Friday, March 29, 2024
Homesliderஓர் இந்து இளவரசனின் தியானமும் பிரம்மாவும்

ஓர் இந்து இளவரசனின் தியானமும் பிரம்மாவும்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் – கனியமுது அமுதமொழி

ஓர் இந்து இளவரசனின் தியானம்” – சர் ஆல்ஃபிரட் கமின்ஸ் லையல்

இந்த உலகம் முழுவதிலும் நான் பயணிக்காத அல்லது
கால் பதிக்காத நிலத்திலும் மக்கள் இடையறாது ஒரு கடவுளின் அடையாளத்தையோ
காலடித் தடங்களையோ தேடிக் கொண்டிருக்கிறார்களா என்பது எனக்கு வியப்பாக உள்ளது

மேற்கு முகமாக பெருங்கடலை நோக்கியும்
வடக்கு முகமாக பனிமலைகளை நோக்கியும் அவர்கள் எல்லோரும் நின்று
எப்பொழுதும் உற்றுப் பார்க்கிறார்களா?

மேலும் ஞானம் மிகுந்த மனிதர்கள் எதை அறிந்திருக்கிறார்கள்

இங்கே இந்த மருளியலான இந்தியாவில் மரத்தின் உச்சியில் ரீங்கரிக்கும்
காட்டுத் தேனீக்களைப்போல் கடவுளர்கள் திரளாக வட்டமிடுகிறார்கள்

அல்லது ஒன்றுகூடி வீசும் புயலிலிருந்து கிளம்பும் தூசிகளைப் போல
வளிமண்டலத்தில் மக்கள் அவர்களின் குரலைக் கேட்கிறார்கள்

அவர்களின் பாதங்கள் பாறைகளில் காணப்படுகின்றன

இருந்தபோதிலும் இந்தச் செய்தி எங்கிருந்து வருகிறது
இந்த அற்புதங்களுக்கு என்ன பொருள் என்று நாம் அனைவரும் கேட்கிறோம்

ஒரு மில்லியன் ஆலயங்கள் திறந்திருக்கின்றன. எப்பொழுதும் கண்காணிப்பு ஊஞ்சலாடுகிறது
அவர்கள் புதிரான ஒரு அடையாளத்தின் முன்போ அல்லது
ஒரு பண்டைக்கால மன்னர்கள் முன்போ வணங்கி நிற்கும்பொழுது
ஊதுபத்தியின் மணம் எப்பொழுதும் மேலே எழுகிறது
அதுபோலவே துன்பங்களைச் சுமக்கும் மனிதர்களிடமிருந்தும் மற்றும்
இறப்பினைச் சந்திக்க அச்சமுற்ற கோழைகளிடமிருந்தும் எழும் முடிவில்லாத அழுகுரல் வானில் எழுகிறது

மலைகளின் துரத்தப்படும் மானைப் போல
விதி நம் அனைவரையும் ஒன்றாகத் துரத்துகிறது

மேலே வானம் இருக்கிறது நம்மைச் சுற்றி கொல்லும் வெடியின் சப்தம்…

நம்மால் பார்க்க முடியாத ஆற்றலினால் தள்ளப்பட்டு
தெரியாத கைகளினால் தாக்கப்பட்டு நாம் புகலிடத்திற்காக மரங்களை வணங்குகிறோம் கற்களை நம் இதழ்களால் முத்தமிடுகிறோம்

மரங்கள் ஒரு நிழலான பதிலை அளிக்கின்றன
மேலும் பாறைகள் வெறுமையுடன் கடுமையாக முகம் சுளிக்கின்றன

அந்தப் பாதை ஹா! யார் அதைக் காட்டியது..
யார் அந்த உண்மையான வழிகாட்டி
அந்த சொர்க்கம் ஹா ! அதை யார் அறிவார்..
மலையின் அருகில் அது செங்குத்தாக இருக்கிறது

எப்பொழுதும் அங்கே நிச்சயமாக வெடிகள் தாக்குகின்றன.
மேலும் எப்பொழுதும் வீணாக்கப்பட்ட சுவாசத்துடன்
பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகளும் சொர்க்கத்தினை நோக்கி மேலெழுகின்றன

அவற்றிற்கான பதில் நிச்சயம் மரணமாகத்தான் இருக்கும்

இங்கே என் உறவினர்களின் கல்லறைகள் உள்ளன. இவை பண்டைக்கால புகழின் பலன்
இவை போர்க்களத்தில் கொல்லப்பட்ட தலைவர்களுடையவை;
உடன்கட்டை ஏறி தீயில் விழுந்து இறந்த பெண்களுடையவை

அவர்கள் கடவுளர்கள், முற்காலத்தின் இந்த அரசர்கள். இவர்கள் எங்கள் இனத்தைக் காக்கும் ஆவிகள்.
நான் எப்பொழுதும் இவர்களைக் கவனிப்பதும் வழிபாடு செய்வதுமாக இருந்திருக்கிறேன்.
அவர்கள் பளிங்கு முகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்.

என்னைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான சிலைகள் மந்திரங்களை முணுமுணுக்கும்
பூசாரிகளின் படையணியும் அவர்களது புனிதமற்ற களியாட்டங்களும் சடங்குகளும்
வெளியே சொல்ல முடியாத இருண்ட விருந்துகளும் இவையெல்லாம் எதற்காக?
இந்தப் பேரமைதியிலிருந்து இவர்கள்
எதைக் கண்டடைந்தார்கள்?

இந்த இரகசியத்திலிருந்து ஒரு சிறிய செய்தியாவது வந்திருக்குமா.. எப்பொழுது? எங்கே?
ஓ.. இந்தக் கடவுளர்கள் ஊமைகள்
கடலிலிருந்து வரும்
ஆங்கிலேயர்களின் வார்த்தைகளை நான் பட்டியலிடட்டுமா

அந்த இரகசியம் அது உனக்கு சொல்லப்பட்டு விட்டதா !

மேலும் எனக்கு உன் செய்தி என்ன?

அது ஒன்றுமில்லை இந்த பூமியும் வானமும் துவங்கியது என்ற
பரந்த உலகக் கதை
கடவுளர்கள் எப்படி மகிழ்ந்தும் மற்றும் கோபமுற்றும் இருந்தார்கள்
அவர்களில் ஒரு தெய்வம் ஒரு காலத்தில் மனிதனாக இருந்தவன்
என்பதுதான் அது

நான் நினைத்தேன் ஒரு வேளை இந்தியாவின் ஆட்சியாளர்கள்
வசிக்கும் நகரங்களில்
யாருடைய கட்டளைகள் தூர தேசத்திலிருந்து மின்னலென அனுப்பப்படுகிறதோ
யார் ஒரு மந்திரத்தால் இந்த பூமியைக் கட்டுப்படுத்துகிறார்களோ
அவர்கள் நாம் உள் நுழைந்து அறியமுடியாமல் மிதக்கும் அடியாழத்தினை
புரிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது அறியப்படாத பேருண்மையை அறிந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு துக்கத்துடன் திரும்புகிறார்கள் அவர்களது தேடல் பயனற்றது என்று சொல்கிறார்கள்
அப்படியானால் வாழ்க்கை என்பது ஒரு கனவுதானா ஏமாற்றும் பிம்பமா அப்படியானால் அந்தக் கனவாளர் எங்கே விழிப்பார்

இந்த உலகம் தண்ணீரில் தெரியும் நிழல் போல் பார்க்கப்படுகிறதா
அந்தக் கண்ணாடி உடைந்து விட்டால் என்ன ஆகும்

தற்காலிகமாக அடிக்கப்பட்டு கலைத்துச் சுருட்டி எடுத்துச்
செல்லப்பட்ட ஒரு கூடாரம் போல்…
மாலையில் பாலை மணலில் அடிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டு காலையில் கழற்றி வைக்கப்பட்டு
தனிமையில் இருக்கும் கூடாரத்தைப் போல
இந்த உலகம் கடந்து போகட்டுமா
அப்படியானால் எங்கிருந்து இடியும் மின்னலும் ஆலங்கட்டி மழையும் பொழிகிறதோ
அந்த வானத்தில் எதுவும் இல்லையா?

ஆனால் உலகம் வேகமாக சுழல்வதால் நம்மைச் சுற்றிச் சூழ்ந்த அந்தக் காற்று?

அது
அந்தக் காற்று எனது சாம்பலைத் தூவிப்போகட்டும்
அழுகின்ற பெண்களின்
புலம்பல் பாடலுடனும் பிலாக்கணத்துடனும்
என்னை அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்திற்கும் அது என்னைத் தூக்கிச் செல்லட்டும்

(Meditations of a Hindu Prince)
-Sir Alfred Comyns Lyall

*

பிரம்மாரால்ஃப் வால்டோ எமர்சன்

சினத்தில் சிவந்த கொலையாளி தான் கொலை செய்ததாக நினைத்தால்
அல்லது கொலையுண்டவன் தான் கொல்லப்பட்டதாக நினைத்தால்
நான் எப்படி என்னதான் செய்வேன் அவற்றைக் கடந்துச் செல்கிறேன். மேலும் திரும்பி வருகிறேன் என்பது போன்ற நுட்பமான என் வழிகளை அவர்கள் அறியவில்லை

வெகு தொலைவில் உள்ளவையும்
அல்லது மறக்கப்பட்டவையும் எனக்கு அருகில் உள்ளன
மறைந்த கடவுளர்கள் எனக்குக் காட்சி தருகிறார்கள்
நிழலும் சூர்ய ஒளியும் எனக்கு ஒன்றே ஆவதுபோல புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கூட ஒன்றே ஆகிறது

என்னை விட்டு விலகுபவர்களை அவர்கள் நோயாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் பறக்கும்பொழுது நான் அவர்களின் சிறகுகளாகிறேன்.
சந்தேகிப்பவனும் சந்தேகிக்கப்படும் பொருளும் நானே ஆகிறேன். மேலும்
நான் அந்தணர்கள் பாடும் ஒரு பாடலாகிறேன்.

எனது இருப்பிடத்தில் வசிக்க வலிமையான கடவுளர்களும் பேராசையுடன் ஏங்குகிறார்கள்.
எந்தப் பயனும் இல்லாமல் அந்தப் புனித ஏழும் கூட பேராசையுடன் என்னை விழைகிறது.
ஆனால் நீ நல்லவர்களின் மிகவும் பணிவான நேசன்.
நீ என்னைக் கண்டடைகிறாய் சொர்க்கத்திற்கு முதுகுகாட்டி அதை புறக்கணிக்கிறாய்.

*

(Brahma)
-Ralph Waldo Emerson

தமிழில் – கனியமுது அமுதமொழி
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular