Thursday, March 28, 2024
Homesliderஅன்பூ மணிவேல் கவிதை

அன்பூ மணிவேல் கவிதை

உயிர் குச்சிமிட்டாய்

உச்சிவெய்யிலுக்குத் தப்பமுடியாமல்
மல்லாக்கப் படுத்துக்கிடக்கிறது மந்தை.

எட்டுத் திக்குமாய் மந்தையைச் சுற்றிலும்
விரித்துப் போட்ட கேசத்தோடு
விளையாட ஆளில்லாது ஒற்றைக் காலில் அழுது புரளும்
ஆலமரத்துக் காற்றுக்குப் போக்குக் காட்டி
தாயம் உருட்டுகின்றனர்
காதுவளர்த்த
அப்பத்தாவும் கைக்கோலூனிய அப்பச்சியும்.

ஆண்டுக்கொரு முறையேனும் தேடிவரும் சனம்
தூக்கிவைத்துச் சீராட்டும்
திருவிழாக் கோலத்தைத் தொலைத்த இடம் தெரியாது
யாரிடம் குறி கேட்பதென்று
தறிகெட்டு நிற்கிறாரு
வீரவாண்டி அய்யனாரு.

இழுத்துப் பூட்டிய கதவிற்கு உள்ளே
தன் குசலம் விசாரிக்கக் குலக்குஞ்சு ஏதும் வாராதாயென்று எட்டியெட்டிப் பார்த்தபடி
ஏமாந்து மருகுகிறாள் மந்தை முத்தாலம்மன்.

முகஞ்சிதைந்து பொலிவிழந்து இறுதிமூச்சுக்கு
மன்றாடுகின்றன
ஏதேனும் திருவிழாவிலோ கொண்டாடப்பட்டு
இப்போது முடமாகிப் போன
பொறவியெடுப்புக் குதிரைகள்.

நாளுக்கு மூன்றுமுறையே வந்துபோகும் பேருந்துக்காய்
ஆறிப்போன காப்பியை அடுப்பிலேற்றி ஏற்றி இறக்குகிறார்
ஆளில்லாத் தெருவில் வெறுமை மேய்த்துக் கிடக்கும் டீக்கடைக்காரர்.

ஆசை தீரத் தன்னை
நக்கிச் சுவைக்கும்
பிள்ளைகளின் நா ருசிக்கு ஏங்கித் தவிக்கும்
குச்சிமிட்டாய்களின் உயிரிக்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது
தொலைந்துபோன
கொட்டுச் சத்தம் .

கையகல மந்தை விரிக்கும்
விட்டேத்திக் காட்சிகளைக்
கண்ணகலப் பார்க்கச் சகிக்காது
உறங்கியே கடக்கின்றன

***

அன்பூ மணிவேல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular