Thursday, April 18, 2024
Homesliderசமகால ஈழத் திரையுலகம்

சமகால ஈழத் திரையுலகம்

– இயக்குநர் மதிசுதா

உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் கலைவடிவங்களில் ஒன்றாக திரைக்கலை அமைந்திருக்கிறது. நவீனயுக சினிமா இன்று மிகப்பெரும் சாதனைகளை செய்துள்ளது கற்பனைகளையும், எளிய வாழ்வியலையும் என சினிமா தன்னை இரு தளங்களிலும் தக்க வைத்திருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக தன்னையும் சர்வதேச திரைப்பட மைய நீரோட்டத்தில் இணைக்க போராடிக் கொண்டிருக்கும் திரையுலகமாக ஈழத்தமிழ் திரைத்துறை செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஈழ சினிமாவின் தோற்றத்தை இந்த கால வரையறைக்குள் எம்மால் உட்படுத்த முடியாது அதன் கால அளவு நீண்டது. துரதிஷ்டவசமாக தன்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு தன் மொழி மற்றும் நிலப்பரப்பில் மட்டும் தரித்து நின்று ஈழத்திரையுலகம் இன்று சர்வதேச திசைகள் எங்கும் பயணிக்க(த்) தொடங்கியுள்ளது.

ஈழ சினிமாவின் தோற்றமும் வளர்ச்சியும்  ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியது. இப்படியான செயற்பாட்டின் மூலமே புதிய சிந்தனைகளும், கண்ணோட்டமும் திரையுலகத்திற்குள் ஊற்றெடுக்கும். அதுவே இன்றைய தலைமுறையின் திரைக்கலைக்கு புதிய சாளரங்களைத் திறந்து வைக்கும்.  தற்போதைய ஈழ சினிமாவிற்கு முந்தைய காலங்கள் போல தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாத போதிலும் அரசியல்–சமூக ரீதியாக கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப இலகுவாக்கலானது பல படைப்பாளிகளின் உள்நுழைவுக்கு காரணமாக அமைகிறது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் இன்றைய தலைமுறையினர் செய்து வருகின்றனர்.

ஈழ சினிமாவை அடிப்படையில் இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தாயகத்திற்குள் இருந்து உருவாக்கப்படும் படங்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் படங்கள். இவை இரண்டு வெவ்வேறு தளங்களில் உள்ள சினிமாவாக மட்டுமல்லாமல் தமிழுக்கு என்று ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்கப் போராடுவதில் மிக முக்கியமான காரணிகளாக  உருவெடுத்து கொண்டிருக்கின்றன.

இதுவரை ஈழ சினிமாவில் நடந்தவைகள் ஒருபுறம் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருப்பவைகளையும் நடக்க வேண்டிய விடயங்களையும் பேசுவதுதான் கால ஓட்டத்தில் சாலச்சிறந்தது ஆகும்.

ஆக ஈழ சினிமா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இரண்டு வகைக்குள்ளால்  நோக்கலாம்

1) அகக்காரணி
2) புறக்காரணி

இதுவரை புறக்காரணிகள் பெரிய அளவில் ஈழ சினிமாவுக்குள் தாக்கத்தைச் செலுத்தி இருக்கவில்லை ஆனாலும் ஈழ சினிமா தன் சமூகத்துடன் தான் பெரிதும் போராடிக் கொண்டிருக்கிறது. அதில் பல காரணிகள் இருந்தாலும் மிக முக்கியமான சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அ)  இந்த சினிமாவுக்குள் இருக்கும் இரு குழுமப் பிரிப்புக்கள்

உட் காரணிகளுக்கும் பேசப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றாக ஈழ சினிமாவில் இருக்கும் குழுமப் பிரிவுகள் உள்ளடக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது

இங்கு உள்ள இது பிரதான குழுக்களாக

1) வாழ்வியல் சார் படங்களை செய்வோர்
2) வாழ்வியல் சாராத இன்னொரு தளத்தின் பிரதிகளை திரைப்படமாக செய்பவர்

இதில் முதலாவதாக குறிப்பிடப்பட்ட குழுவை சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுவது, நாம் வாழும் குடித்தொகையின் வாழ்வியலை அவர்கள் பேசும் மொழியிலேயே படைப்புகளாக கொண்டு வருவதே எமக்குரிய படைப்புகளாகும். அதற்குள் எல்லா வகையான Genre திரைப்படங்களும் உள்ளடக்கம் என்பது அவர்களது கருதுகோள் ஆகும்.

இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட குழுமத்தின் கருதுகோள் ஆக அவர்கள் குறிப்பிடுவது சினிமா என்பது மக்களுக்கானது மற்றும் கேளிக்கைக்குரியது. மக்கள் விரும்புவதை தான் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் சினிமாவுக்கு என்றொரு மொழி ஏற்கெனவே தமிழகத்தில் கண்டறியப்பட்டு விட்டது. அதனால் நமது பேச்சு மொழி சினிமாவுக்கு வரும்போது அவை மக்களுக்கு புரியாது என்பதுடன், இவை இருப்பவை தான் வர்த்தக சினிமாக்கள் என்ற பதத்தால் விவரிக்கிறார்கள். சினிமாவைப் பொறுத்தவரை ஒரு கசப்பான உண்மை எதுவென்றால் இதுவரை வர்த்தக சினிமாவுக்கு முதலீட்டை இட்டவர்கள் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட லாபம் ஈட்டவில்லை. ஆனால் மக்கள் மொழி பேசி மக்கள் வாழ்வியல் பேசி எடுக்கப்பட்ட படங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஈழ சினிமாவில் வருத்தத்திற்குரிய விடயங்களில் ஒன்றாக இதையும் குறிப்பிடலாம். இங்கே தயாரிப்பாளர்கள் என வந்து முதலிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தக சினிமா என்ற பதத்தில் மயங்கி தமிழக படங்களை உருவாக்கவே பண முதலிட்டு கையை கடித்துக் கொண்டு இறுதியில் ஈழ சினிமாவில் முதலீடு செய்வது வீண் என்ற கருத்துடன் தாமும் பின்வாங்கியதுடன் உள்நுழைய இருந்தவர்களையும் நிறுத்திய சம்பவங்களே அதிகமாக நடந்தேறியது.

இங்கு உருவாக்கப்பட்ட பல வாழ்வியல் படைப்புகள் இயக்குனர்களால் தமது முதலீட்டில் சுயாதீனமாக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால் சில விதிவிலக்கான தயாரிப்பாளர்களும் தம் முயற்சியில் தொடர்ச்சியாக முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆ) படைப்பாளிகளை நோக்கும் தாழ்வுநிலை பார்வை

ஈழத்தில் சினிமா என்பது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழில் முறையான கலையாக மாறவில்லை அதன் அடிப்படையில் இதை ஒரு வேலை அற்றவன் பொழுதுபோக்காகவே சிலர் விமர்சிக்கிறார்கள். அதனால் இங்குள்ள படைப்புப் போராளியாக உழைப்பவருக்கான சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இ) இன்னொரு சினிமாவின் பிரதியாக இயங்கப் பணித்தல்.

ஈழ சினிமா கனவு நோக்கி வந்த ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் அவர்கள் ரசனையாக தமிழக தமிழ் சினிமாக்களையே ரசித்திருப்பர். அப்படி இருக்கையில் பார்வையாளன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்.? அதன் அடிப்படையில் இங்கு உருவாகும் திரைப்படங்களையும் அதனைப் போல் செய்யுங்கள் என்றே பெரும்பாலானவர்கள் கூறிக் கொண்டிருந்தாலும் ஈழ சினிமா உருவாக்கத்தில் இருப்பவரிடம் ஒரு கேள்வி இருக்கிறது அதைப் போல ஏன் செய்ய வேண்டும்.? அதுதான் ஏற்கனவே அங்கே செய்யப்பட்டு விட்டது நாம் எங்கள் மொழியில் உங்கள் கதைகளை சொல்வோம்.

ஈ) ஈழ சினிமாவின் தேவை பற்றிய காரணங்கள் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை.

நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நம் வாழ்வியல் பண்பாடு மற்றும் இடங்களை சினிமாக்களால் தான் நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும் என்ற தெளிவு மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

உ) சினிமாவின் பேச்சு மொழி தொடர்பான சிக்கல்கள்.

இவை பற்றி ஆரம்பத்தில் பேசப்பட்டிருக்கிறது, ஈழத்துப் பேச்சை தவிர்ப்பதற்காக கூறப்படும் காரணம் ஈழத்துப் பேச்சு வழக்கானது திரையில் நாடகப் பேச்சாக அமையும். அதனால் மக்களுக்கு புரியாது. ஏற்கனவே சினிமாவுக்கு புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பதே ஆகும். ஆனால் வாழ்வியல் சார்ந்த படங்களை செய்வோர் கூறுவது நாம் இயல்பாக எதைப் பேசுகிறோமோ அதை திரையில் பேசுவோம் அதுதானே எமக்குரிய வாழ்வியல் சார்ந்த பேச்சு மொழியாகும் என்பது வாழ்வியல் திரைப்படம் செய்பவர்களது வாதமாக அமைகிறது.

ஊ) ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் புறக்கணிப்புகள்.

இது முக்கியமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஈழத்திரையுலகம் என இவ்வளவு பேசுகிறீர்களே இதுவரை என்ன சாதித்தீர்கள் என்றுதான் இதை(ப்) படிக்கும் ஒவ்வொருவரும் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் சாதித்த பட்டியல் மிக நீண்டது. உலகின் அங்கீகரிக்கப்பட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று இருக்கிறார்கள் என்பதுடன் சர்வதேச நாடுகளில் அவர்கள் படைப்புகள் திரையிடப்பட்டும் இருக்கிறது .

ஆனால் இதற்கு முக்கியத்துவம் அளித்து ஈழத்திரை படைப்பாளிகளை ஊடகங்கள் முன் நிறுத்த முன்வருவது கிடையாது. தென் இந்தியச் சினிமா அதாவது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கு வழங்கும் முன்னுரிமையை தாயகப் படைப்பாளிகளுக்கு வழங்குவதில் இங்குள்ள ஊடங்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை போலும்.

நான் கூறுவது பொய்யாக இருக்கலாம். ஆனால் இதை உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வியாக கேட்டு பாருங்கள். வருடத்திற்கு சராசரி 50க்கு மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்கள் ஈழ சினிமாவிற்குள் கிடைக்கிறது. அதில் எத்தனை தொடர்பான செய்திகளை நீங்கள் ஊடகங்களில் கண்டு இருக்கிறீர்கள் ????

மேற்கூறிய விடயத்தை வைத்துக்கொண்டு முழு ஊடகங்களும் ஊடகவியலாளர்களையும் அவ்வட்டத்துக்குள் சுருக்குவதும் தவறாகும். முடிந்தவரை ஆதரவு கொடுக்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எம்மோடு இல்லாமல் இல்லை.

புறக்காரணிகள்

இப்பகுதிக்குள் வரப்போகிறவை அனைத்துமே இனி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் தற்போது ஈழ சினிமாவுக்குள் தனது இலக்கு நோக்கி பயணிக்கக் கூடிய சுதந்திரமான காலப்பகுதியாகும் ஏனென்றால் முன்னர் நாம் பார்த்த அகக்காரணிகள் கூட ஒரு சுயாதீன படைப்பாளியின் பயணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு காரணியாகவே கருத முடியாது

ஆனால் புறக்காரணிகளில் நாம் பார்க்க இருப்பது ஈழ சினிமா தனது தனித்துவமான பாதையில் பயணிக்கையில் அது சார் தனித்துவம் யாருக்கு தலையிடியாக அமையும் என்பதே ஆகும்.

குறிப்பாக உலக அரங்கில் சிங்கள சினிமாவானது மொழி அங்கீகாரத்துடனும், தனித்துவத்துடனும்  இலங்கையின் இறையாண்மைக்கு அடையாளமாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நின்றன. அந்த அளவுக்கு தனித்துவமான இயக்குனர்களும், திரைப்படங்களும் சிங்களத்தில் இருந்தாலும் தற்போது தோன்றும் புதிய தலைமுறை இயக்குனர்களால் Bollywood Kollywood  இன் மசாலா சார்ந்த திரைப்படங்களில் ஈர்க்கப்பட்டு அதன் மீள் உருவாக்கத்தில் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் முதலீட்டாளர்களும் பல கோடிகளை அத்திரைப்படம் நோக்கி இறைக்கிறார்கள்.

நிச்சயமாக இத்திரைப்படங்கள் உலக அரங்கில் இலங்கையைப் பற்றி பேசப் போவதில்லை. ஆனால் ஈழ சினிமாவின் வெற்றியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படு(த்)தப் போகின்றது. ஒரு நாட்டில் ஒடுக்கப்பட்ட இனம் மற்றும் சிதைக்கப்படும் மொழியே அந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறது எனும் போது அது எவ்வகையான தாக்கத்தை ஒரு சினிமா மேல் செலுத்தும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் .

இதற்கு அவர்களிடம் இரண்டு தீர்வுகள் இருக்கும்….

1) மானியம் வழங்கல் மூலம் சிங்கள இயக்குனர்களை உருவாக்குதல்

2) ஈழ சினிமாவையும் அதன் இயக்குனர்களையும் ஒடுக்குதல்

இரண்டாவதாகக் கூறப்பட்ட இந்த விடயத்தில் இருந்து நாம் தப்பிப்பதற்கு நமக்கிருக்கும் ஒரே ஒரு வழிமுறை “ஒற்றுமை” என்பது மட்டுமே ஆகும்.

சினிமா என்பது ஒரு கூட்டு(க்)கலை வடிவமாகும். அதை ஒருவனால் தனியே ஓடி வெல்ல முடியாது.

இந்த அஞ்சல் ஓட்டத்தில் ஏற்படப்போகும் இளைஞர்களின் கூட்டிணைவு தான் எதிர்காலத்தில் கட்டமைப்புக்குரிய பலத்தை கொடுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

ஈழ சினிமா பல தசாப்தங்களாக தலையெடுக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ இது தன் நிலையை அடைந்துவிடும் என்று கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். ஆகவே அமையப் போகிறது. அதனால் இதில் தாக்குப்பிடிக்கக் கூடியவர்களால் மட்டும் தான் இதில் போராளியாக நிலை எடுக்க முடியும்.

ஒரு உண்மையான படைப்பாளிக்கு யாராலும் எல்லை விதிக்க முடியாது. விதிக்கவும் கூடாது. ஈழ சினிமாவில் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை யாரும் விதிக்க முடியாது.

ஆனால் எம் வாழ்வியல், மொழி, பண்பாட்டை பேசுபவை மட்டும்தான் ஈழ சினிமாவாக இருக்க வேண்டும் என்பதே இங்கு உழைப்பவர்களது பேராசையாகும்.

மதிசுதா ஈழத்திரையுலகின் நம்பிக்கை. இவர் இயக்கிய நிறைய குறும்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன. www.mathisutha.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular