Friday, March 29, 2024
Homeபுனைவுகவிதைசசிகலா பாபு கவிதைகள்

சசிகலா பாபு கவிதைகள்

Displaying IMG_20130824_121558.jpg

நீலத்திமிங்கலமாய் மாறி
கடலளக்க விரும்பிய
ஒருத்தியை அறிவேன்
அவள் பேச்சில்
உப்பும் மீனும் கலந்த
மென் வாசமிருக்கும்
அவளைப் பறத்தலுக்காய்
பணித்திருந்தபோதும்
நீந்தவே பிரியப்பட்டாள்
ஈரச்சிறகுகளுடன்
நெடுந்தூரம் செல்வதையும்
எப்படியோ சாத்தியமாக்கினாள்
கடல் கடல் கடல்
என முனகியவள்
சுவாசங்களிலும்
குமிழிகள் சிதறியபடி இருந்தன
விழிகளுக்கு இமை பாரமென்றாள்
செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள்
எனக்குத் தெரிந்ததெல்லாம்
அவளின் பலவண்ணச் சிறகுகள்
மட்டுமே
முழு பவுர்ணமி நாளொன்றில்
கடற்கரையில் அவளைக்
கண்டெடுத்தபோதும்
நீலச் சேலை அணிந்திருந்தாள்
அன்று கடல் நீலமாயிருக்கவில்லை
பெரிய அலையொன்று புரட்டியதும்
அவள் உடலெங்கும்
மெல்லியதாய் முளைத்திருந்த
செவுள்களைக் கண்டேன்
உதிர்ந்துகிடந்த இறகுகளை
பொறுக்கிக் கொள்ள
கடல் மெல்ல
மேலேறி
வந்து கொண்டிருந்தது
அவளை நோக்கி

**************************

நீரைக்கிழித்துப் பயணிக்கும்
ஒற்றைப் படகில்
புதுமஞ்சள் தாலியுடன்
இருந்தவளிடம்
அருவிக்கரைச் சுழல்களில்
சிக்கி உயிரழந்தோரின்
கதைகள் சொல்லி
முத்தாய்ப்பாய்
உச்சியில் உள்ளங்கைப் பதித்து
ஆசீர்வதித்த
சாராய நெடியுடனான
அந்த பாணதீர்த்தப்
படகோட்டிப் பெரியவரையும்
வயிற்றில் கருவின்
இருப்பறியாது
ஓடித் திரிகையில்
பாதம் குத்தி உட்புகுந்த
ஏற்காடு மலை முள்ளும்
மற்றோர் முறை
காணவேனும்
நீண்ட பயணமொன்று
மிக அவசரமாய்
தேவைப்படும் பொழுதுகளிலும்
பயண சுவாரசியமாய்
கண்டடைந்து விடுகிறேன்
வனம் துறந்து
வான் கடக்கும்
அந்தச் சிறிய
நீலப் பறவையை

**************************

கோப்பைவிளிம்புகளில்
வழிகிறது கருணை
தீநா தீண்டத் தீண்ட
நவத்துவாரங்களிலும்
முளைக்கின்றன்
மேலும் நாக்குகள்
சிவப்பேறிய விழிகளில்
மட்டும் ஒளிரும் நா
இறுதித் துளி பருக
உடன் ஒரு தேவன் தேவை
இதழோரம் பிசுபிசுப்பதை
அவனிதழ் ஒற்றி எடுப்பதையே
ஆகமங்கள்
அனுமதிப்பதாய்
அவனே சொல்லியிருந்தான்
மிகு அயர்வுடன்
அவன் விலகியதும்
எஞ்சிய காலத்தில்
புதிதாய் கிளைத்தெழுகிறது
மற்றுமொரு பால் பல்
கோப்பை உடைந்து
நிலமெங்கும்
உதிர வீச்சம் பரவுங்காலை
வாயிலில் காலடியோசை
அதோ
மற்றோர் தேவன்
காத்திருப்பு
வழியும் விளிம்புகளுடன்

**************************

குறு அரம் கொண்டு
கிழித்தவள் அப்போதே
சென்று விட்டாள்
சரேலென நஞ்சுக்கொடிபற்றி
இழுத்ததும் வேலை
முடிந்திருந்தது அவளுக்கு
மிக லேசாய்
தலை திருப்பிப்
பார்த்தபோது
குழந்தை மேஜைமேல்
புரண்டு விழுந்திடுமோவென
அஞ்சியவளைப் பார்த்து
சன்னமாய் புன்னகைத்தத் தாதி
துளி நீர் பருகத் தந்து
எவருக்கோ காத்திருந்தாள்
நுழைந்தவன்
ஒரு கணம் திகைத்தான்
இயந்திரமாய் செயல்பட்டான்
கோல்களில் உயர்த்திக் கட்டிய
கால்கள்
என்ன மாதிரியான சலனம்
உண்டாக்கியிருக்கும்
மிக இளம் வயதினன்
துரித கதியாய் தையலிட்டவனுக்கு
இது எத்தனையாவது காட்சி
கசடுகள் நீங்க
அடிவயிற்றில் அழுத்தியவேளை
பீறிட்ட வலியால் தன்னிச்சையாய்
அவன் சட்டைநுனி பற்றிய
விரல்கள்
என்னவெல்லாம் சொல்லியிருக்கும்
ஒற்றைப் புன்னகையுடன்
சென்றவன் மட்டுமே
அறிந்திருந்தான்
பெண் என்பவள்
பெண் மட்டுமே அல்ல

**************************

வேர்களைச் சுமந்து
அலைவதென்பது
பாரமாய் இருந்ததேயில்லை

நான் கொட்டும் மலர்கள்
வேர்களின் வாசத்திற்காகவே
நான் உதிர்க்கும் இலைகள்
வேர்களின் நீட்சிக்காகவே
நான் பொழியும் மழை
வேர்களின் வேர்களுக்காகவே

காலத்தைச் செரித்து
காற்றை உமிழும் என்னை
பச்சையமாய்
நிலைக்க வைக்க என்
வேர்களோடே பயணிக்கிறேன்

எதனுள்ளோ தன்னை
மறைத்திருக்கும் வேர்களை
வெளியின் வெளியெங்கும்
பரவ விடுகிறேன்

பெயர்தல் என்பதும்
மற்றுமொரு சடங்காகும்
நிச்சலனப் பொழுதினிலே
என் வேர்கள்
எனக்குள் கிளைபரப்பி
எங்கும் மலர்ந்திருக்கும்!

சசிகலா பாபு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular