Friday, March 29, 2024
Homeஇலக்கியம்ஆரணங்கு

ஆரணங்கு

-1-

“மனுஷன் மூணு நாளா ஒன்னுமே சாப்பிடலைங்க. ஹாலுக்கு நடூல உக்காந்துகிட்டு அந்த செவத்தையே பாத்துகிட்டு இருந்தாரு. நானும் அப்பப்ப வந்து சாப்பாடு செஞ்சி தரவானு கேட்டேன். வேண்டான்னு தலையசப்பு தான். வார்த்தையே வரல. செல நேரம் அழவும் செஞ்சாரு. அவர அப்படி பாத்ததே இல்லங்க. எனக்கே அழுக வந்துருச்சு.”

மாலதியின் கண்கள் உறக்கமின்றியும் அழுதும் கறுத்திருந்தன. தாத்தாவைப் பற்றி துக்கம் விசாரிக்க வரும் அனைவரிடமும் சலிப்பின்றி, அதே நேரம் வருத்தம் சிறிதும் குறையாமல் விவரித்தாள். தாத்தாவின் இறுதி தினங்கள் மாலதியின் சொற்களில் வருவோர்க்கு துலங்கின. இறக்கும் முன் கொஞ்சம் அதட்டியாவது தாத்தாவிற்கு ஒருவேளை உணவு அளித்திருக்கலாமோ எனும் குற்றவுணர்ச்சியும் அவ்விவரிப்பில் அடங்கியிருந்தது. அப்பாவிடம் விவரிக்கும் போது அவளது கண்களை கவனித்தேன். தாத்தாவின் மீதான மரியாதையும், தானறிந்த அவருடைய வாழ்க்கையை மேலும் ஆயிரம் பேரிடம் சொல்வதற்கான தெம்பும் புலப்பட்டது.

தாத்தா தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் சாப்பிடாமல் இருந்தபோதே மாலதியிடமிருந்து எங்கள் வீட்டிற்கு அழைப்பு வந்திருந்தது. அழைப்பு வந்த மறுதினமே நாங்கள் கிளம்பினோம். தாத்தாவின் முகத்தில் சுருக்கங்கள் அதிகரித்திருந்தன. உதடுகளும் கண்களும் காய்ந்து கிடந்தன. தண்ணீர் குடிக்க மறுத்தார். சிறிதளவே உணவு உட்கொண்டார். அவ்வீட்டிலிருந்த பொருட்களைப் போன்று அவரும் அசைவுகளின்றி படுத்திருந்தார்.

மாலதி அதே தெருவில் இஸ்திரி போடுபவள். அதற்கான மூலதனம் முழுவதையும் கொடுத்தவர் தாத்தா வேங்கடகிருஷ்ண சாஸ்திரிகள். இரயில்வே துறையில் ரயிலில் guard ஆக பணிபுரிந்தார். இரயிலில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்வது அவருக்கான வாடிக்கை. வாய்ப்பு கிடைத்தால் அவரே வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் இரயிலில் மாற்றம் கேட்டு வாங்கிக் கொள்வார். நிறைய கோவில்களை பார்த்தவர். அவருக்கிருந்த ஒரே கவலை தான் வசிக்கும் இடத்தின் அருகில் கோவில் இல்லை என்பதே.

அத்தெருவில் வீடு வாங்கி பதினெட்டு வருடங்கள் கழிந்திருந்த சமயம். தெருவாசிகளால் ஆன நிர்வாகக் குழுமம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுமம் தெருவாசிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஹிந்தி வகுப்புகள் போன்றவற்றை நிகழ்த்தினர். அவர்களின் முன்னெடுப்பில் கோவில் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கின. தாத்தா அதன் பணிகளை ஆரம்பத்திலிருந்து கவனித்தார். அவரிடம் அதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. அவ்விடத்தைச் சுற்றியிருக்கும் கோவில்களின் பட்டியல்களையெல்லாம் எடுத்து ஆராய்ந்தார். இறுதியாக சுற்றிலும் எங்குமே பெண் தெய்வங்கள் இல்லை என்று கூறினார். அதற்கான உரையாடல்கள், தேடல்கள் அனைத்தும் அவர்களுக்குள்ளாக நிகழ்ந்தது. கடைசியில் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர். சேலத்திலிருந்த பிரதான மடங்களிலிருந்தும் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்வது குறித்து தெளிவு பெற்றுக் கொண்டனர்.

கோவில் கட்டுமானத்தின் இறுதிப் பணிகள் நிகழும் தருணம். பாட்டி பார்வதியம்மாளின் மரணம் சம்பவித்தது.  பாட்டியின் பிரிவு வீட்டிற்குள் அவரை முடக்கியது. தனிமையாக இருக்கவே விரும்பினார். கோவில் பணிகளை தினமும் கவனித்து வந்ததால் பாட்டியின் பிரிவு ஏதேனும் அசம்பாவிதம் நிகழக்கூடுமோ எனும் கற்பனைக்கு அவரைத் தள்ளியது. . சில வாரங்களுக்கு கோவில் கட்டுமானத்தின் பக்கம் செல்லாமல் இருந்தார்.

நாங்களும் ஜனனி அத்தையின் குடும்பமும் அவ்வப்போது தாத்தா வீட்டிற்கு வந்து போவதுண்டு. அப்பாவும் அத்தையும் வீட்டிற்கு தவறாமல் பணம் அனுப்புவர். ஆனால் அதன் மீது தாத்தாவிற்கு பெரிய அபிப்பிராயங்கள் இல்லை என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பெங்களூருவிற்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து தாத்தாவையும் பாட்டியையும் உடன் அழைத்து வர கடுமையாக முயற்சித்தோம். ஆனாலும் தாத்தா மறுத்துவிட்டார். ஜனனி அத்தையும் முயற்சித்துப் பார்த்தாள். பாட்டி இறந்த பின்பும் அவர் அவ்வீட்டைவிட்டு வர தாத்தா சம்மதிக்கவில்லை.

கோவிலின் குடமுழுக்கு தெரு முழுக்க அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கோலாகலமாக நிகழ்ந்தது. தெருவாசிகள் அனைவருடன் நாங்களும் கலந்து கொண்டோம். அன்றிலிருந்து தாத்தா தினமும் இருவேளை கோவிலுக்கு சென்று வந்தார். உட்பிராகாரத்தில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமத்தை உரக்கச் சொல்லுவார். சிலர் ஆச்சர்யப்படுவதும், பலர் புரியாமல் கடந்து செல்வதும் அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. அவ்வப்போது பிராசதங்களை சமைத்து கோவிலுக்கு வழங்குவார். பலர் அதன் சுவையை பாராட்டியிருக்கின்றனர். கோவிலில் கிடைத்த பல புதிய நட்புகளைப் பற்றி அப்பாவிடம் பிரஸ்தாபிப்பார்.

அந்த நகரில் மொத்தம் பதினோரு தெருக்கள். தெருக்களுக்கு மையமாய் லலிதாம்பிகையின் கோவில். அங்கு தாத்தா தினமும் மந்திரம் உச்சாடனம் செய்யும் தோரணையை துக்கம் விசாரிக்க வந்திருந்த அவருடைய நண்பர்களுள் பலர் வியந்தோதினர். அவர்களிடமும் தாத்தாவின் கடைசி நாட்களின் இயல்பை மாலதி விவரித்தாள். தெரு நிர்வாகத்தின் மூத்த உறுப்பினரான கோவிந்தனுக்கு மாலதியின் செய்தி பிறரைக் காட்டிலும் பெரும் துக்கத்தை அளித்தது. ஒவ்வொருவரின் முக பாவனையையும் கவனித்து வந்த எனக்கு இவருடைய உணர்வின் வெளிப்பாடு ஆச்சர்யத்தை அளித்தது. எழுபத்தி மூன்று வயதில் இறந்த தாத்தாவை பலர் கல்யாணச் சாவு என வாழ்த்தினர். இவர் மட்டுமே பிரிவின் துயரை முகம் முழுக்க அப்பியிருந்தார்.

கண்ணாடிப் பேழையுள் தாத்தாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. கால் தொட்டு வணங்கி வாசல் வந்தார். அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றார்.

“அப்பா மூனு நாளா கோவிலுக்கே வரல. அதுக்கு முன்னாடி ஏதோ நோன்புனு பிரசாதம் செஞ்சு குடுத்தாரு. அப்ப கூட நடூலயே கெளம்பி போயிட்டதா குருக்கள் வழியா கேள்விப்பட்டேன். அப்பாக்கு உடம்பு சரியில்லையோனு சந்தேகம். வீட்டுக்கு வந்து பாத்தா அமைதியா, திடமா உக்காந்துகிட்டு இருந்தாரு. ஆனா எதுவுமே பேசல.”

அவருடைய குரல் திக்கியது. அவ்வப்போது சொற்களை விழுங்கினார். கண்கள் கலங்கின. ஆறுதலாக அவருடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அப்பா என்னை அறிமுகம் செய்தார். பெயரை விசாரித்து நினைவில் வைத்துக்கொண்டார்.

“என்ன படிக்கறப்பா ?

எனது கைகளை பிடித்துக் கொண்டார். குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது கோவிந்தனின் கண்கள் தாத்தாவின் உடலைப் பார்த்துக் கொண்டன.

“ஃபைனல் இயர் சிவில் அங்கிள்”

அழுகையை அடக்க விரும்புபவரைப் போன்று எனது கைகளை இன்னமும் சற்று இறுக்கமாகப் பிடித்தார்.

“நல்ல மனுஷர் தம்பி. யாருக்கும் எந்த தொந்தரவும் செஞ்சதில்ல. அவரோட கடைசி கால அமைதியத்தான் யாராலயும் புரிஞ்சிக்க முடியல!”

சிறிது நேரம் என்னருகிலேயே நின்றுவிட்டு கிளம்பினார். தாத்தாவின் அமைதியை அறிய அவர் கொண்டிருக்கும் பிரயாசை என்னையும் தொற்றிக் கொண்டது. அத்தையும் குடும்பத்துடன் தெருமுனை வரை வர சுடுகாட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தெருவாசிகள் கூட்டமாக தாத்தாவின் உடலைப் பின்தொடர்ந்தனர். தாத்தா அமைதியில் நிறைய பேரை சம்பாதித்திருக்கிறார் எனும் எண்ணம் அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.

***

ஒவ்வொரு புதன் கிழமையன்றும் அங்கு காய்கறி சந்தை நிகழும். அதன் உட்புறத்தில் சுடுகாடு அமைந்திருந்தது. தாத்தாவின் உடலை மேடையில் வைத்து ஈமக்கிரியைகள் தொடங்கின. சிலர் கண்ணீர் விட்டனர். சிலர் துக்கமாக முகத்தை வைத்துக் கொண்டனர். பலர் தாத்தாவுடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பையும் உரையாடலையும் பகிர்ந்து கொண்ட வண்ணமிருந்தனர். தாத்தாவின் மொத்த வாழ்க்கையும் சொற்களால் அங்கு பகிரப்பட்டுக் கொண்டிருந்தது. வறட்டிகளின் மேல் வைக்கப்பட்ட தாத்தாவின் உடலை கூர்ந்து கவனித்தேன். எப்போதும் மந்திர உச்சாடனத்துடன் இருக்கும் அவரது உதடுகள் சேராமலிருந்தன. கைகள் இறுக்கமாக மூடி இருந்தது. தோளிலிருந்து இடவலமாக செல்லும் பூணூல் அழுக்கேறியிருந்தது. இறப்பதற்கு முன் எப்போது தாத்தா குளித்திருப்பார் என்று சிந்தித்தேன். மேலும் அவர் உடலிலிருந்து எழும்பிய நாற்றம் அதுநாள் வரை அறிந்திராத ஒன்றாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்க்கையில் பலர் சகித்துக் கொண்டு நின்றனர். தாத்தாவிற்கு சர்க்கரை நோய் இருந்ததால் தான் அவருடைய உடலில் நாற்றம் அதிகமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டனர். தாத்தாவை எரித்து சாம்பலை மூடி எடுத்து செல்லும்போதும் இந்த உரையாடல்கள் நீண்டன. அதுநாள் வரை அக்குடும்பத்தில் இறந்தவர்களது பிணங்களை நினைவு கூர்ந்தனர். யார் யாருக்கு நாற்றம் அதிகமாக இருந்தது எனும் வாதங்கள் எனக்கு அருவருப்பாயின. உரையாடல் நீண்டதில் குளிர்சாதனபெட்டியிலிருந்து நீக்கியதிலிருந்தே தாத்தாவின் உடல் கடுமையாக நாறிக் கொண்டிருந்தது எனும் நிலைப்பாட்டிற்கு அங்கிருந்த கும்பல் வந்திருந்தது. கேட்க மனமில்லாமல் வீடு சேர்ந்தவுடன் முதல் ஆளாய் குளித்துவிட்டு தாத்தாவின் வீட்டை நோட்டம் விடத் துவங்கினேன்.

தாத்தா இறப்பதற்கு முன் அமர்ந்திருந்ததாக மாலதி அக்கா சொன்ன இடத்திற்கு சென்றேன். எப்போதும் சஹஸ்ர நாமங்களை வாசிக்க வைத்திருக்கும் சிறிய மர மேஜையும் அதன்மீது புத்தகங்களும் இருந்தன. அருகில் தாத்தா அணிந்துகொள்ளும் கண்ணாடி அதன் டப்பாவில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்து கையெட்டும் தூரத்தில் சந்தனம் அரைக்கும் கல்லும் அதற்கான சிறு கட்டையும் கிடந்தது. அதைப் பார்க்கையில் இதைக் குழைத்து வாரக் கணக்காகியிருக்கும் என்று எண்ணுமளவு காய்ந்திருந்தது. நீர் தெளிக்காததால் தெரிந்த சின்னஞ்சிறிய விரிசல்கள் அந்த எண்ணத்திற்கு வலு சேர்த்தன. மேஜை இருந்ததற்கு எதிரில் தங்க நிறத்தாலான கோவில் போன்ற அமைப்பும், அதனுள் பெருமாளின் விக்ரகமும் இருந்தது. அதை மாமா வாங்கிக் கொடுத்ததாக அப்பா சொன்ன ஞாபகம். அதைச்சுற்றி இருந்த சிறிய சிறிய கடவுளர்களின் சிலைகளின் மீது ஈர்ப்பற்றவனாய் கடந்து சென்றேன். ஒவ்வொரு சிலையின் அருகிலும் காய்ந்து போன மலர்கள் உதிரியாய்க் கிடந்தன. பெருமாளின் மீது சாற்றப்பட்டிருந்த மாலையும் காய்ந்து நூல் பளிச்செனத் தெரிந்தது. அறையைச் சுற்றிலும் பழைய சாமான்கள் நிரம்பியிருந்தன. பயன்படுத்தாமல் இருந்த கட்டில் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சமைப்பதற்கு தேவையான சில கிண்ணங்களையும் பாத்திரங்களையும் மட்டுமே அவர் பயன்படுத்தி வந்ததாக சொல்வழி நினைவுகள் என்னுள் எழுந்தன. பாட்டி இறந்தவுடன் அதிகம் பயன்படுத்தாத சமையலுக்கான மின்சாதனப் பொருட்கள் தனித்து அங்கே வைக்கப்பட்டிருந்தன. சுவரிலும் கடவுளர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

கடைசியாக தாத்தாவின் வீட்டிற்கு வந்து சென்றதன் நினைவு எழுந்தது. அவையும் தெளிவாக இல்லாமல் அமைந்து போனது. அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக வீடு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருந்த நேரம். சிறிய வயதில் அடிக்கடி இங்கு அழைத்து வந்ததாக அம்மாவும் அப்பாவும் கூறுவர். எனக்கோ எதுவும் ஞாபகத்தில் இல்லை. பின் அவ்வப்போது அழைத்து செல்லுமாறு கேட்ட போதும் பொருளாதாரக் காரணங்களை காட்டி மழுப்பினர். ஏழாவது எட்டாவது படிக்கும் போதும் அதே காரணம் கூறினர். ஏற்றுக் கொள்ளமுடியாமல் தாத்தா வீட்டிற்கு செல்ல சங்கடம் ஏன் என்று கேட்டுவிட்டேன். தாத்தா கண்டிப்பானவர். அவர்களிடம் இந்நிலையில் செல்வது பணம் வேண்டியோ எனும் எண்ணம் அப்பாவின் மனதில் பதிந்திருந்ததால் வீட்டின் பொருளாதாரம் சமனிலை ஆனவுடன் அழைத்து செல்வதாகக் கூறினார். அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் அமைதியானேன். பின் பாட்டி உடல்நலம் குன்றிய பொழுதில் வந்திருந்தேன். அப்போதும் அதிகம் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை, பின் பாட்டியின் மரணத்தில், அதற்கு பின் இப்போது. வீடு அந்நியமானதாக இருப்பதற்கு இந்நினைவுகள் சான்றுகளாக நின்றன.

சுவரில் இருந்த கடவுளர்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டு வந்தேன். இடையில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் ஆணியிலிருந்து எடுத்து தரையில் வைக்கப்பட்டிருந்தது. குழந்தை முருகனின் புகைப்படம். அது மாட்டப்பட்டிருந்த ஆணியில் ஏதோ ஒரு காகிதம் இருந்ததற்கான சான்றாய் அதன் மீதப்பகுதி ஒட்டிக் கொண்டிருந்தது. அதீத பக்தி கொண்ட தாத்தா எதை முருகனுக்கு பதிலாக இங்கே வைத்திருப்பார் எனும் எண்ணம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆணியையும் அதன் மீதிருந்த தாளையும் வருடிக் கொண்டிருக்கும் போது அப்பாவின் குரல் வாசல் பக்கத்திலிருந்து கேட்டது.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் பேரனை பார்க்க விரும்புவதாகச் சொன்னதால் அழைத்திருந்தார். இம்மாதிரி நேரத்தில் தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கடிந்து கொண்டார். வருபவர்களின் முகமனுக்கு புன்னகைக்கவா அல்லது சோகமாக வைக்கவா என்றே தெரியமல் குழம்பி நின்றேன். சிலர் என்னிடம் ஆறுதல் கூறினர். அப்பாவிற்குள் இருக்கும் இழப்பை உனது வாழ்வே ஈடு கட்டும் என முதுகைத் தட்டித் தேற்றினர். தெருவாசிகள் பலர் இது போன்ற வசனங்களை என்னிடம் சொல்லி பின்வாசலுக்குச் சென்று பிறருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுள் பலர் தாத்தாவிற்கும் அத்தெருவிற்குமான உறவை பேசிக் கொண்டிருந்தனர்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளுடன் வேங்கட கிருஷ்ண சாஸ்திரிகள் அத்தெருவில் குடி வந்தார். வந்ததிலிருந்து வீட்டிற்குள் அடங்கிய குடும்பமாகவே அவர்கள் இருந்திருக்கின்றனர். பின் தெருவாசிகள் ஒன்றிணையும் பண்டிகை காலங்களில் நிகழும் கோலப்போட்டிகள் போன்றவற்றில் கலந்து உரையாடத் துவங்கியிருக்கின்றனர். இவர்களால் சச்சரவுகள் அதிகம் தெருவில் இல்லை. அவருக்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்பதால் எப்போதாவது தெருவிற்கு அப்பாலிருந்த அரசமரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் சமயத்தில் அங்கே அமர்ந்து ஜோசியம் குறித்தும், பாகவதம் குறித்தும் பேசுவது அவருக்கு வாடிக்கை. சிலர் அவர் நன்கு கதை சொல்கிறார் எனும் காரணத்திலும் வந்திருக்கின்றனர். புதிதாக கோவில் கட்டியவுடன் அவர் அடிக்கடி செல்வதால் பலர் ஜோசியம் கேட்க வந்திருக்கின்றனர். ஆனால் பாட்டி இறந்தவுடன் யாருக்கும் அவர் எதிர்காலத்தைச் சொல்லவில்லை. மேலும் மாலதியைப் போன்று சிறு சிறு தெரு வியாபாரிகளுக்கான மூலதனத்தை கொடுத்து உதவியிருக்கிறார். இவை பெரும்பாலும் பாட்டியின் மரணத்திற்கு பின் நிகழ்ந்ததாக சில அளவளாவினர். ஒவ்வொருவரின் கதைகளுக்கும் வீடு சாட்சியமாக, புன்னகைத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டேன்.

கூட்டம் குறையத் துவங்கியது. பலர் அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து வந்து அப்பாவிடமும் அத்தையிடமும் துக்கம் விசாரித்து சென்றனர். அவர்களின் வழியே பணியிடத்திலிருந்த தாத்தாவின் சித்திரம் சொற்களால் உருவானது. அதன் மீதான என் கவனம் குவியவில்லை. பலருக்கு என்னிடம் என்ன பேச என்றும் தெரியாமல் இருந்தது. என்னையே அறியாமல் அவர்களிடம் புன்னகை புரிந்தேன். அம்மா சற்று தொலைவிலிருந்து அம்மாதிரியான நேரங்களில் கண்களால் கண்டித்தாள்.

அவர் பணியிடத்திலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் சிறு கும்பலொன்று அப்பொழுது வீட்டிற்குள் வந்தனர். அவர்களுக்கு என்னிடம் என்ன பேச எனத்தெரியாமல் விழித்தனர். துக்கம் விசாரிப்பது எப்படி என்பதை நிச்சயம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று எண்ணினேன். அவர்களும் அதையே அவர்களுக்குள் கிசுகிசுப்பதாகவும் சந்தேகித்தேன். அவர்களுக்கு பின்னிருந்து பெண்மணி என்னை நோக்கி நடந்து வந்தார். தலை நரையேறியிருந்தது. அம்மாவின் வயதிருக்கலாம். அவர் அணிந்திருந்த முக்கால் கை பிளவுஸ் அவரை தனித்து நினைவுபடுத்திக் கொள்ள தோதாயிருந்தது. எல்லோரையும் போல என்னிடம் ஆறுதல் கூறி தேற்றினார். ஒவ்வொருவர் ஆறுதல் கூறும் போதும் எப்படி பதிலுரைப்பது எனத்தெரியாமல் விழித்தபடி இருந்தேன். இந்த பெண்மணிக்கும் அதே விழிப்பை பதிலாக கொடுத்தேன். தலையை மென்மையாக கோதினார். காதருகில் தேற்றிய குரலிலிருந்து சற்று மென்மையாக வினவினார்.

“பெரியப்பா வரலையா ?”

திகைப்பும் விழிப்பும் என் கண்களில் கூடின. பதிலுக்கு காத்திராமல் விடைபெற்றார். அம்மா வழியிலான பெரியப்பாக்களை பட்டியலிட்டேன். அதில் உயிருடன் இருந்தவர்கள் இரண்டு பேர். அதிலும் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். மற்றொருவர் வர இயலாததால் விஷயம் தெரிந்து அலைபேசியிலேயே துக்கம் விசாரித்தார். அப்பா வழியில் பெரியப்பாவே கிடையாதே! அப்பாவின் நெடுநாளைய நண்பர்கள் யாரையேனும் இப்படி கேட்கிறாரா எனும் சந்தேகம் முளைத்தது.

வந்திருந்த சிறு கும்பல் நோக்கி ஓடினேன். தன்னிடம் பேசிச்சென்ற பெண்மணி குறித்து விசாரித்தேன்.

அவர்கள் அந்த பெண்மணியை கவனிக்கவில்லை என்றும், அவர்களுடன் வந்தவர்களில் நான் குறிப்பிடும் பெண்மணி இல்லையென்றும் கூறினர். அதிர்ச்சி கூடியது. தெருமுனையை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என வாசல் நோக்கி ஓடினேன். பல செருப்புகள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக கிடந்தது. எனது செருப்பை அடையாளம் காண முடியவில்லை. அவசரத்திற்கு பாதகமில்லை, தெருமுனைவரை தானே ஓடப் போகிறோம் என்று தோராயமாக ஒரு செருப்பை அணிந்து கொண்டு ஓடினேன். சிலர் எனது ஓட்டத்தை வேடிக்கை பார்த்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு நான் ஓடுவதை கவனித்தனர். தெருமுனை சென்று சாலையை பார்க்கையில் சாலை ஆளரவற்று கருமை போர்த்தியிருந்தது. ஏமாற்றத்துடன் வீடு நோக்கி மெதுவாக நடந்து வந்தேன். அந்த சிறுகும்பல் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டில் புதிதாக யாரும் இல்லாமல் நாங்களும் அத்தையின் குடும்பமும் மட்டுமே மீதமாய் இருந்தோம்.

வாசலைத் தாண்டி நுழைந்தவுடன் அப்பா கோபத்துடன் கேள்வி கேட்கத் துவங்கினார்.

“எங்கருந்து இந்த செருப்ப எடுத்துட்டு போன ? யார் உனக்கு எடுத்து குடுத்தா ?”

அவரது கண்கள் அடிப்பதற்கு தயாராய் இருப்பதைப் போன்று கனன்றன. உடனே செருப்பை கழற்றி அதை கவனித்தேன். தாத்தாவின் செருப்பு.

“நேத்தே பத்திரமா எடுத்து உள்ள வச்சிருந்தோம். இப்ப எப்படி எடுத்துட்டு போன ?”

வாசலில் வைத்து அப்பா என்னைத் திட்டுவது அம்மாவிற்கு சங்கடமானது. செருப்பை வாசலிலிருந்து தான் எடுத்து சென்றேன் என்ற பதிலை யாராலும் நம்ப முடியாமல் போனது. என் ஓட்டத்தை வேடிக்கைப் பார்த்த தெருவாசிகளும் சிறுவர்களும் திட்டு வாங்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தாத்தாவின் பக்தி அறைக்குள் என்னை ஒடுக்கி கொண்டேன். அம்மா அவன் தெரியாமல் செய்திருப்பான் என்று அப்பாவை சமாதானப்படுத்துவது கேட்டவண்ணமிருந்தது. இருந்தாலும் சொல்லத் தோன்றியது அந்த செருப்பு என் காலுக்கும் பொருத்தமானதாயிருந்தது என. இறந்தவரின் செருப்பிற்காக இத்தனை களேபரங்கள் அர்த்தமற்றதாய் தோன்றிய தருணத்தில் இயல்பிற்கு திரும்பினேன். அந்த அறை என்னை தன்வசப்படுத்திக் கொண்டது.

***

ஹாலில் அம்மாவும் அப்பாவும் உறங்க, மற்றொரு அறையில் அத்தையும் அவர்களின் குடும்பமும் படுத்துக் கொண்டனர். தாத்தாவின் பக்தி அறையில் தூங்க தீர்மானித்தேன். அர்த்தமற்றது என்பதை உணர்ந்த பின்பும் அப்பாவின் மீதான கோபத்தை மௌனமாக தொடர்ந்தேன். உறக்கம் பிடிக்க நேரமானது. அறிந்திராத பெண்மணி சொன்ன பெரியப்பா எனும் சொல் மட்டும் வண்ணம் மண்டைக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது. சில நேரம் மறுநாள் காலையில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அத்தையிடம் கேட்கலாமா எனும் தர்க்கத்திற்கும் தீர்வு காண முயற்சித்தேன். அந்த இரவில் எப்போதும் இல்லாத வகையில் சுறுசுறுப்பாக உணர்ந்தேன். கிஞ்சித்தும் தூக்கம் வரவில்லை. கண்கள் விட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தன. பழைய டிரங்குப் பெட்டியும் பயன்படுத்தாத பித்தளை குண்டான்களுமாக சேகரமாகியிருந்த பரணைக் கவனித்தேன். அத்தை பள்ளிக்காலத்தில் வாங்கிய சின்ன சின்ன பரிசுப் பொருட்களும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்ன ஞாபகமும் எழுந்து மறைந்தது. நிறைய பொருட்களால் அறை அடைத்துக் கிடந்தது. காரணம் புரியாமல் டிரங்குப் பெட்டியின் மீது மட்டும் கவனம் குவிந்தது. பரணிலிருந்து சத்தம் எழுப்பாமல் கீழிறக்க விரும்பினேன். மின்விசிறியின் வேகத்தை முடுக்கினேன். அதன் கீறிச்சிடும் ஒலி அறையை நிறைத்தது. அறையிலேயே வைக்கப்பட்டிருந்த, சிலந்தி வலை படர்ந்த பழைய ஏணியை சுவரில் சாய்த்தேன். கடும் கனம். உள்ளே பாத்திரங்கள் இருப்பின் நம் செயல் அம்பலமாகி விடும் எனும் பயமும் தொற்றியது. மெதுவாக ஏறி டிரங்கு பெட்டியை கீழிறக்கி வைத்தேன். நிற்க வைத்தால் நான்கரை அடி வரும். தடிமனாகவும் இருந்தது. வயதிலும் மூத்தது என்பதை அதன் துருவேறிய மேல் பகுதிகளைப் பார்த்தாலே அறிய முடியும். சிறிது தூசியை மட்டும் தட்டிவிட்டேன். தாழினைத் திறக்கும் போது மீண்டும் கீறிச்சிடும் சப்தம் அதிகமானது. பெருமாளுக்கு அருகிலிருந்த விளக்கிலிருந்து சிறிதளவு எண்ணையை தடவி சப்தம் எழுப்பாமல் திறக்க முயற்சித்தேன். ஆனாலும் சப்தம் எழுந்த வண்ணமிருந்தது. வெளியிலிருந்து யாரும் சப்தத்தால் வரவில்லை எனும் எண்ணம் ஆசுவாசமளித்தது. பெட்டிக்குள்ளும் தாத்தாவின் பால்ய குப்பைகள். பணி செய்த இடங்களில் கிடைத்த வெகுமானங்கள், அடையாள அட்டைகள், அவருடைய பெற்றோர்களின் புகைப்படம், அவருடைய திருமண புகைப்படம், அப்பாவின் சிறுவயது புகைப்படம். அதை மட்டுமே வெகுநேரம் வெறித்து பார்த்தேன். எனது ஜாடையுடன் ஒத்துப் போனது. கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது போன்று தோன்றியது. அப்பாவின் முகம் நன்கு மாறியிருக்கிறது என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யம் பன்மடங்காகியது. கிடைத்த கடிதங்கள் அனைத்தும் பாட்டிக்கு எழுதியவை. வாசிக்கையில் சுவாரஸ்யமாக ஒன்றுமே எழுதப்படவில்லை. முழுக்கடிதமும் வீட்டாரின் நலம் விசாரித்தலிலும் தெருவாசிகளின் நலம் விசாரித்தலிலுமே கழிந்திருந்தது. அதில் அவர்களுக்கு என்ன சுகம் கிடைத்திருக்கும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மேலும் துழாவியதில் சில பழைய வேட்டியும் சில சட்டைகளும் அடுக்கப்பட்டிருந்தன. அவை எனக்கு பொருத்தமாய் இருக்கும் என்பதை விரித்துப் பார்க்கையிலேயே தெரிந்து கொண்டேன். அப்பா கடிந்து கொள்வாரோ என மீண்டும் மடித்து வைத்தேன். அப்பாவின் இளவயது புகைப்படம் மட்டுமே அந்த டிரங்குப் பெட்டி என் எதிர்பார்ப்பிற்கு செய்த பதிலியாக இருந்தது. அதை பெட்டி மேலேயே வைத்துவிட்டேன். களைப்பு உடலை போர்த்தியது. பெட்டியை காலையில் மேலே வைக்கலாம் என ஓரமாக வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தேன்.

-2-

“அண்ணி வேதாத்ரி கிட்ட நேத்து ஏதாவது பழய சமாச்சாரங்கள பேசினேளா ?”

“என்னடி உளர்ற… இருக்கர வேலைய செய்யவே நேரம் பத்தலைனு அல்லாடிண்டு இருக்கேன். இதுல அவங்கூட பேச்சா.. அவன் போரடிக்குதுனு சொல்லிடுவானோன்னு பயந்துண்டே இருந்தேன். நல்லவேளை அவன் பாட்டுக்கு எதையோ மொபைல்ல செஞ்சிண்டு இருக்கான்”

ஜனனி அத்தைக்கு அவ்வார்த்தைகள் போதுமானதாய் இல்லை. முகம் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் இயலாமல் தவித்தது. செயற்கையாக சிரித்து சிறிது நேரம் மௌனம் காத்தாள். பின் அண்ணியை இழுத்துக் கொண்டு வேதாத்ரி உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றாள். அத்தையின் கணவர் ஶ்ரீநிவாசனும் அண்ணன் நவநீதனும் உறங்கிக் கொண்டிருந்தது அத்தைக்கு பதற்றமற்ற நிலையை கொடுத்தது. வேதாத்ரி இரண்டு கைகளையும் மார்பின் மீது பிணைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான். புருவங்கள் இயல்பிற்கு சற்று மேலேறியதாகப் பட்டது. அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் அத்தை அவன் உறங்கும் விதத்தைக் கண்டு மீண்டும் பிரமித்துப் போனாள். உடன் வந்த அண்ணிக்கு அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த டிரங்குப் பெட்டியைக் காண்பித்தாள்.

“நைட்டு சத்தம் வராம எப்படி எடுத்து வச்சானு தெரியல அண்ணி. உங்களுக்கு எதாவது சத்தம் கேட்டுச்சா ?”

இரவின் தூக்கத்தினிடையில் சப்தம் ஏதேனும் வந்ததா என யோசித்தாள். களைப்பு தீர உறங்கியது மட்டுமே நினைவில் இருந்தது. பரணையும் ஏணியையும் கீழிறக்கி வைத்து அதை ஓரத்திற்கு தள்ளும்போது ஏற்பட்டிருந்த துருவின் தடத்தையும் நோட்டம் விட்டாள். சப்தம் வராமல் போனதன் ஆச்சர்யத்தில் இருவரும் மிரண்டிருந்தனர். அதைக் களையும் விதமாய் அத்தை வேறொரு விஷயத்திற்கு அஞ்சினாள்.

“அண்ணா எந்திரிக்கறதுக்குள்ள இத மறைச்சிடலாம். இல்லைன்னா அவர் நன்னா கோப்படுவார்”

அண்ணியும் ஆமோதித்தாள், அருகிலிருந்த ஜமக்காளத்தை எடுத்து டிரங்கு பெட்டியின் மீது போர்த்திவிடலாம் என இருவரும் தீர்மானித்தனர். சாமர்த்தியமாக மீண்டும் மேலே வைக்க இருவருக்கும் தெம்பில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இம்முடிவை எடுத்தனர். ஜமக்காளத்தை போர்த்தும்போது டிரங்கு பெட்டியின் மீதிருந்த புகைப்படத்தை இருவரும் பார்த்தனர். அண்ணியைக் காட்டிலும் அத்தையிடம் தெரிந்த பிரமிப்பு பயம் கூடியதாய் இருந்தது.

“அவரோட சின்ன வயசு போட்டோவா… நன்னா இருக்கார். இத எங்கிட்ட ஒருதடவ கூட காட்டவேயில்ல! கோச்சிக்க ஒரு காரணம் கெடச்சிருக்கு. எந்திரிக்கட்டும்!”

அத்தை அமைதியாக இருந்தாள். ஜமக்காளம் விரித்த பின் அண்ணியிடமிருந்து அந்தப் புகைப்படத்தை வாங்கி இமைகொட்டாமல் பார்த்தாள்.

“இது அவர் இல்லை அண்ணி. கிருஷ்ணன். உங்ககிட்ட சொல்லியிருப்பாரே”

அண்ணியின் முகத்திலிருந்து சந்தோஷக்களை நொடிப்பொழுதில் நீங்கியது. ஜமக்காளத்தை வேகமாக விரித்துவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி வெட்கம் கொண்டாள். மீண்டும் சமையலில் இருந்த பதார்த்தத்தைக் குறித்த புலம்பலுடன் அறையை நீங்கினாள். சிறிது நேரம் அத்தை புகைப்படத்தையே பார்த்துவிட்டு அதை டிரங்கு பெட்டிக்கும் ஜமக்காளத்திற்கும் இடையில் சொருகி வைத்தாள். ஜமக்காளத்தை முழுபெட்டியையும் மறைக்கும் வகையில் சரி செய்தாள். சமையலறைக்கு சென்று அண்ணிக்கு உதவலாம் என முடிவெடுத்தாள். அறை நீங்குவதற்கு முன் பெட்டிக்கருகில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்கல் கால் விரலை பதம் பார்த்தது. அதன் திடீர் வலியில் இரண்டடி நொண்டியபின் சமையலறை சேர்ந்தாள்.

“அவன் அப்படியே அப்பா மாதிரி தூங்கிண்டிருக்கான் அண்ணி”

“கோந்தை தூங்கரத பார்க்கப்படாதுடி. அப்பறம் கொரக்களி எங்கயாவது கிழிச்சு உடப்போகுது பாரு”

அண்ணிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர சமையல் வேலையை அத்தையிடம் ஒப்படைத்தாள். அலுவல் விஷயமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொண்டிருந்தாள். இதுபோன்ற சமயங்களில் மட்டுமே அவர்களுக்குண்டான மொழியில் பேசமுடிகிறது என்பதை எண்ணியவாறே காய்கறியை அத்தை வதக்கினாள்.

“என்னடி கால்லெல்லாம் மஞ்சளா இருக்கு ? எங்க போய் ஈஷிண்ட ?”

அடிபட்ட விரல் முழுக்க மஞ்சள் நிறம் பாவியிருந்தது. விரல் நுனியில் பட்ட அடியில் விரல் முழுக்க பூசப்பட்ட மஞ்சள் ஆச்சர்யமாயிருந்தது. குனிந்து விரலைத் தடவினாள். கைகளிலும் மஞ்சள் படர்ந்தது. முகர்ந்து பார்த்தாள். புதிதாக இழைக்கப்பட்ட சந்தனத்தின் மணம். அண்ணியிடம் சொல்லலாமா வேண்டாமா எனும் பயமும் சந்தேகமும் உள்ளுக்குள் குமுறியது. அழைப்பு வருகிறது என்று அலைபேசியை எடுத்துக்கொண்டு வேதாத்ரியின் அறைக்கு மீண்டும் சென்றாள். சந்தனக்கல்லை தீண்டிப்பார்க்கையில் ஈரம் மேவியிருந்தது.

***

அண்ணி மௌனமாக சமைத்துக் கொண்டிருந்தாள். சந்தனக்கல்லின் ஈரமும் அதன் மணமும் அத்தையை நீங்காமலிருந்தது. கருவேப்பிலை மற்றும் கடுகின் வெடிப்பும் பின் காய்ந்த மிளகாயின் கமறலும் அத்தைக்கு இருமலைத் தூண்டியது. வெடிக்கும் சப்தத்துடன் ஏற்கனவே செய்து வைத்திருந்த சாம்பாரின் மீது  அவற்றை கவிழ்க்கும்போது சரசரவென அண்ணி பேச ஆரம்பித்தாள்.

“போட்டோ பாத்த ஒடன ஹாத்துக்காரரோனு மனசார கொஞ்சிட்டேன். அவர் இல்லைனு சொன்ன ஒடன ஒரு மாதிரி ஆயிடுச்சு. அவா அண்ணாவ பத்தி நல்லா சொல்லிருக்கார். அண்ணாவோ தம்பியோ! அது எப்பவோ சொன்னது. ஜாடை மாடையா தான் நெனவுல இருக்கு. தற்கொலை பண்ணிக்கற விஷயத்தையெல்லாம் மண்டைக்கு எடுத்துட்டு போகக்கூடாது. உனக்கு கூடவே பொறந்தவா. அப்பா மறைஞ்சதும் எல்லாரோட நெனப்பும் வந்திருக்கும். அதனால அதையே நெனச்சிண்டு இருப்ப. அதனால சொல்றேன். அவாளோட வாழ்க்கையையும் வாழ வேண்டியது நம்ம பொறுப்பு. இந்தா எடுத்துட்டு போய் வை. எல்லாரும் பஃபே மாதிரி சாப்பிட்டுடலாம். அப்படியே வேதாவ எழுப்பிடு. அவனும் பல் தேய்ச்சிட்டு சாப்பிடட்டும். நேத்தே ஒழுங்கா சாப்பிடலை”

அத்தையுடைய முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் நிறம் மங்காமல் இருந்தன. நெற்றிச்சுருக்கம் களையவில்லை. கைவிரல்களில் நுண்ணிய நடுக்கம் தெரிந்தது. அண்ணிக்கு உதவியாய் சில பாத்திரங்களை எடுத்துச் சென்று வைத்தாள். வேதாத்ரியை எழுப்பச் செல்லும் முன்பே எழுந்து அமர்ந்திருந்தான். அத்தையைப் பார்த்து புன்னகைத்தான். அவளுக்கு புன்னகை அச்சமளித்தது. இரு கைகளையும் பிசைந்து கொண்டாள். அவனுடைய தெளிவான கண்களும் கபடமற்ற புன்னகையும் ஒருபுறம் ரசிக்கும் வண்ணமிருப்பினும் அருகாமையில் போர்வைக்கடியில் இருந்த புகைப்படத்தின் நினைவு பயம் கொள்ளவே துரத்தியது. செயற்கையான முகபாவனைகளுடன் பல் விளக்கிவிட்டு சாப்பிட வரச்சொன்னாள். அவனும் படுக்கையை மடித்து தலையணை மீது வைத்துவிட்டு கொல்லை நோக்கி நடந்தான். அறையைக் கடந்தவுடன் அத்தை தன் கணவரையும் அண்ணனையும் உணவருந்த அழைக்கச் சென்றாள்.

சமையலறையைத் தாண்டும்போது அம்மாவிடம் பேச விரும்பினான். அம்மா நேரம் வேகமாக கடக்கிறது எனும் அவசரகதியில் பல் விளக்க துரிதப்படுத்தினாள். அவன் அசைவற்று நின்றான். அம்மாவை வெறித்துப் பார்த்தான். இமைகளின் சலனமற்ற பார்வை. தன்மீது நிலைகுத்தும் பார்வை ஒன்று கவிழ்கிறது என்பதை உணர்ந்து திரும்பும்போது மெல்லிய குரலில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தான்.

“அது தற்கொலை இல்லை”

***

நண்பகல் நேரத்திலும் வெயில் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. மாலை வாக்கில் மழை பெய்யக்கூடுமோ எனும் பேச்சு தெருவோரிடத்திலும், வீட்டிலும் பரவியது. கிளம்புவதற்குள் வீட்டை சுத்தப்படுத்தியாக வேண்டும் என்பதில் அண்ணியும் அத்தையும் மும்முரமாய் இருந்தனர். வீடு முழுவதும் கழுவி தேய்த்துவிட மாலதியை வரவழைத்திருந்தனர். வருவதாக சொன்ன பொழுது கடந்து அரைமணி நேரமாகியிருந்தது. அத்தையிடம் மாலதியை அழைத்துப் பார்க்கச் சொல்லி அருகாமையில் இருந்த கடைவரை சென்று வருவதாக அண்ணி கிளம்பினாள். தெரு தாண்டியவுடன் மாலதியின் வருகை நிகழ்ந்தது.

“என்ன இவ்ளோ லேட்டு.. நெறையா வேலை இருக்கு மாலதி. சுத்தமா கழுவி வச்சிட்டா பூட்ன பெறகு தொந்தரவு இருக்காதில்லையா”

மாலதியும் ஆமோதித்தாள். துடைப்பத்தை எடுத்து முதலில் ஹாலை சுத்தம் செய்தாள். வீட்டிலிருந்த ஆண்கள் சுத்தம் செய்து முடிக்கும் வரை வெளியிலிருக்கலாம் என்றவுடன் நவநீதனும் ஶ்ரீநிவாசனும் கொல்லைப் பக்கம் சென்றனர். வேதாத்ரியும் அவர்களுடன் வெளியில் இருக்கச் சொல்வது உதவியாய் இருக்கும் என்று அத்தை எண்ணினாள். அவன் தாத்தாவின் அறையில் அமர்ந்து பென்சிலால் வரைந்து கொண்டிருந்தான்.

“என்னடா சின்ன பையனாட்டம் வரைஞ்சிகிட்டு இருக்க. பின்னால செத்த நேரம் அப்பாவோட இரு. மாலதியக்கா க்ளீன் பண்ண ஒடன வரலாம். எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு போ”

சமையலறையில் கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அடுக்கி வைப்பதற்கான வேலைகள் காத்திருப்பில் இருந்தன. நவநீதன், ஜனனி இருவருமே ஊர் திரும்புவதற்கான சீட்டை விரைவில் எடுத்திருந்தனர். அலுவலகத்தில் நால்வருக்கும் விடுப்பு கிடைக்காததால் மீதமிருக்கும் பணிகளில் துரிதம் காட்டினர். மாலதி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு சமையலறை வந்தாள். மெல்லிய குரலில் ஜனனியை அழைத்து தன் இடுப்பிலிருந்து சிறிய காகிதத்தை நீட்டினாள். ஜனனியின் புருவங்கள் சுருங்கின. சந்தேகத்தின் ஜாடை நெற்றியின் மத்தியில் குமிழ் கொண்டது.

“ஐயா எறக்கறதுக்கு முன்னாடி இதையேதான் பாத்துகிட்டு இருந்தாரு. இது யாருன்னு எனக்கு அடையாளம் எதுவும் தெரியலை. அவர்கிட்ட கேட்டப்ப கூட அமைதியா இருந்துட்டாரு. நெறையா பேரு வர்றப்ப இத பாத்து தப்பா எதுவும் நெனச்சிரக்கூடாதுல்ல. அதான் எடுத்து வச்சிட்டேன். தனியா இருக்கறப்ப குடுக்கலாம்னு இருந்தேன்மா”

ஜனனிக்கு அந்த காகிதத்தில் இருந்த கிறுக்கலும், அதன் இடையில் தெரிந்த முகமும் புரியாமல் போனது. கூர்ந்து கவனித்தாலும் யாருடைய முகம் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. அதில் முகமும் தெளிவாக இல்லை. பென்சிலால் கிறுக்கியிருந்ததன் இடையே ஒரு பெண்ணின் முகம். அல்லது பெண்ணைப் போன்றதொரு முகம். அப்பா வரைந்து என்றேனும் பார்த்திருக்கிறோமா என்று யோசித்து பார்த்தாள். அம்மா இல்லாத நேரங்களில் வாசலில் அப்பா இடும் குட்டி கோலம் மட்டுமே நினைவில் எழுந்தது. காகிதத்தை மடித்து வைத்துக்கொண்டு மாலதி பெருக்குவதிலும் ஜனனி துடைப்பதிலும் கவனம் செலுத்தினர்.

பாத்திரங்கள் முடிந்து அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் மேடையின் மீது அடுப்பும் காகிதமும் மட்டும் இருந்தது. அந்த காகிதம் வேறு சில நினைவுகளை ஜனனியிடம் மீட்டது. வேகமாக அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள். வேதாத்ரி வரைந்து கொண்டிந்த நோட்டு புத்தகத்தை எடுத்தாள். ஒவ்வொரு பக்கமாக திருப்பிப் பார்த்தாள். விதவிதமாக வீடு வரைய முயன்று கொண்டிருந்தான். கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த சில வீட்டுப்பாடமாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சில பக்கங்கள் கிழித்து கசக்கப்பட்டு புத்தகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. அதையும் அவசரமாக எடுத்து விரித்து பார்த்தாள். அவையும் கோணலாக சென்ற கோடுகளின் காரணமாக கிழிக்கப்பட்டிருந்தன. மாலதி கொடுத்த காகிதத்தின் மாதிரி இங்கிருக்குமோ என்று அவள் கொண்ட அச்சம் இல்லாமலானது நொடிப்பொழுதில் தோன்றிய மனக்களைப்பை நீக்கியது. நோட்டையும் பென்சிலையும் அங்கே வைத்துவிட்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு அறையை நீங்கினாள்.

***

மதியம் மூன்று மணியளவில் லேசான தூறலில் தெரு நனைந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்கள் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று மாலதி காத்திருந்தாள். அண்ணி மாலதியின் மதிய உணவிற்கு பின் அவ்வீட்டில் இருந்த கடவுள்களின் புகைப்படங்களை கழற்றி துடைத்து, பின் தனியே ஓரிடத்தில் அடுக்கி வைக்கச் சொன்னாள். அனைவருக்கும் தேநீர் கலந்து ஹாலில் அமர்ந்திருந்தனர். ஆடவர்கள் அவர்களுக்குண்டான பேச்சை ஆரம்பித்தனர். வீட்டின் பாகப்பிரிவினை குறித்த பேச்சு தீவிரமானது. அன்று மாலை ஆடிட்டரும் வக்கீலும் வருவதாகவும் பிரிவினையை சமபங்காக பிரித்துக்கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டனர். அத்தையின் மனதில் தனக்கான பங்கு கிடைக்காமல் போய்விடுமோ எனும் எண்ணம் வலுத்து இருந்தது. மாலையில் நிச்சயம் கணக்கு சொல்லப்படும் எனும் எதிர்பார்ப்பு மீதமாய் இருந்தது. அதே வேளையில் இவ்வளவு வேகமாக பிரிவினை வேண்டுமா எனும் கேள்வியும் பதிலற்று ஜனனியுள் கிடந்தது.

அனைவரும் சேர்ந்தே இருந்ததால் அதை தன் கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். வேதாத்ரியின் மௌனம் அவ்வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிகரித்து இருந்தது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணியிடம் விசாரித்த போதிலும் அவனுக்கு வீட்டின் அமைதி காரணமாக அப்படி இருக்கலாம் என சமாளித்தாள். அருந்திய தேநீரின் கோப்பையை திருப்பி வைக்க வரும்போது அவனுடன் பேச விரும்பினாள்.

“ஏன் வேதா அமைதியா இருக்க ? சாப்பிட எதாவது வேணுமா ?”

இறுக்கமான முகமும் ஒற்றை சொற்களாலான பதிலும் ஜனனியை கூடுதலாக சங்கடப்படுத்தியது.

“நீ எப்பவுமே இப்படி அமைதியா இருக்க மாட்டியே டா… கலகலனு கலாய்ச்சிகிட்டு இருக்கற நீ என்ன அமைதியா இருக்க ? ஆதித்யாக்கு லீவு கெடச்சிருந்து வந்திருந்தா இவனுக்கு துணையா இருந்திருக்கும்”

ஜனனியின் மகன் ஆதித்யாவின் நினைவை சிட்டிகை அளவில் அண்ணியுடன் பகிர்ந்துகொண்டாள்.

“நான் அமைதியா இல்ல அத்தை. நெரந்தரமா அமைதியானவங்களுக்கும் சேத்து பங்கு போட சொல்லுங்க. போடலைனா அப்பவும் அமைதியா இருக்க மாட்டேன்”

அத்தையின் உடல் புல்லரித்தது. கண்கள் பயத்தில் விரிந்தன.

“என்னடா லூசு மாதிரி உளறிகிட்டு இருக்க. போ போய் எதாவது சின்ன வேலையா எடுத்து பண்ணு”

அண்ணியின் குரல் அர்த்தமற்றதாய் அத்தைக்கு பட்டது.

***

சொத்து பிரித்தலில் ஆண்களின் குரல் ஓங்கியிருந்தது. அண்ணியும் அத்தையும் வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர். மதியம் வேதாத்ரி சொன்ன விஷயத்தை பேச்சில் எடுக்கலாமா எனும் தர்க்கத்தில் குழம்பியிருந்தாள். மாலதி தனக்கு சொல்லியிருந்த பணியை பாகப்பிரிவினையை ஒட்டுக்கேட்ட வண்ணம் செய்து கொண்டிருந்தாள்.

வந்திருந்த முக்கியஸ்தர்கள் கணக்கு வழக்கு தெளிவாக எழுதி இரு பங்காக பிரிக்கும் பட்சத்தில் யார் யாருக்கு எப்படி பிரிக்கப்படும் எனும் விவரத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். மொத்தத்தை ரொக்கமாக மாற்றும் பட்சத்தில் எவ்வளவு என்பதையும், பொருளாகவே எடுக்கும் பட்சத்தில் எப்படி பிரிக்கப்படும் என்பதையும் விளக்கினர். கைகளை பிசைந்து கொண்டிருந்த ஜனனி வெடுக்கென குரலை உயர்த்தினாள்.

“ரொக்கமாகவே பிரிச்சுக்கலாம்”

அண்ணனின் குரலில் ஏளனம் கூடியது.

“நல்ல வீட வித்து காசாக்கலாம்னு நெனக்கிறியா? அப்பா பக்தியோட இருந்த எடத்த யாரோ ஒருத்தருக்கு குடுத்து அசிங்கமாக்க முடியுமா?”

“யாரோ ஒரு மனுஷாளுக்கு தான குடுக்கப்போறோம். அதுல என்ன பிரச்சின இருக்கு?

“வீட்ட நான் எடுத்திடுவேனோன்னு உனக்கு சங்கடம் இருக்கு. மூஞ்சிலயே தெரியுது. கவலை வேண்டாம். வீட்ட நீயே வச்சுக்கோ. ஆனா வீட்ட விக்க வேண்டாம். அதுதான் எனக்கு”

தன்னை மூன்றாமவர்களின் முன் கேலியாக பேசியது ஜனனிக்கு வருத்தமளித்தது.

“இதனால நமக்கு சண்டை வர வேண்டாம்னு தான் நான் ரொக்கமா கேக்கறேன். ரெண்டு குடும்பத்துக்கு கடன் நெறையா இருக்கு. கடன்ல நீ ஒசத்தி நான் கம்மினு பாக்க நாம இங்க வரல. கெடச்சத வச்சி அவா அவாளோட சௌரியத்த முடிவு பண்ணிக்கலாம். அதனால தான் ரொக்கமா வேணும்னு கேக்கறேன்”

அண்ணனின் குரல்வளை கடுமையானது. பேச எழுவதற்குள் கண்ணாடி உடையும் சப்தம் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. தாத்தாவின் அறையிலிருந்து வந்த சப்தத்தில் அத்தையின் பயம் பிறரைக் காட்டிலும் கூடியது. அறைக்குள் விரைந்தாள். கைதவறி கீழே போட்டுவிட்டதாக முகத்தை சோகமாக மாலதி வைத்துக்கொண்டாள். அவளுடைய கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவளுக்கு பின்னே கண்ணாடி சில்லுகள் உதிந்திருந்தன. அண்ணி அவள் கைவசமிருந்த முருகனை பொருட்படுத்தாமல் சொத்து பிரச்சினைக்கு நகர்ந்தாள்.

“வேதா இங்கதான் தூங்கறான். அதனால லைட்டு போட்டு சுத்தமா க்ளீன் பண்ணிடு. வேற எதையும் இப்படி உடைச்சிடாத”

சத்தமாக கூறிவிட்டு மீண்டும் பாகப்பிரிவினை குறித்த உரையாடலுக்கு நகர்ந்தாள். அண்ணி பேசும் வரையிலும்கூட அத்தையின் பார்வை மாலதியின் கண்களில் நிலைகுத்தி நின்றது. மாலதியின் கண்கள் யாரையோ பார்த்ததன் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. கைகளில் நடுக்கத்துடன் இறுக்கமாக முருகனின் புகைப்பட சட்டகத்தை பிடித்துக் கொண்டிருந்தாள்.

“கைல பிடிச்சிருக்க. ஆனா கண்ணாடி சில்லு உனக்கு பின்னாடி எப்படி ஒடைஞ்சிருக்கு ?”

மாலதி அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள். அருகில் சென்று உலுக்கியும் பதில் ஏதும் கூறாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். முருகன் மாட்டப்பட்ட ஆணியில் பென்சிலால் கிறுக்கப்பட்ட பெண்ணின் முகம் வைக்கப்பட்டிருந்தது. காரணம் புரியாமல் அத்தைக்கும் அழுகை வந்தது. அதைக் கிழித்து மடித்து வைத்துக் கொண்டாள். வெடித்து அழத்தோன்றியும் வெளியில் சொல்லமுடியாமல் அழுகையை முழுங்கினாள். மாலதி அறையை நீங்கியவுடன் கண்களை துடைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

***

மாலையில் பாகப்பிரிவினைக்கு நிகழ்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சில மாதங்களுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் நால்வருள்ளும் மூண்டது. அன்று இரவு உறங்கும் முன் ஜனனியும் அவளுடைய கணவர் புருஷோத்தமனும் மொட்டை மாடிக்கு சென்று உலாத்திக் கொண்டிருந்தனர். குடும்பம் பிளந்துவிடுமோ எனும் அச்சத்தை மொட்டை மாடியில் புருஷோத்தமனும் வெளிப்படுத்தினார்.

“அவனுக்கும் சொத்துல பங்கு வைக்கணும்னு கேட்டது வார்த்தை அளவுல நியாயமா இருக்கு. ஆனா யாருக்கு குடுப்ப ? அவனுக்குனு அவன் பங்க வாங்க யார் இருக்கா ?”

“பித்ருக்களுக்குனு சோறு வக்கறோம். எப்பவோ நாம ஆரம்பிச்சத இப்ப ஊர்ல இருக்குற எல்லாரும் வைக்கறா. அதெல்லாம் சாப்பிடறது காக்கா தான். ஒரே காக்கா பலரோட பித்ருவா மார்றது. அப்ப அந்த பங்க எப்படி அர்த்தப்படுத்துவேள் ?”

“அது ஒரு கரண்டி சாப்பாடு தான ? அதுக்கும் இப்படி வீட்ட பிரிக்கறதும் எப்படி சமமாகும் ஜனனி ?”

“சமைக்கும் போது அந்த சோ கால்ட் காக்கா இருக்கறதில்ல. ஒருவேளை கத்திண்டு இருந்தாகூட வேற ஒரு காக்காகூட வந்து சாப்பிடுது. யாரோ ஒரு காக்காக்கு நம்ம போடுற ஒரு கரண்டி சோறு போதும். “

புருஷோத்தமன் குழம்பினார்.

“மனுஷா இறக்கும் போது சகலத்துலயும் அவருக்குனு இருந்த பங்கு உலகத்துல இருக்குற யாருக்காவது போகணும்னு ஒரு கணக்கு. அப்படி கிருஷ்ணனோடது போகலாம்ல ? இல்லாதவா லோகத்துல இல்லவே இல்லையா என்ன ? அப்படி இல்லைனு நெனச்சா தப்பு உலகத்துலயா பாக்கற பார்வைலயானு அடுத்த கேள்வி கேப்பேன்”

“அதுக்கு வீட்ட பங்காதான் போடணுமா ? வீட்ட ஒடைக்கற மாதிரி இல்ல ஆகுது. அங்கயே நீ கேக்கறது அபத்தம்னு சொல்ல நெனச்சேன். உங்கண்ணா முன்னாடி உன்ன விட்டுக்குடுக்கக் கூடாதுனு அமைதியா இருந்துட்டேன்.”

கணவனின் பெருந்தன்மை ஜனனிக்கு மகிழ்ச்சியளித்தது. அச்சொற்கள் இரவின் குளிரை உணர வைத்தது. தொடர்ந்து நினைவுகளை அடுக்கவும் அந்த வானிலை உதவியாய் அமைந்தது.

“இந்த வீடு யாருக்கும் போகக்கூடாதுனு தான் நான் அப்படி சொன்னேன்.”

“அண்ணன் சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கே. அப்பா வாழ்ந்த இடம் ஒரு காரணம். அவரோட பக்தி நெறைஞ்ச வீடு இன்னொரு காரணம். அத இன்னொருத்தர் கிட்ட குடுக்கறது ரொம்ப கஷ்டம் மா”

“உங்க ரெண்டு பேரோட கணக்கும் இந்த வீட புண்ணிய பூமியா ஆக்குது. எனக்கு இது ஒரு பாவ மூட்டை தான். கிருஷ்ணனுக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்லை. அவன் இந்த வீட்டை பாத்தது கூட இல்லை. அவன் போனதுக்கப்பறம் தான் இங்க வந்தோம். இன்னமும் தெளிவா சொல்லணும்னா அவனோட தற்கொலைக்கு அப்பறம் அத வெளிய சொல்ல முடியாம ஓடி வந்தாரு அப்பா. அப்ப எனக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு கிருஷ்ணன விட ஒரு வயசு கம்மி. என்ன பேச முடியும்! அப்பா பின்னாடியே போகறது தான் எங்களோட வேலைனு வந்துட்டோம். இப்ப யோசிச்சு பாக்கும் போது ஒரு கோழைத்தனத்த மறைக்க இன்னொரு கோழைத்தனம்னு அப்பா செஞ்சிகிட்டே இருந்துருக்காரு”

புருஷோத்தமனுக்கு அவள் கூறும் கதை மேலும் குழப்பமானது. குளிருடன் இணைந்த மெல்லிய காற்று கைகளை கட்டிக்கொள்ள பணித்தது.

“எனக்கு ரொம்ப சின்ன வயசு. கிருஷ்ணன் அண்ணனுக்கும் அப்பாக்கும் வாக்குவாதம் தெனமும் நடக்கும். அப்பாக்கு கணீர்னு கொரல். அதனால ரொம்ப கத்துவாரு. கீழ் சாதிக்காரனோட பொண்ண காதலிச்சது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அண்ணன் அந்த வீட்ல போய் சம்மதம்லாம் வாங்கிட்டு வந்துருக்காரு. அப்பாக்கு துளியும் சம்மதமில்ல. சாதிய ஒரு அடி எறக்க கூட திராணியில்ல. நாள் கணக்கா வீம்பு. அண்ணனும் ஏதோ ஒரு கணத்துல அப்பாவ விடவும் மனசில்லாம அவளையும் விட மனசில்லாம ரெண்டு பேருக்கும் தான் வேண்டாம்னு முடிவெடுத்துட்டாரு. நான் நவநீதனோட வெளயாண்டத விட கிருஷ்ணனோட தான் க்ளோஸா இருந்துருக்கேன். கிருஷ்ணன் நெறையா பேசுவான்.”

இருவரும் கைகட்டிக் கொண்டனர். நிலவின் வெளிச்சம் மொட்டை மாடி முழுக்க பரவியது.

“கிருஷ்ணனோட இந்த முடிவுக்கு அப்பறம் சில வாரத்துலயே வீட்ட காலி பண்ண முடிவெடுத்துட்டாரு அப்பா. படிப்பு பாதிலயே க்ளோஸ். அப்ப காரணம் கேட்டாலும் அப்பாகிட்டருந்து மொறப்புதான் வரும். இந்த கதை கூட காலேஜ் படிக்கும் போது அம்மா சொன்னது தான். அம்மாக்குதான் வருத்தம் அதிகம்.”

இருவரும் மௌனமாக இருந்தனர். வௌவால்கள் மரக்கிளைகளில் இருந்து பறந்து வட்டமடித்து அதே கிளைக்கு திரும்பிக் கொண்டிருந்தன. சில காக்கைகள் மின்கம்பங்களின் மீது அமர்ந்திருந்ததை வேடிக்கைப் பார்த்தாள்.

“இந்த வீட்ட யார் வச்சிகிட்டாலும் அப்பாவோட கோழத்தனத்த சுமக்கறதுக்கு சமம்தான். ஒண்ணு புள்ளை முக்கியம்னு நெனச்சிருந்தா கிருஷ்ணனுக்கு அவன் விரும்புன பொண்ண கல்யாணம் செஞ்சி வச்சிருக்கணும். இல்ல சாதி முக்கியம்னு பட்ருந்துச்சுனா இறந்த பிறகு சாதிய கெட்டியா பிடிச்சிகிட்டு இருந்திருக்கனும். அதுவும் இல்லைன்னா புள்ளை எறந்த பிறகாவது சாதிய வுட்ருக்கணும். மூணும் இல்லை! அப்ப அவர எந்த நெலைல வக்க? சாதி அவருக்கு ஒரு சைகிக் அப்ஸெஷன். அவ்ளோதான். அதோட விளைவு ஒரு உயிர். அது போகாமயே இருந்திருக்கலாம்.”

பனி அதிகமானது. உறங்கச் செல்லலாம் என முடிவெடுத்து கீழிறங்கினர். சமையலறையில் இருந்த வாழைப்பழத்தை உண்டுவிட்டு தோலை கொல்லையில் வீசினர்.

“நாளைக்கு அண்ணன் மட்டும் தாத்தா சொத்து உயிரோட இருக்குற பேரனுக்கு அது இதுனு வாய் விடட்டும், சொத்தோட சேத்து பாவத்தையும் எடுத்துக்கோனு சொல்லப்போறேன். என் புள்ளைக்கு சொத்தும் வேணாம் பாவமும் வேணாம். ஆனா கிருஷ்ணனுக்கான பங்குக்கு பேசிகிட்டே தான் இருப்பேன்”

புருஷோத்தமன் அவளுக்கு துணை நிற்பதாக கூறினான். இருவரும் உறங்கச் சென்றனர். புருஷோத்தமனுக்கு மட்டும் எளிதில் உறக்கம் கிட்டவில்லை. ஜனனியின் பேச்சை நினைத்த வண்ணம் படுத்திருந்தான். இறுதியாக அவள் கூறியதில் எதை பாவம் எனக் குறிப்பிடுகிறாள் என்பதைச் சுற்றி நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன.

***

ஜனனியின் செவிகளில் சொற்கள் சூழ்ந்தன. குறைந்த ஒலியில் கணீர் குரல். புலம்பல் த்வனி. இடையிடையில் கண்ணாமூச்சி ஆடும் விசும்பல் சப்தம். மூச்சிரைப்பதன் அறிகுறியும் இணைந்து கொண்டது. ஜனனியின் முகத்தில் வியர்வை அரும்பத் துவங்கியது. கணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது உணர்ந்த குளிர் உடலை முற்றாக நீங்கியிருந்தது. கோடைகாலத்தின் இரவினையொத்த புழுக்கம் உடலை நெருக்கியது. எழுந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தாள். ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன் குடும்பத்தையும் சந்தேகித்தாள். அனைவரும் எந்த சலனமும் அண்டாத வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தனர். அண்ணனிடமிருந்து எழும்பிய குறட்டையும் கூர்ந்து கவனிக்கும்போது பெரிதாகக் கேட்டது. அதன் மீதிருந்த கவனத்தை விடுவித்துக் கொண்டாள். அறையில் பாவியிருந்த இருள் அச்சமூட்டியது. மீண்டும் முதலில் கேட்ட ஒலிகள் துல்லியமாய் கேட்டன. அப்பாவின் அறையிலிருந்து வருவதாக உணர்வது உண்மையா கற்பனையா எனும் பயத்தில் மூழ்கினாள். அறை பாதியளவு மூடியிருந்தது. உடலைச் சுருக்கி வேதாத்ரி உறங்கிக் கொண்டிருந்தான். அறையின் ஸீரோ வாட்ஸ் பல்பை எரியவிட்டாள். அதன் ஸ்விட்சை அழுத்தும்போது அவனுடைய விசும்பலின் ஒலி அதிகமானது. குளிரில் நடுங்கும் சிறுவனைப் போல் உடலும் உதறியதை கவனித்தாள். பயம் உடல் முழுக்க புல்லரிக்க வைத்தது. இருந்தும் அவனது நடுக்கம் அவன் மீதான கரிசனமாக மாறியது. வேகமாக அருகில் சென்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து போர்த்திவிட்டாள். பயத்தில் கைகள் நடுங்கின. அவனது சொற்களை கவனிக்க முற்பட்டாள்.

“குளுருது ஜன்னு. இன்னமும் கனமா எதாவது இருந்தா போத்துமா”

வேதாத்ரியை பார்க்க பார்க்க ஜனனிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்பா மட்டுமே அவளை அழைக்கும் ஜன்னு எனும் சொல்லை அவன் வழியே கேட்கையில் உவகையிலும் கண்ணீர் கூடியது. அவை பயத்தின் பாற்பட்டதா அல்லது வேதாவின் இள உடல் குளிரில் நடுங்குவதால் எழும் பரிதாபமா என்பதை உணரவியலாமல் குழம்பினாள். அவனது தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். பேச முயன்றாலும் குரல் நினைவுடன் கைகூடவில்லை. நடுங்கிய குரலில் சொற்களை வெளியேற்றினாள்.

“அப்பா”

சொல்லி முடிப்பதற்குள் பயம் கவ்விக்கொண்டது. அவள் பேசிய மாத்திரத்தில் வேதா வெடித்து அழுதான். தாரைதாரையாய் கண்ணீர் பெருகியது.

“அன்னிக்கு மாதிரியே ரொம்ப குளுர்றது ஜன்னு. அன்னிக்கு போத்திண்டிருக்க விரும்பல. இன்னிக்கு ஒடுங்கி உக்காந்துக்க நெனைக்கறேன். எலும்பை எல்லாம் பதம் பார்க்கறது இந்த குளிர். ஒரே கிருஷ்ணன் ஞாபகமா இருக்கு. அன்னிக்கு அன்னிக்குனு சொல்றேன். ஆனா ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் ராத்திரி மாதிரியே பயத்தோட இருக்கேன். எத்தனை நாள் அழுதான். மனசுல ஒரு பொண்ண வச்சுண்டு, அவளையும் விடாம என்னையும் விடாம எப்படியாவது சம்மதிப்பேனு காத்துண்டு இருந்தான். வேதாந்தம் வாயோட போயிடுச்சு. ஒரு க்ஷணம் அவனுக்காக யோசிச்சிருந்தேன்னா இன்னிக்கு உயிரோட இருந்திருப்பான். நானே என் கையால அவன் போஜனத்துல கலந்தேன். சாப்பிடறதையும் பாத்தேன். தூங்கப்போகும்போது தான் நான் செஞ்சது தப்புனு தெரிஞ்சது.”

வேதாத்ரியின் தலைமுடியை கோதிக்கொண்டிருந்த ஜனனியின் கைகள் நின்றன. அவனுடைய பேச்சு அதிகரிக்க அதிகரிக்க தலையிலிருந்து கை விலகிக்கொண்டே சென்றது.

“தூங்கவேயில்லை. அவனையே பாத்துண்டு இருந்தேன். சத்தமில்லாம அழுதேன். பிரயோஜனமில்லாத அழுகை. கிருஷ்ணன் அசையவேயில்லை ஜன்னு. கல்லு மாதிரி கெடந்தான். நடுராத்திரி எழுப்பி எதாவது பண்ணுதாடானும் கேக்க நெனச்சேன். எழுந்திருச்சுட்டான்னா என் மானம் போகுமேனு ஒரு பயம். அபத்தம். எல்லாமே அபத்தம் ஜன்னு. அவனுக்குள்ள அவன் உயிர் ஒடுங்கறத நான் பாத்துண்டே இருந்தேன். பாபகர விமோசனம்னு சொல்லுவா. அது ஒரே ஒரு பாவம் செஞ்சவாளுக்கு. நான் பாவத்தை செஞ்சிண்டே இருந்திருக்கேன். விமோசனமே எனக்கு இல்லைமா. கொலை செய்ய தைரியமில்லை. என்னோட உயிர மாய்ச்சுக்கவும் தெரியலை. ஆனால் அவன் சாகறத வேடிக்கை பாத்திருக்கேன். பாத்துண்டே இருந்துருக்கேன். போனதுக்கப்பறம் ஒவ்வொரு நாளும் அதையே தான் பாத்திருந்திருக்கேன். மாபாவம். மாபாவம்.”

புலம்பலினூடே வேதாத்ரியின் தலையை மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். முகம் அதிர்ச்சியில் வெளிறியிருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன. பயத்தை விட அருவருப்பு உடலை மேவியது. அறையை நீங்க மெதுவாக நடந்தாள். அவளுக்கு பின்னே வேதாத்ரியின் குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

“அவளுக்கு இன்னமும் கல்யாணம் நடக்கலை. அவனுக்காகவே அவ இருக்கா. கிருஷ்ணனோட பாக்க வேண்டிய அவளை தனியா, முதிர்கன்னியா பாத்தேன். என் பாவம்தான் அவளோட வாழ்க்கை. அவதான் என் குற்றம். நான் அந்த குற்றத்தோட வெறும் நிழல். எங்கிட்ட எதுவும் கேக்கலை. ஒரே ஒரு புன்னகை செஞ்சா. தெனம் தெனம் நான் தரிசனம் செய்ற லலிதாம்பிகையோட புன்னகை. பேரிடியா கேக்குது. தொண்டையோட இடைல கட்டியா வந்து தடுக்குது. கட்டிய கரைக்க லலிதாம்பிகை கிட்ட தான் பிராயச்சித்தத்த கேக்கணும். இல்ல. இல்ல.

தெய்வம் மானிஷ ரூபேனா…

அவதான் லலிதா…

அவன் தான் அந்த கட்டி..

அவ தான் அதுக்கான தீர்வு…

அதையும் நானே தேடிண்டேன்.. கிருஷ்ணனுக்கு குடுத்த அதே பிரசாதம்…”

வேதாத்ரியின் கைகளிலிருந்து கண்ணாடிக்குடுவை உருண்டு அறை நீங்கிக் கொண்டிருந்த ஜனனியின் பின்பாதத்தைத் தீண்டியது. வெகுநேரத்திற்கு பிறகு மீண்டும் கால்களிலிருந்து புல்லரிப்பு உடலேறியது. குனிந்து எடுத்தாள். கிருஷ்ணன் மறைந்த ஆண்டிலிருந்து ஓராண்டில் காலாவதியாகும் பூச்சி மருந்து. அதைப் பார்த்துகொண்டே அழுதாள். திரும்பி மீண்டும் வேதாவை அப்பா என்றழைக்க விரும்பினாள். திரும்ப மனமில்லை. கிருஷ்ணனின் மீதான ஞாபகங்கள் மூண்டன. மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். கைகளுக்குள் குடுவையை வைத்துகொண்டு தேம்பினாள். பின்னிருந்து வேதாத்ரியின் விசும்பல் தணிந்துகொண்டிருந்தது.

“தெய்வம் மானிஷ ரூபேனா…

தெய்வம் மானிஷ ரூபேனா..

தெ…ய்…வ…ம் மா…னி…ஷ… ன் ரூ…பே…னா…”

அறையின் இடுக்கில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரின் நிழல் அறைவாசலை நீங்கியது. நிழலின் நகர்தலில் எழுந்துகொண்டாள். வேகமாக படுத்துக்கொண்டிருந்த அறைக்கு சென்றாள். அறையை நீங்கும் முன்பே வேதாத்ரியின் குரல் ஒடுங்கியது. அறையில் புருஷோத்தமன் படுத்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்ததில் கண்களில் நீர் கசிந்திருப்பதன் தடம் தெரிந்தது. மருந்துக் குடுவையை இடுப்பில் கட்டிக் கொண்டு கிருஷ்ணனின் நினைவுகளை போர்த்திக் கொண்டாள்.

***

பாகப்பிரிவினை சுமுகமாக நிகழவில்லை என்பதால் இரு குடும்பமும் முடிவெடுக்காமல் கிளம்புவதில் மும்முரமாக இருந்தனர். வீட்டிலிருந்த அனைத்து சாவிகளிலும் குடும்பத்திற்கு ஒன்றாக பிரித்துக்கொண்டனர். அண்ணனும் அண்ணியும் ஆட்டோ புக் செய்து கிளம்பினர். அவர்களுக்கு முன்பாகவே பேருந்தில் செல்லலாம் என ஜனனியும் புருஷோத்தமனும் முடுவெடுத்தனர்.

புதிய பேருந்து நிலையத்திற்கான பேருந்தில் ஏறும்வரை அமைதியாகவே பயணித்தனர். பேருந்தும் கிளம்ப சற்று தாமதமானது.

“என்ன முடிவு எடுத்திருக்க ஜனனி ?”

“தெரியலை. ஆனா பயம்மா இருக்கு.”

ஜன்னலின் வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருப்பவர்களையும், கல்லூரிப் பிள்ளைகளின் சிரிப்பையும் வேடிக்கைப் பார்த்தாள்.

“அண்ணனோட எவ்ளோ நாள் சண்டை போட முடியும்னு தெரியல. எப்படியும் கடைசில என்னையும் நம்மளையும் ஏமாத்திட்டு வீட்ட எடுத்துக்குவான்.”

“யார் எடுத்துகிட்டா என்ன ? யாரோதான குடிவரப் போறாங்க ? இல்லை உங்கண்ணன் தேடிப்போய் வேற ஒரு பிராமணாள குடி வைக்க போறானா ?”

“யாரும் குடி வரக்கூடாது. யார் வந்தாலும் அதுக்குள்ளருந்து எங்கப்பா மாதிரி ஒரு ஆள் மொளைப்பான். அவன் பிள்ளைக்கு சாதி பாப்பான். வீட்ட சுத்தமா இடிச்சிட்டு பொது எடமாக்கணும். எல்லா விதமான மனுஷங்களும் பொழங்கற எடமாக்கணும்”

“அர்த்தம் இல்லாம, சாத்தியமில்லாதத பேசற. சுத்தி ரெசிடென்ஷியல் ஏரியா. எப்படி பொது எடம் ஆக்க முடியும்?”

“செடி பிசினஸ் பண்ணு. மரக்கன்னு வித்து பொழச்சுக்கோ. வாங்கறவன் விக்கறவன், அத அவனுக்கு தர்றவன்னு வேற வேற ஆளாதான இருப்பான். காய்கறி கடை வைக்க எடம் குடுப்போம். வீட்டுக்குள்ள உக்காந்து சாப்புடற யாரும் அந்த காய்கறி எந்த சாதிக்காரன்கிட்டருந்து வருதுனு பாக்கறதில்ல. வாங்கற நேரத்துலதான் பாக்கறான் யாரோட கடைல வாங்கறதுனு. எனக்கு சொல்ல தெரியல மா. ஐ அம் எமோஷனல். ஜஸ்ட் எமோஷனல். அந்த எடம் பொதுவாகணும் அது மட்டும்தான் எனக்குள்ள இருக்கு”

“இத அண்ணன் கிட்ட சொல்லலாம்ல. அவனே இதையும் செய்வானே. ரெண்டு பேரும் சேந்து செய்யலாம்”

“அவன் இன்னொரு அப்பா. எடத்த மடமாக்குவானே தவிர பொதுவாக்கமாட்டான். கிருஷ்ணன் எறந்தப்ப கூட அவன பெருசா பாதிக்கல. சின்ன வயசுனு விட்டுடலாம். ஆனா அதுக்கு பெறகு கிருஷ்ணன பத்தி இதுநாள் வரைக்கும் பேசிக்கூட கேட்டதில்ல. நான் முடிவாயிட்டேன்.”

அவனது கைகளை இழுத்து இறுக பற்றிக்கொண்டாள்.

“அவன்கூட சண்டை போட்டாவது அந்த எடத்த பொதுவாக்கணும்.”

“உனக்கு எப்பவும் துணை நிப்பேன். ஆனா உன்னோட வீம்பதான் புரிஞ்சிக்க முடியலை”

“அப்பா எறந்ததுக்கு தர்ப்பணம் பண்றது திதி வைக்கறது எல்லாம் சாந்தியடையனு ஒரு நம்பிக்கை. ஆனா அவர் செஞ்ச பாவம் போக? அதுவும் இது மாதிரி பாவம் போக? சமத்துவமா வாழ்றது தான் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி”

முந்தைய இரவு ஒட்டுக்கேட்டதை அறிந்ததுபோல் அவளும், தான் ஒட்டுக்கேட்டதை அறிந்து விட்டாளோ எனும் பயத்துடன் அவனும் உரையாடிக் கொண்டனர். பேருந்து நிலையம் அடைந்தவுடன் இறங்க எழுந்தனர். அருகில் இருந்த பெண் தன்னைக் கடந்து செல்லும் ஜனனியை அழைத்து அவளிடமிருந்து கீழே விழுந்த ஒன்றை எடுத்துக்கொடுத்தாள். மடிக்கப்பட்ட காகிதம். உள்ளங்கைகளுக்குள் வைத்தவுடன் அதை உணர்ந்துகொண்டாள். பயம், அதிர்ச்சி, சந்தோஷம் ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் புள்ளியை தரிசித்தாள். காகிதத்துள் இருந்த கோடுகளின் கனத்தை கைகளில் உணர்ந்தாள். பிரித்துப் பார்க்காமல் பைக்குள் வைத்தாள். திரும்பிப் பார்க்கையில் அவளுடைய புன்னகை ஜனனிக்கு வசீகரமாய் இருந்தது. பரிச்சயமான முகம். அடிக்கடி உணர்ந்த கபடமற்ற புன்னகை. சோகம் ததும்பும் கண்கள். திருப்பி இறுக்கமான புன்னகையைப் பதிலளித்தாள்.

இறங்கியவுடன் புருஷோத்தமன் இறங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை விசாரித்தான்.

“ஹேண்ட் பேக்கலருந்து டிஷ்யூ பேப்பர் விழுந்துருச்சு மா”

நிறுத்ததிலிருந்து கிளம்பிய பேருந்தில் அவளை மீண்டும் பார்த்தாள். புன்னகையும் கண்களின் சோகமும் குறையாதிருந்தது.

-3-

வேதாத்ரி ரயில் ஏறிய தருணத்திலிருந்தே களைப்புடன் காணப்பட்டான். தட்காலில் முன்பதிவு செய்திருந்த சீட்டும் ஆர்.ஏ.சி என்பதை அறிந்தவுடன் தனக்கு படுக்க ஒரு பெர்த் வேண்டும் என்று கோபமானான். யாரிடமாவது சென்று குளிரூட்டப்பட்ட பெட்டியிலாவது வாங்கி வாருங்கள் தனக்கு உறக்கம் வருகிறது என்று அசதியில் படுக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டான். அவனது கண்கள் முழுதாக திறப்பதற்கே சிரமப்பட்டன. கால்முட்டியின் பின்பக்கம் அதிகமாக நடந்தவனைப் போன்று வலி சூழ்ந்துகொண்டது. கைப்பிடியை பிடித்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டான். அம்மா நின்று கொண்டிருப்பதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அப்பா டி.டி.ஆரைப் பார்த்து திரும்பி வரும் வரையிலாவது கண்களை திறந்து வைத்திருக்கலாம் என அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிற்கு அவன் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது சங்கடமானது. அவர் சீக்கிரம் வந்தால் வேதாவாவது உறங்குவான் என நினைத்துக்கொண்டாள். இருபது நிமிடம் கழித்து வந்தவர் ஏசியில் மூன்று பெர்த்தை வாங்கியிருப்பதாக அழைத்து சென்றார்.

அவர்களது பெட்டிக்கு சென்றவுடன் மேலடுக்கில் வாங்கியிருந்த படுக்கைக்கு அலைபேசியுடன் ஏறி படுத்தான். சில நொடிகளிலேயே உறங்கினான். நவநீதனும் மனைவியும் பெட்டிகளை அடுக்கி, பின் உட்கார்ந்து கொண்டனர். ஜனனியின் வீடு விற்கக்கூடாது எனும் நிலைப்பாடை விமர்சித்தனர். வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவு எடுத்ததை மனைவியுடன் கோபமாகக் கூறினார். இடையிடையில் வேதாவின் அலைபேசி குறுந்தகவலுக்கான ஒலியை எழுப்பிக்கொண்டேயிருந்தது. பேச்சின் இடையில் அச்சிறுவொலி தடங்கலாகவும் நவநீதனுக்கு தோன்றியது. மீண்டும் எப்போது ஊருக்கு செல்வது என்பதையும், பாகப்பிரிவினையை அதிகநாள் தள்ளிப்போடக் கூடாது என்பதையும் பேசிக்கொண்டு வந்தனர். வீட்டிலேயே அதிக வேலை செய்ததால் சிறிது நேரமாவது கால் நீட்டி படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். கீழ் பெர்த்தில் மனைவியையும், வேதாத்ரி உறங்கிகொண்டிருப்பதற்கு எதிரில் கிடைத்த மேல் பெர்த்தில் தானும் படுத்துக்கொள்வதாக கூறினார். மனைவி படுத்தவுடன் ஒலி வந்து கொண்டிருந்த வேதாவின் அலைபேசி உறுத்தலானது. அவனது தூக்கத்தையே கெடுத்துவிடும் என ஆதங்கப்பட்டார். அதை சைலண்ட்டில் வைத்துவிடலாம் என எடுத்தார். குறுந்தகவல்கள் வந்தவாறிருந்தன. அவனது விரல் ரேகையே அலைபேசியை திறப்பதற்கான திறவுகோல். வெறுமனே அமைதியாக்குவோம் என ஒலியின் அளவை குறைத்தார். அப்போதும் ஒரு குறுந்தகவல் வந்தது. உள்ளே செல்லாமல் திரை காண்பித்த தகவலை வாசித்தார்.

Nandhini
Miss you Vedha… Come soon… Minutes U’r away drives me crazy n make me silent… Don’t make such days m

அதற்கு மேல் அவரால் வாசிக்க முடியவில்லை. அலைபேசிக்குள் உள்நுழைந்தால் மட்டுமே வாசிக்க முடியும். அமைதியாக்கிவிட்டு அவனருகிலேயே வைத்தார். அவருக்கான படுக்கையில் படுத்துக்கொண்டார். பெங்களூரு செல்லும்வரை வேதாத்ரியின் மீதிருந்து பார்வை அகலவேயில்லை.

கிருஷ்ணமூர்த்தி – சென்னையில் வசித்துவரும் இவருக்கு இரண்டு நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ( காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு, சாத்தானின் சதைத் துணுக்கு ) வெளிவந்துள்ளன.
[email protected]
9789210826

RELATED ARTICLES

2 COMMENTS

  1. Arumai. Poovai pola sedi kodi pola kayum kaniyum pol intha boomiyil piranha manitharkalum onru thaan. Manithan dhan Potta kodu dhanakku vilankaka marrikollamal kanum pathai mikavum sirappu.

  2. உயிர்கன் அழிவதில்லை! உறவகளுக்குள்ளேயே மீண்டும மீண்டும் ஜனிக்கின்றன! வேதாவுக்குள் கிருஷ்ணன்! கிருஷ்ணனின் லலிதாவைப்போல் வேதாவுக்கு ஒரு ந்ந்தினி! நவநீதன், தன் அப்பா தன் அண்ணணுக்குச் செய்த தவறை தன் மகன் வேதாவிற்குச் செய்ய மாட்டார்!
    கதை மிகவும்நேர்த்தியாய் புனையப்பட்டிருக்கிறது! வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular