Friday, April 19, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்மீரா மீனாட்சி கவிதைகள்

மீரா மீனாட்சி கவிதைகள்

அரசியலற்ற மச்சம் அல்லது மரு

நடந்து நடந்து தளர்கையில்
வலை நெய்யும் குருதிச் சிரைகள்
அதன் மத்தியில் மாட்டிகொண்டதுபோல் தோன்றும் அது
என் இடதுபாதத்தில் தெளிந்து காணும் கறுப்பு மரு

பொடி நிறைந்த ராஜவீதிகளில் பிணங்கி மறையும் மரு
மழைப் பொழுதுகளில் அதிலிருந்தும் எழும்
மழைவில் காவடியாட்டம் பெரும் ஆச்சரியம்

முன்பே நானறிவேன் இது பிண்டத்தின்
நான்காம் நிலைக்குச் செல்லும் கபாடமென்று

இருள் கொண்டாடும் நடுஜாமத்தில் மட்டுமே திறக்கும் கபாடம்
அன்றாட யாரோ எவரோ அது வழியாக வருவதும் போவதுமாக ..

கந்தர்வர்கள் தள்ளி மாற்றும் பெரும் கருங்கல் மரு-கபாடம்
எவராலும் கவனிக்கப்படாமல் அயர்ந்துறங்கும் நான்…
என் ஒவ்வொரு மூலக்கூறும் அண்டத்தின்
ஏதோ ஒரு கிரகத்தின் அல்லது விண்மீனின் இணை மூலக்கூறு
இதை நாசா அறியவேயில்லை
காரணம் அவர்கள் இப்போதுதான் வளர்கிறார்கள்

மரு-கபாடம் வழி கடைசியாக வந்த நீ மட்டும் ஏன் என்னை நோக்கினாய்?

என் மெலிந்த கால்களை ஏன் முத்தமிட்டுக்கொண்டிருந்தாய்
நானோ காமத்தின் கொடும்சூட்டில் தகித்துக்கொண்டிருந்தேன்
நீ கழற்றி எறிந்த என் உணர்வு குளிர்ந்துறைந்து கிடக்கிறது நம்மருகில்
அதற்கு என் வெள்ளிக் கொலுசுகளின் நிலா ஒளிர்வு
என் இதயத்திற்கு இணங்கியதாகவே இருந்தது அது

நீ முத்தமிட்ட இடமெல்லாம் உருகி ஒழுகியிறங்கின

இதழ்களும் கண்களும் அனற்குழம்பு போல
அறை நிறைந்து வெளியேறுகிறது…
பூமிக்குள் இறங்கும் கொதிக்கும் அனற்குழம்பு

மரு-கபாடம் மூடப்படுகிறது
என் இடதுகாலின் காமாவேசம் என்றுசொல்லி
நீயும் மிதந்து போகிறாய்
நீ உருவிட்ட மந்திரங்களால் கருங்கல் கபாடம் சிறியதாகி .. சிறியதாகி
மீண்டும் இடதுபாத மருவாக…

நானும் நீயும் பார்வையாளர்களாகவே இருந்தோம்
இருந்தும் நான் என்னை எங்கும் பார்க்கவில்லை

***

மீரா மீனாட்சி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular