறந்த ரெண்டாமவளைப் பிறந்த மறுநாளையிலே கிடங்கு நரிகள் கூட்டமாக வந்து தூக்கிக்கொண்டு போனதென்றும், பாசிப்பூ நிறத்தில் கண் கொண்டு பிறந்தவள் கொள்ளையில் விழுந்து இறந்தாளென்றும், ஒவ்வொரு பிஞ்சுக்கும் ஒவ்வொரு கதையை வரிசைக்கிரமமாக தன் நெஞ்சுக்குள் சுமந்திருந்தாள் அவள்.

சங்கையா பிறந்த வீட்டுக்குள்ளே தான் அவன் ஐயா ஆண்டி நம்பியார், வெண்ணாவல் மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு, நாக்குத் தள்ளச் செத்துப் போனார். மருந்தும் மந்திரவாதங்கள் பண்ணிக் கொண்டிருந்த மனுசனைப் பஞ்ச காளி அப்படி ‘பொலி’ வாங்கி விட்டதாக ஊர்மந்தையில் சம்சயம் பேசிக் கொண்டார்கள். ஆனால், ஆண்டி நம்பியான் கூளிப்பேய்களுக்குச் சடங்கு வைக்கிறேன் என்று தன் பெண் பிள்ளைகளையே ஒவ்வொன்றாக அதற்குக் காவு கொடுத்துக் கடைசியில் அந்தச் சதிகளில் செத்தொழிந்து போனான் என்பது அநேகருக்குத் தெரியாத ரகசியம். ஊமச்சியாய் இருக்கவே லெச்சுமி பிழைத்திருந்தாள்.

ஆண்டி நம்பியார் செத்துப்போன சில காலத்திலே தேசாந்திரங்கள் முழுக்க கொடும் பஞ்சம் வந்திருந்தாடியது. மேய்ச்சல் புல்லெல்லாம் கருகிச் சாம்பலாக, வரப்பு மண் வெடித்துக் கிடக்க, குளத்தடிகளில் ஆடுமாடுகள் தண்ணீருக்குத் தவித்துச் சுருண்டு விழுந்து கிடந்தன. வலசுப் பாதைகளிலும் ஒரு குன்னி குருணி தண்ணீர் காணும். ஆறு பட்டுபோன கதையைக் கூத்தாகச் சொல்லி கோடாங்கிகள் வீதிப் பிச்சைக்கு வந்துவிட்டார்கள். கந்தலும் கடவங்களுமாகச் சுமந்துகொண்டு நாடுதாண்டி போன ஆணும் பொண்ணும் பிள்ளைகளை எங்காவது மடங்களில் விட்டுப் போக வழிகிடைக்காதா என்று ஏங்கினார்கள். எந்த திசைக்கும் வழியற்ற கூட்டம் பசி தாழாமல் சாணக் குழியில் செத்து விழுந்து கிடந்த மாட்டின் எலும்பை வெட்டி எடுத்துக் கொண்டுபோய் சுட்டு வைத்துத் தின்றது.

சுள்ளியும், களையும், கிழங்கு, கொட்டை, வேர்களையும், தோண்டிப் பறித்து நாக்கடியில் ஊற வைத்து பசியை மயக்கியது. எலிவளைகளும் எறும்பு புத்துகளும் அங்கோல கங்கோலமாகச் சிதைந்து கிடக்க இனி எதற்கும் வழியில்லை என்றான பிறகுதான் பலவேசமும் ஊரைக் காலி பண்ணச் சித்தமானாள். அமாவாசை முடிந்த மறுநாள் லெச்சுமியை ஒரு கையிலும், சங்கையாவை இடுப்பிலுமாகக் கட்டித் தூக்கிக்கொண்டு மேற்றங்காட்டை நோக்கி நடையாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

வாபாட்டுப் பாடிக் கொண்டு எல்லா சனமும் கிழக்குச் சீமைக்கு நடக்கும்போது, மேற்கே மலங்காட்டை நோக்கி நடந்தவளை, ’பாதகத்தி இந்தப் பிள்ளைகளச் சாவடிக்கத்தான் போறா’ என்றே காவல் தெய்வங்கள் கூட கண்மூடிக் கொண்டன. அதுகள் கண்மூடிக் கொள்வது ஒன்றும் புதுசுமில்லை. பாண்டிப் படைகள் இதே பாதையில் புகுந்துவந்து மனுச மக்களை அட்டூழியம் பண்ணிக் கட்டி இழுத்துப் போனபோதும், பாண்டிகளோடு சண்டைகட்டிப் போராடி செத்துப் போனவர்களின் சவமெல்லாம் இந்த வீதிகளிலே இறைந்து கிடந்தபோதும் இப்படியேதான் இந்த தெய்வங்கள் கண்மூடிக் கொண்டிருந்தன.

மலைக்கு அந்தப் பக்கத்தில் ஆயி, அப்பனுமாக வேடுவம் பண்ணிக் கொண்டிருந்த குடிபிறப்பினர் யாரும் திரும்ப வந்தவழி ஏறி வாழ்க்கை கண்டதில்லை என்கிற கதையை வாழ்நாள் முழுக்கக் கேட்டிருந்தும் எந்த நம்பிக்கையோ பலவேசத்தை மேலேறி வா என்றழைத்திருந்தது.

நீண்ட மலையேற்றத்தில் வெகுகாலம் பிந்தி, தன் பிறந்த மண் எல்லையில் கால்மிதித்த பரவசம் எதையும் அவள் பூசிக் கொள்ளவே இல்லை. கைக்குக் கையாக பொதிகளை மாற்றிக் கொண்டே மூணாம் நாள் பகல் பொழுதில் மலைக்கு அந்தப் பக்கத்தை அடைந்தார்கள். பாச்சை பிடித்துக் கிடந்த குட்டைகள் தாகம் ஒடுக்கியது. குரங்கு கூட்டம் கடித்து வீசிப் போட்ட மாம்பிஞ்சுகள் பசி முறித்தது. வழிகளில் பூப்பிடித்திருந்த வரகுக் குருணையைச் சவைத்துக் கொண்டே சேர்விலார் மலையைத் தாண்டி ஊர்களின் தலைவாசலில் இறங்கியிருந்தார்கள். அவ்வளவு காடும் நடந்து களைத்திருந்த லெச்சுமி அன்றைக்குத்தான் இனி நிச்சயம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் அம்மையின் மடியில் நிம்மதியாகத் தலை வைத்தாள். மாரில் மகனையும் மடியில் பிள்ளையையும் தாங்கிக் கொண்டு, தன்னுடைய அந்த சொந்த மண்ணின் பேறுகளை வாயெடுத்துப் பாட ஆரம்பித்தாள் பலவேசம்.

கரை புரண்டு ஓடுமம்மா கொத்தாளன் ஆளும் பூமி
நெளிநெளியா ஓடுமம்மா நீலவண்ணத் தண்ணியெல்லாம்
சுழிசுழியா ஓடுமம்மா சுத்தமான ஆத்துத்தண்ணி
வெயிலடிக்கும் நேரத்திலே வெள்ளிபோல மின்னுந் தண்ணி
குடிதண்ணியும் குளிதண்ணியும் கண்ணே
கொடம் கொடமா எடுப்போமடி
தண்ணிக்கொரு தீட்டுமில்ல கண்ணே
தடுக்க ஒரு நாதியில்ல
பாப்பானுக்கும் பச்சத்தண்ணி கண்ணே
பறையருக்கும் பச்சத்தண்ணி
கோதையுங் கோவலனும் கண்ணே
கோரிக்கொள்ளும் பச்சத்தண்ணி
தண்ணியக் கடந்தாக்கா தங்கம்போல வெளையும் பூமி
தாமனே தாய்மாமன் தலையேத்து ஆளும் பூமி…

லெச்சுமியும் சங்கையாவும் பாட்டிலே சொக்கிக் கிடக்க, பலவேசம் ரொம்ப நேரமாக ஊரின் கடைக்கோடிப் புள்ளியாய் தீ வெளிச்சம் தெரியும் தன் அண்ணன்மார் அரண்மனையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

சீர்பாகம்

வெயில் விழாத கொட்டாரத்து வாசலில் கட்டுக்கட்டாக நிற்க வைக்கப்பட்டிருந்த குதிரைகளின் கனைப்பொலிகளைத் தாண்டி, அச்சமும் தவிப்புமாக தன் அண்ணன் முத்தையனின் முன்னால் பிள்ளைகளோடு நின்றுகொண்டிருந்தாள் பலவேசம். பலவேசத்தின் அண்ணன்மார் முத்தையன் கையில்தான் அந்த வட்டாரத்தின் ராஜாங்கம் இருந்தது. அண்ணன் பேரைச் சொல்லி தவிட்டையாவது இங்கே தான் தின்று கொள்ளலாம். தன் பிள்ளைகளுக்கு அரையரிசி குருணையாவது கிடைக்கும் என்கிற அவளது கடைசி நம்பிக்கை வீண்போகாதவாறு அண்ணன் பெஞ்சாதி குமராத்தாளும் புன்முகம்காட்டி பிள்ளைகளை உபசரித்தாள்.

அண்ணனும் தங்கையுமாக இருதாய் வயிற்றில் பிறந்திருந்தும் அருகருகிருந்து வளர்ந்ததில்லை. அங்க லட்சணங்கள் அப்படியே உரித்து வைத்திருக்கும்போது யார் வந்து எந்த பந்தத்தை விளங்க வைக்கணும்? பராரியாய் வந்து நிற்கும் தாயும் பிள்ளைகளையும் பார்த்த மாத்திரத்திலே முத்தையன் அவர்களுக்குப் பரிபூரண ஆதரவு தரத் துணிந்துவிட்டார். இடைக்குடியிலே அவர்கள் தங்க ஒரு விடுதி ஒதுக்கித் தந்து, விதவைக் கோலம் கொண்டிருந்தவளுக்கு அண்ணமார் கோடியும், விளக்கெரிக்க ஒரு வரையாடும், பாய் படுக்கைகளும், பண்ட பாத்திரங்களும் கொடுத்து, கேப்பையும், புல்லரிசியும், புளி, மிளகுச் சேர்மானங்கள் என்று முடிச்சு முடிச்சாய் கழுதைகளில் கொண்டு வந்து இறங்கச் செய்தார். அப்போதுதான் ராசாவானாலும் அண்ணனாய் நின்று அரவணைக்கிறான் என்று முதன்முறை பெருமை பூத்தாள் பலவேசத்தம்மாள்.

முத்தையன் பெஞ்சாதி குமராத்தாளும் நல்ல குணம் மாதிரிதான் தெரிகிறது. வயசும் ரொம்பக் குறைதான் என்பதைப் பார்த் கணமே கணித்துவிடலாம். ரொம்ப காலம் கலியாணம் பண்ணாமலிருந்து இப்போ கொஞ்சக் காலம் முந்திதான் மணமுடித்தார் என்று பலவேசத்தம்மாள் காதுக்குச் சேதி வந்தபடி இருந்தது.

அண்ணன் பாடு செழிப்பாய் இருந்தாலும், அளவோடு எடுத்துக் கொள்வது தான் தனக்கு நல்லது என்று பார்த்துப் பரிதவித்து எதையும் பெற்றுக் கொண்டாள் பலவேசம். தன்பலத்துக்குக் காட்டு மூங்கிலைப் பிளந்து, கல்லடுப்பும், விறகும் கூட்டி கேப்பைக் களியும் கீரையும் கிண்டிக் கொண்டாள் பிள்ளைகளுக்கு. கழுதைகளைப் பத்திக் கொண்டு ஊர்வேலி வரை நெருங்கிப்போய் பாதை பொட்டுக்களைத் தெரிந்து கொள்வதும், கிழங்கறுத்து, கொள்ளு பறித்து, கொஞ்சங் கொஞ்சமாக சக்கரத்தை உருட்டினாள். எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தபோது தான், லெட்சுமி பூப்பு கண்டுவிட்ட சேதி சொல்ல அரண்மனைக்குள் முதல் தடவையாக உள்நுழைந்தாள்.

தங்கச்சி மகளுக்குச் சீர்செனத்தியோடு பாக்கும், புதுச்சேலையும், பொன் சவிரியும் கொடுத்தனுப்பினார் முத்தையன். வந்தது சீதனமும் சவிரியும் மட்டுமா என்ன? ‘தனக்குக் கலியாணம் ஆயிருந்தாலும் இதுவரைக்கும் வாரிசு ஒன்னும் உருசு கொள்ளலே. ஆகையால், உன் மகளை நான் கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கிறேன். இதனால் நம் ரத்த பந்தமும் விட்டுப் போகாமலிருக்கும்’ என்று மலையை முழுங்குவது போல சேதியையும் கூடே அனுப்பி வைத்திருந்தார். கொற்றத்து இடி தன் தலைமேலே நேராக்கில் வந்து விழுந்தது போல நொடிந்து போய் விழுந்தாள் பலவேசத்தம்மாள்.

சங்கையாவுக்கு அப்போது ஒன்பது வயசுக்குக் கொஞ்சம் குறைவு. அக்காளுக்கும் மாமனுக்கும் அறுதலிக் கலியாணம். யார்யாரோ முன்னின்று எடுத்துச் செய்கிறார்கள். அம்மைக்கு என்னமும் சொல்லி யாரையும் தடுத்துவிடக்கூடிய பாக்கியதை கூட இங்கு கிடையாது என்பதெதுவும் அவன் அறியா வயசு. பலவேசத்தம்மாள் வாய் வார்த்தை சொல்லத் திராணியற்று தனக்குள்ளே தவித்துக் கிடந்தாள். பிள்ளை வாழ்வு சீரழியப் போகிறதா சீமாட்டியாக மாளிகை புகப்போகிறாளா என்று எதுவும் தெரியாமல் இருந்தது அவள் பாடு.

சித்திரை மாசத்திலே சீர்பாகம் தேதியிலே ஞாயிறு திங்களுக்கு நல்ல புதன்கிழமை நல்ல தேதியென்று சொல்லி முகூர்த்தம் முடிவானது. முடி மன்னருக்கும், அம்பத்தாறு அரசருக்கும் அருமையாய் சீட்டெழுதி அழைப்பு அனுப்பினார் முத்தையன். வாழை மரம் பிளந்து வாசலெல்லாம் பந்தல், தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல். ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் வீட்டுக் கல்யாணமாகக் கொள்ள ஊரே தூள் பரத்தினது போல் இருந்தது. இளம்பிள்ளைகள் வந்து மஞ்சள் குத்திக் கொண்டாட்டமாகச் சடங்கை ஆரம்பித்தபோது ஆர்ப்பாட்டமாய் வந்திறங்கினார் மாமன் முத்தையன். ஏயப்பா என்ன தோற்றம் அது.. கிழ யானையின் கனத்த காலடித் தடம்போல் மண்ணில் பதியப் பதிய நடக்கும் இந்த பெரிய மானுடத்துக்கும் எலிக்குஞ்சு போலிருக்கும் தனக்கும் இன்றைக்குக் கலியாணம் என்று பதபதைப்பதா அல்லது இந்தப் புத்தம்புது அலங்காரங்கள் தந்த கௌரதையையும், சட்டி சட்டியாக நிரப்பியிருக்கும் பலகாரங்களையும் எண்ணிக் குதுகலிப்பதா என்ற எந்த மனமுடிவுக்கும் லெச்சுமி வரத் தயாராயிருக்கவில்லை.

ராத்திரி நேரத்துக்கு ஊர்ப்பாடுகள் வந்துசேர, வெட்டவெளிப் பந்தலில் கலியாண கச்சேரி களைகட்டத் துவங்கியது. பால் உலையிலும், புளிநீரிலும், கரும்பஞ் சாறிலும் சோறுபோட்டு சமைத்த புகை ஊரை உசுப்பேற்றியது. கள்ளுப் பதக்கு, கதலி, பொங்கல் கறி, எள், அவல், பொரி, வெல்லம், பலாச்சுளை என்று உபசரிப்புத் தடபுடலாக இருந்தது. சந்தனமும் மஞ்சளுமாக வந்தமர்ந்திருந்தார் மணமகனாக முத்தையன். தந்தூபி ஊதிகள் முன்னால் வந்து கலியாணச் செருக்குகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

‘சந்திர சூரியர் தானவர் வானவர் முந்தியோர் தேவரும் முனிவரும் காத்திட நல்லக் கலியாணம் நடந்திடச் செய்வாரே! இந்தப் பெண்ணும், மாப்பிள்ளையும் நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும், வேரும் கொழுந்தும் வில்வப் பத்திரமும், தண்ட மாலை, கொண்டமாலை தானணிந்து, ஆடை ஆபரணம் அலங்கரித்து, வெற்றிலைப் பாக்கும் வீட்டுப் பேழையில் நிறைநாழி நெல்லுமெடுத்து, நாட்டிலுள்ளோர் சபைக்கு வர, தாயிடம் முறைகேட்க, தம்பியிடம் வழிகேட்க, உரும்பு துடும்படிக்க, ஊர்மேளம் பறையடிக்க, கொம்பு துத்தூரி, மல்லாரி, திமிரித்தாளம், பம்பை, பேரணி எல்லா அமளிகளும் ஒலிக்க ஒலிக்க வெள்ளைக்குடை சுழல சுழல, வெண் சாமரம் விசிற விசிற விருதுகள் சுற்றி, தீவட்டிச் சகிதமாய் கட்டுக தாலி எம் மன்னவரே!’ என்று முழங்கியபோது மைத்துன்னாக சங்கையா முன்னின்று எடுத்துக் கொடுத்த கழுத்து மாலை லெச்சுமிக்கு அணிவிக்கப்பட்டது. அடுத்த கணமே அரிசிப் பொன்னால் கோர்த்த தாலி மகள் கழுத்தில் ஏறியிருக்கும் என்பதை மூளிகள் கூட்டத்திடையே நின்றிருந்த பலவேசத்தம்மாள் உணர்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.

வேடுவம்

ந்த ஊருந் தண்ணியும் இனி நம்மளை வாழ வைக்கும் என்று நம்பினாளோ அதே வெள்ளத்தில் விழுந்துச் சாகலாம்போல எரிந்தது நெஞ்சு. எத்தனைக் கொலை பாதகக் கூட்டுக்குள் அதுவும் தான் பெத்த ஒரே பெண் பிள்ளையைக் கேப்பார் பொறுப்பார் இல்லாமல் தள்ளி விட்டுவிட்டோம் என்ற ஆத்தாமை அவளைப் பலியாய் சுட்டது. தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி போல மாளிகைக்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட மகளை இனி எங்கு எப்போது காண்போம் என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கொட்டார வாசலில் நெடுந்துயரோடு நின்ற நாட்கள் தான் எத்தனை எத்தனை. அல்லும் பகலும் அழுதழுது ஆற்றிய கண்ணீரோடு யாருக்கும் எந்தச் சொல்லும் சொல்லாமல் திரும்பவும் கால்நடையாய் இருட்டுப்போக்கில் வேலி எல்லையைக் கடந்து கொண்டிருந்தார்கள் தாயும் மகனும்..

அம்மைக்கும் தம்பிக்கும் எப்போ வருவார்கள் தன்னைப் பார்க்க என்று பரியாய் பரிதவித்த லெச்சுமிக்கு பிறகு அவர்கள் குறித்த எந்த உண்மையும் தெரியாமலே போனது. இளம்பிராயத்தில் கண்ணுக்கு முன்னால் அய்யா தூக்கில் தொங்குவதைப் பார்த்தவள். இன்று அம்மையும் தம்பியும் இந்தத் திக்கு தெரியாத காட்டுக்குள் தன்னை தள்ளிவிட்டுவிட்டுச் சந்தோசமாக இருப்பார்கள் என்று வாய்வராத வார்த்தைகளால் உள்ளமொடிந்து ஓங்காரமாய் கத்தி அவர்களைச் சபித்தாள். அவளது எந்தத் தவிப்புக்கும் ஒரு சிறு குறிப்பும் கொடுக்கமாட்டாமல் பெரும் மலைபோல் எதிரில் அமர்ந்திருந்தார் முத்தையன். புராதனமான அவரது ஆஜானுபாகு அத்தனையும் அசந்துபோய் தோல் வற்றி, தொடை வற்றி, குருக்கத்திப் பிஞ்சாய் நரைத்த மார்மயிர்களோடு வாய்பிளந்து சிரித்து அவளைக் கிட்டே அழைத்தார்.

அவருடைய இந்த ராசா வாழ்க்கை எல்லாம் ஒருகாலத்தில் துள்ளித் திரிந்த வேகத்தில் புத்தி நிதானித்துச் செயல்பட்டதால் அவர் மடியில் வந்து விழுந்தவை. கையில் தடிபிடித்துக் கொண்டு மேட்டாங்காட்டுக்குள் வேட்டுவம் பண்ணவும், வெட்டு மரங்களைக் களவெடுக்கவும் போகும் கூட்டத்தாருக்கு ஊடே முத்தையன் சாடி வந்தால் அவர் நடைமட்டும் துண்டாகத் தெரியும். தண்டங்கீரை இலை மாதிரி உடம்பெல்லாம் தடித்த நரம்புகள். தண்ணீருக்குள் சாடுகிற பாம்பை தலக்’கென்று கொண்டையிலே குறிபார்த்து அடிக்கிற கூரான பார்வை என்று களேபரமாய் இருப்பார். மலங்காடு மொத்தமும் திருவாங்கூர் ராசமார் ஆளுகைக்குள் இருந்த போது, ஒருதடவை மாவேலிக்கரை படைக்காரர்களிடம் கூட்டமாய் அகப்பட்டுக் கொண்டார் முத்தையன்.

ரெண்டு தரப்புக்கும் பலத்த சண்டை. எல்லாபேரும் சிறைப்பட்டுவிட, ராத்திரியோடு ராத்திரியாய் படைத் தலைவனின் குதிரையையும், அவன் அணிந்திருந்த வெள்ளிக் காப்பையும், சுடு தோக்கையும் பறித்துக் கொண்டு, போர்ச்சேவல் போல அடிபட்ட காலை கெந்திக் கெந்தி நடந்து தான் மட்டும் தப்பித்து வந்துவிட்டவராம். தன் படைகளையே மறித்து ஒருவன் தப்பித்துவிட்ட விபரம் கேள்விப்பட்ட திருவாங்கூர் மகராசா மறுவாரமே இவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஆளனுப்பி இருக்கிறார். காலடி காயம் ஆறி வந்த முத்தையனைத் தன் ராசாங்கத்தில் கூட இருந்து இனிமேல் தனக்குக் காவல் காக்கும்படி கேட்டுக் கொண்டார் ராசா. ராசாவின் வேண்டுகோளை மறுத்து, காட்டுக்குள் தனக்கு ஒரு எல்லை கேட்டு வாங்கி, தன் கூட்டத்தாரையும் தன்னோடு விடச்சொன்னால் தான் பறித்த குதிரையையும், காப்பையும், கொத்தபிடி சுடு தோக்கையும் தனக்கே தந்துதவினால் ராசாங்கத்தின் மேலெல்லை வரைக்கும் தாமே காவல் பார்த்துக் கிடப்போம் என்று நியமனம் கேட்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியம், அதனுள்ளே ஒரு நிதானம்.

அன்றைக்கு முதல் மேலெல்லை காட்டுக்குள் தனக்கென்று மாவேலி நிலம், மகராசா புலிவேட்டைக்கு வரும்போதெல்லாம் அவருக்குப் பாதுகாப்பு என்று ராசாங்கத் தொடர்புகளில் வலுசாலியாகிவிட்டார் முத்தையன். கூதல் எட்டிப் பார்க்கும் காலத்தில் மகராசா வந்து மேல்மலை கொட்டாரக் கோட்டையில் தங்குவார். அப்போதெல்லாம் அவருக்கான வசதிப்பாடுகள் அத்தனையும் முத்தையன் தரப்புதான் பார்த்துக் கொண்டது. ‘எரியுதே எரியுதே என் கொள்ளி’ என்று பெத்தவர்கள் துடிதுடித்தபோதும் அவர்களின் பெண் பிள்ளைகளைக் காவிக் கொண்டுவந்து ராசா மடியில் போட்டு, அந்த உபகாரங்களுக்குப் பரிகாரமாக பொன் பொருளும், நிலபுலன்களும், நிர்வாகக் கொட்டாரங்களும் தனக்கென்று சேர்த்துக் கொண்டார். நாளாவட்டத்தில் தாம் களவெடுத்த காட்டுக்குக் கீழே தன் குடிசனங்களைக் கொண்டுவந்து அமர்த்தி, ராசாங்கப் பதவிகளும் வாங்கிக் கொண்டு பெருங்குடிக்காரனாய் மாறிப்போனார்.

இராவானால் இலுப்பைச் சாராயம். எதுக்களித்து படுக்கைக்குப் போகும்போது குளிருக்குக் கட்டிக் கொள்ள பெண்ணுடம்பு. மிடுக்கினால் மடிந்து விழும் பொடித் தலைகள். மடக்கின சாதிகளுக்கெல்லாம் பொஞ்சாதி. சொத்துக்கும் சுகத்துக்கும் பஞ்சமேயில்லை முத்தையனுக்கு. ஆனால், அப்படியும் இப்படியுமாய் வாழ்ந்தவருக்கு வாரிசு இல்லாமல் ஏன் போனது. அந்த ஒரு துரதிஷ்டம் தான் அவரை மாடாய்ப் போட்டு ஏறி மிதித்து உழட்டியது. எங்கெங்கெல்லாமோ எகிறி விழுந்து பார்த்தார். ம்ஹூம் ஒரு கொழுந்து கூடத் தளிர்க்கவில்லை. பொண்டாட்டியாய் வந்தவளோ எரியும் நெருப்பு போல ச்சீ மனுசா என்று துப்பாத குறைக்குப் பேசிவிட்டாள். அவள் முகத்தில் கரிபூசவாவது ஒரு பிள்ளையைக் கொண்டார வேண்டும். புத்திர துயரம் வந்து அவரை ஒரு ஆட்டிய ஆட்டில் தான் வந்துநின்ற அன்றைக்கே லெச்சுமியியை தன் மனசுக்குள் வரித்துக்கொண்டார்.

கட்டாந்தரை சுருளில், கன்னி நிலத்தில் விளைந்த கதிர்கட்டு போல லெச்சுமி சுருண்டு கிடந்தாள். சாராய மூச்சுக் காத்தும், சடை சடையான உடல் திணவோடும் அவளை எக்கிப் பிடித்து உலுப்பினார் முத்தையன். மூப்புபின் புழுதி அவர் முகமொட்டப் படிந்து கிடந்தது. கண்களில் இருந்த காமத்திற்கு மட்டும் வயது என்ற ஒன்றில்லை. வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்கக் காத்திருந்தவன்போல இத்தனைக் காலமும் மலடன் என்று கிடைத்த அவச்சொல்லுக்கு இவள் மூலமாக ஒரு பதில் கண்டாக வேண்டும் என்கிற வெறி முத்தையனுக்கு. வயதின் நடுக்கமும் புதிய பரவசத்தின் தளர்ச்சியும் அவருக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், சுருட்டுப் புகையை உள்ளிழுத்து விடும்போது, கொடுக்கும் கமறல் சத்தத்தில் கூட எந்தப் பதற்றத்தையும் காட்டாமல் அவளை ஒரே சுண்டில் கிட்டே இழுத்துப் போட்டார்.

லெச்சுமி அத்தரும் அஞ்சணமும் கொண்டை ஊசிகளும், தனந்தூக்கிகளும், கண்கட்டி வித்தை காட்டும் மேல்பூச்சு என்று எதுவுமே தேவைப்படாத பாண்டி நாட்டுத் தேக அழகி. வயதைத் தோற்கடிக்கும் அவள் வாளிப்பும் வெட்டிவேருடன் தாழம்பூ கலந்தது போல வாசனை வீசும் அவள் உடலும் ஆளைக் கிறுகிறுக்கச் செய்துவிடும். தன்மீது விழுவிருந்த முதல் ஆணணைப்பின் மூர்க்கத்தில் வெளிறிப் போயிருந்தவளை அறுவடைக்குக் காத்திருக்கும் கதிரை அள்ளி தோளில் போட்டுக் கொள்வது போலத்தான் கையாண்டார் முத்தையன். பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றிலும் தசைகட்டிய மார்பில் பொங்கின மருட்சிகள் யாவும் நீங்க, பனிச்சை மரத்தை எருக்கஞ் செடிகள் சூழ்ந்து பாழ்படுத்திப் போட்டதுபோல களையிழந்தே கிடந்தாள் எந்நேரமும். அச்சமும், இரைப்பும், அலறலும், பயமும் மண்டிய அவளது கிடப்பை உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தாள் முத்தையன் பெஞ்சாதி குமராத்தாள்.

சாம்பவம்

லையாள நாட்டின் குமரங்குடி பொற்றையடிக் குன்றத்தைக் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது திருவாங்கூர் அரச பல்லக்கு. திடீரென விளக்குக் கிண்ணங்களும் , தீப்பந்தங்களும் அணைந்துபோய் கும்மிருட்டில் தகித்து நிற்கிறது பல்லக்குப் பரிவாரம். வெளியில் எட்டிப் பார்த்து என்ன விபரம் என்று தெரிந்துகொள்ளத் தன் தளவாயை அழைக்கிறார் திருவாங்கூர் மகராசா.

“பந்தம் பொழிஞ்ஞல்லோ குஞ்சுராமா”

“பனிபெய்யு நுண்டே தம்புரானே”

“இது விதியோ சதியோ குஞ்சுராமா’ என்று ராசா விளித்துக் கொண்டுருந்த தருணத்தில் சரியாய் அவரது விலாவைச் சீவிக்கொண்டு வெளியேறுகிறது தறவாடுகளின் வல்லீட்டி முனை.

சுற்றிலும் கண் மாளும் இருட்டு. பல்லக்கிலிருந்து, மூச்சைப் பிடித்துக் கொண்டு கீழே குதிக்கிறார் மகராசா. தறவாடுகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்து நிற்கிறார்கள். ராசா அங்குமிங்கும் பார்க்கிறார். கீழ்தலையில் அண்ணாந்து பார்க்கிற உயரத்துக்கு எழுந்து நிற்கிறது பொன்குன்று. குன்றுக்குக் கீழே பரந்துகிடந்த சமவெளியெங்கும் நிலை தப்பிய அமளி. ராசாவுக்குத் தசை வலி பின்னுகிறது. மூச்சைரைப்பு குறைந்தால் தேவலாம். துணைக் காவலாட்கள் எவரின் தீவர்த்தி ஜோதியும் கண்ணில் தென்படவில்லை. அலுக்கமாகச் சத்தம் போட்டாலும் அது எதிரிக்கே தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும். முடிந்தவரை இருளில் பம்மிப் பதுங்கி ஒளிகிறார் மகராசா.

அன்றைக்கு அந்த ராசாவை கமுகுப் பாளையில் அமுக்கிப் போட்டு தறவாடுகளின் வாசனையில் கூடப்படாமல் மறைத்துக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள் குமராத்தாளின் மூப்பர்கள். சாம்பவக் குடிகளான அவர்களின் மூத்தவர் மகராசா போல உடை தரித்துச் சென்று, ராசாவுக்குப் பதில் தன்னுயிரைத் தந்து தறவாடுகளை திசைதிருப்பி, அவர்களது தேடுதல் வேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒரே ராத்திரியில் என்னென்னவோ செய்து ராசாவைக் காப்பாற்றின விசுவாசத்துக்காக வாரிக்கொடுத்த சொத்துக்களின் பூமியில் தான் குமராத்தாள் செல்வச் செழுமையோடு ஏழு அண்ணன்களின் தங்கையாகப் பிறந்திருந்தாள். அந்த கன்னியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முத்தையன் ஆசை கொண்டது காலத்தின் சூது.

அண்ணன்மார் அரவணைப்பிலும் மிளாவாகத் துள்ளிக்கொண்டு திரிந்தவளைத் தான் கண்டு மயங்கிய ஒரே ராத்திரியில் குதிரையில் போய் கொள்ளையிட்டு, அவள் காடுகளை எல்லாம் அழித்து, சொத்துக்களைக் கொள்ளையிட்டே அவளைத் திருமணம் செய்துகொண்டிருந்தார் முத்தையன். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் குடல் சரியச் சாகக் கிடக்க தான் வாழ்ந்த மலையடியும் காடும் நெருப்பில் கருக, கை வறண்டு, கால் வறண்டு, கண்ணீர் சுரப்பு மறந்து கதறித் துடித்தவளை தன் கொட்டாரக் கோட்டைக்கு வரும் பாதையில் வைத்தே அங்கலமங்கலமாக்கின அவன் பாவங்களுக்கு பலிமுடித்து அவனை நிர்கதியாக்கித் தீர்வதென்ற இறுமாப்பு அவளுக்குள் எப்போதும் குடிகொண்டிருந்தது.

சூலிக்குடம்

லெச்சுமி வயிற்றில் தங்கிய கரு கலைந்து கெட்டது என்று குமராத்தாள் வருத்தம் கொண்டுவந்து சொன்னபோது, முத்தையனுக்குத் தாளவில்லை. இத்தனைக் காலம் தான் சேர்த்தெடுத்த அத்தனை சொத்து சம்பத்துக்களும் எந்தவோர் அவச் சொல்லை தன் மீது சாபமாகப் பொழிந்து கொண்டிருக்கிறதோ அந்தப் பழி அழியவே அழியாதா என்கிற துயர் அவருள் நெருப்புக் குண்டமாய் பற்றி எரிந்தது. இயலாமையின் கோபத்தால், லெச்சுமியை தளியில் கட்டி உதைத்தார். தன்னைச் சூழ்ந்து கிடக்கும் இந்த அவமானத்திற்கு மூலகாரணம் குமராத்தாள் என்கிற ஓர்மை அவருக்குள் இருந்தாலும், அவளை வெற்றி கொள்கிற வாய்ப்பு கைநழுவிப் போன உச்சக்கட்டத் தாளாமையில், குமராத்தாள் மீது எழுத முடியாத எல்லா ஆத்திரங்களையும் அவர் இப்போது லெச்சுமி மீது கொட்டத் துவங்கினார்.

நல்லபாம்பு படத்தை திருப்புகிற மாதிரி நாள்தோறும் தன்னைக் கொத்திப் பிடுங்கின மாமனைக் குறித்து மனதாரத் துக்கப்பட்டாள் லெச்சுமி. அவள் அவனது தோல்வியின் நெருக்கமான வடிவமாக இருப்பதை வலியோடு உணரத் துவங்கியபோது, தனக்கென்று பிள்ளை இல்லை என்ற பேர் இனி தன் மாமனுக்கு வரக்கூடாது என்று அவள் மனம் கருணைகொண்டு இரங்கியது. கருப் பிடித்து தன்னையறியாமல் கலைந்து வலியால் துடித்த ராத்திரியின் கொடூரங்களை எல்லாம் வெளிச் சொல்ல முடியாமல் மறைத்துக் கொண்டவள், ஓர்நாள் நறவம் குடித்த மயக்கத்தில் முங்கிக் கிடந்த மாமனை, அந்தி நேரத்தில் ஆளரவம் அறியாமல், பைய ஒழிந்துசென்று தானாய் அவனோடு கூடினாள். அந்தக் கூடலின் விநயமாக லெட்சுமிக்கு மீண்டும் கரு பிடித்தது.

இந்த முறை தன் மடி நிறைக்கப் போகும் பிள்ளையால் மாமனுக்கென்று ஒரு வாரிசைச் சுமக்கப் போகிறோம் என்ற குதிப்பில், யாருக்கும் இந்த உண்மையைச் சொல்ல மறைத்தாள். ஆனால், ஒருப்பொழுதும் எதிர்பாராவிதமாக, ‘எங்கோ யாரோடோ தொடர்பெடுத்துத்தான் வயிற்றில் பிள்ளை வாங்கி வந்திருக்கிறாள் லெச்சுமி என்று நடுக்கூடத்தில் வைத்து அவளை மானமிழக்கச் செய்தாள் குமராத்தாள். அதற்கு வாய்ச்சொல்லால் உள்ளதைச் சொல்ல முடியாத அவளின் ஊனத்தைத் தன் சாதகமாக்கிக் கொண்டாள். லெச்சுமி எவ்வளவோ வாயசைத்தும், கையசைத்தும் எவனுக்கோ வந்ததை தன் பிள்ளையாக்கப் பார்த்தாளே என்ற பித்தம் தலைக்கேறின முத்தையன்கிட்டே அவளால் எதையும் விளங்க வைக்க முடியவில்லை.

அவமானத்தில் தார்க்கோலால் குத்தப்பட்டதாக உணர்ந்தவன், ஏனென்று கேட்க நாதியில்லாத நாய் என்று சொல்லிச் சொல்லி அவளைச் சாணிக்குழியில் தள்ளி மிதித்தான். ஒழுக்கங்கெட்டுப் போன இவளோடு கூடினவன் யாராய் இருந்தாலும் அவனுக்கும் சாவு இப்படித்தான் என்று தண்டனை அறிவித்து லெச்சுமியோடு சேர்த்து, தான் சந்தேகித்த மூவரையும் ஊரறிய கழுவில் பாய்ச்சினான். லெச்சுமியின் வயிற்றில் கருப்பிடித்து, உயிர்த் தரித்த அந்தச் சிசுவும் அவளது உதிரத்தோடு உதிரமாய் கழுவில் மாள, வலியின் ஆங்காரத்தோடு தன் நாக்கைத் தானே பிடுங்கி வீசிச் செத்துப்போனாள் லெட்சுமி.

மூளிப்பருந்து

ட்டிக்காயைப் பறித்துத் தின்று சாகத்துணிந்து விட்ட பலவேசம் தன் மகன் சங்கையன்கிட்டே வாங்கின கடேசி சத்தியம் அவன் தாய்மாமன் குலம் மொத்ததையும் கருவறுத்துவிட வேண்டும் என்பதுதான். தனித்து விடப்பட்ட அவன், காடோ செடியோ என்று அலைந்து திரிந்து, சத்திரம் சாவடிகளில் விழுந்து கிடந்து, கட்டக்கடேசியாக பணிக்கர் கூட்டத்தாரோடு சேர்ந்து மலையாள தேசம் முழுக்கச் காவல் பணியாகச் சுற்றித் திருந்திருந்தான். எந்தக் கொழுகொம்பு கிடைத்தாலும் பற்றிப் படரக்கூடிய கொடியாகக் காத்து வளர்ந்த அவன் வெஞ்சினம் குஞ்சுகுடி வார்படச்சாலையில் அன்று ஓர் தீர்மானத்துக்கு வந்தது.

காக்கையும் இறங்க முடியாத கொட்டாரப் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் தன் மாமனை நெருங்குவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம் எனத் தெரிந்திருந்தது. சிவப்புச் சீருடையும், நாணல் தொப்பியும் அணிந்து மலையாளச் சிப்பாய்போல அரண்மனைக்குள் நுழைந்தபோது சங்கையனை இன்னார்தான் என்று ஆள் அடையாளம் சொன்னாலும் யாரும் கண்டுபிடித்திருக்க முடியாத தோற்றத்தில் இருந்தான். எங்கே திரிந்து சுற்றினாலும் அவன் மண்டைக்குள் நெருப்பு உளியைக் கொண்டு கீறினதுபோலப் பதிந்துவிட்ட உடம்பிறந்தவளின் அவச்சாவும், தாயாளின் சத்தியமுமாகப் பந்தாடி வந்த தாய்மாமன் பகையை அந்தப் பனி ராத்திரியிலே கரம் முடித்தான். பருந்தாய்க் காத்திருந்து இரு உயிர்களின் ரத்தத்தையும் தரை முழுக்கப் பரவவிட்டபோது, எல்லா காலமும் நெருப்பாய் பொழிந்து கொண்டிருந்த அவன் நெஞ்சுக்குள் கூதல் பெருகி உடல் சிலிர்த்தடங்கியது.

கொட்டுமுழக்கு

”இதனால் அறிவிப்பு என்னன்டா… வீராண சமுத்திரத்திலே அம்ம முத்தையஞ் கோயிலில கொடை காப்பு சாத்தியிருக்கு… அம்ம மேலங்காட்டு முத்தையஞ்சாமி கோயில் கொடைத் திருவிழாவுக்கு சுத்துபத்து அத்தனை ஊர்கள்ல இருந்தும் பெரிய மனுசங்க சனங்க எல்லாரும் இன்னையில இருந்து பதினெட்டாம் நாள் வரைக்கும் கறி மீனு அசைவஞ் சாப்புடாம சாமிக்கு வெரதக் கட்டு கட்டிக்கணும்னு கேட்டுக்கிடுறோம்… இது தலையாரி அறிவிப்பு சாமியோ…”

முத்தையன் சாமி கோயில் கொடைக்கு ஊர் தயாராகியிருந்தது. கொட்டுச்சத்தம் விட்டம் அதிர முழங்க, பந்த வெளிச்சத்தில், அலங்காரங்கள் மின்ன, சாந்தில் குழைத்துச் செய்த முத்தையன் முகம் ஜோதியில் துலங்கி நிற்க, ஊர் எல்லையில் குட்டி விளக்கு அலங்காரங்களில் சிவனும் பார்வதியும், பிள்ளையாரும் முருகனும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு புன்னகை பூரித்துக் கொண்டிருந்தார்கள். கோடைநாளில் அந்தி சாய்ந்தபிறகு கோயிலுக்கு வரக்கூடாது என்று கன்னிப் பிள்ளைகளைத் தடுத்துவிட்ட பெரியாட்கள் ஆரமும், தேங்காய் பழமும் ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் தாம்பூலத்தில் எடுத்து வைத்துக் கொண்டு நேந்துவிட்ட கருங்கிடாய்களை கோயிலை நோக்கிப் பத்திக் கொண்டு போனார்கள்.

கமிட்டிக்காரர் பொன்னம்பலம் பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சாமி வேட்டைக்குப் போகும்போது எதிரே ஊரார் யாரும் வந்துவிடக் கூடாது என்று மைக்செட்டில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவரை நேர்த்திக் கிடாய்களை கோயில் மரத்தடியில் கொண்டுவந்து கட்டாதவர்களை விரசாக வரச்சொல்லியும் அதட்டிக் கொண்டிருந்தார்.

மணி பதினொன்று தொட்டிருக்கும். வில்லுக்கச்சேரி ஆரம்பமாகியது. வீரகேரளம் பாட்டுக்காரர்கள் சலங்கை சத்தம் கலகலக்க முத்தையன் கதையை இப்படிப் பாடத் துவங்கினார்கள்.

‘ஈரேழு பதினாலு லோகங்களையும் அடக்கி ஆண்ட மேலங்காட்டு பெருங்குடி முத்தையனாண்டவன் சுவாமிக்கு ரெண்டு சம்சாரங்களாம்.

“ஆமா…”

“அவர்களிலே பெரிய நாச்சி ரௌத்திர காளி. சின்ன நாச்சி பிள்ளை வரங் கொடுப்பவள்.”

“கேளாத வரமும் கொட்டிக் கொடுப்பவள்..”

“நேரே எதிரே அருவாளை ஓங்கி, குதிரையேறி நின்று கொண்டிக்கும் சங்கையன் இவர்களுக்கெல்லாம் காவல் தெய்வம்.”

“ஆமா.. பொல்லாத காவல்காரன்… பொசுக்கென்றால் கோவக்காரன்.”

“அந்த முத்தையனுக்கும் அவனோட ரெண்டு நாச்சிகளுக்கும் அந்தப் பக்கம் குடியிருப்பவள் பலவேசத் தாயார். இந்தச் சாமிகளுக்கெல்லாம் மூத்த தாயார்…”

“சரிய்…”

“ஈரேழு லோகங்களை அடக்கி ஆண்ட முத்தையன் ஆண்டவர் ஒவ்வொரு பங்குனியும் நடைபெறும் உத்திரத் திருவிழாவில் வெள்ளிக் குதிரை ஏறி அருள் பாலிக்க, மளையாள தேசமிருந்து பக்தர்களெல்லாம் வந்து வணங்கி..”

“வணங்கி…”

“வெள்ளாடு குறும்பாடு மலைமேயும் வரையாடு என்று வெட்டி வெட்டிச் சாத்துகிறார்…”

“எப்படியெப்படியெம்மா சாத்துகிறார்..”

“அஞ்சு கோட்டை அரிசிப்பெட்டி…”

”வந்ததம்மா… வந்ததம்மா…”

“பஞ்சுப் பஞ்சா வேக வச்சி..”

“வெந்ததம்மா… வெந்ததம்மா…”

“தலை வாழை இலை விரிச்சி
தரமுழுக்க பர பரப்பி..”

“எல்லாம் தயாரா…”

“மாலையோடு கொடியோடு
மதலையெல்லாம் வேக வச்சி..”

“வேக வச்சி…”

“ஈரக்கொலை காமரக்கால்..
எலும்பெல்லாம் மல கணக்கா..”

“சரீய்..”

“பாளை அறுவாளால் நெஞ்சு கீறி வடிச்ச ரத்தம்…”

“அடேங்கப்பா….”

“எல்லாம் கொண்டாந்து வச்சாச்சா…”

“வச்சாச்சு வச்சாச்சு, இனி ஊட்டு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி..”

“அள்ளி அள்ளி ஊட்டுக் கொடுக்க
ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

”ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

“முத்தையன் சாமி வாரா..ரய்யா..”

டுண்டுகு டுண்டுகு டுண்டக டுங் டக..

***

கார்த்திக் புகழேந்தி

கார்த்திக் புகழேந்தி – பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு [email protected]

18 COMMENTS

  1. என்ன ஒரு ஆவேசம்..கதை அவ்வளவு வேகமாக குட்டி குட்டி சிறு தலைப்புகளில் விரிந்து செல்கிறது.
    குல தெய்வமாக வழிபடும் கடவுளர்களின் கதையென சொல்லலாம்.புதிய வார்த்தைகள் நிறைய இருந்தது.நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்தது.

  2. வசீகரிக்கும் எழுத்து நடை… எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத கதை நகர்வு… வட்டார வழக்குச் சொற்களின் வாசமென கதை முழுவதும் நம்மை ஈர்த்துக் கொள்கிறது.

    கிராமத்திலிருக்கும் சிறு தெய்வங்களுக்கெல்லாம் ஒரு கதை இருக்கும்… அப்படியான ஒரு கதையை முன் பின்னென மிக அழகாக நகர்த்தி, வில்லுப்பாட்டின் பின்னே நம்மை விரசாய் ஓட வைத்து… ஆஹா… அருமையானதொரு கதையை வாசித்த திருப்தி… வாழ்த்துகள்.

  3. காட்டாற்று வெள்ளம் இரக்கமற்றது.எதிர்படும் மரங்களை முறித்துப்போட்டுக் கடக்கும். அதே வேளையில் அதன் நிறையில் சருகுகள்,விதைகள்,படிமங்களை உருவாக்கி மேடேற்றவல்ல கனமான மண் என எல்லாமும் அடங்கி இருக்கும்.
    இந்தக் கதையில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் நடை அப்படியான அடர்த்தியை உடையது ( ஏன் இந்தக் கதை என குறிப்பிடுகிறேன் என்றால் கதைச் சூழலுக்கு ஏற்றவாறு நடையும் மாறுதல் அடைய வேண்டும். இவரது சிறுகதைகளை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்கிற முறையில் அந்தந்தக் களம் சார்ந்த மொழித் தாவலை உணர்ந்திருக்கிறேன். )
    தொல்லியல் மற்றும் நாட்டாரியலில் எழுத்தாளர் அடைந்த நிலை இந்தக் கதையின் புனைவு மொழிக்கும் கைகொடுத்திருக்கிறது. உண்மையில் இது ஒரு தேர்ந்த நுட்பம்.தங்களது துறைசார்ந்த அறிதல்களை புனைவெழுத்தில் வெறும் தகவல்களாக மட்டும் இறைப்போர் கவனம் செலுத்த வேண்டிய இடமும் இதுதான்.

    சிறுகதை என்பதால் இந்தக் கதையின் உள்ளடக்கம் குறித்து விரிவாகக் கூறுவது முறையன்று.சுருக்கமாக அதே நேரத்தில் அழுத்தமாகக் கூற எனக்கு இயலாது.
    ஒரு வரியில் கூற வேண்டும் என்றால், இக்கதை அதன் இறுதிப் பத்தியில், அதில் இடம்பெறுகிற ஒரு பாடலில் உச்சத்தை அடைகிறது.பெரும்பாலும் சிறுகதைகளில் இடம்பெறுகிற கதைத் திருப்பம் என்பது சட்டென்று முகத்திற்கு நேராக பாம்பைப் பிடித்து நீட்டுவதைப் போல் தான் அமைந்திருக்கும். அது புற அதிர்வுகளை மட்டுமே உண்டாக்கும்.என்னைக் கேட்டால் அப்படிச்செய்வது ஒரு மலினமான வித்தை. இக்கதையில் இடம்பெறுகிற இறுதித் திருப்பம் நம்முள் ஓர் எதிர்மறை மன எழுச்சியைத் தூண்டுகிறது. அது அழுத்தமானதும் கூட. அதை புனைவுக்கு வெளியேயான ஒரு பண்பாட்டுச் சித்தரிப்பாக ஏற்பதும் ஏற்காததும் அவரவரின் வழிபாட்டு நம்பிக்கையைப் பொறுத்தது.

    எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

  4. A summary of a novel is not a short story (per grammar). But this is a summary of two genres that didn’t have a sense of time or an incident. I accept the writer wife’s rating a short story!
    You have a talent to write a historical novel. Keep writing a novel based on this theme.
    Thank you,
    GeeBee

  5. நல்ல அனுபவம், அதிகாரங்களாக கதை நீண்ட விதம், இடம் ,காலம், சூழல் விவரிக்கும் விதம் அருமை கூடுதலாக கதை இறுதியில் வாசகனையும் உள்ளே இழுத்துக் கொண்ட சுவாரஸ்யமான எழுத்து இளம் எழுத்தாளர் பெரும் பயணம் செய்வார், வாழ்த்து வாழ்த்து

  6. நல்லாயிருக்கு வேற தனியா கார்த்திக் எழுத்தைப் பத்தி சொல்லனும்ன்னு அவசியம் இல்ல. இடையில வேலை நிமித்தமா நிறைய விலகிட்டீங்க. இனியாவது தொடர்ச்சியா எழுதுங்க அதான் என்னோட ஆசையும் வேண்டுகோளும். மொழியை நாத்து நடுறதுல உங்க கைப்பக்குவம் எப்பவுமே சிறப்பு தான்.

    • நன்றிங்க கனவுப்பிரியன் 🙂

  7. முகநூலில் சிறுகதைகளும், நாவல்களையும் வாசிப்பது சாதாரணம் தான்… ஆனால் சில கதைகளின் தாக்கம்
    தூக்கத்திலும், எந்திரிச்ச உடனே திரும்ப வாசித்து விட்டு யாரவது வாசிச்ச நண்பரை தேடி தேடி கதையின் தாக்கத்தை ஊர் பெருமையுடன் தம்பட்டம் அடித்து மணிக்கணக்கா பீத்தீக்கொள்வது எம்புட்டு சுவராசியமா இருக்குல மனோ??
    எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி யின் #தலபுராணம் வாசிக்க ஆரம்பிக்கும் போது கொலையுடன் தொடங்க “வெக்கை”யின் தாக்கம் மனதில் வந்து போனது …. ஆனால் வாசிக்க வாசிக்க வேறு தளம், கோணம்ன்னு மண்டையில் கொட்டிக்கொண்டே #சங்கையாவுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்?

    முதல்பத்தி #செம்புலம் ஊர்க்காட்டு பேச்சுவழக்கில் வழுக்கி விழுந்து ஏன் இந்த பகை, எதற்க்கிந்த குருதின்னு பாண்டிநாட்டு #பலவேசத்தம்மாளின் பகுதிக்குள் நுழைந்தால் பெத்த புள்ளைகளை பலிகொடுத்த பரிதவிப்பும் மிச்ச புள்ளைகளை பத்திரமா பத்துக்க வேண்டிய பசிக்கொடுமைன்னு பராரரி வாழ்க்கைல போகுது ….
    ச்செரி அப்படியே பெத்த வீட்ல போய் பஞ்சம் பொழைக்க வூட்டு பெருமையை பாட்டா பாடும் பாவிமகளின் நம்பிக்கை பெத்த மக #லெச்சுமியின் வாழ்க்கையை காவு குடுக்கன்னு தெரியாமல் நம்மையும் கூட்டிக்கொண்டு சென்றது அண்ணண்மாரின் #சீர்பாகத்துக்குள்…

    வேடுவம், சாம்பவம் என அடுத்தடுத்து விரியும் சம்பவங்கள் #முத்தையனின் மனைவி #குமரத்தாளின் கெடும் பகையின் கருவறுப்பு (சூல்குடம்) அதன் தாக்கம் லெச்சுமியின் கொடிய முடிவு (மூளிப்பருந்து) என கதையின் மொத்தமும் “கொட்டுமுழக்கத்தில்”……

    ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆ…
    அத்தனை ஆவேசம் எழுத்தில் அள்ளிதெளித்திருக்கிறார் எழுத்தாளர்????
    மொத்த கதையும் சொல்லல.. அப்படியே இந்த லிங்க்ல போய் படிங்க டைம் இருக்குறவுங்க, கொஞ்ச நேரம் நெல்லை தமிழ் “ஆவேசங்கொண்டு” உங்களை அரவணைக்கும்?????
    வாழ்த்துக்கள் Karthick Pugazhendhi சார்???

  8. வட்டார மொழியும் சொல்வளமும் கதை சொல்லும் திறனுமென அத்தனை அழகும் கூடி வந்திருக்கும் அருமையான சிறுகதை. வாழ்த்துகள் எழுத்தாளரே.

  9. சிறு தலைப்பு, தொய்வில்லாத கதை வேகம்….மிக சிறப்பு

  10. வணக்கம் எழுத்தாளரே…

    படிக்க ஆரம்பித்ததும், தாய்மாமனின் உயிரை பழிவாங்கிய எக்காளத்தில் ஓடிய சங்கைய்யாவுடன் நானும் மூச்சிரைக்க ஓட ஆரம்பித்து விட்டேன்.

    பகைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையில், உங்கள் எழுத்தின் வேகத்தை விடவும், என்னுடைய இதயத் துடிப்பின் வேகம் மிக அதிகமாகிப் போனது.

    “உயிர்களை பிரசவிக்கிற கைகள்தானே பகையும் உறவும் அறியாத இந்த கொலைக் கருவியையும் உண்டாக்கி இருந்தது.
    எந்த ஒரு கொலைக் கருவியும் ரத்தம் பார்க்காமல் செத்துப்போவதே இல்லை”

    இப்படியாக… ஆரம்பமே அருமை.

    உத்தமியாம் லெச்சுமி ஆங்காரத்துடன், தன் நாக்கை தானே பிடுங்கி வீசிவிட்டு சாகும்போது, முத்தையாவின் மீது கோபமும், கொலைவெறியும், கொடும் பகையும் ஏற்படுவதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அதை சங்கையா மிகச் சரியாக செய்திருக்கிறான்.

    பலவேசத்தம்மாளும், லெச்சுமியும், சங்கையாவும், முத்தையனும், குமராத்தாளும் உங்கள் வட்டார வார்த்தைகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.

    கதைக்கான உங்களின் தேடல் வியப்பளிக்கிறது. பெருமைபட வைக்கிறது.

    மீண்டும் வாழ்த்துக்கள்.

    என்னென்றும் நன்றிகளும், பேரன்புகளும்……

    நிலாமகன், மணப்பாறை
    14.07.2020

  11. அருமை அருமை…. நண்பரே… சிறப்பாக எழுதி இருக்கின்றீர்..

  12. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய சிறுகதை “தல புராணம்”

    கதைநடையை நகர்த்தி சென்ற விதம் ஒரு திகில் படத்தை பார்க்கும் பார்வையாளர்களை திரையரங்கின் சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அசாத்தியம்..!

    எங்கள் தெற்கத்தி மண்ணின் சிறப்பே கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என அனைத்தும் குலதெய்வ வழிபாட்டில் இருந்தே தொடங்கும். வாழையடி வாழையாக தன் சந்ததியினருக்கு வழிபாட்டு முறையை பயிற்றுவித்த முன்னோர்கள் அதன் வரலாற்றை காற்றுவாக்கில் வில்லுப்பாட்டாகவோ, தெம்மாங்கு பாடலாகவோ, கும்மி பட்டாகவோ, ஒப்பாரி பாடலாகவோ செவிவழி செய்தியாக பதிவு செய்துள்ளனர்.

    கிராமங்கள் தோறும் அம்மனாக மந்தையிலும் , பல அவதாரங்களில் காளி யாகவும் சத்தியத்தின் தெய்வங்களாக ஊர்ஊராக முன்னோர் வழிபாட்டை நிலைநிறுத்தி நிற்கும் கருப்பன், முனீஸ்வன், அய்யனார், சுடலைமாடன் என சுருட்டு வாசமும் பட்டைசாரயமும் கிடாகறியும் வேண்டி நிற்கிறது.,

    எழுத்தாளர்கள் எனில் எளியோருக்கு விளங்கிடாத இலக்கிய நடையில் மட்டுமே எழுதவேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து வட்டார வழக்கிலும் நயமாக படைக்கலாம் என நிருபித்து வரும் ஆகச்சிறந்த கலைஞன் சகோதரர் Karthik Pugazhendhi க்கு வாழ்த்துக்கள்..!

    அன்புடன் உங்கள் எழுத்துகளின் ரசிகர்களில் ஒருவன்..!

    ? கி. எல்லாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here