Thursday, March 28, 2024
Homesliderஅவனை எனக்குத் தெரியாது

அவனை எனக்குத் தெரியாது

தெய்வீகன்

(1)

ருட்குமரனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற அந்நாளின் மாலை ஆறுமணிக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தேவாலயங்களில் மணியடித்து அவனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு சில திருச்சபைகள் சனங்களிடம் கோரியிருந்தன.

(2)

சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல்  உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த ஓலத்திற்குள் இதுதான் “இறுதிச் சந்திப்பு” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கொதித்தது. அந்தக் கொதிப்பின் கங்குகள் “என்ர பிள்ளைய கொல்லப்போறாங்களே, நாசமாப்போவர்” என்ற அழுகுரலாய் கனன்று நின்றது. தாய்மையின் பெருந்துயர் படிந்த அவளது ஓலம் சுரணையற்ற அந்த சிறைச்சுவர்களில் தெறித்து எந்தப் பெறுமதியும் இல்லாமல் அடங்கியது. சிறைக்காவலர்கள் அவளை இழுத்து வெளியே தள்ளினர்.

அருகில் நின்று அழுகின்ற அகிலாவும் சேர்ந்து அந்த அதிகாரிகளுடன் முயற்சிக்கிறாள். முடியவில்லை. தவரஞ்சினியின் கணவர் காராளசிங்கம் களைத்துச் சிவந்து போன கண்களை சேர்ட்டின் கொலரினால் எடுத்து ஒற்றியபடி நின்றார்.

“அம்மாவ பிடியுங்கோவன் அப்பா” – என்று அகிலா அழுது கொண்டே அழைத்த பிறகு அருகில் சென்று தவரஞ்சினியின் ஒரு கையை எடுத்து தனது தோளின் மேல் போட்டு வெளியில் அழைத்துப் போனார். அவளது உடலில் இனி எதற்குமே சக்தியில்லை. துவண்டிருந்தாள்.

“கரபொக்கன் சிறைச்சாலை” என்று பெரிய வளைந்த இரும்பில் உள்ளும் புறமும் எழுதப்பட்ட வாசலடியில் வந்தவுடன் அதற்கு அருகிலிருந்த சிறிய விருந்தினர் படலையை வாயிற்காவலாளி திறந்து விட்டான். அனைவரும் வெளியில் வந்தார்கள்.

அவ்வளவு நேரமும் காத்திருந்த ஊடகவியலாளர் கும்பல் கமராக்கள், பதி கருவிகள், ஒலிவாங்கிகள் சகிதம் பாய்ந்து வந்து தவரஞ்சினி குடும்பத்தினை சூழ்ந்து கொண்டார்கள். மூவரையும் முற்றுகையிட்டார்கள். 

“அருட்குமரனுக்கு நாளை மரணதண்டனை கொடுப்பது உறுதியாகி விட்டதா”

“அருட்குமரன் கடைசியாக உங்களிடம் என்ன சொன்னார்”

“அருட்குமரன் கடைசியாக என்ன சாப்பிட்டார்”

“ஆஸ்திரேலிய அரசாங்கம் கடைசி நேரத்தில் காப்பாற்ற முயற்சியெடுப்பதாக ஏதாவது சொல்லியிருக்கிறதா”

தவரஞ்சினி சேலைத் தலைப்பினையெடுத்து ஒரு கையினால் முகத்தினை மூடியவாறு மறுகையால் காராளசிங்கத்தின் சேர்ட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள். 

முகத்தை மூடிய சேலைக்குள் 

“நோ.. நோ… ப்ளீஸ்.

“லீவ் அஸ் எலோன்”

“ப்ளீஸ்….ப்ளீஸ்” – என்று கத்தினாள்.

ஊடகவியலாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக மூவரையும் தனித்தனியாக கலைத்துக் கொண்டு போனார்கள். சிலர் அகிலாவை இலக்கு வைத்து கேள்விகளோடு கலைத்தார்கள். ஏனையவர்கள் காராளசிங்கத்தின் கழுத்துக்குள்ளும் ஒலிவாங்கியை நீட்டினார்கள். பின்னாலேயே கலைத்து வந்தவர்கள் இப்போது வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். கண்ணாடியின் இடைவெளிகளின் வழியாக பதி கருவிகளையும் ஒலி வாங்கிகளையும் உள்ளே நுழைத்தார்கள். கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டார்கள். வாகன ஓட்டுனர் எல்லா கண்ணாடிகளையும் பூட்டினார்.

வாகனத்தின் நாலா பக்கமும் முட்டி மோதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின்  நடத்தை வாகன ஓட்டுனருக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர் அந்தக் கூட்டத்திலிருந்து வாகனத்தை எப்படியாவது வெளியில் எடுத்துவிட வேண்டும் என்று விடாது திமிறினார். ஆனால், கமராக்காரர்கள் தவரஞ்சினி குடும்பத்தின் முகங்களை எப்படியாவது தங்களது ஊடகங்களில் பதிவேற்றிவிட வேண்டுமென்று அகப்பட்ட கோணங்களிலெல்லாம் படமெடுப்பதற்கு பாடுபட்டார்கள். தாயின் முந்தானையை எடுத்து அகிலா தனது முகத்தை முற்றாக மறைத்துக் கொண்டாள். தவரஞ்சினி தன் முகத்தை அழுகைக்குள் புதைத்திருந்தாள். காராளசிங்கம் விறைத்தபடியிருந்தார். அவருக்குள் புத்திர சோகத்தின் இருள் புகுந்திருந்தது.

(3)

லைகளின் வழியாக பனி சொட்டிக் கொண்டிருந்தது. நீலநிற பிளாஸ்திக் தறப்பாளினால் இழுத்துக் கட்டப்பட்ட அந்த நீண்ட கொட்டிலில் பயிற்சி முடிந்த அனைவரும் நல்ல நித்திரையில் இருந்தனர். அருகில் கிடந்த பாலனை திரும்பிப் பார்த்தேன். கடைவாய் வழிந்து தூக்கத்திற்குள் மிகத்தூரமாக சென்றிருந்தான். அவனது துயில் கலைந்து விடாமல் மெதுவாக எழுந்து பயிற்சி மைதானத்தை பார்த்த போது கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்து கொண்டன.

முதல்நாள் இரவே நாங்கள் நித்திரையான பிறகு வேலவன் மாஸ்டரின் பயிற்சி அணியினர் துவக்குகளைக் கொண்டுவந்து வரிசையாக வைத்துச் சென்றிருக்க வேண்டும். பயிற்சி மைதானத்தோடு அருகில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட கிடுகுக் கொட்டகையில் துவக்குகள் நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

பார்த்த மாத்திரத்தில் ஒரு கணம் சூரியன் உள்ளே இறங்கியதை போல உடல் உதறியது. 

ஓடிச்சென்று பாலனை தட்டியெழுப்பி விஷயத்தைச் சொன்னேன்.  அவன் வேகமாக வெளியில் ஓடி வந்து பார்த்தான்.

நடுவிலும் அடியிலும் மரநிறத்தில் மஞ்சளாக ஜொலிக்க அந்தக்கரிய இரும்புக் கருவிகள் திமிரோடு நிமிர்ந்து நின்று எங்களுக்காக காத்திருந்தன.

இருவரும் ஆளையாள் பார்த்து சிரித்துக் கொண்டோம். என்னை அறியாமலேயே இடப்பக்க முழங்கையை வருடிப் பார்த்தேன். எத்தனை வாரங்களாக கொட்டனோடு ஓடியும் பாய்ந்தும் தவழ்ந்தும் கரணமடித்தும் பயிற்சியெடுத்திருப்போம். காய்த்துப் போன கைகளில் பட்ட காயங்கள் எல்லாவற்றுக்கும் கொட்டன் தான்  காரணம் என்று வெறுத்திருந்தோம். துவக்கு மாத்திரம் கையில் கிடைத்து விட்டால் அது எல்லாவற்றிலிருந்தும் எங்களை பாதுகாக்குமென்று கதைத்துக் கொண்டோம்.

சொரசொரவென்றிருந்த முழங்கையின் நுனியில் பழைய காயமொன்று காய்த்திருந்தது.

எல்லோரும் எழுந்தார்கள். 

“அன்றைய ஓட்டம் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தது. பாலன் துள்ளி(த்)துள்ளி ஓடினான். பிறகு, வேலவன் மாஸ்டர் வந்தார். துவக்கு தொடர்பான விசேட அறிவிப்பை தந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக போய் அதனை கைகளில் வாங்கிக் கொண்டோம். தகட்டிலிருந்த இலக்கத்தை பதிவுசெய்து கொண்டு துவக்கினை கைகளில் தந்தபோது அந்த இரும்பின் குளிர்மை உடலில் ஒரு தோட்டாவைப் போல வேகமாக இறங்கியது.

மதிய உணவு முடிந்து கொட்டிலுக்கு வந்தபோது பாலன் சிறிய வெள்ளையும் மஞ்சளும் கலந்த  நிறத்துணியால் துவக்கின் சகல பாகங்களையும் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். அவன் துடைப்பதை அருகிலிருந்து கூர்ந்து பார்த்தேன். அழுத்தி துடைப்பான். பிறகு, கைப்பிடியின் அருகே முகத்தைக் கொண்டுசென்று ஊதுவான். தன்னை ஏமாற்றிக்கொண்டு எங்காவது சிறுதூசு ஒளிந்திருக்கிறதா என்று ஒரு கண்ணை மூடி உற்று நோக்குவான். திரும்பவும் துடைப்பான். இதையெல்லாம் நான் ரசிப்பதை ஓரக்கண்ணால் கண்டுகொண்டால் உதடுகளைச் சுழித்து சத்தமின்றி சிரிப்பான். 

அன்று முதல் எனது உயிரின் ஒரு பகுதி எடை கழன்று அந்த இரும்பிற்குள் வாழ்வது போன்ற உணர்வு படிப்படியாக ஒட்டிக்கொண்டது. 

ரி56. அது புதிய துவக்கொன்றுமில்லை. ஏதோவொரு முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் துவக்குத்தான். ஆனால், அது இன்னொருவனிடமிருந்து அடித்துப் பெறப்பட்டது. அதனையெடுப்பதில் எத்தனைபேர் செத்திருப்பார்கள். உடல் சிதறியிருப்பார்கள். எமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது நடந்திருக்கும். விடுதலையை மாத்திரமல்ல, ஆயுதங்களையும் உயிர் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்பது களத்திலிருப்பவனுக்கு மாத்திரம்தான் விளங்கும்.

அது என்னோடு ஒட்டிக் கொண்ட நாள்முதல் எனது மதிப்பை நானே கொஞ்சம் குறைவாகத்தான் உணரத் தொடங்கினேன். 

பயிற்சியோ சண்டைகளோ இல்லாத நேரங்களில் என் துவக்கோடு தனியாக பேசுவதற்கு பழகியிருந்தேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களை துவக்கோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். நன்றாகத் துடைத்த பின்னர் நான் துவக்கோடு படிக்கத் தொடங்கினால், அநேகமாக சில பக்கங்கள், சில பத்திகள், சிலவேளை சில வரிகள். அவ்வளவுதான் அவகாசம் கிடைக்கும். அதனை பாலனும் படுத்திருந்து கேட்பான்.

நாளையே என்மீது பாய்கின்ற குண்டொன்று எனது உயிர் குடிக்கும்போது இந்த துவக்கு எதிரியின் கைகளில் விழலாம். அவன் இந்தத் துவக்காலேயே என்னை மீண்டுமொரு முறை சுட்டு உயிர் போனதை உறுதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்தத் துவக்கினை தன் முகாமுக்கு கவர்ந்து செல்லலாம். இல்லை, யாருமற்ற வெளியில் அநாதரவாக என் பிணம் விழும்போது அருகே இந்தத் துவக்கு தனியாகக் கிடந்து எனக்காக அழுது குழறலாம். அப்போதும் நான் வாசிக்குமொரு கதையை கேட்பதற்காக இந்த இரும்பிலும்கூட இரு சொட்டு கண்ணீர் வரலாம். 

எல்லா விதமாகவும் இந்தத் துவக்கிற்குள் ஒரு உயிர் பதுங்கியிருப்பதை நான் நம்பினேன். என்னைப் போலவே பாலன் தன் துவக்கோடு தனக்கொரு வாழ்விருப்பதாக இறுக்கமாக நம்பினான்.

(4)

ன்று எனது பிறந்தநாள். பாலமோட்டை முன்னணி காவலரணையொட்டிய பிரதேசத்தில் இராணுவத்தை கண்காணிப்பதற்காக நிலைகொள்ள வேண்டியிருந்தது.  அதற்கு முதல் சண்டையில் எடுத்து எம்.16 கோல்கொமாண்டோஸோடு பதுங்கு குழியிலிருந்தோம். அந்த அமெரிக்க துவக்கின் மீது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பிரியமிருந்தது. சண்டையில் எடுத்தது என்பதற்கு அப்பால் எல்லோரும் வைத்திராத பெறுமதியான ஆயுதம். அது எங்களிடமிருக்கிறது என்பதில் ஒரு தனி மகிழ்ச்சி எங்களுக்குள் பிரவாகித்தபடியிருந்தது.

காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு தடத்தின் ஓசையும் எதிரியறிவான் என்று எமக்குத் தெரிந்திருந்தது. என்னைவிட எப்போதும் போல எனது பாதுகாப்பில் பாலன் அவதானத்தோடிருந்தான்.

இருந்தாலும் அன்றிரவு அவனுக்கு ஏதோ செய்ய வேண்டுமென்றிருந்தது. நள்ளிரவு எழுந்து – சரியாக பன்னிரெண்டு மணிக்கு – பிறந்தநாள் வாழ்த்து சொன்னான். எம்.16 துப்பாக்கியோடு வெளியில் சென்று ஆகாயத்தில் ஒரு சுற்று ரவைகளை பொழிந்து தள்ளினான். இருளைக் கிழித்துக்கொண்டு நெருப்புப்பூக்களாக ரவைகள் பறந்து அணைந்தன. பிறகு என்னைத்திரும்பி பார்த்து –

“பாரடா, பிறந்தநாளுக்கு சீனவெடி கொளுத்துறதெல்லாம் சாதாரண ஆக்கள் செய்யிறது. உனக்கு நான் அமெரிக்க வெடியே கொளுத்தியிருக்கிறன்” – என்றான் பெருமையோடு. அந்தக் கண்களில் அவ்வளவொரு ஆனந்தம். அடுத்த நாள் காலையில் நிகழ்ந்த மோதலில் பாலன் எதிரியின் சினைப்பரினால் கொல்லப்பட்டான். என் கண்முன்னாலேயே பாலன் சுருண்டு விழுந்தான். அவனில் எந்த அசைவுமிருக்கவில்லை. அவனைத் தூக்கியோடுவதற்காக வரப்போறவனை எதிர்பார்த்து அந்த சினேப்பர்காரன் இப்போது குழல் வழியாக இன்னொரு இலக்கினை தேடத் தொடங்கியிருப்பான். பாய்ந்து சென்று பாலனை இழுத்து வரவேண்டும் போலிருந்தது. நாவில் ஏதோவொரு கசப்பான திரவம் ஊறியது. நெஞ்சும் வயிறும் எரிந்தது. பாலன் அசைவின்றி கிடக்கையில்  என் மொத்த உடலும் இயங்க முடியாது விறைத்திருந்தது.

பாலனின் இழப்பு எனக்குள் மிகப்பெரிய வெறுமையை விதைத்தது. முதல் நாளிரவு அவனுதிர்த்த இறுதிச் சிரிப்பு அப்படியே நெஞ்சில் நீந்தியபடி கிடந்தது. அன்றோடு துவக்குகளிலிருந்த மோகம் என்னிலிருந்து கழன்றது. இயக்க வாழ்க்கையும்தான்.

(5)

முற்று முழுதாக போரிலிருந்தும் மண்ணிலிருந்தும் வெளியேறி ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தோடு தரப்பட்ட அதே தறப்பாளின் கீழ் இந்தோனேஷிய அகதி முகாமில் இரண்டு வருடங்கள் படுத்துறங்கி எழுந்த நாளொன்றில் சட்டத்தரணி வைஷாலியை சந்தித்திருந்தேன். ஐ.நா. அலுவலகரோடு நடைபெற்ற சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராக வந்தபோது பேசத் தொடங்கினேன். நேரிலும் தொலைபேசியிலும் அவ்வப்போது பேசிக்கொண்டவள், எனது பிறந்தநாளன்று எனக்கு தெரியாமல் முகாமுக்கு கேக் வாங்கி வந்திருந்தாள். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாகவிருந்தது. அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தேன். வெளிநாட்டு மண்ணில் நான் மிகவும் திருப்தியாக உணர்ந்த நாள் அதுதான். இரவு தூங்குவதற்கு முதல் திடீரென்று எழுந்து படுக்கையிலிருந்து யோசித்தேன். அன்று பாலன் இறந்த தினம் என்று புரிந்துகொள்ள முடியாதளவுக்கு வைஷாலியின் நினைவாக இருந்திருக்கிறேன் என்று எண்ணியபோது பயந்தேன். கொஞ்சம் வியர்த்திருந்தது. விடிந்தபிறகு, எனக்குள் வைஷாலி நிறைந்திருப்பதை உணர்ந்து கொண்டேன்.

வைஷாலி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். விவாகரத்தானவள். இந்தோனேஷியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுவதற்காக நாட்டிலிருந்து வந்து, தொடர்ந்து குடிவரவு சட்டங்களைக் கற்று அகதிகளுக்கான அனுசரணையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்தோனேஷிய அரசு அதிகாரியொருவரை இரண்டாம் தடவையும் திருமணம் செய்து பிரிந்து விட்டாள் என்று முகாமுக்குள் பேசிக்கொண்டார்கள். அவளது இந்த தனிப்பட்ட பூராயங்களுக்குள் என்னை நுழைத்துக் கொள்ளாததும் என் மீதான அவளது கரிசனைக்கு காரணமாக இருந்திருக்கலாமென்று எனக்குள் ஒரு நம்பிக்கை. 

“இந்த முகாமிலிருந்து வெளியேறி உடனடியாக வேறு நாடொன்றுக்கு போவதென்றால் எவ்வளவு காலமெடுக்கும்? அதற்கான கள்ள வழிகள் எப்போது திறக்கும் என்று எதுவும் தெரியாமல் இன்னொரு தறப்பாளுக்குக் கீழ் போய் படுத்திராமல் –

“இந்தோனேஷிய அரசாங்கத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவிற்கு ஆட்கள் எடுக்கிறார்கள், இங்கு விடுதலையாகி வெளியே வந்தவுடன் அதில் இணைந்து கொண்டால் கையில் பணமும் கிடைக்கும், அது அரசாங்கத்தோடு அருகிலிருக்கும் வாய்ப்பாகவும் அமையும், அதனை இப்போதைக்கு முயற்சித்துப் பார்ப்பதுதான் புத்தி” – என்று அகதி முகாமின் முன்னாலுள்ள லாவுலு மர நிழலில் வைத்து ஒருநாள் தனது மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் வைஷாலி.

அந்த வார்த்தைகள் அப்போது அவள் என்னிடத்தில் கொண்டிருந்த சொல்லாத காதலின் அரூப அக்கறையாக ஒலித்ததை புரிந்துகொள்ள முடிந்தது.

வைஷாலிக்கு இந்தோனேஷியாவில் எந்தப்பருவத்தில் எந்தக்காய் காய்க்கும் என்பது தொடக்கம் அந்தக்காயை எப்படி அடுத்த நாளே பழமாக்குவது என்பது வரைக்கும் தெரிந்திருந்தது. அவள் எனது வாழ்க்கையை முழுவதுமாக அறிந்தவள். அவள் எனக்கொரு வழிசொன்னால், அதில் எந்த தடுப்பரண்களோ சினேப்பர்களோ இராது என்று முழுமையாக நம்பினேன்.

அகதி முகாமிலிருந்த இரண்டு வருடங்களில் இந்தோனேஷிய மொழியை சரளமாக பேச – எழுதக் கற்றிருந்தது எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

முகாமிலிருந்து விடுதலையாகி முதலிரண்டு வாரம் வைஷாலி வீட்டின் முன்பாகவிருந்த அறையொன்றில் தங்கினேன். நான் அதைத்தான் அப்போது விரும்புவதாக எண்ணியிருந்தாள். அல்லது காதலுக்காக பிணையெடுத்தது போல நான் எண்ணிவிடக் கூடாது என்றுகூட யோசித்திருக்கலாம். அவளது வீட்டில் தங்கியிருந்த ஒருநாள் மழையினால் என் அறைக்குள் பெரும் ஒழுக்கு. தாரை தாரையாக தண்ணீர் உள்ளே விழுந்தது. எனது ஒற்றைக்கட்டில் நாசமானது. அதன்பிறகு, அன்றிரவு வைஷாலியோடு தூங்கினேன். 

அடுத்தநாள் காலையில் வானம் அவ்வளவு அழகாகத் தெளிந்திருந்தது.

இந்தோனேஷிய குடிவரவுத் துறையின் போதைப்பொருள் ஒழிப்புக்குழு பயிற்சி வகுப்புக்களுக்குரிய ஆவணங்களை இணையத்தில் எடுத்து வைஷாலியே சிரத்தையோடு நிரப்பினாள். தேவையானவர்களிடம் சென்று கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டாள். வகுப்புக்குப் போகவேண்டிய காரியத்தைத் தவிர, மிகுதி அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடித்தாள்.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து சற்று உள்ளே சுகுபட்டாவில் அமைந்திருந்த குடிவரவு திணைக்கள மண்டபத்தில் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாயின. கட்டோனா என்ற பெயரில் தெத்துப்பல்லோடு எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டேயிருப்பவன் அங்கு எனக்கு பழக்கமானான். இந்தோனேஷியாவில் பிறந்து இந்தோனேஷியாவில் வளர்ந்து இந்தோனேஷிய சிறைக்குப் போய் வந்தவன். அவனுக்கும் பாலனைப்போல நுனி மூக்கு சற்று வளைந்திருந்தது. எதற்கெடுத்தாலும் சிரிப்பான். அழுவதென்றால்கூட ஒருமுறை சிரித்துவிட்டுத்தான் அழத்தொடங்குவான் போல.

பயிற்சி தொடங்கிய பிறகுதான் தெரிந்தது, அது கிட்டத்தட்ட ஊரில் நாய் பிடிப்பதைப் போன்ற – எந்த கருணையும் பார்க்காமல் போதைப்பொருளோடு தொடர்புடையவர்களை அடித்துப் பிடிக்கும் – வேலையென்று. போதைப்பொருளோடு பிடிபடுகின்றவர்களை இழுத்து வந்து வண்டியில் போட்டு நாட்டில் நடைமுறையிலிருக்கும் மிக இறுக்கமான சட்டத்தை அவர்களின் மீது திணித்து சிறையில் தள்ளுவதுதான் வேலை. ஒருவாரம் எங்களுக்கு பாடமெடுத்த நிமிர்ந்த இரும்புடம்பு இந்தோனேஷிய அதிகாரியின் கணக்கை வைத்துப் பார்த்தால், இவ்வேளைக்கு இந்தோனேஷியாவில் பாதி சனத்தொகை சிறையில்தானிருக்க வேண்டும்.

கட்டோனா ஒருநாள் மதிய உணவின் பிறகு சிகரெட் புகையை இழுத்துவிட்ட இடைவெளியில் –

“நாங்கள் பிடித்துக்கொண்டு வந்து உள்ளே போட்டால், யாராவது ஒருவனுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் வெளியில் போய் விடுவான். ஆக, இங்கு சட்டத்தின் மேல் கோபம் கொண்டு உடல்நலனை வீணடிக்காமல் சம்பளத்தை மாத்திரம் வாங்கிக்கொண்டு வீடுபோகும் வழியை பார்க்க வேண்டும்” – என்று புத்தி சொன்னான். அதனை அவன் வழக்கம்போல சிரித்துக்கொண்டு சொன்னாலும் அதிலிருந்த அழுத்தமான உண்மையை உணர்ந்து கொண்டேன்.

பிறகு பொக்கெட்டிலிருந்து எடுத்து தனது மூன்று பெண் குழந்தைகளினதும் படத்தைக் காண்பித்து தனது நெளிந்த மூக்கு சிவக்க திரும்பவும் சிரித்தான். 

“மூன்று பிள்ளைகளும் பெண்களா” – என்றேன் ஆச்சரியத்துடன்.

“சீச்சி…” – என்றுவிட்டு நடுவிலிருப்பது தனது மனைவி என்று சொல்லி கூடுதலாக வெட்கிக் கொண்டான்.

ஆறாவது வாரம் ஜகார்த்தாவிலிருந்து மிக அண்மையிலுள்ள பமுக்கா தீவில் கொண்டுபோய் அனைவருக்கும் துப்பாக்கிப் பயிற்சி தரப்பட்டது. அந்த வகுப்பு ஆயுதப்பயிற்சியாக பரிமாணமடையும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அடிப்படையில் சிறப்பு பணிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் இரும்பு வாத்தியார் சொன்னார். 

வைஷாலியிடம் அன்றிரவே வந்து விஷயத்தை சொன்னேன். ஏதாவது சிக்கல் வந்து பாலமோட்டை வரை சென்று பழையதை கிளறி விடுவார்களோ என்று அச்சமடைந்தேன். 

“உனது ஆயுதத்திறமையை வைத்து இங்கு யாரும் தவறாக எடைபோட்டு விடமாட்டார்கள். இது கிட்டத்தட்ட அரசாங்க வேலை மாதிரி. கூடுதல் சம்பளமும் கிடைக்கும். காலத்தை வீணாக்காதே” – என்று திரும்பவும் கொண்டு வந்து வழக்கம் போல முடித்தாள் வைஷாலி.

ஆயுதங்களை அளைந்து வந்த எனது பழங்காலத்தை நான் சதா நினைவுகளில் போட்டு பிசைந்து கொண்டிருப்பதை வைஷாலி அவ்வப்போது துல்லியமாக அவதானித்து விடுவாள். உடனே எனது நினைவுகளை கலைத்துக் கொள்வதற்கு ஒரு வைத்தியர் போல பேசுவாள். அவளது பேச்சில் நான் அதுவரையான வாழ்வில் உய்த்தறிய முடியாத பகுதிகள் அதிகமிருக்கும். அவளருகிலிருக்கும் போது கலைந்துசெல்லும் நினைவுகள், பிறகு தாழ்மேகங்கள்போல தலைமீது வந்து ஏறி நிற்கும்.  

இந்தோனேஷியாவில் சிறப்பு காவல்துறை அணிகள் “பெரேட்டா” என்ற இத்தாலி கைத்துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்தினார்கள். “சாதாரண பொலீஸாருக்கான துப்பாக்கிகளை இந்தோனேஷியாவிலேயே தயாரிக்கிறார்கள்” – என்று கட்டோனா சொன்னான்.

ஏழாவது வாரம் பயிற்சி முடிவில் எங்கள் அனைவரது திறமையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டோம். 

ஒரு தொகுதியினர் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு பிரிவினராக நகர்ப்புறத்தில் களப்பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்கள். வகுப்பின் முன்பாக நின்ற பலவர்ண பதக்கங்கள் அணிந்த அதிகாரி ஒவ்வொருவரது பெயரையும் உரக்க அழைத்தார். எனது பெயருக்காக அந்த அதிகாரியின் உதடுகளையே பார்த்தபடியிருந்தேன். 

கடைசிவரை, நான் அவர் வாயிலிருந்து வரவேயில்லை. நான் கட்டோனாவை பார்த்தேன். அவனும் எனக்கு அருகில் நின்று முதல்முறையாக சிரிக்க முடியாமல் திணறினான். பெயர் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் வேறு வகுப்புக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். கடைசியாளும் கதவின் வழியாக வெளியே போக, மூன்று கறுப்பு சீருடையணிந்த அதிகாரிகள் வகுப்பிற்குள் புதிதாக நுழைந்தார்கள். அவர்கள் எங்கள் இரும்பு வாத்தியாரின் அண்ணன் தம்பி போல விறைப்பாக தெரிந்தார்கள். நாங்கள் குழம்பியிருப்பது அவர்களுக்கு புரிந்திருந்தது. அவர்களில் வலக்கன்னத்தில் குளவி கொட்டியதுபோல ஐந்தாறு பெரிய காயங்களோடிருந்த அதிகாரி பேசத்தொடங்கினார்.  

“துப்பாக்கி சுடும் பயிற்சியில் நீங்கள் காண்பித்த திறமையின் அடிப்படையில் உங்களை மரண தண்டனை வழங்கும் சிறப்பு அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். உங்கள் விருப்பங்கள் எப்படி” – என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். சொல்லி முடிக்கும்போது எனக்கு தொண்டையில் கல்லொன்று வந்து இறுகி நிற்பது போலிருந்தது. 

“உங்களுக்கான சிறப்பு படிகள் மற்றும் சலுகைகள் பற்றி அணிக்குரிய சிறப்புத்தளபதி விளக்குவார். அவசரமாக இன்றே முடிவை சொல்ல வேண்டும் என்றில்லை” – என்று மெல்லிய புன்னகையோடு அவர் தனது அதிர்ச்சி உரையை முடித்தார்.

அதற்குப்பிறகு அங்கு நின்றவர்கள் என்னென்னவோ பேசினார்கள். 

நான் வெளியில் ஓடிவந்து கட்டோனாவிடம் ஒரு சிகரெட்டை கேட்டு பற்ற வைத்தேன். வைஷாலிக்கு தொலைபேசி எடுத்தேன்.

வைஷாலி முன்பு கூறியதைத்தான் திரும்பவும் கூறினாள். கூடுதலாக இரண்டொரு முக்கியமான வார்த்தைகளையும் சொன்னாள். 

“வாழ்க்கையில் எதிர்பாராத வாய்ப்புக்கள் இப்படித்தான் வந்து கொண்டிருக்கும். இதற்கு நீ முன்பு பழக்கப்படவில்லை என்பதால் அதிர்ச்சியடைகிறாய். உனது திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புத்தான் இது. மற்றைய அணிக்கு இது கிடைக்கவில்லை. உனக்கு வரவேண்டிய வாய்ப்பென்றபடியால் அது வந்து சேர்ந்திருக்கிறது.

“ஆயுதங்களுடனான வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நான் உனக்கு சொல்லித்தர வேண்டுமா” – என்று வைஷாலி கேட்டாள்.

எனக்கு இரண்டாவது சிகரெட்டும் முடிந்திருந்தது.

ஆயுதங்களிடமிருந்து நான் வெகு தொலைவுக்கு வந்துவிட்ட போதும் அது என்னை மீண்டும் தனக்குள் ஒரு சுழிபோல இழுப்பது அச்சத்தை தந்தது. கூடவே பாலனின் நினைவுகள் என்னை குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டுவிட முடியாமல் பொத்திப் பிடித்த வண்ணமிருந்தன. அகால நினைவுகள் அனைத்தும் கரும்புகை போல எனக்குள் கற்றையாக மீண்டும் எழுந்துகொள்ளப் பார்த்தன.

அன்றிரவு உணவின் பின்னர் நானும் வைஷாலியும் காலாற நடந்துவரப் போயிருந்தோம். நான் கொந்தளித்தபடியிருப்பதை அவள் தெளிவாக அவதானித்துக் கொண்டாள். அதுபற்றி நான் பேசத்தொடங்குவதற்கு முன்னரே,

“துவக்குகளால் நீ துருப்பிடித்திருக்கிறாய்” – என்றாள்.

திடீரென்று அப்படிச் சொன்னபோது அவள் எனக்குள் இறங்கி நிற்பது தெரிந்தது. என் கண்களையே பார்த்தபடி சொன்னாள்.

“வாழ்க்கையில் எமக்கு எத்தனையோ விஷயங்களில் உரிமையிருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். அதனைத்தான் இந்த சமூகமும், ஏன் சட்டமும்கூட கைதட்டி ஆமோதிக்கிறது. உண்மையில் அப்படியில்லை. யதார்த்தம் வேறானது” – என்றாள்.

அவளது வீட்டின் மூலையிலுள்ள தண்ணீர் தாங்கியை திருத்துவதற்காக தோண்டிய குழியை பல தொழிலாளிகள் மண் நிரவி மூடிக்கொண்டு நின்றார்கள். தெருவைக் கடந்து மறுபக்கத்துக்கு சென்றோம்.

“கணவன், குழந்தைகள், நட்பு எல்லாமும்தான்”

விட்ட இடத்திலிருந்து தொடங்கி மெதுவாக முடித்துவிட்டு –

“They might belong to us but we can’t own them” – என்றாள்.

பிறகு மௌனமாக நடந்து வந்தாள். அது நான் சிந்திப்பதற்குரிய மௌனம் என்பதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டேன். பாலன், துவக்கு, போராட்டம் என்று சகலதும் கோர்வையாக மனதில் மிதந்து அமிழ்ந்தன.

மரண தண்டனை வழங்கும் அணியின் தளபதியும் அவர் குழாமும் எங்களை கொமொடோ தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எமக்கான அதி இரகசியமான கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டது. 

இந்தோனேஷிய மரண தண்டனை வழக்கப்படி சுட்டுக்கொலை செய்யப்படும் கைதிகளை எவ்வாறு தண்டனைக்காக கொண்டு வருவது என்பது முதல் அவர்கள் தண்டனையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு பிரேதப்பேழைகளில் போட்டு அனுப்புவது என்பது வரை கூட்டாக செய்யவேண்டிய பணிகள் அந்தப் பயிற்சியில் விளக்கமாக சொல்லப்பட்டன.

மனத்திடமும், தண்டனைகளை நேர்த்தியாக செய்து முடிக்கும் நிதானமும்தான் இந்தத் தொழிலுக்கு அவசியம் என்று சொன்ன பயிற்சியாளர், பழங்காலத்தில் மன்னர்களின் கீழ் இடம்பெற்ற மிகக்கொடூரமான தண்டனை முறைகளை விரிவாக விளக்கினார். அவற்றோடு ஒப்பிடும்போது இப்போதெல்லாம் குற்றவாளிகள் மிகக்குறைந்த வலியோடு தண்டனையை ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஏற்பாட்டினையே தாங்கள் செய்து கொடுப்பதாக சொன்னார்.

பயிற்சி வகுப்புக்களின் ஒரு பகுதியாக அந்த மாதம் இடம்பெற்ற பிலிப்பீன்ஸ் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை நேரடியாக தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். 

கால் முதல் கழுத்து வரைக்கும் இறுக்கமாக கம்பமொன்றில் கட்டப்பட்ட அந்தக்குற்றவாளி, ஒன்பது துப்பாக்கிதாரிகள் முன்னே நின்று சுட தலை கவிழ்ந்து இறந்து போனான். ஒரு ஆங்கிலப்படத்துக்கு சற்றும் குறைவில்லாத சம்பவமாகவும் நான் போரில் நேரடியாக அனுபவித்த எத்தனையோ சம்பவங்களின் சிறுதுண்டாகவும் நடந்து முடிந்தது. காலில் குத்திய பழைய முள்ளொன்றை மீண்டும் தட்டிப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒரு கூச்சம் மனதில் மின்னி மறைந்தது.

அதன் பின்னர், நேரடியாகவே இந்தோனேஷியாவின் மரண தண்டனைக்களத்துக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு நடைபெறுகின்ற ஏற்பாடுகளை காண்பிக்கப் போவதாக கூறினார்கள்.

இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள நூஸா தீவுக்கு நாங்கள் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எமக்கான சீருடைகள் தரப்பட்டு விட்டன. பெருநிலத்திலிருந்து சிறியதொரு கிறவல்நிலப்பாலத்தின் வழியாக அந்தத்தீவுக்கு இராணுவ வாகனங்கள் தான் போய்வருவது வழக்கம். அதனை சனநடமாட்டம் இல்லாத ‘பேய்த்தீவு’ என்று அருகிலுள்ள கிராமத்தவர்கள் சொல்வதாக கட்டோனா சொன்னான். அங்குள்ள பெரியதொரு சிறையில் இந்தோனேஷியாவில் பெருங்குற்றங்கள் செய்து தண்டனை தீர்க்கப்பட்டவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அநேகமானவர்கள் நீண்டகால சிறைவாசம் அனுபவிப்பவர்கள். ஏனையவர்கள் மரண தண்டனை கைதிகளாக கொண்டுவரப்படுபவர்கள். அரசாங்கம் முடிவெடுத்தவுடன் அதிகாலை வேளைகளில் குற்றவாளிகள் நித்திரையால் எழுப்பிக் கூட்டிச்செல்லப்பட்டு ‘வாடிமுற்றம்’ என்றழைக்கப்படும் இடத்தில் வைத்து மரண தண்டனை வழங்கப்படும்.

இரத்தமும் சாவும் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று. அதில் குதூகலமாக புரண்டு எழும்பியிருக்கிறேன். உயிர்கள் என்றால் அவை வெறும் உடல்கள்தான் என்ற புரிதலோடு வளர்ந்து வந்தவன் நான். எனக்கும் எனது துவக்கிற்கும் இடையில்தான் ஆத்மார்த்தமான நெருக்கமிருந்திருக்கிறது. அதற்கு அப்பால், பாலன்மீது தான் ஏதோவொரு மெல்லிய உணர்விருந்திருக்கிறது. அதை கொடூரமாக இழந்தேன். இப்போது வைஷாலி அந்த இடத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறாள். இவற்றைக் கழித்துவிட்டு பார்த்தால், நானும் ஒரு துவக்குத்தான். எனக்குரிய உணர்வுகள் எனக்குள் இருந்ததைவிட வெளியேதான் நின்றிருக்கின்றன. அதைத்தான் நானும் விரும்பி வாழ்ந்திருக்கின்றேன்.

அப்படியிருக்கும்போது இந்த மரண தண்டனை முறைகளும் அதைச்சூழ்ந்திருக்கும் இருண்ட நிஜங்களும் உலகின் இன்னொரு பக்கத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்களாக தெரிந்தன.

(6)

ரண தண்டனை வழங்கும் எங்களை “மொபி” படையணியென்றார்கள். எனது கருஞ்சீருடையில் “மொபி 16” என்ற இலக்கம் பதிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எம்16 துவக்குத்தான் எல்லோருக்கும் தந்தார்கள். அமெரிக்க தயாரிப்பு. மினுங்கிக் கொண்டிருந்தது. முதன்முதலாக அதனை கைகளில் வாங்கியபோது, பாலன் அருகில் நின்று சிரிப்பதுபோல உணர்ந்தேன். என்னை அறியாமல் திரும்பிப் பார்த்தேன். கட்டோனா நின்று கொண்டிருந்தான். துவக்கோடு வேறு அத்தியாவசிய கருவிகள் அடங்கியதாகவே அந்த சீருடை இறுக்கமாக தயாரிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள் என்று எங்களைப் பார்த்தாலே அச்சப்படும்படியாக அந்த சீருடை அமைந்திருந்தது. தலையை முற்றாக மூடி கண்களையும் மூக்கையும் மாத்திரம் வெளியில் தெரியும்படியாக இறுக்கமான கவசமும் தரப்பட்டிருந்தது. சீருடை இலக்கத்தை வைத்துத்தான் கட்டோனாவை அடையாளம் காணக் கூடியதாகவிருந்தது. 

நாங்கள் நூஸா தீவுக்கு போயிருந்த அன்று நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றவாளி ஒருவனுக்கு மரணதண்டனை கொடுக்கவிருப்பதாக அறிந்தோம். அதிகாலை வேளை எங்களை தீவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு உடனடியாகவே காரியம் நடைபெற்றுவிடும் என்பது ஓரளவுக்கு தெரிந்தது. 

நீலநிற ரீசேர்ட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்த அந்த நைஜீரியன் வாடிமுற்றத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தான். நன்கு திரண்ட உடம்பு. சாவுக்குள் நுழையப்போகும் அவன் எப்படியிருக்கிறான் என்பதை அவனது முகத்தில் காணமுடியவில்லை. முகக்கவசம் அணிந்த அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அவன் சாவிலிருந்து தப்பிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் கவனத்தோடு கடைசி நேர சோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவனைக் கம்பத்தில் கொண்டுபோய் கட்டிய பிறகு பாதிரியார் ஒருவர் அருகில் சென்று தோத்திரம் சொன்னார். அதன் பின்னர், ஒன்பது துப்பாக்கிதாரிகளும் வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ‘எம்16’ துப்பாக்கிகளை எடுத்துச் சென்றார்கள். கம்பத்துக்கு முன்னால் கீறப்பட்டிருந்த வெள்ளைக்கோட்டில் முன்காலை வைத்து நின்று கொண்டார்கள். அவர்களில் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நைஜீரியனுக்கு அருகில் சென்று, அவனது இடப்பக்க மார்பில் வரையப்பட்ட வெள்ளை நிறவட்டத்தில் விரலை வைக்கவும், துப்பாக்கிகளின் அனைத்து லேசர்களும் அந்த வட்டத்துக்குள் குவிந்து கொண்டன. ஒருசில செக்கன்களில் அந்த இடத்திலிருந்த அதிகாரி துப்பாக்கிதாரிகளிடம் வந்து விட்டார். லேசர்கள் அப்படியே அவனில் அசையாது குத்தியபடி குவிந்து நின்றன. 

இவ்வாறு மரண தண்டனை பெறுபவர்களுக்கு கடைசிநேர வலி தெரியாமலிருப்பதற்கு போதையேற்றி விடுவதாக முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நைஜீரியனின் மூடப்பட்ட முகக்கவசத்துக்குள்ளிருந்து அனுங்கிய சத்தமொன்று தொடர்ந்து கேட்டபடியிருந்தது. முதலில், அது பாதிரியாரின் தோத்திரப்பாடலென்று எண்ணினேன். ஆனால், இப்போது அவன் அனுங்குவது தெளிவாக கேட்டது. காற்றில் மிதந்தபடியிருந்த இந்த உலகுக்கான அவனது கடைசிக்குரல் அவ்வப்போது விம்முவதும் அனுங்குவதுமாக இருந்தது.

ஒன்பது பேர் சுட்டாலும் அவர்களில் மூன்று பேரின் துப்பாக்கிகளிலிருந்துதான் குண்டு பாயும் என்றும் அது எந்தத் துப்பாக்கியென்று சுடுபவர்களுக்கும் தெரியாது. அதனை தயார்செய்து வைத்தவர்களுக்கும் தெரியாது என்றும் பயிற்சி வகுப்பின்போது படித்திருந்தோம்.

“பளீர்” – என்றொரு சத்தம் கேட்ட மின்னல் வேகத்தில் கறுப்பு துணியணிந்த நைஜீரிய மனிதனின் தலை இடப்பக்கமாக கவிழ்ந்தது. 

அத்தனை துப்பாக்கிதாரிகளும் வெள்ளைக் கோட்டிலேயே அசையாமல் நின்றார்கள். அவர்களின் தலைமை அதிகாரி தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு அருகில் – கறுப்பு கோட் அணிந்த மருத்துவரோடு சென்றார். சோதனை செய்வது தூரத்திலிருந்து பார்க்கும்போது தெரிந்தது. நைஜீரியனது உயிர் பிரிந்து விட்டதை மருத்துவர் உறுதி செய்துகொள்ள, துப்பாக்கிதாரிகள் அனைவரும் வரிசையில் வந்து, துப்பாக்கிகளை எடுத்த இடத்திலேயே வரிசையாக வைத்துவிட்டு அருகிலுள்ள மண்டபத்துக்குள் சென்றார்கள்.

எனக்குள் மீண்டும் கரும்புகை எழுந்தது.

இவன் யார்? இவனைக் குறிபார்த்து சுட்டுக் கொல்வதற்கு எனக்கு என்ன தேவையிருக்கிறது. இங்கு ஆயுதத்தோடு நான் சாகசம் புரிவதற்கும் புத்தகம் படிப்பதற்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. இங்கு வேண்டப்படுவதெல்லாம் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனின் உயிர். அவன் சடலமாக விழுகின்ற அந்தக்கணம் இந்தோனேஷிய சட்டத்துக்கு சேவையாற்றி விட்டதாக நான் பெருமைப்பட வேண்டும். அந்தப் பெருமைக்குக் கூடுதலாக எனக்கு பணம் தரப்படும்.

பாலனின் உயிரற்ற உடலைக் கண்டபோது நெஞ்சில் எழுந்த அந்த துப்பாக்கியின் மீதான வெறுப்பும் கசப்பும் இப்போது இந்த நைஜீரியனின் உடலைக் கண்டபோது மீண்டும் நெஞ்சுக்குள் அரித்தது.

ஆனாலும் என்னை என்னால் மீற முடியவில்லை. ஒரு இராணுவப் பயிற்சியின் வழியாக வந்தவனுக்கு உணர்ச்சிகள் என்பது உடலில் ஏறுகின்ற புழு. அவ்வப்போது அவற்றினால் சுகம் காணலாம். ஊர்ந்த இடங்களை சொறிந்து மகிழலாம். அதற்கப்பால் அதற்கு எந்தப் பெறுமதியும் கிடையாது.

வைஷாலியுடன் நடந்து சென்றபோது இட்டு நிரப்பிய எனது மனக்குழிகளை எண்ணிக் கொண்டேன்.

அடுத்த நாள் இடம்பெறவிருந்த மரண தண்டனைக்குரியவனை தீவுக்கு ஏற்கனவே கொண்டு வந்துவிட்ட காரணத்தினால் அன்று மாலையே எல்லோரையும் நேரத்தோடு படுத்துறங்கி ஓய்வெடுக்கும்படி எங்களது குழுத்தலைவர் கூறினார். நடுநிசியில் மீண்டும் தீவுக்கு வரவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நூஸா தீவுக்கு வெளியே நாங்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு, தீவுக்கு மிக அருகிலிருந்த படைத்தளமொன்றில் தங்குமிட வசதி செய்து தரப்பட்டது. அவரவர் தங்கள் அறைகளுக்குப் போக, நான் எனக்கான தனியறைக்கு வந்து நீராடி உடை மாற்றிக்கொண்டு வைஷாலிக்கு அழைப்பெடுத்தேன். மறுநாள் வேலையை முடித்துக் கொண்டுதான் வரமுடியும் என்றபோது, அவள் எனது குரலில் ஏதோவொரு மாற்றத்தை கண்டுபிடித்து விட்டாள்.

“ஒன்றுமில்லை. வந்து பேசலாம்” – என்றேன்.

“பிரச்சினையொன்றும் இல்லையே” – என்று திரும்பவும் கேட்டாள்.

“இல்லை” என்றுவிட்டு கட்டிலில் விழுந்தேன்.

எழுந்தபோது இரவு ஏழு மணி. மீண்டும் குளித்துவிட்டு வெளியில் சென்றபோது எல்லோருக்கும் படைத்தளத்தின் சாப்பாட்டறையில் உணவு தயாராகவிருந்தது. 

“நாளை இடம்பெறப் போகும் மரணதண்டனை ஒஸ்ரேலியாக்காரனுக்காம்”

காதருகே வாயைக் கொண்டுவந்து கீழ்குரலில் சொன்னான் கட்டோனா. 

உயிரைப் பறிக்கப்போகும் துப்பாக்கியை ஏந்துவது என்று வந்த பின்னர் எந்த நாட்டுக்காரனாக இருந்தால் என்ன?  ஒன்பது துப்பாக்கிகளில் எனது துப்பாக்கியிலிருந்து தான் தோட்டா பறக்கப்போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, இப்போதைய பதற்றத்துக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தட்டை கழுவி வைத்துவிட்டு உணவறைக்கு வெளியே வந்தேன்.

எல்லோரையும் சீருடைக்கு மாறிக்கொண்டு வரச்சொன்னார் அணித்தலைவர். பத்தரை மணியளவில் நூஸா தீவு நோக்கி எமது கறுப்பு பவள் வாகனம் விரைந்தது.

(7)

தீவிற்குள் நுழைகின்ற கிறவல் பாலத்துக்கு முன்பாக ஏராளமானோர் நின்று கொண்டிருந்தார்கள். ஜெனரேட்டர்கள் போடப்பட்டு பெரிய மின்விளக்குகள் தெருவில் ஒளி பாய்ச்சியவண்ணமிருந்தன. நடைபாதையோர பழக்கடைகள், தெருவில் நின்று சாப்பிடக்கூடிய உணவுக்கடைகள் என்று நல்ல வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பேய்த்தீவில் வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை இடம்பெற்றால், தீவின் வாசலில் கூட்டம் களை கட்டும். இவர்களுக்காக இங்கு இரண்டு நாட்களுக்காவது புதிய கடைகள் திறக்கும். இதில் இவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்றான் கட்டோனா.

சிறுவர்கள் தலையில் அன்னாசிப்பழ க்கூடைகளோடு கூடியிருந்தவர்களின் ஊடாக வேகமாக நடந்து நடந்து வியாபாரத்தில் மும்முரமாகவிருந்தார்கள்.

பேய்த்தீவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லையென்பதால், பாலத்துக்கு மிக அருகில் ஏகப்பட்ட ஊடகக்காரர்கள் தங்கள் கமராக்களை முக்காலிகளில் பொருத்திவிட்டு காத்திருந்தார்கள். அவர்களது கமராக்கள் எங்களது பவள் வாகனம் பாலத்தை நெருங்கியவுடன் ஒளிபாய்ச்சி படமெடுக்க ஆரம்பித்தன. எமக்குப் பின்னால் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்த வாகனம் பெரிய சத்தத்தில் ஒலியெழுப்பி எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஊடகக்காரர்களை கலைத்தது. அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலீஸாரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீதியின் இருமருங்கிலும் புதினம் பார்க்க நின்று கொண்டிருந்தவர்களை விலத்தி எமது வாகனம் போவதற்கு இடமெடுத்து தந்தார்கள்.

ஊடகக்காரர்கள் நின்று கொண்டிருந்த பக்கத்துக்கு எதிர்பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடுத்தது போன்ற தறப்பாளுக்கு கீழ் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒருவாறு நாங்கள் பாலத்திற்கு குறுக்காக போடப்பட்டிருந்த பொலீஸ் தடுப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தோம்.

நூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் முதல் நாளிரவு போல ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைக் கோட்டுக்கு போகவுள்ள ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதி செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினதும் கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினை சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தை சோதித்தார்.

சரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளைக் கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு எம்16 துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஒஸ்ரேலியாக்காரன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான். எங்களது அணித்தலைவர் வந்து எங்கள் முகக்கவசங்கள் கண்களை மறைக்கின்றனவா என்று சோதனை செய்துவிட்டு சென்றார்.

அப்போது அதே கிறிஸ்தவ பாதிரியார் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றை பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளை கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

மூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும்.

ஒரு தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எனது கைகள் இன்னொரு தேசத்தில் பிறிதொரு தேவைக்காக ஆயுதத்தை சுமந்திருப்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது.

ஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது?

நினைவுகள் மீண்டும் நெஞ்சில் சுரக்கத் தொடங்கியது. நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“பளீர்”

துவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே  உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன்.கடவுளே!

(8)

சாவினை சாட்சிப்படுத்துவதற்காக எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் கம்பத்தை நோக்கிச் சென்றார்கள். வாடிமுற்ற உதவியாளர்கள் வரிசையில் வந்து கம்பத்தில் கட்டிய கயிற்றினை கழற்றினார்கள். மெதுவாகச் சாய்த்து சடலத்தை துணிக்கட்டிலில் போட்டு கொண்டு சென்றார்கள்.

பவள் கவச வாகனம் கிறவல் பாலத்தின் மேலாக வெளியில் வந்தபோது மரண தண்டனைக்கு ஆதரவான இந்தோனேஷிய பொதுநல அமைப்பின் ஆதரவாளர்கள் எங்களது வாகனத்துக்கு முன்னால் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். ஊடகங்கள் தங்கள் கமராக்களை சுழற்றிச் சுழற்றி எங்களது வாகனத்தை படமெடுத்துக்கொண்டு நின்றார்கள். வாகன ஒலிச்சத்தங்களால் அந்த வீதியில் இரவு எழுந்து நின்று கொடு கொட்டியாடுவது போலிருந்தது. 

வீதியின் மறுபக்கத்தில் தரப்பாளின் கீழிருந்து ஓடிவந்த பெண் தரையிலிருந்த மண்ணை எடுத்து எங்களின் வாகனத்தை நோக்கி எறிந்தபடிக்கு “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்று தமிழில் கதறியதை கேட்டதும் அதிர்ந்து ஒடுங்கினேன். “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்ற தமிழ்தீனம் கேட்டுக்கொண்டே இருந்தது.

குருதிப் பொருக்குலரா கைகளோடு அந்த தாயின் குரல்வரும் திசை நோக்கி  மண்டியிட்டு “என் நிலமே என் நிலமே என்னைச் சபிக்காதே” என பிரார்த்தித்தேன். ஆனாலும் அந்தக்குரல் ஒரு சதுக்கத்தின் எதிரொலிப்பைப் போல என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது.

***

தெய்வீகன்

RELATED ARTICLES

6 COMMENTS

  1. ஒரு போராளியின் மனப் போராட்டத்தை மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் தெய்வீகன். பாராட்டுகள்! போர்ப்பாதையைக் கடந்து, மீத வாழ்வுக்கான வேறொரு பாதையைத் தெரிவு கொள்ளப் போனவனுக்கு மீண்டும் பழைய பாதையின் ஒரு பக்கச் சாலை தனக்கு முன்னால் வரவேற்பது நிச்சயம் தவிப்பிற்கானது.

  2. ஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது?

    Amazing

  3. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் மிகவும் வித்தியாசமான ஒரு சிறுகதையை படித்த உணர்வு வருகிறது. தெய்வீகனின் படைப்புமொழி சிறப்பாக அமைந்துள்ளது. தெர்ந்த வாசகர்களுக்கு முற்றிலும் புதிய களம் ஒன்றை தெய்வீகன் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆயுதங்களுடன் வாழ்ந்தவர்களின் வலிகளைப்பேசும் சிறுகதை. தெய்வீகனுக்கு எமது பாராட்டுக்கள்.
    முருகபூபதி
    அவுஸ்திரேலியா

  4. Sirappana oru kathai. Ayuthangaloodu vaazhpavanum oru manithan thaan enpathai kathai sirappaka siththaritullatu. Vaalthukkal.

  5. அற்புதமான மொழி. உணர்ச்சியும், முதிர்ச்சியும் கலந்த சித்திரிப்பும் விவரணையும். தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசி வாழ்ந்தாலும், நானறியாத நிலங்களில் தமிழர் வாழ்வு எங்கனம் இருக்கும் என்பதை அறிய இலக்கியமே துணை நின்றிருக்கிறது. அதுவும், ஈழத்தமிழரின் வலியையும், ரணத்தையும், வேதனையையும் உணர இக்கதை ஒரு நல்ல ஊடகம்.
    தெய்வீகன் கதையை மிக நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார். ஆனால் கட்டமைப்பையும் மீறிக் கொண்டு வாழ்வின் ஆதாரமான கேள்விகள் கதைக்குள் எழுப்பப்படுகின்றன. சக மனிதன் ஒருவன் வாழ்வைப் பறிக்க நேரிடும் நிலையில் நிற்பதென்பது துயரம் மிகுந்த தருணம். ஒரு பரபரப்பு மிகுந்த கதையில் நிதானமாகவே மானுட உளவியலை அலசியிருக்கிறார் ஆசிரியர். தெய்வீகன் என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராகி விட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular