Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்கலை எனும் பெண்டுலம்

கலை எனும் பெண்டுலம்

ஜீவ கரிகாலன்

*
லகின் பெரும்பாலானோர் யாருமே எதிர்பாராத வெகுசிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் உக்கிரம் இந்தியாவில் பெருந்தீவிரத்தை ஆரம்பிக்கும் முன்னர் அல்லது அதற்கு உபகாரம் செய்யும் தேர்தல் திருவிழா, கும்பமேளா, ஐ.பி.எல் எல்லாம் தொடங்கும் முன்னர், பெருந்தொற்றைத் தாண்டியிராவிட்டால் நாம் காண்கின்ற கடைசி ஓவியக் காட்சி இது என்று பரனோயா மனம் கெக்கலித்தது.

அது காலஞ்சென்ற மூத்த ஓவியர் ஆர். மூக்கையாவின் retrospective. தக்ஷிணசித்ராவின் வஜிரா காட்சிக்கூடத்தில் அவரது ஓவியங்களும் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கோவிட் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் குறித்த அச்சம் எழுந்த காலம் என்பதால், கோலாகலமாகத் தொடங்க வேண்டிய அந்தக் காட்சி அதிகாரப்பூர்வ விழாவோடு தொடங்காமல் எளிமையாகவே பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டது.

இவ்வகையிலான காட்சிகளில், தமது படைப்புகளை ஆவணப்படுத்தும் சிரத்தை எடுத்துக் கொள்ளாத கலைஞர்களும் உண்டு என்பதால், எல்லா படைப்பாளிகளுக்கும் அவ்விதம் முழுமையான ஒரு கலைவரிசையை அல்லது காலவரிசையில் அல்லது வெளிப்படாத, முற்றுப்பெறாத படைப்புகளைக் காட்சிப்படுத்த முடிவதில்லை. அவ்வகையில் தக்ஷிணசித்ராவின் இந்தக் காட்சிக்கான பொறுப்பாளர்கள் பெரும் சிரத்தையோடு ஒருங்கிணைத்துள்ளார்கள்.

அதுவும் டி.ஆர்.பி. மூக்கையா மறைந்து பனிரெண்டு வருடங்கள் ஆகின்றன (1934-2009), மெட்ராஸ் கலை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான மூக்கையாவின் படைப்புகள், பொதுப் பார்வையாளனாக அவரது அடைப்பெயரான “Bull mookkiah”வாகத் தான் தெரியும். மெரினா புரட்சியின் போது எண்ணற்ற பதாகைகளிலும், மீம் போஸ்டர்களிலும் அவரது சிற்பங்கள் பகிரப்பட்டிருந்தன. சிலர் அதை அகழ்வில் கண்டெடுத்த சிற்பம் என்றெல்லாமும் சொல்லியிருந்த ஞாபகம். கலையின் eternity அது, காலத்தின் இடம், வலம் என இருமருங்கிலும் கூடப்பயணிக்கும் எனப் புரிந்துகொண்ட கணம் அது. இந்தக் கண்காட்சி குறித்த தகவல் வரவும் உற்சாகமெழ அதுவே காரணம். நானும் இளங்கோவும், ஷங்கருமாகச் சென்று வந்தோம்.

Retrospective வெவ்வேறு காலத்தில் அவர் படைத்திருந்த வெவ்வேறு தொகுப்புகளில் இருந்து முக்கியமானவற்றைத் தொகுக்க வேண்டுமென்றால் பெரும் பொருட்செலவும் உழைப்பும் தேவை. கோவிட் முதலாம் அலையிலேயே தக்ஷிணசித்ரா போன்ற இடங்களுக்குச் செல்ல முடியாமலும், பின்னர் பயந்தும் எனக் கூட்டம் குறைந்திருக்கும். அந்த அற்புதமான கைவினைச் சந்தை பெருமளவு மூடப்பட்டிருந்தது. இத்தகைய காலத்திலும் இந்தக் காட்சிக்காக தமது சொந்த collection-ல் வைத்திருந்த மூக்கையாவின் படைப்புகளைத் தந்துதவிய கலைஞர்கள் ராமா சுரேஷ் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஆர்.எம். பழனியப்பன் ஆகியோர் மற்றும் ஓவியர் மூக்கையாவின் குடும்பத்தார்கள்.

அவரது டெரகோட்டா சிற்பத் தொகுதிகளில் முக்கியமானவை, உலோகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் காட்சியில் என்னைப் பிரமிப்பூட்டியது சிற்பங்களைக் காட்டிலும் அவரது ஓவியங்கள் தான். அதுவும் எதார்த்தங்கள் குறித்த குழப்பங்கள் மிகுந்த இக்காலத்தில் இவரது ஓவியங்கள் ஏற்படுத்திய அலாதியான உணர்வை, சலனத்தை ஒரு அரூபத்தை அல்லது அக்ஷரத்தை எப்படி மொழியால் விவரிப்பது?

பார்க்கச் சாதாரணமான இயல்பு வாழ்க்கையில் மலைக்காட்டில் நடந்து செல்லும் மக்களை வரைந்திருக்கின்ற கித்தானை சற்று உற்றுநோக்கும் வரை அது சாதாரண ஒரு வாழ்வியல் சித்திரம் மட்டுமே. ஆனால் ஓவியனின் perspective-ஐ பார்வையாளனுக்கு கடத்தும் சித்திரத்தின் பிரம்மாண்டம் வேறு. பாமரர்கள் கொண்டாடிய சுதந்திர தினம், சிலுவையைச் சுமக்கும் விவசாயி, ஏறு தழுவும் விழா என அவரது ஓவியங்கள்.

குறிப்பாக அந்தச் சேவல்…

கலைக்காக பால்வெளி விட்டு பால்வெளி பாயும் மனதிற்கு எதிர்புறம் இருக்கின்ற கூரையற்ற உலகைக் காணும் தூரம் வரை மட்டுமே புழங்கும் கலை மனதும் நிகரானது அல்லது ஒப்பற்றது தான். அடுத்து வரவிருக்கும் ஊரடங்கைக் கண்டு அஞ்சியிருக்கும் புத்திக்கு என்னை, எங்கிருந்து எஞ்சியிருக்கிறாய் நீ என்று காலத்தைக் காட்டிய சிறப்பான அனுபவம் அது. கலைக்கு மட்டுமே அந்த tunnel கிடைத்திருக்கிறது, இடவலமாக, வலயிடமாக காலத்தில் அது எங்கிருந்தும் பயணிக்க முடிகிறது. கோவிட்-19 புலப்படாத ஒரு அரூப இருள் தானே, தொற்று முடிந்த காலத்தில் இருக்கும் நிம்மதியின் வெளிப்பாட்டை மூக்கையாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஏக்கமாக பார்க்கவே முடிகிறது.

படைப்பு என்னவாக இருந்தாலும் உள்வாங்கும் மனம் விவரணப்படுத்துவதை நிதர்சனமெனக் கொள்ளவேண்டும். ஓவியர் இளையராஜாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம்; நிழற்படத்தைப் போன்ற பிம்பங்களை உருவாக்கும் அச்சு இயந்திரமாக அரசியலற்றப் பார்வையாளன் ஒரு ஓவியனைக் கொண்டாடினாலும் அதில் ஒரு மாறா உண்மை இருக்கிறது. ஒரு பொதுச்சமூகத்தின் ஏக்கங்களை படைப்பவனுக்கும், உடைப்பவனுக்குமான வித்தியாசம் தெளிவாக இருக்கிறது.

மஹாத்மா காந்தியை என்.ஜீ.ஓக்கள் merchandise-க்கு முகவராக்கும் அதே நேரம், காந்தியைக் கொண்டாட வேண்டியவர்களும், தெரிந்து கொள்ள வேண்டியவர்களும் கூட, mock assassination செய்யும் கோட்ஷே வம்சத்திற்கு குருதிக்கொடை அளிப்பவர்களாய் இருக்கும்போது வித்தியாசங்களற்றே போய்விடுகிறது. நம்பமறுக்கும் யதார்த்தங்கள் இவை.

கண்காட்சிக்கு போவதற்கும் சில நாட்களுக்கு முன்னர், அலீயன்ஸ் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் மெட்ராஸ் கட்டிடத்தில் உள்ள அரங்கில் “Ithanente Peru” (This is my name) எனும் பால் சக்காரியாவின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு ப்ரஸன்னா ராமசாமி அவர்கள் இயக்கியிருந்த நாடகத்தைக் காணச் சென்றிருந்தேன். நாடக அரங்குகள் குறித்த அனுபவம் மிகக்குறைவு என்ற போதிலும் ரசனை என்கிற நம்பிக்கை மட்டுமே என்னை அனுமதித்தது. அரங்கு குறித்த இலக்கணங்கள் ஏதும் தெரியாத எனக்கு அது ஒரு காண்பியல் கலை வடிவமாகப் புரிந்து கொள்வதற்கான சாத்தியத்தைக் கொடுத்தது. நவீன எல்.ஈ.டி தொழில்நுட்பங்கள் அரங்கை ஒரு முப்பரிமாணக் கித்தானாகவும், நகர்கின்ற பாத்திரங்கள் (உயிரூட்டப்பட்ட கித்தானாகவும்). மொழி மட்டும் வேறு ஒன்றாக (தமிழ் (அ) ஆங்கிலம் தவிர்த்த வேற்று மொழி நாடகமாய்) இருந்திருந்தால் முழுமையான ஓவியக் கண்காட்சியைப் பார்த்த உணர்வோடு தான் வீட்டுக்குத் திரும்பியிருப்பேன்.

ஆனால் சீட் பெல்ட் போல் பின்னணி இசையின் ஊடுருவல் என்னைக் குறுக்காக கட்டிவைத்தது செல்லோ என்று தான் நினைவு. பார்வையாளனைக் கட்டிப்போடுவதற்கு, ஒரு தேர்ந்த கலைஞனின் செல்லோ தந்திகளை பலம் வாய்ந்த பிணைக்கும் சங்கிலிகள் இவ்வுலகில் உருவாக்கப்படவில்லை என்பதை பர்மாபஜார் ஹெட்போன்களில் சிம்பொனி ஆர்கஸ்ட்ரா கேட்கும் இந்த சிறுபிள்ளையின் தீர்க்கமான நம்பிக்கை. அரங்கு எத்தனை தூரம் Visually rich என்று ஒரு கண் நம்பியிருக்க, மற்றொரு கண் ஒரு ஆழமிக்க கதையை, இன்னும் விரித்துருவாக்கப்பட்ட திரைக்கதையை மினிமலிஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்ட அரங்கு என்று நம்பியது அந்தச் சிறைக்கம்பியின் நிழல். உள்வாங்கிய அறிவுக்கு இந்த பாகுபாடு இல்லை, காந்தியைக் கொன்றவனின் நியாயத்தை ஒரு தரப்பில் பேசுவதாகத் தொடங்கும் இந்த நாடகம் பல அடுக்குகளை வரலாற்றிலிருந்தும் தற்காலத்திலிருந்தும் ஊடுபாவாக இழைத்துப் பேசுகிறது.

தரப்பினைப் பேசுவது, அதாவது சத்தமாகப் பேசுவது உண்மையாகிவிடும் என்கிற உலகில் கலை வழியே அதன் மறுஎல்லையைத் தொட்டுவிடுகிறது, இங்கே தரப்பைப் பேசுவது அம்பலப்படுத்துவது ஆகிறது. பதறிப்போன உயர்தட்டு அரங்குப் பார்வையாளர்கள், கதை முன்வைக்கின்ற உண்மையின் உக்கிரத்தைப் பொறுக்க இயலாமல் அரங்கை விட்டு வெளியேறுவதையும் நாடகத்தின் அங்கமாக நான் உள்வாங்குகையில், கற்க வேண்டிய தொடுவானம் புலனாகும் ஒரு சிறு நிம்மதி.

இதில் என்ன ரிச் அல்லது மினிமல்? அரங்கின் இயல்பு என்பதே அப்படித்தானோ எல்லாவற்றையும் கையாள்வது எனப் புரிந்துகொள்ளும்போது கலையின் வெளிப்பாடு என்பது எது?

ஒரு படைப்பு சிந்தனையில் தோன்றும்போதே? அல்லது
அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில் ? (WIP) அல்லது
அது முழுமையாக வெளிப்படும்/அரங்கேறும் வேளையில்? அல்லது
அது நுகரப்படுகையில்? அல்லது அது வாசகனின் / பார்வையாளனின் / ரசிகனின் எண்ணத்தில் விழும் பிம்பமாக / திரையாக / ரசனையாக
இவை எல்லாமாகவும் இருக்க முடிகிறது என்று வைத்துக் கொள்ளலாமா?

ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றிலும் அலகாக (unit) இருப்பது காலம் தான் எனில், மூக்கையாவின் சிற்பத்தை அகழ்வில் எடுக்கப்பட்ட டெரகோட்டா என்று சொல்லொ, ஒரு போராட்டத்தில் பரப்புரைக்காக வைக்கப்பட்டிருந்த நிழற்படம் முற்றிலுமே பிழையானது அல்ல எனவும் தோன்றியது. மண் தந்த அப்பிணைப்பின் வழி மூக்கையாவின் milleu-ற்கு ஏறு தழுவுதல் எனும் தொடர்ச்சி, மெரினா புரட்சியில் ஜல்லிக்கட்டோடு எந்த சம்பந்தமுமில்லாத ஒருவன் ஏந்திக் கொண்டிருக்கும் பிழையான படத்திற்கும் அதே தொடர்ச்சி தான் இருக்கும் என நம்புவதற்கு, வெவ்வேறு காலத்திய கோட்சேக்களையும் அவர்களைப் போற்றும் தலைவர்களை நினைக்கையில் பொருந்துகிறது.

சிந்தனைத் தொடர்ச்சியில், காலங்காலமாக ஒரு கோட்சேவும் ஒரு கலைஞனும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

***

ஜீவ கரிகாலன் யாவரும் பதிப்பாசிரியர், கண்ணம்மா, டிரங்கு பெட்டி கதைகள் ஆசிரியர்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular