வேதநாயக் கவிதைகள்

0

1) கவிழ்தும்பை (வெண்ணிற உள்ளொடுங்கலில் கரும்புள்ளிகள்)

‘தாமோதரம் மங்களம்’
‘சர்வம் ஜனார்த்தனம்’
‘பூரண ஜகந்நாதம்’
‘சிவாய நம!’
‘ஸதாஸிவ குடும்பின்யை நம!’
‘ப்ரத்யட்க்ஷ தேவீ!’
‘ஸகலாதிஷ்டான ரூபாயை நம!’
‘சத்யரூபாயை நம!’
‘ஹே அம்பிகே!’
‘ஹே மகாமாயே’
‘சங்கர காமதே’

வேண்டலொலிகளுக்கான
நாமகரணக் கூப்பாடுகள்
செவிகட்கு எட்டாவிடினும்..

அவ்வாறே மீண்டும் எழுப்புக..!
/ஸ்மைலிகள்/

முன்மதிய பார்வைக்கு
பொட்டொன்று எரிவதாய்
வடகிழக்கு மூலையில்
நக்ஷத்திரமொன்று
சுடராகி பின் அணைதலில்
கலிக்கமிட்ட* விழிகளுக்கும்
பங்குண்டு

என்னாலல்லாது எனக்காக கொல்லப்பட்ட
மானின் தசை புசிக்கும் மிருகமவன் என்பதனால்
மரணமெனும் கங்கினை
மொய்க்கும் ஈ
இறகு தீய்ந்த பின்
அந்திமத்தை இணைவுச்சரமாய்
பிணைத்துக்கொள்ளலாம் என்கையில்
அதற்கு முன்பே..
கடபூதம்** நிற்கும்
வரைகோட்டின் மீது கால்பரப்பி
அதி அட்டஹாச த்வனியில்
யார் நிற்பதங்கே..?

த னி த் த னி யா க
கிளைத்து பரவி
சாகாக்கால் கொண்டு
அருளமுதமாம்
போகாப்புனலில் நீராட
மயிர்பால ஊஞ்சலில்
நடக்கத் தடுமாறி
படுத்தபடி இறுகப்பற்றி
தவழ்ந்து நகரும் ‘மெய்’-யை
பொய்யெனலாமோ
இச்சொல்.?

அரனறி..வோ..ம்.

*கண்பார்வை கூர்மையடையும் மருந்து
**பிணத்தின் தலைப்பக்கம் உடைக்கின்ற குடத்தின் நீரினை அருந்தும் பூதம்

***

2) நாமொரு அழைப்பு

Elsa Henriquez_க்கு
சமர்ப்பிக்கப்பட்ட
Prévert-ன் To Paint the Portrait of a Bird
முடிவில் வரும் இறகுகளில் ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
ஓவியத்தின் மூலையில்
எழுதுக உன் பெயரை என்ற
சொற்றொடர் மேல்
அதி தீவிர கடும்
விவாதத்திலீடுபடுகையில்
கை நழுவிப்போன வண்ணங்கள்
வீழ்ந்தபடியேயிருக்கிறது
தரை மோதாமல் மிகக்கொஞ்சம்
மேலேயே..
அப்பறவைக்கு மிகு பாரமாம்
சொற்களின் பொதி.

பிறக்கவொன்று
அறுக்க ஒன்று
உட்புக மற்றொன்று
வெளியேற இன்னொன்று
அகப்பட ஒரு கன்னித்திரை
மாயை அகற்றப்பட ஒரு திரைச்சீலை
கீழ்திரை கிழிபடுமாம்-அம்மாயை
மேல்திரை விலக்கினால்-அச்சாயை
விலகினால், விலக்கினால்
நடந்தால், நடக்காமலிருந்தால்
நிகழ்த்தப்பெறும் ஆட்டத்தில்
கேளாமல், பேசாமல்
அனர்த்த பூமி மலர்ந்திருக்கிறது.

இருதயத்தின் சுடர் சிகப்புக்கமலம்
அடர் மென்மையை மாலைகளில்
வதங்க விடுகிறது.
மா விருக்‌ஷத்தை
வேரோடு பிடுங்க முனையும்
அசட்டு ஹெர்குலஸுக்கு
உன்மத்தத்தில் மலர் கிள்ளும் இலாவகம்
வெட்கத்தை உற்பவிக்கிறது.

இரு கைப்பிடிக்குள் அடங்கும்
தசைப்பொதியான மூளை
அது அதனுடைய
சலவையையோ, சாவையோ
நொதித்துத் துலங்கும்
பூஞ்சைகளின் நெடியால்
நாசிக்கமறும் தடுமாற்றமே
இஃது.

எதுவெழுதும் இனி
பருவடிவிலான துயரை..?

***

3) இதனின் கண் அனைத்தின் சார்பாக

விமோசனத்திற்கான பலவழிகளில்
சென்று சேரும் கதவுகளாயிருக்கின்றன
மன்னிப்பது மட்டுமே ஒரேவழி அல்ல.
எதிரிடைக் குறியீடுகளில்
ஒளிந்திருக்கும் மறைபுதிர்களில்
எப்போதுமே வசீகரத்தன்மைக்கு
மாற்று எதுவுமில்லாமலிருப்பது தான்.

சூழலின் அழகானது அதை
தெரிந்து கொள்ள வழி இல்லை என்பது
ஒளிக்கீற்றுகளை மறைக்கும்
நினைவின் அரக்கத்தனமான
கூரைகளாக இருப்பதாய்.

தன் உரோமக்கால்களில் பிசுபிசுப்பை
அடர்த்தியாக்கி வைத்துள்ளது
எண்ணெய் தடத்தைத் தொடரும்
தீயெனப் படர்ந்து வருதல் போலொரு நிஜம்.
உருகியோடிடும் தார் குழம்பு
தமது கற்பை பாதுகாத்திருக்கும்
பெண்ணொருவளின் கண்ணியத்தின்
ஒப்புமையாய்
இளஞ்சூட்டோடு ஆறாமல்  அடைகாத்திருக்கிறது.

பிரபஞ்சத்தை நிரப்புவதற்கு
வெளியே முடிவற்று பூத்துக் குலுங்குவதாய்
காதலொரு முடிவுறும் முழுமுற்றான
விளையாட்டல்ல..
பகிர்ந்துகொள்ள நிறைய
இருப்பதும் கூட அல்ல.
நமக்குத் தேவைப்படும்போது
இருதயமானது
முடிவுறா புடைப்புச் சிற்பத்தின்
சோக நெறியில் காலவெளியில்
கட்டளையிடாமல் கால்மாற்றி
நிற்கும் பாவனையில்
இருந்து விடுவது தான்.

வசீகரமற்ற தொழில்நுட்பவாதி
தன்னை விடுவித்துக்கொள்கிறான்
இனிமேலும் படைக்க நினைப்பதாய்
கொண்டிருந்த கருதுகோள்களின் மீது
கடுக்காய் கலந்த வெல்லப்பாகின்
கொதிநிலையை ஆறவிடாமல்
மேலள்ளி அவ்வெண்ணங்களின்
தடயங்கள் சிறிதும் புலப்படாதவாறு
மறைத்துக் கொள்கிறான்

தேவைகள் : நுட்பமும் நுணுக்கமும்.
மூர்க்கத்தனமும் எதன்மீதும் பிடிப்புமல்ல என்பதாகலின் படி,

ஆக.. திட்டமிடுகிறோம்..
கடவுள் முறுவலிப்பாராக.

***

வேதநாயக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here