Thursday, April 18, 2024

நடையொரு…

வைரவன் லெ.ரா

ஞ்சப்பயலாக்கும். அவனும், பீநாறிக்க நடையும். பஸ்ஸும் வேண்டாம், சைக்கிளும் வேண்டாம். எல்லா எடத்துக்கும் நடந்துதான் வாரான், போரான். இப்போ டிவிலையும் வந்துட்டான். கேமராக்க முன்ன இளிப்பும் பவுசும், தள்ளக்க நடையும்,” வெற்றிலைப் பாக்குக் கடையில், பாக்குவெட்டியில் கோரைப்பாக்கை இரண்டு மூன்று துண்டாய் வசம்போல் நறுக்கிக்கொண்டே ஆசீர்வாதம் தாத்தா பேசினார். வெற்றிலையை வாயில் குதப்பியவாறே அனந்த கிருஷ்ணன் வாயில் எச்சில் தெறிக்க, “இவன்லா ஒரு ஆளுன்னு டிவில பிடிக்க ஆளு வந்திருக்கு பாத்தீலா, கன்னியாரி ஜில்லாவ தமிழ்நாட்டு கூட சேக்கும் போது எங்க அப்பனும் நேசமணி கூட நின்னான். எங்க அப்பாவ யாருக்குத் தெரியும், அத படம் பிடிச்சு போடுங்கன்னு எத்தற வாட்டி லெட்டர் போட்டேன். ம்ஹும்” என்று சொன்னான்.

“லேய் அனந்தா, ஒங்க அப்பனுக்க கதைய வேற எவன்கிட்டயும் சொல்லு பிள்ளே. அவனுக்கு திருவாங்கூர் கூட இருக்கத்தான் ஆச கேட்டியா. என்னைக்கோ நாரோயிலுக்கு நேசமணி வந்த அன்னைக்கு கூட நின்னு போட்டோ பிடிச்சு வச்சிருந்தா உங்க அப்பன் தியாகி ஆய்டுவானா? வீட்டுக்க உத்திரத்துல இன்னும் சங்கு சின்னம் இருக்கது யாரும் அறியாதுன்னு பேசாதல. வாயி இல்லைன்னா உன்ன நாயி கூட மதிக்காது,” ஆசிர்வாதம் தாத்தா பேசிக்கொண்டிருக்கும் போதே, அனந்த கிருஷ்ணன் முகத்தை வலிச்சம் காட்டினான். ஏற்கனவே வெற்றிலை குதப்பிக்கொண்டிருந்த முகத்தில் வலிச்சமும் சேர, சர்வ லட்சணம் பொருந்த அனந்த கிருஷ்ணன் காட்சியளித்தான்.

கிராமத்தின் சகல வம்புகளும் நிகழும் ஸ்தலம் ஆசீர்வாதம் தாத்தாவின் வெற்றிலைப் பாக்குக் கடை. ஆலமர மூட்டில் சவுக்குக் கம்பில் தென்னையோலையைக் கொண்டு, பத்துக்கு எட்டு அடி கொண்டு எழுப்பப்பட்ட தொழில் ஸ்தாபனம். இடுப்பில் சாரம் மட்டும் கட்டியிருப்பார், சட்டை போடப் பிடிக்காது, கருத்த கனத்த உடம்பில், நரைத்த நெஞ்சுமுடி அவரைப் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். வெற்றிலையும் பாக்கும் தவிர ஆரஞ்சு மிட்டாயும், தேன் மிட்டாயும், இஞ்சி கலரும் கிடைக்கும், கூட எந்நேரமும் மண்ணெண்ணெய் அடுப்பிலே கொதிக்கும் தேயிலையுமுண்டு. அனந்த கிருஷ்ணன் பிறகு எதுவுமே பேசவில்லை. அவனது வன்மம், மென்ற வெற்றிலையை காறித் துப்பும்போது மட்டும் அதிகம் வெளிப்பட்டது. “பிள்ளே, ரொம்ப காறாதே. கொடலும் துப்பினில வந்துரும்,” ஆசீர்வாதம் தாத்தா சொல்லிவிட்டுக் கோரைப் பாக்கு போட்டிருந்த அரிவட்டியைத் தன்பக்கம் இழுத்தார்.

யோவான் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. அவனின் இடுப்புக்குக் கீழே நீளம் அதிகம், குச்சி போன்ற கால்கள் ஒவ்வொரு எட்டையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அதிகமாக நீட்டி வைக்க ஏதுவாக இருக்கும். அது தாமரைக்குளத்தில் இலைகளினூடே எட்டி எட்டிப் போகும் தாழைக் கோழியைப் போலவிருக்கும். ஆசீர்வாதம் தாத்தாவின் கடை முன்னே விரிந்து கிடக்கும் தாமரைக் குளத்தில் வட்டை மிதக்க, தாமரையிலை எடுக்கும் வேலை யோவானுடையது.

“பாட்டா, மழைக்க லேக தெரியே, கொளத்துல எறங்கவா?” யோவான் ஆசீர்வாதம் தாத்தாவைப் பார்த்துக் கேட்டான். “லேய், காத்து இன்னா பாரு, என்ன திசைல வீசுகு? எத்தற மட்டம் சொல்லிக் கொடுத்திருப்பேன். மண்டைல நிக்காதே. கோம்பப்பய. ஒரு மயிரும் இன்னைக்கு மழ அடிக்காது. வட்டைய கொண்டு எறங்கு. சம்பாதிப்பு பூரா உனக்க பாக்கேட்டுல தான வருகு? பாட்டத்துக்கு எடுத்தவன் வாழதுக்கு நீ ஏமுல கெடந்து துடிக்க? சொன்னா கேக்கப் போறியா? சரி போற முன்னாடி ஒரு டீ குடிச்சுட்டுப் போயாம்டே.”

“வீட்லயே குடிச்சுட்டு வந்துட்டேன் பாட்டா. வட்டையக் கொண்டாரும். ஓணம் சீசன்ல்லா, தோவாளல மலயாளி முழுக்க நிக்கான். நம்ம சடயங்கொளம் தாமரயில போகாண்டாமா?.”

“லேய் சின்னப் பொலயாடி மவனே, டீ குடிக்க மடின்னு சொல்லு. அதுக்குன்னு உனக்க கதப்புண்டலாம் தாத்தாட்ட வேண்டாம் கேட்டியா,” ஆசீர்வாதம் தாத்தா சொல்லிவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தார், யோவானும் பதிலுக்குத் தலையை ஆட்டிக்கொண்டே பீடியைப் பற்றவைத்தான்.

*

யோவான் அவன் நினைவு தெரிந்து முதல்முறையாக அதிக தூரம் நடந்தது சவேரியார் கோயில் திருவிழாவிற்குச் செல்கையில்தான். மேலே பார்க்கும்போதெல்லாம் இருண்ட வானில் நட்சத்திரங்கள் மின்னின. செல்லும் வழியில் இருகரையெங்கும் வயலும், தாமரைக்குளமும், சிலவிடங்களில் வாழைத் தோப்பும், தென்னந்தோப்பும். அவையே சாலையில் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டிருந்தன. அவனின் கால்கள் வலியை உணரவில்லை. தனியனாய் நடப்பதில் உள்ளூற மகிழ்ந்தான். அங்கே அவனைச்சுற்றி நளியடித்துச் சிரிக்க யாருமில்லை. அவனைத் தலையில் தட்டி அவன் அழுவதை ரசிக்கும் யாருமில்லை. மூன்று வயதைக் கடக்கும் வரையிலும் அம்மையின் இடுப்பிலே காலம் தள்ளினான். ஊரார், “எட்டி, காலு தரைல தட்டுகு. பிள்ளைய இன்னும் இடுப்புலயே வச்சு சுத்துக. எறக்கி விடேட்டி. பருந்து தூக்கிட்டா போய்டும்?” ஏச ஆரம்பித்தவுடன்தான் பிள்ளையைக் கீழே இறக்கிவிட்டாள். பிறகுதான் யோவான் நடக்க ஆரம்பித்தான். அவனது தலை உடல் வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாமல் சிறியதாக நீண்டு இருக்கும். இடுப்பிற்கு மேலேயும் கழுத்துக்குக் கீழேயும் சம்பந்தமில்லாமல் நடுப்பகுதி தனித்து விடப்பட்டிருக்கும். அதுபோக, கால்களின் அதீத நீளம், பாதங்களைத் தரையில் உன்னி நடக்கும்போது குதித்துக் குதித்துப் போவதைப் போலவிருக்கும். இதுவே அவனை ஒத்த வயதுடையவர்களின் நையாண்டிக்கு ஆளாக்கியது.

“அந்தோணியாரே உமக்க மகனுக்க காலு எட்டு ஒன்னுக்கு ஒன்னு, அடிக்கி அடி நீண்டுட்டே போகே. கொஞ்சம் பையப் போச் சொல்லு,” ஆசிர்வாதம் அந்தோணியைப் பார்த்துச் சொன்னார். யோவான் மட்டும் தனியே கூட்டத்தைவிட்டு முன்னே நடந்துகொண்டிருந்தான். “எழவுப் பய இவங்க அம்மைக்கு வயித்துல கெடக்கும் போதே குறுக்கயும் மறுக்கயும் நடந்துட்டே இருப்பான். பாவம் சூலிப் பொம்பள ராத்திரி முழுக்க வயிறே கெடந்து திரும்புகேன்னு பெகளம் வைப்பா கேட்டீரா மாமா? மக்கா யோவானு, பைய நட சரியா? பின்னால கெழடு தட்டுன ஆட்களுலாம் வராங்கல்லா? அவாளுக்கு தெவக்கம் வந்து போற வழியிலே மண்டயப்போட்டானின்னு வையி, பிள்ளையல்லா கொறச் சொல்லுவா? கிறுக்குப் பய. மெதுவா நடல. சவேரியார் கோயிலுக்கு எனக்கக் கூட அனுப்பாதன்னு அவளுட்ட சொல்லியும் கேக்காம அனுப்பியிருக்கா. இவனுக்கத் தம்பியும் தங்கச்சியும் வீட்டுல தானே இருக்கு? எதுக்கு வம்பா போகுன்னு நடந்து வரணும்?” சொல்லிக்கொண்டே ஓடிப்போய் யோவானை நிறுத்தித் தலையில் குட்டினான். அந்தோணி குடிக்கக்கூடாது என நினைத்தே புஷ்பம் மகனை அவனோடு அனுப்பி வைத்தாள். கிளம்பியதில் இருந்தே எப்படியாவது யோவானைத் திட்டி வீட்டிற்கு அனுப்பிவிடுவதைப் பற்றியே அந்தோணி சிந்தித்துக் கொண்டிருந்தான். “அந்தோணிக்கும் கொக்குக்கும் ஏதோ பழக்கம் இருக்கு போல. புஷ்பத்துக்கும் உனக்கும் பொறந்த பிள்ள தானா? யோவானு. நீ சொல்லு இவன்தான் ஒனக்க அப்பனா?” குருசுமணி சொல்லிவிட்டு அவனே கத்திச்சிரிக்க, கூடச்சேர்ந்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

சவேரியார் கோயில் இசைக் கச்சேரியைப் பார்க்கத்தான் சடையன்குளத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார்கள். யோவானுக்கு அன்றைய நடை, வழக்கத்தை மீறிய உற்சாகத்தைக் கொடுத்தது. வீட்டைவிட்டு நூறு மீட்டர் தூரமிருக்கும் பலசரக்குக் கடையில் வெஞ்சன சாமானம் வாங்கவும், ஊரின் நடுவிலே இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு நடப்பதும்தான் நீண்ட நடை. இதுபோக ஊரைச் சுற்றியிருக்கும் குளக்கரைகளில் திரிவான். வீட்டில் இருந்தாலும் வெளியே முற்றத்தில் நடந்துகொண்டே இருப்பான். அம்மையோ அப்பனோ திட்டினால் கொஞ்சநேரம் அவர்கள் கண்பார்வை படும்வரையிலும் குண்டி தரையில் இருக்கும், பிறகென்ன, அதே நடைதான். “இவனுக்கு என்ன சோக்கேடோ! ஆசுவத்திரி கூட்டிட்டுப் போய் காட்டலாம்ல்லா? மூனுல இவனாக்கும் மூத்தவன். டெய்லி ராத்திரி குடிக்கேருல்லா? ஒரு இருவது ரூவா சக்கரம் ஆகுமா ஆசுவத்திரி போய்ட்டு வர? இவனும் நம்ம பிள்ளதான், மனசுல இருக்கணும். ராஜாவூரு ராயப்பரே, பிள்ளைக்கு கருண காட்டும்,” லேசாக விசும்பினாள்.

“ஆமா, நல்ல மொவன். என்ன நேரத்துல பெத்தியோ! இவன் பொறந்ததுக்கு அப்புறம் வேலையும் ஒழுங்கா இல்ல, இருந்ததையும் அழிச்சாச்சு. அது திமிருலயாக்கும் நடக்கு, இவனால கண்டவனும் என்ன கிண்டுகான். என்ன ஜென்மத்துல பண்ண பாவமோ, இப்படி பொறந்துருக்கான்,” யோவான் காதுபடவே அந்தோணி பேசினான்.

நடந்தவர்கள் சாலையில் இருந்த நாவல் மரத்தடியில் ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். யோவான் உட்காரப் பிடிக்காமல் அங்கேயும் இங்கேயுமாய் நடந்தபடி இருந்தான். நடந்து வந்தவர்கள் இருட்டிலும் நாவல் பழம் பொறுக்கிக் கொண்டிருந்தனர். யாரும் அவனைக் கவனிக்காத வேளையில், இருளில் வடக்கே போன வயற்காட்டில் கால் போன போக்கிலே நடந்தான். அந்தோணிக்கு இருந்த ஒரே எண்ணம் யோவானை வீட்டிற்கு விரட்டிவிட வேண்டும். அப்போதுதான் போகும் வழியில் மாம்பட்டை இஷ்டம் போல குடிக்கலாம். கொஞ்ச நேரத்திலேயே யோவான் அங்கிருந்து நகர்ந்ததை அந்தோணி அறிந்தவுடன் அவன் பத்திரமாக வீட்டிற்கு போய் சேரவேண்டும் என்று சவேரியாரிடம் விசேஷ பிரார்த்தனை செய்தான்.

வயற்காட்டில் நடக்க ஆரம்பித்தவன் சாலையை அடைந்து அங்கிருந்து மேற்கே செல்கையில் வழியில் ஒரு கோயில் தெப்பக்குளத்தைக் கண்டதும் அதன் அருகே சென்றான். பச்சையம் பிடித்த நீர் நிலவொளியில் ஜொலித்தது. வெறுமையான நீர் மட்டுமே எங்கும், அது அவனுக்கு ஓங்கரித்தது. எதுவுமே இல்லாமல் நீர் மட்டும் நிறைந்து, அரவம் இல்லாமல் பிணம் போல கிடப்பதை அவன் வெறுத்தான். அங்கிருந்து ஓட்டம் பிடித்தவன் நேரே சடையன்குளம் குளக்கரைக்குச் சென்றான். குளம் நிறைத்து தாமரையும் ஆங்காங்கே அல்லியும் நிலவொளியில் தெரிந்தன. இரவிலும் குளக்கரையைச் சுற்றிச்சுற்றி நடந்தான். தேரைகள் பாடிக்கொண்டிருந்தன. கொக்குகளும் நாரைகளும் கரையில் இருந்த ஆலமரங்களில் கூடடைந்து கொக்கரித்தன. தண்ணீர் பாம்புகள் சில பொந்தில் இருந்து தலையை நீட்டிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் அங்கேயே இருந்தவன் காலை விடிந்ததும் வீட்டிற்குச் சென்றான்.

*

பள்ளிக்கூட ஏச்சுக்கும் பேச்சுக்கும் மடித்து அங்கும் செல்லவில்லை. ஊரைச்சுற்றி நாலாபுறமும் தாமரைக்குளம்தான். குளக்கரையில் நிற்கும் வாகை மரத்தடியில் எந்நேரமும் கிடப்பான். தாமரையிலை மேலே எட்டிப் போகும் தாழையும், குருட்டுக் கொக்கும், நீருலவியும் சிநேகிதர்கள் ஆயினர். குளத்தில் தாமரையிலை பறிக்க வரும் மந்திரம் இவனையும் கூடச் சேர்த்துக்கொண்டான். எவ்வளவு வேலை பார்த்தாலும் கொடுப்பதை வாங்கிக்கொள்வான்.

நாளைடைவில் நடை ஒரு பழக்கம் போல ஆனது. அதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் காலை விடிந்ததும் நாலுமுக்கிலும் இருக்கும் தாமரைக்குளத்திற்கும் சென்று வட்டமிட்டு வருவான். பிறகு வட்டையெடுத்து தாமரையிலை பறிப்பான். ஆட்டோ வந்ததும் இலையை ஏற்றி தோவாளைக்கு அனுப்புவான். சிலநேரம் அப்படியே நடந்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வான். அப்போதெல்லாம் அவனைத் தவிர வேறொரு எண்ணமும் இருக்காது. எங்கு வேண்டுமோ அவனைக் கொண்டுசெல்ல கால்கள் இருக்கின்றன. இப்போது அவையும் இறுகி பனைமரத்தடி போல ஆகிவிட்டன. வீட்டிலும் அவனை கண்டுகொள்வதில்லை. புஷ்பம் மட்டும் பேசுவாள். அங்கேயே இருந்தால் சிலமணி நேரத்தில் மகனை நினைத்து அழ ஆரம்பித்துவிடுவாள். ஆக, வீட்டிலும் யோவானுக்கு அதிக போக்கிடம் கிடையாது. கிடைக்கும் பணத்தை அம்மையிடம் கொடுத்துவிடுவான். தேவைக்கு மட்டும் அவளிடம் வாங்கிக்கொள்வான். அந்தோணிக்கும் யோவானுக்கும் இடையே பெரிய விரிசல் இருந்தாலும், யோவான் அவனுக்கு குவாட்டர் வாங்கினால், அப்பனுக்கும் மறக்காமல் வாங்குவான். அவனை அடுத்துள்ள ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று, இப்போது கல்லூரிப் படிப்பையும் முடித்தார்கள்.

பெண்பிள்ளைக்கு கல்யாணம் நல்லபடியாக நடந்தது. அவர்களால் முடிந்தது இருபது பவுனும் ஒரு லட்சம் கையிலும் கொடுத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிறகென்ன, யோவானுக்கு சுற்றியுள்ள ஊர்களில் பெண் பார்த்தாலும் ஊரார் வாயை மூட முடியவில்லை. எப்படியோ வரன் தட்டித்தட்டிப் போகும். அந்தோணி முழுநேர குடிகாரன் ஆகிவிட்டான். புஷ்பம் விசுவாச ஜெபத்திற்கே அதிக நேரத்தைக் கொடுத்தாள். யோவான் தாமரையிலை பறிக்கும் நேரம் தவிர்த்து பக்கத்தில் கிடந்த வயல்களில் காணிக்காரனாய் வேலையும் பார்த்தான். தம்பி எப்படியோ சென்னை சென்று ஒரு நிலையான வேலைக்குச் சென்றுவிட்டான் என அறிந்ததும், அம்மைக்கும் அப்பனுக்கும் யோவானால் மட்டுமே மனக்கடி இருந்தது. எப்படியோ வேளாங்கன்னி செல்கிறோம் என வேனில் சென்ற குடும்பம், யோவானுக்கு மேரியைத் திருமணம் முடித்து அழைத்து வந்ததும் ஊரார் வாயை மீண்டும் மூடமுடியவில்லை. ஆசீர்வாதம் மட்டும் வீட்டிற்கு வந்து மணமக்களை ஆசீர்வதித்தார். தாமரைக் குளத்தை பாட்டத்திற்கு எடுத்த மாணிக்கமும், மந்திரமும் வீட்டிற்கு வந்து சென்றனர். மேரிக்கு ரோஸ்மியாபுரம். வெக்கையிலே கிடந்தவளுக்கு சடையன்குளம் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. யோவான் கட்டியநாள் முதற்கொண்டு அவளிடம் எதுவுமே பேசவில்லை. எப்படியோ எல்லாம் சரியாகும் என நினைத்தவள் அடுத்த நாள் தண்ணீர் எடுக்க குளத்திற்கு வந்ததுமே யோவானின் புராணத்தை யாரோ வத்தி வைத்தனர். வீட்டிற்கு வந்தவள் யோவானைத் தனியே அழைத்துப் பேசினாள். யோவான் என்ன பேசினானோ! உடனே ரோஸ்மியாபுரம் சென்றவள், பிறகு சடையன்குளம் வரவேயில்லை. யோவான் முதலும் கடைசியுமாய் வண்டியில் சென்றது திருமணத்திற்காகத்தான்.

அதன் பிறகுதான் யோவான் இரவுகளில் படுக்கையில் கிடக்கப் பிடிக்காமல் எழுந்து வெளியே சென்றுவிடுவான். அவனின் கால்கள் வெறுமனே இருப்பது குண்டூசியைக்கொண்டு பாதங்களை குத்துவதுப் போல வலிக்க ஆரம்பிக்கும், பிறகு தாமரைக் குளக்கரையைச் சுற்றி போதும் எனத் தோன்றும் வரையிலும் நடப்பான். அவனின் கால்கள் ஒருபோதும் வலியை உணர்ந்ததில்லை, உறக்கம் வந்தாலொழிய அது தொடரும். அவன் நடக்கும்போது கூடவே சேர்ந்து நடக்கும் நாமக்கோழி ஒன்றுண்டு. அது அவன் வரும்வரையிலும் காத்திருக்கும், அவன் நடக்கும் எல்லா சுற்றிலும் கூடவே நடக்கும். அவனின் சிந்தனைகளும் சுழல ஆரம்பிக்கும். ஊருக்குள் அவன் நடந்தாலே கிண்டல்களும், நளியும் தொடரும். ஆசீர்வாதம் தாத்தா மட்டும் கொஞ்சம் தன்மையாய் பேசுவார். மந்திரம் ஆரம்பத்தில் இணக்கமாக இருந்தாலும், யோவானின் விசுவாசம் மாணிக்கம் முதலாளியோடு நெருக்கத்தை அதிகப்படுத்திவிட்டது. அதனால் மந்திரத்திற்குள்ளும் சிறிய புகைச்சல் உண்டு. தம்பியும் தங்கையும் வீட்டிற்கு வந்தாலும் முகம் பார்த்து பேசமாட்டார்கள். அம்மையிடம் மட்டும் அதே அந்நியோன்யம் இருக்கிறது. இப்போதெல்லாம் அந்தோணி எப்போதாவது பேசுவான், அதில் பழைய ஏச்சுக்கள் இருக்காது. “யோவானு, மக்ளே, பிள்ளைக்கு இவனுக இடைல வாழ யோக்கித கெடையாது கேட்டியா? இவனுகலாம் கள்ளப் புண்டாமக்க. நீ பவித்திரம் டே. எதையும் யோசிக்காத. ஆமா, நீ எதுக்குப்போ இப்படி நடக்க? ஒனக்கு தெவங்காதோ?.”

“நடந்தாதான் கொஞ்சம் கெதியா இருக்கும்” சொல்லிக்கொண்டே யோவான் ஒரு சிறிய சிரிப்புடன் அதைக் கடந்து விடுவான்.

*

யோவானின் தம்பி சென்னையில் வேலை கிடைத்ததும் அப்பாவையும் அம்மையையும் சென்னை வந்துபோகச் சொல்லி பலநாட்களாகக் கேட்டு, ஒருவழியாக அவர்கள் செல்ல சம்மதித்தார்கள். அம்மைதான் ஒருவேளை சென்னை வந்தால் யோவான் மாறக்கூடும் என்றெண்ணி தம்பியை யோவானையும் சென்னை வரச்சொல்லி கேட்குமாறு கெஞ்சினாள். அவனும் வேண்டாவெறுப்பாக அழைக்கச் சம்மதித்தான். ஆனால் அவனோ இரயிலில் வரமறுத்து சென்னைக்கும் நடந்தே வருகிறேன் என்றான். அம்மைக்கோ யோவான் ஊரைவிட்டுக் கொஞ்சநாள் தள்ளி இருந்தாலே மாறிவிடுவான் எனும் நம்பிக்கை இருந்தது. யோவான் நடந்தே சென்னை செல்கிறான் எனும் விஷயம் தெரிந்து ஊரார் ஊருக்குள் பரப்ப, தம்பியோ அந்தச் சம்பவத்தை முகநூலில் போட்டான்.

சென்னைக்கே நடக்கிறான் என அறிந்ததும் ஒரே நாளில் யோவான் ஊருக்குள் ஸ்டார் ஆனான். சென்னைக்கு ஐந்து நாளில் தம்பி சொன்ன விலாசத்தில் போய் நின்றான். தம்பிக்கோ சென்னை போய்வர ஒரு டிக்கெட் குறைந்ததால் மிச்சம் கிடைக்கும் பணத்தை எண்ணி கொஞ்சம் மகிழ்ச்சிதான். இரண்டு நாள் அவர்களோடு வீட்டிலே தங்கியவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எங்குமே தாழைக்கோழியும், குருட்டுக் கொக்கும் இல்லை, தாமரைக் குளமும் இல்லை. இருந்த இரண்டு நாட்களில் வெளியே நடந்து சுற்றியவன் வாகனங்களோடு நடக்க பயந்தான். அங்கே இரவில்கூட பூச்சிகளின் சங்கீதம் இல்லை. பொறுத்துப் போனவன் உடனே சடையன்குளம் கிளம்பவேண்டும் என்றான். அதுவும் நடந்தே ஊருக்குச் செல்கிறான் எனத்தெரிந்ததும், முன்னர் தம்பி போட்ட பதிவிற்குக் கிடைத்த லைக்கும் கமெண்டும் இதையும் முகநூலில் போட ஆசை காட்டியது. அந்த பதிவைப் பார்த்ததும் யோவானுடைய தம்பியின் நண்பனும் அதே ஊர்க்காரனும், தமிழ்நாட்டில் இருபத்து நான்கு மணிநேரமும் செய்தி ஒளிபரப்பும் பலநூறு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரிந்தவன், செய்தி கிடைக்காமல் அவன் நடக்கத் தொடங்கியதில் இருந்து ஊருக்கு வருவதுவரை ஆங்காங்கே படம் பிடித்து அதை சரியான ஒலிக்கோர்வையுடன் சேர்த்து ஒளிபரப்பி யோவானை மாநிலம் முழுக்க பிரபலம் ஆக்கிவிட்டான். அவனை யோவானுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவனும் ஏதோ செய்கிறான் என்றெண்ணி அவனை ஏசவில்லை. அந்த வீடியோவும் முகநூலிலே இரண்டு நாள் பேசுபொருளாக இருந்தது, அதிலும் பின்னூட்டங்கள் எப்படி இருந்தன தெரியுமா?. ‘கண்டிப்பாக அவர் ஒரு சித்தராக இருக்க வேண்டும்’, ‘வாழ்த்துகள் தோழர்’, ‘அவனே பஸ்ஸுக்கு காசு இல்லாம நடக்கான். யாராவது உதவி பண்ணிருக்கலாம்’, ‘ஊருல ஆயிரம் பிரச்சனை இருக்கு இவனுக வேற’.

சில நாட்களுக்குப் பின் யோவான் ஊருக்கு வந்ததும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மேரி யோவானைப் பார்க்க வந்தாள். அவளுக்கும் இன்னொரு திருமணம் நடக்கவில்லை, இருந்தும் யோவான் திருப்பி அனுப்பிவிட்டான். புஷ்பம் அதற்காக வருத்தப்பட்டாலும், அந்தோணி மட்டும் “அந்தோணிக்க மவன்னு காமிச்சுட்ட மக்ளே. ஒன்னிய விட்டுட்டு போயிட்டு இப்போ டீவி பெட்டில நீ வந்ததுக்கு அப்புறம் திரும்பி வந்திருக்கா. கண்ணு அவிஞ்சு கெடந்தாளா இத்தர நாளா? ம்மக்கா டவுனுக்குப் போனா ஒன்மேன் ஆர்மி ஹாஃப் வாங்கிட்டு வாடே. ட்ரெயின்ல வந்தது மேலு வலிக்கு,” தலையைச் சொரிந்துகொண்டே கேட்டான்.

எல்லாம் இயல்பான பிறகு யோவானைத்தேடி முக்கிய பத்திரிகையின் மூத்த ஆசிரியர் சடையன்குளம் வந்திருந்தார். அவர் யோவானைச் சந்திப்பதற்கு முந்தைய நாளே உள்ளூரில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பத்திரிகை ஊழியர் ஒருவர் மூலமாக சடையன்குளம் சென்று யோவானைப் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை தயார்செய்ய வைத்தார். வசதியாய் ஆசீர்வாதம் தாத்தா அதற்காக இயைந்து கொடுத்தார். யோவானின் வரலாறு, அந்தோணியின் வரலாறு, யோவானின் வடிவு, சிறுவயதில் இருந்தே யோவான் எப்படி நடப்பான், அவனின் கால்கள் எப்படி தரையில் பதியும், அவனின் மோசமான திருமண வாழ்க்கை, தாமரையிலை எடுக்கும் வேலை பல முக்கியமான தகவல்களைக் கொடுத்தார். அதற்காக ஆசீர்வாதம் தாத்தாவின் புகைப்படம் யோவான் பற்றிய செய்தித்தொகுப்பில் எங்கோ ஒரு மூலையில் வரவைக்குமாறு நிபந்தனையும் விதித்தார்.

*

தாமரைக்குளம் பின்னால் தெரியுமாறு கேமராவைப் பொருத்தி அவர்கள் படித்துறையில் அமர்ந்துகொண்டனர். யோவானை வரவைக்க அவர்கள் அந்தோணிக்கு ராயல் சேலஞ்ச் ஃபுல் பாட்டில் வாங்கிக் கொடுத்தனர். முதல் கேள்வியாக “எதுக்காக நடக்க ஆரம்பிச்சீங்க?” மூத்த ஆசிரியர் ஆரம்பித்தார்.

“நடக்காம என்னால இருக்க ஒக்காது. காலு சும்மா இருந்தா ஒளைய ஆரம்பிக்கும். மண்டக்கடி ஆரம்பிக்கும். எந்திச்சு நடக்க ஆரம்பிச்சிருவேன்,” யோவான் பேசிக்கொண்டிருக்கும் போதே தாழைக்கோழி, நாமக்கோழி, தண்ணீர் பாம்புகள் சில அந்த இடத்தில் வெளிவரத் தொடங்கின.

“எப்போ இருந்து நடக்க ஆரம்பிச்சீங்க?” கேள்வியைக் கேட்டுக்கொண்டே அவற்றை விரட்டியடிக்குமாறு ஆசிரியர் கண்ணைக் காட்டினார்.

“சின்னதுல எனக்க உருவத்த வச்சி கிண்டுவானுக. பள்ளிக்கூடத்துல வாத்தியாரும் இதச் சொல்லியே அடிப்பாரு. அப்போ இருந்து நடக்க ஆரம்பிச்சேன்,” யோவான் பார்க்கும்போதே சிலர் அவற்றைக் கல்லைக் கொண்டெறிந்து விரட்ட ஆரம்பித்தனர்.

“எதுனால நடக்கணும்?” ஆசிரியர் உன்னிப்பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“அது என்னைய தனியா வச்சுருக்கும். யாரும் எனக்க வேகத்துக்கு நடக்க முடியாது. ஒரு புண்டாமவனால முடியுமா? நா மட்டும் இருக்கிற இடம் நடக்கும் போது மட்டும் தான். அங்க வேற யாரும் வரமுடியாது. தேவிடியாப் பயக்க. ங்கொம்மால அதான் நடக்கேன். வேற ஒன்னும் இல்ல,” சொல்லிவிட்டுச் சிரித்தான்.

“ஷிட். பேட் வேர்ட்ஸ் வேண்டாம் யோவான். பேஸ்ட்டர்ட், சொல்லி கூட்டி வரலையா?” மூத்த ஆசிரியர் கெட்டவார்த்தையைக் கேட்டதும் பதட்டமானார். அவரை இயல்பாக்க பகார்டி லெமன் தேவைப்பட்டது, இதற்காக யோவானும் அங்கே அரைமணி நேரம் உட்கார்ந்திருக்க நேரிட்டது.

மீண்டும், “இது ஒரு நோய்ன்னு உங்களுக்குத் தெரியலயா? நீங்க நல்ல மனநிலை டாக்டரப் போய் பாத்துருக்கணும்,” இயல்பாகிக் கேட்டார்.

“சோக்கேடோ என்ன எழவோ? நம்மள நிம்மதியாட்டு வச்சுறக்க ஐட்டத்த யாராச்சும் வேண்டானின்னு சொல்லுவாளா?” யோவான் வெறுப்புடன் சொன்னான்.

“உங்க மனைவி இதுனாலதான விட்டுட்டுப் போனாங்க?” மீண்டும் முக்கியமான கேள்வி என்பதுபோல ஆசிரியர் அவனை முறைத்தபடி கேட்டார். ஆசிரியர்களோடு வந்தவர்கள் தாழைக்கோழியை, நாமக்கோழியை விரட்டிய பின்னும் அதே உற்சாகத்தில் அருகே இருந்த மரத்தில் இருந்த கொக்கு கூட்டத்தை நோக்கியும், குளத்தில் தூரமாய் நீந்திக்கொண்டிருந்த நீர்கோழியின் மீதும் கல்லெறிந்து கூச்சலிட்டனர், குதூகலித்தனர்.

“அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது,” யோவான் சொல்லி முடிக்கும் முன்னே எழுந்தான். கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. யோவானால் உட்கார்ந்தே இருக்க முடியவில்லை, அங்கிருந்து முனகியபடியே நடக்க ஆரம்பித்தான். பிறகு ஆசிரியர் இருக்கும் இடத்திற்கு வரவேயில்லை. அவர்கள் இரண்டு மணிநேரம் அவனுக்காகக் காத்திருந்தார்கள். அதற்காகப் பல பகார்டி லெமன்கள் தேவைப்பட்டன. இது நிகழ்ந்து ஒருமாதத்தில் யோவான் நடக்கும் புகைப்படம் அட்டைப்படத்தை அலங்கரிக்க, ‘நடை.. தியானம்.. நோய்.. தவம்..’ எனும் பெயரில் நான்கு பக்க நேர்காணலும் கட்டுரையும் வந்திருந்தது. அதில் ஒரு மூலையில் ஆசீர்வாதம் தாத்தா வெற்றிலை பாக்குக் கடையின் கல்பெஞ்சில் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கும் புகைப்படமும் இருந்தது.

செய்தித் தொகுப்பு வந்திருந்த பத்திரிகையை அனந்த கிருஷ்ணன் நகரத்திற்குச் சென்றபோது மறக்காமல் வாங்கி வந்தான். ஆலமூட்டில் இருந்த ஆசீர்வாதம் தாத்தா கடையின் முன்னே ஊரார் அமர்ந்திருக்க, யோவானும் ஓரமாய் நின்றுகொண்டிருந்தான்.

முதல் பத்தியே இப்படி ஆரம்பித்தது ‘நடை எனக்கொரு தியானம். அது ஒரு தவம். அங்கே என்னை மட்டுமே நான் உணர்கிறேன். நீங்கள் அதை ஒரு நோய் என்று கருதுகிறீர்கள். ஆனால் அது அப்படியல்ல. என்னை எங்கு வேண்டுமோ அங்கு கொண்டு நிறுத்த எதுவும் தேவையில்லை, என் நடை மட்டுமே போதும். அது ஒரு நிறைவைத் தருகிறது. கால்களை அதிகம் நான் உணர்கிறேன். அது நிலத்தினுடன் ஏற்படுத்தும் வாஞ்சையான தொடர்பை நான் உணர்கிறேன். அது எப்போதும் எனக்கு வேண்டும். ஆக, நடக்கிறேன். நடை எனக்கொரு தியானம், அது ஒரு தவம்’ முதல் பத்தி முடிந்ததும் ஆசீர்வாதம் தாத்தாவின் நேர்காணல் இருந்தது. அதற்குப் பிறகே யோவானின் நேர்காணல். அதெல்லாம் ஊராருக்குத் தெரிந்த விஷயம்தான். இருந்தும், அனந்த கிருஷ்ணன் முழுவதுமாக வாசித்து முடிக்கவும் யோவானைப் பார்த்தான். யோவானின் முகம் எரிச்சலில் இருந்தது. ஏனோ நடக்க ஆரம்பித்தவன் கத்தவும் ஆரம்பித்தான்.

“நட ஒரு ஓப்பு. நட ஒரு கைல பிடிக்கது. நட ஒரு ஊம்பது. நட ஒரு தேவிடியா. நட ஒரு கண்டாரவோழி. நட ஒரு அப்பனுக்கும் அம்மைக்கும் பொறக்கல்ல..” அவன் தூரமாய் நடந்தபடியே வார்த்தைகளை இன்னும் வெறிகொண்டு வீசினான். அவன் நடக்க ஆரம்பிக்கவும், ஆலமூட்டில் இருந்த கொக்கும் நாரையும், தாமரைக்குளத்தில் இருந்து தாழைக்கோழியும், நாமக்கோழியும், தண்ணீர் பாம்பு இரண்டும் அவனோடு நடக்க ஆரம்பித்தன. தூரமாய் நடக்க நடக்க, அவனது வார்த்தைகள் தெளிவாக ஊராரின் காதில் விழவில்லை. இருந்தும் கேட்ட வார்த்தைகளால் அவர்கள் கத்திச் சிரித்தனர்.

***

வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular