நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

0
  • பாரதிராஜா
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

நூலின் தலைப்பை பார்த்ததும் வரும் முதல் கேள்வி, “என்னது, வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறதா?” என்பதுதான். அடுத்தது, “அதென்ன நல்ல வறட்சி?” ‘விவரமானவர்களுக்கு’ எளிதில் புரிந்துவிடும் – யார் எக்கேடு கெட்டால் என்ன, தன்னை வளப்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் எல்லாவற்றையும் மனிதர்களுக்குப் பிடிக்கத்தானே செய்யும்! அப்படி வறட்சியைக்கூட தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ‘நல்ல’ வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களையும் அப்படியான வறட்சிகளில் அவர்களிடம் சிக்கி அவர்களை விட அதிகமாகச் சீரழியும் எளிய மனிதர்களையும் பற்றி விரிவாகப் பேசும் நூல் இது.

நூலின் பெயர் – ‘Everybody Loves A Good Drought”. எழுதியவர் பி. சாய்நாத் (P. Sainath). இந்த நூலின் களம், இந்தியாவின் ஆக ஏழ்மையான எட்டு மாவட்டங்கள். அதில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் என்பது கூடுதல் ஈர்ப்பு. எங்கள் ஊர் இருப்பதென்னவோ தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் பண்பாட்டில், பழக்கவழக்கத்தில், மொழியில் இராமநாதபுரம் மாவட்டத்துக்கே பக்கம். அது மட்டுமில்லை. தனிப்பட்ட முறையில், என் முன்னோர்கள் அனைவரும் பல தலைமுறைகள் முன்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து இங்கே குடியேறியவர்கள் என்பது எங்கள் வீடுகளில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் கதை என்பதாலும், இந்த நூல் அதைப்பற்றியே மிக நுட்பமாகப் பேசுகிறது என்பதாலும், இந்த வாசிப்பு மிகவும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது.

2005 ஆக இருக்கலாம். ஏதோவொரு கட்டுரையில் தமிழ்நாட்டின் மிகவும் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் பற்றி ஒரு தகவல் வந்திருந்தது. தமிழ்நாட்டின் மிக முன்னேறிய மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், வட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி வட்டம்; தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் வட்டம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், எங்கள் இனக்குழுவின் தாய்க்கிராமம் முதுகுளத்தூர் வட்டத்தில் தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; என் தாய்வழிக் குலதெய்வம் கூட முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும்போது, அங்கே வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, ‘இந்த வெயிலில் சுருண்டு கொண்டிருந்திருக்க வேண்டியவர்கள் தானே நாமும்! அன்று ஒரேயொரு மனிதனோ குடும்பமோ இங்கிருந்து வெளியேறி நம் எல்லோருக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வழங்கிவிட்டார்களே!’ என்று எண்ணிக் கொள்வோம்.

தொண்ணூறுகளின் முடிவில் பெங்களூர் வந்த புதிதில் அடிக்கடி இதுபற்றி சிந்தித்ததுண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தமிழ் நண்பர்கள் எல்லோருமே சென்னைக்காரர்களாகவும் கொங்கு மண்டலத்தினராகவும் திருச்சிக்காரர்களாகவுமே இருப்பர். மருந்துக்குக் கூட ஒரு மதுரைக்காரனோ திருநெல்வேலிக்காரனோ இருக்க மாட்டான். இதனால்தான் அந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியோ என்று தோன்றும். இப்போது இந்த நிலைமை நிறைய மாறிவிட்டது. காவிரி ஓடும் கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் வளம் கொழிக்கும் பூமி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் பயணிக்கும் பொழுதுகளில் அவை இராமநாதபுரத்தை விடவும் பின்தங்கி இருப்பது போலவே படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிலையை விட இராமநாதபுரம் பரவாயில்லையே என்றுதான் தோன்றும். ஆனால் வட மாவட்டங்களில் உள்ளவர்கள் பஞ்சம் பிழைக்கச் சென்னைக்கோ பெங்களூருக்கோ வந்து அமைத்துக் கொள்கிற மாதிரியான வாழ்க்கையை இராமநாதபுரத்துக்காரர்கள் மதுரையில் வந்து அமைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. மதுரையை ஒரு பெரிய இராமநாதபுரமாக மாற்றியிருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவ்வளவுதான். சரி, கதைக்கு வருவோம்.

நூலாசிரியர் பி. சாய்நாத் மும்பைக்காரர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழின் உதவித்தொகை பெற்று, இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டுகளாக அவை ஒவ்வொன்றுக்கும் போய், அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுடன் பல நாட்கள் இருந்து, இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். இது எளிய பணி அல்ல. இன்று நடக்கிற பல ஆய்வுகள், கூகுளில் தேடித்பார்த்து தெரிந்து கொண்டு, தனக்கேற்றபடி தொகுத்து வழங்கப்படும் தகவல்களுக்கு வெளியே போவதில்லை. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குள் போய்ச் செய்ய வேண்டிய ஆய்வுகளை, எளிதில் அடைய முடிகிற – நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிற சில ஊர்களில் மட்டும் நாலு பேரைச் சந்தித்து முடித்துக்கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதையும் அவரே குறிப்பிடுகிறார். தான் ஓர் ஆங்கில இதழாளர் என்ற போதும், இந்திய மொழி இதழ்களைவிட ஆங்கில மொழி இதழ்களின் தரம் பல வகைகளில் மேலானதாக இருக்கின்றது என்று நம்பினாலும், இது போன்ற ஆய்வுகளில் ஆங்கில இதழ்கள் கள நிலவரத்தை விட்டு நெடுந்தொலைவு தள்ளி நின்றே கருத்துச் சொல்கின்றன, அதனாலேயே உண்மைக்குப் புறம்பாகவும் நிறையப் பேசிவிடுகின்றன என்பதையும், உள்ளூர் மொழி இதழ்களே உண்மைக்கு அருகில் இருப்பதாகவும் நேர்மையோடு ஒத்துக்கொள்கிறார்.

இப்படியான தன் ஆய்வை கட்டுரைகளாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் முதலில் வெளியிட்டிருக்கிறார். சில கட்டுரைகள், ‘ஒரு பத்திரிகையாளரோ அவர் எழுதும் கட்டுரைகளோ என்ன சாதித்துவிட முடியும்?’ என்கிற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அதிகாரத்தின் நாற்காலிகளை உடைத்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து சில தலைவர்கள் எப்படிச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகளை அவர்கள் அரசியல் நோக்கோடு அணுகி எப்படி நிலைமையை மேலும் கெடுக்கிறார்கள் என்பதும் வருகிறது.

எப்போதும் மக்களோடு நிற்கிற நாயகர்கள் எவரும் அரசியல் அதிகாரத்துக்கு அருகில்கூட செல்வதில்லை என்பதும், அப்படித் தப்பித்தவறி அதிகாரத்தைச் சுவைத்து விடுகிற சிலர், பின்னர் எப்படி அதிகாரம் ஒன்றையே வாழ்வின் நோக்கமாக்கி மாறத்தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கூட ஒரு சில இடங்களில் வருகிறது.

பின்னர் இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்ட போது, பெருமளவில் வரவேற்பையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இதெல்லாம் நடந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த ஆய்வு, இந்திய பொருளியல் தரை தட்டிய தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தியாவில் தாராளமயக் கதவுகள் திறந்து விடப்பட்ட காலத்தோடு உடன் பயணிக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் தாராளமயம் முழுதாய் நம்மை விழுங்கி விட்டு இன்றைய சூழ்நிலையில் எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. மேலும் மோசமடைந்தும் இருக்கலாம். நாம் நம்ப விரும்புவது போல ஒருவேளை தாராளமயமாக்கல் அவற்றையெல்லாம் சரியும் செய்திருக்கலாம். கடந்த இருபது ஆண்டுகளில் உங்களுக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. அது எல்லோருக்கும் நடந்திருக்கிறதா என்றால், அது தெரியவில்லை. நீங்களும் நானும் மட்டுந்தான் இந்தியா என்றுதான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றஞ்சாட்டுபவர்களுக்குச் சரியான பதில் சொல்லும் பொருட்டாவது மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமானதோர் ஆய்வு இது. அதுவே தாராளமயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இருக்கும். உங்களுக்கும் எனக்கும் போலவே இந்த எட்டு மாவட்டத்து மக்களுக்கும் பசியும் பட்டினியும் வறட்சியும் நீங்கியிருந்தால் அது தாராளமயத்தின் வெற்றியின்றி வேறில்லை. ஒருவேளை அவர்களுடைய வாழ்க்கை மேலும் சீரழிந்து போயிருந்தால், அவர்களுடைய உணவை பிடுங்கித் தின்ற பாவம் நம்மைச் சும்மா விடாது என்ற மன உளைச்சளுடனே நமக்கான தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.

முதலில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே அதில் நிறைய பேச இருக்கின்றன. காலம் காலமாகவே இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள் என்றால் BIMARU என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள். பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களே அவை. இவர் என்னவென்றால் பீகாரில் இரண்டு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்கள் என்று தொடங்கி ஒரிசாவில் இரண்டு மாவட்டங்கள் (அதில் ஒன்று ஆந்திரப் பிரதேச எல்லையில் இருப்பதால் ஆந்திரப் பிரதேச மாவட்டம் ஒன்றும் துணை நடிகராக உள்ளே வருகிறது), தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் என்று நம்மைக் குழப்பிவிட்டிருக்கிறார். அப்படியானால் இராஜஸ்தானும் உத்திரப்பிரதேசமும் முன்னேறி விட்டனவா? எல்லோரும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று என்று சொல்லிக் கொண்டிருப்பது வெறும் டுபுக்கா? இப்படி பல கேள்விகள் வரலாம். அதற்கான விடை இதை இன்னும் சற்று உற்று கவனித்தாலே புரிந்துவிடும். BIMARU என்கிற பட்டியல் மாநிலங்களுக்கானது. இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மாவட்ட வாரியானது. இராஜஸ்தானும் உத்திரப்பிரதேசமும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் என்றில்லாது மொத்த மாநிலமும் ‘சீரான சீரழிவை’க் கொண்டிருப்பதால் இந்தப் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம். அது போலவே, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான – மொத்தத் தென்னிந்தியாவுக்கும் முன்னணி மாநிலமான – தமிழ்நாடு, சில மாவட்டங்களில் மட்டும் பின்தங்கியிருக்கலாம். இருப்பினும், இவ்வளவு முன்னேறியிருக்கும் ஒரு மாநிலம், இப்படி மொத்த நாட்டிலும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களின் பட்டியலில் தன்னுடைய இரண்டு மாவட்டங்களும் இடம் பெற்றிருப்பதைப் பெரும் அவமானமாகக் கருத வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. தென்னிந்தியாவின் வேறு எந்த மாநிலமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இது சரியாகி இருக்கவே வாய்ப்பு நிறைய இருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொண்ணூறுகளின் நடுவில் நூலாக வெளியிடும் போதே “இதே எட்டு மாவட்டங்கள்தாம் இப்போதும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கடைசி எட்டு மாவட்டங்கள் என்று சொல்ல முடியாது” என்றிருக்கிறார் ஆசிரியர். இரண்டு – மூன்று ஆண்டுகளிலேயே அவ்வளவு மாறியிருக்கலாம் என்றால், இருபத்தைந்து ஆண்டுகளில் இன்னும் எவ்வளவோ மாறியிருக்கலாம். சில அப்படியே மாறாமலும் இருக்கலாம். பஞ்சத்து ஆண்டியும் இருக்கிறார்கள்; பரம்பரை ஆண்டியும் இருக்கிறார்கள் அல்லவா?

சரி, தமிழ்நாட்டின் அந்த இரு மாவட்டங்கள்தாம் எவை?

பி சாய்நாத்

பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் பாண்டிய நாட்டு இராமநாதபுரமும் புதுக்கோட்டையுமே அவை. இதில் கொடுமை என்னவென்றால் புதுக்கோட்டையை ஒட்டியிருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்தின் வளமான மாவட்டங்களில் ஒன்று. ‘அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைக்கு அருகிலேயே இருக்கும் ஓலை குடிசை’ போல!

தென் மாவட்டங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, “இராமநாதபுரம் சரி, புதுக்கோட்டையுமா???” என்றொரு வியப்பு வரலாம். திருச்சியையும் தஞ்சையையும் ஒட்டியிருப்பதாலும் பெரும் பெரும் செல்வந்தர்களை கொண்ட செட்டிநாட்டை உள்ளடக்கியிருப்பதாலும் வரும் வியப்பு அது. வேறு பல காரணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது இன்னும் நன்றாகப் புரியும். இந்த எட்டு மாவட்டங்களுக்கும் என்று சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. வறட்சிக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதே வேளையில் இந்த எட்டு மாவட்டங்களுமே இந்தியாவிலேயே குறைவான மழைப்பொழிவு அல்லது நீர்வரத்து கொண்ட மாவட்டங்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் இந்தியாவிலேயே குறைவான மழைப்பொழிவு கொண்ட மாவட்டங்களாக இருக்கின்றன. இயற்கையே இவர்களுக்கு எதிராக இருக்கிறது. அதையும் மீறி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்டங்களில் அற்புதமான நீர் மேலாண்மைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டுக்கு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் எப்போது கட்டப்பட்டது என்ற தகவலே கிடைக்கவில்லை; அவ்வளவு பழைமையானது; குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்கிறார். அதுபோல இம்மாவட்டம் முழுவதும் எண்ணிலடங்காத கண்மாய்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற ஆறு மாவட்டங்களில் அதுவல்ல பிரச்சனை. நல்ல மழைப்பொழிவு இருந்தும், நீர்வரத்து இருந்தும்கூட முறையற்ற நீர் மேலாண்மையும் வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து அங்கிருக்கும் எளிய மக்களைக் கொல்கின்றன. அதற்கு இயற்கை பொறுப்பல்ல. முழுக்க முழுக்க மனிதப் பேராசையும் சுரண்டலும் பொறுப்பின்மையும் விழிப்புணர்வின்மையும் மேலும் பல குறைபாடுகளுமே அவர்களை நாசம் செய்கின்றன. இயற்கை அல்ல. அது மட்டுமில்லை. வறட்சியின் போது மற்ற ஆறு மாவட்டங்களில் படும் அளவுக்கு இவ்விரு மாவட்டங்களில் உள்ள மக்கள் துன்பப்படுவதில்லை; உயிரிழப்பில்லை. அவர்களைவிட இவர்கள் எளிதில் சமாளித்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் கல்வியறிவு, விழிப்புணர்வு, அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சி என்று சொல்கிறார். இது நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கிறது.

தமிழ்நாடு எப்போதுமே அரசியல் ரீதியாகவும் கல்வியறிவிலும் விழிப்புணர்விலும் முன்னணியில்தான் உள்ளது. அதற்கான பெருமையை யாருக்குக் கொடுப்பது எனும் போதுதான் – தனிப்பட்ட அரசியல் சார்புகளை விற்க வேண்டிய நிலை வரும் போதுதான் இதில் புரட்டிப் பேசும் வேலை தொடங்குகிறது. கண்மூடித்தனமாக “ஐயையோ, தமிழ்நாடு இவர்களால் நாசமாப் போச்சே! அவர்களால் நாசமாப் போச்சே!!” என்று கூக்குரல் எழுப்ப வேண்டியதாகிறது. அதை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் (யாராக வேண்டுமானாலும்), ‘இது என் நிலம்; இங்கு நடந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நானும் என் முன்னோரும் பொறுப்பு’ என்ற புள்ளியில் நின்று பார்த்தீர்களானால், இதில் இருவேறு விதமான கருத்துகள் இருக்கவே முடியாது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னணியில்தான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லை. தென்னிந்தியாவே நூறாண்டுகள் வட இந்தியாவை விட முன்னால்தான் இருக்கிறது. பொருளியல் வளர்ச்சியானாலும் சரி, மற்ற எந்த வளர்ச்சியானாலும் சரி, “இன்றைய இந்தியா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பா போலத்தான் இருக்கிறது” என்று சொல்லும் எவரிடமும், “தென்னிந்தியா?” என்று கேட்டால், “ஒரு நூற்றாண்டு” என்று இறங்கி வந்து விடுகிறார்கள். இன்று பொருளியல் – சமூகவியல் பேசும் எவருமே சொல்வது இதுதான் – “தென்னிந்தியாவையோ, தமிழ்நாட்டையோ, கேரளத்தையோ தனியாக எடுத்துப் பார்த்தால், அவற்றின் வளர்ச்சி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்கின்றன.” இதை நாம் ஒவ்வொருவரும் நம் பிரச்சாரத்துக்கு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முற்றிலும் வேறுபட்ட பிரச்சனை. இதன் பொருள் இங்கே ஆண்டவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்பதோ இதைவிட நல்லாட்சி கொடுத்துவிடவே முடியாது என்பதோ அல்ல. இதைவிட யோக்கியர்களோ இதைவிட நல்லாட்சியோ கிடைத்திருந்தால் நாம் இதைவிட வளர்ந்திருக்கலாம். ஒருவேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவுடனோ மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனோ ஒப்பிடும் அளவுக்கு நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. இந்த நூலும் அதை உறுதி செய்கிறது. வட இந்திய மாவட்டங்கள் தென்னிந்தியாவை விட நூறாண்டுகள் பின்தங்கி இருப்பதாக ஆசிரியர் வெளிப்படையாகவே சொல்கிறார்.

பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டுவிட்டுப் போகும் சராசரிப் பத்திரிகையாளராக இல்லாமல், சில பிரச்சனைகள் அவர் கண் முன்பே எப்படிச் சிறப்பாகக் கையாளப்பட்டன என்றும் வேறு என்ன விதமான தீர்வுகளை அணுகலாம் என்றும் கூட நூலின் பிற்பகுதியில் விளக்குகிறார். அதில் முக்கியமாக வருவது, தமிழகத்தில் அறிவொளி இயக்கம் இங்கு எத்தகைய ஒரு பெரும் புரட்சியைச் செய்தது என்பது. வறட்சிக்கும் நீருக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ அது போலவே வறட்சிக்கும் கல்விக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம் நம் மக்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவம். இதை கண் முன்னால் கண்ட தலைமுறை நாம். முக்கியமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் நிகழ்த்திய சமூக மாற்றமும் வேறு சில பணிகளும் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட்டால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பரிந்துரைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் சாத்தியப்பட்ட இது போன்ற மாற்றங்கள் மற்ற மாநிலங்களில் முயன்றே பார்க்கப்படாமல் போனதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதைத்தான் நாம் பாரபட்சமின்றிச் சிந்தித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்! நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் படி (ஆய்வுக்கு முந்தைய – அறிவொளி இயக்கத்துக்கு முந்தைய தகவல்படியே), தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் கல்வியறிவில் மற்ற ஆறு மாவட்டங்களோடு ஒப்பிடக்கூட முடியாத அளவு முன்னணியிலேயே இருந்தன. அறிவொளி இயக்கத்துக்குப் பின் புதுக்கோட்டை மாவட்டந்தான் கேரளத்துக்கு வெளியே நூறு விழுக்காடு எழுத்தறிவு அடைந்த முதல் இந்திய மாவட்டம் என்பதும் கூடுதல் தகவல். அப்படியான ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதுதான் பெருங்கொடுமையே.

ஒரு காலத்தில் (எண்பதுகளில் அல்லது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்) சீலா ராணி சுன்கத் என்றொரு பெயர் அடிக்கடிச் செய்திகளில் அடிபடும். அந்த பெயர் இந்த நூலிலும் அடிக்கடி அடிபடுகிறது. அவர் பெயர் அவ்வளவு அடிபட்டதன் காரணம் என்ன என்பதும் இப்போது தெரிய வருகிறது. அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போதுதான் பெரும் சமூக மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரும் அறிவொளி இயக்கமும் இணைந்து நடத்திய – புதுமையான ‘பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைக்கும்’ இயக்கம் எவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை நடத்தியது என்பதை விவரித்திருக்கிறார். மாவட்டம் முழுக்க பெண்கள் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை ஊக்குவித்து, அதை ஒரு பெண் விடுதலைக்கான அடையாளமாக முன்வைத்து, அதை சாதித்தும் காட்டிய கதை கண்டிப்பாக ஆசிரியர் சொல்வது போல நாடு முழுக்கவும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது. சைக்கிள் ஓட்டுவது வெறும் அடையாளம் மட்டுமல்ல. அது சைக்கிள் ஓட்டுவதோடு நின்று விடவில்லை. புதுவிதத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆண்கள் மீதான சார்பைக் குறைத்தது. எல்லாவற்றிலும்.

தனியார் கொள்ளைக்காரர்கள் நடத்திய கல்குவாரிகளை, ஒரு குவாரிக்கு இருபது பெண்கள் என்ற வீதத்தில் படிப்பறிவு கூட இல்லாத பட்டியல் இனப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுத்ததில் பெற்ற வெற்றி அதற்கடுத்த படி. இப்பெண்கள் நடத்திய குவாரிகளில் இவர்களின் கணவர்கள் சம்பளத்துக்குப் பணி புரிந்தது மொத்த சமூகத்தின் சமன்பாட்டையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆண்கள் நிர்வகித்த குடும்பத்தில் பெரும் பங்கு செலவு சாராயத்துக்குப் போகிறது; அதுவே பெண்கள் நிர்வாகத்துக்குள் வரும்போது முழுக்கவும் குடும்பச்செலவுக்குப் போகிறது. குழந்தைகளின் உணவும், கல்வியும் உத்திரவாதம் பெறுகிறது. அடுத்த கட்டமாக இப்பெண்கள் சாராயத்துக்கு எதிராகப் போராடி வெல்கிறார்கள். அறிவொளி இயக்கமும், சைக்கிள் ஓட்டுவதும் கலந்து அவர்களுக்குக் கல்வியறிவையும் தற்சார்பையும், கூடுதல் பணத்தையும், நிர்வாகத் திறமையையும் மட்டும் கொடுக்கவில்லை; அரசாங்கத்துக்கே கூடுதல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. அதைத் தோல்வியுறச் செய்வதில் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களும் எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதும் இந்தியா முழுக்க எடுத்துச்செல்லப்பட வேண்டியதே. அங்கும் அப்படி நடந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே! படிப்பறிவில்லாத – வெளி உலகம் அறியாத பெண்கள் வந்து பெரும் அரசியற் பொறுப்புகளை ஏற்கும் போது ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் மற்ற மாநிலக் கதைகளில் சொல்லப்படுகிறது. கல்குவாரி நடத்துவது வேறு; உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களின் கைப்பாவையாக இருந்து செயல்படுவது வேறு அல்லவா?

சுன்கத்துக்கு அடுத்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நல்லவராக அமைந்து விட்டதால் புதுக்கோட்டைக்கு உண்மையாகவே நல்ல காலம் பிறந்துவிட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள் என்றாலும், அடுத்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படி இல்லாமல் போனால் கண்மூடி முழிக்கும் முன் எல்லாமே பழையபடி சரிந்து விழுந்துவிடும் என்கிற பயம் பற்றியும் சொல்கிறார். அங்குதான் தனிமனித சாகசங்களை மட்டும் நம்பி நடத்தப்படும் மாற்றங்கள் காலம் கடந்து நிற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை வருகிறது. நூல் முழுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல சாகசங்கள் நிகழ்த்தும் நாயகர்கள் பற்றி பேசப்படுகிறது. இப்படியான சூழல்களில் எதுவுமே நம்பிக்கையளிக்கும் படி இல்லாத போதும் ஒரே நம்பிக்கைக் கீற்றாக இந்த நாயகர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – அச்சுறுத்தல்கள் பற்றியும், இவர்கள் மீது திருப்பப்படும் மிதமிஞ்சிய கவனம் எப்படிப் பல நேரங்களில் பிரச்சனையின் மீது காட்டப்பட வேண்டிய கவனத்தைத் திருப்பிவிடுகிறது என்றும் சொல்கிறார். எண்பதுகளில் பத்திரிகையாளர்கள் செய்த சில அரும்பணிகளைப் பற்றிப் பேசுவது போலவே, பல நேரங்களில் அவர்கள் எப்படிப் பேச வேண்டிய பிரச்சனையை விடுத்துத் தேவையற்ற தனிமனிதக் கதைத்தல்களில் விரயமானார்கள் என்றும் சொல்கிறார்.

வட இந்திய மாவட்டங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதே எவ்வளவு பெரிய சவால் என்பதும், அதை எப்படித் தமிழ்நாடு சத்துணவுத் திட்டத்தின் மூலம் முறியடித்தது என்பதும், அதுபோல அங்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டது பற்றியும் கேள்விப்படும்போது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டின் இரு மாவட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால் பேசப்படும் மற்ற ஆறு வட மாநில மாவட்டங்களுமே மலைப்பகுதிகள். பழங்குடியினர் நிறைந்த பகுதிகள். பழங்குடியினர் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதானதில்லை. மற்ற மனிதர்களைப் போல அல்லாமல், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள், நல்லது-கெட்டது கொண்டவர்கள். நாம் முன்னேற்றம் என்பதை அவர்களுக்கும் முன்னேற்றம் என்று சொல்லித் திணிப்பது வளர்ச்சி ஆகாது; அதற்குப் பெயர் வேறு. ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு – சில பழங்குடியின மக்களுக்குள் கடுமையான வன்முறையும் அடிதடிகளும் நடக்கின்றன; ஆனால் அவர்கள் வெளி மக்களிடம் அதைக் காட்டிக்கொள்வதே இல்லை; வன்முறை அனைத்தையும் அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொள்கின்றனர்; ஒருபோதும் திருடுவதோ, பொய் சொல்வதோ இல்லை; வன்முறை சார்ந்த ஏதோவொரு குற்றத்துக்காக அவர்களைச் சிறையில் அடைத்தால், திரும்பி வரும்போது பொய் சொல்லப் பழகிக்கொண்டு வந்து விடுகிறார்கள்; இது அவ்வினக்குழுவின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இந்தப் புள்ளியில்தான் எது வளர்ச்சி என்ற கேள்வி வருகிறது. “இப்படி ஒரு வளர்ச்சி இம்மக்களுக்குத் தேவையா?” என்கிறார் அங்கொருவர். இங்கிருப்பவர்களிடம் கேட்டால், “பொய் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சனையா? அதைப்போய் இவ்வளவு பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்னவொரு பிற்போக்குச் சிந்தனை! வளர்ச்சிக்காக இதெல்லாம் கூடச் செய்யாவிட்டால் எப்படி?” என்போம்.

பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெரும் அநீதி அவர்களை அவர்களின் நிலங்களை விட்டு விரட்டுவது. அணை கட்டுவதற்காக விரட்டியது, தொழிற்சாலை கட்டுவதற்காக விரட்டியது, இராணுவத்தளம் அமைப்பதற்காக விரட்டியது என்று பல காரணங்களுக்காக இம்மக்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருநாள் இரவு நம் படுக்கையறையை பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டால் மண்டை காய்ந்து விடுகிற நம்மால், நாட்டின் வளர்ச்சிக்காக இதையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஒரு இராணுவத்தளத்தில் பயிற்சி என்று அறிவிக்கப்படும் போதெல்லாம் அங்கிருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் அப்படி அப்படியே காலி செய்து வெளியேறிவிட வேண்டுமாம். பயிற்சி முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து கொள்ளலாமாம். இப்படி வெளியேறுவதற்கு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுப்பார்களாம். இது போன்ற ஒரு வேலையை மும்பை நகரத்தில் உள்ள ஒரு பகுதியில் செய்ய முடியுமா என்று கேட்கிறார் ஒருவர். நமக்கு இது விதண்டாவாதம் போலத்தான் படும். நம்மைப் போன்றவர்கள் வாழும் மும்பை வேறு, பழங்குடியினர் வாழும் அந்தக் கிராமங்கள் வேறு என்பதற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, நம்மைப் போன்றவர்களிடம் அப்படி ஆட்டம் காட்டினால் அந்த அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் கூட்டு சக்தி நம் ஓட்டுக்கு இருக்கிறது; அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற படிக்காத பழங்குடி மக்களுக்கு இல்லை. அவர்களில் பலருக்கு ஓட்டே இல்லை என்பது வேறொரு கிளைக்கதை. இதெல்லாம் மக்களாட்சி முறையின் கரிய பக்கங்கள். நம்மை மக்களாட்சியை விட மோசமான அமைப்பை நோக்கி நகர்த்துவதற்காகக் கழுகு போல ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் மக்களாட்சியின் போதாமைகளைப் பேசுவதால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதால் இதை இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுவதே நல்லது. இல்லையா?

இன்னோர் ஊரின் கதை அதைவிடக் கொடுமையாக இருக்கிறது. ஓர் ஊரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், இன்னோர் இடத்தில் அது போலவே ஓர் ஊரை உருவாக்கி அதே பெயரையும் இடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து அந்த ஊரையும் காலிசெய்யச் சொல்கிறார்கள். இப்போது மூன்றாமிடத்தில் மீண்டும் ஓர் ஊர் கட்டுகிறார்கள். இப்போது அதையும் காலிசெய்யச் சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காகக் காலிசெய்வது முக்கியம். சரி. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது நாட்டின் கடமை இல்லையா? அதை நாடு செய்வதில்லை. அதற்கு வரும் பணத்தை முழுங்கி ஏப்பம் விடுவதையே தன் முழுநேரத் தொழிலாகக்கொண்டு ஒரு கூட்டம் அரசாங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இது போன்ற இடப்பெயர்ச்சிகளின் போது இழக்க நேரிடும் உறவுகள் வேறு இவர்களின் பலத்தைப் பிடுங்கி விடுகிறது.

இடம் மாறுவதில் இடம் மாறுவது மட்டும் பிரச்சனையில்லை. அப்படி இடம் மாறும் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தான் வாழ்ந்த இடத்தில் இருந்த குறிப்பிட்ட செடி-கொடி-மரங்களை மட்டுமே சார்ந்து தம் உணவு முறைகளையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் அவை வாழ்வாதாரம் எனப்படுகின்றன. அந்த இடத்தை விட்டு வேறோர் இடத்துக்குப் போகும் போது புதிய இடத்தில் இவர்களுடைய செடி-கொடி-மரம் இருப்பதில்லை. அப்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பிடுங்கப்படுகிறது. அரை மணிநேரம் இணைய இணைப்பு பிடுங்கப்பட்டால் தாங்க முடியாத – ஒரு வாரம் வெளியூரில் போய் நம்மூர்ச் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாத நம்மால் அதற்கும் விளக்கம் கொடுக்க முடியும் – “வலுவுள்ளதே வாழும்!” என்று. நான்கு நாட்கள் அரசாங்கமும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கும் அமைப்புகளும் இயங்காவிட்டால் வலு என்பதன் பொருளே மாறிவிடும். காலமெல்லாம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இம்மக்களின் வலுவுக்கும் வாழ்வுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இரையாகி விடுவோம் என்பதைக்கூட உணர முடியாதவர்களா நாம்? அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடாது என்று ஒரு நம்பிக்கைதானே!

பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இன்னொரு விதமான கொடுமையும் இருக்கிறது. “இடமெல்லாம் மாற வேண்டாம். நீ இருக்கிற இடத்தில் இருந்து கொள். ஆனால் நீ இவ்வளவு நாட்களாக உன்னுடையது என்று எண்ணிக்கொண்டிருக்கும் உன்னைச் சுற்றியிருக்கிற எதுவுமே உன்னுடையதில்லை. நிலம் உட்பட, அதில் வளரும் மரம்-செடி-கொடி வரை எல்லாம் அரசுக்குச் சொந்தம்” என்று சொல்லிவிடுவது. இதுவும் அவர்களை இடப்பெயர்ச்சி செய்யச்சொல்வது போலத்தான். வாழ்வாதாரத்தை மட்டும் பறித்துக்கொள்வது கொல்வதைப் போலத்தானே! பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வளர்த்து பாதுகாத்த நிலத்தையும் அதன் உற்பத்தியையும் அவர்களுக்குச் சொந்தமில்லை என்று சொல்ல நாம் யார் என்ற மனச்சாட்சியே நமக்கு நிறையப் பேருக்கு வேலை செய்வதில்லை. பாதி இயற்கை; பாதி அவர்கள் பேணியது. தன் வாழ்க்கையில் அனைத்தையுமே மூங்கிலைச் சுற்றியே அமைத்துக் கொண்ட ஓர் இனத்தைத் திடீரென ஒரு நாளில் அந்த மூங்கிலை நீங்கள் தொடவே கூடாது என்று சொல்கிற கதை ஒன்று வருகிறது. வனத்தைப் பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்ட வனத்துறையினரின் கொள்ளையிலும் கடத்தலிலும் இருந்து வனத்தைக் காக்க பழங்குடி மக்கள் படும் பாடு பற்றிய கதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது. என்னவொரு வேடிக்கை!

இதையெல்லாம் பார்க்கும் போது பெரும்பாலும் சமவெளியாக இருப்பதும் குறைவான பழங்குடியினர் எண்ணிக்கையும் கூட தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணமோ என்று படுகிறது.

இந்த மாவட்டங்கள் அனைத்திலுமே பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவராகவோ பட்டியல் இன மக்களாகவோதான் இருக்கிறார்கள். அதுவே எப்போதும் அவர்களுக்கான நீதியைக் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது. அவர்களே அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டால்தான் உண்டு என்று சொல்லிவிடுகிற அளவுக்கு அது அவ்வளவு எளிதில்லை. இது ஒரு கொடுமையான சுழற்சி. ஒவ்வொரு நாளும் அன்றைக்கான சாப்பாட்டுக்கான போராட்டமே அவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கும் போது அதிலிருந்து வெளியேறி அவர்கள் தம் மற்ற உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் போராடுவதெல்லாம் வாய்ப்பே இல்லாத மாதிரித்தான் படுகிறது. அதற்கு முன் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

கடனும் கந்து வட்டியும் கொடுப்பவர்கள், இந்த எட்டு மாவட்டங்களை அப்படியே வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள். நிலமுடையவர்களை வளைத்து நிலத்தை பிடுங்குகிறார்கள்; அதுவுமற்றவர்களை வளைத்து அவர்களை கொத்தடிமை ஆக்கிக்கொள்கிறார்கள்; வேறு சில இடங்களில் அதுவே விபச்சாரம் முதலான பெரும் கொடுமைகளுக்கும் வித்திடுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட நிலச்சீர்திருத்தம் இதற்கொரு முக்கியத் தீர்வாக இருக்க முடியும் என்பது ஆசிரியரின் கருத்து. அதற்கான வலுவான காரணமும் சொல்கிறார். நிலச்சீர்திருத்தம் செய்த நான்கு மாநிலங்களில் இருந்து ஒரு மாவட்டம் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை! “தமிழ் நாட்டில் நடக்காத நிலச்சீர்திருத்தமா?” என்போருக்கு ஓர் அதிர்ச்சி இருக்கிறது. தமிழ் நாட்டில் செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தம் பெரும்பாலும் மோசடி என்கிறார்.

வறுமைக்கோடு என்பது எப்படி வரையறுக்கப்பட்டது என்கிற கதை வியப்பூட்டுகிறது. நாளொன்றுக்கு இத்தனை கலோரி சாப்பிட முடிந்தவர்கள் கோட்டுக்கு மேலே என்றும் முடியாதவர்கள் கீழே என்றும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்; இதில் கல்வி, சுகாதாரம், பிற வசதிகள் எதைப்பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது ஏன் என்று வியந்து முடிவதற்குள் அதற்கான நியாயமும் சொல்லப்படுகிறது. அன்று வரையறுக்கும் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் நேர்மையும் நல்லெண்ணமும் நிறைந்தவர்கள். கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டுச் செல்பவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் மற்ற வசதிகளும் அரசாங்கத்தால் எல்லோருக்கும் முறையாக அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு உணவை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி வரையறுத்தார்கள். அதனால்தான் இப்போது வரையறையை மாற்ற வேண்டியதாகியுள்ளது. இப்படி நாற்பது ஆண்டுகள் கழித்தும் கல்வியும் சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் மக்களுக்குச் சென்று சேர்ந்திராது என்று அன்றே தெரிந்திருந்தால் அப்போதே முறையாக வரையறுத்திருப்பார்கள் என்கிறார். ஓரளவு சரியாகத்தான் படுகிறது. அத்தோடு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற மக்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டது – கால்வாசியாகிவிட்டது என்று உள்ளூரில் ஒரு பொய் சொல்லிக்கொண்டு, அதுவே பல மடங்காகக் கூடிவிட்டது என்று போய் ஐ. நா. மன்றத்திலும் உலக வங்கியிடமும் காசுக்காக வேறொரு பொய் சொல்ல முடிகிற மனசாட்சி – நேர்மை நம் அரசாங்கங்களுக்கு இருந்திருக்கிறது.

வெறுமனே வெற்றுக் கூச்சல்களையும் அடையாளங்கள் மீதான பித்துக்களையும் தேசபக்தி என்று கூறி தன்னையும் பிறரையும் ஏய்ப்பவர்கள் போலன்றி, இந்த நாட்டை ‘உண்மையாக’ நேசிக்கிறவர்கள், தாம் நேசிக்கும் இந்த நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது, அது எப்படியெல்லாம் இங்குள்ள எளிய மக்களைச் சீரழிக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நூலில் புதையல் போல விதவிதமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு தனிமனிதனால் புரிந்து கொள்ளப்பட முடிந்தவற்றுள் சிலவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை. நீங்கள் படித்தால் உங்களுக்கு எவ்வளவோ கிடைக்கலாம்.

நூலைப் பற்றிய சில மதிப்புரைகளைப் படிக்கும்போது, நிறையப் பேர், “இந்த நூல் என் கண்ணைத் திறந்துவிட்டது; நான் வாழும் இதே நாட்டில் இப்படி ஒருவேளை சோற்றுக்குக்கூடப் போராடும் மக்களும் வாழ்கிறார்களா?; நொறுங்கிப் போய்விட்டேன்; இன்னும் மீளவில்லை” என்று பலவிதமான வியப்புகளை விளக்கியிருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வாழும் சொகுசான வாழ்க்கையாக இருக்கலாம். அதுவே பலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரவிடாமலும் கூடச் செய்யலாம். இதை நம்ப முடியவில்லை என்று ஒரு சாரார் சொல்ல முடிகிறதென்றால் அதுவே இங்கிருக்கும் இடைவெளிக்கான பெரும் சாட்சி. ஆனால் எனக்கு இந்த நூல் வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. நூலில் வரும் பல மாந்தர்கள் என் வாழ்வில் சிறு வயதில் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து வளர்ந்தவர்கள். அன்றோ இன்றோ நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு குறைச்சலும் இல்லை என்பதற்காக, நம் கண்முன் கண்டவற்றைக் கூட மறந்துவிட வேண்டும் என்று கட்டாயமில்லையே!

இரவுச்சாப்பாடு பற்றி கேட்டபோது, “மதியமே சாப்பிட்டுவிட்டோம்; அதனால் நாளைதான் அடுத்துச் சாப்பாடு!” என்று சொன்ன நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் இவற்றை எளிதில் கடந்துவிட முடியவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சிய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்; பக்கத்து நகரத்தில் சில்லறைக்கு பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருளை, மொத்த விலைக்கு என்று வரும்போது இரண்டு-மூன்று ரூபாய்க்கு புன்னகை மாறாமல் கேட்கும் இடைத்தரகர்களைப் பார்த்திருக்கிறேன்; ‘இதற்கெதற்கு இம்மக்கள் இப்படிச் சண்டைக்காரனிடம் பேசுவது போல வெறிகொண்டு பேசுகிறார்கள்!’ என்று பருத்தி-மிளகாய்-அவுரி விளைவித்த விவசாயிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன்; அரசுப்பணியில் இருந்துகொண்டு தனியார் மருத்துவமனை நடத்திய மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன்; கந்துவட்டி வசூலிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்; வாங்கியதைவிடப் பலமடங்கு கட்டிய பின்னும் கடன்காரனாகவே இருந்து கந்துவட்டிக்காரர்களின் அடியாட்களிடம் அடிபட்டவர்களை பார்த்திருக்கிறேன்; அதிலேயே வீட்டையும் சொத்தையும் இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்; தனக்கான நீதிக்காகவும் தன் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தை திருப்பவும் உண்மையை மிகைப்படுத்தி பேசும் மக்களைப் பார்த்திருக்கிறேன்; பஞ்சகாலத்தில் பலமைல் தொலைவு தண்ணீருக்கு அலைந்த மக்களைப் பார்த்திருக்கிறேன்; நூலில் வரும் இராமநாதபுரத்து மாந்தரில் ஒருவர் (சுரண்டுபவரோ சுரண்டப்படுபவரோ) என் இரத்த உறவினராகக்கூட இருக்கலாம்; ஒரு காரணமும் இல்லாமல் மக்களுக்கு உழைத்துத் தேய்வதையே மனநோய் போலக்கொண்டு உழைத்து அழிந்த சில உன்னதமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இந்த நூல் என்னைப் பற்றியது; என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பற்றியது என்று தோன்றியது. என்னைப் போலவே நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் கூட இதில் இருக்கலாம். படித்து பார்த்துச் சொல்லுங்கள்.

Everybody Loves A Good Drought
P.Sainath
Penguin

-பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு [email protected]

REVIEW OVERVIEW
Previous articleவெடிகுண்டு ஓசையினூடே உறங்காதியங்கும் மாநகரத்தின் கதை
Next articleபுத்தக தின பரிசுப் போட்டி முடிவுகள்
%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95 பாரதிராஜா(புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை) நூலின் தலைப்பை பார்த்ததும் வரும் முதல் கேள்வி, “என்னது, வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறதா?” என்பதுதான். அடுத்தது, “அதென்ன நல்ல வறட்சி?” ‘விவரமானவர்களுக்கு’ எளிதில் புரிந்துவிடும் - யார் எக்கேடு கெட்டால் என்ன, தன்னை வளப்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் எல்லாவற்றையும் மனிதர்களுக்குப் பிடிக்கத்தானே செய்யும்! அப்படி வறட்சியைக்கூட தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ‘நல்ல’ வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களையும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here