Thursday, March 28, 2024
Homeஇலக்கியம்அபுனைவுகனவு மெய்ப்படும் கதை - 2

கனவு மெய்ப்படும் கதை – 2

SOME PAINTERS TRANSFORM THE SUN INTO A YELLOW SPOT, OTHERS TRANSFORM A YELLOW SPOT INTO THE SUN – PICASSO

தன் வாழ்நாள் முழுதும் ஒரே பாதையில் சீராக சென்றுக்கொண்டிருப்பவன் சாதாரணமாக பயணிப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளமுடியாது. மாற்றங்களை சூழலை தனது கலையில் தகவமைத்து வந்து கொண்டிருப்பவனது பயணமே நல்ல ஆக்கங்களைத் தரும்.

***

கிராஃபிக் நாவல் தமிழில் இதற்கு முன்னர் வந்திருக்கிறதா என்று பார்த்தால், சில குறிப்பிடத்தகுந்த கிராஃபிக் நாவல்கள் மொழிபெயர்ப்புக் கதைகளாக வந்துள்ளன பெரும்பாலும் அவை லயன்,முத்துவில் வெளிவரும் புகழ்பெற்றக் கதைகள் தான். முக்கியமான ஒரு படைப்பாக மர்ஜானோ சத்ரபியின் “ஈரான்” எனும் ’ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’யாக மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்று கவிஞர் பழனிவேள். முன்னா எனும் காஷ்மீரிய வாழ்க்கையை குறியீட்டுச் சித்திரங்களோடு சித்தரித்த ஒரு கிராஃபிக் நாவலை கணபதி என்னிடம் காட்டுவதற்கு முன்னரே நாங்கள் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். இது முதன்முறையாக நேரடித் தமிழ் கிராஃபிக் நாவல் என்று சொல்லலாம், மாங்கா போன்றே எளிமையாகவும் சற்றே ஆழமாகவும் சித்திரங்களை உருவாக்கி வருகிறார் கணபதி. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது, கிராஃபிக் நாவல் உருவாகிவரும் கதையினை முடிந்தமட்டும் பதிவு செய்வது அவசியமாகப்படுகிறது..

“If you haven’t found it yet, keep looking” – Steve jobs

இந்த இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைச் சொல்வது பொருத்தமாக இருக்கிறது, ’அது ஒரு கனவு’ இதனோடு தொடர்பு கொண்டது தான். ஆனால் கணபதியின் வாழ்க்கையையும் அது சொல்வதாகவே நான் உணர்கிறேன்.

கணபதியின் வாழ்க்கையை, அவர் தேடலை, தாகத்தை அன்று அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. வழக்கமான அவர் ஸ்டூடியோ முற்றிலுமாக மாறியிருந்தது. கீழே பாய் விரித்து தரையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். ஒரு ஜப்பானிய மாங்கா ஓவியர் போல அந்த சூழல் அவரை Oriental கலைஞனாக orientation செய்து கொண்டிருந்தது..

அவர் விரித்திருந்த பாயில் அமர்வதற்கு என் தொப்பையோடு சற்று சூமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே அவரது Stationeryகளைப் பார்த்தவுடன் கிடைத்த உற்சாகம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள்.

டிஜிட்டல் யுகத்திற்கு வந்த பின்னர், பேனா தேவையில்லை என்றாலும். கணிணி உபயோகிப்பது தான் உற்பத்திக்கான அதிக சலுகைகளை நேரம், அலங்காரம் உள்ளிட்ட சமாச்சாரங்களை வழங்குகிறது என்றாலும், கையினால் வரையும் பொழுது கிடைக்கின்ற உணர்வு அலாதி. ஏற்கனவே சொன்னது போல FUN அல்லது joy என்கிற வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன் என்றால், அதைவிட சிறந்த வார்த்தைகள் இதை justify செய்துவிட முடியாது. பல வருடங்களாக அவரது கனவில் இருந்த ஒரு பயணத்தை திடீரென்று ஒருநாள் தொடங்கும்போது கிடைப்பது ஆனந்தமின்று வேறென்ன இருக்க முடியும், ஆனந்தம் தெவிட்டாத ஒன்றாக ஒவ்வொரு ஃப்ரேம்களை அவர் வரையும்போது கதையினை காட்சிகளாக மாற்றும் போதும் அது தொடர்ந்துவருகிறது என்றால் அங்கே fun இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

அவர் வரைவதற்காக வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் அத்தனையும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இந்தப் பொருட்களை சேகரித்து வருவதாகச் சொன்னார், Orthodox fountain pen, கணிசமான எண்ணிக்கையில் பேனா நிப்புகள், கருப்பு மை புட்டி என அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். அந்த பேனா மரத்தால் செய்யப்பட்ட பழமையான பேனா குறைந்தது அந்தப் பேனா தயாரிக்கப்பட்டு 150 வருடங்களாகியிருக்கும், ஒவ்வொரு நிப்புமே அப்படியான பழமையான ஒன்றே. ஒவ்வொரு நிப்பாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், எத்தனை ஆண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத, உறுதியான நிப்புகள் தயாரிக்கப்பட உற்பத்திக்கான அடிப்படைத்தன்மை எத்தனை தரமானதாக இருந்திருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த பழமையான பேனாவில் நிப் எப்படி செயல்படுகிறது, அதன் Flexibility ஆகியவற்றை ஆர்வமாக என்னிடம் விளக்கினார். எதற்காக நாம் Use and Throw என்கிற கான்செப்டிற்கு மாறினோம் என்கிற கேள்விக்கு வேறு ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அங்கிருந்த மை புட்டியை எடுத்துப் பார்க்கச்சொன்னார். அந்த மைபுட்டி வாங்கிப் பல வருடங்கள் இருக்கும் அதில் “specially made for manga drawing” என்கிற பொருள் வரும்படியான வாசகம் இருந்ததைக் காணும் போதே ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.

ஓவியங்கள் குறித்த சில கட்டுரைகளுக்காக ART VS WORK OF ART, ART & WORK OF ART என வெவ்வேறு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒன்றை அசலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் அதன் உண்மையான சப்தங்கள் எழுந்து அதனை நிகழ்த்திக் காண்பிக்கின்றன. உண்மையில் கணபதி செய்து கொண்டிருந்த கிராஃபிக் நாவலுக்கான அடிப்படை செயல்பாடுகள், மேற்சொன்ன விவாதங்களின் நிகழ்த்துகலையாக அரங்கேறுவதாக உணர முடிந்தது. உண்மையில் அந்த பேனல்களில் இருக்கின்ற சில குறிப்பிட்ட ஃப்ரேம்களை அவர் தனி ஓவியமாகவும் வரையலாம், மிக முக்கியமான படைப்புகள் அவை.

இன்னும் The Story of Tamil Manga நீளும் என்றே நம்புகிறேன்…

RELATED ARTICLES

1 COMMENT

  1. பிக்காஸோ அவர்களிம் கூற்றோடு தொடங்கியிருக்கிற இந்த கனவு மெய்ப்படுவதற்கான 2-ம் பதிவு, நவீன கவிதைக்கான கட்டுரையின் தொடங்கத்தில் குறிப்பிட்ட ஆன்ட்ரியன் மிச்செல்லை ஞாபகப்படுத்துகிறது.

    கலையின் வடிவங்கள் தான் வேறு வேறு. மற்றபடி அதன் ஆன்மா பொதுவானதாக இருப்பதாகவே கருதுகிறேன்.

    இந்த நவீனத்துள்ளும் சில ஆண்டிக் மனிதர்களை ( Antique ) கலை நம் கண் முன் காட்டுவதையும் அதிசயத்து கவனிக்கிறேன்.

    150வருடத்திற்கு முந்தைய பேனாக்களைப் பிடித்திருக்கிற மனிதர்கள் ஒருபுறம்.

    யூஸ் அண்ட் த்ரோவுக்கு நம்மை பழக்கப்படுத்தியிருக்கிற வேகம் என அத்தனையிலும் நாம் அழிக்கப்படுகிற சுவடுகளை இப்படி யாரோ சிலரின் கையிலிருந்து நம்மால் மீட்டெடுத்துக்கொள்ளமுடிவது ஆறுதலாகிறது..

    ஓர் உழைப்புக்கு பின் நாம் காணமுடிகிற உணர்வு உன்மத்தத்தைப் போலவே வாசிக்கையிலும் உணரமுடிகிறது..

    கிராபிக்ஸ் நாவலை கையில் ஏந்தும் நாளுக்காய் காத்திருக்கத் தொடங்கிவிட்டோம்.

    வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular