Friday, March 29, 2024
Homesliderகோ நாதன் கவிதைகள்

கோ நாதன் கவிதைகள்

அகாலமாகிய காலம்.

என் மூச்சுக் காற்றின்
இறுதி அடக்கம் கந்தகத் துகள்களின்
நெடிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு உடல்களும்
கால் நூற்றாண்டு போர்
தந்த வலியை
காலம் உலர்த்திய கோட்டில் படிந்திருக்கிறது.

போர் உக்கிய மண்ணிலிருந்து
மீளெழுப்பம் என்பதறியாது
குருதி அப்பிய பாடல் பாடும் பறவை நான்.

கடந்த இறுக்கமான காலம்
வன்ம வடுவில் விளைந்த வேதனையில்
பிறழ்வு வாழ்வுள் சபித்து போகிறேன்.

அடக்குமுறை இனத்தின்
வன்முறை பாயும் அதிகாரம்
என்னுடைய தூர்ந்த காலத்தின்
இயலாமை
ஒரு நிர்க்கதி முடிவில் நியதியாகி விட்டது.

நான் வளர்த்த நாயும்,
பெயரற்றுப் போன ஊரின்
யாருமற்ற தெருக்களில்,
புதைந்திருக்கும் உடல்களை
சுற்றிச் சுற்றி துயருற்று அலைகிறது

ஏதுமில்லாத நகரில்
இலட்சியமான என்னுடைய காலடிகள்
கேட்பாரற்று
என் வீட்டின்
சூன்ய சூழலில் அடங்கிக் கிடக்கிறது.

புத்தனின் புன்னகை


எவ்வித அதிகாரங்களுமற்று
தனித்தலைந்து கொண்டிருக்கிறது
என் நிலத்தின் சுதந்திர வேட்கை

அந்த வான் வெளியில்
புத்தனின் புன்னகையின் காற்றில்
அசையும் வண்ணத்துப்பூச்சி சிறகினிலே கூட
எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது

யசோதரை
ஈழ தேசத்தின் எல்லைக்கோட்டில்
மேலுமொரு
தம்பதத்தில் இரத்தக் குறிப்புக்களை
எழுதிக் கொண்டிருக்கிறார்.

.

புத்தனின் புன்னகை.


எவ்வித அதிகாரங்களுமற்று
தனித்தலைந்து கொண்டிருக்கிறது.
என் நிலத்தின் சுதந்திர வேட்கை.

வான் வெளி எங்கும்
புத்தனின் புன்னகை காற்றில்
அசையும் வண்ணத்துப்பூச்சி சிறகினில்
எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை.?

ராஜ வம்சத்தின் புதல்வர்கள்
காவுகொள்ளப்பட்ட நிலமெங்கும்
புத்தனின் பெயரில்
வெள்ளைஅரச மரங்களோடு கடவுளின் பிணத்தையும் புதைத்து செல்கின்றார்கள்.


புத்தன்,
ஆசை சீடர்களால் பலி பீடமேறி
இரத்தம் மிதித்த காலடிகள்
கொலைகளின் சாத்தியப்பாட்டில்
இன்னுமொரு யுகத்திற்கு நகர்த்துகிறார்கள்.

யசோதரை
ஈழ தேசத்தின் எல்லைக் கோட்டில்
மேலுமொரு
தம்பதத்தில் இரத்த குறிப்புக்களை
எழுதிக் கொண்டிருக்கிறாள்.


சாக்குருவிகளின் பாடல்களில் நிறைந்து போன்
எனது ஊர்
எனது நிலம்,
எனது வாழ்வு,
எனது காலம்.
உனது ஞான போதனைகள் நிறைவேற்றுமா?

எஞ்சிய இரும்பு கறல்களும்,
நச்சு வாயுக்களும்
மிதிக் கனவுகளும்
இருப்பிடத்தை குடியிருப்பில் தொலைந்து மிதியற்று கழிகிறது என் மரண காலம்.


நான்
எல்லாவற்றையும் இழந்த பின்
உடம்பெல்லாம்
யோனிகளால் முளைத்து இருக்கிறேன்.

எனது அழுகை,
அவள் விசும்பல்,
உனது புன்னகை,
யாருடைய ஆயுதம்? எவருடைய வெற்றி?

.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular