Friday, March 29, 2024

துளசி

சுஷில் குமார்

ப்படி ஒரு கேள்வியை பத்மா கேட்டாள் என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த நொடி சட்டென வியர்த்து விட என் நெஞ்சுக்கூட்டில் சரளைக்கற்கள் உருண்டதைப் போன்ற அதிர்வு. கண்கள் இருட்டிக் கொண்டு வர என் சாய்வு நாற்காலியில் கிட்டத்தட்ட விழுந்தே விட்டேன். அலறியபடி ஓடி வந்த துளசி நான் விழுந்ததும் என்மீது சாய்ந்து விழுந்து, ‘அப்பா, அப்பா’ எனக் கதறினாள். அவள் கைகளில் அப்பியிருந்த பலவித வண்ணங்களால் என் சட்டையில் கலங்கிய ஓர் ஓவியத்தைச் சட்டென உருவாக்கி விட்டாள். அட, என்ன நேரத்தில் என்ன நினைத்திருக்கிறேன்? சற்று நேரத்தில் கண்களைத் திறந்த போது பத்மா பூஜையறை கதவருகே குலைந்து விழுந்து கிடப்பதையும், அவளது கண்ணாடி சில்லுகளாக உடைந்து தெறித்திருந்ததையும் துளசி ஏங்கி ஏங்கி என்னைத் தட்டிக் கொண்டிருந்ததையும் கவனித்தேன்.

“அப்பா.. எந்திரிங்க மொதல்ல, ப்ளீஸ், நா சொல்றத கேளுங்க.”

என்ன சொல்கிறாள்? நான் எதைக் கேட்க வேண்டும்? சற்று முன் என்ன நடந்தது? பத்மா ஏன் இப்படி அழுதுகொண்டு படுத்துக் கிடக்கிறாள்? கடைசியாக அவள் அழுது எத்தனை வருடங்கள் இருக்கும்? துளசியின் சடங்கின் போது அழுகையை அடக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தாளே! ம்‌ம்.. சற்று முன்.. எப்படி என்னைப் பார்த்து அப்படிக் கேட்டு விட்டாள்? நான் என்ன செய்தாலும்..

“அப்பா, எந்திரிங்க”

என் கைகளைப் பிடித்துத் தூக்கினாள் துளசி.

“இரிம்மா, அப்பாக்கு ஒன்னுல்ல, ஒங்கம்மக்கி தண்ணி குடு, போ.”

துளசி ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து பத்மாவின் அருகே சென்று அவளைக் குடிக்குமாறு கெஞ்சினாள். பத்மாவிடம் துளி அசைவில்லை. வீம்பில் அவளது மார்புக்கூடு உறுமியபடி ஏறி இறங்கிக் கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது. அவளது தலைமாட்டில் தண்ணீரை வைத்துவிட்டு என்னை நோக்கித் தலையசைத்தபடி வந்தாள் துளசி.

“அப்பா. நான் சொல்லத கேப்பீங்களா இல்லையா?”

“சொல்லு மக்ளே.”

“மொதல்ல நீங்க எந்திங்க, என்கூட வாங்க.”

“எங்க மக்ளே? ஒங்கம்ம இப்பிடி விழுந்து கெடக்கா, எங்க கூப்பிடுக என்ன?”

பதில் சொல்லாமல் உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள். தன் தலைக்கவசத்தை எடுத்து மாட்டியபடி பூஜையறைக் கொண்டியில் மாட்டியிருந்த அவளது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவள் பத்மாவின் காதருகே சென்று ஏதோ பேசினாள். பத்மாவிடம் பதிலேதும் எதிர்பார்க்கக் கூடிய சூழலில்லை என்பது துளசிக்கு நன்றாகத் தெரியும். அவளருகே குனிந்து முத்தமிட்டு விட்டு எழுந்து என்னை நோக்கி வந்தாள். நான் பத்மாவையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி நடந்து வீட்டு வாசலுக்கு வந்தேன்.

மணி என்ன இருக்கும்? எவ்வளவு நேரம் இப்படிக் கடந்து போயிருக்கும்? இன்னும் கொஞ்சம் நேரத்தில் இருட்டிவிடும் போலவிருந்தது.

“மக்ளே, கருக்கல் நேரமாய்ட்டு..”

“வந்து வண்டில ஏறுங்க,”

நான் செய்வதைப் போலவே வண்டியை விட்டு விட்டு முறுக்கினாள்.

“சரி.. சரி.. ஏறுகேன். ஒங்கம்மய மூஞ்சில காட்டாத. அம்மக்கி பிள்ளன்னு காட்டிட்டே இருக்கணும், என்னா. நா மட்டும் தனி..”

அடுத்த அரைமணி நேரத்திற்கு துளசி எதுவும் பேசவில்லை. வழக்கமாக வண்டியில் அதிவேகமாக செல்லக் கூடியவள் அன்று மிக நிதானமாக ஓட்டினாள். இடையில் சிலமுறை, ‘மக்ளே, எங்கப் போற?’ என்று கேட்டுப் பார்த்தேன். என் முகம் தெரியும்படி திருப்பி வைத்திருந்த கண்ணாடியில் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.

வண்டி நேராகக் கடற்கரைச் சாலையில் சூரியன் மறையும் இடத்திற்கு அருகில் சென்றது. அங்கே நிறுத்தாமல் கடற்கரையை ஒட்டிச்சென்ற மண்பாதையில் வண்டியைத் திருப்பினாள். எனக்கு குழப்பமும் ஆச்சரியமும் சேர்ந்து ஏதேதோ தோன்றியது.

“மக்ளே, இங்க எங்க போற? நல்லா இருட்டப்போகு பாரு. மக்ளே..”

துளசிக்கு எப்படி அந்த இடம் தெரிந்திருக்கும். ஒருவேளை எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்தே தான் இருந்ததா? ஏன் ஒரே நாளில் எல்லாமே இப்படிப் புரள வேண்டும்? நான் ஒன்றும் துரோகி இல்லையே? பார்க்கப் போனால், நானும் பல தியாகங்களைக் கடந்து தானே வந்தேன். பத்மாவிற்கு என்ன தெரியும்? எப்படி என்னைப் பார்த்து அப்படிக் கேட்டாள்? என்னிடம் பதில் ஏதும் எதிர்பார்த்து அவள் கேட்டிருக்க மாட்டாள். கேட்ட மறுநொடியே அதை எப்படி உள்ளே இழுத்துக் கொள்வது என்றுதான் யோசித்திருப்பாள். நான் தான் அவளது கூடு. அதனால்தான் அப்படியொரு கதறல். என் பதிலெல்லாம் அவளுக்குத் தேவையில்லை. ஆனால், இனி எப்படி என்னைப் பார்த்து முன்போலச் சிரிப்பாள்?

நான் நினைத்தபடியே வண்டி அந்தக் குறிப்பிட்ட பாறையருகே சென்று நின்றது. துளசி ஏதும் சொல்லாமல் சரியாகச் சென்று அந்தப் பாறை மேல் ஏறி உட்கார்ந்தாள். அது ஒரு சிப்பி வடிவிலான பாறை. எந்த நொடியிலும் திறந்து அதிலிருந்து முத்துகளாகக் கொட்டும் என எப்போதும் நான் நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படி நம்பியுமிருந்தேன்.

“பாறைல முத்தெல்லாம் கொட்டாது மிஸ்டர் ரோமியோ. இங்க வந்து உக்காருங்க” என்றபடி முறைத்தாள் துளசி.

“மக்ளே.. இரி, மொதல்ல இங்க என்ன நடக்குன்னு சொல்லு. ஒனக்கெப்படி?”

“அப்பா.. போதும். எப்படி? எங்கருந்து? என்னாச்சி? எல்லாம் ரொம்ப போருப்பா. அப்படி என்ன நடந்துட்டு? பத்மா எப்பவுமே ஓவர் ரொமான்டிசைஸ் பண்ணதான் செய்வா. அவ கதறி விழுகதும் நீங்க ஏதோ அட்டாக் வந்த மாதி சீன் போடதும், ஒரு செகண்ட் நானே பயந்துட்டேன்.”

சூரியன் பாதி கடலுக்குள்ளும் மீதி அடிவானிலுமாக சிவந்து நின்றது. பரிசுத்தமான வட்ட முகம். துளி மேகமற்ற வெறும் வானம். பாறைகளில் பட்டுத் தெறித்த சாரலில் சிவந்த கூந்தலாடும் முகமொன்று வந்து வந்து சென்றது.

ன்றும் அப்படியேதான் இருந்தது. அவளது கடைசி சொட்டுக் கண்ணீர் என் கைகளில் விழுந்த போது அந்தப் பாறையின் முத்துகள் என்னைச் சுற்றி உதிர்ந்து கொண்டேயிருந்தன. அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு இடைவெளியும் இத்தனை வருடத்திலும் ஒரு முத்து விடாமல் என்னால் வாய்விட்டுச் சொல்ல முடியும். வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து நான் சொல்லிக் கொள்வது தான்.

“நம்ம கொழந்தைங்களுக்கு ஒரு பேர் சொல்லுங்க. என்ன ஆனாலும் அந்த பேர் தான் வைக்கணும்.”

“ஓ, சூப்பரா வச்சிரலாமே! என் பேரையும் உன் பேரையும் மாத்தி மாத்தி போட்டுப் பாப்போம். என்ன பேரு வருதோ அத வைப்போம் என்ன?”

“அய்யே, ரொம்ப ஓல்ட் ஸ்டைல் அது. இது சம்திங் ஸ்பெஷல். நம்ம சேந்து இல்லாம போறது நம்ம தப்பு இல்ல, விதின்னும் யோசிக்க வேண்டாம். ஆனா, இது ஒரு தோல்வியோ முடிவோ இல்லன்னு எனக்கு தோனிட்டே இருக்கு. எந்த சோகமும் இல்லாம நீங்க எங்கேயோ இருக்கணும், நான் எங்கேயோ இருப்பேன். நம்ம கொழந்தைங்க மொகத்துல நம்மள பாத்துக்கலாம். சவுண்ட்ஸ் கிரேசி?”

“ம்ம்‌.. இல்ல, இன்டரெஸ்டிங். ஆனா நீ ஒரு தனிப்பிறவி தான். எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கிற? நா தான் தாடி வச்சிட்டு சுத்துறேன்.”

“நா எப்பவும் சொல்ற அந்த ஒரு பெர்சென்ட் இதுதான். நீ என்ன புரிஞ்சுக்காத அந்த ஒரு பெர்சென்ட். அது அப்படியே இருக்கட்டும். சரி, ஸ்டோரீஸ் அப்பார்ட். சொல்லு.. என்ன பேர் வைக்கலாம்?”

“ஏய், இரி. பொண்ணா, பையனான்னு தெரியாம என்ன பேரு வைக்க? பேரு செலக்ட் பண்ணப்றம் வைக்க முடியலன்னா என்ன பண்ண?”

“நீங்க எக்ஸாக்ட் 1947 தான்.”

“அப்படின்னா?”

“சுத்தம்..”

“அட சொல்லு.”

“நத்திங். கொஞ்சம் யோசிங்க. பொண்ணோ பையனோ, ஒரே பேரு தான். சம்திங் யுனீக், சம்திங் ஸ்பெஷல்.”

பாறையைச் சுற்றிலும் முத்துகள் குவிந்து நிரம்பி கடல் மணலோடு கலந்து அலைகளில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. சிவந்த அலைகள், சிவந்த சூரியன், சிவந்த வானம். பாறையின் பின்புறமிருந்து சிவந்த கூந்தல் முகம் மெல்லப் புன்னகைத்தது.

“அப்பா. கனவு கண்டது போறும். வீட்ல ஒங்க பொண்டாட்டி சூசைட் பண்ணிக்கப் போறா பாருங்க. இங்க ஒங்களுக்கு டே-டிரீமிங், இல்ல.. இல்ல.. டஸ்க்-டிரீமிங், என்ன? என்ன மனுசன்யா!”

நிஜமாகவே பத்மா ஏதும் விபரீதமாகச் செய்து விடுவாளோ? துளசி எப்படி எல்லாவற்றையும் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறாள்?

“அப்பா, நீங்க செஞ்சதுதான் தப்பு. லிசன்.. ஒங்களுக்கு தேவையான சென்டிமெண்ட நீங்க வச்சது தப்பில்ல. ஆனா, எங்கயும் எதுவும் லீக் ஆகாத மாதிரி பாத்துக்கத் தெரியல. இது வெளையாட்டு இல்லப்பா, ஐ மீன் இட். ஒங்களுக்கு நா எந்த அளவோ அதே மாதிதான அம்மாவுக்கும்? அப்போ உங்க சென்டிமெண்ட மட்டும் நீங்க புனிதமா வச்சிக்கிட்டா போதுமா? நீங்களே ஒலகம்னு பத்மா வந்தால்லா? இன்னிக்கும் அவளுக்கு ஒங்கள விட்டா வேற என்னத்த தெரியும்? காலைல எந்திச்ச நொடில இருந்து ஒறங்கது வர ஒங்க பாடுதான் அவளுக்கு. அவளுக்கு நீங்க பண்ணது தெரிஞ்சா என்ன ஆகும்னு நீங்க யோசிக்கவே இல்லையா? இந்தப் பேரு எனக்கு ரொம்ப இஷ்டம் தான்பா. இது சம்திங் யுனீக், சம்திங் ஸ்பெஷல். ஆனா, அம்மாக்கு துளசின்னா பரிசுத்தம். அவளும் அப்படித்தான? அவ ஒங்கள எப்பிடித் தண்டிச்சாலும் சரிதான்.”

நான் எதுவும் பேச முடியவில்லை. அப்போது பேசிக் கொண்டிருந்தது யார், என்ன பேசிக் கொண்டிருந்தாள், எதுவுமே எனக்குள் சென்ற மாதிரி நினைவில்லை. ஆனால் மிக ஆழமாக உள்ளுக்குள் ஒவ்வொரு வார்த்தையும் செதுக்கப்பட்ட மாதிரியும் இருந்தது. ஒருவேளை நானேதான் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேனா? சட்டெனத் துளசியின் கைகளைப் பிடித்து இழுத்தேன். அவள் என்னருகே தான் இருந்தாள். அவள் தான் பேசியிருக்க வேண்டும்.

“மக்ளே, அம்மக்கி எப்பிடித் தெரிஞ்சிது? ஒனக்கு எப்பிடி? அப்பாக்கு ஒன்னும் புரியல.”

“அப்பா, எப்பிடி வேணாலும் இருக்கட்டும். இப்ப என்ன பண்ணன்னு யோசிங்க, எதாம் உருப்படியா ஐடியா சொல்லுங்க. பத்மா ரொம்ப ஓவரா எமோஷன் ஆயிருக்கா, எப்பவும் போல சமாதானம் ஆவான்னு எனக்குத் தோனல, சொல்லிட்டேன்.”

தன் வலது பெருவிரலால் ஆள்காட்டி விரலை வட்டமாக வருடிக் கொண்டிருந்தாள். நம்ப முடியவேயில்லை. எப்படி அதே மாதிரி செய்கிறாள்! அதெப்படி? இன்றுதான் இதையெல்லாம் நான் கவனிக்கிறேனா?

“என்ன செய்யன்னு ஒன்னும் தெரில மக்ளே. இந்த மாதி பிரச்சன வர வயசா அப்பாக்கு? வெளிய தெரிஞ்சா சிரிப்பா. அம்மாவ விடு, ஒனக்கு இது ஒரு மாதி இல்லையா மக்ளே? அப்பாவ சீ-ன்னு நெனச்சியா?”

துளசி எழுந்து மெல்லக் கீழிறங்கி அலைகளில் கால் நனைத்தபடி நின்றாள். சற்று நேரம் முன் செல்வதும் பின் வருவதுமாக இருந்தவள் என்னை நோக்கிக் கையசைத்துக் கூப்பிட்டாள். முழுவதும் வெண் முத்துகள் சூழ்ந்த சிவந்த தீவின் நடுவே நின்று அவள் என்னை எங்கோயிருந்து அழைப்பதைப் போலத் தோன்றியது.

“அப்பா, இங்க வந்து பாருங்க.”

அந்தப் பாறை என்னை பிடித்து வைத்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாய் இல்லை. ஒருவழியாக எழுந்து இறங்கி அலையில் கால் வைத்தேன். சென்ற வருடம் அந்த நாளில் வந்து கால் நனைத்தது. அதன் பிறகு இப்போதுதான் நனைக்கிறேன்.

“அப்பா, சீக்கிரம் வாங்க. அழிஞ்சிறப் போகுது,”

துளசி கத்தினாள்.

அலை வந்து தொட்டு விடாத தூரத்தில் தரையில் குனிந்து எதையோ வரைந்து கொண்டிருந்தாள். மெல்ல அவளை நெருங்கிச் சென்றேன். அலை மெல்ல மெல்ல ஒவ்வொரு படியாக அவளை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியனை உள்ளிழுத்துக் கொண்ட கடல் சிறிது வெளிச்சத்தை மட்டும் எங்களுக்காக விட்டு வைத்திருந்தது. திரும்பி அந்த சிவந்த கூந்தல் முகம் தெரிகிறதா எனப் பார்க்கலாமா என யோசித்தேன். இல்லை, நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன். எதையும் என் வழியில் முயல்வது இப்போதைக்கு சரியாகப் படவில்லை. துளசி என்ன சொல்கிறாளோ அதுதான். அவள் என்ன வரைந்திருந்தாலும் அழிந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் பத்மாவின் அழுது ஓய்ந்த முகமும் மாறிமாறி என்முன் வந்து கொண்டிருந்தன.

துளசி, தான் வரைந்ததை என்னிடம் மறைக்கும் விதமாக குறுக்கே நின்றாள்.

“வெயிட் மிஸ்டர் ரோமியோ. நான் எழுதுனது அடுத்த பத்து அலைல அழியாட்டா நான் கேக்றத வாங்கித் தரணும். டீல் ஆ?”

கேட்டுக் கண்ணடித்தாள். அவளது ஒவ்வொரு அசைவும் இன்று என்னை அந்த நாளிற்கு இழுத்துச் செல்வது புதிராகவே நீடித்தது.

“சரி.. தள்ளு.. பாப்பம்.”

என் கையைப் பிடித்து முன்னிழுத்தபடி அவள் ஒருபுறம் ஒதுங்கினாள். அந்த நாள் நாங்கள் எழுதியிருந்ததை அச்செடுத்ததைப் போல எழுதியிருந்தாள். சட்டென அதன் முன் மண்டியிட்டு நின்றேன். துளசி என் தோள்களின் மீதாக கைகளைப் போட்டுக்கொண்டு என்னை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

“அட அப்பா.. அப்பா. கமான், சியர் அப். டேக் இட் ஈஸி”

என் கன்னத்தில் முத்தமிட்டாள். சூழ்ந்திருந்த முத்துகள் அனைத்தும் ஒரே நொடியில் காணாமல் போயின. நிலவின் மெல்லிய வெளிச்சம் அந்த எழுத்துகளின் மீது தெறித்து விழுந்தது.

ண்டியில் ஏறியதும் பறப்பதைப் போல வேகமெடுத்தாள்.

“மக்ளே, பாத்துப் போ. சடன் பிரேக் போட்டுறாத. என்ன அவசரம் இப்போ? ஒங்கம்ம வேற என்ன ஆனாளோ தெரில, கோவத்துல மூஞ்சியப் பாக்க சகிக்காது.”

“கடயச் சாத்திருவான். சேலஞ்ச்ல நானாக்கும் ஜெயிச்சேன். ஒரு அல வந்து தொடல்ல பாத்தீங்களா? நம்ம ராசி அப்பிடி.”

நான் சட்டெனச் சிரித்தேன்.

“என்ன மிஸ்டர்? என்ன சிரிப்பு? ஓ.. ஒங்க லவ் அப்பிடின்னு நெனப்போ? பத்து கழுத வயசாச்சு. ஞாபகம் இருக்கட்டும்.”

வண்டி இரயில் நிலையத்திற்கு எதிரான அதே முடுக்கில் சென்றபோது ஒரு நொடி கண் கலங்கி விட்டேன் தான்.

அதே பூக்கடையின் முன் நிறுத்தினாள்.

“அப்பா, நா என்ன கேக்கப் போறேன்னு உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும். ஐ ரியல்லி ரெஸ்பெக்ட் யு அண்ட் ஹெர். நீங்க ரெண்டு பெரும் நம்ப முடியாத மாதிரி ஒரு ஸ்டோரிப்பா. அமேசிங். எங்க இருந்தாலும் ஒங்க ஆள் நல்லா சிரிச்சிட்டே தான் இருப்பாங்க. ஒங்கள மாதிரி இல்ல. பத்மாவுக்கு நா சொல்லி புரிய வச்சிருவேன், விடுங்க”

சொல்லிவிட்டு என்னை இறுகக் கட்டிக் கொண்டாள்.

நான் பூக்கடையின் உள்ளே சென்றபோது பின்னிருந்து அழைத்தாள்.

“மிஸ்டர் ரோமியோ.. அப்படியே பத்மாக்கும். இல்ல.. இல்ல, ஒங்க ஆச பொண்டாட்டிக்கும்..”

***

சுஷில் குமார்
சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். மூங்கில், சப்தாவர்ணம் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்
க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. சிறப்பு. பாறையை சிப்பியென்றும் முத்துக்கள் கொட்டுமென்றும் நினைப்பதும் மகள் கன்னத்தில் முத்தமிட்டதும் சிதறிய முத்துக்கள் மறைந்து அங்கு நிலவொளி நிறைவதும் மிக அ நகாக கதையை கொண்டு சென்றுவிட்டது.

  2. சிறப்பு. பாறையை சிப்பியென்றும் முத்துக்கள் கொட்டுமென்றும் நினைப்பதும் மகள் கன்னத்தில் முத்தமிட்டதும் சிதறிய முத்துக்கள் மறைந்து அங்கு நிலவொளி நிறைவதும் மிக அழகாக கதையை கொண்டு சென்றுவிட்டது.காதலனும் கணவனும் தந்தையுமாக அவரை மாற்றி மற்றி காட்டியதும் ரசிக்கும்படி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular