Friday, March 29, 2024
Homesliderஎதிர்வினை - சேனன்

எதிர்வினை – சேனன்

(நிலாந்தன் – ஷோபாசக்தி நேர்காணலை முன்வைத்து சேனனின் எதிர்வினை)
இணைப்பு : ஷோபா சக்தி நேர்காணல், நிலாந்தன் நேர்காணல்

1

இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம் 2009). 

அரசியல் சரித்தன்மை – அல்லது சமூக விஞ்ஞான ஆழம் பற்றிய அதிகாரத்தொனியை இலக்கியக்காரர் கையில் எடுக்கும் அபத்தம் தமிழ் பேசும் உலகில் மிக அதிகம். சினிமா மற்றும் இலக்கியத் துறையினர் அரசியலில் நிரம்பிக் கிடக்கும் நிலை இந்தளவுக்கு உலகில் வேறு எங்கும் கிடையாது. நாலு கதை எழுதி விட்டு – அல்லது ஒரு படம் எடுத்து – அல்லது நடித்து விட்டு கலைஞர்கள் சமூக விஞ்ஞானிகளாக உருமாற்றம் கொண்டு கலையாடும் கருமத்தை நாம் தமிழ்பேசு உலகில் பார்ப்பது போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.

தமிழ் மொழியில் மட்டும் இயங்கி நிபுணத்துவத்தின் உச்சத்தை அடைவது எத்துறையிலும் (கலை தவிர்த்து)  சாத்தியமில்லை. வேறு மொழி தேவை அவசியமற்ற கணிதத்துறையில் கூட ஒரு கட்டத்தில் நிபுணத்துவத்தின் முனையை எட்ட அந்நிய மொழியை பற்றிப்பிடிக்க வேண்டிய தேவை இராமனுஜம் போன்றோருக்கு ஏற்பட்டதை அறிவோம். இதைச் சொன்னவுடன் தமிழ்மொழி மட்டும் பேசுவோர் அனைவருக்கும் எதிரான கருத்து இது என சில தலைகள் குழம்பலாம்.

இது மொழி பேசுவார் பற்றிய பிரச்சினை இல்லை. மொழிபெயர்ப்புத் துறை மற்றும் துறைசார் திறன்களை மொழிசார்ந்து வளர்க்காத எல்லா மொழிகளும் எதிர் கொள்ளும் சிக்கல் இது. ஆனால் இந்தப் போதாமையைப் பெருமையாக பேசும் – அதேசமயம் தாம் அறியா விசயங்களில் தாம் நிபுணர் எனக்காட்டிக் கொள்ளும் ராஜா ராணிகள் நம்மவர்கள் மத்தியில் அதிகம். தமது அறிவின் குறைபாடுகளை மறைக்க அவர்கள் துறைசார் அறிவோரையும் அறிவிலிகள் என சொல்லித் திட்டுவர்.

எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களிள் – குறிப்பாக மாஸ் கலைஞர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு ஒரு சமூகப் பயன்பாடு உண்டு. அவர்கள் அதை அதிகாரமாகப் பாவித்து தமது போதாமையை அல்லது பிற்போக்குத் தனத்தை அறிதலின் உச்சமாக பொதுப்புத்தியில் அடித்து இறக்கும் பொழுது அதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் மற்றவர்களுக்கு இல்லை. ஆனால் நாம் இங்கு சொல்லும் அடிப்படை சனநாயக உரிமை பற்றிய அறிதல்கூட பலருக்கு இருப்பதில்லை. தமது கருத்து அதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் வலதுசாரிய ஒடுக்குமுறை நிறுவனங்களையும் பாவிக்கத் தயங்குவதில்லை.

2

அரசியல் சார் இயக்கத்திற்கோ அல்லது அரசியல் சார் அறிதலுக்கோ எந்தப் பங்களிப்பையும் செய்தவரல்ல ஷோபாசக்தி. அறிவுபூர்வமான ஒரு விவாதத்தை அவரோடு செய்வதன் சாத்தியமின்மை பற்றி அனைவரும் அறிவர். முன்பு இது பற்றி வளர்மதி தெளிவாக எழுதி இருந்த ஞாபகம் – தேடி எடுத்துப் படித்துக் கொள்ளவும்.

நான் எப்போதும் வாதத்துக்கு தயார் என தமிழ் சினிமா பாணி சவால்களை அவ்வப்போது விட்டுக்கொண்டு இருக்கும் ஷோபாசக்தி – எந்தத் துறையின் உச்ச அறிவின் அடிப்படையில் அத்தகைய தெனாவட்டை செய்கிறார் என ஒருபோதும் சிந்தித்து பார்த்ததில்லை. கலைஞர் என்ற ஒன்றை தாண்டி வேறு எதற்கும் உபயோகமற்ற ஒன்றுதான் அவர் தோள்களில் இருக்கிறது. அவருக்கு நிபுணத்துவம் இருக்கு என தேடித்திரிந்து அவரோடு யாரும் மோத வருவதில்லை.

அவரது அடாவடித்தன – எடுத்தெறிந்த கருத்துக்களால் தான் இந்த சச்சரவு வருகிறது. சரி என வாதிக்க சென்று கருத்துக்களை வைத்தால் அவை எதற்கும் பதில் வராது. கருத்துகளுக்கு பதில் சொல்லிய வரலாறு அவருக்கு இல்லை. அறிவார்ந்த விசயங்களை அலசும் சக்தி அற்ற அவர் குறுக்கால மறுக்கால ஏதாவது திட்டுவார் – எங்கை பிழை பிடிக்கலாம் என பார்த்து ஏதாவது ஒரு புள்ளியைப் பிடித்து கொக்கரிப்பார். அவர் ஒரு குறுக்கோடி. அவர்மேல் சுட்டிக் காட்டப்பட்ட பிழை பற்றியோ அல்லது கருத்து முரண் பற்றியோ உரையாடல் இருக்காது. அவர் செய்வது படிப்பல்ல – கொறிப்பு. வாசிப்பு அறிதல் அங்கில்லை. கொறித்ததன் தெறிப்புகள் மட்டுமே. அதனால் நீட்டி நிமிர்த்தி அவருக்கு அரசியல் பதில் எழுதுவதில் எந்தப் பிரியோசனமும் இல்லை. அவர் எழுதக்கூடிய பதிலை நானே எழுதித் தந்துவிட முடியும். அது ஓன்றும் பெரிய கடினமில்லை.

ஆனால் ஒருவிதத்தில் ஷோபாசக்தி தனிமையில் இல்லை. அவரது ‘வளர்ச்சி’ அவரை மிதவாத மையத்தில் நிறுத்தி உள்ளது. மிதவாதம் – சந்தர்ப்ப வாதம் –அடையாள அரசியல் – மற்றும் மார்க்சிய வெறுப்பு செய்யும் பெரும் குழுவுக்கு முதுகு கொடுத்து நிற்கிற பலரில் அவரும் ஒருவர்.

இந்தச் சக்திகள் ஏதாவது ஒரு முறையில் ஏதாவது ஒரு அதிகாரம் சார்ந்து இயங்குவன. ஒடுக்கப்படுவோரின் பெயரால் ஒடுக்கப்படுவோரின் நலன்களைத் தங்கள் சுய லாபத்துக்காக விற்பவர்கள். அவர்கள் ஒத்தோடிகள். அதிகாரம் திணிக்கும் அறத்தைப் புனிதமாக்கவும் – அதை எதிர்பாரை புறந்தள்ளி ஒதுக்கி முடக்கவும் அவர்கள் தமது சேவையை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதற்கு பதிலுபகாரமாக சிறப்பு சலுகைகள் – மாஸ் ஊடகம் மற்றும் அதிகார நிறுவனங்களின்  கவனம் ஆகியன அவர்களுக்கு கிடைக்கிறது.

இது நேரடியாக நிகழும் ஒன்றல்ல. ‘அரசாங்கத்திடம் காசு வாங்கிறார்’ என்பது போல் கொச்சையான நடைமுறை அல்ல இது. அத்தகையோரை எதிர்ப்பதும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் சுலபம். ஆனால் இவர்களின் பழக்க வழக்கம் வேறு. நுணுக்கமாக இயங்கி தங்களை சிறப்பு சலுகைகளுக்கான வரிசையில் இருத்தும் நடவடிக்கை இது. இதனால் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக சிலவற்றை எழுதித்தீர வேண்டி உள்ளது.

அகரமுதல்வனுக்கு ஷோபாசக்தி வழங்கிய பேட்டியில் ஏதாவது புதிய உருப்படியான கருத்து இருந்தால் யாராவது சுட்டிக் காட்டுங்கள். ஆங்காங்கு கனக்கும் தெனாவெட்டுக் கதைகள் தவிர வேறில்லை. ஆனால் மிதவாதிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் முக்கிய மூன்று புள்ளிகளை இங்கு நாம் மீண்டும் கடுமையாக மறுக்க வேண்டி உள்ளது. 

அந்தகம் – இதழுக்காக அகரமுதல்வன் செய்யும் நேர்காணல் வரிசையில் விவாதத்தை உருவாக்குங்கள், எழுதுகிறேன் என முன்கூட்டியே அகர முதல்வனுக்கு வாக்கு கொடுத்தது என் பக்கத்தில் ஒரு மடத்தனமான – அறிவிலித்தனமான செயல்தான் என்பதை பேட்டியைப் படித்ததும் விளங்குகிறது. குறிப்பாக இதுவரை வெளியானதில் ஷோபாவின் பேட்டியில் ஓன்றுமே இல்லை.

3

புலிகள் தான் தமது தவறான அரசியல் வழிமுறையால் மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்து நந்திக்கடலில் தள்ளிக் கொன்றவர்கள் என்பது இவர்கள் திரும்ப திரும்ப சொல்லும் ஒன்று.

இந்த வாதத்தை முன்வைப்போர் இலங்கை அரசின் மேல் முழுப்பொறுப்பையும் போட மறுத்து வருபவர்கள். நூறுவீதம் புலி எதிர்ப்பு – நூறுவீதம் அரச எதிர்ப்பு என்ற ஒன்றெல்லாம் கிடையாது – அது வெறும் வெற்றுப் பேச்சு என்றெல்லாம் பலமுறை பலரும் சுட்டிக் காட்டினாலும் அதைப் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

மக்கள் படுகொலையில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பாதிப்பாதி பொறுப்பு இருக்கு என்று கூட இவர்கள் சொல்வதில்லை. ஏனென்றால் அது இவர்களின் நூறுவீத புலி எதிர்ப்பில் பங்கத்தை கொண்டுவந்து விடும். இருனொரு வீதம் அரச எதிர்ப்பு என்று கூட கணக்கு படிப்பிக்க வந்து விடுகிறார்கள். இவை அரசியல் ரீதியாக (கணக்கு ரீதியிலும்) எத்தகைய வெற்று வார்த்தைகள் என்பதை அறிய மாட்டார்.

‘புலிகளை எதிர்க்கிறோம் அதைவிடக் கூட அரசை எதிர்கிறோம்’ என இவர்கள் சொல்லிக் கொள்வதாக எடுத்துக்கொண்டால் கூட அதுவும் தவறே. புலிகள்தான் கொன்றார்கள் என்று மட்டும் ஏன் உங்கள் பிரச்சாரங்கள் புலி எதிர்ப்பில் மையப்பட்டு நிற்கிறது. இது தவிர இந்த உரையாடல் பற்றிய பல்வேறு அரசியற் புள்ளிகள் உள்ளன. போராட்ட அமைப்பு, ஆயுதப் போராட்டம், இராணுவ திட்டமிடல் பற்றிய தகவல்கள் எனப் பல உண்டு. இது பற்றி நான் உட்பட பலர் ஏராளமாக எழுதி உள்ளனர். அவற்றை இங்கு திரும்பிச் சொல்லும் தேவை இல்லை.

இனப்படுகொலை எனச் சொல்லிக் கொண்டு புலிகள்தான் நந்திக்கடலில் மக்களை தள்ளினர் என்றும் சொன்னால் அதற்கு என்ன அர்த்தமப்பா? கேக்கிறவன் கேனயன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம் என்று இதுபற்றி நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் யுத்த இறுதிக்காலத்தில் நிகழ்த்திய வன்முறையை நான் ஒருபோதும் ஒளித்து மறைத்து பேசியதில்லை. அதே சமயம் படுகொலையில் சேர்ந்து இறந்து போன அவர்கள் தலையில் மட்டும் பழி சுமத்தி புலி எதிர்ப்பை மட்டும் செய்வார் மத்தியில் குளிர் காய்ந்ததும் இல்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த கையோடு கொலைகளை மறக்கும் அடிப்படையிலான பகை மறப்பு பிரச்சாரத்தை ஷோபாசக்தி செய்யத் தொடங்கினார். அவர் செய்யும் கொலை மறப்பு உண்மையில் கொலை மறைப்பு என நாம் சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இலங்கை அரசு கொத்துக்கொத்தாக கொன்ற மக்களை நாம் மறந்து போகப் போவதில்லை – மறந்து விடுங்கள் என ஷோபாசக்தி சொன்ன கதையையும் மறக்கப்போவதில்லை. இலங்கை அரசாங்கம் செய்த அனைத்துப் படுகொலைகளையும் மறப்போம் என்று ஷோபாசக்தியும் அவரது ஆட்களும் முன்னெடுத்த பிரச்சாரத்தை மானுட மீட்ச்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்கவும் மறக்கவும் முடியாது. அறம் தொடர்பாக கதைக்க அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. புலிகளை எதிர்க்கும் அளவிற்கு அரசையும் எதிர்த்தேன் என்ற மாபெரும் கதையை இந்த நேர்காணலிலும் ஷோபா சொல்லாமல் விடவில்லை.

ஷோபாசக்தி வகையறாக்களின் அரச எதிர்ப்பு என்பது ஒத்தோடும் தன்மையானது என்ற அடிப்படையில்தான் அகரமுதல்வன் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு என்ன தெனாவட்டாக பதில் வருகிறது பாருங்கள்.

இனப்படுகொலை பற்றியும் மனித உரிமை பற்றியும் நான்தான் புடுங்கினேன் – என்னளவுக்கு ஒருத்தரும் புடுங்கவில்லை என்பது அதன் சாராம்சம். இந்த பதிலுக்கு பின் இருக்கும் மனக்கோளாறு பற்றி யாராவது வைத்தியர்தான் பதில் சொல்ல வேண்டும். தன்னைப் பற்றி தானே ஓவராக கணக்குப் போட்டு வைத்திருப்பதால் தான் அவர் எழுத்துத்தரம் சரிந்து கொண்டே இருக்கிறது. இது அவருக்கு தெரிவதில்லை.

ஷோபாசக்தியின் இந்த நேர்காணல், வெளிவந்ததும் ஷோபாவின் ரசிகர்கள் சிலர் அகரமுதல்வனை ஷோபா தகர்த்து விட்டார் எனவும், எல்லாப் பந்துகளுக்கும் அவர் சிக்ஸர் அடித்து விட்டார் எனவும் எழுதிய பதிவுகள் கண்டேன். ஆனால் இந்த நேர்காணலில் அகரமுதல்வன் கேட்ட ஒவ்வொரு கேள்விகளிலும் கொலை மறைக்கும் ஜனநாயக வாதியான ஷோபாசக்தி அலம்பி அம்பலமாகி உள்ளார் என்பதை அவர்களால் உணர முடியாதது ஏன்? அரசியல் பலவீனப் பார்வைகள் தான் பலர் தலைகளில் ஏறி நின்று இவர்கள் கிளித்தட்டு விளையாட வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

4

வரலாறு ஒரு திசையில் நகர சிலர் வேறு திசையில் நின்று அலட்டுவர். அதில் ஷோபாசக்தியும் ஒருவர். எழுத்து அறம் பற்றி நீங்கள் பேசுவது வெட்கக்கேடு. அதற்கு முன் சொந்தமாக சிந்தித்து சொந்தமாக எழுதப் பழகுங்கள். மொண்ணை மார்க்சியர் என வசுமித்ராவை இழுத்து வியாக்கியானம் தரும் ஷோபாசக்தி தனது மார்க்சிய அறிதல் பற்றி எங்காவது எடுத்துக்காட்டிப் பார்த்ததுண்டா?

தான் அமைப்புகளுக்கு விசுவாசமாக இருந்ததில்லை என அவர் சொல்வது உண்மைதான். அவர் வழிபாட்டுக்காரர். இவர்கள் காந்தியை வழிபடுவர். பிறகு அம்பேத்காரை வழிபடுவர். அதுபோல்தான் ஒரு ஒரு காலத்தில் மார்க்சையும் வழிபட்டீர்கள். தெய்வங்கள் ஆயிரம். பக்திமான்களும் பலவிதம். அறிதல் முறை என்பது இதிலிருந்து மாறுபட்டது. கேள்வி கேட்க முடியாத தெய்வங்கள் அங்கு இல்லை.

வசுமித்ர வின் ‘தத்துவத்தில் சமரசம் தேவை இல்லை’ என்ற நிலைப்பாட்டோடு எனக்கு உடன்பாடே. மார்க்சியர் என சொல்வோர் அல்லது மார்க்சிய கருத்துக்களை எதிர்ப்போர் அதைப் படித்தும் அதன் ஆழம் தெரிந்தும் பேச வேண்டும் என்ற புள்ளியிலும் உடன்படுகிறேன். இது தவிர என்னை வசுமித்ர ஆதரவாளராக எங்காவது யாராவது பார்த்ததுண்டா? இந்தச் செவ்வி ஒட்டி நடந்த விவாதத்தில் அவ்வாறுதான் தனது வழமையான ஒதுக்கும் செயலை செய்கிறார்.

ஷோபாசக்தியின் விவாத முறை பற்றி நான் போட்ட இடுகையில் வந்த கடுப்பின் பின்விளைவு அது. அவ்வளவே. அவருக்கு ஆதாரம் தேவை இல்லை. அம்பேத்கார் பற்றிய எனது பார்வை என்ன என அறியத்தேவை இல்லை. இயந்திரத் துப்பாக்கியுடன் புத்தர் படத்தை எனது புத்தகத்துக்கு அட்டையாக போட வேண்டாம் என மனுஷ்யபுத்திரனோடு பெரும் சண்டை பிடித்துள்ளேன் (புத்த மதவாதக் கொடுமைகள் நிறைந்த இலங்கை பற்றிய கட்டுரை தொகுப்பாய் இருந்தும் கூட). இதே படம் விரைவில் அ.மார்க்ஸ் எழுதிய நூல் ஒன்றுக்கு அட்டைப்படமாக வந்தபோது ரசித்தோர் உண்டு – கேட்பார் இருக்கவில்லை.

இவர்களுக்கு தத்துவம் என்பது தனிப்பட்ட விளையாட்டு. வசுமித்ர வாதிடும் பல விடயங்களில் அதன் பாணியில் எனக்கு முரண்பாடு உண்டு. அதை நான் எழுதாமல் அவருடன் மோதலுக்கு போகத்  தயாரில்லை. அதே சமயம் அவர் மேல் செலுத்தப்படும் பேச்சு மறுப்பு வன்முறையைக் கடுமையாக கண்டிக்கிறேன். அதுவும் அவரை அடக்க அரசின் ஆதரவை நாடுவதும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதே.

ஆனால் சுட்டிய புள்ளிக்கு பதில் சொல்ல வழி இன்றி வீணே என்னை வம்புக்கு இழுத்து வசுமித்ர ஆதரவாளர் என முடிசூட்டும் அதே கட்டுரையில் வசுவமித்ர எழுத்தில் மாற்றச் சொல்லி நான் சுட்டிய அதே புள்ளியை வழமை போல காப்பி அடித்து விமர்சித்திருக்கிறார். முன்னுக்குப்பின் முரணான இருத்தல் அண்ணனுக்கு இயல்பு. மார்க்சிய மறுப்பு செய்வதற்காக நமது அறிஞர் பின்வருமாறு ஒரு சம்மரி முன்பு எழுதி இருந்தார்.

மார்க்ஸிய மூலவர்கள் அறியாத சமூகநல அரசுகள், நவீன வங்கி அமைப்பு முறைகள், பன்னாட்டுத் தேசியக் கம்பனிகள், உலகமயமாக்கல், சூழலியல் அரசியல், அணு ஆயுத அரசியல், சாதியத்தின் நவீன வடிவம், LGBT அரசியல் என்ற சகாப்தத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமூகம் இது குறித்தெல்லாம் ஓயாமல் உரையாடியபடி தான் வரலாற்றில் முன்னோக்கி நகர்கிறது.

இது மார்க்சியம் தெரியாத – அதே சமயம் வங்கி மற்றும் நடைமுறை பொருளாதார விஷயங்கள் தெரியாத ஒருவரின் கூற்று. மார்க்சுக்கு தெரியாத நவீன வங்கி அமைப்பு முறையும் அதனால் மார்க்சியத்தின் போதாமையும் என அவர் ஒரு கட்டுரை எழுத வேண்டும். குறைந்த பட்சம் யாரும் எழுதியதையாவது சுட்டிக்காட்டி இருக்கலாம். எந்த வலது சாரி குப்பையில் இருந்து கற்றுக் கொண்டார் என எமக்கு அப்ப தெரிந்திருக்கும். சாதிய ஒழிப்பு பேசுபவர்களை சாதியை மையப்படுத்தி திட்டுவது கேவலம். அதுவும் சாதிய ஒழிப்புக்கு ஒரு கல்லை நகர்த்தி இருக்காத இவர்கள் அதற்காக இயங்கும் தோழர்கள் மேல் அத்தகைய அவதூறு செய்வது இன்னும் கேவலம்.

இது அறிதல் முறை விவாதம் இல்லை. மார்க்சியம் புனிதம் என்றும், அறிவின் எல்லை என்றும் நான் எப்போதும் எழுதியதில்லை. அவ்வாறு பேசுபவர் மார்க்சை வாசித்திருக்கும் சாத்தியம் இல்லை. அதேபோல் அம்பேத்காரும் புனிதமில்லை. ஷோபாசக்தி போன்று கடுமையாக மறுப்பு செய்வது வரவேற்கதக்கதே. ஆனால் சாதிய மறுப்பு சாதிய கட்டமைப்பை காத்துதான் நகர்கிறது. சாதிய ஒழிப்பு என பேசுபவர்கள் அம்பேத்காரை உள்வாங்கி அவரையும் தாண்டிச் சென்றுதான் ஆக வேண்டும்.

அதற்கு மார்க்சும் அத்தியாவசிய தேவைதான். இதைச் சொன்னால் அது வசை பாடலா? உண்மையில் கொற்றவையின் மொழிபெயர்ப்போடு அல்ல இவர்கள் வாதம். மொழிபெயர்ப்பு பிழை இல்லாத ஒரு மொழிபெயர்த்த புத்தகம் தமிழில் கிடையாது. அதேபோல் கறாரான மார்க்சிய பார்வை கருத்துக்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. எதிர்ப்பவர்கள் இதை எழுத வேண்டும். அதை விடுத்து அடிக்கச் செல்வது – அவர்கள் பின் அரசியல் சார் – தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார் – தன்னை முன்னிலைப்படுத்தும் அடையாள அரசியல் சார் நடவடிக்கைகள்.

பெண்களைக் கவரவும், தங்களை முற்போக்கு எனக் காட்டவும் பெண்ணியம் பேசுவோருக்கு கொற்றவை முன் வைக்கும் பெண்ணியம் பிரச்சினையாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. குப்பைகளுக்கு அடிபணிந்து குப்பைகளை புதிய மார்க்சிய புலம்பலாக முன்வைக்க கொற்றவையும் வசுமித்ரவும் முன்வருவார்கள் என்றால் அவர்களும் சிவப்புக்கம்பளத்தில் வைத்து வரவேற்கப்படுவர். எல்லா கலைகளிலும் எல்லா வகை எடுத்தெறிதல்–வசைகள் தாண்டி செல்வதைத்தான் மார்க்சியர் செய்ய வேண்டி உள்ளது. உங்கள் வசவுகள் ஒன்றும் புதிதில்லை (நடக்கும் இலக்கற்ற வசவின் தொகையைப் பார்க்க விரும்புவார் முகப்புத்தகம் செல்லவும்).

5

மிதவாதம் எல்லாம் பெருமைப்படும் ஒரு அரசியல் நிலைப்பாடா? வலது சாரியத்தின் முதன்மை அடையாளமாக இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைத்த அரசை முற்போக்கு என வர்ணித்த ஷோபாசக்தி சாதிய ஒடுக்குமுறை பேசுவது அபத்தம்.

குத்து விளக்கேற்றி இந்து முறைப்படிதான் இப்போதும் அவர்கள் இயங்குகிறார்கள். சாதி சொல்லி திட்டியும் இயங்கியும் வருபவர்கள் பலரை தலைமையில் தாங்கி நிற்பது கூட்டமைப்பு. சிறிதரன் சாதி அடிப்படையில் மலையக மக்களைத் திட்டியதும் – அது பெரும் பிரச்சினையாக வெடித்ததும் இவர் அறியவில்லைப் போலும். இந்த கூட்டமைப்புக்குத்தான் ஷோபாசக்தி ஆதரவு வழங்குகிறார்.

என்ன என்ன விமர்சனத்துடன் இதைச் செய்கிறார் என யாருக்கும் தெரியாது. நீங்கள் மார்க்சைத் தாண்டி எல்லாம் சென்று விட்டீர்கள். ஆனால் இன்னும் ஒரு சுமந்திரனைத் தாண்டிச் செல்ல முடியவில்லை உங்களால். பிரான்சில் யாருக்கு ஆதரவு? மக்ரோனுக்கா? பிரான்சில் நடக்கும் பெரும் அடிபாடுகளில் ஒரு சொற்பனை உள்வாங்கும் நோக்கம் உண்டா? மார்க்சை கடந்து மிதவாதத்துக்கு செல்வது உங்கள் உரிமை – அதை முற்போக்கு என்றும் ஒடுக்குமுறைக்கு எதிர் என்றும் முன்னிறுத்த வருவதுதான் எமக்குப் பிரச்சினை.

நீங்கள் சொல்லும் முற்போக்கு தேசியம் என்ன என எமக்குத் தெரியவில்லை. ஷோபாசக்தி தன் கருத்து நிலையில் ஒரு இடத்தில் நிற்பவர் அல்ல. அந்த அர்த்தத்தில் அவர் சிறைப்படுத்த முடியாத சிந்தனாவாதி. தேசியம் பற்றி அவர் எழுதி வருவதை கவனிப்பவர்களுக்கு அது தெரியும். அது அப்ப, இது இப்ப கதைதான் அது. காலங்கள், சூழ்நிலைகள் மாறுவதால் வரும் மாற்றம் அல்ல இது. அத்தகைய புறநிலை ஆய்வாளர்கள் அல்ல இவர்கள். இது அவர்தம் சுயம்சார் மாற்றத்தில் இருந்து எழுவது. நாம் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பவர்கள் இல்லை (நிறப்பிரிகை பிரச்சினை கண்களுக்கு இருந்த போதும் கூட). இருப்பினும் உங்கள் லாஜிக்கை புரிந்து கொள்ளும் அளவு மூளை வளரவில்லை.

இவர் முற்போக்கு தேசியம் என எடுத்துக்காட்டும் நிலாந்தன் என்ன சொல்கிறார்?

வீட்டுச்சின்னத்தின் கீழான இணக்க அரசியல் என்ற ஒரு கட்டுரை கூட எழுதி உள்ளார் நிலாந்தன். அதில் எதிர்ப்பு அரசியலில் இருந்து கூட்டமைப்பு விலகி விட்டது என்றும் எதிர்த்து வாக்கு வழங்குவோர் கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வது பற்றியும் குறிப்பிட்டு இருப்பார். இருப்பினும் இணக்க அரசியலுக்கு ஒரு இடம் இருக்கு என்பார். ஓ இதுதானா அந்த ‘முற்போக்குத் தேசியம்’?

அகரமுதல்வனுக்கு வழங்கிய பேட்டியில் கூட ‘பலமிழக்கும் கூட்டமைப்பு’ எனக் குறிப்பிடுகிறார் நிலாந்தன். அது உண்மைதான். முற்போக்கு சக்திகள் கூட்டமைப்பில் இருந்து விலத்தி கன காலமாயிற்று. மிதவாதிகள் கூடும் இடம்தான் இன்றைய கூட்டமைப்பு. அதுக்குத்தான் நம் முற்போக்குச் சிகரமான ஷோபாசக்தியின் ஆதரவு. வரலாறு ஒரு திசையில் செல்ல மறுதிசையில் நின்று புலம்பும் மிதவாதிகள் வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள்.

நிலாந்தன் இப்பொழுதும் நாடுகளைக் ‘கையாளுதல்’ இந்தியாவைக் ‘கையாளுதல்’ என எழுதி வருபவர். மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளுக்குள்ளால் தீர்வு எனப் பேசி வருபவர். ஐக்கிய முன்னணி (வர்க்கம், பால், சாதி தாண்டிய) பற்றி பேசி வருபவர் (பார்க்க அகரமுதல்வன் செவ்வி). இந்திய அரசுடன் இணக்கம் பற்றி –அல்லது அதைக் கையாளுதல் பற்றிப் பேசுபவர் . தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு – இன்றைய இந்திய அரசுக்கு எதிராக நிற்கும் அனைத்துவகை போராளிகளுக்கும் இது உவப்பா?

தேசியம் பற்றி நிலாந்தன் பின்வருமாறு விளக்கம் தருகிறார்: ‘தேசியம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு பெரிய மக்கள் திரட்சியின் கூட்டுப்பிரக்ஞை.’ இதை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வது? பெரிய மக்கள் திரள் என்றால் என்ன? அதன் எல்லைகள் என்ன ? திரட்சி என்றால் என்ன? திரட்சியின் கூட்டு கொண்டு வரும் பிரக்ஞை நிகழ்வு என்ன? தேசிய அரசு என்றால் என்ன? அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் பொருட்டு தேசியம் பற்றிய விவாதத்துக்கு நிலாந்தன் முன்வர வேண்டும்.

நிலாந்தனின் எழுத்து வர்க்கம், சாதி, பால் நீக்கம் செய்யப்பட்ட எழுத்து என்பதை அவதானிக்க. அவர் முரண்களை அவதானித்து எழுதுபவர் இல்லை. ஒரு பத்தி எழுத்தாளர் போல் – லாஜிக் அடிப்படையில் எழுதி வருபவர். நல்ல மனிதர். அவர் அவதூறு செய்து நான் பார்த்ததில்லை. பல்வேறு சரியான கருத்துக்களையும் முன் வைத்துள்ளார். அவர் முற்போக்கு தேசியம் நோக்கியாவது நகர வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

முற்போக்கு என்ற சொல்லை பாவிக்க விரும்புவதில்லை. மிகவும் சிதைந்த அர்த்தத்தில் – அவரவர் தம் அழுக்குகளை மறைக்க பாவிக்கப்பட்டு வரும் சொல் அது. அதற்கு பதில் இடது சாரியம் என பாவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இடதுசாரிய தேசியம்? நிலாந்தன் வாருங்கள். உரையாடிப் பார்க்கலாம்.

ஷோபாசக்தி நீங்கள் சென்று வாருங்கள். உங்கள் லெவலுக்கு யாழில் கே.ரி கணேசலிங்கம் என்று ஒரு அரசியல் பேராசிரியர் இருக்கிறார். அவரிடம் சென்று சிஷ்யனாக இருங்கள். ‘மேன்டர்கள்’ இல்லாமல் சுயமாக இயங்க முடியாத சிலரில் நீங்களும் ஒருவர் என்பதால் அந்த ஆலோசனை.

போராடும் – எதிர்ப்பு செய்யும் பக்கத்தில் ஷோபாசக்தி இல்லை. சும்மா சும்மா தொல்லை செய்யாதீர்கள்.

***

இணைப்பு : ஷோபா சக்தி நேர்காணல், நிலாந்தன் நேர்காணல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular