Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்நூறாவது நாள்

நூறாவது நாள்

ரமேஷ் ரக்‌சன்

ழையின் பாரம் தாங்காமல் தலை தொங்கிக் கிடந்த மருதாணி மரத்தின் புகைப்படம் ஐந்தரை மணி வாக்கில் அவளிடமிருந்து வந்ததும் எதிர் வீட்டுக்காரர்கள் ஊருக்குச் செல்வதாக சொன்னது நினைவிற்கு வந்தது. மருதாணியின் பூக்களும் கொத்துக்கொத்தாக தொங்கிய காய்களும் அவளுடைய நடு முதுகின் எலும்பு மொட்டுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. தசைப்பிடிப்பற்ற அந்த நிர்வாணப் புகைப்படத்தை அவளின் அந்தக் காதலை, பேசித் தீர்த்த இரவை ஞாபகமூட்டியதென பதிலாகச் சொல்லுவதற்குள், மொத்த உள்ளங்கையையும் மறைத்தபடி விரலிடுக்கில் வெற்றிலைக் காம்பை இறுக்கிப் பிடித்த புகைப்படத்தை அனுப்பினாள். வெற்றிலை நுனி அவள் மணிக்கட்டில் தனித்துத் தெரியும் பச்சை நரம்பை உரசிக் கொண்டிருந்ததை வட்டமிட்டு சுட்டிக் காட்டி “seducing” என்று பதில் அனுப்பினேன்.

மருதாணி மரத்திற்குப் பக்கத்திலேயே நின்றிருந்த ஓரிதழ் சிகப்பு செம்பருத்தியிலிருந்து பறித்த பூவொன்றை வெற்றிலையின் மேல் வைத்து கடைசியென அந்தப் நிழற்படத்தை அனுப்பியிருந்தாள்.

எங்களின் நூறு நாள் காதலில், மாலை வேளையில், சந்திக்கும் பொழுதெல்லாம் ஜங்ஷனை ஒட்டியிருக்கும் மேம்பாலத்திற்கு அடியில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டு மயிலிறகு விற்பவர்களைப் பார்த்து “உண்மைலையே இவனுக மயில் உதிர்க்குற இறக மட்டுமா எடுத்துட்டு வந்து விக்குறானுக? விஷம் வச்சி கொல்லக்கூட தயங்க மாட்டானுக  பொறுக்கிங்க… அப்படியே சுட்டுத் தள்ளணும் ராஸ்கல்ஸ்” அடுத்தபடியாக, பூ விற்பவர்களைக் கண்டால் “பூ செடியில இருக்கற வரைக்கும்தான் அழகு” என்பாள். அந்தக் கரிசனம் ரசிக்கும்படியாக இருக்கும். அதில் வெளிப்படும் கள்ளச் சிரிப்பிற்காகவே பைக்கை நிறுத்திவிட்டு நடத்திக் கூட்டிச் செல்வேன் அவளைப் பொருத்த வரைக்கும் நெரிசல் காரணம். எனக்கோ அந்தக் கள்ளச் சிரிப்பு.

பூவைப் பறித்த பாவக்கணக்கைக் கேட்டு அவள் மனநிலையை சிதைக்க மனமில்லாமல் “வரவா” என்று கேட்டு வைத்தேன்.

தொன்னூற்றி ஒன்பதாவது நாளை “நூறாவது நாள்” என்றெண்ணி பரிசளித்த டார்ட் போர்ட்-ஐ மாட்டித்தரச் சொல்லி முதல் மாடியில் இருக்கும் ஒற்றை அறைக்கு ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள் வரச் சொல்லியிருந்தாள். வரும்பொழுது டார்ட் போர்டை சரியான முறையில் அளந்து மாட்டுவதற்கு மூன்று மீட்டர் நீளம் உள்ள டேப்- கூடவே சுவற்றில் இறங்கும் அளவிற்கு வலுவான ஒரு ஆணியும் வாங்கி வரச் சொல்லியிருந்தாள்.

போன் துண்டிக்கப்பட்டதும் இது “நமது பன்னிரெண்டாவது ரகசிய சந்திப்பு” என்ற ஆங்கிலத் தகவலோடு மூடிய உள்ளங்கையைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தாள். உள்ளங்கைக்குள் பொருந்திப் போகும் பரிசுப்பொருள் என்னவாக இருக்குமென்ற யூகம், இன்னும் மூன்று மணி நேரத்திற்கு எப்படித் தாங்கும்? அவளின் பிடிவாதத்தை நன்கறிவேன். ஆன்லைன் தளங்கள் ஒன்றுவிடாமல் தேடி தோற்றுவிட்டதாக என்னை நானே ஒத்துக்கொள்ளும் பொழுது ஏழரை மணி ஆகியிருந்தது. மீதமிருக்கும் ஒன்றரை மணி நேரத்தை என்ன செய்வதெனத் தெரியாமல், அவள் அனுப்பிய புகைப்படங்களைத் தனியாகச் சேகரித்து வைக்கும் ஃபோல்டர்-க்கு சென்று முதலில் அனுப்பிய மூன்று புகைப்படங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவளின் ரேகைகள், விரல்களில் குறுக்கே ஓடும் கோடுகள், வெற்றிலை நரம்புகள், செம்பருத்தியின் மஞ்சள்நிற மகரந்த மொட்டுகள், இவையெல்லாமே அவளின் உடல்போல பாவனை கொண்டிருந்தன. அவள் செய்கைகள் ஒன்று கூடி சரம் பிடித்து என் மூளையை சுத்துப் போட்டன. உடலும் மனமும் உள்ளிருந்து சுரக்கும் சுனையை, சுழல் ஆக்கின. நான் தணலில் தூக்கிப்போட்ட காகிதம் போல பற்றியெறியத் தொடங்கினேன்.  

காற்றாடும் பனியனும், அதே போலொரு ஷார்ட்ஸ்-ம் அணிந்திருந்தாள்.  பிளாஸ்டிக் பாய் மேலே இரண்டு போர்வைகள் விரிக்கப்பட்டிருந்தது. குளிருக்குப் போர்த்திக் கொள்ள மீதமிருந்த இன்னொரு போர்வையை மடித்து தலைப்பகுதியில் வைத்திருந்தாள். அந்த தற்காலிக மெத்தைக்கும் அவளுக்கும் தொடர்பில்லாத உடல் மொழியில் சம்மணமிட்டு, மடியில் தலையணை வைத்து பாய்க்கு வெளியே அமர்ந்திருந்தாள். தலையணையில் முழங்கையை அழுந்த ஊன்றி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். வழியெங்கும் உடல் நனைக்காத சாரல். வாசலில் நான் வந்து நிற்பது தெரிந்தும் தலை தூக்காமல் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் மடியில் விழும் என் நிழல் கொண்டு அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்துக்கொண்டே நின்றேன். அடுத்த பக்கத்தை புரட்டிப் பார்த்ததில், இடப்பக்க ஆரம்பத்திலேயே அத்தியாயம் முடிவது தெரிந்ததும், நிழல் அசைத்து விளையாடாமல் அவள் தரிசனத்திற்காக காத்து நின்றேன்.

குமிழ்கள் காற்றில் உடையும்போது உணரும் ஈரத்தன்மையை விழிகள் கண்டிருந்தது. அதன் சூடு ஆவியாகி மேகம் கருக்கொண்டிருந்தது. அதன் ரகசிய உடைவுகளை என் முகம் பாரக்காமேலே இவ்வளவு நேரத்திற்குள் உணர்ந்திருப்பாள். தெரியும். உடல் காட்டிக் கொடுக்கும் வாசனை, அவள் வாசிப்பை குலைக்கும். அந்த நொடிக்காக என் திமிரின் எல்லா திறவுகளையும், அடவாகக் திரட்டி நின்றேன். அத்தியாயத்தின் கடைசி பக்கத்தை திருப்பாமலே மூடி வைத்தாள்.

“ஒன்பதரை மணியில இருந்து பத்து மணிக்குள்ள வா அப்டினு சொன்னா, ஒன்பதரை மணிக்கே வரணும்னு அவசியமில்ல பத்து மணிக்கும் வரலாம். இன்னும் ரெண்டு பத்தி இருக்கு. அத வாசிக்க விடாம பண்ணிட்டான்.” உதட்டைக் குவித்து காற்றில் சத்தமாக முத்தமிட்டேன்.

தூக்கிவிடச் சொல்லி என்னை நோக்கி கை நீட்டினாள். கண் போகும் பாகம் அறிந்து வெடுக்கென உள்ளிழுத்துக் கொண்டாள். காமம் தீண்டாத அவள் உடல் சுரக்கும் வெட்கம் என் அடிநாவில் நிரம்பி, உடையும் தருவாயில் இருந்தது. தொண்டைக்குழி எலும்பு ஏறி இறங்குவதைக் கண்டதும், இமை தாழ்ந்து. உதடு உலர்ந்து காட்டிக் கொடுத்தது. கதவைத் தாழிட வேண்டாம் என்றாள். அவள் பின்னந்தலை ஸ்விட்ச்சில் பட்டு, எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட் அணைந்தது. என் விலா எலும்பில் அவளின் பெருவிரலால் அழுத்தம் கொடுத்தாள் கூச்சத்தில் அவள் மீது செலுத்தியிருந்த எடை விடுபடவும் உந்தித் தள்ளிவிட்டு, விளக்கை எரியவிட்டாள். இருளில் மழை நின்றாடுவதை அதன் ஓசையை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. கைப்பிடிச் சுவற்றிலிருந்த கற்றாழைச் செடியின் முட்கள் தாங்கி நின்ற மழைப் பொட்டுகள் நொடிப்பொழுதிற்கு காணாமல் போகும் அவளின் கருவிழியற்ற கண்களாகி விளக்கின் வெளிச்சத்தில் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. உடலின் வாசனை நிறம் மாறிக் கொண்டிருந்தது. தேக வாசனையும், அடி நாவில் சுரக்கும் எச்சில் வாசனையும் அக்குள் வாசனையும் வேறு வேறான அர்த்தமாகியது.

அவள் சாசனங்கள் என்னவாக இருக்கிறதோ அப்படியே நடந்து கொள்ளத் தொடங்கினேன். ஆனால் அதற்கு சொற்கள் அவசியமற்று இருந்தது. பூமியும் நாங்களும் வியர்த்திருந்தோம். அவள் வியர்வை பூப்பதை விரும்பினாள். காதோரம் வழிந்தோடிய பிசுபிசுப்பைத் துடைக்க விடாமல் தடுத்தாள். சன்னல் கம்பியோரம் உரசி நின்ற மூங்கில் கிளை பார்த்ததும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட லஜ்ஜை அவள் முகத்தில் வெளிப்பட்டது. அவளின் அந்த துண்டிப்பு எனக்கும் கடத்தப்பட்டது. என் குதிகால் தரையில் அழுத்தம் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

சன்னல் மேலிருந்த மூங்கில் குடுவையிலிருந்து எழுது பொருட்களோடு கிடந்த கத்தரியை எடுத்துக் கொடுத்து “லெமன் க்ராஸ்” இரண்டு இலைகளைக் கத்தரித்து வரச் சொல்லி அனுப்பினாள். குடை வேண்டாத உடல் சூடு. தகிப்பின் மோனநிலை. நனைந்தபடி விரலில் கீறல் விழாமல் ஒவ்வொன்றாக ஐந்து இலைகளை வெட்டி, அவள் பரிமாற வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்தேன்.

அட்டைப் பெட்டியிலிருந்து டார்ட் போர்டை வெளியே எடுத்து, பின்னட்டைக் குறிப்புகளைச் சொல்லி, சுவரின் கிழக்குப் பகுதியில் ஆணி அடிக்கச் சொன்னாள். டார்ட் போர்டோடு வந்த மூன்று ஸ்டீல் டிப்-ல் ஒன்றை எடுத்து கீறல் விழாதவாறு என் முதுகில் முதலில் எழுத ஆரம்பித்தவள் பிறகு வரையத் தொடங்கினாள். நான் உயரம் அளக்கும் பாவனையிலேயே நின்றிருந்தேன். மழை ஈரமும் அவள் உஷ்ணம் கடத்திய வியர்வை பிசுபிசுப்பும், அவள் சிந்தனையிலிருந்து வெளியேறி என் முதுகில் கோடுகளாகப் பார்க்க முடிவதாகச் சொன்னாள். நான் கூச்சம் பொறுத்துக் கொண்டேன். அவள் கண்மூடும் வேளையில் அழுத்தம் கூடியதை என் உடலசைவுகள் காட்டிக் கொடுக்கவும், கண் திறந்ததாகச் சொன்னாள்.

எங்கள் ரகசியங்களும், வேட்கையும் இமையின் உள்த்தசையில் படிந்திருந்தது. ஒவ்வொருமுறை இமை வெட்டும்போதும், அவை எங்கள் கண்களை வந்தடைந்தன. ஒரே நேரத்தில் கண்கள் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தோம். அது நேரம் கடத்துவதற்கான உத்தியாகப்பட்டது. என் விரல் இடுக்குகளில் அகப்பட்ட கூந்தல் கற்றைகள் சாவிகளாகி, எல்லா கண்களையும் பூட்டின. நாங்கள் முந்திக் கொண்டோம்.

மழையின் இரைச்சல் கதவைத் தாழிட அனுமதிக்கவில்லை. எங்களின் கொண்டாட்ட மனநிலைக்கும், மழையின் கொண்டாட்ட மனநிலைக்கும் ஒரு லட்சம் வித்தியாசங்கள் இருந்தன. எங்கள் சஞ்சலமும், மழையின் நிதானமும் எட்டாத தூரத்தில் இருந்தது

கணப்பொழுதில் அவள் உடல் திருப்பி சுவற்றைப் பார்த்து நிற்க வைத்து திமிற விடாமல் தோள்களை அழுத்திப் பிடித்தேன். கூந்தல் ஒதுக்கி பின்னங்கழுத்து வியர்வைத்துளியை மேனி தொடாமல் நுனி நாக்கில் ருசி பார்க்க நெருங்கும்போது மின்னல் ஒளிர்ந்து அறை இருளுக்குள் புகுந்தது. உன் மூச்சுக்காற்றின் சூட்டில் அவை ஆவியாகிவிடும் என்றாள். அறைக்குள் நுழைந்ததிலிருந்து அப்போதுதான் வாய்விட்டு சிரித்துக் கொண்டோம்.

விரிப்பில் உடல் கிடத்தும் முன் என் ஈர உடை களைந்துவிட்டு டவலைக் கட்டிக் கொண்டேன். சங்குப் பூவின் நிறமொத்த பூ வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி பாட்டிலிலிருந்து சுருட்டி வைத்திருந்த கருப்பு ரிப்பன் எடுத்து என் கண் நோக்கி வந்தாள். கை தாங்கி நின்ற தலையை விடுவித்து விட்டத்தைப் பார்த்துப் படுத்தேன். நான் தலை தூக்கிக் கொடுக்க, என் இடை மேல் இருபக்கம் கால் போட்டு அமர்ந்து கண் கட்டினாள்.

இந்த உறவை எங்கிருந்து தொடங்கினோம் என்று கண்டறியமுடியாமல் இருவரும் தோற்றுப் போனதாக ஒத்துக் கொண்ட, பதிவு செய்யப்பட்ட உரையாடல் மூளைக்குள் கேட்கத் தொடங்கியது. இருவரும் ஒருவரையொருவர் அனுமதிக்க எடுத்துக்கொண்ட கால அளவு வித்தியாசப்படுவதாகப் பொய் சொல்லிக் கொண்டோம். பிறகு ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்டதாக நம்பவைத்துக் கொண்டோம். மெழுகுவர்த்தியை பற்ற வைத்தது நாசியை வந்தடைந்தது.

தொடையில் படர்ந்து கிடக்கும் நரம்புகளிலிருந்து அதன் நிறம் பிரித்து, காது மடலின் பின் பக்கத்தில் கழுத்திற்கு மேலே இருவரின் பெயரின் முதல் எழுத்தை பச்சை குத்துவதாக முடிவெடுத்துக் கொண்ட அந்த இரவை ஞாபகப்படுத்தி, இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாயா என்று என்னிடம் உறுதிப்படுத்திக் கொண்டாள். ரிப்பன் இருட்டைத் தாண்டி, மெழுகின் வெளிச்சம் தெரிந்தது.

மூடி வைத்திருந்த உள்ளங்கைக்குள் இருந்தது எதுவென்றேன். – அது, நீ உடலதிர்ந்து பின் சிரித்து அடங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றாய் தெரியத் தொடங்கும் என்றாள்.

அவளை கவிழ்ந்து படுக்கச் சொல்லி முட்டியை மடித்து இரு கால்கள் இணைத்து பாதப் பள்ளங்களில் நிறைத்து விளையாட முதன்முறை அனுமதித்த அன்று, தரையில் கால் வைக்க முடியாமல் அவஸ்தைப்பட்டதை சொல்லிச் சொல்லி நரம்பின் நிறங்களைத் திரித்துக் கொண்டிருந்தாள். கடிபடாத ஆப்பிளும் அதைச் சீண்டத் தயாராக மேலிருந்து கீழிறங்குவது போன்று இருக்கும் பாம்பு தலையும் உள்ள புகைப்படமே அவளது லேப்டாப் வால்பேப்பர். உருகும் மெழுகைக் கொண்டு, திறந்திருந்த என் மார்புக் கண்களை மூடினாள். அடி வயிற்றில் தெறித்த சொட்டுகளை ஒப்பிட்டு எது நீ; எது நான் கண்டுபிடி என்றாள். உறைந்திருந்த மெழுகுப் பொருக்குகளை நகக்கண் கொண்டு அவள் உடல் திறந்தாள். என் மார்பின் கருவறை அவளால் திறக்கப்படும்போது அவளைக் கேட்காமலே கண் கட்டவிழ்த்தேன். அவளது வலது உள்ளங்கை மூடியிருந்தது. இடது உள்ளங்கையில் “லெமன் க்ராஸ்” இலைகளை வைத்திருந்தாள். அதை தேநீர் அருந்துவதற்கு வெட்டி வரச் சொல்லவில்லை என்பது புரிந்தது. அது அவள் தேகத்தில் நிகழ்த்தப்போகும் கூச்சங்களை யோசித்தேன்.

அறுவடைக்கால வயலின் நிறம் அவளது உடல். மெழுகின் வெளிச்சத்தில் கடல்மேல் கிடத்திய அந்திச் சூரியன்போல மேனி மின்னியது. மூட்டு அழுந்தாமல் இருக்க அதற்கு தலையணை கொடுத்துவிட்டு, இரு கைகளையும் ஊன்றி 360 டிகிரியில் நான் வலம் வர ஏதுவாக நின்றவள், பொத்தி வைத்திருந்த கைக்குள்ளிருந்து பொதிந்து வைத்திருந்த தாயக்கட்டையை விரிப்பில் உருட்டி விட்டாள். “கழுத்து” என்று ஆங்கிலத்தில் விழுந்தது. மூடியிருந்த கைக்குள் மிச்சம் என்ன இருக்கும் என்பதை யூகித்து அமைதி காத்தேன். முன் பக்கம் ஒதுக்கிப் போட்டிருந்த கூந்தலை இன்னும் கொஞ்சம் ஒதுக்கிப் பிடித்து, “அதுல ஒன்ன எடுத்து முனை பக்கத்த கைல பிடிச்சி என் கழுத்துல இருந்து டிராவல் பண்ணு” என்றாள். கண்களால் காண முடியாத கூர் பற்கள் அவள் தேகம் கீறி முன்னேறுவதை விரல்களில் உணர முடிந்தது. எனக்கு பார்வை அவசியமற்றுப் போனது. அதன் கூர் தன்மையை சோதித்துப் பாக்க அவகாசம் கேளாத கட்டளை. இரத்தம் கன்றிப் போகும் கோடுகள் அவள் முதுகை அலங்கரித்தன. கண் திறவாமலே கண்டுகொண்டிருந்தேன். விசும்பலுக்கான ஒத்திகை தரையெங்கும் பரல்களாக ஓடிக் கொண்டிருந்தது. நனைய விரும்பினேன். ஆனால் மழை நின்றால் என்ன? என்றிருந்தது. நிறுத்தச் சொன்னாள். கண் திறக்காமல் நிறுத்தினேன்.

எட்டிச் சென்றுவிட்ட தாயக்கட்டையை எடுத்து மறுபடி உருட்டினாள். “தொடை” விழுந்தது. முதுகைத் தரையில் கிடத்திய வேகத்தில் மேலெழும்பினாள். அவள் உடல் எருக்கம் பூக்களின் நிறமாகித் திரும்பியது. உடலின் ஆறு பாகங்கள் தாங்கிய அந்த தாயக்கட்டையின் விளையாட்டு ஒழுங்கைக் குலைத்தாள். கோடுகளின் போக்கை வலி தாங்கும் உடல் தீர்மானித்தது. அடிப்பக்கம் துவாரங்கள் நிறைந்த வாளியில் பெயிண்ட் நிரப்பி, கயிறு கட்டி அந்தரத்தில் அலையவிடும் போது அது தீட்டிப்போகும் தீற்றல்கள் போல ‘லெமன் க்ராஸ்’ சென்ற இடமெல்லாம் இரத்தம் கன்றி நின்றது. தடித்த அந்தக் கோடுகளைத் தடவித் தடவி ப்ரைலியாக்கி சொற்கள் இல்லாத மொழி ஒன்றை உருவாக்கினோம். இனி எப்போதும் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பாத அந்த மொழியை, அவள் அலைபேசியில் புகைப்படம் எடுக்கச் சொன்னாள். எடுத்ததை பார்க்காதே என்றாள். நான் ஒளிந்துகொள்ள இடமற்று என் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டேன்.

சிவந்து தேங்கி நின்ற கண்களை அவள் மூடவும் இரு பக்கமும் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என் கழுத்து நரம்பில் இலையின் வீரியத்தை சோதித்துப் பார்த்தேன். அவள் கையிலிருந்து இன்னொரு தாயக்கட்டையை உருட்டி விட்டாள். ”முத்தம்” விழுந்தது. உடலெங்கும் படர்ந்து கிடக்கும் நான் வரைந்த அவளின் தாபக் கோடுகளில் எச்சல் படர முத்தமிட்டேன். உடலின் வெப்பமும், வலியின் உப்பும் அவள் முனகலுக்கு வேறொரு அர்த்தம் கற்பித்தது என் காமத்தின் கண்ணீருக்கு ஆயுள் பெருகிக் கொண்டே போனது. அங்கிருந்து எனது கண்ணீரின் சொட்டுகளால் முத்தமிடத் தொடங்கினேன். அதற்காகவே காத்திருந்தவள் போல புன்னகைத்தாள். அவள் சிரிப்பின் ரகசியச் சாவி என்னிடமிருக்கும் கர்வத்தில் தொலைந்து இன்னும் இன்னும் அவள் மேனியில், ஒவ்வொரு நெல் மணிகளாக விழத் தொடங்கியது. கன்னக் கதுப்பில் தேங்கி சொட்டுச் சொட்டாக விழும்படி பார்த்துக்கொண்டேன். என் கண்ணீரே கர்வமானது. எனக்கு அவளின் கண்களைப் பார்க்கத் தோன்றியது. அழைத்தேன். கண் திறக்காமலே மீதமிருந்த மூன்றாவது தாயக்கட்டையை உருட்டினாள். “Women on top” விழுந்தது. 

கதவை ஓங்கி அறையும் வல்லமை கொண்ட காற்றின் சிறு துண்டு, நாங்கள் இடம் மாறும்பொழுது அறைக்குள் உலவி வெளியேறியது. முதுகின் முள் எலும்புகளை மூடிப் போன தசையைத் தடவிக் கொடுத்தேன். முன்னும் பின்னும், குறுக்கும் மறுக்குமாக ஓடும் கோடுகளில் பெயரின் முதல் எழுத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனை விழுங்கியபடி அவள் உடலை பின்னோக்கி மலர்த்தி மின்னல் கீற்றுகளின் நெளிவுகள் நிமிர்த்தி முலைக்காம்புகளில் முனைந்தாள். கையூன்றி நின்ற என் தொடையிலிருந்து நரம்புகளின் நிறங்களைப் பிரித்தெடுத்து காது மடலின் பின் பக்கத்தில் நகம் வருடினாள். “உன் கூட செக்ஸ் வச்சிக்றது ஒரு பொண்ணு கூட செக்ஸ் வச்சிக்ற மாதிரி இருக்குனு முன்ன ஒரு தடவ சொன்னியே” வேகமாக என் வாயைப் பொத்தினாள். அவள் கண்களின் கருவிழிகளில் பூ விழுந்தது. அவள் மூச்சுக்காற்றின் வெப்பம் பூவை எரிக்க, மதகு உடையும்வரை உலகின் கடைசி முத்தத்தை பருகிக் கொண்டிருந்தாள்.

இறங்கிப் படுத்து, “இவ்வளவு சப்மிஸிவா எல்லாம் இருக்காதடா எனக்கு என்ன நெனச்சி பயமா இருக்கு.” என்றாள்.

நான் உலகின் முதல் முத்தத்தை இட்டேன்.

***

ரமேஷ் ரக்‌சன்– ஆசிரியரின் பிற படைப்புகள்:
16”, “ரகசியம் இருப்பதாய்”, “பெர்ஃப்யூம்” – சிறுகதைத் தொகுப்புகள்- “நாக்குட்டி” நாவல்
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular