Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்கருளிடை பொழின் மருது

கருளிடை பொழின் மருது

வைரவன்.லெ.ரா

ப்பா.. அம்மா எந்திருக்க மாட்டேங்குது.. அம்மா.. எந்திரிம்மா.. அப்பா சீக்கிரம் வாங்க”

பாயின் நடுவே ஆடைகள் அலங்கோலமாய் சிதறி, சுருண்டுக் கிடந்த உடலில் இன்னும் சூடு இருந்ததை, அவளைத் தொட்டதும் உணர்ந்தேன். என் கைப்பிடித்து தொட்டுக் காட்டிய, பாப்பா உறங்கிக் கொண்டிருந்த அறையில் ஏதோ அசைவது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. அதன் கீழே இரத்தம் இன்னும் சூடாக வெளியேறிக் கொண்டிருந்தது. என்னையறியாமல் கை விரல்கள் அதைத் தொட்டபோது, பிசுபிசுப்பாய் ஒட்டிப் பிடித்தது. அதன் மணம் என்னுள் மெல்ல மெல்ல இறங்கி நுரையீரல் முழுக்க சென்றதில் நாசி அடைத்தது. அப்பா குடிப்போதையில் நான் செய்துக்கொண்டிருக்கும் வினோதங்களை வெறிமிருகம் போல உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

*

வீட்டின் வெளிப்புறத்திண்டு ஏறி எளிதாக இறங்கும்படி இருந்தது. வசதியாய் நுழைந்தவன், கீழ்வீட்டின் விளக்கு அணைந்து இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான். மேல்வீட்டின் படுக்கையறை விளக்கு இன்னும் ஒளிர்வது உடலுக்கு கொஞ்சம் கிளர்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது. இருளில் அலையும் பேயைப்போல ஸ்தூலமாய் கருமையில் நிறைந்து இருந்தான். அவனின் அசைவுகள் வெளியில் எவ்விதச் சலனத்தையும் கொடுக்காது, அவனில்லாத நிழலை அசைக்காதிருந்தது. எங்கோ கூகையின் அகவல் சத்தம், நாய்களின் எல்லைப் பிரிப்பு போராட்டம், அவயான்களின் சுதந்திர ஓட்டம், மனித அரவமற்ற சாலைகளின் நிசப்தம் அவனை இயல்பாக்கி வைத்திருந்தாலும் மேல்வீட்டில் இந்நேரம் எரியும் விளக்கின் வெளிச்சம் மனிதனின் ஊடுபாய்தலை, சதை மேயும் தனத்தைப் பார்க்கத் தூண்டியது.

*

ப்பாவை விட்டு வெளியேறிய நாட்கள் நகரின் வீதிகளில் மனித சந்தையின் ஒரு பண்டமாய் அலையச் செய்தது. யாருடைய விழியும் என்னை நேர்நோக்காது. உணவகங்களின் முன்னே நெடுநேரம் நின்றும் யாரும் கவனிப்பதில்லை. தனியனாய் நெடுநாள் நகரின் எல்லா வீதிகளிலும் அலைந்தேன். அப்பா என்னைத் தேடி அலைவதில் நேரத்தைச் செலவிட மாட்டார். அம்மா உயிரோடிருந்த நாட்களில் கூட வேண்டாத ஒன்றாக வீட்டில் என்னை அனுமதித்திருந்தார். இரவுகளின் நீட்சியில் அருகே கட்டியணைத்து அவளின் சுவாசம் என்மீது படும்படி இறுக்கப் படுத்திருக்கும் வேளையில், அவளை இழுத்து, இரு அறைகள் கொண்ட வீட்டின் அடுக்களைக்குள் செல்வார். நான் விழித்திருப்பேன், அங்கே நடப்பவை என் முன்னே விரியும். அம்மாவின் முனகல், ஒரு வேட்டை நாயின் உறுமல். இரண்டுமே போகப்போகப் பழகிவிட்டது. காலை முழுக்க நகரின் மையத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கின் இடது மூலையில் தப்பி நிற்கும் மரங்களின் நிழலில் கிடப்பேன். எந்நேரமும் குடிநீர் கிடைக்கும் ஒரே குழாய் அங்கேதான் இருந்தது. இரவுகளில் குறிப்பிட்ட உணவகம் மீந்துப்போனதை கொட்டும் குப்பைத் தொட்டியின் விலாசம் தெரியவே இரவில் விழித்தும், பகலில் உறங்கியும் நாட்களைக் கடத்தினேன்.

*

ரண்டு வாரகாலம் இங்கேயே புகையைப் போலச் சுழன்றான். பெரிய வீதியின் ஓரத்தில் ஒட்டிப் போகும் தண்டவாளத்தின் இணையே செல்லும் தெருவில், வீடு ஒன்றுக்கொன்றுமிடையே நாற்பது அடி இடைவெளி இருப்பதாலும் நடுநிசியிலும் ரயில் ஓடுவதாலும் குறித்து வைத்த மூன்று வீடுகளில் இறுதியாய் இப்போது ஜன்னலின் சன்செட்டில் இருளில் படுத்திருக்கும் வீட்டைத் தெரிவு செய்தான். அவனுக்கென்ற சில நெறிமுறைகள் உண்டு. வீட்டில் நுழைவதும் வெளியேறுவதும் வெவ்வேறு பாதையாக இருக்க வேண்டும். அவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். வீடிருக்கும் பகுதியில் கண்டிப்பாய் நாய்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் வீட்டில் நாய் இருக்கக் கூடாது. அவை ராத்திரிகளில் அதிகம் குரைப்பவையாகவும் சண்டையிடும் குழுக்களாகவும் பல பிரிவுகள் இருக்க வேண்டும். இரண்டு மாடி வீடாக, கீழ் வீட்டில் உரிமையாளரும் மேல் வீடு வாடகைக்கும் விடப்பட்டிருக்க வேண்டும். கீழ் வீடுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடு.

மேல்வீட்டில் புதிதாய் குடியேறியவர்களாகவும் அவர்களும் இந்த நகரத்திற்கு அண்மையில் வந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சிறிய குழந்தைகள் இருக்க வேண்டும். வயதான தாய் தந்தையர் கூடவே வசித்தால் இன்னும் நலம். கீழ்வீட்டில் வசிப்பவர்களில் திடகாத்திரமான உடல் கொண்டோர் யாரேனும் உண்டெனிலும் அல்லது நான்கு பேருக்கு மேல் வசித்தாலும் இளைய பெண்களில் ஒருத்தி இருந்தாலும் அந்த வீட்டைத் தவிர்த்துவிட வேண்டும். ரோந்து போகும் காவல் வண்டியில் இருவருக்கு மேல் செல்லும் பகுதியாக இருக்கக் கூடாது. வயதான கூர்க்கா இரவு ரோந்துக்கு நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அன்றைக்கு முழுநிலவு நாளாக இருக்கக் கூடாது. கண்டிப்பாக செடிகொடிகள், மரங்கள் வீட்டின் சுற்றுச்சுவருக்குள் வளர்ந்திருக்க வேண்டும். இந்த வீட்டில் வயதான தம்பதியர் இருவர் மட்டுமே வசிக்கிறார்கள். மேல் வீட்டில் இளைஞன் ஒருவனும், நிறைமாத கர்ப்பிணி ஒருத்தியும் என இருவர் மட்டுமே வசிக்க, நெறிமுறைக்குள் சரிவரப் பொருந்திய வீடாக அமைந்தது. அன்றைக்கு சில மழைமேகங்கள், தாழ மிதக்க எளிதான ஒரு நாளைக் கடக்கும் எத்தனத்தில் குறித்த நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

*

கரை விட்டு தூரமாய் காயலான் கடை தனித்து நின்றது. அது நகரத்தில் திருட்டுப் போகும் இரும்பு, செப்பு, அலுமினியப் பொருட்களுக்கு புகலிடம். அங்கேயே தங்கிக் கொண்டேன். வெளிப்பார்வையில் அங்கேயே தங்கி பணிபுரியும் ஒரு சாதாரண சிறுவன் நான். முதலாளியும் கூட முதலில் அதையே நம்பினார். என் முதல் திருட்டு அதிக பிரயத்தனங்கள் இல்லாமல் எளிதாக அரங்கேறியது. ஒரு கிழவன் தான் அதற்கும் உதவினார். அவரையும் நான் நகரத்தின் வீதிகளில் என்னைப் போலவே உதாசீனப்படுத்தப்படும் சக உயிராகக் கண்டிருக்கிறேன். அன்றைக்கு அரசியல் மாநாட்டில் தகிக்கும் வெயிலில் நிற்க, இறுதியாய் பிரியாணி பொட்டலம் கிடைத்தது. நான் அமர்ந்து பிரியாணியை அள்ளித் தின்னும் சாலையின் மரநிழலில் அவரும் அருகில் இருந்தார். அவரது பொட்டலத்தில் இருந்த கோழிக்காலை என் பக்கம் தள்ளியவர் “சைவம் சாப்புட்டுதான் பழக்கம். நீங்கோ எடுத்து சாப்பிடுங்கோ. அசைவம் ஆகாது” சிரித்தபடி கூறினார். எனக்கு இருந்தது பசியல்ல, தினமும் வயிற்றின் பசி அடங்குகிறது. இது என் நாவின் பசி, அள்ளி அள்ளித் தின்றேன்.

*

மேல்வீட்டின் விளக்கொலி ஒரு விட்டில்பூச்சியைப் போல அவனை இழுத்தது. அங்கே இருப்பவர்கள் கணவனும் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் தான். ஒருவேளை இரவில் பணி புரிபவனாக இருந்தால் படுக்கையறை விளக்கு மட்டும் எரிய வேண்டிய அவசியம் என்ன? காலை வெளியே சென்றவன் பின்னிரவில் தான் வீட்டிற்கு வந்தான். வயதான தம்பதியர் கீழ் வீட்டில் இந்நேரம் அசந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். அதுவரையிலும் மேல்வீட்டைப் பார்ப்பதில் என்ன தவறு நிகழப் போகிறது. ஒரு ஆணும் பெண்ணும் தனியே அந்தரங்கத்தில் பிணையும் வேளையில் மாற்றான் ஒருவன் மறைவாகப் பார்ப்பது தவறில்லையா? எது சரி? எது தவறு?.

*

ம்மாவின் ஈரமுடிப் பின்னலில் சூடியிருக்கும் துண்டு மல்லிக்கு ஒரு மணமுண்டு. பாயில் போர்வையை மூடிக்கொண்டு கிடக்கும் என்னை எழுப்ப அதுவே போதும். எங்கள் வீட்டிலே ஒளி நிறைந்த ஒரு பகுதியுண்டு. அதிலே சிறிய காமாட்சி விளக்கின் திரியில் உக்கிரம் நிறைந்து எரியும் தணலின் சூட்டை எனக்குள்ளே அள்ளி அள்ளித் தள்ளுவேன். கண்ணாடி உடைந்த சட்டகத்தில் கன்னியொருத்தி தவத்தில் நிற்பாள். அம்மா அதன் முன்னே வெகுநேரம் அமர்ந்திருப்பாள். என்ன கிடைக்கிறதோ? அந்த நேரம் நீண்டுக் கொண்டேயிருக்கும். என் கண்கள் துளித்துளியாய் அறை நிரப்பும் நெருப்பின் நிழலில் மேய ஆரம்பிக்கும். எங்களிடையே மொழிகள் உலாவுவது இல்லை. அப்பா வீட்டில் நுழையும் வரை அம்மாவின் வீடாய் இருக்கும் அறைகள், அவர் வந்த பிறகு பிண நாற்றம் எடுக்கும் மயானமாகும். அதன் பிறகு அவள் என்னை விட்டு விலகுவதுமில்லை, கைகளுக்குள் என்னை அடைத்துவிடுவாள். ஆனாலும் இரவில் அப்பாவின் கைகள் என்னை அவளின் கைகளுக்குள்ளிருந்து வெட்டி எறியும். அங்கே நான் வேண்டாதவனாய் தனியே கிடப்பேன்.

*

நேரம் போய்க் கொண்டேயிருந்தது, எழுந்தால் தெரியும் ஜன்னல் காட்சி. ஆனாலும் எழும்பி நிற்க மனம் எனும் விலங்கு விடவில்லை. நாய்களின் குரைப்பு அவனுள் ஒலிக்க, நினைத்த காரியத்தைத் தொடர, கீழே இறங்க எத்தனித்தான். ஜன்னலின் திறந்த கதவு வழியே சிந்திய வார்த்தைகள் அவன் காதுக்குள் ரீங்காரமிட்டன.

“செத்து போ..” ஆணின் குரல்.

“இன்னொரு உயிர கொல்லக் கூடாதுன்னு தான், இத்தன நாள் அமைதியா இருந்தேன்.. நீ எங்க போறன்னு எனக்கு தெரியாதுன்னு நினச்சுட்டு இருக்கியா?.. எல்லா தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணின..” பெண்ணின் குரல்.

“நா ஒன்னும் உன்ன விரும்பி கல்யாணம் பண்ணல.. அது நடந்துச்சு.. பழச பேசி எந்த உபயோகமும் இல்ல.. மெரட்டி மெரட்டி என்ன பயமுறுத்தாதே.. சாவணும்ன்னா சாவு.. அப்படியாவது நிம்மதி கிடைச்சா சந்தோசம் தான்”

“நல்லவன் வேஷம் போட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாத்தி இருக்க.. ஒங்கூட படுத்தேன்னு நினச்சா அசிங்கமா இருக்கு”

“படுத்தேன்.. அதுக்குன்னு இது என்னோட குழந்தை இல்ல.. அதுக்கு முன்னாடியே நீ கர்ப்பம் ஆயிருக்க… உன்னோட மொத புருஷன் ஆக்சிடென்ட்ல செத்துட்டான்.. ஒரு வேள உயிரோட இருந்திருந்தான்னா.. அவனும் இதே தான் சொல்லியிருப்பான்.. செத்து போ”

அதன் பிறகு வார்த்தைகள் அறையில் இருந்து கேட்கவில்லை. அவன் அங்கேயே தொடர்ந்து படுத்து கிடந்தான். சொற்களின் அர்த்தம் அவனை நகரச் செய்யவில்லை.

*

ன் முதல் திருட்டு கிழவனோடு அமர்ந்திருந்த மரநிழலிலிருந்து பத்தடி தள்ளியிருக்கும் சாலையில் நடந்தது. குப்பைத்தொட்டியில் இருந்து பொருக்கியெடுத்த அட்டைகளையும் பாலிதீன் கவர்களையும் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சத்தம் கேட்டது. இருசக்கர வாகனம் இரண்டு ஒன்றோடொன்று மோத, விழுந்த இருவரில் ஒருவனின் மோதிர விரல் தனியே என் காலடியில் விழுந்தது. அதிலே மின்னிய மோதிரம் என்னையும் கிழவனையும் இழுத்தது.

“யோசிக்காத.. எடுத்து பாக்கெட்டில போடு.. ஒரு மாசம் நல்ல சாப்பாடு திங்கலாம்..”

கிழவன் என்னை அதை எடுக்கச் சொல்லி உந்தினான். கூட்டம் கூடிக்கொண்டு இருந்தது. வழக்கம் போல யாரின் பார்வையும் எங்கள் பக்கமில்லை. கீழே குனிந்து விரலை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். மோதிரத்தை விற்ற பிறகு கிடைத்த பணத்தில் ஒரு மாதம் சுவையான சாப்பாட்டை மட்டுமே உண்டோம். அந்த பணம் தீரவே, எனக்கு இன்னும் பணம் வேண்டும் எனும் துடியேறியது.

*

நிசப்தம். சற்று முன்னே கேட்ட இருவரின் குரலும் இல்லை. இங்கே உடல்களின் விளையாட்டு இனியில்லை. காவல் வண்டி ரோந்து போகும் நேரமிது. இரவில் அந்த வீதியில் எந்த நேரம்? என்ன நடக்கும்? என்பதை ஏற்கனவே அவன் நோட்டமிட்டு வைத்திருந்தான். நாய்களின் அடுத்தக் கட்ட எல்லை பிரிப்பு போராட்டம் நடக்க சற்று நேரம் பிடிக்கும். கீழே இறங்கி வீட்டில் நுழைவதற்கு சரியானத் தருணம் இல்லை. இன்னும் அங்கேயே இருளில் படுத்துக்கிடக்க வேண்டும். விசும்பும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. மெதுவாக ஜன்னல் தெரியும் பக்கமுள்ள சன்செட்டிற்கு நகர்ந்தான். அவள் மட்டும் படுக்கையறையில் தனியாய் அழுதபடி இருந்தாள். ஹாலில் அவன் அமர்ந்தபடி கையில் மதுக்கோப்பையுடன் இருந்தான்.

*

ரண்டாம் திருட்டு அவ்வளவு எளிதாக அமையவில்லை. தப்பி வந்ததே பெரும்பாடு. கையில் கிடைத்தது பழைய இரும்புச் சாமான்கள் மட்டுமே. இரண்டு வாரத்திற்கு தேவையான பணம் கிடைத்தது. கிழவன் வழக்கமான காயிலான் கடையில் தங்கிக் கொண்டார். நாங்கள் அங்கே தங்குவதை, முதலாளி இரவுக்காவலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். நாங்களும் வாடகையில்லாமல் தங்கிக் கொண்டோம். மூன்றாவது, நான்காவது திருட்டு கோயில்களில் நடந்தது. அதில் தவறுகள் நிகழவில்லை. ஐந்தாவது திருட்டில் நான் காவல் நிலையம் சென்றேன். அது ஒருவகையில் வசதிக்குத்தான், அங்கேதான் திட்டமிட்டு திருடும் பாடத்தைப் படித்தேன். ஆனாலும், பின்னர் மூன்று தடவை காவல் நிலையம் போக நேர்ந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் என் திட்டமிடல் சார்ந்த பட்டப்படிப்பில் நான் தேர்ச்சி அடைந்த காலம் அது. சிறிய திருட்டு எல்லாம் வாரத்திற்கு தான் உபயோகப்படும். ஆனால் நெடுநாள் திட்டமிட்டு பெரிதாகத் திருடும் பணம் மாதக்கணக்கில் உபயோகப்படும். இந்த கால இடைவெளியில் அம்மாவையும் அப்பாவையும் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலகி ஓடிவிட்டன.

*

நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. காவல் வண்டியும் கூர்க்காவும் இந்த வீதியைக் கடந்துபோய் விட்டார்கள். அடுத்த சுற்றுக்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகும். அதற்குள் கீழ்வீட்டில் நுழைந்து தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம். அவன் யோசித்துக் கொண்டே இறங்கப் போனான்.

“சீ.. தேவிடியா.. அழுது அழுது நடிக்காத.. மொகத்த பாக்கவே வெறுப்பா இருக்கு.. என்ன கல்யாணம் பண்ணப் போறன்னு தெரிஞ்ச அன்னைக்கே இத கலச்சு இருக்கலாம்ல்லா.. இப்போ எதுக்கு நடிக்க..”

“மனுஷனா நீ.. ஒரு உயிர கொல்ல வேண்டாம்.. அது பாவம்ன்னு நீதான வேண்டாம்ன்னு சொன்ன.. ஒம்புத்தி அப்போ தெரியலையே.. அஞ்சு மாசம் கழிச்சு கலைக்கச் சொன்னா.. முடியாதுன்னு டாக்டர் தானே சொன்னாங்க.. அஞ்சு மாசம் எங்க போன.. அதுக்கு பொறவும் எங்கூட படுத்தியே.. இப்போ உனக்கு நான் புளிச்சிட்டேன்.. பெரிய வேல மயிரு பாத்தா போதாது.. அறிவு வேண்டாம்”

அவன், அவள் கன்னத்தில் அறைந்தான். அங்கே நடப்பவை நகரவிடாமல் என்னைத் தடுத்தது. அங்கேயே சன்செட்டில் படுத்தவாறே கிடந்தேன். அவள் கதவைச் சாத்தி படுக்கையறைக்கு வந்தவள், கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். மேஜை டிராயரில் இருந்து சிறிய கண்ணாடிச் சட்டகத்தை எடுத்தாள். நான் அது என்னவென்று கூர்ந்து கவனித்தேன். கன்னியொருத்தி தவக்கோலத்தில் நின்றபடியிருந்தாள். வருடங்கள் பல கடந்திருக்க வேண்டும். அந்த கன்னியின் முகம் பார்த்ததில், ஏனோ நான் தவிர்க்கும் அம்மாவின் முகம் தோன்றி மறைந்தது.

*

ப்பாவிற்குச் சொந்தமாக நான்கு கடைகள் சேர்ந்த கட்டிடம் உண்டு. அதுவும் எங்கள் ஊரின் மையத்தில் இருந்தது. அம்மாவுடன் என்னை முதன்முதலில் பார்த்த பொழுது அவர்தான் சொன்னார்.

“என்ன முழிக்க.. என்னய அப்பான்னே கூப்புடு சரியா.. மொகத்துல ஒளியுண்டு.. நல்லா வருவான் பாரு”

அம்மாவின் புதுச்சேலைக்குள்ளில் இருந்து எட்டிப் பார்த்த நான் அம்மாவைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டே அப்பாவைப் பார்த்தபடி நின்றாள். எங்களை சினிமாவிற்கு மாதம் ஒருமுறை அழைத்துச் சென்றார். பிறகு ஒருநாள் அம்மா பாப்பாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். முதலில் அது அரிசி மணியாக கிடந்ததாம், இப்போது பூசணிக்காய் போல அவள் வயிறு முட்டி வெளியே வரப்போகிறதாம். என் கைப்பிடித்து பாப்பாவின் நகர்தலைத் தொட்டுக் காட்டுவாள்.

*

வள் கட்டிலிலிருந்து எழுந்து, அங்கேயும் இங்கேயுமாய் நடக்க ஆரம்பித்தாள். அவளின் செய்கைகள் அம்மாவின் நினைவை இன்னும் வலுவாய்க் கீறிவிட்டது. அலமாரியைத் திறந்து பட்டுப்புடவையொன்றை எடுத்து வெகுநேரம் முகம் புதைத்து அழுதாள். நான் மல்லாந்து படுத்தேன். வானில் நட்சத்திரங்கள் நகர ஆரம்பித்தன. ஒன்றோடொன்று மோதி வெடித்தன, அதன் சிதறிய ஒளிப்பிழம்பில் கண்கள் கூசின. சன்செட் வழியே நகர்ந்து ஹாலைப் பார்த்தேன். அவன் அங்கேயே மதுக்கோப்பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

படுக்கையறையை நோட்டமிட்டேன். அவள் மின்விசிறியில் பட்டுப் புடவையை கட்டித் தொங்க விட்டாள். முனையில் முகம் நுழைத்து வயிற்றை கையால் தாங்கிக்கொண்டு அழுதபடி நின்றாள். அவள் கட்டியிருந்த புடவையை விலக்கி, எம்பி நிற்கும் வயிற்றைத் தடவ, அதில் ஏதோ அசைவது எனக்கு தெரிந்தது. அவள் செய்யப்போகும் காரியம் இதுவரையிலும் என்னைப் பதட்டத்திற்கு ஆட்படுத்தவில்லை. ஒரு சின்ன நகர்வு என்னை அசைத்தது. எதற்கென வந்தேனோ? காரியம் மறந்து போனது. இன்னொரு முறை ஒரு புழுவைப்போல வயிற்றில் நகரும் அசைவு, இத்தனை நாள் நான் ஓடிக்கொண்டிருக்கும் நீண்டப் பாதையை மறித்துப் பார்க்க முயற்சிக்கிறது.

இன்னும் மேல்வீட்டைப் பார்ப்பதில் பயனில்லை. மெல்ல இறங்கினேன். பின்கதைவை கையில் இருந்த கம்பியால் எம்பி திறந்தேன். கெவுளி என் தலைக்கு மேலே கத்திக் கொண்டிருந்தது. அம்மாவின் ஸ்பரிசம் மீண்டும் என்னைக் கட்டி அணைப்பதைப் போல உணர்ந்தேன்.

மேல்வீட்டின் பின்கதவு அவ்வளவு எளிதாகத் திறந்தது. உள்ளே சென்றேன், மிக நிதானமாக நடந்தேன். அறையில் புதிதாக வாங்கிய பொருட்களின் மணமே அடைத்து நின்றது. அவன் ஹாலில் இருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான். படுக்கையறை கதவு திறந்து கிடந்தது. நான் தள்ளவும், மீண்டும் ‘அதே காட்சி’. நகரத்தை விட்டுச்செல்லும் இரயில் மெதுவாக தடதடக்கச் செல்லும் ஒலி கேட்டது.

*

வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் கழித்தே அப்பாவை நேரில் கண்டேன். எங்களை அழைத்துச் சென்ற அதே திரையரங்கில் அவரோடு இன்னொருத்தியும், அவள் புடவையை என்னைப் போலவே நுனிப்பிடித்து சிறுவன் ஒருவனும் நின்று கொண்டிருந்தனர். அவனுக்கு அப்பாவின் சாடை.

*

புடவை முனையில் இறுக்கிய கழுத்து, வெளிப்பிதுங்கிய கண்கள், பற்கள் இடையே கடிப்பட்ட நாக்கு. அவளையே பார்த்தவன் அப்போது தான் கீழே பார்த்தேன். தசைக்கயிறு நீண்டு போய் இரத்தப் பொட்டலம் கீழே கிடந்தது. அவளைத் தொட்டுப் பார்த்தேன், நாடியில்லை. கீழே கிடந்த பொட்டலத்தை எடுத்தேன். என் கைகளின் சூடு பட்டதும் அது அசைந்தது. அம்மாவின் வயிற்றில் அசைந்த அதே பாப்பாவின் நகர்வு. மேலே தொங்கிக் கொண்டிருந்தவளை வெறித்துக்கொண்டே நின்றேன். அவள் முகத்தில் காறி உமிழத் தோன்றியது. அப்பாவின் வெறிமுகம் கண்களில் நுழைய, கையில் பாப்பாவோடு ஹாலுக்கு வந்தேன். அதே வெறிமுகம் சோபாவில் கிடந்தது. மண்டைக்குள் காயிலான் கடையில் இரும்பு அடிக்கும் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும் உக்கிரமாக, வெறியாக, வலியாக, கண்ணீராக, ஆத்திரமாக, பசியாக, அணைப்பாக விடாமல் கேட்டது.

கீழ்வீட்டின் கதவை பலமாகத் தட்டினேன். பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கிறது. பாப்பாவை துணியால் பொதிந்து வீட்டு வாசலில் தெரியும்படி போட்டுவிட்டு, மறைவாய் அமர்ந்துக் கொண்டேன். வந்தவர்கள் பொதியைக் கூர்ந்துப் பார்த்தனர். உள்ளே இருப்பது தெரியவும், கதவைச் சட்டென்று சாத்தி உள்ளே போய்விட்டனர்.

பொதி அசைந்துக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல ஒரு விசும்பலும் கேட்க ஆரம்பித்தது. என்ன நடக்கும் என உத்தேசித்து விட்டேன். பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி இருளில் மறைந்தேன். பல பாதைகள் கண்முன்னே விரிந்தன.

***

வைரவன் லெ.ரா
சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular