Friday, March 29, 2024
Homesliderதீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் கவிதைகள்

வெடிபொருட்களற்ற பூமி

நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினால் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனரே!

அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?

உலகின் குண்டுகளனைத்தையும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டினரே?

குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்

கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையுள் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்

ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?

ஆம், சிங்களத் தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது

‘இது தமிழீழத்தை அழிக்கும் குண்டு’

நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால் வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றே!

ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவ முகாம்களற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடி பொருட்களற்ற பூமி

சந்தனப் பேழை

ஒரு வண்ணத்திப் பூச்சியின்
சிறகசைப்பைப்போல படபடக்கும் கண்கள்
ஒரு புளுனியின் துள்ளலைப்போல
நடுங்கும் தொண்டைக் குழிகள்
சொல்ல இயலாமற் போயின பிரிவை

துப்பாக்கிகளும் டாங்கிகளும்
உலவும் நாளொன்றில்
பதுங்கிய நகரில்
உயிர்த் தாகத்துடனிட்ட முத்தத்தின்
ஒரு துளியிலிருந்தது
ஒரு யுகத்தின் பெருங்காதல்

எப்படித்தான் விலகிச் சென்றோம்?
தாயைப் பிரியும்
குழந்தையைப் போன்ற விழிகளுடன்

எதிரியை விரட்டி
விழிமடல் மூடி
வீரக்கொடி போர்த்தி
துப்பாக்கியை அணைத்துத்
திரும்பியிருப்பவள் எனது காதலியல்ல
இந்நிலத்தின் மகள்.

தனித்தனியாக உடையாது
தைத்தெடுத்துச் சென்ற இருதயங்களை
திருப்பித் தராமல் சென்றவள்
புன்னகை பிரிந்த இதழ்களின்
வார்த்தைகளை மாத்திரம் விட்டுச் சென்றாள்
ஈரமற்ற விரல்களின்
தனிமையை மாத்திரம் விட்டுச்சென்றாள்

எந்த மதுக்குவளையாலும்
மறக்க முடியாப் பேரன்பை எப்படி வெட்டி எறிவேன்
அவள் உறங்கும் சந்தனப் பேழைபோலக்
கனத்துவிட்ட இருதயத்திலிருந்து?

நாடுதான் பெரிதெனச் சென்றவளின் வீர முகத்தில்
பனைகளைப் போல அசையும் கொடிகளை
இனி, ஏந்திச் செல்கிறேன்
அவள் மாண்டுபோன போர்க்களத்திற்கு.
¤

வரலாற்றின் மகள்

தந்தையே வரலாறு முழுவதும்
இப்படித்தான் இருந்ததா?
நாங்கள் எப்போதும்
அடிமையாகவே இருந்தோமா?

என் சிறு குழந்தையே
நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய்
பாதுகாவலர்களையும் அறிவாய்

நம்முடைய மூதாதையர்
தம்மைத் தாமே ஆண்டனர்
எம் நிலத்தின் அரசுகளை
அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்

தந்தையே! போர்த்துக்சியர்கள் போய்விட்டனர்
ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்
பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்
ஆனாலும் இன்னும் ஏன்
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்?

அவர்கள் வெளியேற
இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்
அவர்கள் திருப்பித் தந்ததை
பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்

இவர்களின் விடுதலைக்காகவும்
நாம் போராடினோம்
ஆனால் இவர்களோ
எமது சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டனர்.

இவர்கள் ஆக்கிரமிப்பை
ஐக்கியம் என்றனர்
விடுதலையை பிரிவினை என்றனர்

மகளே!
நம் தேசங்களை கலைத்து
ஒன்றுபட்ட நாட்டின்
சுதந்திரத்திற்காக உழைத்த உன் மூதாதையரை
இவர்கள் தம் தோளில் ஏந்திக் கொண்டாடுகையில்
அவர் நினைத்திரார்
உன்னைப்போலொரு குழந்தை
மறைக்கப்பட்ட நம் வரலாறு
குறித்து கேட்குமென.


0

தீபச்செல்வன் – ஊடகத்துறையில் பணியாற்றும் இவருக்கு ஐந்து கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள் மற்றும் ‘நடுகல்’ எனும் நாவல் வந்துள்ளன. விரைவில் அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு வரயிருக்கிறது

RELATED ARTICLES

1 COMMENT

  1. “தந்தையே! போர்த்துக்சியர்கள் போய்விட்டனர்
    ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்
    பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்
    ஆனாலும் இன்னும் ஏன்
    ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்?”

    உண்மை தீபச்செல்வான், வாழ்த்துக்கள் – வ.ஐ.ச.ஜெயபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular