Friday, March 29, 2024
Homesliderமுன்னர் அவன் நாமம் கேட்டாள்

முன்னர் அவன் நாமம் கேட்டாள்

காலம் செல்வம்

பெயர் என்ன..? பெயர் தானே எண்டிட்டு எங்கட பெயரைச் சும்மா சொல்லிப்போட்டு போகேலாது. அகதியாய் வெளிநாட்டிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு அதிகாரிகள்  எங்கடை பெயரை சொல்லத் தெரியாமல் நக்கலும் கலந்து பிழையாய்ச் சொல்ல, எங்கட தாழ்வுச் சிக்கல் அங்கேயே தொடங்கிடும். இத்தனைக்கும் அவங்கடை பெயரைப் பார்த்தால்  ஸ்ரோன், பிறவுன். பிளாக், வூட் என்ற மாதிரி மனிசருக்கு ஏத்த பெயரா இருக்காது. கல், கறுப்பு, மரம் எண்டு தமிழில கூப்பிட்டா எப்பிடியிருக்கும்?

பெயராலையும் சண்டை வரும் எண்டு நான் அறிஞ்சது லோறன்சின்ர இரண்டு தம்பிமாரும் “பனியன் “கிறிஸ்தோப்பனை அடிச்ச நேரத்திலைதான்.

இந்தப் பிரச்சனை கோவில் சபை வரைக்கும் போச்சுது.

தன்னை கிறிஸ்த்தோப்பன் ‘ஒளஞ்சு, ஒளஞ்சு’ என்று கூப்பிடுகிறான் எண்ட தன்னர வாதத்தை லோறன்ஸ் முன்வைச்சார். 

பனியன் சொன்னான், தனக்குக் கொன்னை இருக்கு. தன்னால அந்தப் பெயரை வடிவாயச் சொல்ல முடியாது எண்டு. 

சுவாமி மரியாம்பிள்ளை “எங்கை ஒருக்கால் திருப்பிச் சொல்லு பார்ப்போம்” எண்டு கேட்டபோது, பனியன் ‘ஒளஞ்சு’ எண்டே சொன்னான்.

சுவாமி பனியனைப் பார்த்து, “இனிமேல் நீ உன்ர வாழ்க்கையில எண்டைக்கும் லோரன்சு என்ற சொல்லே சொல்லப்படாது. அது புனிதற்ரை பெயர்” எண்டார். பிறகு லோறன்சைப் பார்த்து, அவன் பாவம் அவனுக்கு கொன்னை. நீங்கள் அவனுக்கு இனி அடிக்கப்படாது என்று கூறித் தீர்ப்பு வழங்கினார்.

ஆனாலும் கடைசி வரைக்கும் அவரைச் சிலபேர் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஒளஞ்சு என்றே நக்கல் அடித்தார்கள்.

இரண்டாவது பெயர் பிரச்சனை, எனக்கு ரஸ்சிய நாட்டின்ர தலைநகர் மொஸ்கோவில் ஏற்பட்டது. பெல்ஜியத்திற்க்கு போறதுக்கு மொஸ்கோவில் மூன்று நாள்கள் இணைப்பு விமானத்துக்காக காத்திருக்க வேணும்.

எங்கட பாஸ்போட்டுகளை விமான அதிகாரிகள் வேண்டி வைச்சிட்டு ஒரு நம்பர் போட்ட துண்டு தருவாங்கள்.

ஹோட்டலில இரண்டு இரவு தங்கி விட்டு விமான நிலையம் வந்து காத்திருந்தோம்.

அவர்கள் பெயர்களைக் கூப்பிட அந்தத் துண்டைக் கொண்டுபோய்க் கொடுத்து பாஸ்போட்டை வாங்கிக் கொள்ள வேணும்.

நாங்கள் மூன்று தமிழர்கள் ஒன்டாய் நிண்டம். என்ன பெயரைக் கூப்பிடுகிறார்கள் என்று உற்று கவனிச்சுக் களைச்சுப் போற நேரத்திலை, என்ர பெயரை ஒருமாதிரி விளங்கிக் கொண்டு ஓடிப்போய்  பாஸ்போட்டை வாங்கிட்டன்.

மற்ற நண்பர் ஒருவருக்கு இன்னுமொரு அரைமணித் தியாலம் போச்சுது. கதிர்தான் பாவம். அவன்ரை பெயர் கூப்பிடப்படவே இல்லை, அவன்ரை முழுப்பெயர் சிவராஸசிங்கம் பொன்கதிர்காமநாதன். நாங்களும் ஒலி வாங்கியின்ர அறிவிப்பை உற்றுக்கேட்டு கொண்டிருந்தோம். மூன்று மணித்தியாலம் ஆயிற்று. இன்னும் ஒரு மணிநேரத்தில் பெல்ஜியம் போற விமானம் புறப்படத் தயார் எண்டு அறிவிப்பு பலகையில் போட்டு விட்டார்கள்.

கதிருக்கு அழுகை வந்துவிட்டது. இந்த விமானத்திலை ஏற முடியாட்டால் என்ன செய்யிறது? கட்டாயம் பிடிச்சு இலங்கைக்கு திருப்பி அனுப்புவார்கள். எனக்கும் பதைபதைப்பா இருந்தது.

ஒண்டாய் வெளிக்கிட்டு வந்த நண்பனை இடையில விட்டுவிட்டு நாங்கள் எப்படி போறது?. பெரிய சோதனையாக இருந்தது. ஒரு மாதிரி ‘இன்பமேசன்’ சென்ரரைக் கண்டுபிடிச்சுக் கதைக்கப் போக, அவர் தனக்கு நாலு மொழிகள் தெரியும் ஆனால் அதிலை ஆங்கிலம் இல்லை என்றார்.

“ஆங்கிலம் தெரிந்த அதிகாரியை அவர் வரவழைத்த போதுதான்; எங்களுக்கு ஆங்கிலம் சரியாய் தெரியாது” எண்டுறது எங்களுக்குத் தெரிய வந்தது.

“கடவுளே எண்டு கை எடுக்கிறதைத் தவிர வேறு வழியல்லை” எண்டு புலம்புற நேரத்திலைதான் ஒரு இந்தியத் தமிழர் எம்பிட்டார். அவர்தான் அந்த ஆங்கிலம் தெரிந்த அதிகாரியுடன் பேசினார். அவர் கதிரின் முழுப்பெயரையும் எழுதித் தரும்படி கேட்டார். அவர் அதைக் கொண்டுபோய் அந்த ஆங்கிலம் தெரிந்த அதிகாரியிடம் காட்ட, அவர் ஏதோ சொல்ல, அந்த இந்தியத் தமிழரும் எக்காளம் போட்டுச் சிரித்தார்.

எங்களுக்கு விளங்கேல்ல.. ஏன் சிரிகிறியள் எண்டு கேக்க,

இது பெயரா? அல்லது சிறுகதையா? எண்டு அந்த அதிகாரி கேக்கிறார் எண்டார். பிறகு ஒரு உரிய அதிகாரியிட்ட போய், பாஸ்பாட்டை வாங்க, அவர் சற்றுக் கோபமுடன், பத்து தடவைக்கு மேல் ஒலிபெருக்கியில் இப்பெயரை கத்தியாதாகவும், பெயர் பெரிதாக இருந்தபடியால் வாசிக்க முடியாமல் மூன்றாய் பிரித்து வாசித்ததாகவும் கூறினார். அங்கை சேர்ந்து சிரிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

ஒடிப்போய் விமானத்தில் ஏறினோம். கதிருக்குக் கடுப்பும வெட்கமுமாய் இருந்தது. ‘என்னர அப்பன் மொஸ்கோ வாழ்க’ மொஸ்கோ வாழ்க’ என்று எத்தனை தரம் தன் வாழ்க்கையில கத்தியிருப்பார்.

யாழ்ப்பாணத்தில் சித்தாந்தப் பிளவு ஏற்பட்டபோது சோவியத் புத்தகக் கடையை மற்றவங்களுக்கு போகவிடாமல் பண்ணுவதற்காக அடிபட்டு கொஞ்சநாள் மறியலிலும் இருந்தவர்.

‘சீனக்காரன் சொல்லுறது போல, இவங்கள் நவீன திரிபுவாதிகள்… பார்த்தீங்களே என்னர பாஸ்போட்டை சுத்தப் பார்த்தாங்கள்’ எண்டு ஏதோஏதோ சொல்லிப் புறுபுறுத்த வண்ணமே பயணம் செய்தார்.

பாரிசுக்கு வந்து ஒரு வேலை கிடைச்ச அண்டைக்கு அந்தப் போத்துக்கீச பெரியவன் என்ர பெயரைக் கஸ்ரப்பட்டுக் கூப்பிட்டு, என்ன வேலை.. எண்டும்  யாரோடை சேர்ந்து பழக வேண்டும் எண்டும் சொன்னார்.

எனக்கு வேலைப்பயிற்சி தந்த ஆபிரிக்க பெண் மிக நல்லவ.  “இங்கை இப்படி நீளமாக ஒருவரும் பெயரை சொல்ல மாட்டினம். யாரும் உன்ர பெயரைக் கேட்டால் சவரிமுத்து அருளானந்தம் எண்டு முழுப் பெயரையும் சொல்லாமல் சவரி எண்டு சொல்” எண்டா.

அது ஒரு கிழமை கூட நீடிக்கவில்லை. என்னர பெயர் சவரி என்ற கேள்விப்பட்ட இன்னொரு அரபுப்பெண் என்னிட வந்து, சவரி எண்டு உன்னர பெயரைச் சொல்லாதே. இங்கு வேலை செய்யிற பெரும்பான்மை ஆட்கள் அரபுக்காரர். சவரி எண்ட சொல்லுக்கு அரபில் கூடாத  கருத்து இருக்கு. சரி.. வேறு பெயருக்குத் தாவினன். 

ஆறு மாதத்திற்கு மேலை அவ்விடத்திலை வேலை செய்தன், ஒரு நிலையான பெயர் கடைசி வரைக்கும் கிடைக்கவில்லை.

வேலை இல்லாமல் அங்க சும்மா இருக்க இயலாது. பிரெஞ்சு மொழி கொஞ்சமெண்டாலும் படிச்சாத்தான் அரசாங்க உதவி கிடைக்கும். பிரஞ்சு படிக்கிறத்துக்கு அப்பிளிகேசன் அனுப்பிப் போட்டு அங்கு போய் எப்படி என்னர பெயரைச் சொல்வது எண்டுறது பெரிய கவலையாய் இருந்தது.

எனக்கு அம்மாவிலைதான் கோபம் வந்தது. “என்னர நண்பர்களைப் போல சேவியர், பீலிக்ஸ், பீற்றர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏனம்மா அருளானந்தம் என்று பெயர் வைச்சனி?” என்று ஒருமுறை கேட்டபோது “அதையேன்ரா கேட்கிறாய் உனக்கு ஸ்-ரீபன் ஞானச்செல்லம் எண்டும் தன் அண்ணனன் மகனுக்கு எட்மன் ஞானச்சிங்கம் எய்று பெயர் வைக்க தீர்மானித்ததாகவும்,  உனக்கு ஞானஸ்தானம் குடுக்கேக்கை குருவானவரிடம் உன்ர பெயரை எழுதிக் கொடுத்தேன் அவர் போத்துக்கல் நாட்டுக்காரர். அவற்ரை பெயர் வாதர் டெய்சி  அவர்தான் பங்குக் குருவாயிருந்தவர். அவர் யாழ்பாணத்திலை இருபது வருசத்துக்கு மேலை வாழ்ந்தவர். அந்தச் சுவாமிக்குத் தமிழ் எண்டா உயிர். ‘மரணித்தாள் மகள்’ என்ற தமிழக் கதைப்புத்தமும் எழுதினரவல்லோ. இந்தமாதிரி வெளிநாட்டுப் பெயர் எல்லாம் வேண்டாம், கிறிஸ்துவுக்காக இந்தியாவில் உயிர்விட்ட அருளானந்தம் என்ற புனிதற்ரை பெயரையே உன் மகனுக்கு வைக்கிறேன் என்று உறுதியாய்ச் சொல்லிப் போட்டார்.”  எண்டா.

பிரெஞ்சு படிக்கிறத்துக்கு இடம் கிடைச்சுது. படிப்பிக்கிற ரீச்சர் நல்ல அழகி. சரியான முற்போக்கானவ. கொமியுனிசக் கட்சியோ தெரியேல்லை. பல நாட்டுக்காரர் அந்த வகுப்பிலை இருந்தாலும் அங்கையிருந்த ஐந்தாறு இலங்கைப் பெடியங்களிலை மிகவும் அக்கறையாய் இருப்பா.

அப்பத்தான் 83 ஆடிக்கலவரம் நடந்து முடிஞ்சிருந்தது. அதைப்பற்றி அக்கறையோட எங்களிட்டைக் கதைப்பா. 

ஒருநாள் தன்னுடைய பிறந்தநாள் எண்டு ஒரு தேனீர் விருந்துக்கு ஒழுங்கு செய்தா. கேக் வெட்டி தேத்தண்ணீர் கோப்பியோடை சில பலகாரங்களும் வேண்டி எங்கள் எல்லோருக்கும் தந்தா.

அது முடிய ஒரு அறிவிப்புச் செய்தா. ஒவ்வொரு நாட்டுக்காரரும் தங்கடை மொழியிலை ஒரு நாடகமோ கவிதையோ பாடிப்பேசி  நடிச்சு மற்றவைக்குக் காட்ட வேண்டும் எண்டு.

சொன்ன உடனேயே ஒரு சிலி நாட்டு பொடியன் எழும்பி, மிக உணரச்சியோடை வசனம் பேசி, நெஞ்சில் துப்பாக்கி குண்டு பட்டது போல நடிச்சு எல்லோர் பாராட்டையும் பெற்றான்.

பிறகு ஒரு பிலிப்பைன் பெண் எழும்பி தன்ரை “மொழியில் ஒரு பாடலை பாடினாள். இரண்டு கொலம்பியப் பெடியன்கள் சேர்ந்து பேசிப்பாடி நாடகம் போல் செய்து மகிழ்வித்தார்கள்.

இனி எங்கட பெடியளுக்கு முறை வரப்போகுது. எல்லோரும் பம்பிக் கொண்டு இருந்தார்கள். விஐயநாதன் என்னைப் பார்த்து “நீதான் ஏதாவது செய்ய வேணும். நாங்கள் தமிழரல்லோ.. எங்கடை திறமையைக் காட்ட வேணும்”  எண்டு எனக்கு என்னை ஏத்திக்கொண்டு நின்றான்.

வகுப்பு வந்த முதல்நாளிலை இருந்தே அவனுக்கும் எனக்கு சரியாப் போறதில்லை. வகுப்பு தொடங்கின முதல்நாள் மார்ட்டினா என்ற அந்த ரீச்சர் எங்களப் பார்த்து “உங்கடை இந்து மதத்தைப் பற்றி அறிந்து கொள்வது என்றால் எந்த புத்தகத்தை படிக்க வேணடும்” எண்டு எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்க, நான் அவசரப்பட்டு எழும்பி ‘பகவத்கீதை’ எண்ட புத்தகம் எண்டன்.

விஜயநாதன் கோபத்தோடு எழுப்பி “தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்ற மூன்று மொழிகளையும் கலந்து என்னைப் பாத்துக் கத்தத் தொடங்கினான். “பகவத் கீதை வடக்கன்ரை புத்தகம். உவன் வேதக்காரன் உவனுக்கு ஒண்டும் தெரியாது. எங்கள் சைவ சமயத்தைப் பத்திப் படிக்கக் கனக்கப் புத்தகம் தமிழிலை இருக்கு எண்டு” சத்தம் போட்டான்.

ஏதோ வில்லங்கம் என்று மார்ட்டீனாவுக்கு விளங்கிவிட்டது. அந்தக் கதையைத் தாண்டி வேறு கதைக்குப் போயிற்றா. அதன்பிறகு நானும் விஜயநாதனிட்டை இருந்து கொஞ்சம் விலத்தித்தான் நடந்தன்.

அதையெல்லாம் இப்ப மறந்த விஜயநாதன், “எங்களுக்குள்ளை நீதான் ஏதாவது செய்வாய். எங்களைப் பற்றி மற்றவர்கள் குறைவாய் மதிக்கற மாதிரி விடப்படாது.  மச்சான் எழும்பி ஏதாவது செய்யடா” எண்டான். எனக்குள்ளையும் ஏதாவது செய்ய வேணும் எண்ட யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

சின்ன வயசிலை பெரியம்மாவின்ர மகன் ரத்தினம் அண்ணவோடைதான் திரியிறனான். அவருக்கு சிவாஜி பைத்தியம். சிவாஜின்டை புகழ்பெற்ற வசனங்கள் எல்லாம் பேசுவார். ஊரிலையும் சில நாடகங்களிலை நடிச்சவர். படிப்பு பெரிசா வராது. எஸ்.எஸ்.சி இரண்டு தரம் பெயிலாகிட்டுப் பெரியப்பாவிட்டை சரியா வாங்கிக்கட்டினவர். 

ஒருநாள் வழமைபோல, ஒரு நாடகத்தை வீட்டில் நடித்து பயிற்சி எடுக்க வெளிக்கிட்டார். தகப்பன் இல்லாத நேரங்களில இது வழமைதான். அவருக்கு உதவியாளர், பார்வையாளர் எல்லாம் நான்தான்.

அவர் சாம்பராட் அசோசன் வசனம் பேசிக்கொண்டு நடுமேடைக்கு வரும்போது, அவர் வந்து கால் வைத்து வசனம் பேசச் சரியான இடத்திலை கதிரையைப் போட வேணும். அத்தோடை கைதட்ட வேணும். அவர் அடிக்கடி வசனங்கள் பேசப்பேச எனக்கும் அது பாடமாய் இருந்தது.

அந்த நேரம், தொழிலாலை களைச்சு போய் வந்த பெரியப்பாவை நான் காணேல்லை.

இரத்தினம் அண்ணை பெரிய உசராய் வந்து, ஒரு காலைக் கதிரையிலை வைச்சு சிவாஜி திரும்பிற மாதிரி ஸ்ரைலாத் திரும்பி “என்ன சொன்னான் கலிங்க நாட்டான்” என்று சொல்லேக்கை தகப்பனைக் கண்டிட்டார். மிச்ச வசனத்தை சொல்லாமல அவர் நிற்க, நான்  “அந்நிய சிரேஸ்ராம் அவனியெங்கும் காணமுடியாத ஞான பண்டிதனாம்” எண்டு சொல்லிச் “சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே” எண்டன்.

கடுங்கோபத்தோட பாய்ஞ்சு வந்த பெரியப்பா, “என்ன சொன்னான் கலிங்க நாட்டானோ..? உன்ர கோத்……….” எண்டு சொல்லி அண்ணருக்கும் அடிச்சு எனக்கும் அடிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

“யாரும் சிறிலங்கன் முன்னுக்கு வாங்கோ” எண்டு மார்ட்டினா டிச்சர் கூப்பிட, நான் முன்னுக்குப் போனேன்.

நேற்றே தெரிந்திருந்தால் இந்த வசனங்களை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்திருக்கலாம், சரி சமாளிப்போம் எண்டு நினைச்சுக் கொண்டு வகுப்புக்கு ஒரு வணக்கத்தை வைச்சன். ஒரு நிமிசம் தடுமாறிக் கொண்டுதான் இருந்தன். பிறகு “என்ன சொன்னான் கலிங்க நாட்டான்..”  எண்ட சாம்ராட்  அசோகன் நாடக வசனத்தைச் சொல்லத் தொடங்கினன். சொல்லேக்கை இடையிலை அது மறக்க, கட்டபொம்மன் வசனங்களை எடுத்து விட்டன். “நீலவானிலே செந்நிற பிழம்பு. அது நீ  எனக்கு வைத்த  இந்த நீலநிறப் பொட்டு. எங்கு நிறைந்த பொருளாய் நம் ஏற்ற நினைத்த..” எண்ட இந்த வசனமும் இடையில மறக்க.. ஏ எட்டப்பாஇ ஈனச்சொல் பேசாதேஇ நாவை எடுத்தெறி. வாழ விரும்பினாய்இ வல்லவனை அழித்தாய்இ இனி நீ வாழ்ந்துகொள். வீரம் விலையற்றதென்றாய்இ வீணரை வணங்கினாய்இ வேண்டுவதை வாங்கிக்கொள். கூலி கேட்டாய்இ கும்பிட்டாய்இ கோழையானாய்இ கூலியை பெற்றுக்கொள். ஆனால் அந்நியன் உன்னை போற்றவேண்டும்இ அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக்கொடுத்தாய்இ நான் காட்டிக்கொடுக்கப்பட்டேன். நாம் இருவரும் இதே மண்ணில் விளைந்தவர்கள் தான். உன்னை கேடு சூழினும்இ ….  இதுவம் இடையிலை நிற்க பாரதி கவிதை நினைவுக்கு வந்தது.  “ஆப்பிரிகத்து காப்பிரி நாட்டிலும் தென்முனை அடுத்த தீவுகள் பலவாய்ப் பரவியுள்ள இத்தமிழ்ச் சாதி காலடியுண்டும் கயிறடியுண்டும்..” இதுவும் மறந்து போக.. கீறல் விழுந்த சீடி மாதிரி இரண்டு தரம் “காலடியுண்டும் கயிறடியுண்டும் வருந்திடும் வருந்திடும்” எண்டு சொல்லி முடிக்க,

எல்லோரும் பெரிதாய்க் கைதட்டினார்கள். மாடீனா ரீச்சர் என்ரை தமிழ் வசனத்திலை மயங்கி  தடுமாறிப்போனா.

அவ என்ரை முகத்தைப் பார்த்து, “அருள் திரும்பவும் டும் டும் என்று வரும் என்ற அந்த கடைசி வரிகளைத்  திருப்பிச் சொல்வீர்களோ எண்டா.

என்னை அவ, ‘அருள்’ எண்டு கூப்பிட்டது திக் எண்டு இருந்தது.  

“காலடியுண்டும் கயிறடியுண்டும் வருந்திடும் வருந்திடும்” திருப்பியும் நாலுதரம் எடுத்து விட்டன்.

மார்ட்டீனாவும் மற்ற மாணவர்களும் பெரிதாய்க் கைதட்டினார்கள். மொழி விளங்காவிட்டாலும் ஒரு மொழியின்ர ஓசையைக் கேட்பதிலை ஒரு சுகம் இருக்கிறது எண்டுறதை நான் தெரிஞ்சு கொண்டன்.

அவவே மற்ற மாணவர்களுக்குச் சொன்னா.. இவற்றை பெயர் கொஞ்சம் பெரிது. நீங்கள் எல்லோரும் இனி இவரை அருள் எண்டு கூப்பிடுங்கள் எண்டா.

ஆகா.. என்ன அருமையான பெயர். அதுக்குப் பிறகு என்ர பெயர்ப் பிரச்சனை தீர்ந்து போச்சுது.

இன்றுவரை கனடாவிலை நண்பர்கள், வீடு, தவிர மற்ற எல்லா இடங்களிலும் அருள் என்ற அருமையான பெயரால் அழைக்கப்படுகின்றேன். மாட்டீனா ரீச்சர் நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

கனடா மொன்றியல் நகரத்துக்கு வந்த பிறகு, இன்னொரு பிரச்சனை வந்தது.

மொன்றியலிலை என்னை வரவேற்றுப் பராமரித்த நண்பர் யாழ்ப்பாணத்திலை எனக்கு மிக நெருக்கமானவர். அவர் மொன்றியலிலை ஒரு கிறிஸ்தவ சபையிலை சேர்ந்து போதகராய் இருந்தார். பாரிசிலை இருக்கேக்கை கேள்விப்பட்டதுதான். எனக்கு அதுபற்றிப் பிரச்சனையில்லை, தன்னுடைய சபையிலை ஒரு ஆள் கூடிவிட்டது எண்டறதில அவருக்குப் பெரிய மகிழச்சி. 

நான் வந்தவுடனேயே எனக்கு வீடு எடுத்துத் தந்து இமிகிறேசன் வேலையெல்லாம் பார்த்து வெல்பெயர் காசுக்கும் ஒழுங்கு பண்ணித் தந்தார்.

வெல்பெயர் காசை எடுத்துக் கொண்டு சும்மா திரியேக்கைதான் இன்னொரு சொந்தக்காரர் சொன்னார், “இந்த நேரத்திலையெல்லோ உழைச்சுச் சம்பாதிக்க வேணும். வேறை ஆற்றையும் வேர்க் போமிற்றிலை நீ வேலை செய்தால், அந்தக் காசைத் தேவையான செலவுகளுக்குப் பயன்படுத்திப் போட்டு, வெல்பெயர் பணத்தை அப்படியே மிச்சம் பிடிக்கலாம்” எண்டார்.

எனக்கும் ஆசை வந்தது. வேர்க் பொமிற்றை யாரிட்டை கேட்பது என்று யோசிச்சுக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் என் போதக நண்பரும் அவரின் உதவியாளர் எலியாசும் பேசிக்கொண்டிருந்தம். அந்த நேரத்திலை போதகரிடம் ஆலோசனை கேட்பது போல வேலைக்குப் போகவேணும் எண்ட கதையை சொன்னன்.

போதகர் உடனேயே ‘அது பிழையல்லோ?’ எண்டார். உடன எலியாஸ் “சீ சீ அது ஒன்றும் பிழையில்லை. நான் வந்தபோதும் ஒரு வருடம் அப்படித்தான் செய்தன்.  நீங்கள் வேலை செய்யாமல் உங்கடை பேப்பர் சும்மாதானே கிடக்கு. பாவம் இந்தாள் இப்பதானே கனடாவுக்கு வந்தது. உங்ககடை  வேர்க் போமிற்றைக் குடுங்களேன்” என்றார்.

போதகர் யோசிச்சுக் கொண்டிருக்க, “நீங்கள் இன்கம் ரக்ஸ் செய்யேக்கை உங்களுக்குக் குடும்பம் எண்டபடியால் அவர் வேலை செய்து கட்டின வரி உங்களுக்குப் பணமாய்த் திரும்பக் கிடைக்கும்” எண்டார் எலியாஸ்.

போதகர் வேர்க் போமிற் தாறதுக்குச் சம்மதித்தார். பீற்றர் செபரத்தினம் என்ற அந்த பெயரேடை என் வீட்டுக்குகிட்ட இருந்த ஒரு பாஸ்ட்பூட் உணவகத்திலை வேலைக்குச் சேர்ந்தன்.

இப்போ என்ர பெயர் பீற்றராய்ப் போயிற்று. கிழமைக்கு மூன்று நாள் வேலை எண்டு சேர்ந்து பிறகு ஐந்து நாளாயிற்று. மணித்தியாலத்திற்கு ஐந்து டொலர் சம்பளம். பெயர் மாறினால் என்ன.. காசு வருகுது தானே.

இப்படி ஆறேழு மாசங்கள் கழிய, இன்னொரு பிரச்சனை நடந்தது. போதகருக்கும் அவரின்ர உதவியாள் எலியாசுக்கும் பிரச்சனை வந்து 17 பேர் கொண்ட சபை இரண்டாய் உடைச்சு போச்சுது. இந்த உடைவின்போது என்ர தலைதான் உருண்டது. எலியாஸ், போதகர் எனக்குப் பேப்பர் தந்த கதையை எல்லோருக்கும் சொல்லிப் போட்டார்.

போதகர் பயந்து போனார். என்னை வேலைக்கு போக வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டார்.

நான் வேலையிலை நல்ல பெயர் வாங்கி, இப்ப டிலிவரிகளைக் கணக்கெடுக்கிறது டைனிக் கோலை மேற்பார்வை செய்யிறது, இடையிலை சமைக்கிறது எண்டு உயர்ந்திருந்தன்.

எனக்குப் பெரிய அந்தரமாய் போச்சு. ஆனால் போதகருக்கு தீங்கு செய்யப்படாது. போதகர் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்ன அடுத்தநாளே வேலைக்குப் போய் முதலாளியிடம், “நாளைக்கு தொடக்கம் வேலைக்கு வரமாட்டன்” எண்டன்.

முதலாளி சிரித்தார். “என்ன லீவு வேணுமோ? நீ வேலைக்கு சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. ஒரு வருடத்திற்கு பிறகுதான் வக்கேசன்” எண்டார்.

இல்லை.. நான் இனிமேல் வரமாட்டேன். எனக்கு வேறு ஒரு பிரச்சனை எண்டன்.

டேய் மடையா.. உங்கடை ஆட்கள் அங்கே விசர்த்தனமான முடிவு எடுத்து ஆமியோடை அடிபட்டது மாதிரி நீயும் பிழையான முடிவு எடுக்காதை. உன்னைக் குக் ஆக்கிறன் எண்டார்.

நான் இல்லை இல்லை.. எண்டு தடுமாற.. “பீற்றர்.. உனக்குப் பிரெஞ்சும் கொஞ்சம் தெரியும் இன்னனும் இரண்டொரு வருடத்திலை உன்னை மனேஜர் ஆக்காலாம் எண்டு கூட யோசிக்கிறன்” எண்டு சொல்ல, நான் என்ர லொக்கருக்குப் போய் உடுப்புகளையும் சப்பாத்தையும் எடுத்துக் கொண்டு வந்தன். 

முதலாளிக்கு விளங்கிட்டது.. இவன் இனி நிக்கமாட்டான் எண்டு. கோபத்தோடு கேட்டார்.. நீ யாற்ரையோ பேப்பரிலையோ வேலை செய்தனீ.? எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது.

நான் ஒண்டும் பேசமால் நிண்டன்.

“உன்னைப் போல எத்தனை சிறிலங்கன் தமிழரைப் பார்த்திட்டன் உள்ளதைச் சொல்லு” எண்டார். நான் மௌனமாய் அந்த இடத்தைவிட்டு வெளிக்கிட்டன். 

இந்த வேலை போனபிறகு சும்மாதான் இருந்தன். சொந்தப் பெயரிலை வேலை செய்ய மனம் வரேல்லை. அப்பத்தான் செழியன் எனக்கு நண்பரானார். அரசியல் இலக்கியம் எண்டு நிறையத் தனிப்பட்ட கதையள் கதைப்பம். அப்பத்தான் நான் வேலை இல்லாமல் இருக்கிற விசயத்தைச் சொன்னன்.

“நான் வேலை செய்யுற றெஸ்ரோன்றிலை வேலை இருக்கு வாறியா?” எண்டு கேட்டார். “வேலைக்கு வரலாம். ஆனால் பேப்பர் இல்லை. வெல்பெயர் காசு எடுத்துக் கொண்டிருக்கின்றன்” எண்டன். அவரே தன் நண்பர்கள் யாரோடையோ கதைத்து ஒரு வேர்க் போமிட்டுக்கு ஒழுங்கு செய்து தந்தார்.

செழியனோட சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினன். எனக்குப் பேப்பர் தந்தவனின்ர குடும்பப் பெயர் ‘யோசப்’ அது எல்லோருக்கும் சுகமாய் போயிற்று. அங்கே யோசப் என்று என் பெயர் மாறியது. ஒருமாதம் வேலை செய்த பிறகு அங்கேயும் டெலிவரி பகுதியைக் கவனிக்கும் பொறுப்பைத் தந்து விட்டார்கள்.

உணவுப்பொருட்களை டெலிவர டிரக் கொண்டு வரேக்கை என்னைப் போய் சமான்களைச் சரிபார்து எடுக்கும்படி தலைமைச் சமையற்காரர் சொன்னார். நான் ஓமெண்டு போக, டிரக் ரைவர் ஓடிவந்து ஏய் பீற்றர் எப்படியிருக்கிறாய்..? உன்னை அந்தக் கடையிலை தேடினன் எண்டபடி பிரஞ்சு ஸ்டையிலை கட்டிப் பிடிச்சார்.

முந்தின கடைக்கும் இவன்தான் டெலிவரி. அதால எனக்கு நல்ல பழக்கம். இவன் சமான்கள இறக்குறத்துக்கும் ஏத்துறத்துக்கும் நான்தான் உதவி செய்வன். பொருட்களக் கணக்கெடுக்கிற வேலையையும் தாண்டி அவனுக்கு உதவுறதாலை என்னர முதலாளிக்கோ மற்றவர்களுக்கோ தெரியாமால் பத்து டொலர் காசை என்ர பொக்கற்றுக்குள்ளே வைப்பார்.

இங்க என்னைக் கண்டவுடன அவருக்கு பெருத்த மகிழ்ச்சி. ஏன் அந்த றொஸ்ரோரன்ட் வேலையை விட்டனீ? எண்டு கேக்க, நான் மௌனமாய் இருக்க… அவனே சொன்னான்..  “அந்த முதலாளி சரியில்லை. இந்த இடம் பரவாயில்லை. இதிலை நிண்டுபிடி” என்றார். நான் ஒண்டுமே பறையேல்ல.

அடுத்த டெலிவரி வந்தபோது நான் நிலக்கீழ் அறையில் ஏதோ அலுவலாய் நிக்க, அவன் போய் சமையற்காரரிட்டை பீற்றர் எங்கே எண்டு கேட்டிருக்கிறான். பீற்றர் எண்டு இங்க ஒருத்தரும் வேலை செய்யிறது இல்லை  எண்டு அவன் சொல்ல, ட்ரைவர் “இல்ல.. போன கிழமை நான் அவனை இங்க கண்டனான். நீ என்ன சொல்லுறாய்” எண்டு வாக்குவாதப்பட, அந்தநேரம் பார்த்து நான் மேலை வர, அவன் “ஏய் பீற்றர்” என்று கூப்பிட, இவர் “பீற்றர் இல்லை யோசவ்” எண்டு சமையற்காரன் சத்தம் வைக்கக் கொஞ்சம் கலவரமாய்ப் போயிற்று.

நான் ட்ரைவரைச் சமாளிச்சு வெளியிலை கூட்டிக் கொண்டு வர முயற்சி செய்ய, அவன் சமையற்காரரைப் பார்த்து, “உன்னட்டை வேலை செய்யிறவன்ர பெயரை ஒழுங்காச் சொல்லத் தெரியாத நீ எல்லாம் ஒரு செப்”  எண்டு கத்திக்கொண்டு போனான்.

செவ் ஒன்றும் சொல்லாமல் அங்கால போயிட்டான். நான் வேலை முடிஞ்சு வீட்டை போக வெளிகிட தன்னர அறைக்கு செவ் கூப்பிட்டார். “உதிலை கதிரியிலை இரு” எண்டு சொல்ல நானும் இருந்தன்.

“உண்மை சொல்லு நீ பீற்றரா? யோசப்பா? உன்னர பேப்பரிலை நீ யோசேப்பு என்றிருக்கு எண்டார். நான் பறையாமல் இருக்க, கள்ளப் பேப்பரிலையோ வேலை செய்யிறாய்? எண்டு கேக்க, நான் நிமிர்ந்து பார்க்காமல் ஓம் எண்டன்.

அவர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துபோட்டு,  மற்ற றெஸ்ட்ரோரன்டைப் போல இல்ல எங்கடை றெஸ்ரோன்ட்.  பெரிய தொடர் கொண்ட பிரஞ்சைஸ் ரெஸ்ரோரனட். நாளைக்கு இந்த கள்ளப் பேப்பர் பிரச்சனையிலை அரசாங்கத்திடைப் பிடிபட்டால் உனக்கு மாத்திரமல்ல எங்களுக்கும் பிரச்சனை எண்டார்.

நான் சொன்னன்.. “செவ் இப்படியே இந்த பிரச்சனைய விடுங்கோ.. நாளைக்கு தொடக்கம் நான் வேலைக்கு வரேல்லை மற்றத் நண்பர்களுக்கு இது தெரிய வேண்டாம்” என்று சொல்லிப் போட்டு அவருக்கு கை கொடுத்திட்டு வெளிய வந்தன். அதுதான் நான் கள்ளப்பேப்பிரிலை வேலை செய்த கடைசி நாள்.

ரொன்ரோவிற்க்கு வந்தபிறகு இந்த கதையை நண்பர்  கரனுக்கு சொல்ல, அவர் வேறு ஒரு கதையைச் சொன்னார். 83, 84 இலை நடந்த தனக்கு தெரிந்த ஒரு குடும்ப கதையெண்டார்.

புருசன் எங்கையோ ஒரு பேக்கரியிலை வேலை செய்தவர்.. மனைவி ஒருநாள் புருசனை கேட்டா.. “இஞ்சேரப்பா.. நானும் வேலைக்கு போகட்டே.. ஊரிலை சண்டைக்கை இருந்து கஸ்ரப்படுகின்ற தங்கச்சிமாரைக் கூப்பிட வேணும். அதுக்குப் பணம் வேணும். சந்தியிலை இருக்கிற பேக்கறியிலை வேலைக்கு ஆள் தேவையெண்டு போட் போட்டிருக்கு” என்றா. புருசனும் “நீயும் வீட்டிலை சும்மா தானே இருக்கிறாய் போறதெண்டாப் போ” எண்டிருக்கிறார்.

இவவும் வேலைக்கு போனா. வேலையிடத்திலை இவக்கு என்ன பெயர் என்று கேட்க.. இவ தன்னர பெயர் புவனமலர் என்றிருக்கிறா. பேக்கரி ஓனர் ஒரு இத்தாலிக் கிழவன். அவர் இவவின்ரை பெயரை புவனமலர் எண்டு கூப்பிடற பஞ்சியிலை பு.. பு.. எண்டு அழைக்கத் தொடங்கி விட்டார். இது வேறு யாருக்கும் தெரிய வராது என்ற நினைப்பிலை அவவும் அப்படியே விட்டிட்டார்.

ஒருநாள் இவ வேலைக்கு போகேல்லை. வீட்டில் நிற்க்கேக்கை ஏதோ அலுவல் பற்றி இவவட்டைக் கேட்க முதலாளிக் கிழவன் ரெலிபேன் எடுக்கப் புருசன்தான் அழைப்பை எடுத்திருக்கிறார். கிழவன்  மிஸ்.பூனாவோடை கதைக்கலாமோ? எண்டு கேக்க புருசன் திடுக்கிட்டுப் போனார். என்ன சொல்றியள்? என கிழவனோடை அவர் வாதிடத் தொடங்க, புவனமலர் வந்து ரெலிபோனை வேண்டி கதைச்சா. கதைச்சு முடிய புருசன் அவவோடை சண்டை போட, இது யாருக்கும் தெரியாது. அங்கை எல்லோரும் வெள்ளைக்கரார்கள் எண்டு புருசனைச் சமாதானப்படுத்தினா.

ஆனால் இரண்டு மூன்று வருடத்திலை பேக்கரி பெரிசாகி சிறிலங்கன் பெடியளும் கனடாவுக்கு வந்து குவிந்த நேரத்திலை இரண்டு மூன்று பெடியள் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்திட்டாங்கள். அவங்களும் இவவை பு அக்கா எண்டு அழைக்கத் தொடங்க, பதறிப்போன புவனமலர் குடும்பம் வேலையை மட்டுமில்ல.. அந்த இடத்தையே விட்டிட்டு வேறை சிற்றிக்கே மாறிப் போயிட்டினம்.

இவ்வளவையும் சொல்லிப் போட்டு கம்பனை இதுக்கை இழுக்காட்டால் எனக்கு நிறைவுறாது

பத்தாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கேக்கை தமிழ் இலக்கியம் படிப்பிக்கிற வித்துவான் மாஸ்ரர்  ஒரு கிழமை லீவிலை போயிட்டார்.

அவருக்குப் பதிலாக வந்தவர் பொடி மாஸ்ரர் எண்டுற ஆங்கில வாத்தியார். அவருக்கு தமிழ் , ஆங்கிலம் இரண்டிலையும் புலமை. நல்ல நடிகர். பள்ளிகூடமே விரும்புகின்ற  ஒரு இனிமையான  ஆசிரியர்.

வகுப்புக்கு வந்தவர் இப்ப என்ன படிகின்றீயள்? எண்டு கேட்க, கடந்த இரண்டு மூன்று மாதமா யுத்தகாண்டம் போய்க்கொண்டிருக்கின்றது என்றோம்.

அதிலைதான் கம்பன்ரை அருமையான பாட்டெல்லாம் இருக்கு எண்டு யுத்தகாண்டத்தைத் திறந்து

மண்டோதரி உயிர்விட்ட இராவணேஸ்வரனை மடியில் வைச்சுக்கொண்டு அழும் பாடலுக்குப் போனார்

எங்கையோ பார்த்தபடி.. சீதை யென்ன சீதை.. அழகிலையும் குணத்திலையும் மண்டோதரிதாண்டா  உண்மையான பெம்பிளை எண்டு மண்டோதரி நினைப்பிலை மூழ்கிப் போனார்.

பிறகு.. கம்பனுக்கும் இது நல்லாய்த் தெரியும் எண்டவர்.. கொஞ்சம் யோசிச்சுப் போட்டு, பெருங்குரலில்..

என்று அழைத்தனள்

ஏங்கி எழுந்து அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்தன்

தழைக்கைகளால் தழுவி  -தனி நின்று அழைத்து

உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்..

எண்டு பாடிப்போட்டு.. “வித்துவான் மாஸ்ரர், உங்களுக்கு இதை படிபிச்சிருக்கலாம்.. ஆனால் அந்தாள் இந்த நுட்பத்தைப் பிடிக்காதாடா”  பிடிச்சிருந்தாலும் வேதம் பள்ளிக்கூடம் எல்லோ  பெடியள் கெட்டுப்போகும் என்று வித்துவான் சொல்லாது  என்று சொல்லிப்போட்ட எங்களப் பாத்து கேள்வி கேட்டார்.

“தனி நின்று அழைத்து..” என்றால் என்னண்டு சொல்லுங்கோ பார்ப்போம்” எண்டார்.

எங்களுக்கு என்ன தெரியும்? வளர்த்த முகத்தை நாய் பார்த்த மாதிரி.. அவற்ரை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.

“காதலிக்காத.., கல்யாணம் முடிக்காத உங்களுக்கு இது விளங்காது.  புருசன் பெண்சாதியையும் பெண்சாதி புருசனையும் அழைக்கிறதுக்கு  தனிப்பெயர் வைத்திருப்பினம்.

என்ன சண்டைகள் வந்தாலும் அன்பான நேரங்களிலை மற்றவைக்குத் தெரியாமல் அந்தப் பெயர்களிலை அவை தங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவினம். அதுவும் ‘அந்த நேரத்திலை’… எண்டு சொல்லிப்போட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கொண்டு எங்களப் பார்த்து “என்னடா விளங்குதோ” எண்டார். விளங்கின அரைவாசிப் பொடியள் கெக்கட்மிட்டு சிரிச்சபடி  விளங்குது..  விளங்குது.. எண்டாங்கள்.

“தானிருக்க இன்னொரு பெண்ணை விரும்பினவனை அவன் சாகின்ற போது மடியிலை வைத்து எத்தனை பெயர் இருந்ததும் அந்தப் பத்துத் தலையனை.. தன் அன்புக்குரியவனை அந்தரங்கமான நேரத்தில் தான் அழைக்கும் ஒருவருக்கும் தெரியாத அந்தப் பெயரைத் தனி நின்று அழைத்து அவனோடு உயிர் விட்டாள்” என்று சொல்லி கண்ணைத் துடைத்தார்.

பெயரிலை என்ன இருக்கு..? என்று சொல்லுறவை இப்ப சொல்லுங்கோ.. பெயர் எண்டிறது எவ்வளவு பொல்லாத விசயம்.

***

RELATED ARTICLES

3 COMMENTS

  1. எள்ளலுடன் கூடிய நல்லதொரு கதை.

  2. செல்வதினுடைய ‘ முன்னர் அவனுடைய நாமம் கேட்டாள்” பற்றிய ஒரு குறிப்பு .

    எண்பதுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்ட இளைஞர்கள் பெற்ற அனுபவங்கள் எல்லாம் கிட்டதட்ட ஒரேமாதிரியானவை. செல்வத்தின் எல்லாக்கதைகளையும் வாசிப்பவர்கள் அவைகளைத் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களாகவே கருதுவார்கள். நானும் அவர்களில் ஒருவன்தான் . கடைசியாக அவர் எழுதிய ‘முன்னர் அவனுடைய நாமம் கேட்டாள்” என்ற அனுபவ பதிவை வாசிக்கும் பொழுது இவையெல்லாம் எனக்கும் நேர்ந்தவைதானே என எண்ணத் தோன்றியது . இடங்களும் காலங்களும் மட்டுமே வேறு வேறு.

    இங்கு செல்வத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த சம்பவங்களை, அனுபவங்களை எந்தவித கற்பனைக்கலப்புமில்லாமல் அதே பேச்சு மொழியில் இயல்பாக அங்கத சுவையுடன் கூறிவிடுவதுதான். உண்மைலேயே அருகில் இருந்து உரையாடுபராகவே இங்கு அவர் மாறிவிடுகிறார். அந்த மொழியே அவருடைய பலம் .அதுவே அவருடைய படைப்பின் அழகு.

    “பெயரில் என்ன இருக்கிறது ” வெறும் பெயர்தானே என்று விட்டு விட்டுபோகும் விடயமல்லாமல் பெயர் மனிதனின் வாழ்வில் எப்படியெல்லாம் பிரச்சனைகளை உருவாக்கிறது என்பதோடு பெயரின் பல பரிமாணங்களையும் கூறிவிடுகிறது இக் கதை .

    செல்வத்தினுடைய கதைகளில் ஒரு பயணம் இருக்கும் அது சில்லாலையில் தொடக்கி பாரிஸில் மையமிட்டு பின் கனடாவுக்கு புறப்படும் . கதை தொடங்கும் போதே சிரிப்பு வந்து விடும் “தன்னை கிறிஸ்த்தோப்பன் ‘ஒளஞ்சு, ஒளஞ்சு’ என்று கூப்பிடுகிறான் எண்ட தன்னர வாதத்தை லோறன்ஸ் முன்வைச்சார் “என்கிறார். ‘ அதென்ன ‘ஒளஞ்சு, ஒளஞ்சு’என்று யோசிக்க லோரென்ஸ் என்ற பெயரைத்தான் கொன்னையில் அப்படிக்கூப்பிடுகிறார் என்று எண்ண சிரிப்பு தன்பாட்டில் வந்துவிடுகிறது.

    ஒருவருக்கு விசாவோ வேலை செய்வதற்கான அனுமதியோ கிடைக்காதபோது இன்னுமொருவருடைய ஆவணத்தை கொடுத்து அவருடைய பெயரில் வேலை செய்வது என்பது பாரதூரமான ஆள் மாறாட்ட குற்றம் . ஆனால் பாரிஸில் எண்பதுகளில் இது சாதாரணமாக நடக்கும் . இதனால் வரப்போகும் பிரச்சினைகளை விளங்கியே செய்வார்கள் . இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் எண்பதுகளில் பாரிஸில் தமிழ் இளைஞர்களிடையே இருந்த பரஸ்பர ஒற்றுமையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்குமே யாகும் . மொழி தெரியாது, இடம் புதிது, கையில் காசு இருக்காது , வீட்டில் கடன் ஆனால் எந்த ஒருவரும் பசியோடிருந்ததோ , தெருவில் படுத்ததோ கிடையாது . ஏனைய நாட்டு அகதிகள் மெட்ரோ வில் படுத்து கிடப்பார்கள் , கை ஏந்துவார்கள் . ஆனால் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் அப்படி இருக்க விடமாட்டார்கள் . யாரவது ஒருவர் வந்து கூட்டிப்போய் உணவும் இடமும் கொடுத்துவிடுவார்கள். வேறொருவர் பெயரில் வேலை செய்ய ஆவணங்களை கொடுப்பதும் அப்படியான ஒன்றுதான் இந்த உண்மையை நேர்மையாக, சம்பவங்களினால் பதிவு செய்து விடுகிறார்.

    “உண்மை சொல்லு நீ பீற்றரா? யோசப்பா? உன்னர பேப்பரிலை நீ யோசேப்பு என்றிருக்கு எண்டார். நான் பறையாமல் இருக்க, கள்ளப் பேப்பரிலையோ வேலை செய்யிறாய்? எண்டு கேக்க, நான் நிமிர்ந்து பார்க்காமல் ஓம் எண்டன் என்று கூறும்போது நாம் யார்? எங்கு இருக்கிறோம்? என்ற கேள்விகளையை சற்று ஆழமாக எமக்குள் இறக்குகிறார்.

    தனது பெயரான சவரிமுத்து அருளானந்தம் சவரியாக சுருக்கப்பட்டு நகைப்புக்குரியதாக அரபுமொழியில் புரிந்து கொள்ளப்படுவதையும் பிறகு மாட்டினா டீச்சருக்கூடாக அருள் என்று அழைக்கப்பட்டதையும் பிரெஞ்சு வகுப்பு சூழலுக்கூடாக நகைச்சுவையுடன் கூறிவிடுகிறார். எல்லா இடங்களிலும் அவருக்குள்குடியிருக்கும் “நான் சில்லாலையான், நாடகக்காரன் ” என்ற பண்பு அடிக்கடி வெளிப்பட்டுவிடும் .

    எமது பெயர்கள் பிற மொழிக்காரரிடம் எப்படியெல்லாம் பிய்ந்து தொங்குகிறது என்பதை தனது எள்ளல் சுவையுடன் இவ்வாறு கூறுகிறார் பாருங்கள் “.கிழவன் மிஸ்.பூனாவோடை கதைக்கலாமோ? எண்டு கேக்க புருசன் திடுக்கிட்டுப் போனார். என்ன சொல்றியள்? என கிழவனோடை அவர் வாதிடத் தொடங்க, புவனமலர் வந்து ரெலிபோனை வேண்டி கதைச்சா. புவன மலர் என்ற அழகான பெயர் மிஸ் பூனா வாகி பிறகு பூனா அக்காவாகி அவரை ஊரை விட்டே புறப்பட வைத்துவிடுகிறது.

    ரஸ்ய விமானநிலையத்தில் தனது நண்பனின் நீண்ட பெயரை வாசிக்க கஷ்டப்படும் போது”இது பெயரா? அல்லது சிறுகதையா? எண்டு அந்த அதிகாரி கேக்கிறார் எனும் போது சிரிப்பு வந்து விடுகிறது . எங்களது நீண்ட பெயர் அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஒரு பிரச்சனைதான் . சில வேலைகளில் எமது பெயரை அவர்களது படிவங்களில் நிரப்ப கூடுகள் போதாமல் இருக்கும்.

    செல்வத்தின் வாசிப்புப் அனுபவம் அதுவும் குறிப்பாக கம்பனில் உள்ள ஈடுபாடு , இரசனை அவருடைய எழுத்துகளில்இப்போதெல்லாம் முக்கியமான பங்கினை வகிக்து விடுகிறது. இராவணன் இறந்தபொழுது மண்டோதரி அழுது புலம்புகிறாள்.

    “தானிருக்க இன்னொரு பெண்ணை விரும்பினவனை அவன் சாகின்ற போது மடியிலை வைத்து எத்தனை பெயர் இருந்ததும் அந்தப் பத்துத் தலையனை.. தன் அன்புக்குரியவனை அந்தரங்கமான நேரத்தில் தான் அழைக்கும் ஒருவருக்கும் தெரியாத அந்தப் பெயரைத் தனி நின்று அழைத்து அவனோடு உயிர் விட்டாள்” என்று சொல்லி பெயருக்கும் மனித உறவுக்கும் உள்ள ஆத்மார்த்தமான பொருளை கூறி முடிக்கிறார்.

    சிறிய கதைதான் ஆனால் அதனூடாக எமது புலம் பெயர் மக்கள் வரலாற்றின் அழியாத பக்கங்களை விரக்தியோ , கவலையோ இன்றி சக மனிதர்கள் மேல் உள்ள நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு மிக இயல்பாக சிரித்து கடந்து விடுகிறார். உண்மையும் அதுவே . பாரிஸில் பத்துக்கு ப த்து அடி அறைகளுக்குள் கிழங்கு அடுக்கியது போன்று படுத்து கிடந்தபோதும், ஜார்ஜ் ப்லோய்டு போன்று சுவாசிக்கவே முடியாமல் மூச்சுத்திணறிய போதும் சிரித்துக்கொண்டே இருந்தோம்.வாழ்ந்தோம்.

    அனைவரும் வாசிக்கவேண்டிய கதையாக இருந்தாலும் எண்பதுகளில் நாட்டைவிட்டுப் புறப்பட்டவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு அனுபவக் கதைதான் ‘ ‘முன்னர் அவனுடைய நாமம் கேட்டாள்”

    இ.கிருஷ்ணகுமார்
    5th ஜூன் 2020
    திருநெல்வேலி

  3. மிக அருமையான கதை…

    நகைச்சுவையாய் சில இடங்களில் பயணித்தாலும் வேறு பெயரில் வேலை செய்யும் புலம் பெயர்ந்தவர்களின் வேலைப் பிரச்சினையை விரிவாகப் பேசுகிறது. இடையில் கம்பன், சிவாஜி, கட்டப்பொம்மன்னு கலந்து கட்டி அடித்து ஆடியிருக்கிறார்.

    ஆம்… பெயரில் என்ன இருக்கிறது என்றால் நிறைய இருக்கிறதுதானே…
    வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular