Friday, March 29, 2024
Homesliderகரோனா கால உரையாடல் - 01

கரோனா கால உரையாடல் – 01

பூனைத் தத்துவம்

ண்பர் கணபதியுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது கரோனா குறித்த உரையாடல் சிலவற்றைப் பதியவேண்டும் என்று தோன்றிட இடையிலேயே ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். பயமுறுத்தும் செய்திகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நம்பிக்கை தரும் உரையாடல்களை பதிவேற்றுவது அவசியம் என்று தோன்றியது. தோன்றியதைப் பதிவேற்றம் செய்ய 20 நாட்களாகிவிட்டது. தொடர்வோம் எனும் நம்பிக்கையுடன், ஓவியர், எழுத்தாளர், தொழில்நுட்ப சுவிஷேஷகர் (technical evangelist) கணபதி சுப்ரமணியத்துடன் ஒரு உரையாடல்.

வணக்கம், இந்த தனிமைப்படுத்துதல் காலம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

நான் ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருக்கறதனால, என்னளவில் பெரிய வித்தியாசம் இன்னும் தெரிய ஆரம்பிக்கலை. ஆனா எனக்கு வெளிய தான் மாற்றத்தை உணர முடியுது.

உங்க அளவில் மாற்றம் இல்லைன்னா, நீங்க கலைஞன் என்பதால் அவன் தனிமைப்பட்டுக் கிடப்பவன் என்று சொல்றிங்களா?

நோ..நோ.. நோ அந்த மாதிரிலாம் சொல்லி ஏமாற்றிட மாட்டேன். தனிமை என் தேர்வு அவ்ளோதான். ஏற்கனவே இருந்த இந்த சூழலிலிருந்து தனிமை, மாசு, அரசியல் இப்படியான சில விசயங்களில் இருந்து தனிமைல இருந்தேன். கிட்டத்தட்ட பூனை போன்ற ஒரு சுதந்திரம்.

அப்போ இந்த வைரஸ் தாக்குதலால் உலகமே முடங்கிப் போயிருக்கிற காலத்தில், சில நல்ல விசயங்களும் பரிமாற இருக்கு இல்லையா? அப்போ அந்த நல்ல விசயங்களை தேர்வு பண்ண முடியுமா? அதாவது பூனை மாதிரி?

நிச்சயமா நல்ல விசயங்கள் இருக்கு அதற்குன்னு, அதை மட்டும் கல்வெட்டில செதுக்குன மாதிரி அப்படியே செதுக்கி வச்சிட்டா அப்படியே நின்னுடுமா அது? அது பாட்டுக்கு போயிட்டிருக்கும்.

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

இதில் பாருங்க கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே எப்படி இனிதேன்னு ஆக முடியும் கரிகாலன்? அந்த கூற்றோட profoundness (ஆழ்ந்த தன்மை) நமக்கு இருந்ததுன்னா.. இவ்ளோ நாள் இருந்ததுல்ல நாம் எப்படி வேணும்னாலும் போலாம், ஊர் சுத்தலாம், யாரை வேணும்னாலும் பார்க்கலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம் அப்பலாம் நாம் வேற எதுலயோ நம்ம எனர்ஜிய ஸ்பெண்ட் பண்ணிட்ருந்தோம். இப்ப இதுல கொஞ்சம் கத்துக்கறதுக்கு என்னவெல்லாம் அழகான விசயங்கள் இருக்குன்னு பார்க்கலாம்ல.. அதப் பார்க்கறதுக்கு கூட இப்பதான் நம்மளால நேரம் ஒதுக்க முடிஞ்சது.

அதுவும் கூட பூனையின் தேர்வு மாதிரி?

ம்ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்.

ஆனா அவன் நாலுபேர் கிட்டப் பழகினாலும் ஒருத்தரை மட்டும் தானே தன்னோட வளையத்துக்குள்ள வச்சுருக்கறான்?

அது ஒரு மாதிரியான favorite என்கிற நிலை தான். அது மொதல்ல யார் மீது நம்பிக்கையை வைத்துள்ளதோ அவுங்க கிட்ட ஒரு தாய்மையான உறவைப் பார்க்குது. அதுவும் இந்த மாதிரியான உணர்வை ஒருத்தங்க கிட்ட தான பேண முடியும். அதற்கு என்ன ஆனாலும், எங்க போய் அடி, ஒதை வாங்கிட்டு வந்தாலும் இவுங்க நம்மள பார்த்துப்பாங்க, அவங்க நம்மளை harm பண்ண மாட்டாங்க, நமக்கு வேண்டியதைக் கொடுப்பாங்க அப்படிங்கற எண்ணம் தான் அது வீடு நோக்கித் திரும்ப வைக்குது.

ஆனா அது ஒரு தற்காலிகம் தான், இல்ல?

நமக்கு தான் அந்தப் பாகுபாடு தற்காலிகம், நிரந்தரம். பூனைக்கு அப்படி இருக்குமான்னு தெரியலை. இன்னும் நாம அதுக்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது இருக்கு

இந்த ஊரடங்கு காலத்துல, நாமளும் பூனை மாதிரி இருந்துட்டா எவ்ளோ நல்லது இல்ல? பூனைக்கு இருக்கற அந்த ஒற்றை நம்பிக்கை போல நமக்கும் ஒன்னுத் தேவைப்படுது இல்ல? அது ஒரு குடும்பமோ, உறவோ, எந்த சிஸ்டமோ? அரசாங்கமோ? மதமோ?

ஒருவகையில அப்படி தான் இருக்குமோ..?

ஆமா பூனை மாதிரி தான, நாம கூட்டை விட்டு வெளிய போயி, ஊர் ஊரா, நாடு நாடான்னு சுத்திட்டு கண்ட சாப்பாடு, கண்ட கலாச்சாரம்னு உடலளவுலயும், மனசளவுலயும் நிறைய அடிவாங்கிட்டு, இந்த கரோனா காலத்துல சட்டுன்னு கூடு நினைவுக்கு வர நம்மளுக்கும் பூனையோட நிலை மாதிரி தான, கிட்டத்தட்ட..?

நல்லாதான் இருக்கு கற்பனை பண்ணிக்கலாம்.. ஆனா நான் ஒரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் தேடிக்கிட்டு இருக்கறேன்.

நம்ம பாதுகாப்பிற்காக செலவு செய்துக்கிட்டு இருக்கற தொகை, நம்ம மதங்களுக்காக நாம செலவு செய்திட்டு இருக்கற தொகை இந்த இரண்டுக்கும் உலகம் முழுதும் செலவு பண்ணுற தொகையும், இப்ப இந்த தொற்றுபரவலில் இருந்து பாதுகாப்புக்காகவும், சிகிச்சையளிக்கவும் செய்யும் தொகை இரண்டிற்கும் இருக்கின்ற தொடர்பினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த இரண்டுமே (மதம், ராணுவப் பாதுகாப்பு) செயற்கையா எல்லைகளை உருவாக்கி வைத்துவிட்டு அதற்கான செலவிடும் தொகை தான் பெரிதாக இருக்கும் இல்லையா, எல்லைகளே இல்லைன்னா இந்த மாதிரி ஆய்வுகளுக்கு செய்யலாமேன்னு தோணுது. உலகம் சந்திக்க இருக்கும் சவால்கள் அதிகம் பொது எதிரியிடமிருந்து தான் வரும். இப்ப கரோனா மாதிரி.

 ஆக்சுவலா என்ன சொல்றாங்க என்றால் நாம இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா, அதாவது முன்னேறிய நாகரிகத்தில் இருந்தோமென்றால் ஒரு customizable vaccinesஐ உருவாக்கியிருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

எப்படி சாத்தியம் சார்?

நம்ம ஒரு வைரஸை ஒரு ஆய்வுக்கூடத்தில் கொடுத்தால், அது அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துத் தரும், அது ஒரு Algorithm மாதிரி தான. ஏன் அந்த மாதிரி ஒரு அல்கொர்தம நாம ஏன் இன்னும் ரீச் பண்ணலை என்றால், நாம் இன்னும் அந்த அளவுக்கு ஆராய்ச்சிகளை இன்னும் பண்ணவில்லை. ரிசர்ச்னா பெரிய செலவு இருக்கும் தான், முன்னர் சொன்ன அந்த விசயங்களுக்கு பதிலா நாம ரிசர்ச்ல செலவு பண்ணிருந்தோம் என்றால், எந்த மாதிரியான புது இழையிலும் அது கைகொடுக்கும்.

இன்னைக்கு நாம கொரனாவுக்கு தடுப்பூசிய கண்டுபிச்சு, மக்கள்ட்ட கொண்டு போறதுக்குள்ள அது mutate ஆகி இன்னொரு வைரஸா பரவ ஆரம்பிச்சதுன்னா? இந்த மாதிரி ஆய்வு நடந்திருந்து நாம அல்கொரிதம் ஒன்றை கண்டுபிடித்து இருந்தோம்னா அந்த புது வைரஸைக் கொடுத்ததும் தடுப்பூசி தயாராகியிருக்கும்.

நாம் நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ப்ளேக் தொற்று போன்ற விசயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில், அதுவும் எல்லைகளைக் கடந்து தொழில்நுட்பமும், போக்குவரத்தும் வர்த்தக ரீதியாக உலகின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட காலத்தில் இந்த பாதிப்பை எப்படிப் பார்க்க முடிகிறது. (இந்த உரையாடலின் நாள் 26/03/2020)?

ஒப்பீட்டளவில் இன்றைய சூழலில், குறைந்தபட்சம் நமக்கு விழிப்புணர்வு இருக்கிறது, தகவல் தொடர்பு இருக்கிறது, defence mechanismம் நம்மகிட்ட முன்னேறியிருக்கு. ஆனா இந்த வைரஸ்க்கான தடுப்பூசி கொண்டு வந்தது உறுதியாகவில்லையே, ஆனால் இதை அறிவியல்பூர்வமாக உலகம் முழுதும் அறிந்து ஏற்றுக்கொள்ள ஒரு வருடம் வரை ஆகலாமென்றும் சொல்றாங்க. பட் அத நாம அல்கர்தமிக்கா பண்ணலாமே, எவ்ளவோ விதத்துல நாம முன்னேறியிருக்கோமே நம்மோட தொழிநுட்பங்கள் அணு அளவில் இருந்து இப்போது மூலக்கூறு அளவில் பார்க்கும்போது, இந்த வைரஸ் உடம்பில் என்ன பண்ணுது என்பதைக் கண்டுபிடித்து அதற்கு எதிரான Anti-bodyஐ உருவாக்கும் இயக்கத்தை நாம உருவாக்கியிருக்கணும். திரும்பவும் அதற்குத் தேவையான நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். ஒருவேளை நாம இதனோட அவசரத்தன்மையை புரிஞ்சுக்காம விட்டுட்டோம் என்று நினைக்கிறேன்.

இந்த உரையாடலை உங்க கிட்டத் தொடரணுமென்றாலும், இப்ப கலைஞனா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அது எல்லாவித கலைஞர்களுக்கும் பொருந்தி வருமில்லையா அதனால் தான். நீங்க சாதாரணமா கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற ஒரு கோட்டிற்கும், இந்த மூன்று நாட்களாக கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற கோட்டிற்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொருத்தரைப் பொருத்தும் இருக்கு. ஒருத்தருக்கு இது மிகப்பெரிய அடக்குமுறையா இருக்கும். ஒரு வித்தியாசமும் எனக்கில்லை. ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

அப்போ நீங்க பூனைக்கிட்ட இருந்து எடுக்கற தத்துவமா – இதை எப்படி நீங்க பார்க்க முடியும்?

சர்வைவல் தான் இது. இந்தச் சூழ்நிலைய பார்த்திங்கன்னா ஒருத்தர் கூட வெளியப் பார்க்க முடியலை, இது ஒருவகையில் நம் மக்களோட ஒழுங்கு தான். அது கட்டுப்பாடுல இருந்து வந்ததுதான் என்று சொன்னாலும், மக்களுக்கு இருக்கும் ஒழுங்கு தான்னு சொல்லணும். மக்கள் ஒருமாதிரி புரட்சிகரமா செயல்பட ஆரம்பிச்சா, இப்படி உலகம் முழுக்கக் கட்டுப்படுத்த போலீஸோ ராணுவமோ அதை செய்ய முடியாமப் போகும். மக்களே இதை ஏன் செய்யுறாங்க என்றால் – அது உயிர் பிழைத்தல் என்கிற அடிப்படை மனித உணர்வு தான்.

அது பூனைக்கிட்டயும் இருக்கறது தான். சர்வைவல் எங்க இருக்குதோ அங்க அது அடங்கிப்போகும், உங்க வீட்ல வளரும் பூனை மாதிரி தான்.

ஆனா ரெஸ்ட்லெஸ்ஸா சிலர் இருக்கறாங்க..

…………சிரிக்க ஆரம்பித்தார்..

(அவுங்க என் று கணபதி நினைப்பது யார் என்று எனக்கும் தெரிந்ததால், நானும் சிரித்தேன்)

ஆரம்பித்தோம்..  (உரையாடல் அடுத்த பகுதியில்..)

தொகுப்பு , கேள்விகள் – ஜீவ கரிகாலன்

அட்டை ஓவியம் – கணபதி சுப்ரமணியம் (A piece from his graphic novel unpublished)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular